நாட்குறிப்பிலிருந்து... - பாகம் 1

முந்தைய இடுகையில் நாட்குறிப்புடனான என் உறவு பற்றி எழுதியிருந்தேன். அதில் சொல்லியிருந்த படி, 1997-இல் இருந்து என்னுடைய அனைத்து நாட்குறிப்புகளையும் புரட்டியதில் கிடைத்த - இப்போதும் எனக்குப் பிடிக்கும் குறிப்புகளை இங்கு தருகிறேன்.

திருக்குறள்:
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
பொருள்: எதிரிகள் தொழுத கையிலும் அழுத கண்ணீரிலும் கூடக் கொடிய ஆயதங்கள் இருக்கக் கூடும். கவனமாக இருக்க வேண்டும்.

திருக்குறள்:
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
பொருள்: வாளைப் போல் வெளிப்படையாக எதிர்த்து நிற்கும் பகைவர்களிடம் பயப்பட வேண்டியதில்லை. சிநேகிதர் போல் நடிக்கும் பகைவர்களிடமே பயப்பட வேண்டும்.

பலாப் பழம் இந்தியாவில் தோன்றியது. புளியம்பழம் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தது.

கூரை மேல சோத்த வச்சா ஆயிரம் காக்கா
பொருள்: திறமையிருந்தால், அது எல்லோருக்கும் தெரிகிற மாதிரியான இடத்தில் இருந்தால், வேண்டியவர்கள் தேடி வருவார்கள்.

பத்தாவது தடவையாக 
விழுந்தவனுக்கு 
முத்தமிட்டுச் சொன்னது பூமி 
"ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ!"
-தமிழன்பன்

ஆடும் வயித்துக்கு மேய்ஞ்சிருக்கு
மாடும் வயித்துக்கு மேய்ஞ்சிருக்கு
ஆட்டையும் மாட்டையும் மேய்ச்சவன் வயிறு
ஆல இலை போலக் காய்ஞ்சிருக்கு

அரசியலிலும் சினிமாவிலும் இன்ன பிற தொழில்களிலும் துறைகளிலும் உள்ளதுபோல் இலக்கிய உலகில் மட்டும் என் வாரிசுகள் வந்து கலக்க முடிவதில்லை? திறமை மட்டுமே வெல்ல முடிகிற இடம் இது என்பதாலோ?

குக்கோடாவின் ரதிரகஸ்யாவில் சொல்லப்பட்டிருக்கும் பெண்களில் நான்கு விதம்...
பத்மினி: நல்ல அழகு, நிறம், நாணம், அளவான சாப்பாடு, நடையில் நளினம், பதிவிரதைத் தனம், வெள்ளை நிறப் பூ மற்றும் உடைகளில் ஈடுபாடு, கணவனின் மீது எப்போதும் காதல், முதுகிலும் இடது விலாப் புரத்துக்குக் கீழேயும் மச்சம், வசதியான வாழ்க்கை.
சித்தினி: பத்மினி மாதிரியே. ஆனால், அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம், குறைவான சாப்பாடு, அதிகமான காதல் உணர்ச்சி, சதைப் பற்றும், தொடையில் மச்சமும்.
சங்கினி: நடுத்தர உடல்வாகு, பூமி அதிர்கிற நடை, சத்தமான பேச்சு, சிவப்பு நிற ஆடைகளில் ஆர்வம், எதற்கும் அஞ்சாமை, அதிகமான காதல் உணர்ச்சி, நிறைய சாப்பாடு, நிறைய தூக்கம், கணவன் சரியில்லா விட்டால் மனம் போன போக்கில் வாழ்க்கை.
அத்தினி: எதற்கும் அடங்காமை, வேகமான நடை, கால் கட்டை விரலை விட நீளமான அடுத்த விரல், உடம்பில் நிறைய உரோமம், காரசார உணவில் பிடித்தம், வெட்கமின்மை, அதிகமான காம உணர்ச்சி, கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமாதல் மற்றும் கலைத்தல்.

ஆண்களில் மூன்று விதம்...
மான் ஜாதி: புனிதமானவர்கள், மனைவியைத் தவிர யாரையும் ஏறெடுத்தும் பார்க்காதவர்கள், கொஞ்சம் சாப்பாடு, அதிக பக்தி, கவர்ச்சி ஆனவர்கள். பத்மினிகளுக்குச் சரியான பொருத்தம்.
பறவை ஜாதி: மதமதப்பான பார்வை, மனைவியை அடக்கியாளும் குணம், நல்ல வசதி, முடி அலங்காரத்தில் பிரியம் (மீசை, தாடி, கிருதா கலக்கர்கள்!), அரசாங்க செல்வாக்குடையவர்கள், வேலை முடிஞ்சா வீடு, நெஞ்சிலும் முதுகிலும் மச்சம்.
குதிரை ஜாதி: வேடிக்கை-விசித்திரமான நடை, உடை, பாவனை, நிறையக் கெட்ட பழக்கங்கள், சண்டைப் பிரியர்கள், அத்தினிகளுக்குப் பொருத்தமானவர்கள். மாறி அமைந்தால் ஓடாது.

அம்பேத்கரின் மனைவி சவீதா ஒரு பார்ப்பனர்.

நான் படித்த காதற் கவிதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தது... :)
நீ நீயாய்...
நான் நாயாய்...

தமிழ் இலக்கியம் முழுக்க முழுக்கக் கவிதைகளாகவும் பாடல்களாகவும் மட்டுமே இருந்து வந்தது. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே சிறுகதை, நாவல், உரைநடை போன்ற நடைகள் அறிமுகப் படுத்தப் பட்டன.

இலையின் நிறம் பச்சை, பாலின் நிறம் வெண்மை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி மனப்பாடம் செய்பவன் இங்கிலீஷ் மீடியம் ஸ்டூடன்ட்.

தமிழ் நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களுக்குமே முதல் முதல்வர் ரெட்டி சமூகத்தவர். தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களிலும் இருக்கும் இனம். கேரளாவிலும் கூட மிகக் குறைந்த அளவில் உண்டு. ராஷ்ட்ரகூடர்களில் இருந்து வந்தவர்கள்.

திருடன் போலீஸ் விளையாட்டு இந்த நாட்டின் தேசிய விளையாட்டாகி விட்டது.

செல்லாத காசுக்குள்ளும் செப்பு இருக்கும்.

எனக்கொரு சந்தேகம் - பெண்ணிய விழிப்புணர்வின் இறுதிக்கட்டம் எப்படி இருக்கும்? இந்த பூமியின் கடைசிப் பெண்ணும் "நானும் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன்!" என்று சொல்வாளா? அறிவியல்தான் வலியில்லாமல் பிள்ளை பெற்றுக் கொள்ள வழி கண்டு சொல்ல வேண்டும்.

அடக்குதல், தோல் நோய்களையும் ஒவ்வாமையையும் நுரையீரல் சம்பந்தப் பட்ட நோய்களையும் உருவாக்குகிறது. பயப்படுதல், நரம்புத் தளர்ச்சியையும்; கவலைப் படுதல், வயிற்று உபாதைகளையும்; அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இதய நோய்களையும் உருவாக்குகின்றன.

அவர் ஒரு பலசரக்குக் கடைக்காரர். யாருக்கு என்ன வேண்டுமோ அதை அவரிடம் வாங்கிக் கொள்ளலாம்.
-திருவள்ளுவர் பற்றி பெரியார்

பட்டப் படிப்பில் தவறிய இராஜாஜி மூதறிஞர் ஆனார். பள்ளி இறுதித் தேர்வில் தவறிய அண்ணா பேரறிஞர் ஆனார்.

பூஜ்யம் கண்டு பிடித்தது இந்தியர். மற்ற எண்கள் அனைத்தும் கண்டு பிடித்தது அரேபியர்.
-முகமது பின் அஹமத்

புத்தகத்துக்குப் போட்டால் அட்டை; மனிதனுக்குப் போட்டால் சட்டை.

போலீஸ்காரர் - தொப்பியும் தொப்பையுமானவர்!


திருக்குறள்:
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
பொருள்: தேவையே இல்லை என நினைக்கிறேன்.

இலட்சுமணன் இராமனுடன் காட்டுக்குப் போனபோது அவனுடைய மனைவி ஊர்மிளை அவனுடைய தூக்கத்தையும் வாங்கிக் கொண்டு 14 ஆண்டுகள் இரவும் பகலும் தூங்கினாளாம்.

ஊட்டியில் சூடுன்னு வேலூரில் வீடு கட்டினானாம்.

பெண்ணைத் தொட்டுட்டா விடாதே; தம்மை விட்டுட்டாத் தொடாதே!

ஏசு சிலுவையில் இறந்து, உயிர்த்தெழுந்த கதையை தாமஸ் நம்ப மறுத்ததால், நேரில் பார்க்காமல் எதையும் நம்ப மறுப்பவர்களை DOUBTING THOMAS என்று அழைக்கத் தொடங்கி விட்டார்களாம்.

"நீங்கள் இந்தக் குலத்துக்கு விடுதலை வேண்டும் என்கிறீர்கள். இந்தக் குளத்தில் எங்கள் மக்கள் குளிக்க முடியாது. நீங்கள் இந்தக் கிணற்றுக்கு விடுதலை வேண்டும் என்கிறீர்கள், இந்தக் கிணற்று நீரை எம்மக்கள் உயிர் போகும்போது கூட தாகத்துக்கு அருந்த முடியாது. நீங்கள் இந்தச் சாலைக்கு விடுதலை வேண்டும் என்று கேட்கிறீர்கள், எங்கள் மக்களின் பிணங்கள் கூட இந்தச் சாலை வழியாகப் போக முடியாது. முதலில் எங்களுக்குச் சமூக விடுதலை கிடைக்கட்டும்."
-இந்திய விடுதலைக்கு முன் அம்பேத்கர்

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான்.

ஜனநாயகம் வீட்டு விளக்கு; சர்வாதிகாரம் காட்டுத்தீ.
-அண்ணா

இராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராகும் முன் அமைச்சராக இருந்த அனுபவமில்லாதவர்கள்.

ஏப்ரல் 6, 1997: இன்று கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தில் காணாமல் போல 10 ரூபாய்க்காக தன் மகளையே தீ வைத்துக் கொளுத்தி இருக்கின்றன இரண்டு மிருகங்கள். கடைசியில் அந்தப் பத்து ரூபாய் கிடைத்து விட்டதாம்.

பகையாளியை உறவாடிக் கெடு.

மனிதனின் மொத்த ஆயுட்காலம் நூறு வருடமெனக் கருதி, தலா இருபத்தைந்து ஆண்டுகளாக நான்கு கட்டங்களாகப் பிரிக்கப் படுகிறது. பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வனபிரஸ்தம், மற்றும் சந்நியாசம்.
- மனுஸ்மிருதி

1885-இல் அமெரிக்கத் தொழிலாளர் சங்கம் உருவாக்கப் பட்டது. வேலை நேரத்தை தினசரி எட்டு மணி நேரமாக்க வேண்டிப் போராட்டம் நடத்தினர். அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதற்கெதிராகத் தீர்ப்பளித்தது. 1886 மே 1-இல் சிக்காகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய காவல்படை நான்கு பேரைக் கொன்றது. துப்பாக்கி சூட்டைக் கண்டித்து மே 4-இல் மீண்டும் ஒரு போராட்டம் நடத்தப் பட்டது. முடிவில் ஆயுதப் படைக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் சேதமேற்பட்டது. தொழிலாளர்களின் தலைவர்கள் மீது வழக்குத் தொடரப் பட்டது. அவர்களுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப் பட்டது. 1987 நவம்பர் 11-இல் மூவர் தூக்கிலிடப் பட்டனர். 1890 முதல் மே 1-இல் தொழிலாளர் தினம் கொண்டாடப் படுகிறது.

அழுக்குத் தீரக் குளித்தவனுமில்லை; ஆசை தீர சுகித்தவனுமில்லை.

போலீசுக்கும் பொறுக்கிக்கும் என்ன வித்தியாசம்?
'அடிதடி' செய்தால் பொறுக்கி; 'தடி அடி' செய்தால் போலீஸ்!

மே 22, 1997: இன்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாதான் வெற்றி பெறுமென்று ஒரு ஜோதிடர் கூறியிருந்தார். ஆனால் வென்றது - பாகிஸ்தான். இதே ஜோதிடர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் - சோனியா என்று கூறியிருக்கிறார். பார்ப்போம்...

மே 26, 1997: இன்று, திண்டிவனத்துக்கும் வந்தவாசிக்குமிடையே உள்ள அருவடைந்தாங்கல் என்ற என்ற கிராமத்தில் ஒரு பயங்கர சம்பவம். பாலாஜி என்றொரு கொடியவனுடைய கனவில் மாரியம்மாள் வந்து, "உன் மனைவியையாவது கடைசிப் பிள்ளையையாவது நரபலி கொடுக்க வேண்டும்" என்று கேட்டதாம். தன்னுடைய கடைசிப் பையன் அன்பரசை கோயிலுக்குத் தூக்கிச் சென்று, "கண்ணை மூடிச் சாமி கும்பிடுடா" என்று கூறிவிட்டு, மகன் கண்ணை மூடியவுடன் அரிவாளால் வெட்டிப் பலி கொடுத்திருக்கிறான்.

ஜூன் 8, 1997: இன்று தஞ்சை பெரிய கோயிலில் நடந்த குடமுழுக்கு விழ - யாக சாலையில் தீப் பிடித்ததில் நூறுக்கும் மேற்பட்டோர் பலி. கும்பகோணம் மகாமகம், பத்ரிநாத், ஹஜ் பயண விபத்து என்று கடவுளைத் தேடித் போவோர் மரணமடையும் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

ஜூன் 15, 1997: இன்று காலை நாகலாபுரத்தில் இருந்து சிவகாசி கிளம்பினேன். கிளம்பும் முன்பே ஏதோ ஒருவித வேறுபட்ட உணர்வு. பஸ்ஸில் ஏறி அமர்ந்த நிமிடம் முதல் பயங்கர தலைவலி. பஸ்ஸில் பின்புறம் வெடிகுண்டு வெடிக்கப் போவது போல ஓர் உணர்வு. கடைசியில் வண்டி டயர் வெடித்து நின்றது. அப்புறம்தான் நிம்மதி.

ஜூலை 1, 1997: இன்று தமிழகத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு அறிவிக்கப் பட்டுள்ளது. இதுவரை கலவரங்களுக்குக் காரணமாயிருந்த - மாவட்டங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் வைக்கப் பட்டிருந்த தலைவர்களுடைய பெயர்களை நீக்குமாறு தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சர்தார் பட்டேல் பிறந்த நாளும் இந்திரா காந்தி இறந்த நாளும் ஒன்று. அக்டோபர் 31.

இந்தியா
மூன்று பக்கம் கடலாலும்
நான்கு பக்கம் கடனாலும்
சூழப்பட்ட நாடு.
- யாரோ

குருச்சேவ் இந்தியா வந்திருந்தபோது, பந்தாவாக ஆக்ராவுக்கு அழைத்துச் சென்று, தாஜ்மகாலைக் காட்டினார்கள். பார்த்ததும் அவர் சொன்னார்: "இவ்வளவு பெரிய கட்டடத்தைக் கட்டுவதற்கு எவ்வளவு அடிமைகள் உயிரைக் கொடுத்தார்களோ?".

அதிகாரப் பூர்வமான தகவல்படி, இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 கோடி.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி