நவீன ஓவியங்கள் (மாடர்ன் ஆர்ட்ஸ்)

மாடர்ன் ஆர்ட் எனப்படும் நவீன ஓவியங்கள் எனக்கு எப்போதுமே புரிபடுவதில்லை. இவர்கள் ஏன் இப்படியெல்லாம் புரியாத விதமாக ஏதோதோ கிறுக்கி நம்மை ரசிக்கச் சொல்லிப் படுத்துகிறார்கள் என்று தோன்றும். அவற்றைப் பார்த்து விட்டு, "ஆகா!", "ஓகோ!" என்று சிலாகிப்போரைக் கண்டால் ஒருவித சந்தேகம். இவர்கள் எல்லாம் புரிந்துதான் இப்படி நடந்து கொள்கிறார்களா அல்லது தம்மைப் புத்திசாலியாகக் காட்டிக் கொள்வதற்காக இப்படியெல்லாம் நடிக்கிறார்களா என்று கூடத் தோன்றும். இயலாதோர் எல்லோருமே இப்படித்தானே. இயன்றவர்களின் திறமை மீதான பொறாமையை இப்படியெல்லாம் வெளிப்படுத்துவர். அதை உணர்ந்தபோது அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று துடியாகத் துடித்தேன். முடியவில்லை. சரி. ஏன்தான் இப்படியெல்லாம் வரைகிறார்கள் என்று புரிந்து கொள்ளவாவது வேண்டும் என்று முயன்றபோது, கசக்கிய மூளையில் இருந்து எனக்குக் கிடைத்த கருத்து இதுதான்...

ஆதியில் ஓவியர்களின் வேலையென்பது காண்பவை அனைத்தையும் தத்ரூபமாக வரைவதாக இருந்தது. அதாவது, இன்று கேமராக்கள் செய்த வேலையை அவர்கள் செய்து வந்தார்கள். அரசர்களும் செல்வந்தர்களும் அவர்களுடைய படங்கள் காலம் கடந்து நிலைத்து நிற்க வேண்டும் என்று அவர்களை அணுகி, பணம் கொடுத்து, வரையச் சொல்லி மகிழ்ந்தார்கள். இப்போதுதான் அந்த வேலையைச் செய்ய கேமராவும் கணிப்பொறிகளும் வந்து விட்டனவே. அவர்கள் என்ன செய்வது? அடுத்து புதிதாக ஏதாவது செய்தாக வேண்டுமே. அந்த வாழ்வியல் நெருக்கடிதான் - கேமராவால் முடியாத ஏதோவொன்றைச் செய்தாக வேண்டுமென்ற கட்டாயம்தான் இன்று நவீன ஓவியங்களில் வந்து முடிந்திருக்கிறது. அதையும் கணிப்பொறியில் வரையும் காலம் வரக் கொஞ்சம் காலம் ஆகும். அதுவரை ஓவியர்கள் இப்படியே ஓட்டலாம். அதற்குள் இன்னும் புதிய உத்திகள் ஏதாவது கண்டு பிடித்து விடுவார்கள்.

இப்படி வரையப் படும் சில படங்களைப் பார்க்கும்போது என்ன இது ஒரு குழந்தை கிறுக்குவது போலக் கிறுக்கியிருக்கிறார்களே என்று கூடத் தோன்றும். குழந்தைத் தன்மை போலப் படுகிற ஆனால் காண்போரைவிட முதிர்ந்த நிலையை அடைந்து விட்ட படைப்பாளிகள் அவர்கள். முதிர்ச்சி என்றால் கூடத் தவறாகி விடலாம். ஆனால் அவர்கள் வேறொரு சிந்தனைத் தளத்தில் இயங்குபவர்கள் என்று சொல்லலாம். அதாவது, சிலர் பேசுவதும் எழுதுவதும் நமக்குப் புரிவதேயில்லை. குழந்தை உளறுவது போலக் கூட இருக்கும். அதன் பொருள் அவர்களுக்கு அறிவில்லை என்றில்லை. அவர்களுடைய பேச்சைப் புரிந்து கொள்ளும் நுட்பம் நமக்கு இன்னும் வரவில்லை என்றே கொள்ள வேண்டும். மோனாலிசாவின் சிரிப்பில் உள்ள மர்மமே... அதாவது அந்தச் சிரிப்பில் அப்படியொரு மர்மம் இருக்கிறது என்பதே இன்னும் புரிபடாத என் போன்றோருக்கு இதெல்லாம் புரிபட இன்னும் ஏகப் பட்ட காலம் ஆகும் என நினைக்கிறேன்.

இந்த நவீன ஓவியங்களில் எனக்குப் புரிபடாத இன்னொரு விஷயம் - வருகிற பாதிப் படங்கள் நிர்வாணத்தைக் காட்டுவதே வேலையாக வைத்திருக்கின்றன. எல்லாப் படைப்புகளிலுமே ஒரு போதைக்காகச் சேர்க்கப் படும் விஷயம் போல்த்தான் இதுவுமா இல்லை வேறு ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஓவியத்தில் கரை கண்டவர்கள் இருந்தால் கருத்துரையில் விளக்குங்கள். புரிகிறதா என் மரமண்டைக்கு என்று பார்க்கலாம். இலக்கியத்தில் போலவே இதிலும் பல இயங்கள்/துவங்கள் (அதாவது இசங்கள்) இருக்கின்றன. அதாவது, நவீனத்துவம் (MODERNISM), பின்-நவீனத்துவம் (POST-MODERNISM), பதிவுத்துவம் (IMPRESSIONISM), பின்-பதிவுத்துவம் (POST-IMPRESSIONISM) போன்றவை! இலக்கியங்களைப் போலவே இங்கும் அவை என்னவென்றே புரிவதில்லை. ஆனால், அங்கு போலவே இங்கும் அவற்றால் கிரங்குபவர்கள் இருக்கிறார்கள் என்பது புரிகிறது. அவர்களில் ஒருவனாக வேண்டும் என்று ஒருபக்கம் ஆசை.

ஒரு காலத்தில் நம்மால் முடியாதது என்று எதுவுமே இருக்கக் கூடாது என்று பேராசைப் பட்டதுண்டு. அதற்காகவே நுனிப்புல் மேய்தலிலும் ஒருவித ஆர்வமும் உண்டு. பின்னொரு காலத்தில் நமக்கு ஒத்து வராததை உதறி விட்டு வருவதைப் பிடித்துக் கொண்டு போவதுதான் நல்லது என்று ஒரு ஞானோதயமும் வந்தது. அதன்படித்தான் இது போன்ற ஓவியங்களை மேலோட்டமாகக் கூடப் பார்க்க விருப்பமில்லாமல் தப்பிக் கொண்டிருந்தேன். இப்படியே விட்டு விடலாமா அல்லது மனிதனாகப் பிறந்தவன் இழக்கவே கூடாத சுகம் ஏதேனும் அதில் இருக்கிறதா?

கருத்துகள்

  1. எனக்கும் இதே கருத்துகள்தான் பாரதிராஜா.

    பதிலளிநீக்கு
  2. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. Bharathi,

    Your colleague/friend Siva here. Modern art has always surprised / confused me a lot. It started somewhere with freedom of thoughts - but today the definition is that if you UNDERSTAND it then it is NOT modern art.

    Good Blog...

    - Siva

    பதிலளிநீக்கு
  4. Thalaivare... Thanks for still reading my blog. :)

    True. I think, that's what will happen to any art form that doesn't reach the majority of people. :)

    பதிலளிநீக்கு
  5. என்ன வரையவேண்டும் என்று முதலில் தீர்மானித்துவிட்டு, பிறகு வரைவது - ஓவியம்.

    கை மற்றும் கண் போன போக்கில் முதலில் கிறுக்கிவிட்டு, பிறகு அந்த கிறுக்கல்களுக்கு ஏதாவது அர்த்தம கற்பிக்க முயலுவது - நவீன ஓவியம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி