லியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை

லியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை

ஆஸ்கர் விருது பெற்ற இந்த நடிகரின் சூழலியல் செயல்பாடுகள் அவருடைய முதல் ஆஸ்கர் பரிந்துரைப் படமான “வாட்’ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப்” (‘What’s Eating Gilbert Grape’) காலத்திலிருந்தே தொடங்கியதில்லைதான். ஆனாலும் அவர் 1990-களிலிருந்தே கடல்கள் பற்றியும் காலநிலை மாற்றம் பற்றியும் தொடர்ந்து தன்னைப் பயிற்றுவித்து வருகிறார்.

லியனர்டோ டிகாப்ரியோ, ‘ரெவெணண்ட்’ (Revenant) படத்தில் தன் ஆஸ்கர் வென்ற பாத்திரத்திற்காக விலங்குச் சடலத்துக்குள் தன்னைச் சுற்றிக்கொண்டு, காட்டெருமையின் பச்சை ஈரலை வாந்தியெடுத்து, உடல்வெப்பக்குறைவு அபாயத்துக்கு உள்ளாவதற்குப் பல காலம் முன்பே காலநிலைப் போராளியானவர்.

டிகாப்ரியோ, தன் சிறந்த நடிகருக்கான ஏற்புரையை, உலகெங்கும் உள்ள பார்வையாளர்களை “பேராசை அரசியலை” நிராகரிக்கவும் காலநிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வரும் தலைவர்களை ஆதரிக்கவும் வற்புறுத்துவதற்குப் பயன்படுத்தினார்.

“காலநிலை மாற்றம் மெய்யானது, அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது, அதுதான் நம் மனித இனம் முழுமையையும் எதிர்கொண்டிருக்கும் மிக அவசரமான அச்சுறுத்தல், நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாகச் செயல்பட வேண்டியுள்ளது, காலம் கடத்தலை நிறுத்தியாக வேண்டும்,” என்றார்.

ஆஸ்கர்ஸ்தான் தன் செயல்பாடுகளைப் பற்றிப் பேச டிகாப்ரியோவுக்கு இதுவரை கிடைத்த மேடைகளிலேயே மிகப் பெரும் மேடை. ஆனால் பல ஆண்டுகளாகவே அவர் இந்தப் பிரச்சனைக்குள் மூழ்கிப் போயுள்ளார் என்றும் இதற்காகச் செயலாற்ற வேண்டியதன் தேவையைப் பற்றிய வெறி கொண்டு இருக்கிறார் என்றும் கூறுகின்றனர் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளவர்கள்.

கடந்த சில ஆண்டுகளில், ஐக்கிய நாடுகளின் காலநிலைப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண உதவவும், பவழப் பாறைகளையும் புலிகளையும் பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தின் அபாயம் பற்றிய பொது விழிப்புணர்வைப் பரப்பவும் தன் புகழையும், அவருடைய அறக்கட்டளையின் கூற்றுப்படி, குறைந்த பட்சம் $30 மில்லியன் நிதியையும் நன்கொடையளித்துள்ளார்.

2014 முதலே உலகளாவிய பிரச்சனைகளைப் பேசும் நிகழ்ச்சிகள் அனைத்திலுமே நிரந்தர இடம் பெறுபவராக மாறிவிட்டார். 2016 ஜனவரியில் டாவோஸ் பொருளியல் மன்றத்தில் ஒரு விருது பெற வந்தார். அதற்கு முந்தைய டிசம்பரில் பாரிஸ் காலநிலைப் பேச்சுவார்த்தைகளின் பக்கவாட்டில் நின்றுகொண்டு, ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கி-மூன் உடன் தனிப்பட்ட முறையில் உரையாடிக்கொண்டிருந்தார்.

2014-இல், 400,000 பேருடன் மன்ஹாட்டன் வீதிகளின் வழியே நடைப்பயணம் சென்று, காலநிலை மாற்றத்தின் அபாயங்கள் பற்றி ஐக்கிய நாடுகளில் உரையாற்றினார். உலகின் தலைசிறந்த ஆய்வாளர்களிடமிருந்து காலநிலை அறிவியல் பற்றித் தனிப்பட்ட முறையில் பயிற்சி வகுப்புகள் பெற்றிருக்கிறார்.

மற்ற நடிகர்களும் - குறிப்பாக, சிறந்த துணை நடிகர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட மார்க் ருஃபாலோ - ஊரறிந்த காலநிலைப் போராளிகள்தான். மற்ற பல செல்வந்தர்களும் சூழலியல் காரணங்களுக்காகக் கொடுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் டிகாப்ரியோ வேறொரு புகழ்த் தளத்தில் பணிபுரிகிறார்.

“கடல்களில் ஆர்வமுள்ள பல அறநிறுவனங்களும் அரசு சாரா அமைப்புகளும் இருக்கின்றன, பலரும் அருமையான பணிகள் செய்கிறார்கள். ஆனால் இந்தக் கிரகத்தில் வேறு எவரிடமும் இல்லாத ஒலிபெருக்கி அவரிடம் உள்ளது. பொதுமக்களில் தொடங்கி நாடுகளின் தலைவர்கள் வரை உலகம் முழுமைக்கும் எவ்வளவோ மதிக்கப்படுகிறார், போற்றப்படுகிறார், செல்வாக்குடையவராக இருக்கிறார்,” என்கிறார் டிகாப்ரியோவுடன் பணிபுரிந்துள்ள, நேஷனல் ஜியாக்ரஃபிக்கின் உறைவிடத் தேடலாய்வர் (Explorer-in-Residence) என்றிக் சாலா.

டெஸ்லா காரில் செல்லும், ஸ்கூபா டைவ் அடிக்கும் இந்த நடிகரின் இந்த முயற்சிகள், அடுத்தடுத்து எப்போதும் தன்னைச் சுற்றி மாடல்களை வைத்துக்கொண்டு திரியும் விளையாட்டுப் பிள்ளையாக இவரைப் பற்றி இருந்த பொதுமக்களின் பழைய பார்வைகளைப் பெயர்த்து வீசிவிட்டன - அது இந்த உயரிய நோக்கத்துக்கு உதவி புரிவதாக உள்ளது.

“லியனர்டோ டிகாப்ரியோ போன்றவர்களுக்கு மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் ஆற்றல் உள்ளது. அது பிரமிக்கத்தக்கது. ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றி அவர் அவ்வளவு ஆணித்தரமாகவும் தெளிவாகவும் பேசுவதை மக்கள் பார்க்கும் போது, அதற்குக் காது கொடுத்துக் கேட்கிறார்கள்,” என்றார் பான் கி-மூனுக்கு காலநிலை மாற்ற ஆலோசகராக இருந்த ஜெனோஸ் பாசிஸ்ட்டர். “அவர் அதைச் செய்ததற்காக மிகவும் மகிழ்கிறேன்.”

டிகாப்ரியோவின் சூழலியல் செயல்பாடுகள், 1993-இல் வெளியான, ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட அவருடைய ஆறு படங்களில் முதல் படமான, “வாட்’ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப்” காலத்திலிருந்தே தொடங்கியவை அல்லதான். ஆனாலும் இவர் 1990-களிலிருந்தே கடல்கள் பற்றியும் காலநிலை மாற்றம் பற்றியும் தொடர்ந்து தன்னைப் பயிற்றுவித்துக்கொண்டே வருகிறார், என்கின்றனர் செயல்பாட்டாளர்கள்.

அவரே சொல்வது என்னவென்றால், உயிரினப் பன்மை (biodiversity) பற்றியும் உயிரினங்களின் அழிவு பற்றியும் அவர் குழந்தையாக இருக்கும் போதிருந்தே கவலைப்படத் தொடங்கிவிட்டாராம். அவருடைய லாஸ் ஏஞ்சலஸ் வீட்டில், அவரின் தொட்டிலுக்கு மேலே, பாஷ் வரைந்த ‘உலகியல் இன்பங்களின் தோட்டம்’ (Bosch’s Garden of Earthly Delights) ஓவியத்தை அவருடைய பெற்றோர் தொங்கவிட்டிருந்தனர் என்றும் ஏதேனின் இழப்பு பற்றிய சித்தரிப்பு அவரை மனச் சஞ்சலத்துக்கு உள்ளாக்கியது என்றும் அவர் நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார்.

1998-இல் அப்போதைய துணை அதிபர் அல் கோர் அவர்களை வெள்ளை மாளிகையில் சந்தித்தது, காலநிலைப் போராளியாக டிகாப்ரியோவின் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான தருணம். அந்தச் சந்திப்பைத் தன் சூழலியல் செயல்பாட்டின் தொடக்கமாகக் குறிப்பிட்ட டிகாப்ரியோ, அந்த ஆண்டிலேயே தன் அறக்கட்டளையை நிறுவினார்.

வாசிப்பு, காலநிலை அறிவியல் மற்றும் கோட்பாடு பற்றி அவருக்கு விளக்கக்கூடிய பணியாளர்களைக் கையிலேயே வைத்துக்கொள்ளுதல், காலநிலை மாற்றத்தின் முன்வரிசையில் இருக்கும் இடங்களுக்குப் பயணித்தல் என்று தன்னை முழுக்கவும் அதிலேயே மூழ்கடித்துக்கொள்கிறார் என்கின்றனர் அவருடன் பணிபுரிந்துள்ள செயல்பாட்டாளர்கள்.

வெள்ளை மாளிகையில் அல் கோர் உடனான சந்திப்புக்குப் பத்தாண்டுகள் கழித்து ஒரு நாள், எதிர்பாராத விதமாக இருவரும் ஐரோப்பா போகும் வழியில் ஒரு விமானத்தில் முதல் வகுப்பில் சந்தித்துக்கொண்டனர். “பயணம் முழுக்கவும் லியோ அல் உடன் பேசிக்கொண்டே இருந்தார். முழு இரவும் அல்லின் மண்டைக்குள் இருப்பதையெல்லாம் எடுத்துத் தனக்குள் ஏற்றிக்கொண்டார். கண்கள் சிவந்துவிட்டன,” என்றார் அல் கோரின் தகவலர் கலீ க்ரெய்டர். “இருவரும் முழு இரவும் பேசினார்கள். அது மிகவும் வழக்கத்துக்கு மாறானது.”

பென் மாநிலப் பல்கலைக்கழகத்தில் காலநிலை விஞ்ஞானியாக இருக்கும் மைக்கேல் மன் போன்ற முக்கியமான ஆய்வாளர்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருந்து வருகிறார். “அவருடனும் அவருடைய ஆட்களுடனும் அடிக்கடி தொலைபேசியில் பேசியிருக்கிறேன்,” என்று மன் ஒரு மின்னஞ்சலில் கூறினார். சென்ற அக்டோபரில், நியூ யார்க்கில் இருக்கும் வெஸ்ட் வில்லேஜில் உள்ள ஒரு மதுக்கூடத்தில் இவர்கள் இருவரும் முதல் முறையாகச் சந்தித்துக்கொண்டார்கள்.

“சந்திப்பு சில மணி நேரம் நீடித்தது, காலநிலை மாற்றத்தின் அனைத்துக் கூறுகளையும் அதன் தாக்கங்களையும் தீர்வுகளையும் தொட்டது. லியோ உண்மையாகவே என்னைக் கவர்ந்துவிட்டார். இந்தப் பிரச்சனை பற்றி நெருக்கமாகப் பின்தொடர்கிறார், அது பற்றி நிறைய வாசிக்கிறார் (உறுதியாகச் சொல்வேன், த கார்டியனில் வரும் படைப்புகள் உட்பட), சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் உள்ள நுட்பங்களைப் புரிந்துகொள்கிறார். என்னிடம் அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் சிந்தனைத் திறமும் மதிநுட்பமும் உடையவை. அதில் நிறைய ஆழம் இருக்கிறது, லியோ உண்மையாகவே இந்தப் பிரச்சனையை அவருடைய இதயத்தையும் தலையையும் சேர்த்து வைத்து அணுகுகிறார் என்று எண்ணுகிறேன்,” என்றார் மன்.

“ஒரு விடயம் நான் கவனித்தது என்னவென்றால், இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும் மனத்திட்பத்தை தக்க நேரத்துக்கு ஒன்றுகூட்ட முடியுமா என்ற அவநம்பிக்கை. அது நிறையப் பேரிடம் பார்ப்பதுதான். விஞ்ஞானி என்ற முறையில், நான் ஏன் இன்னும் தக்க நேரத்தில் தேவைக்கேற்ற ஆற்றலைப் பெற்றுவிடுவோம் என்று எச்சரிக்கையோடு கூடிய நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்று சொல்ல முயன்றேன்.”

டிகாப்ரியோவின் காலநிலைச் செயல்பாட்டு முறை, முதலில் 2007-இல், காலநிலை மாற்றத் திரைப்படமான ‘the 11-th hour’-ஐ விவரிப்பது போன்ற கலை வடிவில் தொடங்கியது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அவருடைய செல்வத்தையும் அறக்கட்டளையையும் சூழலியல் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிப்பதில் மென்மேலும் பயன்படுத்தியுள்ளார்.

டிகாப்ரியோவின் அறக்கட்டளை, 2014-இல் மிகை மீன்பிடித்தலைத் தடுப்பதற்காக $3 மில்லியனும், நேபாளத்தில் புலிகளைக் காக்க $3 மில்லியனையும், பசிபிக்கில் கடல் வளங்களை உருவாக்குவதற்கான சாலாவின் முன்னெடுப்புக்கு நிதியுதவி செய்யவும் நன்கொடையளித்தது.

இப்போது காலநிலை மாற்ற ஆவணப் படம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அதற்காகக் கடந்த கோடையில் ஆர்க்டிக்கில் உள்ள பாஃபின் தீவுக்குச் சென்று வந்தார். டிகாப்ரியோவின் கூற்றுப்படி, நிச்சயமாக அவரின் சூழலியல் செயல்பாடுகள் அத்தோடு முடிந்துவிடப் போவதில்லை.

சென்ற ஜனவரியில் ரோலிங் ஸ்டோன் உரையாடலில், “முழுதும் இதில் மூழ்கிக் கிடக்கிறேன்” என்றார். “நான் இது பற்றிச் சிந்திக்காமல் இருக்கும் நேரம் என்று ஒரு நாளில் ஓரிரு மணி நேரம் கூட இல்லை. மெதுவான வேதல் இது. ‘அடுத்த வாரமே வேற்றுக் கிரகர்கள் படையெடுத்து வருகிறார்கள், நம் நாட்டைக் காப்பதற்கு இப்போதே எழுந்து நின்று போராட வேண்டும்’ என்பது போலில்லை, ஆனால் இது தவிர்க்கவே முடியாதது, அது மட்டுமில்லை, பீதியூட்டுவதாகவும் இருக்கிறது.”

மூலம்: https://amp.theguardian.com/environment/2016/feb/29/how-leonardo-dicaprio-oscar-climate-change-campaigner

*2019 அக்டோபர் மாதக் கணையாழியில் வெளியானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி