பிஞ்சுக் கனவு

அஞ்சாம் வகுப்பில்
ஆசிரியர் கேட்டார்
பின்னாளில் 
என்னவாக ஆசை என்று

பெரியவனாகையில்
அணுகுண்டும் ராக்கெட்டும் செய்யும்
அறிவியல் மேதையாக வேண்டுமென்றேன்

அஞ்சாம் வகுப்பின்
அந்தப் பிஞ்சுக் கனவு
இப்போது
பக்கத்துத் தெருவிலிருக்கும்
பட்டாசுத் தொழிற்சாலையில்தான்
நனவாகியிருக்கிறது

அடித்துச் சேர்த்து விட்டு வந்த
அப்பன் சொல்கிறான்
இப்போது - 
யார் போட்ட கண்ணோ?!

ஒளிந்திருக்கும் சாமிகளே
உங்களிடமொன்று கேட்கிறேன்...
கனவுகளையுமா
கண்ணு போடுவார்கள்?!

பெரியோர் நலம் பேணும் சரியோரே
இப்போது சொல்லுங்கள்...
குழந்தைத் தொழிலாளர் 
குவிந்திருக்கும் ஒரு தேசத்தில்
முதியோர் இல்லங்கள் மட்டும் எப்படி
முற்றிலும் தப்பாகும்?!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

  1. கடைசி வரிகள் நச். பட்டாசை மக்கள் புறக்கணிக்க வேணும் என்று சொல்லுவார்கள் சிலர். அப்புறம் அந்த குழந்தைகளுக்கு ஒரு வேளை கிடைக்கும் சாப்பாடும் கிடைக்காது என்று வேறு சிலர் சொல்லுவார்கள். என்ன செய்வது என்று புரிவதில்லை. அரசாங்கம் தலையிட்டு ஏதாவது செய்யுமா?

    பதிலளிநீக்கு
  2. நன்றி அனா. சரியாகச் சொன்னீர்கள். அரசாங்கம் நினைத்தால் எதுவும் செய்யலாம். நினைக்கணுமே...

    பதிலளிநீக்கு
  3. அன்றைக்கு அமெரிக்கா சுவிஸ் வங்கியிடம் சில பெயர்களைக் கொடுத்து இவர்களுக்கு கணக்கு இருக்கா என்று ஒரு மாதிரி வற்புறுத்தி வாங்கிவிட்டார்கள். இப்படி இந்தியாவும் செய்ய வேண்டும் என்று ஒரு பேச்சு வந்தது. அமெரிக்கா அரசாங்கத்தில் ஊழல் இருந்தாலும் நம்ம ஊர் அளவு இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சோனியாவில இருந்து உதயநிதி வரை கொழுத்துப் போய் இருக்கும் போது யாருடைய எக்கவுன்ட் டீலெயிலை கொடு என்று சுவிஸ் அரசாங்கத்திடம் இவர்களால் கேட்க முடியும். நானும் நீங்களுமா சுவிஸ் பாங்கில் எக்கவுன்ட் வைச்சிருக்கிறோம். வைச்சிருக்கிறவனே டீடெயில் கொடுன்னு கேட்கவா முடியும்.

    அந்த நிலையில் தான் அரசியல் இருக்கிறது. அரசியலில் இணைந்து கொள்ள வேண்டும் என்று இளைஞர்களிடம் சொன்னால் லூசா என்று பார்ப்பார்கள். தனியப் போய் என்னத்த கிழிக்கப் போறேன் என்று போக விரும்புவர்களும் விட்டுவிடுவார்கள். அது தான் உண்மை. கசக்கிறது. நினைத்தால் ரத்தம் கொதிக்கும். (காம் டவுன் அனா)

    அரசாங்கம் மாற வருசங்களாகும். நம்ம ஆளுங்க கிட்டத் தான் ஒற்றுமை இல்லையே. பிறகு எப்படி மாத்தறது. கருணாநிதி மேல் இருக்கிற கோவத்தில் ஜெயலலிதா. வேற சுயேட்சை வேட்பாளர் மீது நம்பிக்கையும் இல்லை. ஒரு முறை யாரோ ஒரு எம்.பி.ஏ ஆள் நின்ற போது கூட பலர் எதிர்த்தார்கள். பதிவுலகில் இருக்கும் சிலர் அவர் மேல் சேற்றை வாரி இறைத்தார்கள் யார் சொல்லுவது உண்மை என்று நடுவில் அகப்பட்ட எங்களுக்கே குழப்பம் என்றால் மக்களுக்கு எவ்வளவு குழப்பம்.

    எந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும் அரசாங்கம் முக்கியம். அதை மாற்ற எல்லோரும் கை சேர்க்க வேண்டும். நடக்காததை எல்லாம் கனவு காண்பதே உனக்கு தொழில் அனா என்று மைன்ட் வொயிஸ் திட்டுது.

    முடியாத இடத்தே புலம்பிவிட்டுப் போகிறோம். என்னால் கூட கொஞ்சம் ரௌத்திரம் கொஞ்சம் ஆதங்கம் என்று புலம்பத்தான் முடியும். நேரம் உள்ள போது படிச்சுப் பாருங்க. சிறு பிள்ளை எழுத்து தான். கொஞ்சம் அதிகமாகவே பொங்கி இருப்பேன். ஹி ஹி. (உங்க எழுத்துக்கு முன்னே அது கொடுமையான எழுத்து. சகிச்சுக்கோங்கோ.)

    பதிலளிநீக்கு
  4. சிரமம்தான். சிறிது சிறிதாக மாற வாய்ப்பு இருக்கிறது. அது நம் காலத்தில் நடக்காமல் போகலாம்.

    கண்டிப்பாக உங்கள் பதிவை ஒருநாள் ஆற அமர அமர்ந்து வாசிக்கிறேன். நானும் உங்களைப் போலவே அவை மீதான என் கருத்துரைகளைப் பதிவு செய்வேன். அதுதானே இணைய உரையாடல்களில் மிகவும் முக்கியம். நிச்சயம் நாம் பேச நிறைய இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கொஞ்சம் டீ போட்டு வைத்திருங்கள். கூடிய விரைவில் வருகிறேன். வாசித்து வாதிப்போம்.

    பதிலளிநீக்கு
  5. A harsh reality portrayed. When such serious issues are at hand, our government is busy defending tainted ministers and justifying everything. A sad state of affairs indeed.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி