தற்கொலை

ஏதோ விதமாய்
இருக்க நினைத்து
எவருமே ஒத்து வராமல்
எவருக்குமே ஒத்து வராமல்
எதுவுமே செய்ய முடியாமல்
பேசக்கூட ஆளில்லாமல்
கேட்கக் கூடக் காதில்லாமல்
விளிம்பு நிலைக்குத் தள்ளப் பட்டு
விரக்திப் பட்டவர்கள்
எல்லாம் முயன்று
எதுவும் சரி வராமல்
எடுக்கும் இறுதி முடிவு

வாழ முடியாதவன்
கோழை எனும் கூட்டத்தில்
வீழ முடிந்தவன்
வீரன் என்று விவாதித்தவர்கள்
விரும்பி நாடிய முடிவு

மனம் பொறுக்காமல்
மாரடைப்பில் மாள்வது மட்டும்
மன தைரியமா?
மாவீரமா?  - என்று
மாற்றி யோசித்தோர்
மனமார ஏற்ற முடிவு

மா-ரண வேதனையைவிட
மரண வேதனை மேல் எனும்
கருணைக் கொலை மட்டும்
காருண்யமென்றால்
வலி பொறுக்காமல்
வலியப் போய் மாய்த்துக் கொளும்...
வதை தாங்காமல்
கதை முடித்து மடிந்து கொளும்...
தற்கொலை எப்படித் தவறாகும்? - என்று
தர்க்கம் பேசியோர்
தவறாக எடுத்த முடிவு

உயிரை ஒழித்துக் கொள்ளும்
உரிமை இல்லையெனில்
வாழ்வை வருத்திக் கொள்ளும்
வசதியை மட்டும் எமக்கு
வழங்கியது யார்? - என்று
வழக்காடியவர்கள்
வழியின்றி வரவேற்ற முடிவு

முடித்துக் கொள்ள எடுத்த முடிவு...
ஒருவருக்கு முடித்து வைத்து
பலருக்குத் தொடங்கி வைத்திருக்கிறது...
முடிவே இல்லாத துயரக் கணக்குகளை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி