சாலைப் போராட்டங்கள்!

வாழ்க்கைப் பயணம் சில நேரங்களில் வெறுப்பூட்டுவதாய் இருக்கிறது. சக பயணிகள் நாம் எதிர் பார்க்கிற மாதிரி நடந்து கொள்ளாத பொழுதுகளில் அது ஒன்றே நம்மை அப்படி ஆகச் செய்து விடுகிறது. அதுவே நம் பயணங்களுக்கும் பொருந்தும். அதாவது, சாதாரண பயணங்கள் பற்றிச் சொல்கிறேன் - சாலைப் பயணங்கள் பற்றி! இந்த உலகில் வாழ்வது எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சாலைகள் எனக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றன - எந்த மாதிரியான சக மனிதர்களோடு பயணிக்க வேண்டியுள்ளது என்பதையும். முதலில், அவர்கள் எல்லோருமே மனிதர்கள் என்று அழைக்கப் பட முடியுமா என்று தெரியவில்லை. பிறப்புச் சான்றிதழ் மற்றும் பல மருத்துவச் சான்றிதழ்கள் போல, நம் மனிதத் தன்மையை அளக்க ஒரு குறியீட்டு எண் மற்றும் அதை அளக்க ஒரு சரியான முறை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. குறைவான மனிதக் குறியீட்டு எண் கொண்டோர் காடுகளுக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்.

என் நண்பன் ஒருவன் சொல்வான் - கழிப்பறையில் இருக்கும் போதுதான் அவனுக்குள் இருக்கும் தத்துவ ஞானி முழுமையாக வெளிவருவான் என்று. அது போல, சில நேரங்களில், சாலையில் போகும் போது, நானும் நிரம்பத் தத்துவ வயப்பட்டு விடுகிறேன். மித மிஞ்சிய மனிதத் தன்மை கொண்ட என் சக பிராணிகளுக்கு மத்தியில் இன்று வண்டி ஓட்டிச் சென்றபோதுதான் இந்த மனிதக் குறியீட்டு எண் பற்றிய சிந்தனை வந்தது. எது என்னை இந்த உலகத்தில், மன்னிக்க, சாலைகளில் அவ்வளவு தத்துவ வயப் பட வைக்கின்றது? நான் சொல்வதைத் தவறென்று நிரூபிக்கவோ அல்லது நான் பிதற்றும் இந்தக் கருமாந்திரம் (மனிதக் குறியீட்டு எண்) எல்லாம் தத்துவமல்ல என்று சொல்லவோ தயவு செய்து தங்கள் நேரத்தை வீணாக்கித் தகவல் சேகரித்துக் கொண்டு வரவேண்டாம். :)

எல்லா விதமான ஆட்களையும் சாலைகளில் பார்க்கிறேன். 'சுயநலம்' தான் சாலைகளில் அதிகம் வெளிப்படும் குணாதிசயம் - நீண்ட காலமாகவே நம்மிடம் தங்கி விட்ட விலங்குகளின் வலுவான பண்புகளில் ஒன்று. யாருக்குமே சக மனிதர்களின் வாழ்க்கையை - உயிரைப் பற்றிய கவலை இல்லை (கேட்டால், "அது அவர்கள் கவலைப் பட வேண்டியது" என்று சொல்கிறார்கள் விபரமானவர்கள்!). வண்டியை வெளியில் எடுத்துக் கிளம்பும் போதெல்லாம் சிலரைக் கொன்று போட்டு வருகிறார்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் அப்படியெல்லாம் செய்வதில்லை, ஏனென்றால் அவர்களால் அப்படிச் செய்ய முடியாது. நல்ல வேளையாக, அத்தகைய சட்டங்களும் விதிமுறைகளும் இருக்கின்றன இப்போது. ஒருவேளை, அப்படியொரு விதிமுறைகள் அற்ற நாகரிகத்தில் வாழ வேண்டியிருந்திருந்தால், ஒவ்வொரு நாளும் ஒரு சில உயிர்களைக் கொன்று போட்டு விட்டுத்தான் வீட்டுக்கு வருவோம் என நினைக்கிறேன் - மிருகங்களைப் போல. போகிற போக்கில் இதையும் சொல்லி விடுகிறேன் - 'விதிமுறைகள் அற்ற நாகரிகம்' என்பது முரண்தொடை (OXYMORON) அல்ல. அது எதார்த்தம். எந்த நாகரிகமும் முழுமையாக நாகரிகம் அடையவில்லை இன்னும். இன்னொரு 'போகிற போக்கில்', ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணிதான் அதில் கீழானது என்று நீங்கள் சொன்னால், கண்டிப்பாக உங்களோடு வாதிட மாட்டேன். உரையாடலில் ஒரு நேர்கொண்ட போக்கு இருக்கட்டும் என்பதற்காக அதை இப்போதைக்கு ஒதுக்கி வைத்து விடுவோம். :)

என் சாலைப் போராட்டங்களுக்கு வருவோம்... மற்ற உயிரினங்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலையில்லாமல் மதம் பிடித்தது போல வண்டி ஓட்டுபவர்களே நம்முடைய சில 'சிறந்த' ஓட்டுனர்கள் இப்போது. அவர்கள் ஓட்டும் விதம் அவர்களுக்குப் பாதுகாப்பானதே, மற்றவர்களுக்கில்லை. இவர்கள்தாம் சுயநலக் கோட்பாட்டை நிரூபிப்போர். ஒரு தடத்தில் இருந்து இன்னொன்றுக்கு மாறும்போது பின்னால் வரும் வாகனங்கள் (தம்முடையதை விடச் சிறிய வாகனங்களிடம் தான் இது அதிகம் காட்டப்படும்) பற்றித் துளியும் கவலைப் படுவதில்லை இவர்கள். என்னிடம் புள்ளிவிபரங்கள் இல்லை, ஆனால் இதுதான் (கண்மூடித் தனமாக தடம் மாறுவது) விபத்துகளுக்கான தலையாய காரணம் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். துரதிர்ஷ்டவசமாக, நம்முடைய ஓட்டுனர்கள் நிறையப் பேருக்கு அது என்னவென்றே புரிவதில்லை.

சாலையில் ஒரு சிறிய கல் பெயர்ந்திருந்தால் கூட அவர்களால் பொறுக்க முடியாது. நினைத்த மாத்திரம் வெடுக்கென ஒரு வெட்டு வெட்டுவார்கள். எதைப் பற்றியும் கவலையில்லாமல். பின்னால் என்ன வருகிறது - இடித்தால் அவர்கள் நிலைமை என்ன ஆகும் என்ற கவலை சற்றும் இராது. அவர்கள் கவலையெல்லாம் டயருக்கு எதுவும் ஆகி விடக் கூடாதாம். அடப் பரதேசிப் பயகளா! உயிரை விடவா டயர் முக்கியம்? இந்தப் பழக்கம் நம் பெரும்பாலான ஓட்டுனர்களிடம் உள்ளது (இதில் சக்கரம் எத்தனை என்பதைப் பொருத்து வேறுபாடு எதுவும் இல்லை). சாலை முழுக்கக் கற்கள் பெயர்ந்திருந்தால், இப்படியும் அப்படியுமாக பைத்தியம் பிடித்த பாம்பு போல, சாலையில் போகும் / வரும் எல்லோரையும் தொல்லை செய்வது போல ஓட்டுவார்கள். அவர்களுடைய நீண்ட பயணத்தில் கொஞ்சம் கூடக் குலுங்காமல் அலுங்காமல் போய்ச் சேர வேண்டுமாம். அது ஒன்றே அவர்களின் காரணம். மற்றவர்களைச் சித்திரவதை செய்தாயினும் தான் சுகமாகப் பயணிக்க வேண்டும் என்று ஆசைப் படுபவர்கள்.

இவர்கள்தாம் கண் கூசுகிற மாதிரி மேல் விளக்கைப் போட்டுக் கொண்டு ஓட்டுவோர். எத்தனை முறை அதை அணைத்துக் கீழ் விளக்கு போடும்படி சைகை காட்டினாலும் குருடர்கள் போல் அதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். இவர்கள்தாம் காது கிழிகிற மாதிரி ஹார்ன் கொண்டு காட்டுச் சத்தம் எழுப்புபவர்கள். ஸ்டியரிங்கை விட ஹார்ன் மீது அதிக நேரம் கை வைத்திருப்போர் நிறையப் பேரைப் பார்த்திருக்கிறேன். ஆக்செலரேட்டருக்கு அடுத்து வண்டியில் அவர்களுக்கு முக்கியமான தேவை ஹார்ன் தான். தெருவில் பிறந்தவர்கள் போல அவர்களுக்கு சத்தம் என்றால் அவ்வளவு பிடிக்கும்.

இவர்களெல்லாம் தம் சக பிராணிகளை விட்டு விட்டு கொஞ்சம் சீக்கிரமே காட்டில் இருந்து நம் வாழ்விடங்களுக்கு வந்து விட்டவர்கள். உலகமெங்கும் மனிதர்கள் மட்டுமே வண்டி ஓட்ட முடியும் என்று ஆகும் வரை இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வே இல்லை. மேற்கு நாடுகளுக்குச் சென்று வந்த நண்பர்கள் எல்லோருமே சொல்கிறார்கள் - அந்நாடுகளில் உள்ள விதிமுறைகள், சாலைகளில் மனிதப் பண்புகளை மட்டுமே வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றன என்று. நம் புனித பூமியிலும் அது போன்ற மாற்றம் வரும் என்று வேண்டிக் கொண்டே இருப்போம். எத்தனையோ மதங்கள் பிறந்த இந்த மண்ணில் சாலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று யாருமே சொல்லிக் கொடுக்க வில்லையே. நம் புனித நூல்களில் சாலை நற்பண்புகள் பற்றியும் சில பிரிவுகள் சேர்த்தால் நன்றாக இருக்கும் இல்லையா?!

அடுத்த - அதிகமாகப் பார்க்கப் படும் பண்பு 'கவனமின்மை'. கவனமின்மை என்பது வெறும் பயமின்மை அல்லது புத்தியின்மை என்று கூடச் சொல்வேன். அவர்கள் வண்டி ஓட்டும் முறை பற்றி அவர்கள் யோசித்ததில்லை; அவ்வளவுதான். அவர்களின் உயிருடைய மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை; அவ்வளவுதான். இன்னொரு வாய்ப்பு அளித்தால் இவர்கள் திருந்தி விடுவார்கள்; ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் பெரும்பாலானோருக்கு அது கிடைப்பதில்லை. அவர்கள் அப்படியிருப்பதன் காரணம் - சென்று சேர வேண்டிய இடத்தைத் தவிர வேறு எது பற்றியும் யோசிப்பதில்லை. எப்படி போக வேண்டும் என்பதை விட எங்கே போக வேண்டும் என்பதே அவர்களுக்கு முக்கியம். இதுவும் சுயநலம் போன்றே தோன்றும். ஏனென்றால், பெரும்பாலானோரிடம் (எல்லோரிடமும் என்று சொல்ல முடியாது) சுயநலத்தில்தான் அது ஆரம்பிக்கிறது. 

எதிர்த் தடங்களில் ஓட்டுகிற மற்றும் சைகை விளக்குகளை மதிக்காமல் பாய்கிறவர்கள் பெரும்பாலானவர்கள் அப்படியெல்லாம் செய்வதன் பின்னணியில் இருப்பது அவர்களின் கவனமின்மையே. மிச்சப் பெரும்பாலானவர்கள் அறியாமையின் காரணமாகச் செய்வோர் என நினைக்கிறேன். எதிர்த் தடங்களில் ஓட்டுவதாலும் சைகை விளக்குகளை மதியாமல் பாய்வதாலும் ஏற்படும் விபத்துகள் பற்றிய கதைகளை அவர்கள் கேள்விப் பட்டிருக்க மாட்டார்கள். அப்படி ஓட்டுவதற்காக சில கூடுதல் அதிகாரம் பெற்ற நம் சக குடிமக்களிடம் (திமிர் பிடித்தவர்கள் என்பதைத்தான் இப்படி நாகரிகமாகச் சொல்கிறேன்!) கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கி இருக்க மாட்டார்கள் . காவல்த் துறையினரிடம் அபராதமோ அல்லது வசதி வரியோ (லஞ்சம் என்ற பிச்சையைத்தான் இப்படிச் சொல்கிறேன்!) கட்டியிருக்க மாட்டார்கள். ஒருமுறை பாடம் கற்பிக்கப் பட்டு விட்டால் அத்தோடு திருந்தி விடுவார்கள்.

ம்ம்ம்... திமிர் (நம் தேசிய குணங்களில் ஒன்று) இங்கு விடுபடக் கூடாது. சிலருக்கு, எது எப்படியோ, ஒவ்வொரு நாளும் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டால், அன்றைய தினத்துக்குக் குறைந்த பட்சம் இத்தனை பேரையாவது திட்ட வேண்டும். வீட்டில் உள்ள வெறுப்புகளை இங்கே காட்டலாம். ஆனால், அவர்களுக்குத் தெரியாத ஒன்று என்னவென்றால், இப்படித் தினமும் திட்டு வாங்குவோரில் ஒருவர், வீட்டில் இருப்போரும் அலுவலகத்தில் இருக்கும் மேலாளரும் கொடுக்க முடிந்ததை விடக் கொடுமையான தண்டனைகள் கொடுத்து விடக் கூடும். மொத்த உலகமும் இவர்களுடையது - ஆசைப் படும் போதெல்லாம் யாரை வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளத் தனக்கு உரிமை இருக்கிறது என்று எண்ணுபவர்கள். சாலையில் போகும் வல்லவனுக்கு வல்லவன் ஒருவரால் ஓரிரு அறைகள் வாங்கி விட்டால் இவர்கள் திருந்தி விடுவார்கள்.

இதை நான் நீளமான வரிசைகள் இருக்கும் சுங்கச் சாவடிகள், இரயில்வே கேட்கள், பெட்ரோல் பங்க்கள், ஒரு தடச் சாலைகளில் பார்த்திருக்கிறேன். சட்டத்துக்கு பயந்த எல்லோரும் ஒரே ஒற்றை வரிசையில் ஒழுங்காகப் போய்க் கொண்டிருக்கும்போது, சில அமாவாசையில் பிறந்தோர் மட்டும் வேகமாக எல்லோரையும் கடந்து வெகு முன்னால் வந்து இடையில் கிடைக்கிற இடத்தில் நுழைவார்கள். அவர்கள்தாம் புத்திசாலிகள் என்றும் மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்பது போலவும் அவர்களுக்கு நினைப்பு. அவர்கள் வாழ்வதே இன்றுவரை அவர்களை யாரும் அறைய முன் வராததால்தான். அது திமிர் மட்டும் இல்லை. மனிதத் தன்மை அற்ற ஒரு செயலும் கூட. மிருகத்தனமானது. அவர்கள் காட்டில் இருப்பதே நல்லது.

கவனமின்மையிலேயே மேலும் அபாயகரமான படிவம் ஒன்று இருக்கிறது. அவர்களுக்கு வாழ்க்கை அல்லது உயிரின் முக்கியத்துவம் தெரிவதில்லை; அவ்வளவே. இந்தப் பேர்வழிகள் என்ன செய்வார்கள் என்றால், எங்கு போனாலும் யாரோ ஒருவரைப் போட்டி போடப் பிடித்து விடுவர். கடுப்பேற்றும் விதமாக ஓட்டி ஓட்டி யாராவது ஒருவரை எப்படியாவது ஒரு வழியாகப் போட்டிக்கு அழைத்து வந்து விடுவார்கள். இப்படி யாராவது ஒருவரைப் பிடித்து இழுக்கா விட்டால் அவர்களால் ஒரு மணி நேரம் கூட ஓட்ட முடியாது. இது போன்ற வேடிக்கைகள் இல்லாமல் தன்னால் நெடுந்தொலைவுப் பயணங்களில் எல்லாம் ஓட்டவே முடியாது என்கிறார் என் நண்பன் ஒருவர். அவர் ஊருக்குப் போகும் ஒவ்வொரு முறையும் இது போன்ற போட்டிகளில் இறங்கி விடுவாராம். அது அவருக்கு மிகவும் பிடிக்கிறது. அது போன்ற விஷயங்கள் அவருக்கு மிகவும் கிளர்ச்சி ஊட்டுகின்றன. அது போன்ற  நெடுந்தொலைவுப் பயணங்களில் இவர்களோடு போட்டிக்கு வருவதற்காகவே இவர் போன்ற ஆட்கள் நிறையப் பேர் இருக்கிறார்களாம் ஊருக்குள். மடத்தனம்... பைத்தியக்காரத்தனம்... புத்திக் கலக்கம்... இல்லையா? இது போல ஆரம்பித்து வாழ்க்கையையே முடித்து வைக்கிற மாதிரி முடிந்த பல கதைகள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவர்களும் அது போன்ற கதைகளைக் கேட்டால் நல்லது.

எதற்காகத் திட்டு வாங்குகிறோம் என்றே தெரியாமல் திட்டு வாங்கும் கூட்டம் ஒன்றும் இருக்கிறது. அவர்களால் பதிலுக்கும் கத்த முடியாது (நல்ல தாய் தகப்பனுக்குப் பிறந்தோர்!). அவர்களுடைய தவறு என்னவென்றும் புரிந்து கொள்ள முடியாது. சில நேரங்களில், அவர்களுடைய தவறு - அவர்களுடைய நாகரிகமான தோற்றமாக இருக்கலாம். அவர்களுடைய பாலினமாக இருக்கலாம். வேறொரு மாநிலத்தில் பதியப் பட்ட வண்டியை ஓட்டுவதாக இருக்கலாம் (அவர்களிடம் சொந்த மாநிலத்தில் இருந்து ஒப்புதல்ச் சான்றிதழ் பெற்றிருக்கிறார்களா இல்லையா என்பது பிரச்சனையில்லை - வந்த மாநிலத்தில் சாலை வரி கட்டியிருக்கிறார்களா இல்லையா என்பது பிரச்சனையில்லை - வண்டியை விதிமுறைகளின் படி சரியாக ஓட்டுகிறார்களா இல்லையா என்பது பிரச்சனையில்லை - சில நேரங்களில், அவர் வெளி மாநிலத்தவரா வண்டி மட்டும்தான் வெளி மாநிலமா என்பது கூடப் பிரச்சனையில்லை!). இவர்கள் நம் சமூகத்தின் பலவீனமான பிரிவுகளை நினைவு படுத்துகிறார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஒன்றும் செய்ய முடியாது விழிக்க வேண்டும் அல்லது சிரிக்க வேண்டும். என்ன ஒரு கொடுமையான கிரகத்தில் வாழ்கிறோம்.

சாலையில் என்னை மிகவும் பாதிக்கும் விஷயம் என்னவென்றால், தமக்கு என்றுமே சாலைகளில் எதுவுமே நடக்க முடியாது என்கிற அளவுக்கு அவ்வளவு கவனமாகவும் பாதுகாப்பாகவும் ஓட்டும் சிலர் பிரச்சனைக்குள்ளாவது. தொடர் புகையாளர்களுக்கு முன் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர் புற்று நோய் வந்து சாவது போல இது. அவர்கள் சாலையை மதிப்போர். விதிகளைப் பின்பற்றுவோர். உணவுக்கும் சுகங்களுக்கும் மகிழ்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் பள்ளிக் கட்டணத்துக்கும் மன பலத்துக்கும் அதுபோன்ற பல வாழ்க்கைக்குத் தேவையான சமாச்சாரங்களுக்கும் தன்னைச் சார்ந்து இருக்கும் உயிர்களைப் பற்றி (வீட்டில் இருக்கும் பெரியோர், பெண்டிர் மற்றும் பிள்ளைகள்) மீண்டும் மீண்டும் தனக்குள் நினைவு படுத்திக் கொள்வோர். இத்தனைக்கும் பின்பும், அவர்களில் சிலர் அடி படுகிறார்கள் - திட்டப் படுகிறார்கள் - உயிரை இழக்கிறார்கள் - உறுப்புகளை இழக்கிறார்கள் - சென்று சேர வேண்டிய இடம் போய்ச் சேர்வதில்லை. எந்தத் தவறும் செய்யா விட்டாலும், வேறொருவர் செய்யும் தவறால் அவர்களின் வாழ்க்கை ரணப் படுகிறது. அந்த 'வேறொருவர்' அவருடைய தவறுக்காகத் தண்டனை கூட அனுபவிப்பதில்லை பெரும்பாலான நேரங்களில்.

ஏன்? இப்போதைக்கு என்னிடம் பதில் இல்லை. அதற்கான பதில் ஒருநாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. என்னால் செய்ய முடிந்ததெல்லாம் விதியின் மேல் பழி போட முடியும். அவ்வளவுதான். அதுதான் இயலாமையால் செய்ய முடிந்தது. விதியை மனிதர்களான நம்மால் இதை விடப் பரவாயில்லாமல் நிர்வகிக்க முடியுமா? முடியும் என்றுதான் நினைக்கிறேன். நம்பிக்கையுள்ளது. எல்லோரும் சாலை நற்பண்புகளைப் பின் பற்றுவதன் மூலம் எவ்வளவோ உயிர்களைக் காக்க முடியும். ஆனால், அதற்கு, நல்ல மனிதக் குறியீட்டு எண் கொண்ட மக்கள் வேண்டும் - திறந்த மனதோடு அவற்றைப் படிக்கவும் தொடர்ந்து கடை பிடிக்கவும். :)

கருத்துகள்

  1. மிகவும் வருந்தத் தக்க நிலை. வெளியில் போகும்போது எல்லாம் அனுபவிக்கிறேன். இந்தியன் ஒருவன்தான் இப்படி இருக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  2. வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. வீடு வீடாக பிரிண்ட் பண்ணி கொடுக்க வேண்டிய ஒரு பதிவு. உண்மையிலேயே யாராவது செய்வார்களா? ட்ரைவர் லைசன்ஸ் கொடுக்க முதல் அந்த ஆளை ஒரு அறையில் பூட்டி இதை 10 தடவையாவது படிடா என்று விடணும். (சரி சரி கண்டுக்காதீங்க. நடக்காததை எல்லாம் நினைக்கிறதே எனக்கு தொழில். )

    பதிலளிநீக்கு
  4. நன்றி அனா. நடக்காதது என்று நினைப்பதற்கு எதுவுமே இல்லை. குறைந்த பட்சம் என் பதிவுகளில் அப்படிப் பட்ட கருத்துக்களைத் துணிந்து பேசுங்கள். இத்தகைய கருத்தாக்கங்கள்தாம் பின்னாளில் யாரோ ஒருவர் புண்ணியத்தில் செயல்பாடாக மாறும். ஒத்துச் சிந்திக்கும் ஒருவர் கிடைத்ததில் எனக்கு நிரம்பவே மகிழ்ச்சி. :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி