கலாச்சார வியப்புகள்: சிங்கபுரம் (சிங்கப்பூர்)

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

அந்தக் காலத்தில் பயணக் கட்டுரைகள் எழுதுவது பலருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். அப்போது வெளிநாடு சென்றோரும் குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு வாழ்க்கை முழுமையையும் அந்நாடுகளில் பணி செய்வதிலேயே அர்ப்பணித்தார்கள். அதனால் அவர்களுக்குப் பயணம் பற்றிய அனுபவங்களை எழுதும் வாய்ப்பெல்லாம் கிட்டியிராது. பெரும்பாலும் அப்போது கூலி வேலைக்குப் போன நம் மக்கள்தாம் - அவர்களுடைய சந்ததியர்தாம் இன்று பல நாடுகளில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். சுற்றிப் பார்க்கப் போவோர் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்திருப்பர். அப்படிப் போனவர்களையும் அங்கு வாழ்ந்த நம்மவர்கள் விழுந்து விழுந்து கவனித்திருப்பார்கள் - நம்ம ஆள் ஒருத்தர் வந்திருக்கிறார் என்கிற மகிழ்ச்சியில். வெளியில் சென்ற முதல்த் தலைமுறை ஆட்களுக்குத்தான் அப்படி ஊரிலிருந்து வருவோரை உபசரிப்பது முக்கியமாக இருக்கும். தகவல்த் தொடர்பு வசதிகள் அதிகம் இல்லாத அந்தக் காலத்தில், அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காக பரிச்சயம் இல்லாத அந்நிய மண்ணில் சென்று வாழும் நம் மக்களின் வாழ்க்கை முறையை விளக்கிச் சொல்லவும் பயணம் சென்றவர்கள் திரும்ப வந்து எழுதிய கட்டுரைகள், அங்கு போக முடியாதோருக்கு வாசிக்க சுவாரசியமாகவும் போக விரும்புவோருக்கு மாற்றுக் கலாச்சாரம் பற்றிய ஒரு நல்ல அறிமுகம் கொடுப்பதாகவும் இருந்திருக்கும்.

அதே கூலி வேலையைக் கூடுதல்ப் பெருமையோடு செய்யும் நம் கணிப்பொறித் தலைமுறை தலையெடுத்த பின்பு, இப்போதெல்லாம் குறைந்த பட்சம் வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார். அப்படிச் சென்றிருப்பவர்கள் வித விதமாகப் படங்கள் எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஊருக்கு வரும்போது வித விதமாகக் கதைகள் சொல்கிறார்கள். அதனால் நம்மில் பலருக்கு அது போன்ற கதைகளைக் கேட்டாலே புளிக்க ஆரம்பித்து விட்டது. அளவிலாத பிதற்றல்கள் மூலம், "ஐயோ, இவன் வந்துட்டானா... வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த லபக்கு தாஸ் போலப் பேசுவானே!" என்று அலறி ஓடும் கூட்டங்களையும் உருவாக்கி விட்டோம். அப்படி இருக்கையில் இப்படியொரு கட்டுரை வரைவது எவ்வளவு வெற்றி பெரும் என்று தெரியவில்லை. எனவே, அந்த நெடி சிறிதும் இல்லாமல் எழுத முயற்சித்திருக்கிறேன். பார்க்கலாம். அதிக பட்சம், "ஏய்! இதெல்லாம் நீ இப்பத்தான் பாக்குறியா? நாங்கெல்லாம் எப்பவோ இதெல்லாம் தாண்டி வந்துட்டோம்." என்று வேண்டுமானால் நிறையப் பேர் நினைக்கலாம். அவர்களுக்கு மட்டும், "இது உங்களுக்கில்லை!" என்றொரு முன் விளக்கம் கொடுத்து விட்டு ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். இதோ கிளம்பி விட்டது விமானம். பெங்களூர் விமான நிலையத்திலிருந்து...

மேற்கு நோக்கிப் பயணிக்கப் போவதாக எழுதி ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது. அதற்கான நான்கு வெவ்வேறு வாய்ப்புகள் வாய்க்கு எட்டி கைக்கு எட்டாமல் போய் விட்டன. சுவிட்சர்லாந்தில் ஆரம்பித்து, அது இங்கிலாந்தாகி, அதுவே பின்னர் அமெரிக்காவாகி, அதுவும் போய் நெதர்லாந்தாகி, கடைசியில் ஒரு லாந்தும் இல்லாமல் மல்லாந்து படுக்க வேண்டிய நிலையாகி விட்டது. மேற்கு நோக்கிப் புறப்படத் தயாராக உட்கார்ந்திருந்தவனுக்கு மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டு படுக்க வேண்டிய நிலை. திடீரென்று எழுப்பி, கிழக்கு நோக்கிக் கிளம்பச் சொல்லி ஒலித்தது ஒரு மணி. அடித்துப் பிடித்துத் தயாரானேன். வாராது வந்த மாமணியாய் வந்தது சிங்கபுர வாய்ப்பு. அதுவும் "இப்போது போ. எப்போது திரும்புவது என்பதை அப்புறம் முடிவு பண்ணிக் கொள்வோம். அது இரண்டு வாரங்களாகவும் இருக்கலாம். இரண்டு வருடங்களாகவும் மாறலாம்!" என்பது போலச் சொல்லி அனுப்பினார்கள். அதனால், இரண்டு வாரங்கள் என்று வெளியில் சொன்னாலும், கண்டிப்பாக இரண்டு வருடங்கள் ஆகிவிடும் என்ற அதீத நம்பிக்கையில் புறப்பட்டேன். நமக்கு எது வேண்டுமோ அதுதான் நடக்கும் என்று நம்புவதுதானே நம் பயக்கம். கடைசியில் இரண்டு வாரங்கள் கூட இருக்க வேலையில்லாமல் பத்து நாட்களுக்குள் திரும்ப நேர்ந்தது.

எது எப்படியோ, வெளிநாடு செல்வதற்கான கோடு கையில் இல்லையோ - கட்டத்தில் இல்லையோ என்றெல்லாம் பட்ட கவலைக்கு ஒரு முடிவு பிறந்து விட்ட திருப்தி கிடைத்து விட்டது. இதுதான் ஆரம்பம் என்று ஒருபுறம் நல்லவர்கள் சிலர் நம்பிக்கை கொடுக்கிறார்கள். "இதற்கெதற்கு இவ்வளவு மோகம்?" என்று ஒருபுறம் வேறு சிலர் கேள்வி கேட்கிறார்கள். "நல்ல காரியம் எதையுமே நடக்கிற வரை சொல்லக் கூடாது" என்று ஒருபுறம் நலம் விரும்பிகள் பலர் நல்லது சொல்கிறார்கள். இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் நான்கு முறை வந்ததெல்லாம் கண்ணு பட்டே மண்ணாப் போனது என்பது அவர்கள் சொல்லும் நல்லது. அதுவும் சரியோ என்று தோன்றும் மாதிரித்தான் இருந்தது நடந்த பல நிகழ்வுகள். எல்லாம் நன்றாகப் போவது போல இருக்கும். அடுத்த வாரம்... அதற்கடுத்த வாரம்... என்பது போல நெருங்கி வரும். திடீரென்று ஏதாவது ஆகிவிடும். அதனால்தானோ என்னவோ நிறையப் பேர் போய்ச் சேர்ந்தபின்தான் சொல்கிறார்கள் - "ஐயோ, திடு திப்புன்னு கிளம்பச் சொல்லிட்டாங்க. யாருக்குமே சொல்ல முடியல. இப்பத்தான் எல்லாருக்கும் கூப்பிட்டுச் சொல்லிக்கிட்டிருக்கேன்!" என்று. "வெளிநாடு போவது இவ்வளவு பெரிய விஷயமா? அதெல்லாம் ஒரு பெரிய விஷயம் போல இப்படி எல்லாம் கூடப் பேசுவார்களா?" என்றெல்லாம் தோன்றுகிறதல்லவா? :)

அத்தனையையும் மீறி, வண்டியேறி உட்கார்ந்து, பறக்க ஆரம்பித்த பின்பு கூட முழுசாக நம்பிக்கை வரவில்லை. சென்று இறங்கிய பின்புதான் "அப்பாடா! கையிலும் கோளாறு இல்லை; கட்டத்திலும் கோளாறு இல்லை!" என்றொரு நிம்மதிப் பெருமூச்சு. முதன் முதலில் கிடைக்கிற எல்லா வாய்ப்புகளிலும் - நடக்கிற எல்லா நிகழ்வுகளிலும் இது போன்றதொரு நம்பிக்கையின்மை வரும் என நினைக்கிறேன். முதன் முதலில் மதுரை போனபோதும், முதன் முதலில் சென்னை போனபோதும், பின்னர் முதல் வேலை கிடைத்த போதும், திருமணம் ஆனபோதும் (ஒருமுறைதான்!) இதை உணர்ந்திருக்கிறேன். முழுசாக நடந்து முடியும்வரை ஒருவிதப் பதற்றம். நல்லவேளை, காதல் திருமணமில்லை. அது கூடுதல்ப் பதற்றமாகி விடும். இப்போது அடுத்த கவலை ஆரம்பித்து விட்டது. வாழ்க்கைக்கும் இது ஒன்றுதான் வெளியில் செல்லக் கிடைத்த ஒரே வாய்ப்பு என்றாகி விடக் கூடாதே என்கிற பயம். மனம் குரங்கு என்று சொல்வதெல்லாம் மிக நாகரீகமான விமர்சனம். அதை விடக் கேவலமானதப்பா அது (குரங்கு கேவலம் என்று சொல்லவில்லை; அதற்காக யாரும் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்!).

சிங்கப்பூர் பல காரணங்களுக்காக சின்ன வயதில் இருந்து சென்று பார்க்க விரும்பிய நாடு. மற்ற எல்லா நாட்டையும் விட நமக்குக் கூடுதல் உரிமை உள்ள நாடு. அங்குள்ள டாலர் நோட்டுகளில் தமிழும் இருக்கும். விமான நிலையத்தில் இறங்கியவுடனேயே ஏகப் பட்ட தமிழ் வரவேற்புகள் கிடைக்கும். தமிழ் அங்கோர் அலுவல் மொழி. உலகில் தமிழையும் அலுவல் மொழியாகக் கொண்ட மூன்று நாடுகளில் இதுவும் ஒன்று. அம்மூன்று நாடுகளில், மற்ற இரண்டைப் போலல்லாமல் தமிழர்களின் உயிரையும் மற்ற உயிர்களைப் போலவே சமமாக மதிக்கும் ஒரே நாடு. நம் மக்கள் நிறையக் குவிந்து கிடக்கும் நாடு. இந்த நாட்டின் கட்டுமானத்தில் நம் மக்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. சோழர் ஆட்சிக் காலத்தில் நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல கீழை நாடுகளுள் ஒன்று. இப்போதைய நாடு கடந்த தமிழ் ஈழ அரசு போல, அந்தக் காலத்தில் சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்தியப் படை நிறுவிய இடம். இங்கே நீண்ட காலமாக தமிழர் ஒருவர் குடியரசுத் தலைவராக இருந்து வருகிறார். இதெல்லாமே முன்பே கேள்விப்பட்ட சேதிகள்தாம். ஆனாலும் அவற்றையெல்லாம் இங்கு வந்து இறங்கியபின் நேரடியாகப் பார்க்கிறபோது ஒருவிதப் பெருமையுணர்வு மேற்கொள்வதை நன்கு உணர முடிகிறது. நமக்கு மேற்கேயிருக்கும் நம் மலையாள சோதரர்கள் அவர்கட்கு மேற்கே இருக்கும் வளைகுடா நாடுகளை வளைத்துப் போட்டது போல, அவர்கட்குக் கிழக்கே இருக்கும் நாம் நமக்குக் கிழக்கே இருக்கும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற கீழை நாடுகளில் போய் தடம் பதித்து விட்டோம்.

சிங்கப்பூருக்கு மேலேயிருந்து விமானம் கீழிறங்கிய பொழுதில் எல்லோருமே அவ்வூரின் ராட்சத வெளிச்சத்தை சன்னல் வழியாக வேடிக்கை பார்த்தார்கள். உட்பகுதியில் உட்கார்ந்திருந்ததால் நான் அவ்வளவு நன்றாகப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் அதன் பிரம்மாண்டத்தை ஓரளவு காண முடிந்தது. இப்போதெல்லாம் நம்ம ஊர்களே இரவில் வந்து இறங்கிய நேரங்களில் இப்படி இருக்கின்றனவே என்றும் உள்ளுக்குள் ஒரு விவாத ஒலி கேட்டது. வந்து விமானம் நின்றதும், பெங்களூரில் இருந்தே பின்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டே வந்த சிறுவன் தன் தாயைக் கன்னடத்தில் கேட்டான் - "அம்மா, சிங்கப்பூர் ஆந்திரப் பிரதேசில்தானே இருக்கிறது?!". 'அடப்பாவி, தமிழ் நாட்டிலா என்றாவது கேட்டிருக்கலாம். அதில் ஒரு பொருள் பொதிந்திருக்கிறது!' என்றெண்ணிக் கொண்டேன். ஏதோவொரு வகையில் அது இந்தியாவில் ஓர் இடம் போல அவனுக்குத் தோன்றியிருக்கிறது. முதல்க்காரணம் பயண நேரமாக இருக்கக் கூடும். சென்ற முறை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றபோது இதைவிட அதிக நேரம் ஆகியிருந்திருக்கலாம்.

சென்று இறங்கியதும் "நல்வரவு" சொன்னது சாங்கி விமான நிலையம். 'ஆமாம். இது உண்மையிலேயே எனக்கு ஒரு பெரும் நல்வரவு!' என்று நினைத்துக் கொண்டேன். சிங்கப்பூருக்கும் அது ஒரு நல்வரவாக இருந்தால் நல்லதாக இருக்கும் என்று முடிந்தால் நினைத்திருக்கும் வந்தாரை வாழ வைக்கும் அந்த அழகூர். விமான நிலையத்து உள்ளே பெரிதாக எதுவும் வேறுபாடு காணவில்லை. இப்போதுதான் நம்ம ஊர்களும் பன்னாட்டுத் தரத்தில் விமான நிலையங்களைக் கட்டி விட்டனவே. ஏற்கனவே கேள்விப் பட்டதுபோல், நிறையத் தமிழர்கள் இருக்கிறார்களா என்று தேடினேன். ஓரளவு அங்கிங்கெனாதபடி எங்கும் தென்பட்டனர். உள்ளே இருக்கும் வரை குளு குளு என இருந்தது. வெளியில் காலெடுத்து வைத்தபோது, சிங்கப்பூர் வெக்கை சென்னைக்குச் சொந்தக்காரி போல அடிக்கும் என்று சொன்னார்களே அதை உணர முடிந்தது. கிட்டத்தட்ட நள்ளிரவாகி விட்டதால், 'உன் உண்மைக் கொடூரத்தை நாளை பார்த்துக் கொள்கிறேன்' என்று விட்டு விட்டேன்.

வாடகை வண்டிகளின் பகுதிக்கு வந்தபோது, 'எதையும் மிக முறையாகச் செய்கிற ஆட்கள் நாங்கள்' என்று சொல்லுகிற விதமாக அங்கே ஒருவர் நின்று முறைப்படி வரிசையாக ஆட்களை வண்டியில் ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார். அந்த அர்த்த சாமத்திலும். வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். பெங்களூரில் தமிழ் ஆட்டோக்காரர்கள் போல அங்கும் நிறைய நம்ம ஓட்டுனர்கள் இருப்பார்கள்; நான் ஏறப்போகும் முதல் வண்டியின் ஓட்டுனரும் நம்மவராகவே இருப்பார் என்று எண்ணியவனுக்குச் சின்னதாய் ஓர் ஏமாற்றம். வந்தவர் சீன முகம் கொண்ட சீமான். அன்று மட்டும் இல்லை. அதன் பின்பு நான் சென்ற எல்லா வண்டிகளின் ஓட்டுனர்களும் சீனர் அல்லது மலாயரே. ஒரு தமிழ் ஓட்டுனர் கூடச் சிக்க வில்லை அந்தப் பத்துப் பன்னிரண்டு நாட்களில்.

இன்னொரு முக்கிய விஷயம் - முன்பெல்லாம் மேற்கிந்திய அணியில் ஆடும் எல்லா வீரரும் ஒரே மாதிரி இருப்பது போல சீனர், ஜப்பானியர், கொரியர், நேப்பாளர் ஆகிய எல்லோருமே ஜாக்கி சான் போலவே தெரிவார்கள். அந்தக் குழப்பம் இப்போது தீர்ந்து விட்டது போல்த் தெரிகிறது. அவர்களிலும் வட்ட முகம், நீல முகம், சதுர முகம், எந்த வடிவமும் அற்ற முகம் என எல்லா முகங்களும் இருக்கின்றன. ஒரே குறை - அவர்களுடைய அழகையும் அழகாகப் பார்க்க முடிகிற பழக்கப் படுதல் இன்னும் ஏற்பட வில்லை. அதற்கு இரண்டு வருடங்கள் இருந்தால் தான் முடியும். பேசிப்பார்க்க வேண்டும் ஆபீசில்.

அந்த நள்ளிரவில் சிங்கப்பூரில் என் முதல் சாலைப் பயணம் ஆரம்பித்தது. ஓட்டுனர் நன்றாக ஆங்கிலம் பேசினார். ஆனால் அது புரிகிற மாதிரி இல்லை. அதன் பின்பு வந்த எல்லா ஓட்டுனர்களுமே ஆங்கிலம் அருமையாகப் பேசினார்கள். அவர்கள் யார் பேசியதுமே அவ்வளவு எளிதில் புரியத் தக்கதாய் இல்லை. இரவு என்றபோதும், சாலையின் இரு பக்கங்களையும் ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்தேன். நான் ஆசைப் பட்டபடி, ஒரு முறை கூட அவர் வாகனத்தின் ஒலிப்பானைப் பயன் படுத்தவில்லை. அதுவும் அந்தப் பத்துப் பதினைந்து நாட்களில் ஒரே ஒரு முறைதான் ஒரே ஒருத்தன்தான் தேவைக்கு  அதிகமாக வாகன ஒலிப்பான் அடித்ததைப் பார்த்தேன். அந்த மொகரையைக் கண்டிப்பாகப் பார்த்து விட வேண்டும் என்று திரும்பிப் பார்த்தால் இந்தியன் (கண்டிப்பாகத் தமிழ் மொகரை அல்ல!) போலத் தெரிந்தது. பட்டி மன்றத்தில் பேசுகிறவர்களைப் போல, "எங்க ஆள் காட்டிட்டான்ல!" என்று பெருமைப் படத் தோன்றவில்லை. இந்தியாவிலேயே ஒலிப்பானைத் தொடாத எனக்குக் கிடைக்காத வாய்ப்பு, இங்கிதம் தெரியாத உனக்கு இந்த ஊரில் கிடைத்திருக்கிறதே என்று வயிற்றெரிச்சல் மட்டுமே வந்தது. ஒலிப்பானைப் பயன்படுத்தாத ஒரே காரணத்துக்காக ஒருத்தனை சிங்கப்பூர்க் குடிமகனாக ஆக்க முடியாது அல்லவா?!


கட்டடங்கள் எல்லாமே பெரிதாக இருந்தன. நம்மூரிலும் அங்கிருக்கும் கட்டடங்கள் போல வர ஆரம்பித்து விட்டன. ஆனால், இங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது, அங்கே எங்குமே அப்படித்தான் இருக்கிறது. இது அது என்றில்லை. எல்லாமே விண்ணை முட்டும் கட்டடங்களே. நமக்குத்தான் வானம் எப்போதும் பட்டம் விடும் தொலைவில்தானே இருக்கிறது. கொடிக் கம்பங்களையே விண்ணை முட்டுவதாகச் சொல்வோர் நாங்கள். அம்மாம் பெரிய கட்டடங்களையா விடுவோம். அடுத்ததாக, சாலைகள் மிக அகலமாக இருந்தன. அளவுக்கு மிஞ்சி சுத்தமாக இருந்தன. 'இதற்கெலாம் ஏன் உங்கள் அரசாங்கம் துட்டைப் போட்டு வீணாக்குகிறதோ?!' என்று வேதனைப் பட்டுக் கொண்டேன். இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் இவையெல்லாம் பெரும் மிரட்சியை உண்டு பண்ணியிருக்கலாம். இப்போது நாமும் தங்க நாற்கரச் சாலைகளை எல்லாம் பார்த்து - பயணித்து - பழக்கப் பட்டு விட்டதால், மிரட்சி கொஞ்சம் குறைவே.

எதிர் பார்த்தது போலவே, ஓட்டுனர் சாலை விதிகளை மிகவும் பயத்தோடு கடை பிடித்தார். அந்த ஒழுங்கையும் நான் இருந்த காலம் முழுக்கக் காண முடிந்தது. சாலையைக் கடப்போர் மட்டும் முதலில் சில நாட்கள் நிரம்ப ஒழுங்காக இருப்பது போல்த் தெரிந்தார்கள். அதன் பின்பு, அந்த வகையில் கெடுபிடி கொஞ்சம் குறைவு போலத் தெரிந்தது. யாரும் குண்டக்க மண்டக்கக் கடப்பது கிடையாது. சிவப்பு விளக்கு எரிந்தாலும், வண்டி எதுவும் வராவிட்டால் மிகக் கவனமாகவே கடக்கிறார்கள். விதி விளக்குகளை மதியாமை விதி விலக்குகளே ஒழிய வாழ்க்கை முறை அல்ல. வண்டிகள் அனைத்தும் நம்ம ஊரில் போலவே இருந்தன. நம்ம ஊரில் காண முடியும் அதே வண்டிகள் நிறையக் காணவும் முடிந்தது வியப்பாக இருந்தது. இரு சக்கர வாகனங்கள் மிக மிகச் சொற்பம். நம்ம ஊரில் போவதை விட வேகமாகச் சென்றது வண்டி. ஆனால், வியப்படையும் படியான வேகம் ஒன்றும் இல்லை. ஒருவேளை, அதெல்லாம் அமெரிக்காவில் மட்டும் இருக்கலாம் என நினைக்கிறேன்.

சாங்கியில் இருந்து கடற்கரையோரமாகவே பயணித்து ஊருக்குள் வந்தேன். அது கடற்கரையோரம் என்பது அடுத்த பத்து நாட்கள் தினமும் பயணித்த போதுதான் புரிந்தது. வந்து இறங்கிய இடத்துக்குப் (விமான நிலையத்துக்குப்) பக்கத்தில்தான் பணியிடம். தங்குமிடம் மட்டும் தள்ளி இருந்தது. நடமாட்டம் நிறைந்த அந்தப் பகுதிகளை நெருங்கியதும், "சிங்கப்பூரில் ஆணும் பெண்ணும் அதுக இஷ்டத்துக்கு அலையுதாம்ல!" என்று பதி மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்ட ஒரு வசனத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் படி ஆணும் பெண்ணும் அந்த நடு நிசியில் அலைந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அதிலும் புலம்புவதற்கு ஒன்றுமில்லை. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்பு நிறைந்த ஊர் சிங்கப்பூர் என்று கேள்விப் பட்டபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. காந்தி சிங்கப்பூரில் பிறந்திருந்தால், நடு இரவில் அங்கே பெண்கள் தனியாக நடந்து போவதைக் கண்டு பூரித்திருப்பார். விஜயகாந்த் அங்கே பிறந்திருந்தால், அதை ஒரு வசனமாகப் பேச வாய்ப்பில்லாமல் சங்கடப் பட்டிருப்பார்.

ஊரின் முக்கியப் பகுதியான பூகிஸ் அருகில் விக்டோரியா சாலையில் ஓட்டல்.  ஓட்டலில் வந்து இறங்கியதும் மகிழ்ச்சி காத்திருந்தது. 'பார்த்திபன்' என்று பெயர்ப்பட்டை அணிந்து கொண்டிருந்த ஒருவர் ஆங்கிலத்தில் வரவேற்றார். பெட்டிகளைக் கொண்டு போய், அறையில் போட்டு விட்டு, கீழே வந்து பார்த்திபனிடம் தொலைபேசி வசதிகள் பற்றி விசாரித்தேன். பக்கத்திலேயே இருக்கும் ஒரு கடையில் சிம் கார்ட் கிடைக்குமென்றார். போகிற வழியில் சாலையோரத்தில் அழகாகப் போட்டிருக்கும் கல் இருக்கைகளில் அமர்ந்து நம் உறவுக்கார இளைஞர்கள் சிலர் மது அருந்திக் கொண்டும் புகை பிடித்துக் கொண்டும் தமிழில் கதைத்துக் கொண்டிருந்தார்கள். பெருமையோ பெருமை எனக்கு. இதைப் பார்க்க என் தாய்த் தமிழகத்தில் இருக்கும் ஆறு கோடிப் பேருக்கும் வாய்ப்பு வசதியில்லையே என்று! அவ்வளவு தொலைவு கடந்து வந்து ஒரு வெளியூரில் தன் ஊர் போலவே வாழ முடிகிற நம் முன்னோர்களின் சந்ததிகளை நேரில் காண முடிகிற போது வரத்தானே செய்யும் பீறிட்டுக் கொண்டு! அதுவும் வந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே!

போன இடத்தில் ஏதோ காரணத்தால் சிம் கார்ட் கிடைக்க வில்லை. அழைப்பு அட்டை என்று ஒன்று கிடைத்தது. அத்தோடு அங்கே வேலை செய்த இளைஞனும் தமிழனே என்று அடையாளம் கண்டு கொண்டு மகிழ ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அந்தத் தம்பி பேசிய ஆங்கிலமும் புரிய வில்லை. அதை வாங்கிக் கொண்டு அண்ணன் பார்த்திபனிடம் வந்தேன் மீண்டும். அவருடைய உதவி நாடினேன். ஆங்கிலத்தில் ஓரிரு சொற்கள் உரையாடி விட்டுத் தமிழுக்குத் தாவினார். "தமிழ் பேசுவிங்களா?" என்றார். 'ம்ம்ம்.. நான் பேசாம யார் பேசுவா???' என்றெண்ணிக் கொண்டு நானும் தமிழ்க் கடலில் தாவிக் குதித்தேன் என் தமையனோடு. "இந்தியாவிலிருந்து வருவோர் நிறையப் பேர் தமிழ் பேச மாட்டார்கள். அதான் கொஞ்சம் யோசித்தேன்..." என்று மிகச் சிறிதளவு (லெமன் ஜூஸில் லெமன் அளவு என்று சொல்லலாம்) வருத்தத்தோடு சொல்லி விட்டு எனக்கு வேண்டிய உதவி செய்தார். சிறிது நேரம் அவர் பேசுவதைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது (தமிழைத்தான்!). சிங்கப்பூருக்கென்று ஒரு ஆங்கிலம். சிங்கப்பூருக்கென்று ஒரு தமிழா? அதுவும் ஒருவித இனிமையாகத்தான் இருந்தது. அப்படியே பேசுங்கள். தப்பில்லை.

இவர்களுக்கெல்லாம் சொந்த ஊர் எதுவாக இருக்கும் என்றொரு சிந்தனை ஓட்டம். இத்தோடு சிங்கப்பூர் சென்ற தமிழ்த் தலைமுறைகளின் எண்ணிக்கை ஆறு-ஏழு இருக்குமாம். அப்படியானால், அவர்களின் தாத்தாக்களின் தாத்தாக்கள் எந்த ஊரில் இருந்து போயிருப்பார்கள்? நம்முடைய ஊர்களைப் போன்ற ஓர் ஊரிலிருந்துதானே போயிருக்க வேண்டும்? உள்ளே நுழையும் முன்பே சாலையின் இருபுறமும் இயற்கைக் கழிப்பறைகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும் நம் ஊர்களில் இருந்துதானே போயிருக்க வேண்டும்? குடி நீர், கல்வி, சுகாதாரம் முதலான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அல்லோலப் படும் நம் கிராமங்களில் இருந்துதானே போயிருக்க வேண்டும்? சாலைகளே சரியாகப் போடப் படாத நம் ஊர்களில் இருந்துதானே போயிருக்க வேண்டும்? அப்படிப் போய்க் குடியேறியவர்களின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் சந்ததியரும் இன்று அதே ஊர்களில் வந்து வாழ வேண்டும் என்று சொன்னால் ஒருநாள் கூட அவர்களால் இருக்க முடியுமா? பிள்ளைகள் - பேரப் பிள்ளைகள் - சந்ததியரை விடுங்கள்... அவர்களே வந்து இங்கு கொஞ்ச நாள் இருக்க முடியுமா? சிங்கப்பூர் சென்றோரை விடுங்கள். பெங்களூரும் சென்னையும் சென்றோரே அதைச் செய்ய முடியாதே!

மொழி மட்டும்தான் ஒன்றே ஒழிய (அதுவும் மாறிவிட்டது பலருக்கு!), வாழ்விடங்களும் அவை கொண்டிருக்கும் வசதிகளும் ஓரளவுக்குப் பண்பாடுமே கூட வெவ்வேறாகி விட்டனவே! இப்படித்தான் ஆதி மனிதன் படைத்த ஆதிக் குழந்தைகள் எல்லாம் சிதறுண்டு இன்று வெவ்வேறு குழுக்களாகவும் மதங்களாகவும் இனங்களாகவும் பிரிந்திருக்கின்றனவோ?! இப்படித்தான் ஆப்பிரிக்காவில் பிறந்த நம் ஆதி மூதாதையர் இந்தியக் கண்டத்தின் பக்கம் வந்து வேறோர் இனமாக மாறினார்களோ?! அப்படி வந்தோர் இன்று அதனினும் பல இனங்களாகப் பிரிந்து, ஒன்றை ஒன்று முடிக்காமல் விட மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தம்மையே முடித்துக் கொண்டு இருக்கின்றனவோ?! அப்படியானால், இந்த மண்ணின் மைந்தர்தான் யார்? எந்த மண்ணுக்கும் எவர்தான் உண்மை மைந்தர்? யோசிக்க யோசிக்க மண்டைக்குள் ஓட்டை விழுந்து கொண்டே போவது போல இருந்தது. அதனால் அதனை அத்தோடு விட்டு விட்டேன்.

அறைக்குத் திரும்பி, இருந்த பவர் காலியாகும் வரை கணினியில் பணி செய்து விட்டுப் படுக்க வேண்டியதாயிற்று. நம்ம ஊர் ப்ளக்குகளை அங்கே உள்ள பிளாக் பாயிண்ட்டுகளில் பயன் படுத்த முடியவில்லை. உலகம் முழுக்க ஒரு முறை என்றால் நம்மூரில் மட்டும் ஒரு முறை. அதற்கு ஏதோ அடாப்டர் வாங்கிப் பயன் படுத்த வேண்டுமாம். அடுத்து, பேச வேண்டியவர்களிடம் பேசி விட்டு, அன்றைய தினம் அடைந்து விட்ட மாபெரும் வெற்றிக்குரிய மகிழ்ச்சியோடு தூங்கச் சென்றேன். கைக்கோடுகளையும் கட்டங்களையும் அல்லவா தோற்கடித்திருக்கிறேன்?! கடல் கடக்கும் பாக்கியம் இல்லை என்று இனிமேல் எவர் சொன்னாலும் நம்ப வேண்டியதில்லையே. நாளை கிளம்பச் சொன்னாலும் பரவாயில்லை. இன்று வந்து இறங்கி விட்டேனே. அந்தக் கோட்டை எப்படி அழிப்பீர்கள்?

காலை எழுந்து ஊர் சுற்றத் தயாரானேன். தம்பிமார் பிரபாகரும் கல்யாண் குமாரும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார்கள். வேறு எந்த ஊரிலும் இந்த அளவுக்குத் தெரிந்தவர்கள் சிக்குவார்களா தெரியவில்லை. பகலில் பார்க்க இன்னும் அழகாக இருந்தது ஊர். எம்.ஆர்.டி. இரயில் நிலையம் சென்று பாஸ் வாங்கினோம். அதே பாஸை வைத்துக் கொண்டு பஸ்ஸிலும் ஏறலாமாம். அலுவலகத்தில் தேய்ப்பது போல, ஏறும் போதும் இறங்கும் போதும் தேய்த்து விட்டால் போதும். அதுவே கணக்குப் பார்த்துக் கழித்துக் கொள்ளும். ஆகா, என்னவோர் அருமையான முறை. இந்த முறை கண்டிப்பாக நம்ம ஊரில் அறிமுகப் படுத்த வேண்டியது. இரயில் நிலையத்தில் சீட்டு வாங்க வரிசையில் நிற்க வேண்டியதில்லை. பஸ்ஸில் மண்டையாய்ப் பேசும் நடத்துனர்கள் வேண்டியதில்லை. எல்லோருக்கும் ஏகப் பட்ட நேர மிச்சம்.

அப்படியே சில பல இடங்களுக்குச் சென்றோம். அதில் முக்கியமான இடம் லிட்டில் இந்தியா. லிட்டில் தமிழ்நாடு என்று இட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். முழுக்க முழுக்கத் தமிழ் வாசம் எங்கும். கடைகள் எங்கும் தமிழ்ப் பாடல்கள். சிம் கார்ட் வாங்கப் போனோம். வாங்கிப் பார்த்தால், அட்டையில் 'சிங்டெல் தான் சிறந்த டெல்' என்கிற மாதிரி ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார் தமன்னா. அடப்பாவி, அங்கேயுமா! அடுத்து, அடாப்டர் வாங்க முஸ்தபா கடைக்குப் போனோம். பெரிய கடை. பல சரவணா ஸ்டோர்கள் போல இருந்தது. உள்ளே பெரும்பாலும் தமிழர்களே. நான்கு அலுவல் மொழிகள் கொண்ட அந்த நாட்டில், "திருடுவது குற்றம்" என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் மட்டும் எழுதிப் போட்டிருந்தார்கள். "குறைவான குற்றம் குற்றமே இல்லை என்றாகாது" ("LOW CRIME DOESN'T MEAN NO CRIME") என்று ஆங்கிலத்தில் மட்டும் எழுதிப் போட்டிருந்தார்கள் இன்னோர் இடத்தில். அதுவே அந்த ஊர் எவ்வளவு குறைவாகக் குற்றங்கள் நடக்கும் ஊர் என்பதைச் சொல்லி விட்டது.

அஞ்சப்பர், தலப்பாக்கட்டு, சரவண பவன், முருகன் இட்லிக் கடை போன்ற கேள்விப் பட்ட எல்லா உணவகப் பெயர்களையும் காண முடிந்தது. அஞ்சப்பர் சென்று கூட்டம் அதிகம் இருந்ததால் வேறொரு தமிழ்க் கடைக்குப் போனோம். அந்தக் கடையில் செக்கச் செவேரென்று ஒரு சீனப் பெண்மணியுடன் (சீனர்கள் வெள்ளையர்களை விட வெள்ளையோ என்று தோன்றுகிறது) நம்ம ஊரில் காட்டு வேலைகள் செய்கிற நம் உறவினர்கள் போன்ற தோற்றத்துடன் ஒருவர் வந்திருந்தார். அதைப் பார்த்ததும் அந்த ஊரில் மற்றவர்களுடன் நம்மவர்களின் உறவு எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமானது. விசாரித்தேன். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஓட்டிக் கொண்டு இருக்கிறார்களாம். அந்தக் காலத்தில் நிறைய கலப்புக் கல்யாணங்கள் நடந்தனவாம். இப்போது அதெல்லாம் குறைந்து விட்டதாம். லிட்டில் இந்தியாவில் வீரமாகாளி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. கொட்டெழுத்தில் தமிழில் 'வீரமாகாளி அம்மன் கோவில்' என்று எழுதிப் போட்டிருந்ததைக் கண்டு அருளே வந்து விட்டது எனக்கு.

போக்குவரத்து நெருக்கடி என்று ஒன்றை எங்குமே பார்க்க வில்லை. அந்தச் சின்ன ஊருக்குள் (சிங்கப்பூர் ஒரு தீவு என்பது அங்கு சென்ற பின்தான் தெரிய வந்தது!) இன்னும் எவ்வளவோ இடங்கள் பயன் படுத்தாமல் மிச்சம் இருக்கின்றனவாம். இன்னும் பாதிக்கும் மேலான இடங்கள் அப்படியே மிச்சம் வைத்திருக்கிறார்களாம். ஒரு வீட்டைக் கட்டுவது போல அனுபவித்து - திட்டமிட்டுக் கட்டி வருகிறார்கள் மனிதர்கள். ஆனால், சற்றும் எதிர் பாராத ஒன்று - சென்ற இடமெல்லாம் இருந்த கூட்டம். வெளிநாடு என்றாலே நமக்கு மனதில் பதிந்து விட்டது - ஆள் நடமாட்டம் இல்லாத அமைதி. அது மேற்கு நாடுகளில் மட்டுமே என்று என் நம்பிக்கையைத் திருத்திக் கொண்டேன். பேருந்துகளில் கூட்டம் அதிகம் இல்லை. போதுமான அளவு பேருந்துகள் ஓடுகின்றன என நினைக்கிறேன். இரயிலிலும் மற்ற இடங்களிலும் கடுப்படிக்கும் அளவுக்குக் கூட்டம் (கூட்டம் பிடிப்போருக்கு அது கூடுதல் பலன்!).

ஊர் முழுக்கவும் (நாடு முழுக்கவும் என்றும் சொல்லலாம்! ஊர்தானே நாடு மாநிலம் எல்லாம் அவர்களுக்கு!!) உள்ளடக்கும் விதத்தில் எட்டு எம்.ஆர்.டி. இரயில் பாதைகள் உள்ளன. சில இடங்களில் ஒன்றை ஒன்று குறுக்கு நெடுக்காக சந்திக்கும் விதத்திலும் அமைத்திருக்கிறார்கள். இதன் மூலம் ஒருவர் முழுக்க முழுக்க இரயிலேயே பயணம் செய்து சமாளிக்க முடிகிற மாதிரி உள்ளது. ஒவ்வொரு பாதைக்கும் ஒரு நிறம் ஒதுக்கப் பட்டுள்ளது. சிவப்புப் பாதை, ஊதாப் பாதை, நீலப் பாதை, பச்சைப் பாதை, மஞ்சள் பாதை, ஆரஞ்சுப் பாதை, கறுப்புப் பாதை, கடல்நீலப் பாதை என்று. இடங்களைக் கூட பச்சைப் பாதையில் இருக்கிறதே அதுவா? சிவப்புப் பாதையில் இருக்கிறதே அதுவா? என்று அடையாளம் காண்கிறார்கள். சில பாதைகள் நேர் கோடுகளாகவும் சில சதுரமாகவும் சில வட்டமாகவும் பல தினுசுகளில் ஊரை உள்ளடக்கி இருக்கிறார்கள். இதனால் இரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு மட்டும் வாடகை அதிகம். 

இரயில் சில இடங்களில் தரைக்கடியிலும் சில இடங்களில் பாலத்திலும் போகிறது. ஊர் சமதளமாக இல்லாமல் மேடும் பள்ளமுமாக இருப்பதையே அது காட்டுகிறது. இன்னோர் அழகான அம்சம் (வசதியான அம்சம் என்று சொல்ல வேண்டும்!) என்னவென்றால், இரயிலில் ஏறவோ இறங்கவோ வேண்டியதில்லை. உள்நுழைதல் அல்லது வெளியேறுதல். அவ்வளவுதான். ஏனென்றால், நடை மேடையும் இரயிலின் தளமும் ஒரே உயரத்தில் இருக்கின்றன. நடை மேடைக்கும் இரயிலுக்கும் இடையில் விழுந்து நசுங்கிச் செத்த செய்திகள் எல்லாம் அங்கே படிக்க முடியாது. ஏனென்றால், அப்படிக் கொஞ்சம் கூட இடம் இல்லை. சில இடங்களில் மட்டும் அந்த வேலைகள் முடிவடையாமல் உள்ளன. அங்கு மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. அவ்வளவுதான். நான் ஆசைப்பட்ட படி, முதல் முறையாகத் தமிழ் அறிவிப்பைக் காதால் கேட்க முடிந்தது இரயிலில்தான். சந்தேகப் படும் படி யாராவது தென்பட்டால் இறங்கும் இடத்துக்குப் பக்கத்தில் இருக்கும் பொத்தானை அழுத்தச் சொன்னார்கள்.

எல்லா அறிவிப்புகளும் நான்கு மொழிகளில் இருக்கின்றன. ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ். பெரும்பாலும் சீனர்கள் கொண்ட நாடு. ஆனால் அவர்களுமே வீட்டில் நிறைய ஆங்கிலம்தான் பேசுகிறார்களாம். இந்த அளவுக்கு சீனர்கள் ஆங்கிலம் பேசும் ஒரே நாடு அதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். தமிழர்கள் ஏதோ பெங்களூர் போலக் குவிந்து கிடப்பார்கள் என நினைத்தேன். பார்த்தால் அப்படித் தான் தெரிந்தது. ஆனால் புள்ளிவிபரப் படி தமிழர்களின் எண்ணிக்கை பத்து விழுக்காட்டுக்கும் கீழ்தானாம். பெங்களூரில் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதனாலும் நிறையப் பேர் பயந்து போய் மறைத்துக் கொள்வதாலும் அது சரியாகத் தெரிய வருவதில்லை. சிங்கப்பூரில் தனியாகத் தெரிவதாலும் கூச்சம் இல்லாமல் காட்டிக் கொள்வதாலும் குறைவாக இருந்தும் அதிகம் போல்த் தெரிகிறது. அதற்கொரு காரணம் - மொழிக்குக் கிடைத்த அங்கீகாரம்.

அவர்கள் ஏன் நம் மொழியை அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும்? கட்டுமானப் பணிகளுக்கு மட்டும் பயன் படுத்தி விட்டு பின்னர் கழட்டி விட்டிருக்கலாமே. அவர்கள் அப்படிக் கருதவில்லை. அந்த ஊரைக் கட்டி எழுப்பியதில் நமக்கும் பங்கு இருக்கிறது என்று நம்புகிறார்கள். அதன் விளைவாக நம்மையும் அந்த மண்ணின் மைந்தராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். சீன-இந்தியக் கலப்பின் பூரணமான எடுத்துக் காட்டு சிங்கப்பூர்தான். மலாயர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். மலாய் தமிழ் போல ஒலிக்கும் பல சொற்கள் கொண்டிருக்கிறது. அவர்களுடைய மொழி ஆங்கிலத்தில்தான் எழுதப் படுகிறது. அவர்களுக்கென்று எழுத்து இல்லை என்பது வியப்பூட்டுகிறது. மதம் என்று சொன்னால், அது மும்மதங்களின் சங்கமம். சீன பௌத்தம், மலாய இஸ்லாம் மற்றும் இந்திய இந்து மதம்.


நான் போய் இறங்கிய நேரத்தில்தான் அவர்களுடைய பொதுத் தேர்தல் முடிந்திருந்தது. வழக்கம் போல், புதிய அமைச்சரவையிலும் தமிழர்கள் நிறைய இருந்தார்கள். பதினைந்து பேர் கொண்ட அவையில் நால்வர் தமிழர். துணைப் பிரதமர்களில் ஒருவர் தமிழர். அன்றுதான் சிங்கப்பூரின் தந்தை எனப்படும் - ஏற்கனவே நீண்ட காலம் பிரதமராக இருந்த - லீ க்வான் யூ, முழு சுதந்திரத்தையும் புதிய அணிக்குக் கொடுக்க விரும்புவதாகச் சொல்லி, தனக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் அமைச்சருக்கிணையான மரியாதைப் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். யார் சொல்வார் இப்படி நம்ம ஊரில்? இதெல்லாம் சேர்ந்து சிங்கப்பூர் அரசியலிலும் ஓர் ஈடுபாட்டை ஏற்படுத்தியது எனக்கு. அடுத்தடுத்துப் பத்திரிகைகள் படித்த போது புரிந்து கொண்டது - அவர்களுடைய அரசியல் நம்முடையது போலன்றி, மிகவும் தரமானது.

துணைப் பிரதமரான தர்மன் சண்முகரத்னம் இலங்கைத் தமிழராம். சாதாரணப் பட்ட ஆள் இல்லை. பெரும் பொருளியல் மேதையாம். காலியாக உள்ள பன்னாட்டு நாணய நிதிய இயக்குனர் பதவிக்குக் கூட அவருடைய பெயர் பரிசீலிக்கப் பட்டுக் கொண்டு இருந்தது. அவ்வளவு பெரிய ஆள். அங்கு சென்றிரா விட்டால் அவர் பற்றி இவ்வளவு தெரிந்திராது. அவர் பேசுவதையும் சில நேரங்கள் கவனித்தேன். அருமையாகப் பேசுகிறார். நாகரிகமாகவும்! அவரும் அங்குள்ள நிறையப் பெரிய ஆட்கள் போல சீனப் பெண்ணை மணந்து விட்டாராம். அவருடைய பிள்ளைகளை நாம் அவரளவுக்கு முழுமையாக உரிமை கொண்டாட முடியாது. அவரெல்லாம் நம்ம ஊரில் தேர்தலில் நின்றால் என்ன ஆகும் என்று எண்ணிப் பார்த்தேன். கண்ணைக் கட்டுதுப்பா... கண்ணைக் கட்டுது... பெரிய ஆளாக விரும்பும் நம்மவர்களுக்கு இதில் இருந்து கிடைக்கும் பாடம் என்ன? முதலில், இடத்தைக் காலி பண்ணு!

ஓர் ஊரே நாடாக இருப்பதால் நிர்வாகம் அவர்களுக்கு எளிதாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் கேமரா வைத்திருக்கிறார்களாம். எந்தத் தவறு செய்தாலும் உடனே பிடித்து விடுவார்களாம். அதனால்தான் அங்கே பாதுகாப்பு உணர்வு அதிகமாக இருக்கிறது. குற்றங்கள் குறைவாக இருக்கிறது. சிகரெட் துண்டை சாலையில் போட்டால் கூட பெரும் அபராதங்கள் போடுவார்களாம். அதுவும் தீவாக வேறு இருப்பதால் தப்புச் செய்தோர் தப்பவே முடியாது. கடலில்தான் குதிக்க வேண்டும்.

லிட்டில் இந்தியா மட்டும் அல்ல. எல்லா இடங்களிலுமே உணவு நமக்கு ஒரு பிரச்சனை இல்லை. எல்லா உணவகங்களும் இந்திய உணவு முறைக்கு நெருங்கிய உணவுகள் கொண்டிருக்கின்றன. சிங்கப்பூரின் உணவு முறையும் கூட சீன-இந்திய உணவு முறைகளின் பூரணக் கலப்பு எனலாம். எங்கு சென்றாலும் கோழிக்கறிதான். சைவமும் கிடைக்கிறது. போதாக்குறைக்கு அஞ்சப்பர்கள், சரவண பவன்கள், தலப்பாக்கட்டுகள், முருகன் இட்லிக் கடைகள்... இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் இந்தியர்களுக்கு வாழ எளிதான வெளிநாடு எதுவென்றால் அது சிங்கப்பூர்தான் என்று சொல்ல வேண்டும்.

ஓரிரு நண்பர்களை அழைத்துப் பேசினேன்; ஆனால் சந்திக்க முடியவில்லை. சிலரைச் சந்தித்து அளவளாவவும் முடிந்தது. பெங்களூரில் நடப்பது போல, எதிரே பார்க்காத ஒரு ஆள் எதிரில் வந்த அனுபவமும் கிடைத்தது. அது போதாதா நமக்கு - சிங்கப்பூர் நம்ம ஊர் என்று நிரூபிக்க? இது போக, பழக்கப் பட்ட முகம் போலப் பல முகங்கள் கண்ணில் படுகின்றன. நண்பர்களில் நிறையப் பேர் மிக எளிதாக நிரந்தர வசிப்புரிமையும் குடியுரிமையும் பெற்றிருக்கிறார்கள். கொஞ்ச காலம் முன்பு வரை கூவிக் கூவிச் சேர்த்துக் கொண்டார்களாம். எட்டரை விழுக்காட்டு இந்தியர் இப்போது ஒன்பதரை விழுக்காடு ஆனதும் பயம் வந்து விட்டதாம் அவர்களுக்கு. இப்போது சட்டங்கள் மூலம் உள்வருகையை இறுக்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்களாம். இதெல்லாம் என் காலத்தில்தான் நடக்க வேண்டுமா?!

அடுத்த இரண்டு நாட்களில் அமெரிக்காவில் இருந்து ஓர் ஆள் வந்து சேர்ந்தான் உடன் பணி புரிய. அமெரிக்காவை விட சிங்கப்பூரில் விலைவாசி அதிகம் என்று சொல்லி ஓர் ஆச்சர்யத்தைக் கொடுத்தான். இருவருமாக ஒரு மாலை வேளை நடை நடையென நடந்து ஊரைச் சுற்றினோம். அழகான ஊர். அழகான கட்டடங்கள். அழகான ஆட்கள் என்று சொல்ல முடியாது. அவர்களுடைய அழகுக்கு நம் கண்கள் பழக்கப் படக் கொஞ்சம் நாளாகும் போல்த் தெரிகிறது. அங்குள்ள பெண்கள் எல்லோரும் அரைக்கால்ச் சட்டைதான் (சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், அதைக் கால்க்கால்ச் சட்டை என்றுதான் சொல்ல வேண்டும்!) அணிகிறார்கள். அலுவலகத்துக்கும் அதே உடைதான். ஆனாலும் அது அசிங்கமாகத் தெரியவில்லை. பழகி விட்டால் எல்லாம் சரிதான். ஆண்களும் பெண்களும் கூச்சமில்லாமல் பொது இடங்களில் தம் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அதை நம் தமிழ்ப் பையன்களும் பெண்களும் கூடக் காப்பி அடிக்க முயல்வது எடுபடவில்லை. அதுதான் கொஞ்சம் கண்ணை உறுத்துகிறது.

கடற்கரைக்கு மிக அருகில் போய்ப் பார்க்க வில்லை. ஆனால், தினமும் கடற்கரைச் சாலையில் பயணித்ததால் அதன் அழகைத் தினமும் அனுபவிக்க முடிந்தது. கடற்கரையோரம் மணலே இல்லை எனும் அளவுக்குப் பூங்காக்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். சிறிதுதான் மணல். கடற்கரையோரம் பூங்காக்கள் அமைப்பது சாத்தியம் என்றே எண்ணியதில்லை இதற்கு முன்பு. இவ்வளவு அழகாகக் கடற்கரையை வைத்திருக்கும் இவர்களை சுனாமி எப்படி நடத்தியது என்று தெரிந்து கொள்ள ஆசை ஏற்பட்டது. விசாரித்தேன். சுனாமி சிங்கப்பூரை ஒன்றுமே செய்ய வில்லையாம். அதன் அமைவு அப்படி இருக்கிறது. சுற்றிலும் கடல் என்றபோதும், அதனை அடுத்து சுற்றிலும் நாடுகளாலும் (மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து) சூழப்பட்டு இருப்பதால், அந்நாடுகள் சிங்கப்பூரைக் காப்பாற்றி விட்டனவாம். ஒருவேளை, இவர்களுக்கு அருகில் கடலில் பூகம்பம் வந்தால் நாடு முழுமையும் காலி ஆகிவிடும்.

எல்லாமே இவ்வளவு முறையாக நடக்கும் ஊரில் விபத்துகளே நடக்காது என்று எண்ணினேன். அதைப் பொய்ப்பிக்கும் விதமாக இரண்டு மூன்று இடங்களில் ஒரு காட்சி. இன்னின்ன நாளில் இந்த இடத்தில் ஒருவர் விபத்தில் செத்தார் என்று ஆங்காங்கே சிறிய பலகை வைத்திருக்கிறார்கள். "ஒழுங்காக ஓட்டாவிட்டால் உனக்கும் இதே கதிதான்" என்று நினைவு படுத்துவதற்காக. நல்ல சிந்தனை. இதையும் நம்ம ஊரில் அறிமுகப் படுத்தலாம். அத்தகைய பெரும் விபத்துகள் நிகழ்வது பெரும்பாலும் அதிகாலை வேளைகளிலேயே. மகிழ்ச்சிக்குரிய இன்னொன்று - எவ்வளவுதான் கையைக் காட்டினாலும், விளக்குப் போட்டு உணர்த்தினாலும், அதை மதியாமல் வம்புக்கென்றே இடிக்கிற மாதிரி வந்து நிறுத்தி, முறைக்கிற மற்றும் கெட்ட வார்த்தையில் திட்டுகிற பன்றி மூஞ்சிக் காரர்களைப் பன்னிரண்டு நாட்களாகப் பார்க்கவே முடியவில்லை.

அங்கு சென்று விட்டால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் முடிவு கிடைத்து விடும் என்று எண்ணியவனுக்கு அலுவலகம் நிறையப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்தது. இந்தியாவில் கூட இப்போதெல்லாம் எந்த இடத்தில் நின்றாலும் செல்போன் சரியாக எடுக்கிறது. அங்கே அலுவலகத்துக்கு உள்ளே போய் விட்டால் பல இடங்களில் சிக்னல் கிடைப்பது குதிரைக் கொம்பு. அது ஒன்றே எனக்கு உறுதிப் படுத்தி விட்டது - இதற்கு முன்பு சென்று வந்தவர்கள் எல்லோரும் சொன்னது போல, வெளிநாடு என்பது நாம் நினைப்பதை விட சூப்பராகவும் இருக்கும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குச் சில பிரச்சனைகளும் கொண்டிருக்கும் என்று. பணியிடத்தில் இங்குள்ள ஆட்களை விடக் கேவலமாக நடந்து கொள்ளும் ஆட்களும் இருந்தார்கள் (இந்தியர்தாம்!). கூடிய சீக்கிரம் ஊர் திரும்பினால் சரி எனக் கூட நினைக்க வைத்து விட்டார்கள் ஒரு நேரத்தில். பார்க்க விரும்பியதைப் பார்த்தாயிற்று. பெரிதாக ஒன்றும் வாழ்க்கை பல்டி அடித்து விடாது என்பதும் புரிந்து விட்டது. ஊர் போய், பேசாமல் உள்ள வேலையைப் பார்த்துக் கொண்டு அங்கேயே இருப்பதாக இருந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கும் வந்து விட்டேன்.

சிங்கப்பூர் என்றாலே சிங்கத்தின் வாயிலிருந்து தண்ணீர் பாயும் அந்தப் படம்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஊர் திரும்பும் போது அதற்கு முன்பு நின்று ஒரு படம் எடுத்துச் செல்லாவிட்டால் சிங்கப்பூர்தான் வந்தேன் என்பதை யாரும் நம்ப மாட்டார்களே என்று கூட ஒரு பயம். ஆனால் அதற்கு வாய்ப்பே கிடைக்க வில்லை. என்ன செய்ய! 'வாய்ப்பு வாசல் தேடி வராது; நான்தான் அதை உருவாக்கியிருக்க வேண்டும்' என்கிற தத்துவமெல்லாம் என் சோம்பலுக்குப் புரியாது. அதை விடக் கொடுமை - இந்த ஓடி ஓடிப் படம் எடுக்கும் வேலைகளில் எனக்கில்லாத ஈடுபாடு. அதற்கும் காரணம் சோம்பல்தான். ஊர்ப்பக்கம் போனால், படித்து முடித்து இரண்டாவது வருடமே வெளிநாடு சென்று வந்த சின்னப் பையன்களின் வீடுகளில், பதிமூன்று வருடங்கள் கழித்தும் போக முடியாமல் இருந்தமையைச் சந்தேகித்ததை விட படங்கள் எடுக்காமல் வந்ததை அதிகம் சந்தேகிப்பார்கள். உண்மையா என்று உறுதி செய்து கொள்ளப் பாஸ்போர்ட்டைக் கூட வாங்கிப் பார்க்க விரும்புவார்கள். 

இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றெண்ணி, ஒருநாள் அமெரிக்காவில் இருந்து வந்த அன்பரோடு சேர்ந்து கையில் கேமராவோடு மெரீனா பே சாண்ட்சில் இருநூறு அடி உயரத்தில் உள்ள ஸ்கைபார்க் போனேன். 57 மாடிகள் தாண்டிப் போய், ஊருக்காகக் கொஞ்சம் புகைப் படங்கள் எடுத்துக் கொண்டு, அங்கே உட்கார்ந்து உணவருந்தி விட்டு வீடு (ஓட்டல்தான்) திரும்பினேன். பிரம்மாண்டமாக இருந்தது. கட்டடத்துக்குள் கடற்கழி வருவது போலக் கட்டியிருப்பது அழகாக இருந்தது. அதில் படகுகள் வேறு வைத்திருக்கிறார்கள். சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் இராட்டினம் போன்ற அமைப்பில் ஏற முடியவில்லை. அங்கு செல்ல இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் பார்த்துக் கொள்ளலாம்.

சரி, சிங்கப்பூருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று இணையத்தில் தேடினேன். கண்டிப்பாக வாயிலிருந்து தண்ணீர் அடிக்கும் சிங்கத்தின் சிலையால் அது வரவில்லை என்பது உறுதியாகி விட்டது. அப்புறம் எதனால் வந்தது? அந்தப் பெயரும் சிலையும் வந்ததன் காரணம், முதன் முதலில் இந்த ஊர்ப்பக்கம் வந்த நம் மன்னன் ஒருவன் அன்றைய அத்துவானக் காட்டுக்குள் ஒரு சிங்கத்தை பார்த்தானாம். அப்போது சிங்கபுரம் என்று இட்டதுதான் சிங்கப்பூர் என்று ஆனதாம். இது தமிழர்கள் சொல்லும் வரலாறு. அவன் வடநாட்டு மன்னன் என்பதால் வடமொழியில் சிங்கப்பூர் என்றே இட்டு விட்டான் என்பது வடநாட்டு நண்பன் ஒருவன் எழுதியிருந்த கதை. மலாய் மொழியிலும் சிங்கத்தை சிங்கா என்றுதான் சொல்வார்களாம்; புரத்தைப் புரா என்றுதான் சொல்வார்களாம். அதனால் அது மலாய்ப் பெயர்தான் என்றும் மலாய் மக்கள் நம்புகிறார்கள். அவர்கள் சிங்கப்புரா என்று அழைக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இணையத்தில் வந்து இது போன்ற நிரூபிக்கும் வேலைகளில் அதிகம் ஈடுபட்ட மாதிரித் தெரியவில்லை. ஒருவேளை அவர்களுக்கு வேலை நிறைய இருக்கலாம் என்றெண்ணுகிறேன். 

பொறுங்கள். கதையின் திருப்பம் இன்னும் வரவில்லை. அது என்னவென்றால், இதெல்லாம் நடந்து முடிந்து, பெயர் வைத்து, சிலை வைத்து, தண்ணீர் பீச்சி அடித்து, அத்தனையும் ஆன பின்பு கண்டு பிடித்திருக்கிறார்கள் - அந்த மன்னன் கண்டது சிங்கமே அல்ல; அது புலி என்று. அந்தத் தீவில் சிங்கம் எந்தக் காலத்திலும் வாழ்ந்ததில்லை என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது. நம்ம ஊராக இருந்தால், "அதனால் என்ன? நல்லது நடக்க எதுவும் தடையில்லை - தாமதமில்லை" என்றொரு தத்துவம் சொல்லி, அதற்கொரு தனிக் குழு அமைத்து, பல கோடி ரூபாய் செலவில் விழா எடுத்து, புலியூர் என்று பெயர் மாற்றிப் புரட்சி செய்திருப்பார்கள்; சிங்கபுரத்துச் சிங்கம் என்று அழைக்கப் பட்ட தலைவனை அன்றிலிருந்து புலியூர்ப் புலி என்றே அழைக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பார்கள். வடமொழியிலும் மலாய் மொழியிலும் புலியை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. புலி என்றே சொன்னால்தான் பிரச்சனை இல்லை. இல்லையென்றால், ஒரே ஊருக்கு நான்கு வெவ்வேறு பெயர்கள் இட வேண்டியிருந்திருக்கும். ஒருவேளை அதனால்கூட மாற்றாமல் விட்டிருக்கக் கூடும். எல்லோருமே தன் மொழி என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் வாய்ப்பை ஒரு தவறான பெயர் கொடுக்க முடியும் என்றால் அது அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டிருக்கக் கூடும். நாமாக இருந்தால் அந்தக் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகவே உடனடியாகப் பெயரை மாற்றியிருப்போம்.

போய் இறங்கியதுமே சொன்னார்கள் - "முதல் வேலையாகக் குடை ஒன்று வாங்கி விடு; வெயில் அடிப்பது போல்த்தான் இருக்கும்; ஆனால், எப்போது மழை பிடிக்கும் என்று தெரியாது; பிடித்தால், உங்க வீட்டு மழை எங்க வீட்டு மழையாக இராது; பெரும் மழையாக - கொடும் மழையாக இருக்கும்!" என்று. அதையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சனிக் கிழமை, வெளியில் சென்றபோது, பிடித்தது. கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் கொட்டு கொட்டெனக் கொட்டியது. அதை விடக் கொடுமை என்னவென்றால், அரை மணி நேரத்தில் எல்லா நீரும் வழிந்து எங்கோ போய் விட்டது. வெயில் அடித்தது. எல்லாம் காய்ந்து அதற்கான அறிகுறியே இல்லாமல் போய் விட்டது. மனிதர்கள் என்னமாக வடிவமைத்திருக்கிறார்கள் ஊரை. வாய்ப்பே இல்லையப்பா!

வேலைகள் முடிந்து, அமெரிக்காக்காரனை வழியனுப்பி விட்டு, இன்னொரு நாள் இருந்து விட்டு, இந்தியா வருவதற்கு முந்தைய நாளான அன்றிரவு லிட்டில் இந்தியா போய், முஸ்தபா கடைக்குப் போய், ஊருக்கு வந்தால் "என்ன வாங்கி வந்தாய்?" என்று கேட்போருக்காக சாக்லேட்டுகள் வாங்கிக் கொண்டு, இதுவரை சென்னையில் பல முறை பார்த்திருந்தும் ஒரு முறை கூட உள் நுழைந்து சாப்பிட்டிராத தலப்பாக்கட்டு கடைக்குப் போய் பிரியாணி சாப்பிட்டு விட்டு, அறைக்கு வந்து, பெட்டியைக் கட்டி விட்டு, நிம்மதியில்லாமல் தூங்கினேன். காலை எழுந்து, பூகிஸ் பக்கம் போய், நான்கைந்து கடிகாரங்கள் வாங்கிக் கொண்டு வந்தேன் (சிங்கப்பூரில் அவை விலை மலிவு என்று கேள்வி). விமான நிலையம் கிளம்பி வந்து, மதியம் போல், மீண்டும் பெங்களூர் நோக்கி வண்டியேறினேன். டாட்டா சிங்கப்பூர்! கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம். அடுத்த முறை வரும்போது இவ்வளவு சீக்கிரம் திரும்பிக் கிளம்ப மாட்டேன்.

கலாச்சார வியப்புகள்-1: ஒரு ஸ்பானிய நண்பனுடன் 3 வாரங்கள்!

கருத்துகள்

  1. படித்தேன். நன்றாக இருக்கிறது. முதல் பாகத்தை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஐயா. முதல் பாகம், ஸ்பானிய நண்பன் ஒருவனுடனான பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, வெறும் "கலாச்சார வியப்புகள்" என்ற பெயரில் சென்ற வருடம் எழுதியது.

    பதிலளிநீக்கு
  3. சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள்..நீங்கள் கூறுவது போல முன்பு தான் வெளிநாட்டு பயணங்கள் சென்று வருபவர்கள் கூறுவதை ஆர்வமுடன் கேட்டு வந்தார்கள்.. தற்போது அனைவருமே சென்று வருவதால் இது ஒரு பெரிய விசயமே இல்லை என்றாகி விட்டது.

    சிங்கப்பூரில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. தற்போது இந்தியர்கள் கூட்டம் அதிகம் ஆகி விட்டது இது இவர்களுக்கு பெரிய பிரச்சனை ஆகிக்கொண்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. @இராஜராஜேஸ்வரி- Thanks for reading and the comment!

    பதிலளிநீக்கு
  5. @கிரி- வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி. போயிருக்கும் நம்மவர்கள் சும்மா இருந்தால் நல்லது. :)

    பதிலளிநீக்கு
  6. நன்றி மிகவும் அருமையான கட்டுரை

    பதிலளிநீக்கு
  7. உங்களின் பதிவு சுடர்கள் என்னை தொடர்ந்து படிக்கச் தூண்டியது ... நானும் படிக்க ஆரம்பித்தேன் ... உங்களின் கலாச்சார வியப்புகள் அதிகம் வியக்க வைத்தது ! படித்து முடித்தவுடன் மனம் நொந்தது சீக்கரம் முடிந்துவிட்டதே என்று .... அது சிங்கபூருக்கaக அல்ல உங்களின் திறமையை இன்னும் கொஞ்சம் ரசிக்க முடியவில்லையே என்று ....

    மகிழ்ச்சியாய் இருந்தது . தல எங்க ஒளிச்சு வைப்பீங்க இவ்வளவு திறமையை....இப்படி கூட நம்ம முதல் பயணத்தை பற்றி சொல்ல முடியுமா ? சான்ஸ் லேஸ் ... இதில் நிஜமான உணர்வு தெரிந்தது ... நானும் சிங்கப்பூர் சென்றது போல் இருந்தது உங்களின் எழுத்து .

    இது வரை கருத்துகளை உங்களுக்கு தெரிவிக்காமல் இருந்தது என்னுடைய கணிபொறி அறியாமையே .... இது வரை படிப்பேன் , ரசிப்பேன் , நினைப்பேன் பாராட்ட அனால் எப்படி என்று தெரியாமல் முழிப்பேன் .... நான் ஒரு சாதாரண குடும்ப தலைவி அல்லவா கணிப்பொறி அறிவு கடினம் தானே ... அறிவு புகடியதற்கு மிகவும் நன்றி ..

    தவறாய் எதுவும் எழுதி இருந்தால் மண்ணியுங்கள்.... நீங்கள் மட்டும் அல்ல உங்களின் ரசிகர்களும்

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி சக்தி அம்மையாரே. உங்கள் பாராட்டு மழையில் குளித்து எனக்கு குளிர் காய்ச்சலே வந்து விட்டது. தொடர்ந்து படியுங்கள். இது போல என்னை அளவிலாமல் புகழுங்கள். நானும் மகிழ்ச்சி அடைவேன். :)

    பதிலளிநீக்கு
  9. Thanks Malar. I have written many. It's just a matter of time to bring them all online. :)

    பதிலளிநீக்கு
  10. http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html

    தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.

    பதிலளிநீக்கு
  11. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே! மிக்க மகிழ்ச்சியாக உள்ளது!!

    பதிலளிநீக்கு
  12. vikatan moolamaa thaan intha blog therinjathu.. romba nalla eluthi irukinga...

    பதிலளிநீக்கு
  13. Thanks nanbare! :)

    Edharkaaga appadi chonneerkal endru puriya villai... :(

    பதிலளிநீக்கு
  14. பயணக்கட்டுரை வழியாக பயணிப்பது எனக்கு பிடிக்கும். நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  15. அருமை. அதுவும் ஒருவிதத்தில் நல்ல பழக்கம்தான். கத்தியின்றி இரத்தமின்றி நடத்தப் பட்ட யுத்தம் போல. வாசிப்புக்கு நன்றி தோழி!

    பதிலளிநீக்கு
  16. It's brilliantly said!!! yes indeed I was also having a feel that I also travelled to Singapore along with you while reading... My hearty congratulations for your footprint into another blog (Vikatans')... Great! Do well.
    With regards
    Raju J R

    பதிலளிநீக்கு
  17. @Madura Beats- Thanks for reading and the comment. But, I couldn't get what you tried to say. Maybe, the message got truncated?!

    பதிலளிநீக்கு
  18. Good write up, Mr Bharathiraja!! I am here in Singapore for some years now, however, I never thought of penning down all my good and bad moments into an article. You have collated events and experiences over 12 days' stay here very aptly and vividly creating interest on the reader to read more and more. Keep it up!!

    பதிலளிநீக்கு
  19. Bharathi Raja, in general, I don't spend time in reading artices of this kind. Eventually happened to enter into yours today and you have brilliantly done man..!!.

    Keep going...

    -Shaik Faridh, Doha

    பதிலளிநீக்கு
  20. Bharathi Raja, in general, I don't spend time in reading artices of this kind. Eventually happened to enter into yours today and you have brilliantly done man..!!.

    Keep going...

    -Shaik Faridh, Doha

    பதிலளிநீக்கு
  21. What a surprise!! From same TN, staying in same Blr, I undertook my first trip to SGP on the same JUN 2011 for a same period of around 10 days...Excellent writing..I would have loved to written this - Swaminathan

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி