கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (5/6)


மொழிப் பிரச்சனை
தமிழகத்தை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நான்கு பகுதிகளாகப் பிரித்தால் அதில் தெற்குதான் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருக்கும். வடக்கு தெற்கை விட மோசம் என்றாலும் சென்னை என்கிற ஒரு மாநகரம் இருக்கும் வசதி அதை வடக்கே சரிக்கட்டி விடுகிறது. மேற்குப் பகுதியான கொங்கு மண்டலம் எப்போதுமே வளம் நிறைந்த பகுதி. தொழில் வாய்ப்புகளும் கல்வி வாய்ப்புகளும் மிகச் சிறப்பாக இருக்கும் பகுதி. கிழக்குப் பகுதி என்று ஒன்று இல்லை. அதற்குப் பதில் காவிரி டெல்டாப் பகுதியான திருச்சி-தஞ்சாவூர்ப் பகுதியை எடுத்துக் கொண்டால், அவர்களும் வளமான வாழ்க்கை முறையும் நிறையக் கல்வி வாய்ப்புகளும் கலையார்வமும் கொண்டவர்கள். மதுரையும் அதற்குக் கீழே இருக்கும் தென் பகுதியும் சிறப்பான கல்வி வாய்ப்புகள் அற்ற பெரும்பாலும் கிராமப் புறங்களைக் கொண்ட வறண்ட பகுதி. இந்தியாவிலேயே பெரிய கிராமமான மதுரைதான் அவற்றின் தலைநகரம். மதுரையை என்றுமே மாநகரம் என்ற கணக்கில் சேர்க்க முடியாது. தென் தமிழகத்து மக்கள் அவர்களுக்கென்று பிடிவாதமான ஒரு வாழ்க்கை முறை கொண்டவர்கள். புதுமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வரவே வராது. சில இயல்பான திறமைசாலிகள் தவிர்த்து ஆங்கில வழி படிக்கும் மாணவர்களுமே கூட ஆங்கிலத்தில் திணறுவோர்தான்.

பள்ளியிலேயே ஆங்கில வழி கற்று கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மிக மிகக் குறைவு. அந்த வசதி சில நகரங்களில் மட்டுமே இருந்தது. எந்த வகுப்பிலும் தமிழ் வழி கற்ற மாணவர்கள்தாம் பெரும்பான்மையாக இருப்பர். எங்கள் வகுப்பில் அதிக பட்சமாக இருபத்தி நால்வரில் ஆறு பேர் ஆங்கில வழி படித்து வந்தவர்கள் இருந்தனர். மற்றவர்கள் அனைவருக்கும் முழுமையாக ஆங்கிலத்தில் பேசினால் ஒரு வாக்கியம் கூட ஒழுங்காகப் புரியாது. பள்ளியில் இருந்து கல்லூரி செல்லும்போது சந்திக்க நேரிடும் மிகப் பெரிய பிரச்சனை இதுதான் என்று பள்ளிக் காலத்திலேயே கேள்விப் பட்டிருந்தாலும் அதை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க வில்லை. நான் படித்த பள்ளி ஓரளவு பெரிய - தரமான பள்ளி என்பதால் அப்போதே ஓரளவுக்கு ஆங்கிலத்தை வளர்த்துக் கொள்ள முயல ஆரம்பித்திருந்தேன். கிரிக்கெட் கிறுக்கு வேறு இருந்ததால் ஆங்கில இதழ்களில் கிரிக்கெட் செய்திகள் படிப்பதிலேயே ஓரளவு (ஓரளவுதான்!) அது வளர்ந்தது. முதல் நாள் படித்த போது ஸ்கோர் போர்ட் தவிர எதுவுமே புரியாதது இன்னும் நினைவிருக்கிறது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளும் வாக்கியங்களும் புரிய ஆரம்பித்தது. பின்னர் கல்லூரி வந்தபோது அது ஓரளவு உதவவும் செய்தது.

எங்கள் கல்லூரியில் இருந்த நூலகம் இதுவரை நான் பார்த்த மிகப்பெரிய நூலகங்களில் ஒன்று எனலாம். கல்லூரிக்கு வந்ததும் முழுமையாக ஆங்கிலத்திலேயே இருக்கும் பெரும் பெரும் புத்தகங்களைப் பார்த்து மிரண்டு போனோம். அதுவரை புத்தகம் என்றாலே தமிழில் மட்டுமே பார்த்துப் பழகியவர்கள் நாம். நல்ல வேளையாக (!) வகுப்பாவது தமிழில் நடத்தினார்கள். இல்லாவிட்டால், ஊமைப் படம் பார்ப்பது போல ஆகியிருக்கும். படித்து முடித்து வேலை தேடி வந்தபோது வேறு விதமாக நினைத்தோம். முதலில் சில காலம் புரியாவிட்டாலும் பரவாயில்லை என்று பிடிவாதமாக அவர்கள் ஆங்கிலத்திலேயே பேசியிருந்தால் மூன்று வருடம் படித்து முடிக்கும் முன் ஓரளவு தயாராகி இருக்கலாமே என்று தோன்றியது. முதல் நாள் ஒரு நாள் மட்டும் எங்கள் ஆசிரியர் ஒருவர் முழுக்க ஆங்கிலத்தில் பத்து நிமிடங்கள் நடத்தினார். எல்லோரும் பேந்தப் பேந்த விழித்ததைப் பார்த்து விட்டு, "என்னடே!" என்று சிரித்தார். "சார், இதெல்லாம் எங்களுக்கு ஒண்ணுமே புரியாது சார்!" என்று எல்லோரும் பொங்கி வழிந்தார்கள். அத்தோடு அவரும் தமிழராகி விட்டார். அவரும் இதை அசராமல் ஒவ்வொரு வருடமும் செய்து பார்ப்பார் என நினைக்கிறேன். இதெல்லாம் இப்போது மாறியிருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. இப்போதெல்லாம் இளைய தலைமுறை மாணவர்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கிறது. கிராமங்களில் கூட ஆங்கில வழிக் கல்வி அதிகமாகி விட்டது. நிறைய ஆங்கிலப் படங்கள் பார்க்கிறார்கள். அமைதி... அமைதி... "ஆங்கிலம் மட்டும்தான் தன்னம்பிக்கை கொடுக்குமா?" என்ற கூச்சல் கேட்கிறது. இப்போதைக்கு அது சம்பந்தப் பட்ட தன்னம்பிக்கை பற்றி மட்டுமே பேச்சு. ஆகவே மற்ற பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டியதில்லை.

பெரும்பாலும் தமிழ் வழி கற்று வந்த மாணவர்கள் முதலாமாண்டு முழுக்க பெரும்பாலும் பின் தங்கியே இருப்பார்கள். இரண்டாம் - மூன்றாம் ஆண்டுகளில்தான் ஒரு வழிக்கு வருவார்கள். எங்கள் பல்கலைக் கழகத்தில், கல்லூரியில் சேர்ந்ததும் முதல் மாதத்தில் ஒரு வாரம் முழுக்க, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குத் தாவ வசதியாக இருக்கும் படி இணைப்புப் படிப்பு (BRIDGE COURSE) என்றொன்று நடந்தது. அந்த ஒரு வாரம் நல்ல அனுபவம் என்ற போதும் யானைப் பசிக்கு சோளப் பொறி என்கிற மாதிரி பத்துப் பதினைந்து வருடப் பழக்கமின்மையை ஒரு வாரத்தில் எப்படிச் சரிசெய்ய முடியும்? எங்களோடு ஆங்கில இலக்கிய மாணவர்களும் இருந்தார்கள். அவர்கள்தாம் ஆங்கில இலக்கியம் படிப்பவர்களே என்று அவர்களிடம் ஏதாவது உதவிக்குப் போனால், "மக்கா, இந்தக் கிண்டல்தானே வேணாங்கிறது. நானே நல்ல கோர்ஸ் எதுவும் கிடைக்காமல் இதுக்கு வந்திருக்கிறேன். இதிலும் நீங்கள் இப்படியெல்லாம் தொல்லை கொடுத்தால் நான் எங்கே போவேன்?" என்பார்கள் (ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் யாரும் பொசுக்கென்று இதற்காகக் கோபப் பட்டு விடாதீர்கள். நான் படித்த காலத்தில் நடந்த உண்மையைச் சொல்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி, உயர்வு-தாழ்வு பற்றியெல்லாம் பேசி இல்லாத பிரச்சனை எதையும் உண்டாக்கி விடாதீர்கள்!).

பழைய மாணவர்கள் யார் வந்தாலும் அவர்களை ஒவ்வொரு வகுப்புக்கும் அழைத்துச் சென்று பேச விடுவார்கள். முக்கியமாக, மூன்றாம் ஆண்டு மாணவர்களிடம் அவர்களுடைய அனுபவங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ளச் செய்வார்கள். நான் படித்த காலத்தில் அது போல மூன்று - நான்கு பேர் வந்திருப்பார்கள். அவர்கள் எல்லோருமே சொன்ன ஒரு முக்கியமான அறிவுரை இதுதான் - "படித்து முடித்ததும் இங்கே இராதீர்கள். ஊரில் இருக்கும் வரை உருப்படவே முடியாது. அப்படி உருப்பட்டவர்கள் யாருமே கிடையாது. முன்னுக்கு வர விரும்பினால், உடனடியாகக் கிளம்பி பெங்களூரோ சென்னையோ போய் விடுங்கள். நம்ம ஆட்கள் சென்றவுடன் மாட்டுவது ஆங்கிலம் பேசுவதில்தான். அதில் இருந்து வெளிவந்து மற்றவர்களுடன் சரி சமமாகப் போட்டி போடும் நிலைக்கு வரவே பல வருடங்கள் ஆகும். பாடத்தை ஒழுங்காகப் படிக்கா விட்டால் கூடப் பரவாயில்லை. ஆங்கிலம் நன்றாகப் பேசப் பழக ஆரம்பியுங்கள். திறமையான கிராமப் புற மாணவனை விட சராசரி நகர்ப்புற மாணவன் எளிதில் முன்னுக்கு வந்து விடுவான். அதைத் தவிர்க்க ஒரே வழி - நன்றாக ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்வதுதான்!". இந்த அறிவுரை ஆணி வைத்து அடித்தது போல மனதில் பதிந்து விட்டது. இன்றும் ஊரில் இருந்து, "வேலை வாங்கிக் கொடுங்கள்!" (அதென்ன கத்தரிக்காயா?) என்று அழைப்பவர்களிடம் எல்லாம் நான் சொல்கிற அறிவுரை அதுதான். "முதல் வேலை, ஊரைக் காலி பண்ணு. அப்புறமா எனக்குக் கால் பண்ணு!".

நாமும் ஒருநாள் கல்லூரிக்குப் போய், நாம் உருவான அதே இடத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய தலைமுறை மாணவர்கள் மத்தியில், நம் அனுபவங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு ஒரு பெரும் உரை நிகழ்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் அது நடந்த பாடில்லை. கண்டிப்பாக வாழ்நாளில் ஒருமுறை செய்து விட வேண்டும். தொழில்நுட்பம் வளர்கிற வேகத்தைப் பார்த்தால், கூடிய சீக்கிரம் அதையே வீடியோ கான்பரன்சில் செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என நினைக்கிறேன். பார்க்கலாம்.

கணிப்பொறியியல்
மனித மொழிகளில் மட்டும் எங்களுக்குப் பிரச்சனை இருக்கவில்லை. கணிப்பொறிகளின் மொழிகளோடும் பிரச்சனைதான். இப்போதெல்லாம் மேற்கு நாடுகளில் வந்து விட்ட ஒரு கண்டுபிடிப்போ தொழில்நுட்பமோ பெரு நகரங்களில் வாழும் நமக்கு உடனடியாக வந்து விடுகிறது. குறைந்த பட்சம் வசதியான ஆட்கள் சிலருக்காவது அது உடனடியாகக் கிடைத்து விடுகிறது. அதே வேகத்தில் கூடிய சீக்கிரமே கிராமப் புறங்களில் இருப்போருக்கும் வசதியற்றோருக்கும் கூடக் கிடைத்து விடுகிறது. அப்போது அப்படியில்லை. பெங்களூர், சென்னை போன்ற ஊர்களில் கணிப்பொறி என்றாலே அது விண்டோசில்தான் (WINDOWS) ஓடியது. ஆனால் திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்கு அது வந்திருக்க வில்லை. எனவே எங்கள் கல்லூரியிலும் டாஸ் (DOS) என்ற பழைய பஞ்சாங்கம்தான் ஓடிக் கொண்டிருந்தது. படிப்பை முடித்து விட்டு, சென்னையும் பெங்களூரும் வந்து வேலை கேட்டால், "விண்டோசே தெரியாதா?! அப்புறம் கணிப்பொறியியலில் என்ன பிடுங்கினாய்?" என்று நம்பிக்கையே இல்லாமல் ஏற இறங்கப் பார்த்தார்கள். அவர்களுக்கெல்லாம் எங்கள் கதையைச் சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை. சில விபரமான பையன்கள் வேலை தேட ஆரம்பிக்கும் முன்பு தேர்வுக்குப் பிந்தைய விடுமுறையில் பெரு நகரங்களுக்கு வந்து அவற்றைக் கற்றுக் கொண்டார்கள். அது கை கொடுத்தது. நல்ல வேளையாக அடுத்த ஆண்டோ அதற்கடுத்த ஆண்டோ எங்கள் கல்லூரியில் புத்தம் புதிய கணிப்பொறிகள் வந்து இறங்கி விட்டன என்று கேள்விப் பட்டோம். இல்லாவிட்டால், எங்கள் இளைய தலைமுறைகளின் பாடு ரெம்பவும் திண்டாட்டமாகி இருக்கும்.

அது அடிப்படைக் கணிப்பொறியியல் செயல்பாட்டிலேயே இருந்த சிக்கல் என்றால், அதை விடச் சிக்கலான சிக்கல்களும் இருந்தன. கணிப்பொறி மொழிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் (LANGUAGES AND TECHNOLOGIES) என்று சில இருக்கின்றன. அதாவது, நாங்கள் சந்தைக்கு வந்தபோது சந்தையில் சூடாக ஓடிக் கொண்டிருந்தது - VISUAL BASIC, ORACLE என்று இரண்டு தொழில்நுட்பங்கள். இவற்றின் ஆனா ஆவன்னா கூடத் தெரியாமல்தான் எங்களில் பெரும்பாலானோர் வந்து சேர்ந்தோம். நாங்கள் அதற்குப் பத்து-இருபது வருடங்களுக்கு முந்தைய BASIC, FORTRAN,COBOL, PASCAL, மற்றும் C ஆகிய மொழிகளைப் படித்துக் கொண்டு வந்தோம். இதில் COBOL மற்றும் C-யாவது கொஞ்ச நஞ்சம் புழக்கத்தில் இருந்தது. மற்றவை எதற்கும் பயன்படாதவை. C++ என்று ஒன்று கூடுதலாகப் படித்தோம். அதிலும் என் போன்ற அரைகுறைகளுக்குப் பிரயோசனமில்லை. C மற்றும் C++ ஆகிய இரண்டுமே, வேதியியல் ஆய்வுக் கூடத்தில் பொடிகளையும் அமிலங்களையும் போட்டுச் செய்த ஆய்வுகளைப் போலவே மித மிஞ்சிய அறிவாளிகளுக்கு மட்டுமே பயன்படும் பாடங்கள். பிழைப்புக்கு ஒரு வேலை தேடிக் கண்டு பிடித்து நிம்மதியாக அமர்ந்து விட வேண்டும் என்று ஆசைப் படுபவர்களுக்கு அவற்றால் ஒரு பயனுமில்லை.

நாங்கள் BASIC படித்தபோது PASCAL, நாங்கள் PASCAL படித்தபோது C++, நாங்கள் C++ படித்தபோது எங்களுக்குப் புரியாத வேறு ஏதோ ஒன்று என்று எப்போதுமே எங்களை விடப் பல வருடங்கள் முன்னால் இருந்த மணிகண்டன் என்கிற உன்னதப் பிறவிதான் எங்கள் செட்டிலேயே எல்லாவற்றுக்கும் தயாராக வந்து இறங்கிய ஒரேயொரு கலக்கல் ஆசாமி. அவன்தான் எங்கள் எல்லோருக்குமே பெரிதளவு வழிகாட்டி. ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்கும் அளவுக்குப் படிப்பாளி அல்ல அவன். ஆனால் முதல் வேலையிலேயே கம்பெனியின் முதலாளி வரை திரும்பிப் பார்க்க வைத்த திறமைசாலி. தேவைக்கும் அதிகமான பூரணத்துவவாதி (PERFECTIONIST). நம் கல்வி முறை திறமைசாலிகளைச் சரியாக அடையாளம் காணும் ஆற்றல் அற்றது என்பதற்கு என்னிடம் இருக்கும் ஆயுட்கால எடுத்துக்காட்டு அவன். இப்போதும் நாங்கள் யாருமே கற்பனை கூடச் செய்து பார்த்திட முடியாத அளவுக்கு ஓரிடத்தில் இருக்கிறான்.

சராசரிகள் எல்லோருமே கணிப்பொறி இயக்கர் (புரிகிற மாதிரிச் சொன்னால், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்) வேலையோ அவ்வப்போது படித்துச் சொல்லிக் கொடுக்கும் கணிப்பொறி மையங்களின் ஆசான் (TUTOR) வேலையோ பார்த்துத்தான் பிழைப்பை ஆரம்பித்தோம். பின்னர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தித்தான் - அதில் கிடைக்கும் பணம் மற்றும் வசதிகளைப் பயன்படுத்தித்தான் - VISUAL BASIC, ORACLE போன்ற படிப்புகள் எல்லாம் படித்துக் கொண்டு, புதிதாய் சாப்ட்வேரில் வேலைகள் தேடினோம். எங்கள் படிப்பையே நகர்ப்புறங்களில் படித்து விட்டு வந்தவர்களுக்கு இணையாக நாங்களும் வளர சிலருக்கு ஓரிரு வருடங்கள் தேவைப் பட்டன; சிலருக்குப் பல வருடங்கள் தேவைப் பட்டன; சிலர் இன்னும் நெருங்கியபாடில்லை. இந்த நாட்டின் மிகப் பெரிய பிரச்சனை ஏற்றத்தாழ்வு என்றால், அதில் இது ஒரு முக்கியமான ஏற்றத்தாழ்வு. அடுத்த தலைமுறைக்கு சாதியை விட - பொருளியலை விட - மற்ற பல வேறுபாடுகளை விட, இது ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அதை எப்படி வெல்லப் போகிறோம் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டச்சுக் கலாச்சாரம்
வீட்டை விட்டு வெளியேறிப் போய், விடுதியில் தங்கிப் படித்தல் என்றாலே, அதற்கென்று பல அனுபவங்கள் உண்டு. அதில் ஒன்று, அப்படிப் போகும் எல்லோருமே வேறுபட்ட மனிதர்களுடன் பழகுவதன் மூலம் தம் ஆளுமையை வேகமாக வளர்த்துக் கொள்வார்கள். பழகுவது என்றால், பகலில் பழகி விட்டு, இரவில் வீட்டுக்குப் போய்ப் படுத்தல் போல அல்ல இது. மாறாக, இருபத்தி நான்கு மணி நேரமும் அவர்களுடனேயே இருத்தல். உடன் உறங்கி, உடன் உண்டு, உடன் விளையாடி (படிப்பைத் தவிர எல்லாத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் இங்கு!)... என அவர்களோடே முழுக்க முழுக்க வாழ்வது. அது சாதாரண வேலை இல்லை. ஒவ்வொருவரும் ஒருவிதம். எல்லோருடனும் ஒத்துப் போனால்தான் நிம்மதியாக இருக்க முடியும். அப்படி இல்லாதவர்கள் அதைப் பழகிக் கொள்வார்கள். அந்த அனுபவம் அவர்களுக்கு பிற்காலத்தில் தூரம் தொலைவில் வந்து தன் போன்ற நண்பர்களுடன் தங்கிப் பணி புரிய நேரும் கால கட்டத்தில் மிகவும் உதவியாக இருக்கும். எதையுமே சீக்கிரம் படித்துப் பழகிக் கொள்தல் நல்லதுதானே. இப்படிப் பழகிக் கொள்ளும் ஒரு முக்கியமான பண்பு - நிதி நிர்வாகம். அப்டீன்னா? அதாவது, தனக்கு வீட்டில் இருந்து கொடுத்தனுப்பும் பணத்தை முறையாகச் செலவிட்டு, சரியாகக் கணக்கிட்டு, நல்லபடி வைத்துக் காப்பாற்றிக் கொள்தல். இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அவை யாவை? இதோ...

ஒன்று, சில ஆட்கள் வீட்டில் இருந்து கொடுத்து விடும் பணத்தை அப்படியே சேமித்து விடுவார்கள். அதை வைத்து அதன் பின் என்ன செய்வார்கள் என்று தெரியாது. ஆனால் எப்போதுமே பஞ்சப் பாட்டு பாடிக் கொண்டே இருந்து, உடன் இருப்பவர்களையே முழுவதும் செலவழிக்க வைத்து எல்லாத்தையும் அனுபவித்து விடுவார்கள். இப்படிப் பட்டவர்களைச் சமாளிப்பது மிக மிகக் கடினம். மூஞ்சியில் அடித்த மாதிரிப் பேசத் தெரிந்த சிலரால் மட்டுமே அவர்களிடம் தப்ப முடியும். மற்றவர்கள் யார் மாட்டினாலும் அம்பேல்தான். எப்படியும் அவர்களுக்கென்று சில அடிமைகளைப் பிடித்து விடுவார்கள். அவற்றில் சில அறிந்தும் சில கடைசிவரை அறியாமலும் செலவழித்து அழித்து அழிந்து போம். இது சிக்கனம், கஞ்சம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. சக மனிதர்களைக் கேனப்பயல் ஆக்கும் புத்தி. அதைத் தவிர வேறென்றும் இல்லை. இது பணம் மட்டும் சம்பந்தப் பட்ட விசயமில்லை. தனி மனித நாணயம் சார்ந்தது.

இப்படிப் பட்ட பிசினாறிகளில் பல விதம். சிலர், எங்கு சென்றாலும் உடன் வருவார்கள். ஆனால் காசு கொடுக்கும் நேரத்தில் மட்டும் ஆளே கண்ணில் தட்டுப் பட மாட்டார்கள். இருந்தாலும் கண்டு கொள்ளாதது போல இருப்பார்கள். சிலர், எங்குமே வர மாட்டார்கள். அழைத்தால்தான் சிக்கலே. அழைத்தால் வந்து விடுவார்கள். ஆனால் எதற்கும் காசு கொடுக்க மாட்டார்கள். கேட்டால், அவர்களுக்கென்று ஒரு நியாயம் வைத்திருப்பார்கள் - "அவன்தானே அழைத்தான்; அப்டின்னா, அவன்தானே கொடுக்கணும்!". சிலர், வறுமையானவன் போலவே காட்டிக் கொண்டு அனுதாப ஓட்டு வாங்குபவர்கள். சிலர், மிகத் திறமையானவர்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், மிக விபரமாக - ரெம்போ தாராளமானவர்கள் போல, என்றாவது ஒருநாள் வம்படியாக நமக்கும் சேர்த்துக் கொடுத்து விடுவார்கள். அதன் பின்பு, 'இவனிடமெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம் என்று காசு கேட்டால் கேவலம்!' என்றெண்ணி காலம் பூராவும் நாமே கொடுத்துத் தொலைய வேண்டும்.

இது போன்றவர்களை எப்படிக் கையாள்வது என்பது விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்குக் கொஞ்சம் சீக்கிரமே கிடைக்கும் அனுபவம். சில நேரங்களில் இந்தப் பழக்கத்தில் விடுதி மாணவர்களுக்கும் வெளி மாணவர்களுக்கும் ஒத்துப் போகாமல் கூடப் போய்விடும். அவர்களுக்கு இதெல்லாம் மிகக் கேவலமான நடத்தையாகத் தெரியும். எங்களுக்கோ இது ஓர் அடிப்படை நாகரீகம்.

இப்போதும் பொது இடங்களில் பணத்தைத் தொட்டுப் பார்க்கப் பிடிக்காத பலரைச் சந்திக்கத்தான் செய்கிறோம். விடுதிக் காலத்தில் பழகிய நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி வெல்ல முயல்கிறோம். சில நேரங்களில் சமாளித்து விடுகிறோம். சில நேரங்களில் அவர்களுடைய புது விதமான உத்திகளுக்கு முன் ஈடு கொடுக்க முடியாமல் தோற்றும் விடுகிறோம். யார் புத்திசாலி - திருடனா காவலரா? அப்படியான ஒரு முக்கியமான உத்தி - இப்படிக் கணக்குப் பார்ப்பதை எளிதில் கொச்சைப் படுத்தி விட்டாலே போதும் (நம்மையே நமக்குக் கேவலமாகத் தெரிகிற மாதிரி மிகச் சிறப்பாகச் செயல்படுவார்கள் சிலர்!) . நிறையப் பேர் பயந்து வழிக்கு வந்து வாரி வழங்க ஆரம்பித்து விடுவோம்.

உண்மையிலேயே கணக்குப் பார்க்க விரும்பாத பரந்த மனப்பான்மை கொண்டோரைப் பார்த்து நாமும் அப்படி மாறப் பார்த்தால் அதை விடப் பல மடங்கு ஏமாற்றுக்காரர்கள் வந்து சூழ்ந்து விடுகிறார்கள். இதெல்லாம் புரியாதவரைதான் நிம்மதியாக இருக்க முடியும். நம் மீது சவாரி ஏற யாராவது வரிசையில் நிற்கிறார் என்று தெரிந்தால் அடுத்த நிமிடமே சுதாரித்து விடுவோமே. எனவே டச்சுக்காரர்களின் பழக்கம்தான் எப்போதும் சரியென்று படுகிறது. அதுதான் சரியான இடை-வழி (MID PATH). அந்த வழியைப் பிடித்தால், யாரையும் ஏமாற்றவும் வேண்டியதில்லை; ஏமாறவும் வேண்டியதில்லை. கேவலமாகத் தெரிந்தாலும் அதுதான் தொலைநோக்கில் நல்ல பழக்கம். எப்பவுமே இன்னொருத்தரை நமக்குச் செலவழிக்க வைப்பதை விட இது கேவலம் இல்லையே?! நம் செலவுக்கு நாம் காசு கொடுத்தல் என்று சுருக்கிப் பார்ப்பதை விட நம் செயலுக்கு நாம் பொறுப்பேற்றல் என்று கொள்ள வேண்டும் அதை. அதைக் கற்றுக் கொடுத்த விடுதிக்கு நன்றி சொல்லித்தானே ஆக வேண்டும்.

திருட்டுகள்
எல்லா இடங்களிலும் எல்லா விதமான ஆட்களும் இருக்கிறார்கள். எனவே எல்லா இடங்களிலும் திருடர்களும் இருக்கிறார்கள். விடுதி வாழ்க்கை முழுமையுமே திருட்டுக் கொடுத்தல் என்பது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. இது ஒரு மிகக் கவனமாகக் கையாள வேண்டிய பிரச்சனை. ஒருவன் திருடுவதில் எத்தனை பேர் ஆதாயம் அடைகிறார்கள்? எத்தனை பேர் இழக்கிறார்கள்? கணக்கு மட்டும் போட்டுப் பார்த்தால் வரும் பதில் தவறானது. பணத்தை எடுத்தவனும் இழந்தவனும் மட்டுமே சம்பந்தப் பட்ட விசயம் இல்லை இது. திருட்டு எனும் கேவலமான செயல் பற்றிக் கனவிலும் எண்ணியிராத பல நல்லவர்கள் சந்தேகப் படப் படுகிறார்கள். நேரடியாகக் கேட்கப் படா விட்டாலும் கூட, தான் சந்தேகப் படப் படுகிறோம் என்பதே எவ்வளவு வலி மிகுந்த அனுபவம். எவனோ ஒருவன் செய்கிற திருட்டால், அதற்குச் சம்பந்தமே இல்லாதவர்கள் பாதிக்கப் பட்ட கதைகள் உண்டு. பல அருமையான உறவுகள் சேதாரம் அடைந்ததுண்டு.

திருட்டு பற்றி நான் படித்த அதை விட முக்கியமான பாடம் - திருடுபவன் எப்போதும் ஏழையாக இருக்க வேண்டியதில்லை; தவறான வளர்ப்பு கொண்டவனாக இருக்க வேண்டியதில்லை; எந்தக் குறிப்பிட்ட குழுவையும் சார்ந்தவனாக இருக்க வேண்டியதில்லை; திருட்டை இவற்றோடு முடிச்சுப் போட்டு பேசுபவர்கள் எல்லாம் வேறு ஏதோ கோளாறு கொண்டவர்கள் அல்லது அவர்களும் திருடர்கள். பள்ளியில் ஒன்று கல்லூரியில் ஒன்று என இரண்டு விடுதிகளில் இருந்திருக்கிறேன். இரண்டிலும் திருட்டுகள் நடந்திருக்கின்றன. அவற்றில் நாங்கள் கேள்விப்பட்ட - கண்டு பிடித்த திருடர்கள் அனைவருமே முதல் முறை எளிதில் சந்தேகப் பட முடியாதவர்கள் அல்லது திருடியவனே ஒத்துக் கொண்ட பின்னும் எங்களால் நம்ப முடியாதவர்கள். இன்று நினைத்தாலும் எனக்கு நம்ப முடியவில்லைதான். அப்படிப் பட்ட பெற்றோர், குடும்பம், பின்னணி கொண்டவர்கள். அப்படி என்னதான் அவர்களுக்குக் கட்டாயமோ - தேவையோ?

"கஞ்சிக்கு வழியில்லாதவனிடம் பெரும் பெரும் பொறுப்புகளைக் கொடுத்தால் அவன் திருடத்தான் செய்வான். பரம்பரைப் பணக்காரனிடம் எதைக் கொடுத்தாலும் ஆசைப் பட மாட்டான்!" என்று பொது வாழ்க்கையில் கூட இப்போதெல்லாம் ஒருவிதப் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய மூடப் பேச்சு அல்லது ஏமாற்றுப் பேச்சு என்பதை நாங்கள் அப்போதே புரிந்து கொண்டு விட்டோம். அப்படிச் சொல்பவர்களுக்கெல்லாம் என்னுடைய ஒரே கேள்வி - "காமராஜரும் கக்கனும் என்ன முதலாளிமார் வீட்டுப் பிள்ளைகளா? பின் ஏன் அவர்கள் அவ்வளவு நேர்மையாக இருந்தார்கள்?". அவர்கள் எல்லாம் விதிவிலக்குகள் என்று மட்டும் எளிதான பதிலைக் கொடுத்துத் தப்பப் பார்க்காதீர்கள். இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு கிட்டத்தட்ட எல்லோருமே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். தேவைக்கு மட்டுமே திருடுவார்கள் என்றில்லை; ஆசை அதிகமானாலும் திருடலாம். அதற்கும் ஒருவரின் பொருளாதார நிலைக்கும் சம்பந்தமே இல்லை.

-தொடரும்...

கருத்துகள்

  1. இன்னும் கூட சுருக்கி எழுதியிருக்கலாம்....

    பதிலளிநீக்கு
  2. சரியாகச் சொன்னீர்கள். நானும் அந்தக் குழப்பத்தில் தான் எழுதிக் கொண்டிருந்தேன். இந்த வாரம் சரிசெய்து விடுகிறேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு.
    சிறுகச் சிறுக எழுதி வெளியிடுங்கள். அருமையான பதிவு. நம்மை மாதிரி - நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல் - ஊரில் உள்ளவர்களுக்கு உள்ள சிரமங்களை அருமையாக பதிருக்கிறீர்கள். எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    எனது முதல் மகனை திருச்செந்தூர் அதித்தனார் கல்லூரியில் தான் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அவன் நல்ல மார்க் வாங்கியதால் குரோம்பேட்டை MIT இல் இடம் கிடைத்தது. அங்கு சேர்த்தோம். உங்களது அவ்வளவு சிரமங்களும் எங்கள் கண்ணுக்குள் நிற்கின்றன.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி ஐயா. முன்பெல்லாம் இதை விடப் பெரிதாக எழுதிக் கொண்டிருந்தேன். வரும் இடுகைகள் இதை விடச் சிறிதாக உள்ளபடிப் பார்த்துக் கொள்கிறேன். எனக்கும் எளிதாக இருக்கும். உங்கள் கருத்துரை படித்த பின் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி