கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 9/9
வியப்புகள் தொடர்கின்றன...
குதிரைகள்
இங்கிலாந்து இன்றும் உலக வல்லரசுகளில் ஒரு நாடாகத்தான் இருக்கிறது. உலகின் பணக்கார நாடுகளில் முன்னணியில் ஒரு நாடாகத்தான் இருக்கிறது. இப்போதும் உலகப் பொருளியலைக் கட்டுப்படுத்தும் ஊராகத்தான் இலண்டனைச் சொல்கிறார்கள். உலகமே பொருளாதாரச் சிக்கலுக்குள் சிக்கித் தவிக்கும் போதும் அங்கே சிக்கல் இல்லாமல் வண்டி ஓடிக் கொண்டிருப்பதாகச் செல்கிறார்கள். மொத்த ஐரோப்பாவும் சிறிது சிறிதாக மூழ்கிக் கொண்டிருக்கும் போதும் கூட இங்கிலாந்துக்கு ஏதும் நடந்து விடாது போல் நடந்து கொள்கிறார்கள்.
பாரதியார் கட்டுரைகள் படித்த போது, தீவாகத் தனித்து இருப்பதாலோ என்னவோ ஐரோப்பாவில் இருக்கும் மற்ற நாடுகளை விட பிரிட்டன் வேறுபட்டு இருக்கிறது என்று ஒரு வரி படித்த நினைவு. இலண்டனில் இருக்கும் காலங்களில் அதை நன்றாக உணர முடிந்தது. இன்னும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் முழு ஈடுபாட்டோடு பங்கெடுக்கும் ஒரு நாடாக இல்லை. அதை நிறையப் பேர் விரும்புவது போலவும் இல்லை. யூரோவை மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. செங்கன் என்கிற வட்டத்துக்குள் இவர்கள் செல்லவில்லை. சென்றால் மற்றவர்களின் பாரத்தையும் நாம்தாம் சுமக்க வேண்டும் என்று சொல்லி வேண்டாம் என்கிறார்கள். ஒருவகையில் இதர ஐரோப்பிய நாட்டினரைவிட நம் போன்ற காமன்வெல்த் நாட்டினர் அவர்களுக்கு நெருக்கமாகப் படலாம். அவர்களை விட நாம் ஆங்கிலம் நன்றாகப் பேசுகிறோம். ஆனால் காமன்வெல்த் நாட்டினரைப் போலவே இலண்டனில் மற்ற ஐரோப்பிய நாட்டவர்களும் நிறைந்திருக்கிறார்கள். முக்கியமாக ஏழை - கீழை ஐரோப்பிய நாட்டினர் நிறைய அங்கு பிழைக்க வந்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் ஜெர்மனியும் பிரான்சும் இங்கிலாந்தை அவர்களைவிடப் பெரிய சக்தியாக ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் மற்ற எல்லோருக்கும் இங்கிலாந்து ஒரு முக்கிய சக்திதான். தொழிற் புரட்சி நடந்த காலத்தில், ஜெர்மனி மற்றும் பிரான்சில் இருந்தும் கூட மக்கள் வந்து குடியேறி ஆங்கிலேயராகவே மாறியிருப்பர் போல் தெரிகிறது. அப்படிப் பட்டவர்கள் அரசியலிலும் கொடி கட்டிப் பறக்கிறார்கள். நம்ம ஊரில் போல, அவன் வந்தேறி இவன் வந்தேறி என்ற கூச்சல்கள் ஏதும் இல்லை. அவர்களே உலகம் எங்கும் போய் மேய்ந்தவர்கள் என்பதால் அந்தப் பெருந்தன்மை வந்து விட்டிருக்கக் கூடும்.
வேலையே பார்க்காமல் கூட கண்ணியமான வாழ்க்கை வாழும் வசதிகள் அதிகம் இருப்பதால் வெளியில் இருந்து வருவோருக்கு சொர்க்கம் போல் இருக்கிறது பிரிட்டன். ஆனால் அப்படியான சோம்பேறிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பது, வாரி வாரி வரிக் கட்டும் மக்களுக்கு வெறுப்பை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது. அதனால் ஒவ்வொரு வருடமும் பிரிட்டனின் நிதி நிலை அறிக்கையில் அப்படியான வசதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் சோம்பேறிகளுக்கு வாழ்க்கை கடினமாகலாம். எல்லோரும் பங்களிக்காத ஒரு பொருளாதாரம் எப்படித் தொடர்ந்து வளர முடியும் - பிழைத்திருக்க முடியும் என்று ஒரு சாரார் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் உலகப் பொருளாதாரத்தில் பிரிட்டனின் ஆதிக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும் போல் தெரிகிறது.
ஐக்கிய இராச்சியம் (UNITED KINGDOM) - பிரிட்டன் - இங்கிலாந்து

பிரிட்டன் என்பது ஒரு தீவு. பிரிட்டனுக்குள் மூன்று நாடுகள் (COUNTRIES) இருக்கின்றன. இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து. அருகில் அயர்லாந்து என்றொரு தீவு இருக்கிறது. அதில் ஒரு பகுதியை (வட பகுதியை) மட்டும் வளைத்துப் போட்டு வட அயர்லாந்து ஒரு தனி நாடு. இந்த நான்கு நாடுகளும் சேர்ந்து ஐக்கிய இராச்சியம் (UNITED KINGDOM) என்கிற தேசம் (NATION). மிஞ்சியிருக்கும் அயர்லாந்து ஒரு தனி தேசம். சரியாகக் கவனியுங்கள் நாடு மற்றும் தேசம் என்கிற இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருட்களில் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு தேசத்துக்குள் நான்கு நாடுகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இது மற்ற நாட்டவர்களுக்கு எத்தனை தடவை குட்டிச் சொல்லிக் கொடுத்தாலும் புரிய மறுக்கிற ஒன்று. அதே வேளையில் மாநிலம் என்கிற ஒன்று அங்கில்லை. நான்கையும் மாநிலங்கள் என்றே சொல்லலாம். ஆனால் அவை ஒவ்வொன்றும் தனித்தனி நாடு போலத் தனித்தனி நாடாளுமன்றங்கள் கொண்டிருக்கின்றன (இங்கிலாந்துக்கு மட்டும் தனியாகக் கிடையாது; இலண்டனில் இருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றமே இங்கிலாந்துக்கும்; மற்ற மூவருக்கும் அவரவர்க்கென்று ஒன்று - எல்லோருக்குமாக இலண்டலில் ஒன்று என்று உள்ளன). அதனால் நாடுகளே. அது மட்டுமில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு மொழி இருக்கிறது. அதனால் ஐரோப்பியர்களின் வழக்கப்படி ஒரு மொழிக்கு ஒரு நாடு என்பதே முறை. ஆனாலும் மற்ற மூன்று மொழிகளையும் ஆங்கிலம் கொன்று தின்று விட்டது என்றே சொல்ல வேண்டும்.
வேல்ஸ் முழுமையாக விழுங்கப் பட்டு விட்டது. ஸ்காட்லாந்து இப்போதும் தனியாகப் போக வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு அதற்குப் பொது வாக்கெடுப்பு ஒன்று அறிவித்திருக்கிறார்கள். ஸ்காட்லாந்து மக்களே முடிவு செய்வார்கள். தனிக் குடித்தனம் போவதா அல்லது கூட இருந்தே கும்மி அடிப்பதா என்று. இரண்டுக்கும் ஆதரவு - எதிர்ப்புக் கருத்துகள் நிறைய இருக்கின்றன. "எங்கள் வளத்தையும் மொழியையும் பண்பாட்டையும் அழித்து விட்டார்கள்" என்று ஒரு சாராரும் "அவர்களோடு/எங்களோடு இருப்பதால்தான் நம்மால்/உங்களால் தாக்குப் பிடிக்க முடிகிறது" என்று இன்னொரு சாராரும் அடம் பிடிக்கிறார்கள். ஆனாலும் அதைப் பற்றி முடிவெடுக்க வேண்டிய உரிமை ஸ்காட்டியருக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்ம ஊரில் போல் அவர்களைத் தவிர எல்லோரும் சேர்ந்து அவர்கள் எங்கிருக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் வேலையெல்லாம் இல்லை. இப்படிக் கத்தியின்றி இரத்தமின்றிப் பேசி - வாக்கெடுத்து முடிவு செய்து கொள்வது எவ்வளவு நாகரீகமாக இருக்கிறது. ஏன் எல்லா நாடுகளும் இதையே செய்து கொள்வதில்லை?! ஸ்காட்லாந்து தப்பிச் சென்று விட்டால், அது போலவே வட அயர்லாந்தும் பிரிந்து செல்ல விரும்பக் கிளம்பி விடும் என்ற பயமும் இருக்கிறது. அப்படி ஒரு சூழல் வந்தால், அது வட அயர்லாந்து மக்களின் கைகளில் விடப்படும்.
வட அயர்லாந்திலும் அயர்லாந்திலும் ஒரே மொழி பேசுகிறார்கள்.ஒரே தீவுக்குள் இருக்கிறார்கள். முறைப்படி அவர்கள் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் அரசியலால் பிரிந்திருக்கிறார்கள். பிரிந்தே இருந்து பழகி விட்டதால் பண்பாடும் கூட வெவ்வேறாக விரிசல் விழுந்து கொண்டே வருவது போலத் தெரிகிறது.
ஆக, பிரிட்டன் என்பது மூன்று நாடுகளைக் கொண்ட ஒரு தீவு. அதில் இங்கிலாந்தும் ஒன்று. ஐக்கிய இராச்சியம் என்பது இம்மூன்று நாடுகளோடு நான்காவதாகப் பக்கத்துத் தீவைச் சேர்ந்த ஒரு நாட்டையும் சேர்த்து உருவாக்கிய செயற்கையான தேசம். புரிகிறதா? புரியவில்லை என்றால் விடுங்கள். நமக்கிருக்கிற குழப்பத்தில் இதை வேறு போட்டு எதற்குக் குழப்ப வேண்டும்?!
மனைவியின் உடல்நிலை காரணமாக மேலும் வெளிநாட்டு வாழ்க்கையைத் தொடர முடியாத சூழ்நிலை. மார்ச்சில் குடும்பத்தை ஊரில் வந்து விட்டுவிட்டுச் சென்றேன். ஏப்ரல் முடிவோடு நானும் ஓராண்டு கால இங்கிலாந்து வாழ்க்கைக்கு வணக்கம் வைத்து விட்டுக் கிளம்பி வந்து விட்டேன். மிகக் கடினமான முடிவு. நாடோடிகளைப் போல், ஆண்டுக்கு ஒருமுறை (இந்த ஆண்டில் இரண்டு முறைகள்) பள்ளி மாற்றுவதைத் தாங்கிக் கொண்டு, எங்கள் இழுப்புக்கெல்லாம் ஈடு கொடுத்து வந்த - கடைசிச் சில மாதங்களில் ஓரளவுக்கு நன்றாக செட்டில் ஆகி வந்த - மகளை மீண்டும் ஒருமுறை, "இன்றுதான் இந்தப் பள்ளியில் கடைசி நாள்!" என்று சொல்லி ஒரே நாளில் ஊருக்குக் கிளப்பிக் கூட்டி வந்த நாளில் அழுகையே வந்து விட்டது. இனியும் இந்த வாழ்க்கையைத் தொடர முடியாது போலத் தெரிகிறது. இத்தோடு ஊர் சுற்றுகிற சோலியை நிறுத்திக் கொண்டு, ஒழுங்காக ஊரிலேயே (நம்ம ஊர் பெங்களூர்) செட்டில் ஆகி விட வேண்டியதுதான் என்ற முடிவோடு திரும்பி விட்டேன்.
ஒரே நாளில் அவளின் அனுமதி இல்லாமலே முடிவு செய்யப்பட்ட மகளின் வாழ்க்கையைப் போல அல்லாமல், எனக்கு ஒரு மாதம் நேரம் கொடுக்கப்பட்டது. எல்லோருக்கும் சொல்லி விடை பெற்று வர முடிந்தது. கடைசி நாளில் அலுவலகத்தில் எல்லோரும் நல்ல முறையில் கவனித்து வழியனுப்பி வைத்தார்கள். கடைசிச் சில நாட்களாக, கடைசி நாள் விருந்து சாப்பிடப் போவோம் என்று எல்லோரும் சொன்ன போது, அதற்கொரு பெரிய தொகை ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, எல்லாத்துக்கும் தயாராகப் போனேன். போன இடத்தில் ஓர் இன்ப அதிர்ச்சி. என்னை யாரும் செலவழிக்கவே விடவில்லை. அதுதான் அவர்களுடைய பண்பாடாம் - கலாச்சாரமாம். ஒருவருடைய பிரிவுபச்சார நாளில் அவருக்கு எல்லோரும் சேர்ந்து கவனிப்பதுதான் முறையாம். பிரவுபச்சார நாள் மட்டுமல்ல; யாருக்கு என்னவென்றாலும் மற்றவர்கள் அவரைக் கவனிக்க வேண்டுமாம். அவரையே செலவழிக்கச் சொல்லி நொம்பலப் படுத்தக் கூடாதாம். நல்ல பண்பாடு - கலாச்சாரம். ஏற்கனவே கட்டப்பட்டு - நட்டப்பட்டுப் போகிறவனை இன்னமும் துன்பப் படுத்தாமல் அனுப்பி வைத்த அந்தப் பண்பாடு - கலாச்சாரம் எனக்கு நிரம்பவே பிடித்திருந்தது! எல்லோரும் அடுத்து எப்போது வருவாய் என்று உண்மையாகவே அன்போடு கேட்டார்கள். அந்த அன்பை மீண்டும் பெறும் வாய்ப்பு இனி இல்லையென்றே எண்ணுகிறேன்... :(
பை பை லவ்லி லண்டன்!!!
வியப்புகள் இப்போதைக்கு முடிவுக்கு வருகின்றன!
உருக்கமான முடிவு. கலாச்சார வியப்புகளை எங்களுக்களித்த உங்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி, ஐயா!
நீக்கு