கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 10/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

போக விட்டானா அவன்?! இல்லையே. யாரவன்? ஒரு சூதாட்டக்காரன். என்ன செய்தான்? ஒரு எலுமிச்சம் பழத்தையும் மூன்று கிண்ணங்களையும் கைகளில் வைத்துக் கொண்டு ஏதோவொரு சித்து விளையாட்டுக் காட்டினான். கிண்ணங்களை எலுமிச்சம் பழத்துக்கு மேல் கவிழ்த்தி கையை இங்கிட்டும் அங்கிட்டும் ஆட்டி பழத்தை இடம் மாற்றி இறுதியில் பழம்  எங்கே இருக்கிறது என்று கேட்பானாம். சுற்றியிருக்கிற முட்டாள்கள் எல்லாம் கையில் இருக்கிற காசைக் கட்டி, "இதற்குள் இருக்கிறது... இதற்குள் இருக்கிறது..." என்று கரைவார்களாம். சரியாகச் சொன்னவர்களுக்கு கட்டியதை விட இரண்டு மடங்குப்  பணம் ஆட்டத்தை நடத்துபவன் கொடுப்பானாம். தப்பாகச் சொன்னவர்களின் பணத்தை அவன் எடுத்துக் கொள்வானாம். இதைக் காலம் காலமாக தினம் தினம் பாலம் பார்க்க வருபவர்களிடம் காலை முதல் இரவு வரை செய்து கொண்டிருக்கிறான் போலும். இந்த மாதிரிச் சோலிகளைக் கண்டாலே முதல் வேலையாக அதற்கு எதிர்த் திசையில் நடக்க ஆரம்பித்து விடுவது என்  வழக்கம். இப்படி ஏதாவது நடந்தால் அங்கேயே மகுடி ஊதப் பட்ட பாம்பு போல மயங்கி விழுவது என் வீட்டுக்காரியின் பழக்கம் என்பது அன்றுதான் புரிந்தது. சந்திரமுகியில் ஜோதிகா மூஞ்சி போகிற மாதிரிப்  போனது அவள் மூஞ்சியும். விளையாட்டை விரட்டி விரட்டி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். 

விபரீதம் புரிய ஆரம்பித்து, "கிளம்பு..." "கிளம்பு..." என்று சொல்லிப் பார்த்தேன். கிளம்புகிற மாதிரித் தெரியவில்லை. அதை விடக் கொடுமை என்னவென்றால், அந்த அரை மணி நேரமும் நான் இருந்த உலகத்திலேயே அவள் இல்லை. இரண்டு-மூன்று முறை பார்த்து விட்டு, "நல்லாத் தெரியுது. எந்தக் கிண்ணத்தில் எலுமிச்சம் பழம் இருக்கிறது என்று. ஏன்தான் இப்படித் தப்புத் தப்பாகச் சொல்கிறார்களோ. இந்த முறை நான் சரியாகச் சொல்லி அவன் பணத்தை எல்லாம் பிடுங்கிக் கொண்டு வருகிறேன் பாருங்கள்!" என்று போனாள். அதன் பிறகு என்ன நடந்தது என்று சொல்ல வேண்டுமா? இந்த மாதிரிக் கதைகள் எல்லாத்துக்குமே முடிவு ஒரு மாதிரித்தானே இருக்கும். உண்ணாமல் தின்னாமல் அண்ணாமலைக்கு அள்ளிக் கொடுத்து விட்டு வந்தாள். எவ்வளவு என்று சொன்னால் அது பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்பதால் அதை மட்டும் சொல்லாமல் நழுவிக் கொள்ள அனுமதி கொடுங்கள். இந்த நிகழ்வின் மூலம் முதல் முறையாக முறைத்துக் கொள்ளும் (முறைத்துக் கொல்லும் என்று சொன்னாலும் தகும்!) வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அளவுக்கு மேல் சீண்டினாலும் அது திரும்பி நம்மைத்தான் அடிக்கும் என்பதைப் புரிந்து அத்தோடு சமாதானப் பட்டுக் கொண்டு அடுத்த இலக்கை நோக்கிப் பயணப் பட்டோம்.

அடுத்த இடம் எதுவாக இருக்க முடியும்? இலண்டன் செல்லும் தமிழர் எவரும் பார்க்காமல் திரும்பக் கூடாத இடம் அது. ஈஸ்ட் ஹாம். ஈஸ்ட் ஹாம் பற்றிப் பத்து வருடங்களுக்கு முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன். சென்று வந்த நண்பர்கள் கதை கதையாகச் சொல்லி இருக்கிறார்கள். ரஜினி-கமல் படங்கள் போட்ட சலூன் கடைகள் முதல் சாம்பார் சாதம் விற்கும் சாப்பாட்டுக் கடைகள் வரை எல்லாமும் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். போய் இறங்கியதும் "நீ ஏன் ஈஸ்ட் ஹாமில் தங்கக் கூடாது? அதுதானே உங்கள் பேட்டை?" என்று சில நண்பர்கள் வேறு கேட்டு நினைவு படுத்தினார்கள். "அங்கே செல்ல வேண்டுமானால் நாங்கள் எல்லாம் தனியாக விசா எடுத்துத்தானே வர முடியும்?!" என்று வெள்ளைக்காரர்களே கேலியாகச் சொல்வார்களாம். அந்த அளவுக்குத் தமிழ் மக்கள் கட்டி ஆளும் பகுதி. ஆனால், "அவ்வளவு பாதுகாப்பான இடம் இல்லை. கவனமாகப் போய் வா!" என்றும் சிலர் எச்சரிக்கை மணி அடித்திருந்தார்கள். இலண்டனிலேயே குப்பையான இடம் இதுதான் என்று நம்மவர்கள் சிலர் உரிமையோடு சொல்லி அனுப்பினார்கள். 'நம்ம பகுதியில் என்றால் இது கூட இல்லையென்றால் எப்படி?' என்று எண்ணிக் கொண்டே மதியச் சாப்பாட்டுக்கு சாம்பார் சாதம் சாப்பிடப் போய் இறங்கினோம். 

இரயில் நிலையத்தில் இறங்கி சிறிது தொலைவு நடந்தால் வசந்த பவன் வந்தது. கடை முழுக்க பச்சைத் தமிழ் முகங்கள். ஓரிரு வெள்ளைக்காரர்களையும் காண முடிந்தது. தமிழ்நாட்டில் சாப்பிட்ட மாதிரியான சுவையும் உணர்வும் கிடைத்தது. சாப்பிட்டு முடிந்ததும் அங்கிருக்கும் முருகன் கோயில் பற்றி விசாரித்தோம். ஆனால், குளிரில் நடக்கவோ பயணிக்கவோ தெம்பு சிறிதும் இல்லை. பனிமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சுக்கள் வந்தன. நல்ல பிள்ளையாக வீடு திரும்புவதுதானே நல்லது. ரஜினி-கமல் படம் போட்ட சலூன் கடையைக் கூடப் பார்க்க முடியவில்லை. இலண்டனில் பார்க்க வேண்டிய இன்னொரு முக்கியமான இடத்தையும் பார்த்த திருப்தியில் வீடு திரும்ப முடிவு செய்து அந்த ஒரு சாலையை (ஹை ஸ்ட்ரீட்) மட்டும் பார்த்து விட்டு அப்படியே திரும்பி இரயில் நிலையம் நோக்கி நடந்தோம். அவ்வளவு ஒன்றும் குப்பையாக இல்லை. ஒருவேளை நாங்கள்தான் குப்பையான பகுதிகளைப் பார்க்க வில்லையோ என்னவோ. என்னதான் நம்ம பகுதி என்றாலும் வீடுகள் அனைத்தும் சாரை சாரையாக பிரிட்டிஷ் பாணியிலேயே இருந்தன. 

திரும்பும் வழியில் வித்தியாசமாக ஏதாவது முயற்சிக்க வேண்டும் என்று அதிகம் புழக்கம் இல்லாத பாதையைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையில் குளிர்/ பனிமழை காரணமாக இரயில் சேவை பாதியில் தடை பட்டு, கொல்லும் குளிரில் பேருந்துக்குக் காத்துக் கிடந்து, வந்த பேருந்திலும் அடித்துப் பிடித்து ஏற முடியாமல் சிரமப் பட்டு, நாய்ப்பாடு பட்டு ஒரு வழியாக வீடு திரும்பினோம். காலை மிதித்தான்-கையை இடித்தான் என்று கெட்ட வார்த்தை பேசித் திட்டிச் சண்டை போட்டுக் கொண்ட காட்சி ஒன்றையும் பார்த்து ஆடிப் போனோம். அது இலண்டனின் பிரச்சனையோ இங்கிலாந்தின் பிரச்சனையோ இல்லாமலும் இருக்கலாம். அந்தப் பகுதியின் பிரச்சனையாகக் கூட இருக்கலாம். நீண்ட காலமாக இலண்டனில் இருப்பவர்கள் கூட சிறிது வியப்படையத்தான் செய்தார்கள் இதைக் கேள்விப் பட்டு.

ஓர் உப்புக்கல்லுக்குக்  கூடப் பிரயோசனமில்லாத மாதிரியான பல வீண் பழக்கங்கள் நமக்கு உண்டு. அதில் ஒன்று, வழியில் போகிற வருகிற ஆட்களைப் பயமுறுத்துவது போலக் குர்ரென்று பார்ப்பது (அது பற்றி இங்கே சொடுக்கிப் படியுங்கள்!). அதில் எனக்கோர் இன்பம். அப்படிப் பார்த்து பார்த்து அவர்கள் பற்றி ஏதாவது கணிக்கவும் கற்பனை செய்யவும் முயல்வது. அது ஓர் ஈத்தர வேலை என்பது எனக்கும் தெரியும் என்றாலும் என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தானே இத்தனையும் பேசிக் கொண்டிருக்கிறேன். அதனால் அதையும் சொல்லி விடுகிறேன். அதிலும் குறிப்பாக, வெளியிடங்களில் நம்மவர்களை உற்றுக் கவனித்து வேடிக்கை பார்ப்பது நம்மில் நிறையப் பேருக்கு வாடிக்கைதானே. பெங்களூர் போன காலத்தில் அங்குள்ள தமிழர்களை அப்படித்தான் வேடிக்கை பார்ப்பேன். அது போல வெளி நாடுகளில் இந்திய முகங்களைக் கூடுதல் உரிமையோடு வேடிக்கை பார்ப்பேன். அதுவும் இலண்டன் கொஞ்சம் தொலைவில் இருக்கும் ஊரல்லவா? அப்படிப் பார்க்கும் போது அங்கே இருக்கும் நம்மவர்களை அல்லது அவர்களின் பார்வைகளை இரு வேறு விதமான ஆட்களாக அல்லது பார்வைகளாகப் பிரிக்க முடிந்தது. ஒன்று, 'ஆகா, நம்மைப் போலவே நம்ம ஊர்க்காரன் ஒருத்தன் பரக்கப் பரக்கப் பராக் பார்த்துக் கொண்டிருக்கிறான்!' என்று ஒருவிதப் பாசத்தோடு பார்த்துச் செல்வோர் அல்லது அவர்களின் பார்வை. இன்னொன்று, 'ஏய், என்னப்பு, இலண்டனுக்குப் புதுசா? நாங்கெல்லாம் இங்கதான் காலங்காலமா...' என்கிற மாதிரியான ஆட்கள் அல்லது பார்வை. அவர்கள் பாட்டுக்கு எதையோ யோசித்துக் கொண்டும் சென்றிருக்கலாம். நமக்குத்தான் கண்ணில் நொல்லையோ என்னவோ.

மனைவியும் மகளும்!
அடுத்ததாக இலண்டனில் பார்க்க வேண்டிய இடம் எதுவென்று சொல்லுங்கள். பிரிட்டிஷ் அருங்காட்சியகம் (BRITISH MUSEUM) தானே. அங்கும் சென்றோம். அன்றே அல்ல. அடுத்த வாரம். ஒரு வாரத்தில் ஓர் இடத்துக்கு மேல் பார்க்கக் கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டவன் நான். இரண்டு இடங்கள் பார்த்ததே பெரிய சாதனை. அதனால் மூன்றாமிடம் அடுத்த வாரம்தான் முடியும். கொள்கைப் படியே நன்றாகத் தூங்கி எழுந்து மெதுவாகத் தயாராகிக் கிளம்பி அருங்காட்சியகம் நோக்கிப் புறப்பட்டோம்.

அதற்கான பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து கொண்டிருந்த போது ஒரு சிறிய அனுபவம். வாழ்க்கை முழுக்க மறக்க முடியாதது. அருங்காட்சியகத்தில் பார்த்த பொருட்கள் கூட ஒன்று கூட இப்போது சரியாக நினைவில்லை. ஆனால் இது இருக்கிறது. காலா காலத்துக்கும் இருக்கும். எப்போதும் போல மகள் ஏகப்பட்ட கேள்விகளை அள்ளிக் கொட்டிக் கொண்டு வாயடித்துக் கொண்டு வந்தாள். நான் எப்போதும் போல அவளைக் கவனித்தும் கவனிக்காமலும் எனக்கு வேண்டியதை மட்டும் முழுமையாகக் கவனித்துக் கொண்டும் வந்தேன். இந்திய(!) முகம் கொண்ட இளைஞன் ஒருவன் சைக்கிளை ஏதோ சரி செய்து கொண்டு உருட்டிக் கொண்டே எங்களோடு இணையாக ஒரு நிமிடம் நடந்து வந்தான். மகளின் தமிழால் ஈர்க்கப் பட்டு, எங்கள் பக்கம் திரும்பி, "நீங்கள் இலங்கையா?" ("ARE YOU SRI LANKANS?") என்று வெள்ளைக்கார உச்சரிப்பில் ஒரு கேள்வியைப் போட்டான். புரியாமல் திரும்பச் சொல்லச் சொன்னேன். இரண்டாம் முறை புரிந்ததும், "இல்லை, இந்தியர்கள்!" என்று மட்டும் சொன்னேன். "ஓ!" என்று பெருவிரலை உயர்த்தி ஓர் ஓப்போட்டு விட்டு வேகமாக விலகி நடக்க ஆரம்பித்தான். செவிட்டில் அடித்தது மாதிரி இருந்தது. 'அடப்பாவி, எங்கள் மீது ஏனப்பா இவ்வளவு கோபம்!' என்று உட்கேள்வி கேட்டு கோபத்தின் நியாயத்தை உணரும் முன் சிறிது விலகிப் போயிருந்தான். 'அட, நம்ம ஆளுய்யா இவன்...' என்று உடனடியாக உணர்ந்து, வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்ற அவசரத்தில், "ஆனால், தமிழர்கள்!" (BUT, TAMILIANS!") என்று கத்திச் சொன்னேன். 'பரவாயில்லை, இருக்கட்டும்!' என்கிற மாதிரி மீண்டும் பெருவிரலை உயர்த்திக் காட்டி விட்டு, வண்டியில் ஏறி ஓட்ட ஆரம்பித்தான்.

இந்த நிகழ்வு மனதைக் கடுமையாகப் பாதித்து விட்டது. 'கொலைகாரப் பாவிகளா!' என்று சபித்து விட்டுப் போவது போல இருந்தது. கொலைகாரர்களைத் தண்டிக்கும் (எவ்வளவு சிறிய அளவில் என்றாலும்) வாய்ப்பை விரல் நுனியில் வைத்திருந்த போதும் நூற்றி ஐம்பது ரூபாய்க்கு ஏமாந்து அவர்களிடமே வாக்குகளை விற்றவர்களும் கொலைகாரர்கள்தானே. அவனாவது "தமிழா?" என்று கேட்டிருக்கலாமே. இந்தியத் தமிழர்கள் என்றால் கிளம்பிப் போய்க் கொண்டே இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் அப்படிக் கேள்வியைப் போட்டானோ என்று தோன்றியது. "இலங்கையா?" என்று கேட்டால், "இந்தியா!" என்று சொல்வதுதானே முறை. "தமிழ்நாடு!" என்று சொல்லியிருக்க வேண்டுமோ என்று ஓர் உட்கேள்வி. அப்படிச் சொல்லியிருந்தால் மட்டும் நின்று பேசியிருக்கவா போகிறான்?! இந்தியாவில் இருக்கிற மற்றவர்களிடம் கூடப் பேசினாலும் பேசுவார்கள். நம்மிடம் பேசும் முன் நாலு முறை யோசித்து விட்டுப் பேச வேண்டும் என்றுதான் அவர்களின் பிள்ளைகளுக்குக் கூடச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்றும் தப்பில்லையே!

மூட்-அவுட் ஆகி விட்டது. அடுத்த வாரம்... அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்து விடுவோம்...

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

  1. நூற்று ஐம்பது ரூபாய்க்கு நமது ஓட்டை விற்ற நாம் தான் கொலைகாரர்கள்.. சத்தியமான வார்த்தை..தமிழர்கள் வீரமானவர்கள், நன்றியுடையவர்கள் என்ற நிலைமை என்றோ மாறிவிட்டது. நம்மில் ஒரு சிலர் தான் அதை கடைபிடிக்கிறார்கள். இப்போ நாம எல்லாம் தமிழ் மொழி மட்டும் பேசும் இயந்திரங்கள். நமக்கு முக்கியம் மொழி அல்ல.. இதோ இவை தான் ...ரஜினிகாந்த், விஜய் , அஜித், கமல் ,,,த்ரிஷா,,நயன் தார, சேவாக், டெண்டுல்கர்,டோனி,டாஸ்மாக், இதை தவிர நமக்கு எதுவும் தெரியாது... by sivachalam marimuthu..

    பதிலளிநீக்கு
  2. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி சிவாச்சலம் அவர்களே. உண்மைதான். நான் மொழி பற்றிக் கூடப் பேசவில்லை. அதற்கும் அடிப்படையானது பற்றிப் பேசுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. @கவி அழகன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அவர் விலகி ஓடினார் என்று கூடச் சொல்வதற்கில்லை. 'இவர்களிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது!' என்று கூட எண்ணியிருக்கலாம். மொழியைத் தவிர நம்மிடம் பொதுவானது என்ன இருக்கிறது?! கடந்த இருபது ஆண்டுகளில் முன்னெப்போதையும் விட நாம் விலகி நிற்கிறோம். இராமேசுவரத்துக்கும் தலைமன்னாருக்குமான தொலைவு கூடிக் கொண்டே வருகிறது! :(

    பதிலளிநீக்கு
  4. || இதோ இவை தான் ...ரஜினிகாந்த், விஜய் , அஜித், கமல் ,,,த்ரிஷா,,நயன் தார, சேவாக், டெண்டுல்கர்,டோனி,டாஸ்மாக், இதை தவிர நமக்கு எதுவும் தெரியாது.||

    அருமையான,வலிமையான ஆனால் வலிக்கும் உண்மை.

    தமிழர்களுக்கு சினிமாவையும் நடிக நடிகையர்களையும் தவிர உலகத்தில் வேறு எதுவும் நினைவில் இருப்பதாகத் தெரியவில்லை.

    ஆங்காங்கே இருக்கும் சுய பிரக்ஞை உள்ளவர்கள் முத்துக்குமார் போல சுய தகனமாக வேண்டும், அல்லது தமிழகத்திலேயே இல்லாது எங்காவது ஒழிந்து விட வேண்டும்..

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி, அறிவன் அவர்களே.

    கவலைப்படாதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறிக் கொண்டுதான் வருகிறது. நம் பேரப்பிள்ளைகள் காலத்திலாவது ஒரு மாற்றம் நிகழலாம்.

    பதிலளிநீக்கு
  6. தமிழ் நாட்டில் வன்னியர், தேவர், செட்டியார், நாடார், கவுண்டர், முதலியார், ஐயர் போன்ற பல சாதிக்காரன் இருக்கிறான். இந்து, முஸ்லீம், கிருத்துவம் போன்ற பல மதத்துக்காரன் இருக்கிறான். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற பல கட்சிக்காரன் இருக்கிறான். ஆனால், ஒரு தமிழன் கூட இல்லை.

    பதிலளிநீக்கு
  7. தமிழ் நாட்டில் வன்னியர், தேவர், செட்டியார், நாடார், கவுண்டர், முதலியார், ஐயர் போன்ற பல சாதிக்காரன் இருக்கிறான். இந்து, முஸ்லீம், கிருத்துவம் போன்ற பல மதத்துக்காரன் இருக்கிறான். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற பல கட்சிக்காரன் இருக்கிறான். ஆனால், ஒரு தமிழன் கூட இல்லை.

    பதிலளிநீக்கு
  8. சரியாகச் சொன்னீர்கள். நூற்றி ஐம்பது ரூபாய் கொடுத்தால் அதையும் மறக்கவோ மறைக்கவோ கூடத் தயாராகவும் இருக்கக் கூடும் சிலர்.

    பதிலளிநீக்கு
  9. //மொழியைத் தவிர நம்மிடம் பொதுவானது என்ன இருக்கிறது?! கடந்த இருபது ஆண்டுகளில் முன்னெப்போதையும் விட நாம் விலகி நிற்கிறோம். இராமேசுவரத்துக்கும் தலைமன்னாருக்குமான தொலைவு கூடிக் கொண்டே வருகிறது! :(// :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்புக்கும் வருத்தத்துக்கும் நன்றி, ஜீக்கா.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி