கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 8/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...

ஓட்டுனர் உரிமம்
வந்த இடத்தில் நீண்ட காலம் இருக்கப் போகிற ஆசையில் ஓட்டுனர் உரிமம் வாங்கிவிட வேண்டும் என்று இறங்கியது பெரிய தப்பாகி விட்டது. சிங்கப்பூரில் இருக்கும் போதே சொந்தமாக ஒரு கார் இல்லாமல் இருப்பது பெரிய பிரச்சனையாக இருந்தது. இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு முழுக்க முழுக்கப் பொதுப் போக்குவரத்தையே சார்ந்திருப்பதும் டாக்சிகளில் போய் வருவதும் சிரமந்தான். அதுவும் இந்தியாவில் எங்கு போவதாக இருந்தாலும் காரிலேயே போய் வந்து பழகி விட்டவர்களுக்கு இது கடினமாகத்தான் இருக்கும். இங்கே இருக்கிற எல்லோருமே அப்படித்தான் இருக்கிறார்கள். யாருமே வேலைக்குச் சொந்தக் காரில் வருவதில்லை. பணியிடங்களில் கார் நிறுத்த அதிக இடம் இருப்பதில்லை. மிகச் சிலரே அப்படிக் காரில் வருகிறார்கள். பொதுப் போக்குவரத்து வசதிகள் நன்றாக இருப்பதால் எல்லோருமே அவற்றைத்தான் பயன்படுத்துகிறார்கள். எரிபொருள் செலவு என்று பார்த்தால் அது போக்குவரத்துக் கட்டணங்களை விடக் குறைவாகத்தான் வரும். ஆனால் நிறுத்த இடம் கிடைப்பது மிக மிகச் சிரமம். அதற்கான செலவும் குண்டக்க மண்டக்க வரும். அதற்கு மேல் மாநகரச் சாலைகளில் வண்டி ஓட்டுகிற தலைவலி வேறு இருக்கிறதே!

"பெரும்பாலானோர் சொந்த வாகனத்தில் தனித்தனியாகப் போகிற நாடு முன்னேறிய நாடா அல்லது எல்லோருமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திப் பணிக்கு வரும் நாடு முன்னேறிய நாடா?" என்றொரு கேள்வியை எங்கோ படித்த நினைவிருக்கிறது. அந்த வகையில் சிங்கப்பூரும் இங்கிலாந்தும் முன்னேறிய நாடுகளே. சிங்கப்பூரில் திட்டமிட்டே தனியார் வாகனங்களைக் குறைப்பதற்காக வாகன வரி குண்டக்க மண்டக்கப் போடுவார்கள். அதற்குப் பயந்தே யாரும் சொந்த வாகனம் வாங்க மாட்டார்கள். இங்கேயும் ஓரளவுக்கு அப்படித்தான் என்றாலும் பழைய வாகனங்கள் குறைந்த விலையில் நிறையக் கிடைக்கின்றன. வேலைக்குப் போகும் போது பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டாலும், வாரக்கடைசியில் குடும்பத்தோடு சுற்றுவதற்கு மட்டும் சொந்தமாகக் கார் வைத்துக் கொள்கிறார்கள். அதனால் நாமும் ஒன்று வாங்கிக் கொள்ளலாமே என்றோர் ஆசை வந்தது.

இது நம் உடல் மற்றும் மனம் சார்ந்த ஒன்றும்கூட. வந்தது முதலே, இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு, கூடவே நோயையும் வைத்துக் கொண்டு, நெடுந்தொலைவு நடத்தல் என்பதே வீட்டுக்காரிக்குப் பெரும் பிரச்சனையாக இருந்து வந்தது. அதனால் டாக்சிக்கு நிறையக் கொடுக்க வேண்டியிருந்தது. சிங்கப்பூர் போல டாக்சி கட்டணம் குறைவும் இல்லை இங்கு. தினமும் ஒருவர் டாக்சியில் வேலைக்குப் போக விரும்பினால், அவருடைய சம்பளம் பற்றாது. அந்த அளவுக்குக் கொடுமை. அதையும் மீறி நடந்து கடந்திடலாம் என்று முயன்று பார்த்துத் திரும்பும் போதெல்லாம் உடல் பாடாய்ப் படுத்தி எடுத்து விடும். இதையெல்லாம் பார்த்து விட்டுக் கூடிய சீக்கிரம் ஓட்டுனர் உரிமம் வாங்கி, நமக்கென்று ஒரு வாகனம் வாங்கினாற்தான் இந்த ஊரில் ஓட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்தோம். அதனால் உடனடியாக வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற ஆசான் ஒருவரைப் பிடித்தேன். இணையத்தில் பார்த்த போது அவரைப் பற்றி நல்ல கருத்துகள் இருந்தன. அதனால் நல்ல ஆளைத்தான் பிடித்திருக்கிறோம் என்ற நம்பிக்கையில் சேர்ந்தேன்.

நண்பர்களிடம் விசாரித்த போது, ஏற்கனவே இந்தியாவில் ஒட்டியிருக்கிற ஆள் என்பதால் ஒரு பத்து வகுப்புகள் எடுத்துக் கொண்டால் போதும்; வாங்கிவிடலாம் என்றார்கள். நானும் கூடிய சீக்கிரம் உரிமம் பெற வேண்டும் என்ற ஆசையில், "நான் இந்தியாவில் பல ஆண்டுகளாகக் கார் ஓட்டிக் கொண்டிருப்பவன். பத்து வகுப்புகளில் உரிமம் பெற்று விடலாம் என்று என் நண்பர்கள் சொன்னார்கள்!" என்றேன். "சரி, வா பார்க்கலாம்!" என்று அழைத்துச் சென்று, வண்டி ஓட்டச் சொன்னார். நாம் ஓட்டுகிற அழகைப் பார்த்து விட்டு, "நீ இந்தியாவில் வண்டி ஒட்டியதாகச் சொன்னதே பொய். பேசாமல் வா. எதைப் பற்றியும் யோசிக்காமல் வகுப்புகளை ஆரம்பிப்போம். நீ உரிமத்துக்குத் தயார் ஆகும் போது நானே சொல்கிறேன்" என்று ஆரம்பித்தார். பல மாதங்கள் ஆகி விட்டன. இருபத்தி ஐந்து வகுப்புகளுக்கும் மேல் ஓடி விட்டன. இன்றுவரை உரிமம் பெறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. மனைவியின் உடல்நிலை மேலும் மோசமாகி, சமாளிக்க முடியாத சூழ்நிலையில், இனியும் இங்கே பிழைப்பு ஓட்ட முடியாது என்று முடிவு செய்து, குடும்பத்தைக் கொண்டு போய் ஊரில் விட்டுவிட்டும் வந்து விட்டேன். நானும் இன்னும் ஒரு மாதந்தான் இங்கே இருக்க போகிறேன். இவ்வளவு பணம் செலவழித்து விட்டதால் அந்த உரிமத்தை மட்டும் வாங்கிக் கொண்டு விடலாம். பின்னால் வந்தால் பயன்படும். அது மட்டுமில்லை. பிரிட்டிஷ் உரிமம் என்றால் சாதாரணப்பட்டதில்லை. உலகில் பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று முயன்று கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

ஓட்டுனர் உரிமம் வாங்குவது எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இங்கே மிக மிகச் சிரமம். விதிமுறைகள் - சட்டதிட்டங்கள் என்றாலே பிரிட்டிஷ்காரர்கள்தானே. அவ்வளவு கண்டிப்பு. நமக்கு வெறுப்படிக்கிறது. இந்தியாவில் உரிமம் வாங்க ஒன்றுமே செய்யவில்லை. இருபது ஒரு மணிநேர வகுப்புகள் என்று சொல்லி அழைத்துக் கொண்டு போய், ஒரு வீணாப் போனவன், தினம் தினம் முப்பத்தைந்து நிமிடங்கள் ஓட்ட விட்டான். காசே குறியாக இருப்பான். அடிப்படையான பாடங்கள் கூடச் சொல்லிக் கொடுக்கவில்லை (இந்த ஆள், "அவன் இது கூடச் சொல்லிக் கொடுக்கலையா?" என்று ஒவ்வொரு முறையும் ஏதாவது கேட்டு அவமானப் படுத்திக் கொண்டே இருக்கிறார்!). ஒன்றுமே படிக்கவில்லை. உரிமமும் வாங்கிக் கொடுத்து வணக்கம் போட்டு அனுப்பி வைத்து விட்டான். அதற்குப் பிறகு சொந்த வாகனம் வாங்கிப் பழகியதுதான் எல்லாமே. இங்கே வந்தால் வம்புக்கென்றே செய்வது போல், அது  லொட்டை இது லொட்டை என்று இல்லாத குறையெல்லாம் சொல்லி, இழு இழுவென்று இழுத்தடிக்கிறார்கள். வண்டி ஓட்டச் சொல்லிக் கொடுக்கும் ஆட்களுக்கு நல்ல வாழ்வுதான். இப்படி இருப்பதால்தான் இங்கே விபத்துகள் மிகக் குறைவாக இருக்கின்றன என்ற நியாயமும் புரிகிறது. அதற்கு இப்படியா படுத்துவது என்றும் வெறுப்பாகிறது.

கழிப்பறை வியப்புகள்
Image result for men womenஎது எதையோ பேசினோம். இதைப் பேசாவிட்டால் எப்படி? வரலாற்றுத் தவறாகி விடுமே! முதல் வியப்பு, நம்ம ஊரில் கழிப்பறைகளுக்கு முன்பிருக்கும் பலகைகள் பல மொழிகளிலும் படங்களோடும் இருக்கும். இங்கே அப்படியில்லை. பெரும்பாலும் குறியீடுகள் மட்டுமே இருக்கின்றன. அவையும் நம்ம ஊரில் போலத் தெளிவாக இருப்பதில்லை. வந்து கொஞ்ச காலம் பயந்து பயந்தே நுழைகிற மாதிரித்தான் இருந்தது. நம்ம ஊர்ப் படங்களில் பெண் என்றால் பொட்டு வைத்துத் தலையில் சடைப் பின்னி - பூச்சூடி, ஆணை விட முற்றிலும் வேறுபட்டவராக வரையப்பட்டிருப்பார். நம்ம ஊர்ப் பெண்களைப் போலவே பெண்களின் படங்களும் இருக்கும். இங்கோ, தொலைவில் - இருட்டில் வருகிறவர் ஆணா பெண்ணா என்பது அருகில் வரும்வரை அடையாளம் கண்டுபிடிப்பது சிரமந்தான். அது போலவேதான் கழிப்பறைகளுக்கு முன் இருக்கும் படங்களும். குழப்புகிற மாதிரியே இருக்கின்றன. வேறுபாடு இல்லாமல் இல்லை. நம் கண்களுக்கு எளிதில் தெரியாத மாதிரி இருக்கின்றன. பெண்கள் படம் கூட எளிதில் புரிகிறது. ஆண்கள் படந்தான் ஒருவேளை இது பெண்கள் கழிப்பறையோ என்று பயந்து கொண்டே நுழைகிற மாதிரி இருக்கின்றன. குறைந்த பட்சம் ஆண் என்றால் காலை விரித்துக் கொண்டு நிற்கிற மாதிரி இருக்கும். அதுவும் இல்லாமல் அடக்க ஒடுக்கமாக இருப்பதால் பெரும் சல்லையாக இருக்கிறது. கொஞ்ச காலம் போனபின்பு ஓரளவு பழகிவிட்டது. ஆனாலும் புது இடங்களில் பயமாகத்தான் இருக்கிறது.


அடுத்ததாக, இதைச் சிங்கப்பூரிலும் பார்த்திருக்கிறேன். நம்ம ஊரில் ஆண்கள் கழிப்பறைகளை ஆண்களும் பெண்கள் கழிப்பறைகளைப் பெண்களுமே சுத்தம் செய்வர். இங்கோ ஆண்கள் கழிப்பறைகளையும் பல இடங்களில் பெண்களே சுத்தம் செய்கின்றனர். ஏற்கனவே உள்ளே சென்ற எல்லோரும் வெளியேறியபின், புதிதாக வரும் ஆட்கள் நுழைந்து விடாதபடி முன்னேற்பாடுகள் செய்து விட்டே நுழைகிறார்கள். ஆனாலும் இது கொஞ்சம் நமக்குக் கடினமாகவே இருக்கிறது. அவர்களுக்குப் பழகி விட்டதோ என்னவோ!

ஒப்பனை
முறையாகத் தலையைச் சீவிக் கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நிறையப்பேர் தலை முடியை ஏதாவது செய்து கொண்டுதான் அலைகிறார்கள். குண்டக்க மண்டக்க வெட்டிக் கொள்தல், நிறம் பூசிக் கொள்தல் போன்று ஏதாவது! அதுவும் உள்ளூர்க்காரர்களைவிட நம்மைப் போலக் குடிபுகுந்தவர்கள்தான் இது போன்ற சேட்டைகள் அதிகம் செய்வது போலத் தெரிகிறது. நம் கண்களுக்குத்தான் அப்படித் தெரிகிறதா அல்லது உண்மையும் அதுதானா என்று தெரியவில்லை. மூஞ்சியெல்லாம் எதையாவது குத்திக் கொண்டு திரிகிற பண்பாடும் நிறையவே இருக்கிறது. இவையெல்லாம் இங்கே பார்த்துக் கொண்டு வந்துதான் நம்ம ஊரில் ஆரம்பிக்கிறார்கள் போற் தெரிகிறது.

மோவெம்பர் (MOVEMBER)
இங்கேயுள்ளவர்கள் பெரும்பாலும் மீசையை மழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சென்ற நவம்பர் மாத வாக்கில் நிறையப்பேர் விதவிதமாக மீசைகள் வைத்துக் கொண்டு அலைந்தனர். முதலில் அது என்னவென்று புரியவில்லை. சில நாட்களிலேயே அது பற்றிய தகவல்கள் தெரிய ஆரம்பித்தன. நவம்பர் மாதத்தில், ஒரு குறிப்பிட்ட வகைப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக நிறையப்பேர் அப்படி விதவிதமாக மீசையும் தாடியும் வைக்கிறார்கள். வழக்கமாக மீசை-தாடி வைத்துக் கொள்ளாத தாம், மீசை-தாடியில் எவ்வளவு அழகாக அல்லது அசிங்கமாக இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இப்படி வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், தம் சுற்றத்தார் அனைவரிடமும் இதற்காக நிதி திரட்டுகிறார்கள். கம்பெனிகளும் இவற்றை நிறைய ஊக்குவிக்கின்றன. ஒவ்வொரு ஊழியரும் திரட்டும் நிதிக்குச் சமமாக அவருடைய கம்பெனியும் நிதியளிக்கிறது. எடுத்துக்காட்டாக, நான் ஆயிரம் பவுண்டு திரட்டினால், என் கம்பெனி ஆயிரம் பவுண்டு போட்டு, இரண்டாயிரம் பவுண்டாகக் கொடுத்து விடுகிறார்கள். நல்ல காரியத்துக்குச் செய்கிற எல்லாமே நல்லதுதானே!

வியப்புகள் முடிவை நெருங்கி விட்டன...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி