கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (6/6)

விடுதி-வெளி மாணவர்கள்
பொதுவாகவே எல்லா வகுப்புகளிலும் விடுதி மாணவர்கள் ஒரு குழுவாகவும் வீட்டிலிருந்து தினமும் வந்து செல்லும் வெளி மாணவர்கள் ஒரு குழுவாகவும் இருப்பர். இந்தக் குழுவுணர்வுதானே மனித இனத்தையே துண்டாடிப் போட்டுக் கொன்று குவித்துக் கொண்டு இருப்பது. சிலர் மட்டுமே இந்த எல்லைகளைக் கடந்து பழகுவது. எண்ணிக்கையில் குறைவு என்பதால் எங்கள் வகுப்பில் இது சிறிது பரவாயில்லை. சொந்த ஊர் அருகிலேயே இருக்கும் சிலர் சில காலம் இதுவாகவும் சில காலம் அதுவாகவும் இருப்பார்கள் (அதாவது விடுதி மாணவனாகவும் வெளி மாணவனாகவும்). சில விடுதி மாணவர்கள் எப்போதுமே வெளி மாணவர்களோடு சுற்றுவார்கள். அவர்களுடைய வீடுகளிலேயே கிடப்பார்கள். திருச்செந்தூரைச் சொந்த ஊராக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்த உள்ளூர்ப் பெண்கள் எல்லோரையுமே இவர்களுக்கும் தெரிந்திருக்கும். அது போலவே வெளி மாணவர்கள் நிறையப் பேர் எங்களுடனே கிடப்பார்கள். உள்ளே இருக்க முடிந்த நேரம் முழுக்க எங்களுடனே இருப்பார்கள். வார்டன்கள் அழைத்து சிலரைக் கண்டிக்கவும் செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒன்னு மண்ணாய் இருப்பார்கள்.

அப்படி எங்களுடனேயே வந்து கிடக்கும் ஆட்களில் ஒருவன் - திருச்செந்தூருக்கு அருகில் உள்ள ஆலந்தலை என்ற ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ரோஷன் என்ற நண்பன். இதில் ஓர் உணர்வுபூர்வமான விஷயம் இருக்கிறது. நாங்கள் மூன்றாமாண்டில் இருந்தபோது, ரோஷனுடைய அப்பா விபத்தில் கடுமையான அடி பட்டு (அது விபத்தா வேறு மாதிரியானதா என்றே எங்களுக்கு அப்போதைக்குத் தெளிவாகத் தெரியாது!) தூத்துக்குடியில் ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டார். அப்படி ஒரு மாசமோ என்னவோ அவர் அங்கு வைக்கப் பட்டிருந்தபோது தினமும் இருவர் மாற்றி இருவர் எங்கள் விடுதியில் இருந்து போய் அவர்கள் குடும்பத்துக்குத் துணையாக இருப்பார்கள். தினமும் இருவர் போய் இரத்தம் கொடுத்து விட்டு வருவார்கள். இப்போது நினைத்தாலும் எனக்குப் புல்லரிக்கும் ஓர் அனுபவம் அது. அதே ஆட்கள் இன்று அப்படியோர் உதவியைச் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. அந்தக் காலம் அப்படி (அதாவது, கல்லூரிக் காலம் பற்றிச் சொல்கிறேன். 'அந்தக் காலம்' என்று சொல்லும் அளவுக்கு நான் இன்னும் பழம் ஆக வில்லை!). அந்தக் காலம்தான் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, தனக்கென்று அதிகமாக யோசிக்காமல் இருக்கும் காலம். இறுதியில் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தபோதும் அந்த இறுதி ஊர்வலத்தில் அவர்கள் உறவினர்கள் அளவுக்கு நாங்களும் இருந்தோம். எங்கள் உடனிருத்தல் கண்டிப்பாக அவனுக்கு அந்தத் துயரத் தருணத்தில் பெரிதும் பயன் பட்டிருக்கும் - அதிலிருந்து வெளிவர மிகவும் உதவியிருக்கும் என்று எண்ணுகிறேன். சூப்பர் இல்லையா இது? இதுதானே கல்லூரி நட்பின் உன்னதம்!

எங்கள் வகுப்பில் இருந்த மணிகண்டனும் அப்படியோர் ஆள். அடிக்கடி விடுதிக்கு வருவான். வெளியில் தங்கியிருந்த கடைசி ஒரு மாத வாழ்க்கையின் போதும் அடிக்கடி வந்து எங்களைப் பார்த்து விட்டுச் செல்வான். சில நேரங்களில் எங்களோடே தங்கியும் இருந்து சென்றிருக்கிறான். மொட்டை மாடியில் படுத்து சொந்தக் கதை - சோகக்கதை எல்லாம் மனம் விட்டுப் பேசிய அப்படியான ஓர் இரவு மறக்க முடியாதது.

சாதிக் கலவரம்
கல்லூரி வாழ்வில் மறக்க முடியாத இன்னொரு நிகழ்வு - கடைசி மாதம் வந்த சாதிக் கலவரம். கல்லூரி தொடங்கிய காலம் முதலே எங்கும் நற்பெயர். இந்தக் கல்லூரி என்றால், பொதுவாக எங்கும் ஒரு மரியாதை உண்டு. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் இருக்கும் சில கல்லூரிகள் அடிக்கடி மூடப்படும் - அடிக்கடி சாலை மறியல் செய்வார்கள் - வாகனங்களை நொறுக்குவார்கள் என்பதால் அதே பகுதியில் இருக்கும் இன்னொரு கல்லூரி ஒழுங்காக நடைபெறுவதால் அந்த மரியாதை இயல்பாகவே வந்தது. அதற்கொரு முக்கியமான காரணம் - எங்கள் நிர்வாகம். ஆதித்தனார் அவர்களால் ஆரம்பிக்கப் பட்டு அவருடைய மகன் சிவந்தி ஆதித்தன் அவர்களால் நடத்தப் பட்டு வருவது. அந்தப் பகுதி முழுக்க அவருடைய பெயரைக் கூட உச்சரிக்க மாட்டார்கள். சின்னய்யா என்றுதான் சொல்வார்கள். அந்தப் பகுதியில் மிகப்பெரிய இடத்துக்குப் போன குடும்பங்களில் ஒன்று அவருடையது. எனவே, அம்மக்கள் அவரைக் கடவுள் போல மதிப்பார்கள். அவரும் கல்லூரியின் பெயர் கெடாமல் நடத்தப் பட எதுவும் செய்வார். இப்படி ஆரம்ப காலத்தில் காப்பாற்றப் பட்ட பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக வந்து சேர்ந்ததே இந்த சாதிக் கலவரம்.

எங்கள் முதல் இரண்டாண்டுகளில் இதற்கான அறிகுறியே இருக்க வில்லை. ஆரம்ப காலம் முதல் கல்லூரி எப்படி இருந்ததோ அப்படியே இருந்தது. இந்த மொத்தப் பிரச்சனையும் கல்லூரியின் பிரச்சனை அல்ல. ஒரேயொரு விடுதியின் பிரச்சனை. இன்னொரு விடுதியான காந்தி விடுதியில் கூட இந்தப் பிரச்சனை இருக்க வில்லை. அதுவும் ஒரு சில தனி மனிதர்களால் உருவாக்கப் பட்டது. ஆனால் அதன் வீச்சு எத்தகையது என்பதை அதை ஆரம்பித்து வைத்தவர்கள் உணர வாய்ப்பில்லை. கல்லூரி இருக்கும் வரை இந்தப் பிரச்சனைகள் இருக்கும். இது போன்ற பிரச்சனைகளை ஆரம்பித்து வைக்கும் வரைதான் ஒன்றும் இல்லாமல் இருக்கும். பிள்ளையார் சுழி போட்டு விட்டால் அதற்கு முடிவே கிடையாது. ஏனென்றால், ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும் மொத்தக் கூட்டமும் காலியாகிப் போய், புதுக் கூட்டம் வருவதில்லை. மூன்றில் ஒரு பங்கு போகும். அதற்குப் பதில் புதிதாக இன்னொரு பங்கு வந்து சேரும். மிச்சமிருக்கும் இரண்டு வருடத்து ஆட்கள் இந்தத் தீ அணைந்து விடாமல் பார்க்கும் வேலையைச் செவ்வனே செய்வார்கள். அப்படியானால் இதற்கு முடிவு? அப்படி ஒன்றே கிடையாது.

பொதுவாக, ஒரு சமூகம் அளவுக்கு அதிகமாகப் பெரும்பான்மை கொண்டிருக்கும் பகுதிகளில் இந்த மாதிரிப் பிரச்சனைகள் வருவதில்லை. ஓரளவுக்காவது சமமாக இருக்கும் இரண்டு சமூகங்களாவது இருந்தால்தான் இதெல்லாம் உண்டாகும். எங்கள் கல்லூரியிலோ விடுதியிலோ அவ்வளவு நாட்களாக இது நடக்காமல் இருந்ததற்கும் அதுதான் காரணம். நாங்கள் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது முதலாமாண்டில் வந்து சேர்ந்த கூட்டம் இதற்கு முக்கால்வாசிக் காரணம். அதில் இரண்டு குழுக்கள் உருவாயின. அவர்களுக்குள் பிரச்சனை வந்தது. அதில் மற்ற இரண்டாண்டு மாணவர்களும் அணி சேர்ந்தனர். அப்படியே அது விடுதியின் பிரச்சனையானது. எனக்கு நினைவிருக்கும் வரை இந்த முழுப் பிரச்சனைக்கும் காரணம் ஓரிரு தனி மனிதர்கள்தான்.

இந்த சாதிக் கலவரத்தில் நிகழ்ந்த விசித்திரங்கள் பல. அதில் ஒன்று - எதிரிகள் நண்பர்களானார்கள்; நண்பர்கள் எதிரிகளானார்கள். யாரும் பழக விரும்பாத மாதிரியான ஒரு சிலர் நாயகர் ஆனார்கள். இரண்டாண்டுகளாக எவருக்கும் பிடிக்காத சிலர் பாதிக்கும் மேலான ஆட்களின் பாசத்துக்கு உரியவர் ஆயினர். காரணம் - அவர்கள் சாதி எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருந்தனர். ஒருவருக்கொருவர் கண்டாலே கடுப்பாகும் ஆட்களே உறவு கொண்டாடத் தொடங்கினர். இதை நான் பல இடங்களில் பார்த்து விட்டேன். எல்லோராலும் புறக்கணிக்கப் படும் ஒருவன் எதைக் கையில் எடுத்தால் அங்கீகாரம் கிடைக்கும் என்று இரவெல்லாம் யோசித்து அதைக் கையில் எடுப்பான். அவன் எதிர் பார்த்த மாதிரியே அவன் பின்னால் ஒரு பெருங்கூட்டம் - அவனை மகாக் கேவலமாக நினைத்த ஒரு கூட்டம் - வெறுத்த ஒரு கூட்டம் - போய் இணையும். அதுதான் அங்கும் நடந்தது சிலருக்கு.

இன்னொருபுறம், எவ்வளவோ நட்புறவோடு பழகிய பலர் எதிரெதிர் அணிகளுக்குப் போனார்கள். உருப்படியான காரணம் இல்லாமல் உண்டாகும் பகை எவ்வளவு கேவலமானது! அதை நேரில் காணும் கொடும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. அரையாண்டு காலமாகப் புகைந்து கொண்டே இருந்தது இந்தப் பிரச்சனை. எல்லோரும் தன்னால் முடிந்த அளவு அமைதியான முறையில் பகைமை வளர்த்தனர். கூட்டம் சேர்த்தனர்; கூடிப் பேசினர்; எதிரணியில் உள்ளோருக்கு எதிராக என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டங்கள் தீட்டினர். சிலர் இங்குமங்கும் போட்டுக் கொடுக்கும் வேலைகள் செய்தனர். என்ன நடக்குமோ என்றொரு பயம் ஒருபுறம் இருந்தது என்றாலும், எதுவுமே நடக்காது முடிந்து விடும் என்றொரு நம்பிக்கையும் இன்னொரு புறம் இருந்தது. ஆனால், அப்படி ஒன்றும் நடக்காமல் போக வில்லை.

இது போன்ற உணர்வு பூர்வமான பிரச்சனைகளைக் கையில் எடுப்பதன் மூலம் எவ்வளவு எளிதாக நம் ஆட்களைத் துண்டாட முடிகிறது என்று அடிக்கடித் தோன்றும். இதில் ஏற்பட்ட இன்னொரு பாதிப்பு - அந்தக் காலத்திலேயே தொழில் நிமித்தமாக இந்தப் பகுதியில் இருந்து வெளியேறி சென்னை, கோவை, சேலம் போன்ற நகரங்களில் குடியேறிவிட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் இந்தக் கேவலங்கள் எல்லாம் பற்றி சிறிதும் அறியாமல் வளர்க்கப் பட்டிருப்பார்கள். முழுமையான நகரத்து வளர்ப்பை அவர்களிடம் காண முடியும். காலமெல்லாம் தம் உடனேயே வைத்திருந்து விட்டு, கல்லூரிப் படிப்புக்கு மட்டும் தம் பிள்ளையைச் சொந்த மண்ணில் சேர்க்க ஆசைப் பட்டு வந்து விட்டு விட்டுப் போவார்கள். இங்கு வந்து சேரும் அந்த நல்ல பையன்கள் எல்லாம் இங்கே இருக்கும் வாழ்க்கை மீது ஒருவித ஈர்ப்பு கொண்டு, 'இதுதான் நம் பெற்றோர் வாழ்ந்த மண்; இதுதான் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை; இவ்வளவு நாட்களாக நான் பார்த்ததெல்லாம் வேற்றுக் கலாச்சாரம்!' என்பது போல உணர்ந்து இங்கே இருக்கிற பையன்களோடு சேர்ந்து கெட்டுக் குட்டிச் சுவராகிப் போவார்கள். வரும்போது அவ்வளவு நாகரிகமாக வருகிற ஆட்கள் - அதிர்ந்து கூடப் பேசாதவர்கள், போகும்போது, "வெட்டணும், குத்தணும், அடிக்கணும்..." என்று பேசுகிற ஆட்களாக மாறிப் போவார்கள். ஒரு தந்தை அல்லது தாயின் நிலையில் இருந்து இது எவ்வளவு கொடுமையான மாற்றம் என்று யோசித்துப் பாருங்கள். மனசு வலிக்கும்.

வேறு எந்தக் கல்லூரியாக இருந்தாலும் இதை ஒரு முழுமையான சாதிப் பிரச்சனையாக ஆக்கியிருப்பார்கள். ஆனால், எங்கள் கல்லூரியில் கடைசிவரை அப்படி நடக்க வில்லை. கடைசிவரை ஒரு கூட்டம் அப்படி ஒரு கொடுமை நடக்க விடாமல் பார்த்துக் கொண்டது. இன்னும் கொஞ்ச நாள் கல்லூரி நடந்திருந்தால் அல்லது பிரச்சனை கொஞ்சம் முன்பே வந்திருந்தால், ஒருவேளை அது நடந்திருக்கலாம். யார் செய்த புண்ணியமோ, அதையெல்லாம் காண வேண்டிய கட்டாயம் வராமல் முடிந்து விட்டது. தீ போல மூண்டிருக்க வேண்டிய ஒரு பெரும் பிரச்சனை சில நடவடிக்கைகள் மூலம் தவிர்க்கப் பட்டது. அந்த நடவடிக்கைகளில் விமர்சனத்துக்கு எத்தனையோ விசயங்கள் இருந்தன என்றபோதும் எதிர் பார்த்ததை விட சுமூகமாக முடிந்தது பெரும் நிம்மதியே.

வெளியில் தங்கிய கடைசி மாதம்
கல்லூரி வாழ்வில் அந்த ஒரு மாதமும் ஒரு மறக்க முடியாத காலம். சாதிக் கலவரத்தால் எடுக்கப் பட்ட முக்கியமான நடவடிக்கை, இறுதியாண்டு மாணவர்கள் எல்லோரையும் கடைசி மாதம் உங்களுக்கெல்லாம் விடுதியில் இடமில்லை என்று காலி செய்ய வைத்தது. இதனால் நாங்கள் எல்லோரும் வெளியில் வீடு அல்லது அறை பிடித்துத் தங்க நேர்ந்தது. சிலர் வாடகை வீடு பிடித்தோம். சிலர் தேர்வு நேரங்களில் மட்டும் தங்கிக் கொள்ளும் படி லாட்ஜ்களில் ரூம் போட்டுக் கொண்டனர். செந்திலாண்டவன் புண்ணியத்தில் குறைந்த கட்டணத்தில் நல்ல அறைகளும் அருகிலேயே சிறப்பான உணவு வசதிகளும் கிடைத்தன. அந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட திருசெந்தூரில் இருந்த எல்லா ஓட்டல்களிலும் சுவை பார்த்திருப்போம். விடுதியில் இருந்த காலத்திலும் தேர்வுக்கான படிப்பு விடுமுறையின் போது தங்கிக் கொள்ள மட்டும் அனுமதிப்பார்கள்; உணவகம் இராது. அந்த நாட்களிலும் சாப்பாட்டுக்கு வெளியில்தான் வந்து செல்வோம். அப்போது வந்து சுவை பார்த்து வைத்திருந்தது இந்தக் கடைசி மாதத்தில் மிகவும் வசதியாக இருந்தது.

எங்கள் பேராசிரியர் திரு. வேலாயுதம் மற்றும் எங்கள் ஊர்க்காரப் பேராசிரியர் திரு. பால் பாண்டியன் ஆகியோர் உதவியோடு, நாதன், ராஜா, ரமேஷ் என்கிற மூவரோடு நானும் சேர்ந்து ஒரு வீடு வாடகைக்குப் பிடித்துத் தங்கினோம். நால்வருக்குப் பிடித்த வீட்டில் எங்கள் நண்பர்கள் பலரும் வந்து அவ்வப்போது தங்கிக் கொண்டார்கள். நாங்கள் பிடித்திருந்த வீடு கோயிலுக்கு மிக அருகில் ஓர் அழகான தெருவில் இருந்தது. அருகிலேயே ஒரு வீட்டில் சுவையான உணவும் கிடைத்தது. அவ்வப்போது வேலாயுதம் சார் வீட்டிலும் போய் ஓசிச் சாப்பாடு சாப்பிடுவோம். வேலாயுதம் சார் பட்டுக்கோட்டைப் பக்கம் இருந்து வந்து திருசெந்தூரில் பணி புரிபவர். ஒவ்வோர் ஆண்டும் அவர் பங்குக்கு அந்தப் பக்கம் இருந்து ஓரிருவரை அழைத்து வந்து சேர்த்து விட்டு விடுவார். அதிக பட்சமாக எங்கள் செட்டில் மூன்று பேர் இருந்தார்கள். அவர்கள்தான் நாதன், ராஜா மற்றும் ரமேஷ். ராஜாவும் ரமேஷும் சொந்தக் காரர்கள். நாதன் ஊர்க்காரன். நானாவது அந்த ஒரு மாதம்தான் அவர் வீட்டில் தொல்லை கொடுத்தேன். இந்த மூவரும் வாராவாரம் அவர் வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போய் விடுவார்கள். அப்போதுதான் திருமணம் வேறு ஆகியிருந்தது அவருக்கு. அதையும் பொருட்படுத்தாமல் இவர்கள் படையெடுத்துக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் அவருடைய வீட்டுக்கு அருகில் தங்கி இருந்தபோது அவருக்கு முதல்க் குழந்தை பிறந்திருந்தது. பொழுதுபோக்குக்கு அவனையும் தூக்கிக் கொண்டு அலைவோம். இப்போது பெரிய பையனாக ஆகியிருப்பான். வெளியில் எங்காவது பார்த்தால் எங்களுக்கு அவனையோ அவனுக்கு எங்களையோ அடையாளம் கூடத் தெரியாது.

ஊரின் வட எல்லையில் பேருந்து நிலையம். அங்கிருந்து தெற்கே ஊருக்குள் ஓரிரு கிலோ மீட்டர்கள் தொலைவில் நாங்கள் இருந்த வீடு இருந்தது. வடக்கே ஒரு கிலோ மீட்டர் நடந்தால் கல்லூரி வரும். இந்த இரண்டு-மூன்று கிலோ மீட்டர்களும் நடந்தே கடப்போம். ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு கிலோ மீட்டர் நடப்பதற்கு அழகாக இருக்கும். கடலுக்கு இணையாகவே சாலை.  நடந்து வரும் பாதையில் கடலோடு கலக்கும் ஓர் ஓடை போன்ற குட்டை ஒன்று உண்டு. சில நாட்களில் அது கடலோடு ஒட்டி உறவாடும். சில நாட்களில் இருவருக்கும் இடையில் ஆட்கள் நடந்து போகிற மாதிரி இடைவெளி இருக்கும். காணவே கண் கொள்ளாக் காட்சி அது. பேருந்து நிலையத்துக்கு எதிரில் இரயிலே வராத இரயில் நிலையம் ஒன்று இருந்தது. திருநெல்வேலி செல்ல மட்டும் ஒரே ஒரு இரயில் வரும் என நினைக்கிறேன். மீட்டர் கேஜ் பாதை. அதுவும் கடலுக்கும் சாலைக்கும் இணையாக வரும். இரயில் நிலையம் போய் உட்கார்ந்து பேசுவதற்குப் பொருத்தமான இடம் (படிக்க வசதியான என்ற இடம் என்று சொல்லிக் கொள்வது!). வருகையில் போகையில் சில நேரங்களில் ஒரு டீயைப் போட்டு விட்டு அங்கும் போய் உட்கார்ந்து கதை பேசுவோம்.

தேர்வு நாட்களின் போது நாங்கள் பிடித்திருந்த வீட்டில் கூட்டம் அலை மோத ஆரம்பித்தது. கூடுதலாக ஏகப்பட்ட நண்பர்கள் வந்து தங்க ஆரம்பித்தனர். வீட்டுக்காரர் ஏதும் சொல்லி விடுவார் என்ற பயத்திலும் கூட்டத்தில் படித்துக் கரையேறுவது கஷ்டம் என்ற பயத்திலும் கோயிலுக்குப் பின்னால் இருக்கிற வேலவன் விடுதியில் கூடுதலாக அறையெடுத்துத் தப்பிக் கொண்டோம் சிலர். வேலை கிடைத்து விட வேண்டுமே என்கிற பயம் ஒருபுறம். அதற்குப் படிப்பை முடிக்க வேண்டுமே என்கிற பயம் அதைவிடப் பெரிதாகக் குடைந்தது. படித்தேனோ இல்லையோ பயத்தில் தூங்கவேயில்லை. இரண்டு தேர்வுகளுக்குத் துளி கூடத் தூங்காமல் போய் உட்கார்ந்தேன். அனைத்தும் முடிந்த போது இரண்டு நாட்கள் தொடர்ந்து தூங்காமல் இருந்தால் உயிருக்கு ஒன்றும் ஆகாது என்கிற அறிவியற் பாடம் ஒன்று படித்துக் கொண்டேன்.

கடைசி மாதத்துக்குப் பின் வேறென்ன? கடைசி நாள்தான்!
சொல்லவே வேண்டியதில்லை. முதல் நாளை விடப் பல வகைகளிலும் முக்கியமான நாள். மறுநாள் முதல் சொந்தக் காலில் நிற்க வேண்டிய காலத்தின் ஆரம்பம். எதிர் காலத்தைப் பற்றிய பயம் ஒருபுறம். இவ்வளவு சீக்கிரமாக இந்த நல்ல காலம் முடிந்து விட்டதே என்ற கவலை ஒருபுறம். பிரிவின் துயரம் ஒருபுறம். பிரியும் முன்னே வந்த பிரிவினையால் ஏற்பட்ட வாட்டம் ஒருபுறம். எல்லாவற்றையும் தாண்டி, பிரிந்துதான் ஆக வேண்டும். சிலர் அன்றும் ஒருநாள் தங்கி துயரத்தைத் தள்ளிப் போட்டார்கள். சிலர் கடைசி ஒருமணி நேரத்தில் உணர்வு பூர்வமாகப் பேசிப் பிரிந்தார்கள். சிலர் அப்போதும் உணர்வு பூர்வமாக உணர மட்டும் செய்து கொண்டு பேசாமலேயே பிரிந்தார்கள். சிலருக்குக் கண்ணீர் கூட வந்தது. முதல் நாள் வந்த கண்ணீர் என்னை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. இதில் அப்படி எதுவும் இல்லை. சிலர் புண்பட்ட மனத்தை புகை விட்டு ஆற்றி விட்டுப் பிரிந்தார்கள். சிலர் மது ஊற்றி ஆற்றிப் பிரிந்தார்கள். கணிப்பொறியியல் வகுப்பைச் சேர்ந்த நாங்கள் நான்கைந்து பேர், அருகில் இருக்கும் பரமன் குறிச்சி என்ற கிராமத்தில், எங்கள் வகுப்புத் தோழன் ஜனார்த்தனன் என்பவனின் தென்னந்தோப்பில் போய், இளநீர் குடித்து விட்டுப் பிரிந்தோம். மற்றவர்களுக்கில்லாத ஒரு நம்பிக்கை கணிப்பொறியியல் படித்த எங்களுக்கு இருந்தது. அது, சென்னையிலோ பெங்களூரிலோ வேலை நிமித்தம் நாம் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கை. அது சிலருக்கு நடந்தது. சிலருக்கு நடக்க வில்லை. அவை பற்றி இன்னொரு தொடரில் பார்ப்போம். இப்போதைக்குக் கல்லூரி வாழ்க்கை முடிகிறது... நன்றி. BYE... BYE...

கருத்துகள்

  1. Mihavum unarvuppoorvamaha irundhathu. indha 6 partkalil ungal kalluri vaazhkkaiyai sirappaha velippatuthi irukkireekal.

    பதிலளிநீக்கு
  2. அத்தனையையும் பொறுமையாகப் படித்தமைக்கு மிக்க நன்றி சார். அடுத்து எது பற்றி எழுதலாம் என்று யோசிக்க வேண்டியதுதான். :)

    பதிலளிநீக்கு
  3. super life :)
    super post :)
    ramayanam maari irunthalum, padikka jolly ah irunthathu...
    DEEPAK

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு.
    உங்கள் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். நன்கு எழுதுகிறீர்கள்.
    எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி தீபக். ஹா ஹா ஹா... இராமாயணம் மாதிரி... சுருக்கமாக எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். முடிந்த பாடில்லை. :)

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி ஐயா. பொங்கல் வாழ்த்துக்கள்! :)

    பதிலளிநீக்கு
  7. It took me an hour to read all the 6 episode. Nice one, and you presented a different dimension to the college life and I could not even imagine was happening around, imagine if everyone write we could get to know how everyone was seeing life from their perspective, its the same place and same things happening around but each one was preoccupied with things that is different from others and yet everyone was experiencing the same college life, as coming to class, talking, sitting near the temple and talking and having lunch together. (I disagree I think you came to all movies with us from second year and in our class there were only 19 and almost every movie everyone used to go i think). such a dimension of thoughts and preoccupations was happening.

    I have studied with you three years and after than in Bangalore was there for many years in touch you with you till you got married I think, i could never imagine a though on these dimensions, very interesting narration. Reading this only i remember that there were committees in college and too many activities were happening next to us of which i was completely blind folded.

    Very good narration, I accidentally got into this blog, I saw a blog post from Facebook or somewhere from your Kid / for your kid and clicking that link I ended up hear, random reading i ended up reading all these. Good one.

    I like the way in some places where you have mentioned about the change in though process and how our perception of things change and what we consider as values changed over time and liked the way you shamelessly accepted that you opinion changes as times goes.., its take a lots of effort to change opinion but enormous courage to accept to everyone that yes i have changed...

    I have a very good and fond memories of college days, I don't have the narration skills like how you presented, but i got the seed thought that i should pen down the memories before i loose them or age takes over and mixed the memories with our imagination and wishful thinking as true memories...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணி, நீண்ட நாட்களுக்குப் பின் உன்னைக் காணக் கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாழ்க்கைக்குத் தொடர்பே இல்லாத மற்றவர்கள் வந்து படித்துக் கருத்திடும் போது ஒருவித உணர்வு. அதே கல்லூரியில் படித்தவர்கள் வந்து அவர்களுடைய அனுபவத்தையும் சேர்த்துப் பகிர்ந்து கருத்திடுவது ஒருவித உணர்வு. அதிலும் கூடவே இருந்தவர்கள் வந்து கருத்திடும் போது அது ஒருவிதமான உணர்வு. நம் நண்பர்கள் யாரும் இதுவரை இதைப் படித்து விட்டுக் கருத்திடவில்லை என்றே எண்ணுகிறேன். நீதான் முதல் ஆளாக இருக்க வேண்டும். சிலர் படித்திருக்கலாம். ஆனால் இந்த அனுபவங்கள் பற்றிய அவர்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை.

      ஒரே இடத்தில் ஒரே வேலையைச் செய்து கொண்டிருக்கிற இருவர் கூட ஒவ்வொருத்தரும் அவரவர்க்கே உரிய இருவேறு உலகங்களை உருவாக்கிக் கொண்டு அதில் சஞ்சரிப்பதுதான் இந்த உலக வாழ்க்கையின் சுவாரசியமே. இல்லையா? :)

      இவையெல்லாம் நான் எழுதிச் சில பல வருடங்கள் ஆகி விட்டன. ஏதோவொன்று எழுத்தைத் தொடரவிடாமல் செய்து விட்டது. மீண்டும் வெறித்தனமாக எழுத வரவேண்டும் என்று ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம். வாழ்க்கை நமக்காக என்ன திட்டமிட்டிருக்கிறது என்று.

      நீயும் எழுதலாம் என்று திட்டமிட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. கூடிய விரைவில் அதைப் படிக்கலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். பார்க்கலாம்!

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி