அடுத்து...

எல்லாம் முடிந்த பின்பு என்ன நடக்கும்?

மண்ணின் மைந்தர்கள் எல்லோரும் கூடி
கொரோனுவுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கலாம்

மில்லியன் வருடங்களாகத்
தம் மண்ணையும் மற்ற குடியினங்களையும்
மனச்சாட்சியில்லாமல் அழித்தொழித்த அரக்கர்களை
இதுவரை
எது எதுவோ
யார் யாரோவெல்லாம்
அழிக்க முயன்று முடியாமல் போய்
அவர்களுக்குள்ளாகவே அடித்துக்கொண்டு சாவார்களென்றும் ஆசைப்பட்டுக் காத்திருந்து
அதுவும் நடக்காமல் போய்
இந்தக் கொடுமைக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா கடவுளே என்று
எல்லோரும் வெதும்பிக் கிடந்த வேளையில்
வாராது வந்த மாமணியாய் வந்திறங்கி அழித்தொழித்த கிருமியாருக்கு
அது கூடச் செய்யவில்லையென்றால் எப்படி?

சிலர் செய்த சேட்டைகளுக்கு
பிஞ்சுக் குழந்தைகள் உட்பட
அவர்களில் எல்லோரையும் கொன்று குவித்தது எப்படிச் சரியாகும் என்று
அவர்களின் ஐ. நா. மன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு
போர்க் குற்றங்கள் மீதான நேர்மையான விசாரணை ஒன்று நடந்தேறலாம்

வெறுப்பு தலைக்கேறி
கிருமிகளுக்குரிய அடிப்படை அறங்கூட இல்லாமல்
இப்படி மனிதத்தனமாக நடந்துகொண்டுவிட்டோமே என்று
அவர்களில் பலர்
போருக்குப் பிந்தைய மன உளைச்சலில்
தற்கொலை செய்துகொண்டு மாளலாம்

அவர்களுக்குள்ளும்
ஓர் அசோகன்
தன் கொடுக்குகளையெல்லாம்
வெட்டி வீசிவிட்டு
அமைதி மார்க்கத்தைத் தழுவலாம்

அன்பே பிரதானமென்று புறப்பட்ட
இறைக் கிருமியொன்று
இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு கிருமியையும் சந்தித்து
தன் புதிய மதத்தின் போதனைகளை விளக்கித் திரியலாம்

நான்கைந்து தலைமுறைகளுக்குப் பின்
அவர்களும் நம்மைப் போல
அத்தனையும் மறந்து
எது பெரியது என்று ஏதோ ஒன்றுக்காக
அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு சாகலாம்

இவர்களை
இன்னும் சிறிது காலம் விட்டுவைத்திருந்தால்
நாமும் பல வேற்றுக் கிரகங்களைப் பார்த்திருக்க முடியுமே என்று
அவர்களில் சிலர் வருந்த வாய்ப்பிருக்கிறது

இந்தக் கிரகத்தை அழித்து நாசமாக்குவதே வேலையாய்க் கொண்டிருந்தவர்களுக்குள்ளே
எந்நேரமும் இதை வளப்படுத்தவே எண்ணிக்கொண்டிருந்தவர்களும் இருந்தார்களே
அவர்களற்ற உலகம் எப்படியிருக்கப் போகிறதோ என்ற கவலையில் சிலர் காலத்தை ஓட்டலாம்

அவர்களை மிஞ்சும் ஆற்றல் கொண்ட இயந்திரங்களை எல்லாம்
அவர்களே படைத்தார்களே
அவற்றையெல்லாம் இப்போது யார் நிர்வகிப்பது என்ற பெருங்குழப்பம் சூழலாம்

மனிதகுலத்தை
முற்றுமுழுதாக அழித்துவிட்ட பின்பும் கூட
அவர்களின் படைப்புகள் ஒவ்வொன்றும்
நமக்குக் கிடைத்த பொக்கிசங்கள் என்று சொல்லி
அவை ஒவ்வொன்றையும்
தம் இனத்தின் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று
வியந்து ஆராயலாம்

அப்போது
கிருமிகளைப் பற்றிய
மனிதர்களின் ஆராய்ச்சியும்
அவர்களின் கைகளில் கிட்டலாம்

அதில்
ஒன்று அவர்களைப் பெருமகிழ்ச்சிக்குள்ளாக்கும்

இம்மனிதர்கள்
எல்லாத்தையும்
மனிதக் கண் கொண்டே கண்டார்கள்
அவர்களால்
ஒருபோதும் கிருமிகளை முழுமையாக அறிந்துகொள்ள முடிந்ததேயில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி