உள்ளாட்சித் தேர்தல் - கூட்டணிக் கூத்துகள்

அருமை. அருமை. அதிமுகவின் மாநகராட்சி மேயர் வேட்பாளர்களின் பட்டியல் வந்து விட்டது. எப்போதும் போல், தைரிய லட்சுமி அம்மா கூட்டணிக் கட்சிகளுக்கு ஓர் இடம் கூட விட்டு வைக்காமல் பத்து மாநகராட்சிகளுக்கும் தன் வேட்பாளர்களை அறிவித்து விட்டார். பத்துப் பேரும் சாமியைக் கும்பிட ஆரம்பித்திருப்பார்கள். சட்டப் பேரவைத் தேர்தலில் நடந்த மாதிரி சமரசம் ஏதும் ஆகி விடக் கூடாது. அப்புறம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடும். சமரசம் ஆகா விட்டாலும் கூட வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாள் வரை அவர்கள் சாமி கும்பிடத்தான் வேண்டும். இந்த முறை சமரசத்துக்கு வாய்ப்பில்லை என்றே எனக்குப் படுகிறது. ஏன்? ஏனென்றால், போன முறை ஆட்சியைப் பிடிப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அதைத்தான் பிடித்து விட்டாயிற்றே. இன்னும் ஐந்து வருடங்களுக்கு யாரையும் மதிக்க வேண்டியதில்லை.

ஒருவேளை, சமரசம் ஆனால் எப்படி ஆகலாம்? அல்லது, ஏற்கனவே நியாயமான முறையில் முடிவு செய்திருந்தால், எப்படிச் செய்திருக்கலாம்? முன்பு போல், ஆறே ஆறு மாநகராட்சிகள் என்றால், நான்கை வைத்துக் கொண்டு இரண்டை தேமுதிகவுக்குக் கொடுக்கலாம். சிவப்புத் துண்டுக் காரர்களுக்குச் சில நகராட்சிகளைக் கொடுத்திருக்கலாம். இப்போதுதான், தமிழகத்தின் அதிவேக நகரமயமாக்கலின் புண்ணியத்தில் பத்து மாநகராட்சிகள் ஆகி விட்டனவே. ஆறை வைத்துக் கொண்டு இரண்டு தேமுதிகவுக்கும் (அல்லது ஐந்தை வைத்துக் கொண்டு மூன்று தேமுதிகவுக்கும்) கொடுத்து விட்டு, தோழர்களுக்குத் தலா ஒன்றைக் கொடுக்கலாம்.

அப்படியானால், யார் யாருக்கு எது எது? தேமுதிகவுக்கு அவர்கள் பலமாக உள்ள வட மாவட்டங்களில் இருந்து சேலம் மற்றும் வேலூரைக் கொடுத்து விட்டு, மார்க்சீயக் கட்சிக்கு கோவையையோ மதுரையையோ கொடுத்து (அதற்கு ஏகப் பட்ட பெருந்தன்மை வேண்டும். ஏனென்றால், இரண்டும் சென்னைக்கடுத்த மிகப் பெரிய ஊர்கள். இரண்டுமே அதிமுகவுக்கும் இப்போது கோட்டை!). வலது சிவப்புக்கு திருப்பூரைக் கொடுக்கலாம். மிச்சமிருக்கும் இடங்களில் இவர்கள் போட்டியிடலாம். இப்போது பெரும்பாலும் இந்த 'லாம்'களுக்கு இடமில்லை என்றே தோன்றுகிறது.

கேப்டன் இத்தனை நாளாக எதுவும் பேசாமல் சும்மா இருந்ததற்கு ஆப்பு விழுந்து விட்டது. பேசாமல் முதல் நாளில் இருந்தே எல்லாத்தையும் எதிர்த்திருக்கலாம். குறைந்த பட்சம் தப்பு என்று தெரிகிற பிரசினைகளிலாவது எதிர்ப்புத் தெரிவித்து இருக்கலாம். உள்ளாட்சித் தேர்தலில் உடைந்து விட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் ஆகி விடும் என்று பண்ருட்டிக் காரர் பேச்சைக் கேட்டுக் கொண்டு எல்லாத்துக்கும் சும்மா இருந்தது தப்பாப் போச்சு என்று இப்போதுதான் புரிந்திருக்கும். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதுதான் நினைக்க நினைக்க இனிக்கிறது. என்னவெல்லாம் நடக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

எது நடந்தாலும் நல்லதற்கே என்பார்களே. அப்படி உணர்கிறேன் இப்போது. சட்டப் பேரவைத் தேர்தலிலேயே, கூட்டணிக் குளறுபடிகளைக் கண்டு மூன்றாவது அணி அமைய வேண்டும் என்று ஆசைப் பட்டேன். அது இப்போது நடப்பது மகிழ்ச்சியே. ஏற்கனவே திமுகவும் காங்கிரசும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதும் நமக்கு நல்லதே. "உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டே!" என்கிற கதைதான் திமுக-காங்கிரஸ் கதை. இவர்களோடு சேர்ந்தது அவர்களைப் பாதித்ததா அல்லது அவர்களோடு சேர்ந்தது இவர்களைப் பாதித்ததா என்பது இந்த நிமிடம் வரைச் சரியாகப் புரியவில்லை. இப்போதும் ஊருக்குப் பயந்துதான் பிரிந்திருக்கிறார்களே ஒழிய உண்மையாகவே அல்ல. அவர்களுக்கு இவர்களுடைய நம்பர் தேவை; இவர்களுக்கு ஊழலில் இருந்து தப்பிக்க அவர்களுடைய ஒத்துழைப்புத் தேவை. எனவே, பின்னணியில் நடைபெறும் கூட்டுக் களவாணித் தனங்கள் தொடரத்தான் செய்யும்.

எப்படியிருந்தாலும் காங்கிரஸ் கட்சி ஒரு நகராட்சி கூட வெல்ல முடியாது. மாநகராட்சி பற்றி அப்புறம் பேசுவோம். அரசியலில் தமிழ் நாட்டுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சில ஊராட்சிகளில் வெல்லலாம். அதிமுக அணியின் குளறுபடிகளால், அழியப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் திமுகவுக்குக் கண்டிப்பாகக் கொஞ்சம் உயிர் கிடைக்க வாய்ப்புள்ளது. சட்டப் பேரவை முடிவுகளையும் கணக்கில் கொண்டு, தனிப்பட்ட முறையில் திமுக-அதிமுக என்று பார்த்தால் திமுக ஒரு மாநகராட்சி கூட வர வாய்ப்பில்லாதது போலவே இருக்கிறது. ஆனால் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது அணிகளின் புண்ணியத்தில் நடை பெறப் போகும் குழப்பங்களில் அவர்கள் சில மாநகராட்சிகளைக் கைப்பற்றவும் வாய்ப்பு உருவாகி விட்டதாகத் தெரிகிறது. அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அதிமுக எல்லாத்திலும் வென்று விடும். சட்டமன்றத் தேர்தலில் செய்த கொஞ்ச நஞ்ச சேட்டைகளையும் இப்போது செய்ய முடியாது என்பதால் திமுகவுக்கு மேலும் சிரமமே. ஒரேயொரு நல்ல விஷயம் - கொள்ளையடித்த காசில் நமக்குப் பங்கு கொடுக்க மாட்டார்கள் இனிமேல். போனமுறை கொடுத்ததற்குப் பலனில்லாமல் போய்விட்டதல்லவா?!

உள்ளாட்சித் தேர்தல் உள்ளூர்ப் பிரச்சனைகளின் அடிப்படியிலானது என்ற பாட்டை ஏற்றுக் கொண்டாலும் மாநகராட்சி மற்றும் நகராட்சித் தலைவர்கள் கட்சி அடிப்படையிலும் நிறைய வாக்குகள் பெறுவார்கள். எனவே, அதிமுகவைப் பொருத்த மட்டில் ஒரு மாநகராட்சியில் தோற்றாலும் அது நல்ல செய்தியாக இராது. அவர்கள்தாம் தைரியசாலிகள் ஆயிற்றே. அவர்களுக்குத்தான் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் தின்பது போலவே. முயன்று பார்க்கட்டும். ஆட்சியா கவிழப் போகிறது என்ற தெனாவெட்டில் இறங்குகிறார்கள். எதிரி சொதப்பும்போது எதுவும் செய்யாதே என்பார்கள். அந்த வேலையைத் திமுக கன கச்சிதமாகச் செய்து விடும் இப்போது. எல்லாம் சோ சொல்லிக் கொடுத்த டெக்னிக்காக இருக்கும். அப்படியே நடக்கட்டும். அவர்களே அனுபவிக்கட்டும்.

அதிமுக எப்போதுமே தெரியாத பெயர்களை அறிவிக்கிறது என்று ஒரு குறையாகச் சொல்கிறோம். ஆனால், அதுதான் அவர்களுக்குப் பலம் பல நேரங்களில். தெரிந்தவர் என்றால் அவர் செய்த திருட்டுத் தனங்களும் எல்லோருக்கும் தெரியுமே. தெரியாதவர் யோக்கியரோ அயோக்கியரோ அவருடைய சேட்டைகள் பற்றித் தெரியாது. எனவே, தெரிந்த திருடர்களுக்கு எதிராகத் தெரியாத திருடர்களை (அல்லது நல்லவர்களை!) நிறுத்தினால் வேலை எளிது. சட்டமன்றத் தேர்தலிலேயே இதைப் பல இடங்களில் உணர முடிந்தது.

திமுகவைப் பொருத்த வரை அவர்கள் எப்போதுமே எதற்காகவும் கவலைப் பட வேண்டியதில்லை. ஆட்சியில் இருந்தால், எதிர்க் கட்சியாக இருப்போர் செயல்படவே மாட்டார்கள். ஓய்வெடுக்கப் போய் விடுவார்கள். அதனால் அப்படியொன்று இருப்பதே மக்களுக்குத் தெரிய வராது. சென்ற முறை அவர்கள் பெற்ற தோல்வி அவர்களே குடும்பத்தோடு சேர்ந்து ஆட்டம் போட்டுத் தேடிக் கொண்டது. சும்மா இருந்திருந்தாலே மீண்டும் வென்றிருப்பார்கள். எதிர்க் கட்சியாக இருந்தாலும் பிரச்சனையில்லை. ஆளும் கட்சி வழிய வந்து அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அவர்கள். ஆளும் கட்சி ஆட்கள் அதற்கான வேலையில் இப்போதே இறங்கி விட்டார்கள். பாராளுமன்றத் தேர்தலுக்குள் பாதிப் பெயரைக் கெடுத்து விட வேண்டும் என்று கேரளாவில் இருந்து வந்த சோதிடர் யாராவது சொல்லியிருக்க வேண்டும். அப்படியே ஆகட்டும் இரத்தத்தின் இரத்தங்களே. வாழ்த்துக்கள்!

இப்போதைக்குக் குறைந்த பட்சம் ஐந்து அணிகள் போலத் தெரிகிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தோழர்கள் ஆகிய ஐந்து அணிகள். காங்கிரஸ் கட்சியை எவருமே கண்டு கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன். யாராவது கண்டு கொண்டால் அவர்களுக்குக் கண்டம் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். எனவே, அவர்கள் தனி அணிதான். அதுவே நமக்கும் நல்லது. பாஜக தலைமையில் ஓரணி அமையுமா அல்லது மதிமுக தலைமையிலோ தேமுதிக தலைமையிலோ பாமக தலைமையிலோ அவர்கள் அணி சேர்வார்களா என்று தெரிய வில்லை. தோழர்கள் எப்போதும் போல், காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத ஓரணியில் இருப்பார்கள். மேற் சொன்ன கட்சிகளின் ஒன்றின் தலைமையை ஏற்று இவர்களும் அணி சேர்வார்கள். பிரிந்து சென்றோர் திரும்பி வரலாம் என்று சாணக்கியர் முரசொலியில் அழைப்பு விடுவார். புத்திசாலிகள் திமுக பக்கம் போக மாட்டார்கள். அதற்கான நேரம் அல்ல இது என்று அவர்களுக்குத் தெரியும். வைகோ மட்டும் எதற்கும் ஏமாந்து போகாமல் இருக்க வேண்டும். போக மாட்டார் என்றே நினைக்கிறேன். பாமகவை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று தெரியவில்லை. நான் பிறந்ததில் இருந்தே பார்க்கிறேன். அந்த ஆள் சொல்லும் ஒரு வார்த்தையைக் கூடக் காப்பாற்றுவது கிடையாது. அதனால் இறுதி நிமிடம் வரை எல்லாக் கதவையும் திறந்தே வைக்கலாம்.

காங்கிரஸ் கட்சிக்கு பத்து பத்தாது. இருபது மாநகராட்சிகள் வேண்டும். ஆளே இல்லாத கடையில் ஆற்றுவதற்கு மட்டும் அத்தனை கும்பல்கள் இருக்கிறார்கள். இதில் ஈரோடு ஈவிகேஎஸ் கும்பலுக்குப் போகும். திருச்சி மேதாவி சிதம்பரம் கும்பலுக்கு - அதுவும் அவருடைய நெருங்கிய தோழி சாருபாலாவுக்கே போகும். கண்டிப்பாக வென்று விடலாம் என்ற நம்பிக்கையில் படிவத்தில் சில கோளாறுகளோடு சென்னையில் தங்கபாலுவின் மனைவி வேட்பு மனுத் தாக்கல் செய்வார். அதன் பிறகு என்ன நடக்கும் என்பது அவர் வீட்டுச் சின்னப் பிள்ளைக்குக் கூடத் தெரியும். ஆனால், அது ராகுல் காந்திக்குப் புரியுமா என்று தெரியவில்லை. உண்மையில் அவர்கள் ஒன்றில் கூட டெபாசிட் வாங்க முடியுமா என்பது சந்தேகமே. இன்னமும் தமிழர்கள் அதிபுத்திசாலிகள் என்ற கருத்தில் எனக்கு முழு நம்பிக்கை வரவில்லை என்றாலும் காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைக்கு அவர்கள் கொடுத்திருக்கும் இடம் அதை ஓரளவு தற்காலிகமாக உண்மையாக்கி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அழிவு ஒன்றே இந்தியாவின் எதிர் காலத்துக்கு நல்லது போலத் தெரிகிறது.

பாஜகவுக்கு வாக்கு வங்கி இல்லை எனினும், தொலை நோக்குப் பார்வையில் யோசிப்பவர்கள், அவர்களை நாடி இணைந்து கொள்வது நல்லது. அதற்கு மருத்துவர் கடுமையாக முயல்வார் என நினைக்கிறேன். மகன் நலம் பேணாத தந்தைதான் நம் மண்ணின் உண்டா? அதற்கு முன்பாக அவருடைய முன்னாள் உறவினர் பண்ருட்டி சுதாரித்து அந்த ஐடியாவைக் கேப்டனுக்குக் கொடுத்தால் மருத்துவர் குடும்பத்துக்கு ஆப்புக் கிடைக்கும். வைகோ இந்த அளவுக்கெல்லாம் யோசித்து எதுவும் செய்வாரா என்று தெரியவில்லை. எங்கள் தலைமையில் வருவோர் மட்டும் வாருங்கள் என்று காத்திருந்து கடைசியில் தனியாகவோ சில சில்லறைக் கட்சிகளுடன் சேர்ந்தோ இறங்க வாய்ப்புள்ளது. பாஜகவுடன் யார் சேர்ந்தாலும் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய நிரந்த உறவினர் தோட்டத்தில் இருப்பவரே. மற்றவர்கள் எல்லாம் தேர்தலுக்கான நண்பர்கள். கறிவேப்பிலைகள்!

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் மோதியும் அத்வானியும் தோட்டத்துக்கு வந்து பேசி எல்லாத்தையும் சரியாக நடத்தி முடித்து விடுவார்கள். அவர்கள்தானே கொள்கை ரீதியான கூட்டணி. பெரியார் வழி வந்த திராவிடக் கட்சியான அதிமுகவுக்கும் இந்து மதவாதம் பேசும் பாஜகவுக்கும் என்ன கொள்கைக் கூட்டணி என்று அப்பாவியாகக் கேட்பவரா நீங்கள்? பாவம்தான் போங்கள். திராவிடக் கட்சியின் தலைவி யார்? தினம் நூறு பூசைகள் செய்யும் பக்திப் பேரொளி. அது தப்பில்லை. பாஜகவின் - பஞ்சங் தள்ளின் தலைவியாக இருக்க வேண்டியவர் திராவிடக் கட்சி ஒன்றுக்குத் தலைவியாக இருப்பதுதான் கொடூரம். நல்ல நாடு. நல்ல கொள்கை. நல்ல மக்கள்.

பாஜகவைப் பொருத்த மட்டில் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை இப்போதே உருவாக்க முயலலாம். ஒருவரும் ஒத்து வரா விட்டால் தனியாக நின்றால் கூட அடுத்து மாநகராட்சியாகப் போகும் நகராட்சியான நாகர்கோவிலில் வென்று விடுவார்கள். கோவையில் கொஞ்சம் கணிசமாக வாக்குகள் கிடைக்கும். திமுக, காங்கிரஸ், இடதுசாரிகளின் அணிக்கு இவர்கள் போக முடியாது. அதிமுக அல்லது புதிதாக உருவாகப் போகும் ஓரணியைச் சரிக்கட்ட முயல்வார்கள். கேப்டன், வைகோ, பாமக, விசி - இவர்களில் யாருடனுமோ எல்லோருடனுமோ சேர்ந்து ஓர் அணியை உருவாக்க முயல்வார்கள். இந்த அணி பலமானதாக இருந்தாலும் நல்லதே. மதவாதம் நல்லதில்லை. ஆனால் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இவர்கள் பரவாயில்லை. கொஞ்சம் (கொஞ்சம்தான்!) கைச்சுத்தம் கூடுதலாக இருக்கும்.

இடதுசாரிகளுக்கு எப்போதுமே இழப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போதும் அப்படியே. புதிய கூட்டணிகளில் சேர்ந்தால், அவர்கள் பலமாக உள்ள கோவை, மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளைக் கேட்டுப் பெறலாம். வெல்ல முடியுமா என்பது வேறு கேள்வி. பலமான கூட்டணிகளில் இருந்தால், நகராட்சிகள் மட்டுமே கிடைக்கும். போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிக்கு மாடாக வேலை பார்ப்பதை விட  போட்டியிட்டு மக்களுக்குச் சின்னத்தை நினைவு படுத்துவதே மேல் அல்லவா? இப்போதைய நிலவரப்படி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய நான்கு அணிகளிலும் சேர முடியாத அணி இவர்களுடையதே. வெட்கத்தை விட்டுத் தோட்டத்துக்குப் போய் பேசிப் பார்க்கலாம். அதைச் செய்யவும் செய்வார்கள். திரும்பவும் அவமானப் பட்டே திரும்ப வேண்டும். அதற்குப் பதிலாக புதிதாக ஏதாவது முயன்று பார்க்கலாமே. கொள்கை ரீதியாகக் கொஞ்சமும் ஒத்து வராத ஒருவரோடு கிடந்து தினம் தினம் போராடுவதை விட பிரிந்து செல்வதே மேல். இதில் இரு சிவப்புகளும் ஓரணியில் இருக்க வேண்டும் என்கிற சவால் வேறு இருக்கிறது. அதற்கே ஏகப் பட்ட போராட்டம் நடத்த வேண்டும். மதிமுக, பாமக, விசி ஆகிய மூவரும் சேர்ந்து ஈழ ஆதரவு அணி அமைத்தால், அதில் வலது அளவுக்கு இடது ஆர்வம் காட்டாது.

இந்த ஈழ ஆதரவு அணி அமைந்தால் கொள்கை ரீதியான அரசியலுக்கு அடித்தளம் போடும் படியாக இருக்கும். எதிர் காலத் தமிழக அரசியலுக்கு அது நல்லது. ஆனால், மருத்துவரை நம்பி எதைச் செய்தாலும் சோற்றில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்குச் சமம். கொள்கையும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது. எல்லோருமே மாற்றி மாற்றிப் பேசுவோர் என்றாலும் இந்த அளவுக்குக் கேவலமாக மாற்றி மாற்றிப் பேசும் ஓர் ஆளை நான் இதுவரை பார்த்ததில்லை. ஈழ ஆதரவு என்பதும் மனப்பூர்வமானதில்லை. மகனுக்கு ஏதாவது ஏற்பாடு செய்து கொடுப்பதாக யாராவது சொல்லி விட்டால் அதற்காக எதையும் விட்டுக் கொடுப்பார். எதையும் என்றால், மானமும் அதில் அடக்கம். ஆனால், திராவிட இயக்கங்களின் தோல்வியை இந்தக் கூட்டணிதான் சரிசெய்ய முடியும். அதற்கான அச்சாரம் போடப் பட்டால் பெரிதும் மகிழ்வேன்.

ஆனால், அதில் ஏகப் பட்ட சிக்கல்கள் உள்ளன. யார் தலைமையில் கூட்டணி என்று வந்தால், நாங்கள் தான் பெரிய கட்சி என்று அடம் பிடிக்கவும் செய்வார் மருத்துவர். வைகோ அதற்கு விட்டுக் கொடுக்க வேண்டும். விட்டுக் கொடுப்பது ஒன்றும் அவருக்குப் புது விஷயமில்லை. உள்ளாட்சித் தேர்தல் என்பதால் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒன்று சேரலாம். பார்க்கலாம். என்ன செய்கிறார்கள் என்று. சென்னையையும் சேலத்தையும் பாமகவுக்குக் கொடுத்து விட்டு, வேலூரைத் திருமாவுக்குக் கொடுத்து விட்டு, மற்ற ஏழிலும் மதிமுக போட்டியிடலாம். இடதுசாரிகளும் வந்தால் அவர்களுக்கு அவர்களுடைய மூன்று விருப்பங்களான கோவை, மதுரை மற்றும் திருப்பூரில் இரண்டைக் கொடுத்து விட்டு ஐந்தில் போட்டியிடலாம்.

வைகோவுக்கும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இனியும் அவர் அதிமுக அல்லது திமுக பின்னால் போனால் ஏற்கனவே செல்லாக் காசாக இருக்கும் அவர் எதுக்கும் உதவாத கிழிந்த கேசாகி விடுவார். காங்கிரஸ் கட்சியுடன் கண்டிப்பாகச் சேர மாட்டார். அவர் இதுவரை பேசி வருவதைப் பார்த்தால் தேமுதிகவுடனும் சேர்வதில் விருப்பம் இல்லாதவர் போலத் தெரிகிறது. அவருக்கு இருக்கும் இரண்டே ஆப்ஷன்கள் - பாஜகவும் தோழர்களும். அதாவது, கொள்கை ரீதியாக எதிரெதிர்த் துருவங்களாக இருக்கும் வலது சாரிகளும் இடது சாரிகளும். கொடுமையைப் பாருங்கள் - எதிரெதிர்க் கொள்கைகள் கொண்ட இரு அணிகளில் சேர முடிந்த ஒருவரால், கொள்கைகளே அற்ற அரசியல் செய்யும் மற்றவர்களுடன் சேர முடியவில்லை. நம் அரசியல் பற்றி நினைத்தாலே தலை சுற்றுகிறது. இல்லையா?

தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் பெரிதாக மரியாதை இராது இம்முறை.
காலத்துக்கும் சட்டமன்றத் தேர்தலில் பெற்றதே அவர்களின் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும் என நினைக்கிறேன். அதிமுகவுடனான சண்டையை அடுத்த வாரமே ஆரம்பிக்கலாம். அதுதான் கட்சியை வளர்க்க வழி. எனக்கு இருக்கும் ஒரே பயம் - பழைய நினைவு திரும்ப வந்து, பண்ருட்டி குண்டக்க மண்டக்க ஏதாவது சொல்லிக் கொடுத்து, செத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியோடு போய் இவர்கள் சேர்ந்தால், இவர்கள் அழிந்து போவார்கள் என்றாலும் அவர்களுக்குக் கொஞ்சம் குளுக்கோஸ் கொடுத்தது போலாகி விடும். இவர்கள் அழிவதில் நமக்கு இழப்பில்லை. ஆனால் அவர்கள் உயிர் பெறுவதில் நமக்கு உயிரிழப்பே நேரலாம். எனவே, அது மட்டும் நடந்து விடக் கூடாது.

தோட்டத்தில் அவமானப் பட்டவர்கள் மட்டும் ஓரணியாக நிற்கலாம். சென்னை, வேலூர், சேலம் ஆகிய வட மாவட்ட ஊர்களை தேமுதிக வைத்துக் கொண்டு மற்றவற்றில் பிரிக்கலாம். இடதுசாரிகளுக்கும் அவர்களுக்கு வேண்டிய கோவை, மதுரை மற்றும் திருப்பூர் கிடைக்கும். மமக மற்றும் புதிய தமிழகத்துக்கும் நெல்லையையும் தூத்துக்குடியையும் கொடுக்கலாம். சரத் குமார் கண்டிப்பாக வெளியே வர மாட்டார். இரட்டை இலைச் சின்னத்தில் நின்றது ஒரு காரணம். சட்டமன்றத்துக்குள் கூட்டிச் சென்றதுக்காக அம்மாவைப் பிரதமர் ஆக்காமல் அந்த அணியை விட்டு வெளியேற மாட்டேன் என்று அவர் எடுத்துக் கொண்டிருக்கும் சபதம் ஒரு காரணம். கருப்பு எம்ஜியார் என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருப்பதில் எனக்கு அவ்வளவு கோபம் வருவதில்லை. ஆனால், இவர் சிவப்புக் காமராஜர் என்று சொல்லிக் கொள்வதைக் கேட்டால் கொதிக்கிறது இரத்தம். காரணம் - எனக்குக் காமராஜர் மேல் இருக்கும் அளவிலாத மரியாதை.

கொங்குக் கட்சி இந்த முறை புதிய கூட்டணிகளில் ஒன்றில் சேர்வது நல்லது. தோட்டத்தில் மரியாதை கிடைக்காது. அறிவாலயம் போனால் மக்களிடத்தில் மரியாதை கிடைக்காது. அப்ப எது நல்லது? புதிதாக ஒரு கூட்டம் பிடிப்பதுதானே. எதுவும் இல்லாவிட்டால், ஈரோடு மட்டுமாவது கிடைக்கும். எங்கு நின்றாலும் சாதிக் கட்சி என்பதால் மற்றவர்கள் யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். அதை மறந்து வாக்களிக்கும் அளவுக்கு அலை எதுவும் இல்லை உள்ளாட்சித் தேர்தலில். இவர்கள் மட்டுமல்ல; எல்லாச் சாதிக் கட்சிகளுக்குமே அதே நிலைதான் நேரும். அடுத்தவன் கண்ணை உறுத்தவே கட்சி ஆரம்பிக்கும் ஒரு கூட்டம், அவர்களுடைய ஓட்டை மட்டும் எதிர் பார்த்தால் எப்படி?

ஒவ்வொருவரும் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத் தயாரானால் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக தவிர்த்து அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு பலமான அணி அமைக்கலாம். நான் சட்டமன்றத் தேர்தலில் ஆசைப்பட்ட மூன்றாவது அணி. அது அமைவது மிக மிகக் கடினம். அமைந்தால் சூப்பர். கேப்டனைப் பிடிக்காத பாமக, விசி, மதிமுக ஆகிய மூவருமே அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு அவரும் நிறைய இறங்கி வர வேண்டும். நான் எம்ஜியார் மாதிரி என்று சொல்லிக் கொண்டிருந்தால் தொப்பி மட்டும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். சரக்கு அடிப்பதையும் கொஞ்சம் குறைத்தால்தான் இவர்கள் பக்கத்தில் வருவார்கள். இல்லையேல், பார்க்கவே பயந்து போய் ஒளிந்து கொள்வார்கள். இந்தக் கனவு அணி அமைந்தால், சென்னை மற்றும் மதுரையை தேமுதிகவும் திருச்சியை மதிமுகவும் கோவையை மார்க்சீயக் கட்சியும் சேலத்தை பாமகவும் திருப்பூரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேலூரை விடுதலைச் சிறுத்தைகளும் ஈரோட்டைக் கொங்குக் கட்சியும் நெல்லையை மமகவும் தூத்துக்குடியைப் புதிய தமிழகமும் எடுத்துக் கொள்ளலாம். இது நடக்கவே நடக்காது. இது மட்டும் நடந்தால் லீவ் போட்டு வந்து இந்தக் கூட்டணிக்குக் கொஞ்ச காலம் வேலை பார்க்க நான் தயார்.

நம் மக்களுக்கு நிறைய ஆப்ஷன்களைக் கொடுத்துப் பழக்க வேண்டியுள்ளது. இப்போதே அதைச் செய்தால் பின்னர் சரியான நேரத்தில் பயன்பட வாய்ப்புள்ளது. அதற்கு இதை விடச் சிறந்த பயிற்சிக் களமோ காலமோ இனிக் கிடைக்காது. அதனால் இந்த வாய்ப்பை எல்லோரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். இல்லாவிட்டால், மூன்றாவது அணி பற்றிப் பேசினால், காலமெல்லாம், "அதெல்லாம் ஒத்து வராதுப்பா!" என்றுதான் கதை சொல்வார்கள்.

* எது என்ன ஆனாலும் சென்னையில் சைதைக்காரர் வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை. சட்டப் பேரவைத் தேர்தலின் போதே அவரைப் பற்றிக் கேள்விப் பட்ட பிறகு அவர் கண்டிப்பாகத் தமிழக அரசியலில் முக்கிய இடம் தரப்பட வேண்டிய ஆள் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அதிமுகவின் பட்டியலில் நான் கேள்விப் பட்ட ஒரேயோர் இன்னொரு பெயர் மதுரையில் அறிவிக்கப் பட்டிருக்கும் பெயர் - ராஜன் செல்லப்பா. ஆனால், அவர் எப்படிப் பட்டவர் என்று தெரியவில்லை. மற்றவர்கள் புதியவர்கள் என்றில்லை. நான் கேள்விப் பட்டதில்லை. அவ்வளவுதான்.

கருத்துகள்

  1. தோழர்! சிறப்பான அலசல். எந்த கட்சிக்கு வாக்களிப்பதும என்று திக்கு தெரியாமல் இருக்கும் என் போன்றவர் தமிழ் ஆர்வலர்களின் எண்ணமிது!

    பதிலளிநீக்கு
  2. நன்றி தோழரே! நல்லதே நடக்கும் என நம்புவோம். அதற்கு மேல் நம் கையில் என்ன இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. Alliances, possibilities, calculations of parties- you have analysed them all nicely. Looks like it is more complicated than Jalebi! I liked your dig at Thankabalu and PMK. But I am not sure whether BJP could be a serious player in the elections.

    பதிலளிநீக்கு
  4. Thank you, sir. Yeah, it's more complicated than it looks. Yes, BJP doesn't have any role to play in this election unless someone farsighted joins them keeping the 2014 outcomes in mind.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி