கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 6/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

போய் இறங்கிய நாள் முதலே அடுத்த இரண்டு-மூன்று நாட்களில் பனிமழை (SNOW) பெய்யும் என்கிற பேச்சுகள் நிறையக் கேட்க முடிந்தது. எல்லோருமே அது பற்றி ஓர் ஆர்வமாகப் பேசிக் கொண்டார்கள். இரண்டாம் நாளோ மூன்றாம் நாளோ சாலையில் உப்பு போல ஏதோ இருந்தது. முதலில் அதுதான் முந்தைய இரவு பெய்த பனிமழையோ என்றொரு சந்தேகம். பின்னர் அது பனிமழையைச் சமாளிக்கப் போட்ட உப்பு என்று அறிந்து கொண்டேன். அதை சாலை உப்பு (ROAD SALT) அல்லது பனியகற்றும் உப்பு (DEFROSTING SALT) என்றே சொல்கிறார்கள். அடுத்து மற்றொரு மாலைப் பொழுதில் வெள்ளை வெள்ளையாய்ச் சிறிது மிக நுண்ணிய ஏதோ பொழிந்தது. இம்முறை அதுதான் பனிமழை என்று எண்ணினேன். அதற்கும் வேறு பெயர் (FLURRY) என்று சொல்லி விட்டார்கள். 'என்னடா இது கொடுமையாக இருக்கிறது, இதில் இத்தனையா?!' என்று குழப்பமும் ஆவலும் கூடிக் கொண்டே போனது.

ஒரு மாலைப் பொழுதில் சாமான்கள் வாங்கி வரலாம் என்று வீட்டை விட்டுக் கடைக்குக் கிளம்பிப் போனேன். போகும் போது வண்டிகளில் மணல் மாதிரி எதையோ கொண்டு வந்து ஆங்காங்கே கொட்டிக் கொண்டிருந்தார்கள்.  திரும்ப வரும் போது மிக அழகாக - வெண்மையாக - மென்மையாக ஏதோ பொழிவதை உணர முடிந்தது. ஐந்து நிமிடங்களில் வீடு வந்து சேரும் முன் சாலையெல்லாம் அரைகுறையாக வெள்ளை அடித்த மாதிரி அழகாகப் பனிப் பொழிவு நிகழ்ந்திருந்தது. விடிந்தால் வேலைக்குப் போக வேண்டுமே என்று சாப்பாட்டை முடித்துக் கொண்டு தூங்கி விட்டோம். நடு இரவில் எழுந்த மனைவி வெள்ளையடிக்கும் வேலை முடித்திருந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் குதித்தாள். "ஏங்க..." "ஏங்க..." என்று எழுப்பிக் காட்டினாள். அழகை அரைகுறையாக ரசித்து விட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்து விட்டேன்.

காலையில் எழுந்த பின்னும் எல்லாத்தையும் விளக்கிக் கொட்டினாள். சாலை காலையில் இன்னும் அழகாக இருந்தது. சாலை மட்டுமல்ல, கட்டடங்களும், வாகனங்களும், பூங்காக்களும் என்று எல்லாமே வெள்ளை பூத்திருந்தன. நம்மைச் சுற்றி இருக்கிற எல்லாமே வெள்ளை என்றால் சும்மாவா? அதுவும் வெள்ளை மனமகிழ்வூட்டும் நிறம் வேறு. தூய்மையை யாருக்குத்தான் பிடிக்காது. கயவர்களுக்கும் பிடித்த கலர் அல்லவா அது?! கொஞ்சம் அங்கிட்டும் இங்கிட்டும் அலைந்து படங்கள் பிடித்துக் கொண்டோம். படம் பிடிக்கிற வேலை நமக்கு அவ்வளவு சிரமமாக இருக்கிறது. 'எல்லாமே வெள்ளை என்றான பின்பு இதை ஏன் இத்தனை வளைத்து எடுக்கிறாள்?' என்ற எண்ணம் வந்து, வீட்டுக்காரியிடம் முறைப்பு வாங்க வைத்ததுதான் மிச்சம். 'அதெல்லாம் ஓர் அழகுய்யா! மங்குனி மண்டையா!' என்பதெல்லாம் எங்களுக்குப் புரியத்தான் செய்கிறது. அதுக்காக... இப்பிடியா?!!!

பனிமழை பொழிந்த மறுநாள் ஊர் முழுக்கச் செய்திகளில் கூப்பாடு. பனிமழையால் இது பாதிக்கப் பட்டது, அது பாதிக்கப் பட்டது, விபத்துகள் ஏற்பட்டன என்று பல பிரச்சனைகள். பார்ப்பதற்கு இவ்வளவு அழகாக இருப்பது இவ்வளவு பிரச்சனைகளைக் கொடுக்க முடியுமா என்று அப்போதுதான் யோசித்தேன். அதைத்தான் அந்தக் காலத்திலேயே நம்ம ஆட்கள் சொல்லி விட்டார்களே - அழகு ஆபத்து என்று. "அடப்பாவி, இந்த அழகுமா அதில் அடங்கும்?!" என்கிறீர்களா? ஏதாவது ஒன்றைச் சொல்லி விட்டு, எல்லாத்தையும் அடக்கித்தான் சொன்னோம் என்று சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். யார் கேட்கப் போகிறார்கள்?! அது ஒன்றும் நமக்குப் புதிதில்லையே. சின்ன வயதில் ஊரில் காசு கொடுத்து வாங்கி சர்பத் போட்ட பனிக்கட்டிகள் இன்று ஊரெல்லாம் இலவசமாக இரைந்து கிடக்கிறதே என்று மிகவும் வருத்தமாக இருந்தது. அதற்கென்ன செய்ய முடியும்? சின்ன வயதில் ஊரில் ஓசிக்குக் கிடைத்த எத்தனையோ பொருட்கள் இப்போது காசு கொடுத்தாலும் கிடைப்பதில்லை அங்கே. அதற்கு அவர்கள் உட்கார்ந்து கவலையா பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?!

மொத்தப் பனியும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து காணாமல் போக இரண்டு-மூன்று நாட்கள் ஆனன. இது பரவாயில்லை, மற்ற பல ஐரோப்பிய நாடுகளில் இதை விடக் கொடுமையாக இருக்கும் என்று தகவல்கள் வேறு. இன்னொரு புறம், இதுவே அமெரிக்காவில் பொழிந்து மூன்று மணி நேரத்தில் பழைய மாதிரி இயல்பு நிலை திரும்பி விடும் என்கிற மாதிரியான கருத்துகள் ஒருபுறம். தாங்கச் சக்தி இருப்பவனுக்குத்தான் தாங்க முடியாத பிரச்சனைகள் வருகின்றன. இதுவே நம்ம நாட்டிலெல்லாம் ஏற்பட்டால் அவர்கள் செய்வதில் ஐந்து விழுக்காடு கூடச் சரி செய்ய மாட்டார்கள். நம்ம தலைகள் அந்த நேரம் பார்த்துச் சரியாக வெளிநாடு பயணம் போய் விடுவார்கள். வால்கள் தன் வீட்டு முன்னாலும், சரக்கு வாங்கி ஏற்றிக் கொள்ளக் காசு கொடுக்கும் பணக்கார ஆட்களின் வீடுகளின் முன்னாலும் மட்டும் வேலையை முடித்துக் கொடுப்பார்கள். அங்கே, தலைகள் எல்லாம், "இந்த ஏற்பாடு செய்திருக்கிறோம்!", "அந்த ஏற்பாடு செய்திருக்கிறோம்!" என்று அடுத்தடுத்து பயத்தில் விளக்கம் கொடுக்கிறார்கள். வால்கள் எல்லாம், தாங்க முடியாத குளிரிலும் ஊரெல்லாம் உப்பைக் கொட்டி, மாங்கு மாங்கென்று என்னென்னவோ செய்து, நிலைமையச் சமாளிக்கப் போராடுகிறார்கள். ஆனால் அதற்கே அந்த ஊர்க்காரர்கள் கொதிக்கிறார்கள். "வரி மட்டும் பிடுங்குகிறீர்கள்! இப்போது என்ன பிடுங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்?" என்று வாங்கு வாங்கென்று வாங்குகிறார்கள். அதுதான் அவர்களுடைய சனநாயகம் எவ்வளவு முன்னே இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துவது.

மகளும் நானும்!
குறிஞ்சி பூத்த நேரம் கொடைக்கானல் போகிற மாதிரி, சித்திரைத் திருவிழா அன்று மதுரையில் இருப்பது மாதிரி, விநாயகர் சதுர்த்திக்கு முமையில் இருப்பது மாதிரி, காளி பூசை நடக்கிற நேரத்தில் கல்கத்தாவில் இருப்பது மாதிரி, இருந்த ஒரு மாதத்தில் இரண்டு-மூன்று முறை பனிமழை பார்க்கிற மாதிரி இலண்டன் போயிருந்தது, ஒரு வித யோகம் என்று சொல்ல வேண்டும். தனியாகப் போயிருந்தால் இதெல்லாம் ஒரு மேட்டராகவே இருந்திராது. நாலரை வயது மகளோடு போயிருந்ததால்தான் இதெல்லாம் இவ்வளவு நேரம் பேசுகிற அளவு பெரிதாக இருக்கிறது. மற்றபடி, அதைப் பார்த்து விட்டதால் அன்று முதல் நம்ம வாழ்க்கையில் ஒன்றும் எல்லாமே மாறி விடப் போவதில்லை. முதல் முறை இரயில் பார்த்த போது நடக்காத மாற்றம், முதல் முறை விமானம் பார்த்த போது நடக்காத மாற்றம், முதல் முறை கடல் பார்த்த போது நடக்காத மாற்றம், முதல் முறை மலை பார்த்த போது நடக்காத மாற்றம், முதல் முறை அருவி பார்த்த போது நடக்காத மாற்றம், இனி எது பார்த்தாலும் நடக்கப் போவதில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமானது. அவ்வளவே!

பனிமழை என்பது ஒருபுறம் இருக்க, குளிர் தினமும் கொன்று தின்றது. அதுவும் முதல் சில நாட்கள் இருந்த அளவு பின்னர் தெரியவில்லை. எல்லாமே அங்கே குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கத்தோடே அமைக்கப் பட்டிருக்கின்றன என்பது பற்றி ஏற்கனவே பேசினோமே. அதில் இரண்டு முக்கியமான விஷயங்களை விட்டு விட்டேன். நம்ம ஊரில் நீரில் கழுவிக் கொள்வதை (எதை என்று கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்!!) அங்கே காகிதத்தில் துடைக்கிறார்கள். அதற்கான அடிப்படைக் காரணம் - நீர் அங்கே பனிக்கட்டியாகவே இருக்கும். நம்ம ஊரில் கண்மாயில் இறங்கிக் கழுவிக் கொண்டு திரும்புவது போல் அங்கே முடியாது. கண்மாயில் கூட பனிக்கட்டிதான் இருக்கும். அதனால் முடிந்த அளவு நீரை நம்பிப் பிழைப்பு நடத்துவதைக் குறைத்துக் கொண்டுள்ளார்கள்.

அடுத்தது - குழாயில் வரும் நீர் கூடப் பனிக்கட்டியாகி விடும் என்பதால் நீரில் காரீயமோ வேறு ஏதோவொரு வேதிப் பொருளோ கலப்பதாகக் கேள்வி. அதனால், "வெந்நீராகவே வருவதைப் பிடித்துக் குடிக்காதீர்கள்; குடிநீர்க்குழாயில் வருவதை மட்டும் பிடித்துக் குடியுங்கள்!" என்று சொன்னார்கள். இது தெரியாமல் முதற் சில நாட்கள் நேரடியாக வெந்நீர்க் குழாயில் இருந்து வருவதைப் பிடித்தே குடித்து விட்டேன். காப்பி போடும் போது கூட வெந்நீர்க் குழாயில் வரும் நீரைப் பிடித்துப் போட்டால் நேரம் மிச்சம் என்று நம் இந்தியப் புத்திசாலித்தனத்தைப் பயன் படுத்தியது முட்டாள்தனம் என்று முடிவானது.

முதற் சில நாட்களுக்குப் பின் உடம்பெல்லாம் ஒருவித அரிப்பு. வெந்நீர் குடித்ததன் விளைவோ என்று விசாரித்தால், அதெல்லாம் முதன் முதலில் குளிர்ப் பிரதேசங்களுக்கு வரும் நம் போன்றோருக்கு ஜகஜம் என்றார்கள். என்னவென்று கேட்டால், சிலர் குளிர் காரணம் என்றார்கள்; சிலர் அந்தக் காரீயம் கலந்த தண்ணீரின் காரியம் என்றார்கள். கடைகளில் அதற்கென்றே ஒரு க்ரீம் கூடக் கிடைக்கும் என்று கேள்விப் பட்டேன்.

சாலை ஓரங்களில் இருக்கும் சிக்னல் கம்பங்களின் கீழ்ப் பகுதியில் ஒரு பட்டன் இருக்கிறது. அதை அழுத்தினால் உடனடியாக நாம் சாலையைக் கடப்பதற்கு வசதியாக வாகனங்களுக்கு சிவப்பு விளக்கு விழுந்து, நடந்து செல்வோருக்குப் பச்சை விளக்கு எரிகிறது. இந்த மாற்றம் உடனடியாகவே நடக்கிறது. இந்த வசதியை சிங்கப்பூரிலும் பார்த்தேன். ஆனால், சிங்கப்பூரில் உடனடியாக சிக்னல் விழுவதில்லை. 'அழுத்தினால் விழும், இல்லாவிட்டால் விழாமலே போகலாம்' என்பதே சிங்கப்பூரின் கணக்கு. இலண்டன் கணக்கு - 'அழுத்தியவுடன் விழும்!'. இந்தியாவில் எங்கும் இது போன்ற வசதி பார்த்ததாக நினைவில்லை. கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் இயல்பாகவே வாகனங்கள் நிறுத்தப் படும் இடைவெளியில் நடந்து செல்வோருக்கும் வாய்ப்பளிக்கப் படும். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் அதில் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லையே என்பதே அவர்களின் கணக்கு. அதனாலேயே அப்படியொரு வசதி வைத்திருக்கிறார்கள். இந்தியாவில்தான் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்றே ஒன்று இல்லையே. அதனால் அது தேவையும் இல்லை.

அது போலவே இன்னொன்றும் பார்க்க முடிந்தது. நடப்போர் கடக்கும் வரிக்கோடுகள் (ZEBRA CROSSING) இருக்கும் இடங்கள் அனைத்திலும், அருகில் ஆள் நிற்பதைக் கண்டாலே வண்டியை நிறுத்தி விடுகிறார்கள். நடந்து கடப்பவர்கள், அவ்விடங்களில் நின்று கவனிக்கவே வேண்டியதில்லை. கண்ணை மூடிக் கொண்டு உள்ளே நுழையலாம். கோடுகளைக் கண்டு விட்டாலே மெதுவாகி நின்று செல்ல வேண்டியது வாகன ஓட்டிகளின் கடமை. அதுவும் நடந்து கடப்பவர்கள் எது பற்றியும் கவலைப் படாமல் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அன்ன நடை போட்டு ஆற அமர மெதுவாகக் கடப்பதைக் கண்டால் சீரணிக்கவே முடிவதில்லை. அப்படி ஒரு காட்சியை நம்ம ஊரில் கற்பனை பண்ணிப் பாருங்கள். திட்டியே கொன்று விடுவார்கள். நாளைக்குச் சாகிற மாதிரி இருக்கும் பெரியவர்களைக் கூட, வயதுக்குக் கூட மரியாதை கொடாமல், அவர்களுடைய அம்மாவைப் பற்றியெல்லாம் திட்டி அவமானப் படுத்தி விடுவார்கள். இதையெல்லாம் பார்த்தால் அங்கே நடப்போர்தான் ராஜா போலத் தெரிகிறது. வாகனம் ஓட்டுபவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். அங்கு போய் நம்ம ஊரில் போல ஓட்டினால், பெரும்பாலும் முதல் இரண்டு மூன்று நாட்களிலேயே கம்பி எண்ணப் போக வேண்டியதாகி விடும். அது போன்ற அமைப்பிலேயே பழக்கப் பட்டு விடுபவர்கள், நம்ம ஊரில் வந்து வரிக் கோடுகள் இருக்கும் இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு கடந்தால், என்ன ஆகும் என்று எண்ணிப் பாருங்கள். முக்கியமாக அங்கிருந்து வரும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இது பற்றியெல்லாம் நன்கு சொல்லிக் கொடுத்து அழைத்து வரப்பட வேண்டும். இல்லையேல், பெரும் ஆபத்துகளுக்கு உள்ளாக நேரலாம்.

இப்படி நடந்து செல்வோர் அவ்வளவு மதிக்கப் படுவதற்கு ஒரு காரணம் - அவர்களின் எண்ணிக்கைக் குறைவு. எப்போதாவது ஒருமுறைதான் அப்படி யாராவது குறுக்கே வருவார் என்றால், நடந்து கடப்போருக்காக நிறுத்தி வேடிக்கை பார்த்து வழியனுப்பி வைத்து விட்டுப் போவது பிரச்சனையில்லை. நம்ம ஊரில் அப்படி ஒவ்வொருவரையும் நிறுத்தி நிதானமாக மரியாதை செலுத்தி அனுப்பிக் கொண்டிருந்தால் வாகனங்களில் அலுவலகம் செல்பவர்கள் மாலை ஆறு மணிக்குத்தான் வேலைக்குப் போய்ச் சேர முடியும். இரயில்களில் எல்லாம் உச்ச நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. நகரத்தின் மையப் பகுதியில் பல இடங்களில் நெருக்கடி அதிகமாக இருப்பது போலவே தெரிகிறது. அதைப் பற்றி அங்கிருப்பவரே ஒருவர் சொன்னார். "இங்கே சில இடங்களில் மட்டும்தான் கூட்டமாக இருக்கும். இந்தியாவில் போல வீதிகளில் எல்லாம் கூட்டம் கூட்டமாக இராது. எங்கள் வீதிகளில் பெரும்பாலும் ஈ காக்கா கூடக் காண முடியாது!" என்றார். சில நேரங்களில் கூட்டத்தையும் பல நேரங்களில் அமைதியையும் விரும்பும் எனக்குக் கூட அவர்களின் வீதிகளில் இருந்த அமைதி அச்சமூட்டுவதாகவே இருந்தது. இதுக்கு சலசலப்பே பல மடங்கு பரவாயில்லை என்றுஎண்ண வைத்து விட்டார்கள். :)

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

  1. நடப்பவர்கள்தான் ராஜா. ஆஹா, கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. பனிமழையா ??? முதலில் அழகாகத் தான் தெரிந்தது. கனடாவின் பனிமழை கொடூரமானது சகோ. லண்டன் எல்லாம் பரவா இல்லை !!! இப்போது எல்லாம் வெயிலே தேவலை ..வாழ்ந்துவிடலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது..

    மற்றப்படி பெரு நகரில் வாழ்ந்தாலும் எங்கள் தெருக்களில் ஈ காக்கா கூட பார்க்க முடியாது .. சம்மரிலே இப்படி எனில் விண்டரை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் ...

    கூட்டமாக மனிதர் சகமாக வாழ்ந்துவிட்ட எனக்கு இதுவே தனிமையாகத் தான் தோன்றுகின்றது.

    இங்கு வெளியூர்களில் கிராமங்களில் நிலைமை இதைவிட மோசமாக இருக்குமாம் !!!

    நல்லதொரு பதிவு சகோ. பலருக்கு வியப்பைத் தரும் !

    பதிலளிநீக்கு
  3. @பழனி.கந்தசாமி, வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா. உண்மைதான். பார்க்க அழகாக இருந்தது கேட்க இனிமையாக இருப்பதில் வியப்பில்லை.

    பதிலளிநீக்கு
  4. @இக்பால் செல்வன், வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ. குளிர்ப் பிரச்சினையில் கனடாதான் நம்பர் ஒன் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்களும் அதை உறுதி செய்கிறீர்கள். அதையும் பார்த்து விட வேண்டும் என்று ஒரு நப்பாசை வருகிறது. பார்க்கலாம், முடிகிறதா என்று.

    உண்மைதான். கூட்டங்களில் சிக்கிச் சின்னா பின்னமாகி அமைதி தேடி அத்தகைய இடங்களுக்குப் போவோருக்குக் கூட மித மிஞ்சிய அமைதி அதை விடச் சின்ன பின்னமாக்கி விடுகிறது. :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி