வேயன்னா

நமக்கெல்லாம் நாள்தோறும் நாடு பற்றிய நினைவு என்பது இருந்து கொண்டே இருப்பதில்லை. ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் கொடுக்கப்படுகிற மிட்டாய்கள்தான் அதை ஓரளவு ஒரு சிலருக்கு நினைவு படுத்துபவையாக இருந்தன. கூடுதலாக இப்போது தனியார்த் தொலைக்காட்சிகளின் புரட்சி நிகழ்ந்த பின்பு ஏகப்பட்ட நாட்டுப் பற்றூட்டும் நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் காட்டப்படுவதால் அவ்விரு நாட்களில் மேலும் அதிகப் படியான நாட்டுப் பற்றை உணர முடிகிறது. இவை தவிர்த்து அதைவிட அதீத உணர்ச்சிகள் கொப்பளிப்பது கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களிலும் அவற்றை விடச் சாதாரணமாகச் சிலரால் பேசப்படும் பக்கத்து நாட்டுடனான போர் நடக்கும் நாட்களிலும்தான். இப்படியாக நாட்டுப் பற்று பல்வேறு புது வடிவங்கள் எடுத்திருக்கும் வேளையில் ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினமும் குடியரசு தினமும் நாட்டைப் பற்றி மட்டுமல்லாமல் எனக்கு எங்கள் தாத்தா பற்றியும் தவறாமல் நினைவு படுத்துகின்றன. நாட்டுக்கும் தாத்தாவுக்கும் என்ன உறவு என்கிறீர்களா? அது ஒரு பெரும் கதை. அந்தக் கதையைப் பற்றிப் பேச இதை விடவும் சிறப்பான தருணம் சிக்காது.

இந்த ஆண்டு தாத்தாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகிறோம். சில கொள்ளையர்களும் கோமாளிகளும் குற்றவாளிகளும் கூடத் தத்தம் தந்தையரை – தலைவனை தியாகி நிலைக்கு உயர்த்தி நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் நாம் அதைச் செய்யத் தவறினால் அது நம் வாழ்வின் ஒரு பெரும் குறையாகவே இருந்து முடியும் என்ற கவலை ஒருபுறம் எல்லோரையும் ஓரளவு வருத்தியது என்ற போதிலும் களத்தில் இறங்கி அதற்கான வேலை பார்ப்பதில் வேகமான – ஈடுபாடுடைய ஆள் யாரும் எம்மிடம் இல்லை. அவர் சார்ந்திருந்த இயக்கத்தோடும் வீட்டில் யாரும் அவரளவுக்குப் பிடிப்போடு இல்லை. இந்த நிலையில் எங்களில் ஒரு விதி விலக்காக எங்கள் சித்தப்பா ஒருவர் – தாத்தாவின் நேரடி சீடர், இந்தக் கடமையைச் செய்யத் தவறினால் தன் வாழ்க்கை அர்த்தமில்லாமலே முடிந்து விட்டதாகிவிடும் எனக் கருதிப் பிடிவாதத்தோடு களத்தில் இறங்கி அதற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இடதுசாரி இயக்கத்தின் தமிழக வரலாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் நல்லகண்ணு அவர்கள் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.

இந்த நூற்றாண்டு விழாவுக்கு நாங்கள் செய்ய நினைப்பது மிகச் சில விஷயங்களே. ஒன்று, அவருடைய நினைவிடத்தை ஓரளவு புதிப்பிக்க வேண்டும். மற்றொன்று, கண்டிப்பாகச் சொல்லாமல் போய் விடக்கூடாத அவரது வாழ்க்கையை ஒரு நூல் வடிவில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பணியை தோழர் பொன்னீலன் (ஆம். அவரேதான். ‘புதிய தரிசனங்கள்’ என்ற புதினம் எழுதி சாகித்ய அகாடெமி விருது பெற்ற இடதுசாரி எழுத்தாளர்!) முன்னின்று செய்து கொண்டிருக்கிறார். அவர் தாத்தாவின் அருகிலிருந்து வாழும் வாய்ப்பைப் பெற்றவர் என்பதால் மற்ற எவரையும் விடச் சிறப்பான முறையில் இந்தப் பணியைச் செய்து முடிப்பார் என எண்ணுகிறோம். அவருடைய இந்தப் பணியில் அளவிலாத தகவல் தேடலும் சேகரிப்பும் முக்கியமான உட்பணிகள். இதைச் செய்வதற்கு தாத்தாவின் காலடி பட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று, அங்குள்ள மனிதர்களைச் சந்தித்தும் மற்ற வழிகளிலும் தகவல்களைத் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார் அவர். இதில் தாத்தாவோடு பழகிய – வாழ்க்கையைப் பகிர்ந்த ஒவ்வொருவரும் தத்தம் நினைவில் இருக்கிற – தமக்குத் தெரிந்த நிகழ்வுகளை – கதைகளைச் சொல்லி வருகிறார்கள்.

என்னுடைய நான்காவது வயதிலேயே தாத்தா இறந்து விட்டார் என்ற போதிலும், ‘அவர் போல வருவான்’ என்று சின்ன வயதில் பெரியவர்கள் ஏற்றி விட்டதாலும் (அதில் துளி கூட வரவில்லை என்பது வேறு கதை) அவருடைய பேரன் என்பதன் பெருமையை ஓரளவு ஊர்ப்பக்கம் அனுபவித்து விட்டதாலும் அவர் பற்றிய கதைகள் மீது எனக்கு எப்போதுமே அளவிலாத ஈடுபாடும் ஆர்வமும் இருந்து வருகிறது. என் மனக் கிடங்கிலும் அவர் பற்றிய பல கதைகள் புதைந்து கிடக்கின்றன. வாழ்ந்து முடித்து விட்ட மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற பல பெரியோர் சொன்ன கதைகள்! என் பங்குக்கு அவற்றைத் தோண்டி எடுத்து ஒரு பொட்டலம் போட்டு தோழர் பொன்னீலன் அவர்களுக்கு அனுப்பி வைத்தால் எல்லோரும் சொல்ல மறந்த – விடு பட்ட சில வரிகள் அதில் சிக்கலாம் என்ற சிறு நம்பிக்கையில் இதை எழுத உட்கார்ந்தேன். அப்படியே நம் வலைப்பதிவிலும் அதையே போட்டு விடலாம் என்றெண்ணி அதையும் செய்கிறேன். இதைப் படித்து விட்டு உங்களில் பத்துப் பேராவது நூல் வெளி வரும்போது அதை வாங்கிப் படிக்க ஆர்வம் காட்டினால், தாத்தாவுக்குச் செய்ய வேண்டிய கடமையை நானும் ஓரளவுக்கு – என் அளவுக்குச் செய்து விட்ட மன திருப்தி அடைவேன். கதைக்குள் செல்வோம் இப்போது...

எங்கள் பூர்வீகக் கிராமம் பூதலப்புரம் எனப்படும் ஓர் ஊர். பழைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பழைய கோவில்பட்டி தாலுகாவில் இருந்த ஊர். இப்போதைய வரைபடங்களின் படி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் வருகிறது. அதிகம் நடமாடிப் பழக்கமில்லாத கிழக்குத் திசையில் நடந்து சென்றால் வந்து விடுகிற தொலைவில் இராமநாதபுரம் மாவட்டம் இருக்கிறது. தென் தமிழகத்துக் கிழக்குச் சீமைக்கும் மேற்குச் சீமைக்கும் எல்லை என்று சொல்லலாம். கீகாடு, மேகாடு என்றுதான் அவற்றை அழைப்பர் மேகாட்டிலும் கீகாட்டிலும் உள்ளோர். ஆக மொத்தம் அவை அனைத்துமே காடுகள் என்பது மட்டும் உறுதி. வெள்ளைக்காரன் காலத்தில் பெரும்பாலும் கீகாட்டின் கலாச்சாரப் பாதிப்பே அதிகம் கொண்டிருந்தது என்றாலும், மாட்டு வண்டிகளின் காலம் முடிந்து பேருந்துகள் வர ஆரம்பித்த பின்பு, கீகாட்டுத் தொடர்பு குறைந்து, மேற்கே சிறிது தொலைவு வந்து, பின்பு அங்கிருந்து (நாகலாபுரம் – புதூர் போன்ற ஊர்களில் இருந்து) வடக்காகவோ தெற்காகவோ பயணிக்கும் பழக்கம் அதிகமானது. நான் சிறுவனாய் இருக்கும் காலம் வரை கிழக்கேதான் நிறைய சம்பந்தங்கள் செய்து கொண்டிருந்தார்கள். பின்னர்தான் வரைபடங்களும் வசதிகளும் எங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றின. திசையைத் திருப்பியதில் தாத்தாவின் பங்கும் நிறைய உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

கீகாடு எனப்படும் கிழக்குச் சீமை என்பது பெரும்பாலும் தண்ணீர் இல்லாத – கண்மாய்த் தண்ணீர் குடிக்கிற – கண்மாயிலும் மனத்திலும் ஈரமில்லாத – பஞ்ச காலத்தில் களவாங்கும் வேலை செய்கிற – மனிதத் தன்மையே இல்லாத – கறிச் சோறுக்குச் சண்டை போடுகிற – சாராயத்துக்குக் கொலை செய்கிற – கொடூரர்களின் பூமி. அல்லது அப்படித்தான் எங்கள் ஊர்ப்பக்கம் சொல்வார்கள். ஆனால், மற்ற பண்பாடுகளில் கிழக்குச் சீமையின் பாதிப்பு அதிகம் என்ற போதிலும் அமைதி அதிகம் விரும்பும் மக்கள் வாழும் ஊர் எங்களூர். அதனால்தானோ என்னவோ பின்னாளில் எளிதாக திசையை மாற்றிக் கொண்டு விட்டார்கள். எங்கள் ஊர் மட்டுமில்லை. கிட்டத்தட்ட பழைய கோவில்பட்டி தாலுகா முழுக்கவே அப்படி ஓர் அமைதி விரும்பி மக்களின் பகுதி எனலாம். தெற்கும் கிழக்கும் வெளியுலகில் அறியப்படுவதே அவர்களின் மூர்க்கத்தனமான வாழ்க்கை முறைக்காகத்தான். அப்படியிருக்கையில் அவற்றுக்கு மத்தியில் எங்கள் பகுதி ஒரு கலாச்சாரத் தீவு என்று சொல்லலாம். ஜாதி என்கிற சமூக அவலம் அங்கே அதிகம் இல்லை. அதற்காக உயிரை மாய்க்கிற மிருகத்தனம் துளியும் கிடையாது. எல்லோரும் எல்லோர்க்கும் உறவினர். இன்றைக்கு நான் உறவினர் என்று சொல்லிக் கொள்கிற நிறையப் பேர் அப்படிப் பட்டவர்கள்தான்.

தாத்தாவின் கதையைச் சொல்கிற போது அவர் எவ்வளவு முற்போக்குவாதி என்பதை மட்டுமல்ல, அவர் வாழ்ந்த மண்ணும் அவர் சார்ந்த மக்களும் எவ்வளவு முற்போக்குத் தன்மை கொண்டோராக இருந்தார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும். அதுதான் கதையை முழுமைப் படுத்தும். அது மட்டுமின்றி நாளைய சமூகம் மாற்றம் வேண்டிச் செய்யும் போராட்டங்களில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து செயல்பட ஓரளவு உதவும் என நம்புகிறேன். என்னவெல்லாம் இருக்க வேண்டும்? நாகரிகமான தலைவன் வேண்டும். அதற்கும் மேலாக அவன் பேச்சைக் கேட்கும் திறந்த மனம் கொண்ட சுற்றம் வேண்டும். அது அவருக்கு இருந்தது. அதனால்தான் பல வேலைகள் பின்னாளில் அவருக்கு எளிதாய் இருந்தன. தலைவன் மண்ணை மாற்றியதாகச் சொல்லப்படும் நிறையக் கதைகள் புருடா (கண்டிப்பாக இதிலும் விதி விலக்குகள் உண்டு). மண்தான் தலைவனை உருவாக்குகிறது. அது வீட்டு மண்ணா – வெளி மண்ணா – தெரு மண்ணா – களி மண்ணா என்பது வேறு கதை. ஆனால் வாழும் மண்ணும் உடன் வாழும் மக்களும் பெரும்பாலானோருடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றனர் என்பதையும் எல்லா வாழ்க்கை வரலாறுகளும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது நம் கருத்து. அதன்பின் தலைவன் மண்ணை மாற்றிய கதைகள் வரலாம்.


அவருடைய அப்பா இராமசாமி (பின்பெயரோ பட்டமோ வேண்டாம் என்று மெனக்கெட்டுத் தவிர்த்திருக்கிறேன்; அது கண்டிப்பாக என் அடையாளத்தை மறைக்க உதவும் என்பதாலும் சாபக்கேடு என்று சொல்லிவிட்டு நானே அதைப் பெருமையாகப் போட்டால் நல்ல சுவையில் இராது என்பதற்காகவும்; அதே வேளையில் இப்படிப் பெயரை மட்டும் சொல்வது வேறு யார் பற்றியோ சொல்வது போல ஓர் உணர்வு வருவதையும் என்னால் தவிர்க்க முடியவில்லை!), குதிரைக்காரர் என்று அழைக்கப்படுவாராம். அது அப்போதைய ஸ்டைல். எப்போதும் குதிரை, தலையில் ஒரு கொண்டை, முகத்தில் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் சகிதம் வலம் வருபவர். என் இளமைக் காலத்து அளவிலாத் தேடல்களின் போது துருப்பிடித்த வாள் ஒன்று மச்சு வீட்டில் கண்டெடுத்தேன். அதுவும் அவருடையதுதான் என்பார்கள். அவருடைய மூதாதையர் ஏதோவொரு மன்னனுக்கு அடியாளாகவோ - படைத் தளபதியாகவோ – இன்னும் கொஞ்சம் மிகைப் படுத்திச் சொல்ல வேண்டுமானால் குறுநில மன்னராகவோ இருந்திருக்க வேண்டும். ஒருவேளை அழகுக்காகக் கூட நாகலாபுரம் சந்தையில் வாங்கி வந்து வீட்டுச் சுவற்றில் மாட்டியிருந்தும் இருக்கலாம். ஊரிலேயே வசதியான குடும்பம். நிறைய நில புலங்கள். ஊரில் பெரும் பகுதி எங்கள் வீடுதான். கீழவீடு என்பார்கள். கீழவீட்டில் கீழ்த்திசை தவிர்த்து மற்ற அனைத்துத் திசைகளிலும் ஒவ்வொரு வாசல் இருந்தது. இப்போது ஒவ்வொரு வாசலும் பல வீடுகளாகி விட்டன. பாகப்பிரிவினையில் நிகழ்ந்த சோகம்! அதிலும் நிறைய வீடுகள் சிதிலமாகி விட்டன.

இன்னமும் பக்கத்து வீட்டிலிருக்கிற மாமா மகளைத் தவிர தூரந்தொலைவில்  போய் யாரையாவது கட்டிக்கொண்டு மாட்டிக் கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிற மண்ணில் அந்தக் காலத்திலேயே நூறு மைல் தொலைவு போய் சம்பந்தம் செய்திருக்கிறார்கள். இராமசாமி என்பாருடைய தங்கையைக் கட்டிக் கொடுத்தது திருபுவனம் (திருபுவனம் இருப்பது இப்போதைய சிவகங்கை மாவட்டத்தில்) அருகே இருக்கும் பழையனூர். அதுதான் அவருக்குப் பின்னாளில் மாமியார் ஊர் ஆகிறது. தொடர்ந்து பல தலைமுறைகளாகப் பல சம்பந்தங்கள் செய்திருக்கிறார்கள். அதற்கடுத்த தலைமுறையில் அது மாறி விட்டது. வீட்டு நிகழ்ச்சிகளுக்குப் பத்திரிகை அனுப்புவது போக இப்போதெல்லாம் எங்களுக்குப் பழையனூரோடு எந்த உறவும் இல்லாமல் போய் விட்டது. ஆனால் தாத்தாவுக்கு அது முக்கியமான இடம். அங்கிருந்துதான் மதுரையில் போய் படித்திருக்கிறார் (மதுரையில் போய் படித்தது ஏன் முக்கியம் – எவ்வளவு முக்கியம் என்பதை அப்புறம் கண்டிப்பாகச் சொல்கிறேன்). அதற்குக் காரணம் அவருடைய அத்தை வீட்டு வசதியும் – தன் தாய் மண்ணின் (தந்தையின் ஊர்தானே தாய் மண்?!) வசதியின்மையும்.

அப்போதும் பூதலப்புரம் வரைபடத்தில் நல்லதோர் இடத்தில் இருக்கவில்லை. இப்போதும் அது மாறிய பாடில்லை. ஒருவேளை பிற்காலத்தில் நம்மால் ஏதாவது முடிகிறதா என்று பார்க்கலாம். ஆனால், பழையனூர் ஓரளவு பெரிய ஊர். அங்கே கல்வீட்டுக் காரர்கள் என்று கேட்டால் பக்கத்து ஊரில் இருப்போருக்கும் பாதை தெரியும் (இப்போது அங்கே கல்தான் கிடக்கும் என நினைக்கிறேன்; வீடு இருக்கிறதா என்று தெரியவில்லை!). அவ்வளவு பெரிய குடும்பம். மன்னர் பரம்பரை என்று சொல்வார்கள். ஏதாவதொரு குறுநில மன்னர்(!) பரம்பரையாக இருந்திருக்க வேண்டும் என்பது என் ஊகம். இன்றைக்கும் இருக்கும் அந்த ஊர்க் கண்மாய் இருக்குமிடம் கல்வீட்டுக் காரர்கள் ஊருக்கு எழுதிக் கொடுத்தது. அவ்வளவு பெரிய குடும்பம். விளைச்சல் பூமி என்பதால் எதற்கும் பற்றாக்குறை இல்லாத சூழ்நிலை. மன்னர் பரம்பரையின் அடுத்தடுத்த தலைமுறைகள் இப்போது மதுரை வீதிகளில் தங்கள் அனைத்து அடையாளங்களையும் இழந்து விட்டு – சீரழிந்து – உருக்குலைந்து அலைந்து கொண்டிருக்கின்றன. அடுத்த தலைமுறைக்குள் தடயமே இல்லாமல் அழிந்தும் போகலாம் அவர்களின் வரலாறு.

ஆனால் பூதலப்புரத்து மரபணுக்கள் அதை விட ஓரளவு வீரியத்தோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதற்கொரு காரணம் தாத்தா. அவருடன் பிறந்தோர் இன்னும் இருவர். ஒரு தம்பி. ஒரு தங்கை. தாத்தா பெயர் வேலுச்சாமி (மீண்டும் பின்பெயர் தவிர்க்கிறேன்; ஊரில் சிலர் மரியாதை நிமித்தமாக ‘வேயன்னா’ என்றும் சொல்வார்கள்; அதையே நாமும் பயன்படுத்தி விடுவோம்!). இளையவர் கந்தசாமி (கானா!). அடுத்து லட்சுமி (லானா என்று சொல்வதில்லை அவரை!). லட்சுமிப் பாட்டி மட்டும் மறந்து போன கதைகளைச் சொல்ல தன் தொன்னூறுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வேயன்னாவின் பேரர் சிலரும் கானாவின் பேரர் சிலரும் ஏதோ ஓரளவு படித்து – ஓரளவு முன்னுக்கு வந்து – வெளியூர்களிலும் வெளி நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் அடிப்படையாக வேயன்னா எடுத்த சில முடிவுகளும் அப்படி ஒரு மனிதர் அப்போது வாழ்ந்ததுமே என்பதை இப்போது நாங்கள் மறந்து விட்டாலும் எப்போதும் மறுக்க முடியாது எங்களால். அவருடைய சில முடிவுகள்தான் எங்களையெல்லாம் சில தலைமுறைகள் பின்னுக்கு எடுத்துச் சென்றன என்பதைப் பற்றியும் பின்னர் பேசுவோம்.

வேயன்னா மீது அவருடைய அத்தையும் மாமாவும் வைத்திருந்த அதீத அன்பு காரணமாக அவரைத் தம்முடனேயே வைத்திருந்து மதுரையில் படிக்க வைத்தார்கள். மதுரையில் ஐக்கிய கிறித்தவப் பள்ளியில் படித்திருக்கிறார். அப்போதுதான் விடுதலைப் போரில் ஈடுபட்ட பல மாணவ நண்பர்களின் பழக்கம் கிடைத்திருக்கிறது. முத்துராமலிங்கத்தேவரும் அவர்களில் ஒருவர். மாப்பிள்ளை-மச்சான் என்று பேசிக் கொள்வார்களாம். அதற்குப் பின்பு அந்த உறவு பெரிதளவில் தொடரவில்லை என்றே நினைக்கிறேன். இருவரும் வெவ்வேறு இயக்கங்களில் – வேறுபட்ட கொள்கைத் தளங்களில் இயங்கினார்கள். பிற்காலத்தில் அவ்வப்போது சில சந்திப்புகள் நிகழ்ந்ததாகவும் (எதிர்பாராத மற்றும் ஏற்படுத்திக் கொண்ட) கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஊரில் அவருடைய சேக்காளிகள் வண்டி-மாடு பூட்டக் கற்றுக் கொண்டிருந்த வயதில் அவர் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கூட்டம் கூட்டத் தொடங்கி இருந்தார். நேதாஜி மதுரை வந்து முன்னின்று நடத்திய ஒரு போராட்டத்தில் கலந்து கொண்ட பின்புதான் அதில் தீவிர ஈடுபாடு கொண்டு களம் இறங்கினார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். தன் பதினெட்டாம் வயதிலேயே முதன்முறையாக சிறை சென்று விட்டார். அப்போது எடுத்த புகைப் படம் ஒன்று எங்கள் வீட்டில் இப்போதும் இருக்கிறது. பள்ளிக் காலத்தில் ஜேம்ஸ் என்றொரு பெயரும் கொண்டிருந்திருக்கிறார். கிறித்தவப் பள்ளியில் படிக்கிற போது கொடுக்கப் பட்ட பெயர் என்று பாட்டி சொன்னதாக நினைவு. இன்றைய கால் சென்டர்கள் போல இரு பெயர்ப் பழக்கம் அப்போதே வெள்ளைக்காரர்களால் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது. எங்கள் வீட்டிலிருக்கிற அவருடைய திருமணப் பத்திரிகையில் கூட J R வேலுச்சாமி என்று போட்டிருக்கும். J என்றால் ஜேம்ஸ். அது அவருடைய தாத்தா பெயரில்லை. கிறித்தவப் பள்ளியில் கொடுக்கப்பட்ட பெயர்.

வெள்ளையருக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் பங்களிப்புகள் செய்து கொண்டிருந்த வேளையில் கல்வீட்டுக் காரரின் மூத்த மகள் பொன்னம்மாளைக் கட்டி வைத்து விட்டார்கள் அவருக்கு. இதுதான் அத்தை-மாமாவின் பாசத்திற்கான காரணமா என்று கேட்டுவிடாதீர்கள். நாங்கள் கேட்டவரை அப்படியெல்லாம் லாபக் கணக்குகள் அவர்கள் போடவில்லை என்றுதான் தெரிகிறது. அப்படியே இருந்தாலும் தவறில்லை. போகட்டும். திருமணத்துக்குப் பின்பும் அவர் வீடு தங்கிய பாடில்லை. நாடாறு மாதம் காடாறு மாதம் என்பது போல், பெரும்பாலான வாழ்க்கை சிறையிலேயே கழிந்திருக்கிறது. மிச்சப் பெரும்பான்மையான வாழ்க்கை தலைமறைவாகக் காடுகளில் வாழ்ந்ததில் கழிந்திருக்கிறது. இதில் இப்போதும் நான் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு மருமகனுக்குத் தன் பெண்ணைக் கொடுக்கும் போது, தன் மகளை வீதியில் விட்டு விடுவானே என்று பெரியோரும் கலங்க வில்லை. மகளும் கவலைப் படவில்லையாம். திருமணம் ஆன பின்பும் இப்படித் திரிந்தவரை யாரும் கரை போட்டுத் தடுக்க முயற்சிக்க வில்லை. மாறாக, அவருடைய விடுதலைப் போராட்டப் பங்களிப்பில் அவருடைய மைத்துனர்களும் பங்கெடுத்து அவரவர் சக்திக்கியன்ற அளவு பணிகள் செய்திருக்கிறார்கள். வீட்டு மாடியில் மூவர்ணக் கொடி கட்டுவது, அவர் ஓடி ஒளியும் காலங்களில் உணவு – தங்குமிட வசதிகள் செய்து கொடுப்பது, போராட்டங்களுக்கு ஆள் சேர்த்துக் கொடுப்பது, தப்பிச் செல்ல வாகன வசதிகள் செய்து கொடுப்பது போன்ற பணிகள். எல்லாவற்றுக்கும் மேலாக சகோதரியை உடன் வைத்துப் பார்ப்பதும் அவருடைய பிள்ளைகளையும் உடன் வைத்தே வளர்ப்பதும் அவர்களுடைய முக்கிய பணியாக இருந்திருக்கிறது. அன்றைய காலம் இன்று போல் இருந்திருந்தால் – அன்றைய மனிதர்கள் இன்றுள்ளோர் போல் இருந்திருந்தால் – இதெல்லாம் முடிந்திருக்குமா என்று தெரியவில்லை. அது பெண்கள் பெரிதாக ஏதும் பேசமுடியாத காலம் என்றபோதிலும், அவருடைய மைத்துனர்களின் மனைவிமாருக்கு நாங்கள் பல தலைமுறைகளுக்குக் கடமைப் பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கு இருக்கிற பல வீடுகளில் இப்போதெல்லாம் அது போல ஒரு வாரம் கூடச் சகோதரியையும் அவருடைய பிள்ளைகளையும் வைத்துச் சோறு போட முடியுமா என்று தெரியவில்லை.

இதில் ஒரு பெருங்கொடுமை எதுவென்றால் என் தந்தையாருக்கு அவருடைய தந்தையை முதல் முறையாக விபரம் தெரிந்து பார்த்தபோது ஏழு வயதாம். அதுவரையிலும் தாய் வீட்டிலும் ஊரில் சித்தப்பா பிள்ளைகளோடுமே வாழ்க்கையை ஒட்டியிருக்கிறார். தன் தந்தை என்பவர் தலைமறைவு வாழ்க்கையையே முழு நேரத் தொழிலாகக் கொண்டு விட்டதால் அவர் பற்றிய சிந்தனையோ – தந்தையின் கை கோத்து நடை பழகிய அனுபவங்களோ இல்லாமலே வளர்ந்திருக்கிறார். தாத்தாவும் அதுவரையும் அதற்குப் பின்பும் தன் வாழ்க்கையைத் தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் (இப்போது போல் தன் மக்களுக்காக அல்ல) மட்டுமே அர்ப்பணித்திருக்கிறார். எந்தவிதமான உலகியல் சார்ந்த விஷயங்களும் அவரை ஈர்க்க வில்லை. பாசம் தடுக்க வில்லை. உறவுகள் தொல்லையாக இருக்க வில்லை. தன் வீட்டாரும் தன் மனைவி வீட்டாரும் தான் செய்வதையெல்லாம் பின் நின்று ஆதரிக்கும் போது வேறென்ன வேண்டும் ஒரு மனிதனுக்கு?! தம்பி கானா அண்ணன் தலைமறைவாகி இருந்த காலம் முழுக்க குடும்பப் பணிகளைக் குறையிலாது செய்து நிறைவேற்றி இருக்கிறார். அது போதாதா?

கல்வீட்டில் மொத்தம் ஏழு பெண் பிள்ளைகள். அத்தனை பேரும் செக்கச் செவேரென்று ஐயமார் பிள்ளைகள் போல் இருப்பார்களாம். நாங்களெல்லாம் இப்போது நிறம் குறைந்து விட்டதால் அவர்களை உழைக்காத சோம்பேறிகளின் நிறம் கொண்டோர் என்று சொல்வோம். இரண்டாவது மகள் கந்தம்மாள். ஏதோ நோய்வாய்ப் பட்டிருந்ததால் வெளியில் கொடுக்கப் பயந்து போய் அவரையும் வேயன்னாவுக்கே கட்டி வைத்து விட்டார்கள். ஆக, வேயன்னாவுக்கு இரண்டு மனைவியர். முதலில் கொடுத்த ஒரு மனைவியோடு வாழவே நேரமில்லாமல் இருந்தவருக்கு இன்னொரு பிள்ளையையும் கொடுத்தால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. அதுவும் என்றாவது ஒருநாள் தன் மகராசன் வில்லு வண்டியில் வீடு வந்து சேர்வார் என்று தினம் தினம் வீட்டு வாசப்படியில் ஏமாந்து போய் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும். வேயன்னாவும் அப்படித்தான் என்றாவது ஒருநாள் சுதந்திரம் வந்து விடும் என்று சிறையிலும் புதர்களிலும் மாறி மாறி நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருந்திருக்கிறார்.

கந்தம்மாளை நாங்கள் சின்னப் பாட்டி என்போம். மற்றவர்கள் ஐயர் வீட்டம்மா என்பார்கள். காரணம் – அந்தப் பாட்டியைச் சின்ன வயதில் ஓர் ஐயர் வீட்டில் வைத்துக் கொஞ்ச காலம் வளர்த்தார்களாம். சின்னப் பாட்டி மட்டுமில்லை; ஏழு பேரில் பல பாட்டிகள் கடைசிவரை சுத்த சைவம். அதற்குக் காரணம் பழையனூரில் இருந்த அந்த ஐயர் வீடு. அவர்கள் அறிமுகப் படுத்திய பழக்கவழக்கங்கள் பல. எங்கள் வீட்டில் இருக்கிற பாத்திரங்கள் அனைத்துமே சைவம் மட்டுமே சமைக்கப் பயன்படுத்த வேண்டும். அசைவச் சமையலுக்குத் தனியாக ஒரு மூலையில் மட்பாண்டங்கள் இருந்தன. எப்போதாவது அசைவம் எடுக்கும் போது, எடுத்துச் சமைத்துச் சாப்பிட்டு விட்டுத் திரும்பவும் அவற்றை இருந்த இடத்திலேயே வைத்து விட வேண்டும். அந்த நாட்களில் சைவ உறுப்பினர்களுக்குத் தனிச் சமையல் நடைபெறும். எம் போன்ற குழந்தைகள் இரு பக்கங்களிலும் உலப்பினால் வசவு ('திட்டு' என்பதற்கான தென் தமிழ் வார்த்தை) கிடைக்கும். வாசலில் எப்போதுமே ஒரு வாளி நிறையத் தண்ணீர் இருக்கும். வீட்டைவிட்டு வெளியேறி விட்டால் அடுத்த நிமிடம் உள் வருவதாக இருந்தாலும் காலைக் கழுவி விட்டுத்தான் வரவேண்டும். இவையெல்லாம் பின்னர் மெல்ல மெல்ல மறைந்து விட்டன. புதுப் புது மருமகள்கள் வரும்போது அதெல்லாம் மாறித்தானே ஆக வேண்டும்?!

வேயன்னாவுக்கும் கந்தம்மாளுக்கும் நடந்த திருமணம் ஒரு பெரிய வேடிக்கைத் திருமணம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவர்தான் கண்ணுக்கெட்டும் தூரத்தில் ஆளே இல்லையே. அப்புறம் எப்படித் திருமணம் வேறு செய்ய முடியும்? கவக்கம்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காவல்காரர்கள் மற்றும் வயதானவர்கள் கையில் வைத்திருப்பார்கள். திரைப்படங்களில் பார்த்திருந்தால் உண்டு. காவல் கம்புதான் கவக்கம்பு ஆகியிருக்கும் என்றெண்ணுகிறேன். அல்லது கவட்டைக் கம்பு என்பது கவக்கம்பு ஆகியிருக்கலாம். ஏனென்றால், அதன் கீழ் முனை கவட்டை கொண்டிருக்கும். கவட்டை என்றால் என்ன? V போலப் பிரியும் அமைப்பு கொண்ட மரக்கிளையின் பகுதி. மாப்பிள்ளை இடத்தில் அதை (கவக்கம்பை) உட்கார வைத்து இவர்களாகவே தாலியைக் கட்டிவிட்டு ஒருநாள் உண்மையான மாப்பிள்ளை திரும்பி வரும்போது “இது உன் பொண்டாட்டி” என்று உடன் அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்? கேட்கிற நமக்கே அப்படி இருந்தால், சம்பந்தப் பட்டவருக்கு எப்படி இருந்திருக்கும்? சொத்தும் விட்டுப் போகக் கூடாது சொந்தமும் விட்டுப் போகக் கூடாது என்று சொல்லி அந்த வேலையைச் செய்தார்களாம். இப்படியாகச் சின்ன வயதிலேயே மனிதர் அளவுக்கதிகமான குடும்பப் பொறுப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் எதுவும் அவரைக் கட்டிப் போடவே இல்லை. தொடர்ந்து காலம் தனக்கிட்ட பணியென அவர் எதை நினைத்தாரோ அதைத்தான் அவர் செய்திருக்கிறார்.


படிக்க வைத்தார்கள் – இரண்டு மகள்களைத் தலையில் கட்டி வைத்தார்கள் என்பது தவிர்த்து இடையில் வேறு சில அத்தியாயங்களும் உண்டு கதையில். படித்து முடித்ததும் சிவகங்கைச் சீமையிலேயே வருவாய் அதிகாரி வேலையும் வாங்கி விட்டார்கள் மருமகனுக்கு. அவரது வாழ்க்கை முழுக்கத் தியாகம் செறிந்ததாகவே இருந்தது என்றபோதிலும் நம்முடைய பார்வையில் இந்தத் தியாகம்தான் அதில் முதன்மையானது. ஏனென்றால் அதுதான் பொருள் சார்ந்து வாழப் பழகி விட்ட நமக்கு எளிதில் புரிய வைக்கிறது அவருடைய தியாகத்தின் அளவை. வருவாய் அதிகாரியாக இருக்கிறபோது ஊர் ஊராகச் சென்று வரி வசூல் செய்ய வேண்டியதுதான் அவரது முக்கியமான கடமை. அப்படிச் செல்கிற போது கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் வரி செலுத்த முடியாத போது அவர்களுடைய நில புலங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பது ஆங்கில அரசு இவர்களுக்கு இட்டிருக்கும் கட்டளை. “அந்தப் பாவத்தை என்னால் செய்ய முடியாது” என்று சொல்லி, அதைச் செய்யச் சொல்லும் ஆங்கில அரசாங்கத்துக்கு எதிராக மீண்டும் விடுதலைப் போர் வேள்வியில் குதிக்கிறார். விடுமா அரசாங்கம்? மீண்டும் தலைமறைவு. மீண்டும் தேடல். மீண்டும் கைது. மீண்டும் சிறை. மீண்டும் மீண்டும் ஏதாவதொரு மீண்டும்.

ஒன்றை நாம் இங்கே சரியாகப் புரிய வேண்டும். தனக்குப் பிடிக்காத வேலையைத் தூக்கி எறிவது இன்றும் சிலரால் (மிகச் சிலரால்) செய்ய முடிந்த வேலைதான். ஆனால் நம்மில் பல சராசரிகள் வேலை பிடிக்காவிட்டாலும் கூட கிடைக்கிற பணம் – மரியாதையை மனதில் வைத்துக்கொண்டு அத்தகைய வேலைகளையும் விட்டு விடாமல் கடைசிவரை போராடுகிறோம். பிடிக்காததைத் தூக்கி எறிவதைக் கூடத் தோல்வி மனப்பான்மை எனலாம். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதிலேயே தொங்கிக் கொண்டிருப்பதுதான் வெற்றியாளர்களின் குணாதிசயம் என்று கூட இப்போது வந்துள்ள சில புத்தகங்கள் நமக்கு சொல்லித் தந்திருக்கலாம். ஆனால் வருவாய் அதிகாரி வேலை என்பது அற்றை நாளில் அவ்வளவு சாதாரணப் பட்டதல்ல. அன்று அவர் தூக்கி எறிந்த வேலையின் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை அவருடைய குடும்பம் என்ற முறையில் நாங்கள் இன்று வரை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். ஏனென்றால், என் தந்தையார் ஒரு வருவாய் அதிகாரி மகன் போல வளர்க்கப் பட வில்லை. தந்தை இல்லாத அனாதை போலத் தான் வளர்க்கப்பட்டிருக்கிறார். வருவாய் அதிகாரி மகன் போல வளர்க்கப் பட்டிருந்தால் அவர் தாசில்தாராகவோ அதற்கு மேலாகவோ அல்லவா போயிருக்க வேண்டும்? அது நடக்க வில்லை. அப்படியானால் நாங்கள் என்ன ஆகியிருக்க வேண்டும்? அதுவும் நடக்க வில்லை.

பல தலைமுறைகள் கண்ட வளர்ச்சியை மீண்டும் பழைய இடத்துக்கே கொண்டு போய் விட்டார் வேயன்னா. நாட்டுக்கு உழைத்த வேளையில் அவர் செய்ய மறந்தது வீட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையை. இன்றைக்கு வெள்ளைக்காரனுக்கு எடுபிடி வேலை பார்த்தோரின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எம்மை விடப் பெரிய பருப்புகள் போலக் காட்டிக் கொள்ளும்போது அவர் மீது பெருமையோடு சேர்த்து கொஞ்சம் வருத்தமும் படாமல் இருக்க முடியவில்லை. இருந்த வேலையைத்தான் பிடிக்காமல் விட்டு விட்டார் என வைத்துக் கொள்வோம். விடுதலைப் போராட்டத்தில் ஏன் குதித்தார்? பிடித்த வேலையைச் செய்ய வேண்டும் என்பதற்காகவா? அன்று பொது வாழ்க்கை என்பதோ – அரசியலோ இன்று போல் பணம் காய்க்கும் மரமாக இருக்க வில்லை. பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும், சுற்றத்தார் எல்லோருக்கும் நாட்டில் இருக்கிற நல்ல தொழில்கள் எல்லாத்தையும் ஒதுக்கீடு செய்து கொடுக்கும் அதிகாரம் எல்லாம் இருக்கவில்லை அப்போது. பின் ஏன் அப்படிப் போனார்? அப்படிப் போனால் தம் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சுற்றமும் தற்காலத்தில் மட்டுமல்ல பிற்காலத்திலும் பின் தங்கிப் போவார்கள் என்று ஒரு நாளாவது – ஒரு கணமாவது சிறைக் கம்பிகளை எண்ணிய பொழுதுகளில் எண்ணியிருப்பாரா? வாய்ப்பே இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். எண்ணியிருந்தால் அப்படிப் பண்ணியிருக்க மாட்டாரே! அதெற்கெல்லாம் மேலாக அவர் ஏதோ சிந்தித்து இருக்கிறார்.

அரசியல்வாதிகள் இப்போது போலக் கம்பியை மட்டும் எண்ணிக் கொண்டு பகவத் கீதை படிக்கிற காலமல்ல அது. அடி பின்னி எடுப்பார்களாம். வீட்டில் இருக்கிற எல்லோரும் பார்த்துப் பார்த்துப் பழகி விட்ட தழும்புகள் கொஞ்ச நஞ்சமில்லை. எழுபத்தி மூன்று வயதில் இறந்தவர் அந்த அடிகள் எல்லாம் வாங்கியிரா விட்டால் கண்டிப்பாக எண்பத்தி ஆறு வயது வரை இருந்திருப்பார் (அடுத்தவரை அடி வாங்க வைக்கிற பிறவிகள்தான் இந்த வயது வரை வாழ்ந்து கொண்டிருக்கின்றன); வாழ்வின் பிற்பகுதியிலாவது எங்களுக்காகக் கொஞ்சம் நேரம் செலவிட்டு, எங்களையெல்லாம் சரியான படிப்புகள் படிக்க வைத்து, இருக்கிற சொத்தை முறையாகப் பயன்படுத்தி, சின்ன வயசிலேயே பெரும் பெரும் நிறுவனங்களின் முதலாளிகள் ஆக்கியிருப்பார் என்றொரு பேராசைக் கனவு! ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் அவர் வாங்கிய அந்த அடிகளும்தான் என் நினைவுக்கு வந்து செல்கின்றன. அப்படி எத்தனை பேர் சிந்திய ரத்தம் இன்று ஆட்டு ரத்தம் கோழி ரத்தம் போல் வீணாகிக் கொண்டிருக்கிறது. சில தப்பாய்ப் பிறந்தவர்களின் கையில் நாடு போயிருப்பதால் வந்த வினை இது. அதெல்லாம் பரவாயில்லை. தியாகம் என்ற வார்த்தையின் அர்த்தத்தைக் கூட மாற்றி விட்டார்கள் பாவிகள்.

காமராஜர் போன்ற நல்லோரின் கையில் நாடு இருந்திருந்தால் தியாகத்தின் அர்த்தம் மாறியிருக்காது கடந்த நாற்பது ஆண்டுகளில். அப்படித் தன்னையே அழித்துக் கொண்டோருடைய – தன் சுற்றம் மறந்து எல்லாம் இழந்த ஆயிரமாயிரம் தியாகிகளுடைய – வரலாறுகள் வெளி வராமல் போனதால்தான் நாட்டை அழிக்கும் நரிகள் எல்லாம் தம்மைத் தியாகிகள் என்று சொல்லி மேடைகளில் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. அதையும் பார்த்து “ஐயோ பாவம்” போடுகிறார்கள் அவர்களால் சில எலும்புத் துண்டுகள் பெற்ற இடைத் தரகர்களும் – சிற்சிறு ரொட்டித் துண்டுகள் பெற்ற பயனாளிகளும் – காசு வாங்கி ஓட்டுப் போடும் நம் “ஐயோ பாவம்” மக்களும். யார் ஐயோ பாவம்? முதலைக் கண்ணீர் வடிக்கும் நரிகளா? ஆட்டைப் பார்த்து வருந்துவதுபோல் நடிக்கும் ஓநாய்களா? முதலைக் கண்ணீருக்கும் ஓநாய் அழுகைக்கும் ஏமாந்து கொண்டிருக்கும் செம்மறி ஆட்டுக் கூட்டமா?

ஒரு நாள், அதிகாலை விடியும் முன், போலீஸ் வந்து சூழ்ந்து கொண்டது வீட்டை. பகலில் கைது செய்தால் ஊர் மக்கள் விட மாட்டார்கள் என்று (ஆக இந்தப் பழக்கம் வெள்ளைக்காரன் பழக்கி விட்டுப் போனது நமக்கு). வெள்ளை அதிகாரி தன் அல்லக்கையை வீட்டுக்குள் அனுப்பி அழைத்து வரச் சொல்கிறான் வேயன்னாவை. வேயன்னா உள்ளே இருந்து கொண்டு, “குளித்து விட்டு வருகிறேன்”, “சாப்பிட்டு விட்டு வருகிறேன்” என்று அடுத்தடுத்து வெவ்வேறு காரணங்களைச் சொல்லி தாமதம் செய்கிறார். அவருடைய திட்டம் – விடிந்த பின் கிளம்பலாம் என்பது. “ஊருக்குத் தெரியாமல் ஏன் திருட்டுப் பய போல் கைதாக வேண்டும்?” என்றெண்ணி அப்படிச் செய்கிறார்.

வெள்ளையன் கடுப்பாகிறான். குல்லா வைத்த அல்லக்கையை அனுப்பி மிரட்டல் விடுகிறான் – “வீட்டைச் சுற்றி அடிக்கு ஒரு போலீஸ் நிற்கிறது. தப்பிக்க மட்டும் நினைக்காதீர்கள். அது ஆகாத காரியம். சுட்டுப் போட்டு விடுவார்கள்!” என்று. வேயன்னா சொல்கிறார் - “வீட்டுக்கு வெளியே செல்லையா என்றொரு நாய் கட்டிக் கிடக்கிறது. அதற்குச் சமம் உங்கள் ஐயா என்று சொன்னேன் என்று போய்ச் சொல்லும் அவனிடம்”. வெள்ளையன் வெலவெலத்துப் போகிறான். கடைசியில், அவருடைய ஆசைப்படியே பொறுத்திருந்து விடிந்ததும் ஊர் சாட்சியாகக் கைது செய்து அழைத்துப் போகிறான். இப்போதுதான் விழுகிறது அவனுக்கு அதிர்ச்சி ஆப்பு. கோலம் போட வந்த வேயன்னாவின் தாயார் “ஜெயம் பெற்று வா மகனே” என்று சொல்லிக் கை அசைத்து வழி அனுப்பி வைக்கிறார். வார்த்தைகளை அப்படியே குறித்துக் கொள்ளுங்கள். இதுதான் அந்தத் தாய் சொன்னது. யார் சொல்லுவார் அப்படி? அதுவும் தந்தி வந்தாலே ஒப்பாரி வைக்கிற காலத்துக்கும் முந்தைய காலத்தில்...

ஆடிப் போன துரை தன் அறிக்கையில் எழுதுகிறான் – “இதுவரை நான் போன இடங்களில் எல்லாம் அழுதுதான் வழியனுப்பினார்கள் எல்லாத் தாய்மார்களும் மனைவிமார்களும். இங்கொரு தாய் வாழ்த்தி அனுப்புகிறாள். இவன் மட்டுமல்ல – இவன் குடும்பமே போராளிக் குடும்பம்” என்று. அதிலிருந்துதான் அவருக்குச் சிறையில் முதல் வகுப்பு அளிக்கப் படுகிறது. இன்னொரு காரணம் – அவர் மதுரையில் கற்ற ஆங்கிலம். அப்போது ஆங்கிலம் பேசுவோருக்கு அரசு அலுவலகங்களில் நல்ல மரியாதையாம். திருநெல்வேலியில் ஒருமுறை கலெக்டர் ஆபீஸ் போனபோது பலரை நிற்க வைத்துப் பேசிக் கொண்டிருந்த கலெக்டர் இவர் போய்க் கொஞ்சம் பேசியதும் நாற்காலி போடச் சொன்னாராம். காரணம் – இவர் பேசிய ஆங்கிலம். இதெல்லாம் ஆங்கிலம் தெரியாத – உடன் சென்று வந்த ஊர்க்காரர்கள் பார்த்துச் சொன்ன கதைகள். ஆனாலும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது இதெல்லாம். இப்படித்தானே அவனுடைய மொழிக்கு முதலாளி நாற்காலியை ஏற்பாடு செய்து விட்டுப் போயிருக்கிறான் அப்போதே.

சிறையில் இருந்த காலங்களில் நிறைய மேலோருடைய பழக்கங்கள் கிடைத்திருக்கின்றன. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இருவரோடு ஒரே அறையில் தங்கி இருந்திருக்கிறார் - நேரடிப் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார். ஒருவர் வி. வி. கிரி. அவருடனான உறவு எத்தகையது என்று தெளிவான தகவல்கள் இல்லை. இன்னொருவர் நம்ம ஊர்க்காரர் – ஆர். வெங்கட்ராமன். வெங்கட்ராமன் அவர்கள் வேயன்னாவின் அரசியல் வாழ்வில் சில மிக முக்கியமான மாற்றங்களைச் செய்தவர். சிறையில் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தபோது பொதுவுடைமைக் கருத்துகள் நிரம்பிய பல புத்தகங்களைப் படிக்கக் கொடுத்து இவரை காங்கிரஸ் இயக்கத்திலிருந்து பொதுவுடைமைப் பாதைக்கு இட்டுச் சென்றதே அவர்தானாம். என்ன கொடுமை என்றால் அவர் இறுதிவரை காங்கிரஸ்காரராகவே இருந்து நாட்டின் பிரெசிடென்ட் (குடியரசுத் தலைவர்) ஆகி விட்டார். இவர் பொதுவுடைமைவாதியாகி ஊருக்கு மட்டும் பிரெசிடென்ட் (ஊராட்சித் தலைவர்) ஆக இருந்து விட்டார்.

எங்கள் வீட்டில் பழைய பெட்டியொன்றில் கரையான் அரித்துப் போய்க் கிடக்கும் தாத்தாவின் பழைய புத்தகங்களில் பல ஆர். வி. அவர்கள் பரிசளித்தது. அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது நான் பள்ளி செல்லும் சிறுவன். அப்போது எங்கள் வீட்டு நூல்களில் இருந்த அவருடைய கையெழுத்தைக் காட்டி அளவிலாத பெருமை தேடிக் கொள்வேன். இவரும் ஆர். வி. அவரும் ஆர். வி. ஒருவேளை அகர வரிசைப்படி அறைகள் கொடுத்ததால் இருவரும் ஒரே அறையில் தங்கும் வாய்ப்புக் கிடைத்ததோ என்றும் தோன்றும். அவருடன் உடன் இருந்த ஒரே காரணத்துக்காக இவரும் மத்திய அமைச்சராகவோ முதல் அமைச்சராகவோ இருந்திருக்க வேண்டும் என்பதில்லை நம் வாதம். அவரைப் போல் காங்கிரசில் தொடர்ந்திருந்தால் சில வெளி வெற்றிகள் கிடைத்திருக்கக் கூடுமோ என்றொரு கற்பனைக் கணக்கிடல் மட்டுமே இது.

விடுதலைப் போராட்ட காலத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவம் – காடல்குடி காவல் நிலைய எரிப்பு. அப்போது எங்கள் ஊர் இருந்தது காடல்குடி காவல் நிலையத்தின் கீழ். காடல்குடி காவல் நிலையத்தில் அவரைக் கைது செய்து வைத்திருந்த போது அங்கிருந்து அவரை மீட்பதற்காக ஊரோடு திரண்டு போகிறார்கள் பூதலப்புரத்து ஆட்கள். மறுநாள் காலை காவல் நிலையம் தீக்கிரையான கதை மட்டும் வருகிறது. வேயன்னா என்ன ஆனார் என்பது தெரியவில்லை. மொத்த வட்டாரத்துக்கும் இந்தப் புதிர் புதிராகவே போய் விடுகிறது - அடுத்த முறை அவர் பிடி படும் வரை. அவரைக் காப்பாற்றி அனுப்பி வைத்து விட்டுத் தீயிடுகிறார்கள் எம்மக்கள். அப்படியோர் ஊர் மக்கள் கிடைக்கப் பெறுவது சாதாரண காரியமா? இல்லை, அப்படிப் பட்ட மக்களுடைய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதுதான் சாதாரண காரியமா? இன்றைக்குக் கூட்டுக் களவாணிகள் கூட்டம் சேர்ப்பது மிக எளிது. ஏனென்றால், கொள்ளையில் பங்கு கிடைக்கும். அப்போது எப்படி வந்தார்கள் அவ்வளவு பேர்? எதற்காக வந்தார்கள்? விடுதலைப் போராட்ட இயக்கத்தின் மீதான ஈடுபாடா? அல்லது, தன் உடன் வாழும் சக மனிதனுக்காக எதையும் செய்யத் துணியும் மனிதத் தன்மையா? அன்றைக்கு அந்தக் காரியத்தைச் செய்தவர்களின் வாரிசுகள் எல்லா எல்லைகளையும் தாண்டி இன்றைக்கும் எங்கள் உறவினராக இருக்கிறார்கள். இன்றைக்கும் அது போல எமக்காக அவர்களும் அவர்களுக்காக நாங்களும் எதுவும் செய்வோம்.

1947-இல் சுதந்திரம் கிடைத்தது. அத்தோடு முடிந்ததா கதை? முடியவில்லை. காங்கிரசிலேயே இருந்திருந்தால் முடிந்திருக்கும். இருந்தது பொதுவுடைமை இயக்கம் அல்லவா? நேருவின் காலத்தில் அவர்களையும் கொஞ்ச காலம் தடை செய்ய வேண்டியதாகி – அவர்களும் தம் கோரிக்கையை வலியுறுத்த வேண்டிப் பல போராட்டங்களில் இறங்க வேண்டியதாகி – மொத்தத்தில் தாத்தாவின் தலை மறைவு வாழ்க்கைக்கு மட்டும் முடிவு வரவேயில்லை. வெளி நாட்டு வெள்ளையனுக்குப் பயந்து ஒளிந்த காலங்களை விட நம்ம ஊர் வெள்ளையர்களுக்குப் பயந்து ஒளிந்த காலங்கள்தாம் மித மிஞ்சிய கொடூரங்கள் நிறைந்ததாக இருந்திருக்கின்றன. அப்போதுதான் ஜீவானந்தம், பாலதண்டாயுதம், கல்யாணசுந்தரம், பி. இராமமூர்த்தி, கே.டி.கே. தங்கமணி, சங்கரய்யா, நல்லகண்ணு, ப. மாணிக்கம், தா. பாண்டியன் போன்ற இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளான பலருடனான உறவு வலுத்திருக்கிறது.

கொஞ்ச கொஞ்ச காலம் ஒவ்வொருவர் ஊரிலும் போய் ஒளிந்திருப்பது அவர்களுடைய வழக்கமாக இருந்திருக்கிறது. எங்கள் வீட்டிலும் – ஊரிலும் – ஊரைச் சுற்றிலும் அந்தக் காலங்களை நினைவு படுத்தும் பல இடங்கள் இருக்கின்றன. இங்குதான் இது நடந்தது – அங்கு அது நடந்தது என்று அப்போதைய ஆட்கள் நிறையக் கதைகள் சொல்வார்கள் என் சின்ன வயதில். அப்படிக் காடுகளுக்குள் ஒளிந்திருந்தவர்களுக்கு தினமும் நெஞ்சு வரை தண்ணீர் போகும் ஓடையைக் கடந்து போய் உணவு கொடுத்து விட்டு வந்த புல்லரிக்கும் கதைகளையெல்லாம் ‘அப்போதைய’ சிறுவர்களும் இளைஞர்களும் நிறையச் சொல்லி இருக்கிறார்கள் எங்களுக்கு.

அப்படி அவர்கள் போய் ஒளிந்த இடங்களில் முக்கியமானவை களக்காடு மற்றும் சிவகிரி காடுகள் (அதனால்தானோ என்னவோ சிவகிரி கட்சி அலுவலகத்தில் இன்னமும் அவர் படம் ஒன்று மாட்டியிருக்கிரார்கள்; அது நெல்லை மாவட்டத்தின் செயலாளராக நீண்ட காலம் இருந்த தோழர் சிவகிரி செல்லையா அவர்களின் வேலையாகவும் இருக்கலாம்; அங்குள்ள பெரியவர்களுக்கு இன்னமும் அவர் பற்றிய நினைவுகள் இருக்கின்றன). அதில் உடன் இருந்தவர்களில் தோழர் நல்லகண்ணு அவர்களும் ஒருவர். அவரே தாத்தா பற்றிப் பல கதைகள் சொல்லி இருக்கிறார். ஒரு நாள் இரவில் களக்காடு அருகே மலைக் காட்டுக்குள் குகை மாதிரியான ஒரு பகுதியில் எல்லோரும் தங்கி இருக்கிறார்கள். மறுநாள் காலை விடிந்து பார்த்த போது அவர்கள் படுத்திருந்த இடத்தைச் சுற்றிப் பாம்புச் சட்டைகளாம். ஒன்றல்ல இரண்டல்ல. பல. நல்ல வேளை பாம்புகள் இல்லை. ஒருவேளை தூங்கி எழுந்து இவர்கள் எழும் முன் இறை தேடப் போயிருக்கலாம். இதெல்லாம் யாருக்காக? கண்டிப்பாக எங்களுக்காக இல்லை. பின் எதற்காக? அது தடை செய்யப் பட்ட ஒரு மக்கள் இயக்கத்தில் இருந்ததற்காகவும் – அவ்வியக்கத்தின் குறிக்கோள்களை அடைய உழைத்ததற்காகவும் - ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவத்தை நிகழ்த்தியதற்காகவும்!

இயக்கம்? பொதுவுடைமை இயக்கம். அதாவது கம்யூனிஸ்ட் கட்சி. குறிக்கோள்? உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பது போன்ற பல குறிக்கோள்கள். சம்பவம்? நெல்லை சதி வழக்கு. நீங்கள் தென் கோடித் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் – உங்கள் தந்தையோ மாமாவோ பெரியப்பாவோ ஆதி காலம் தொட்டு அரசியல் ஆர்வம் கொண்டவராக இருந்தால், விசாரித்துப் பாருங்கள். இது பற்றி அவர்கள் அறியக் கூடும். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் திருநெல்வேலி வரும் ஒரு ரயில் வண்டியைக் கவிழ்த்ததுதான் அவர்கள் செய்த குற்றம் (‘எத்தனை உயிர்களைக் கொன்றார்களோ பாவிகள்?’ என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், பயப்படாதீர்கள் – அது சரக்கு ரயில்). விட்டு விடுமா அரசாங்கம்? விரட்டி விரட்டிப் பிடித்து – உள்ளே வைத்து உதைத்து – உடம்பெல்லாம் புண்ணாக்கி – ரத்தம் கக்க வைத்து - அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான பெரும் பகுதியை அழித்து – அதன் பின்தான் வீடு திரும்ப விட்டார்கள். அப்படி அளவிலாத வாழ்க்கையையும் இளமையையும் இழந்தவர்கள்தாம் வேயன்னாவும் அவர் போன்ற பலரும். அதில் தோழர் நல்லகண்ணு அவர்களும் ஒருவர். அத்தகைய தியாகங்களை – அதன் வலிகளை உடன் இருந்து பார்த்ததால் – பகிர்ந்து கொண்டதால்தான் அவர் எப்படியும் இந்தக் கதைகளை வெளிக் கொணர வேண்டும் என்பதில் விடாப்பிடியாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் பொதுவுடைமை இயக்கத்தின் விவசாய சங்க மாநிலச் செயலாளராக இருந்திருக்கிறார். கட்சியில் பெரும் பதவிகள் எதுவும் வகிக்க வில்லை. அதிக பட்சம் மாநிலக் குழுவில் இருந்திருக்கிறார். மிகக் குறுகிய காலம் நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறார். அந்தப் பகுதியில் கட்சியை வளர்ப்பதில் – இளைஞர்களைத் திரட்டி ஊக்குவிப்பதில் – முன்னோடியாக இருந்து இன்றும் பல முன்னோடி இடதுசாரிகளின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். 1952-இல் சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் நிற்கும் வாய்ப்பு வந்தபோது அதையும் விரும்பாமல் தன் நெருங்கிய சீடரான சண்முகம் பிள்ளையை (உள்ளூர்க்காரர்தான்) நிற்கச் சொல்லிவிட்டு விலகிக் கொண்டார். 1962-இல் இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் நிற்கும் வாய்ப்பு வந்த போதும் மறுத்து விட்டார். இரண்டிலுமே வெல்ல முடியாது என்பதற்காக வேண்டாம் என்று சொல்லி விட்டார் என்பார்கள். சும்மா நின்றிருந்தாலே போதும். நாங்களெல்லாம் சொல்லிக் கொள்ளவாவது பயன் பட்டிருக்கும்.


பல முறை பூதலப்புரம் ஊராட்சித் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் முறையல்ல அப்போது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யும் முறை. அவர்களைத் தான் கடைசிவரை முழுமையாக நம்ப முடியாதே. ஒரு முறை அவருடைய சீடர்களில் ஒருவரான ஆபிரகாம் ரெட்டியார் என்பவரே அவருக்கு எதிராக நின்று – அதனால் இவர் தோல்வி பயத்தில் மன நிம்மதி இழந்து – ஆப்ரஹாம் ரெட்டியாரின் உறவினர்களே இவருக்குப் பெரும் பெரும் உதவிகள் செய்து – ஒரு வழியாக வெற்றி பெற்று – அத்தோடு அந்த வேலையையும் விட்டு விட்டாராம். எந்தத் தோல்விக்குப் பயந்து சட்டமன்றத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் தவிர்த்தாரோ அந்தத் தோல்வி உள்ளூரிலேயே – தன் உடன் இருந்த உற்ற நண்பனாலேயே கிடைக்கும் என்றால் அதை எப்படி ஏற்றுக் கொள்வார்? அதன் பின்பு - அதாவது, வேயன்னாவின் வெற்றிக்குப் பின்பு - மீண்டும் வேயன்னாவுடன் கை கோத்து, கடைசிவரை ஆபிரகாம் அண்ணாச்சி அவருடன் நெருக்கமாக இருந்தார் என்பதும் இங்கே சொல்ல வேண்டிய ஒன்று. வெள்ளைக்காரனின் அடிகளுக்கெல்லாம் பயப்படாதவர் தேர்தல் தோல்விக்கேன் அவ்வளவு பயந்தார் என்று புரியவில்லை.

அது போக, சுற்றி இருக்கிற நாற்பது ஊர்களில் என்ன விவகாரம் என்றாலும் இவர்தான் பஞ்சாயத்து பண்ணித் தீர்த்து வைக்க வேண்டும். வடக்கு வாசல்தான் பஞ்சாயத்து நடந்த இடம். அதுதான் அவர் இறந்தபோது சாத்தி வைத்திருந்த இடமும். இப்போதும் அந்தக் காலத்து ஆட்கள் யாராவது “எந்த ஊர்? யார் மகன்?” என்ற கேள்விகள் கேட்கும் போது பதில்களைச் சொன்னவுடன் பிரகாசமாகப் பேசுவார்கள் – “உங்க தாத்தாதான் எனக்கு அந்த புஞ்சைப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்”, “அவர்தான் என் குடும்பப் பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்” என்று. சமீபத்தில் பெங்களூரில் எங்களூர்ப் பாட்டி ஒன்றைப் பார்த்தபோது – பரஸ்பர அறிமுகத்துக்குப் பின் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னது – “அன்னைக்கு அய்யா இல்லன்னா எங்க வீட்டு ஆம்பளைக எல்லாம் சேர்ந்து என்னைய ஏமாத்தி இருப்பாக... அப்பெல்லாம் கோர்ட் ஏது? சட்டம் ஏது? பொம்பளைக கஷ்டத்தைப் புரிஞ்சு நீதி சொல்றதுக்கு ஆள் ஏது? அப்பவே பொம்பளப் பிள்ளைக வச்சிருக்கிற பொம்பளைன்னு எனக்குச் சேர வேண்டியதை அதிகப் படியா வாங்கிக் குடுத்தாரு” என்று. புல்லரித்தது எனக்கு. இப்படி எத்தனை பேருடைய வாழ்த்துக்கள் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன என்று.

அவ்வளவு எளிதான கணக்கில்லை அது. பஞ்சாயத்து என்பது பயனாளிகள் மட்டுமே கொண்டதில்லை. சாதிப்பவர்கள் மட்டுமே கொண்டதில்லை. பாதிக்கப் பட்டவர்களும் நிறைய இருப்பர். கிட்டத்தட்ட அதே அளவு இருப்பர். அவர்களுடைய சாபங்கள் எங்களைச் சும்மா விட்டு விடுமா? பாட்டி அடிக்கடிச் சொன்னதாக எங்கள் அம்மாவும் அடிக்கடிச் சொல்வார் – பஞ்சாயத்துப் பேசிய குடும்பங்கள் எல்லாம் இப்போது கட்டை மண்ணாய்ப் போய்விட்டன என்று. எல்லாம் சாபங்களால் உண்டான சங்கடங்கள் என்பது அவர்களுடைய நம்பிக்கை. வடக்கு வாசலில் கயற்றுக் கட்டில் மட்டும் போட்டுப் பேசியதில்லை இவர்களுடைய பஞ்சாயத்து. வடக்கு வாசலுக்குப் பக்கத்தில் பல பேர் உட்கார்ந்து பேச வசதியாக ஒரு பெரிய நீளமான கருங்கல் கிடந்தது இதற்காகவே. அதிலும் பல பஞ்சாயத்துக்கள் நடந்திருக்கின்றன. திரைப்படங்களில் வருவது போல – எங்கள் பகுதியில் உள்ள எல்லா ஊர்களிலும் போல – எங்கள் ஊர்க் கண்மாய்க் கரையிலும் ஆலமரமும் அதனடியில் கல்த்திண்டுகளும் இருக்கின்றன. அங்கேயும் நடந்திருக்கின்றன பல பஞ்சாயத்துகள். இவையெல்லாம் போக வில்லு வண்டியில் மாடு பூட்டிப் போய் சுத்துப் பட்டிகளில் நடத்திய நடமாடும் பஞ்சாயத்துகள் பல. விடுதலைப் போராட்டத்தை விடவும் – பொதுவுடைமை இயக்கத் தியாகங்களை விடவும் – எங்கள் பகுதியில் உள்ள எளிய மக்களால் அவர் அதிகம் அறியப் பட்டது அவருடைய பஞ்சாயத்துகளால்தான்.

அடுத்ததாக, சுற்று வட்டாரத்தில் இருக்கிற எந்த கிராமத்துக்கும் கிடைத்திராத பல வசதிகளை அவருடைய காலத்தில் கொண்டு வந்து சேர்த்தது. அந்தக் காலத்திலேயே சாலை வசதிகள் வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய அருகில் இல்லாத இரு பெரும் ஊர்களில் இருந்து பஸ் வர ஏற்பாடுகள் செய்தது பெரும் சாதனை. கண்மாய்த் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஊர்களுக்கு மத்தியில் கிணறுகளைக் கொண்டு வந்தது. அவ்வப்போது சந்திக்கிற சில கீகாட்டுப் பெரிசுகள் சொல்லும் வழக்கமான விஷயங்களில் இதுவும் ஒன்று – “அவர் காலத்துக்குப் பின்னாடிதானய்யா உங்க ஊர்கள்ல கிணற்றுத் தண்ணி குடிக்க ஆரம்பிச்சிக” என்பதுவும். கருவேல மரங்கள் தவிர்த்து, பருத்தியும் மிளகாயும் மட்டுமே ஒழுங்காக விளையும் பூமியில் நன்செய்க் கண்மாய் வரக் கடுமையாக முயற்சி செய்து அது வரும் முன்பே போய் விட்டார். ஆனால் அவருடைய அந்தக் கனவு நிறைவேறிய போது அவரை நினைவு கூரத் தவறவில்லை எங்கள் ஊர். அவர் இருக்கும் வரை ஊரில் ஒரே ஒரு கொடிதான் பறந்தது. அது செங்கொடி. இப்போது அதற்கருகிலேயே ஏதேதோ கொடிகள் வந்து விட்டன. ஊர் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒற்றுமை சிறிதும் இல்லை. மக்களாட்சி இப்போதுதான் முதிர்ந்து கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள். எனக்கென்னவோ அது தெளிவாகப் புரியவில்லை.

அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் சேதுராஜ். பெரியப்பா. அவர் போலவே கல்வீட்டில் வளர்ந்து – மதுரை சென்று படித்து – பின்னர் பம்பாய் சென்று படித்து – கலப்புத் திருமணம் செய்து (எல்லை கடந்த எங்கள் உறவுகள் என்று சொல்லும் ஒரு குடும்பத்தில் இருந்துதான்) - இரண்டு எம். ஏ. பட்டங்கள் பெற்று – கல்வித் துறையில் கால் பதித்து – மிகச் சிறிய வயதிலேயே பணியில் நற்பெயர் பெற்று – 42 வயதில் மரணமடைந்து விட்டார். அவருடைய மரணம் வேயன்னாவுக்கு அவர் வாங்கிய அடிகள் எல்லாவற்றையும் விடப் பெரிய அடியாக இருந்தது. அதிலிருந்தே அதி வேகமாக உடல்நலம் குன்றி, அடுத்த மூன்றாண்டுகளுக்குள் அவரும் இறந்து விடுகிறார். அடுத்தடுத்த இரண்டு மரணங்களில் குடும்பம் உடைந்து – உருக்குலைந்து விட்டது. அதைத் திரும்பக் கொண்டு வந்து தடத்தில் சேர்க்கக் கண்டிப்பாகச் சில தலைமுறைகள் ஆகும் எங்களுக்கு. காரணம் – அவருடைய இரண்டாவது மகனான என் தந்தையார், வேயன்னாவின் குடும்ப கவனமின்மையால் முழுமையான பாதிப்புக்கு உள்ளானவர். பெரியப்பா அளவுக்குக் கல்வியும் வெளி வாழ்க்கை வெற்றியும் கிட்டவில்லை அவருக்கு. “ஏன் தாய்மாமாமார் இவரையும் சேர்த்துப் பார்க்க வில்லை?” என்கிற கேள்வி இந்த இடத்தில் மிக இயற்கையானதே. ஆனால், எல்லாப் பிள்ளைகளுக்குமே தந்தையின் இடத்தைத் தாய்மாமாமார் நிரப்பி விட முடியாது. சிலருக்குத் தந்தைதான் அதைச் செய்ய முடியும்.

பெரியப்பாவும் பெரிய அறிவாளியாக இருந்திருக்கிறார். தந்தையும் மகனுமாக சுற்று வட்டாரத்தில் எங்குமே செல்லாத பல ஆங்கிலப் பத்திரிகைகளையும் இதழ்களையும் எங்கள் குக்கிராமத்துக்கு வரவழைத்திருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து பலரையும் அதைப் படிக்க வைத்து – வாதிட வைத்திருக்கிறார்கள். அதற்கொரு வாழும் சாட்சிதான் இப்போது களத்தில் இறங்கிப் பணியாற்றிக் கொண்டிருக்கும் சித்தப்பா – திரு. அய்யாசாமி அவர்கள். பெரியப்பாவின் கலப்புத் திருமணம் அவருடைய பிள்ளைகளுக்குப் பின்னாளில் பெரும் பிரச்சனையை உண்டு பண்ணியது. தாத்தாவோ பெரியப்பாவோ இருவருமோ இருந்திருந்தால் அது ஒரு பெரும் பிரச்சனையாக இருந்திராது. அவர்கள் இல்லாத இடத்தில் அவர்கள் பற்றி அறியாதவர்கள் எல்லாம் வந்து அது பற்றிக் கேள்விகள் எழுப்பியபோது அவர்களுடையை புரட்சி தோற்று விட்டதோ என்று எம்மக்கள் புலம்ப ஆரம்பித்ததைத் தவிர்க்க முடியவில்லை. மொத்தப் பொதுவுடைமை சமூகமும் வந்து – புல்லரித்துப் புளகாங்கிதமடைந்து வாழ்த்தி விட்டுப் போன திருமணம் ஏன் பொய்த்தது? நல்ல பதில் இருந்தால் யாராவது சொல்லுங்கள்.

இறுதியாக, வேயன்னாவின் மிகப் பெரிய பலம் – ஏற்கனவே சொன்னது போல் அவருக்கிருந்த சுற்றம். அதில் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது - அவருடைய தம்பி பிள்ளைகள். தம்பியும் பழையனூர் கல்வீட்டிலேயே பெண் எடுத்து விட்டதால், குழந்தைகள் எல்லாம் ஒரு தாய் மக்களாக – ஒற்றுமையாக இருந்து சாதித்தார்கள். எப்போதுமே அவருடனேயே நாலைந்து பேர் அவருடைய தம்பி மக்கள் இருந்து கொண்டிருந்திருக்கிறார்கள். அப்படி இருந்த ஒருவர்தான் அய்யாசாமிச் சித்தப்பா. அடுத்து ஒரு முக்கியமான ஆள் – இன்று எங்களை விட்டு விலகி இருந்தாலும் விடுபடக் கூடாத பெயர் – கவிஞர். ஜீவபாரதி. இவரும் தாத்தாவின் கூடவே இருந்த மற்றொரு தம்பி மகன். இன்றும் அவருடைய நினைவோடு இயங்கிக் கொண்டிருப்பார் என நம்புகிறேன். வரப்போகும் நூலுக்கு வேண்டிய அளவிலாத தகவல்களைத் தன் வசம் வைத்துக் கொண்டிருப்பவர்.

புகழ் பெற்ற வழக்கறிஞர் என். டி. வானமாமலை மற்றும் பேராசிரியர் நா. வானமாமலை போன்றோர் இவருடைய மிக நெருங்கிய நண்பர்கள். இவர்களுடன் தொடர்ந்து கடிதத் தொடர்பில் இருந்து வந்திருக்கிறார் என்பதற்கான ஆதாரமாக இவர்களிடமிருந்து வந்த கடிதங்கள் நிறைய எங்கள் வீட்டுக் கரையான் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு அவர் ஆங்கிலத்தில் எழுதிய டைரிகளும் எங்களுக்கெல்லாம் என்னவென்றே புரியாத மாதிரியான நுட்பமான பொதுவுடைமைக் கருத்துகள் கொண்ட ஆங்கிலப் புத்தகங்களும் அதே பெட்டிக்குள் தூங்கி கொண்டிருக்கின்றன. அவர் வாழ்க்கை பற்றி அறிய வந்த பலர் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்றது போக ஏதாவது மிச்சம் இருக்கிறதா என்று பார்ப்பதற்காவது ஒருமுறை ஊருக்குப் போய் வர வேண்டும்.

கண்டிப்பாக அவருடைய மரணம் பற்றி ஒரு பத்தியில் எழுத வேண்டும். எனக்கு வயது நான்கு தான் என்றாலும் செய்தி வந்த அந்தக் காலைப் பொழுது எனக்கு அப்படியே நினைவிருக்கிறது. விளாத்திகுளத்தில் இருந்த பெரியப்பா வீட்டில் அதிகாலையில் இறந்து விட்டார்; காரில் வைத்துக் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி அதற்கு முன்பாகவே வந்த பஸ்ஸில் வந்தது. அதைக் கேட்ட பெண்மணி ஒருவர் பஸ் நிற்கும் கண்மாய்க் கரையிலிருந்து தலையிலும் மார்பிலும் அடித்துக் கதறிக் கதறி அழுது கொண்டு ஓடி வந்து என் பாட்டியைப் பிடித்து - விடாமல் கதறுகிறார். அதைப் பார்த்த என் தாய் விழுந்து கதறுகிறார். என்னவென்றே புரியாமல் அதைப் பார்த்து நானும் கதறுகிறேன். சிறிது நேரத்தில் நடந்தது என்னவென்று புரிய வைக்கிறார்கள். அதற்குள் சினிமா பார்ப்பது போலப் பல காட்சிகள். ஊர்ப் பெண்களெல்லாம் கூடி ஒப்பாரி வைக்கிறார்கள். இந்த ஒப்பாரி கொஞ்சம் மாறுபட்டது. அவர் வாழும் காலத்திலேயே அவரைப் பற்றியே எங்கள் ஊர்ப் பெண்கள் நிறையப் பாடல்கள் இயற்றிப் பாடியிருக்கிறார்கள். அந்தப் பாடல்கள் அனைத்தும் ஒரு சேர அன்று வெளியாயின. அந்தப் பாடல்களைப் பெருமளவு இயற்றியவர்களில் முதன்மையானவர் – குமராயி எனும் பெண்மணி. அவர் இப்போது இல்லை. ஆனால் அவர் இயற்றிய பாடல்களை ஏற்கனவே நிறையப் பேர் குறிப்பெடுத்துச் சென்றார்கள். ஆனால், அவை எங்கு உள்ளன என்று தெரியவில்லை. நூல் வரும்முன் அவை கிடைத்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம். அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்தவருக்கு ஒரு புத்தகம் அதிகமில்லை என நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?

அவர் மறைவுக்கு வந்திருந்த அளவிலாத கூட்டம் சொன்னது அவர் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு பெரிதென்று. இன்று காசு கொடுத்துக் கூட்டப்படும் மாநாட்டுக் கூட்டங்கள் பார்த்த பின்பு அதெல்லாம் சிறிதாகத் தெரிகிறது. ஆனாலும் அன்றைய சூழ்நிலையில் அந்த மாதிரியான ஒரு கிராமத்தில் அது மிக மிக அதிகம். பின்னர் பொதுவுடைமை இயக்கப் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக அவருடைய வாழ்க்கை பற்றியும் தியாகங்கள் பற்றியும் எழுதினார்கள். அதற்குப்பின்பும் பல நாட்களுக்குக் கூட்டம் கூட்டமாக விசாரிக்க வந்து சென்றார்கள் தோழர்கள். இறக்கும் எல்லா மனிதனுக்கும் போலவே அவருக்கும் ஏகப் பட்ட கதைகள். வருகிற ஒவ்வொருவரும் ஒரு கதையைக் கொண்டு வந்தார்கள். அவற்றையெல்லாம் புரியவும் எழுதி வைக்கவும் தெரியாமல் போனதால் புத்தகத்தில் நிறையப் பக்கங்கள் குறையப் போகிறதே என்று சிறிய வருத்தம்தான் எனக்கு. பார்க்கலாம்.

அவருடைய தியாகங்களுக்குப் பரிசாக அவருக்கும் அவர் இறந்தபின் அவருடைய மனைவிமார் இருவருக்கும் பென்ஷன் என்ற பெயரில் ஒரு சிறிய தொகை மாதாமாதம் விடாமல் வந்தது. இன்று அது சிறிய தொகையாகி விட்டாலும் ஒரு காலத்தில் அதுவும் ஒரு கணிசமான தொகையாக இருந்து குடும்பத்தை ஓட்ட உதவியதை மறக்க முடியாது. விடுதலைப் போராட்ட வீரர் என்பதற்கான அடையாளமாக இந்திரா காந்தியின் கையில் தாமிரப் பட்டயம் ஒன்று வாங்கியிருக்கிறார். இவை தவிர்த்து அவர் எங்களுக்கு விட்டுச் சென்றது என்ன என்று பார்த்தால்... இதுதான்...

• எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் செய்யக் கூடாத தவறுகள் என்றொரு லிஸ்ட். ஏன்? ஏனென்றால், ‘நாமெல்லாம் அவர் வழி வந்தவர்கள். அப்படி ஒரு வேலையைச் செய்தால் பெரும் கேவலமாகிவிடும்’ என்ற உணர்வு. என்னைப் பற்றிச் சுய தம்பட்டம் அடிக்க வேண்டியதில்லை. ஆனால், அவரோடு வாழ்ந்த எம்மக்கள் பலர் இந்தப் பெயரைக் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நானும் அதைக் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறேன்.

• உருப்படவே வாய்ப்பில்லை என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அந்த உருப்படாத அரசியல் மீது ஓர் ஆர்வம். அவர் எதிர் பார்த்த சுதந்திரம் போல் இதுவும் ஒரு நாள் உருப்படும் என்ற நம்பிக்கை. அரசியல் மட்டுமன்றி, பொது வாழ்க்கை சம்பந்தப் பட்ட எதன் மீதும் எங்கள் அனைவருக்குமே ஓர் அதீத ஆர்வம் இருக்கிறது.

• சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் வருகிற கூடுதலான நாட்டுப் பற்றும் மற்றோரை விட எங்களுக்கு இந்தக் கொண்டாட்டத்தில் கூடுதல் பங்கு இருக்கிறது என்ற நினைப்பும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கூடுதல் முன்னுரிமை ஏதும் கேட்கவில்லை. கூடுதல் பெருமை மட்டும் பட விரும்புகிறோம். இன்றுவரை எங்களில் யாருமே விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான எந்த சலுகைகளையும் அனுபவிக்க வில்லை!

• சில மொள்ளமாரிகள் பண்ணுகிற அரசியல்த் தே***த் தனங்களைப் பார்க்கும் போது வரும் கோபமும் ‘இப்படி நீங்கள் மேயவா அவர் தன் அத்தனையையும் தொலைத்தார்?’ என்ற இயலாமையில் வரும் கொதிப்பும் உங்களில் கொஞ்சமாவது சுயநலமாக அவரும் இருந்திருந்தால் நாங்களும் இன்னும் கொஞ்சம் (உங்கள் பிள்ளைகள் போல் இல்லாவிட்டாலும்) நல்லா இருந்திருப்போமே என்ற ஏக்கமும் என்றும் இருக்கும் என நினைக்கிறேன்.

• எமக்கே இப்படியிருக்கும் போது இதை விடப் பெரும் பெரும் தியாகங்கள் செய்தோருடைய வாரிசுகள் – எம்மை விட மோசமான வாழ்க்கை முறைக்கு உள்ளாக்கப் பட்ட வாரிசுகள் (சரியாகப் புரிந்து கொள்க - நாங்கள் மோசமாக இருக்கிறோம் என்று உதவி கேட்டுப் புலம்ப வில்லை) எப்படியெல்லாம் உணர்வார்களோ என்று அறிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டு.

சொல்லுங்கள் இப்போது – இது தப்பா? எனக்கு இந்த நாட்டின் சுக துக்கங்களில் கூடுதல் உரிமை இருக்கிறதா? இல்லையா?

கருத்துகள்

  1. மிக சிறந்த பதிவு; எழுத்து நடை மிக அருமை. வேயன்னா அவர்களை பற்றி தெரிந்துகொண்டதில் பெருமை படுகிறேன். உங்கள் தாத்தாவிற்கு பேரனாக ஒரு நல்ல கடமை செய்திருகிறீர்கள். பல பேர் தங்களின் குடும்ப சரித்திரம் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள் அந்தவிதத்தில் நீங்கள் குடுத்துவைத்தவர். இக்கால அரசியல் கூத்துகளை பார்க்கும்போது சுதந்திர போராட்ட பின்னணியற்ற குடும்பத்தில் இருந்து வந்த பலருக்கு கொலைவெறி வரும்பொழுது உங்களின் வருத்தம்/கோபம் நியாயமானதே. உங்களின் தாத்தாவைபோல் " சுதந்திரம்" வரும் என்று காத்திருப்போம். உங்கள் தாத்தாவை பற்றிய புத்தகம் வெளிவர வாழ்த்துகள். { உங்களை கண்டால் கொஞ்சம் பொறாமையாகவே உள்ளது. நான் மதிக்கு தலைவராம் நல்லகண்ணு அவர்களுடன் பார்த்து பழகி கருத்து பகிர்வு செய்யும் உரிமை உள்ள காரணத்தால் :) . எனக்கு அரசியல் ஆர்வம் மிக அதிகம். }

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி கவி அவர்களே. உண்மையைச் சொல்லவா? இந்த இடுகை ஒருவேளை நிறையப் பேருக்குப் பிடிக்காமல் போகலாம் என்று கூட நினைத்தேன். ஏனென்றால், மிக நீளமாகவும் - கொஞ்சம் சுயபுராண நெடியுடனும் - நம் தலைமுறை ஆட்கள் பெரும்பாலானவர்களுக்கு அதிகம் ஆர்வம் தராத கதையாகவும் இருப்பதால். நல்ல வேளை, ஒருத்தருக்குப் பிடித்து விட்டது. நானும் நல்லகண்ணு அவர்களுடன் அதிகம் உறவாடியதில்லை. ஒரு சில சந்திப்புகள்தாம். நிறைய உறவாட வேண்டும் என்று நிரம்ப ஆசை உண்டு ஆனால். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி