என் மதுரை உறவினர்களுக்கு...

மதுரையைத் தம் தாய் மண்ணாக்கிக் கொண்டு வாழும் என் அன்பு உறவினர் அனைவருக்கும் உங்களில் ஒருவன் - உங்கள் அன்பு உறவினன் எழுதிக் கொள்வது. எப்போதும் போலவே, என் பேச்சுக்கள் உங்களுக்கு எரிச்சலை ஊட்ட வாய்ப்புள்ளது; நான் சொல்ல முனைவதை உங்களுக்குச் சரியாகச் சொல்லிப் புரிய வைக்க முடியுமா என்ற சந்தேகமும் அப்படியே உள்ளது. இப்போதைய சூழலில் ஒருவேளை எடுபடலாம் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஏதாவது அர்த்தமிருப்பதாகத் தெரிந்தால், தொடர்ந்து படியுங்கள், இல்லையேல், எப்போதும் போலவே, "போடா, நீயும் உன் புண்ணாக்கு எழுத்தும்!" என்று புறந்தள்ளி விட்டு அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள்.

"ஆக வேண்டிய வேலை என்றால்? என்ன வேலையெல்லாம் பார்க்கச் சொல்கிறாய்? கொழுப்புக் கூடி விட்டதா?" என்று கோபம் கொள்ள வேண்டாம். நான் சொல்ல வந்தது... வட்டி வசூலிக்கப் போவதோ, வாய்தாப் போடப் போவதோ, அடுத்த தலைவனை அடையாளம் கண்டு அடியாள் வேலைக்குப் போவதோ, சினிமாத் தியேட்டரில் கலாட்டா செய்யப் போவதோ, புதிதாய் ஒரு சாதிக் கலவரத்துக்குத் திட்டம் தீட்டப் போவதோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது உங்கள் பிரியம். ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்கிறேன். உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தும் உங்களை வேலைக்குப் போவென்று சொல்லி உங்கள் மேலான உறவை இழக்க மட்டும் எனக்கு விருப்பம் இல்லை.

முறையாக உழைத்துப் பிழைக்கும் - தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் - என் மற்ற உறவினர்கள் எப்போதும் போல், "இது எனக்கில்லை!" என்று எண்ணிக் கொண்டு, இந்தக் கடிதத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, பிள்ளைகளைப் பள்ளிக் கூடத்தில் விட்டு விட்டு வரவோ திரும்பக் கூட்டி வரவோ கிளம்புங்கள். உங்களைப் பற்றி எனக்கு எப்போதுமே கவலை இல்லை. எனக்குத் தெரியும். நீங்கள் மெதுவாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறீர்கள்; ஆனால், ஆழமாக ஊன்றி வளர்கிறீர்கள் என்று. இந்த நுணுக்கம் தெரியாதவர்கள்தாம் - நம்ம ஆட்கள் நிறையப் பேர், தவறான பாதைகளில் போய், தன்னையும் கெடுத்து ஊரையும் கெடுத்து தானும் கெட்டு ஊரும் கெட்டு இப்போது நட்டாற்றில் நிற்கிறார்கள்.

நான் இங்கு நலம். நீங்கள் யாரும் அங்கு நலமாய் இல்லை என்பதை நன்கறிவேன். நம் வீடுகளில் எத்தனை பேர் இன்னமும் அப்படியே இருக்கிறீர்கள் என்று கூடச் சரியாகத் தெரியவில்லை. ஏனென்றால், கடந்த சில வாரங்களாக நம் உறவினர்கள் நிறையப் பேர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளுக்கும் படையெடுத்துக் கொண்டிருப்பதைத் தினம் தினம் செய்தித் தாட்களிலும் தொலைக் காட்சிச் செய்திகளிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் காணும்போது, எப்போதும்போலவே, கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் கொஞ்சம் கவலையாகவும் உள்ளது. தப்புச் செய்தவர்கள் உள்ளே போவது கண்டு அடைகிற மகிழ்ச்சி. தம் இரத்த உறவுகள் எத்தனை முறை பட்டாலும் திருந்த மாட்டேன் என்கிறார்களே என்ற கவலை.

வெள்ளைக் காரன் காலத்தில் இருந்தே நம்மவர்களின் முக்கால்வாசி வாழ்க்கை சிறைகளில்தான் கழிகிறது. விடுதலைப் போராட்டம் முதற்கொண்டு திருட்டு வழக்கு வரை வெவ்வேறு காரணங்களுக்காக நம்மவர்கள் சிறைச் சாலைகளுக்குப் போய்க் கொண்டேதான் இருக்கிறார்கள். அன்று முதல் இன்றுவரை நம் சிறைச்சாலைகளுடனான உறவு சிறிதும் குறைந்த பாடில்லை. நம்மைக் கட்டிக் கொண்டு வரும் நம் குலப் பெண்களும் சரி, சென்ற பிறவியில் செய்த பாவங்களுக்காக நம் உயிரணுவில் உதிக்கும் நம் பிள்ளைகளும் சரி, நமக்குச் சரியான பாடங்களைச் சொல்லிக் கொடுக்காத நம் பெற்றோரும் சரி, ஒருக்காலும் நம்மை நினைத்துப் பெருமைப் படும் படி நம் வாழ்க்கை இல்லை. ஒருநாள் இரவு கூட அவர்களை நிம்மதியாகத் தூங்க விடக் கூடாது என்பது நம் குலசாமி கட்டளை அல்லவா? அதைக் கண்டிப்பாகக் காப்போம்.

நம் வீடுகளில், "மூன்று தலைமுறை மேலேயே இருந்தவனும் இல்லை; மூன்று தலைமுறை கீழேயே இருந்தவனும் இல்லை!" என்றொரு பழமொழி சொல்வார்கள் அடிக்கடி. நமக்கென்னவோ அது மூன்று வருடங்கள்தான் நீடிக்கிறது. அதிக பட்சம் ஐந்தாண்டுகள். ஆட்சி மாற்றம் வரும்வரை. முன்பெல்லாம் ஆட்சி மாற்றம் ஆனவுடன் நாமும் கட்சி மாற்றம் செய்து கொண்டு பிழைப்பை ஓட்டி விடுவோம். இப்போது அதுவும் நடக்காது போல்த் தெரிகிறது. அவர்களும் தெளிந்து விட்டார்கள். நம்மை நம்பினால் அவர்கள் பிழைப்பு நாறி விடும் என்று புரிந்து கொண்டு விட்டார்கள். நாம்தான் இன்னும் தெளியவேயில்லை. அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ளவே இல்லை.

திடீரென்று புதுப் பணக்காரனாகிறோம். டாம் டூம் என்று போட்டுத் தாக்குகிறோம். திடீரென்று பார்த்தால், ஓட்டாண்டியாகி, ஓடி ஒளியும் வேலைகளில் தீவிரமாகி விடுகிறோம். வாழும்போது நம் உறவினர் எல்லோரும் நம்மைச் சூழ்ந்திருந்து பூரித்துப் புளகாங்கிதம் அடைய வைக்கிறார்கள். நம் தாத்தாவுக்கும் அடையாளம் காண முடியாத மாதிரியான ஆட்கள் எல்லாம் ஊர்களில் இருந்து வந்து உறவினர்கள் என்று சொல்லிச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். வீழும்போது, உடன் பிறந்த சகோதரரும் பெண் கொடுத்த சம்பந்தகாரரும் கூட, நம்மை அடையாளம் தெரியவில்லை என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். நாமும் கூட்டம் சேரும்போது கொண்டாடிவிட்டு, குறையும்போது குறை சொல்ல ஆரம்பித்து விடுகிறோம்.

இது அவர்களுடைய தப்பா? அல்லது, நாம் வாழும் வாழ்க்கை முறையின் தப்பா? யோசித்துப் பார்த்தேன். நம்மிடமும் நிறையக் கோளாறு இருப்பதாகவே படுகிறது எனக்கு. சில நேரங்களில், இப்படி ஒரு பிழைப்புப் பிழைப்பதற்கு... நம்ம ஊர் வழக்கப் படி சொன்னால்... நாண்டு கொண்டு சாகலாமே என்று கூடத் தோன்றுகிறது. பேசுவது மட்டும் வாய் கிழிந்து காதோடு ஒட்டிக் கொள்ளுகிற மாதிரிப் பேசுகிறோம். சேர சோழ பாண்டியர் எல்லாம் நாங்கள்தாம் என்கிறோம். மன்னர் பரம்பரை என்கிறோம். வீரப் பரம்பரை என்கிறோம். ஆனால், எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நாம் செய்யும் தொழில் என்னவோ அதிகாரத்தில் இருப்போருக்குச் சொறிந்து விடும் வேலைதான். அதெப்படி ஒரு மன்னர் பரம்பரையில் தோன்றிய கூட்டம் இவ்வளவு கேவலமான நிலைக்குப் போக முடியும்? அதுவும் இவ்வளவு சீக்கிரமாக? எனக்கென்னவோ வரலாற்றில் சந்தேகம் வருகிறதப்பா. அதெப்படித் தமிழ்நாட்டில் மட்டும் மொத்த மக்கட்தொகையில் பாதிப் பேர் மன்னர் பரம்பரையாக இருக்க முடிகிறது?

நாம் மூன்று தலைமுறை வாழ்க்கை பற்றிச் சொலவடை போட்டுக் கொண்டு, மூன்று வருடம் கூட ஒழுங்காக வாழ முடியாமல் இருக்கிறோம். வேறு சிலரோ மூன்று தலைமுறை அல்ல மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக எந்தப் பெருமையும் அடித்துக் கொள்ளாமல் அமைதியாக நல்வாழ்வு வாழ்கிறார்கள். அதெப்படி அவர்களால் மட்டும் அப்படி முடிகிறது என்று நீண்ட நாட்களாகவே எனக்கொரு கேள்வி. விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் வாழ்க்கையை அருகில் இருந்தும் கவனித்துப் பார்த்தேன். அடிப்படையிலேயே அவர்களுடைய வாழ்க்கைக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் நிரம்ப வேறுபாடு தெரிகிறதப்பா... அண்ணன்-தம்பிகளே! மச்சான்-மாப்பிள்ளைகளே! கேட்டால், "வந்தேறிகள் பயந்தாங்கொள்ளிகள். நாம் மண்ணின் மைந்தர்கள். உசுரை மசுராக மதிப்பவர்கள்!" என்றொரு வில்லங்கமான விளக்கம் கொடுப்பீர்கள்.

சரி, அப்படி என்னதான் வேறுபாடு கண்டேன் என்கிறீர்களா? அதையும் சொல்கிறேன் கேளுங்கள். முதல் வேறுபாடு - நாம் ஏற்கனவே பேசியதுதான். அவர்கள் பயப்படுகிறார்கள். நம்மவர்களிடம் அந்தப் பழக்கமே இல்லை. தகிரியம் நல்லதுதான். ஆனால், தப்புப் பண்ணப் பயப்பட்டால்தானே உருப்பட முடியும்? "கொலை செய்வேன்; கொள்ளை அடிப்பேன்; அடியாள் வேலை பார்ப்பேன்; அல்லக்கையாக இருப்பேன்; பிரியாணிக்கும் சாராயத்துக்கும் பிள்ளை குட்டிகளைக் கூட மறந்து எது வேண்டுமானாலும் செய்வேன்!" என்று வாழும் வாழ்க்கை எப்படிப்பா நமக்கு மட்டும் அவ்வளவு பெருமையாக இருக்கிறது? இதையெல்லாம் வெளியில் சொன்னால், நம்முடன் பழுகுவதையே நிறுத்திக் கொள்கிறார்கள் பலர். அவர்களைப் பயந்தாங்கொள்ளிகள் என்பதா? அல்லது, ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பி வந்த நாம் அதற்கும் முந்தைய வாழ்க்கை முறையை விட்டு இன்னும் மீளவே இல்லை என்பதா?

பாண்டிய நாடு வீரம் விளைந்த பூமி என்பது உண்மைதான். ஆனால், நம்ம பூமியில் ஈரம் இல்லாததால், வேறொன்றும் விளையாததால்தானே நாம் அதை மட்டும் விதைத்துக் கொண்டும் விளைவித்துக் கொண்டும் இருக்கிறோம். முப்போகம் விளைகிற காவிரி ஆற்றுப் படுகையில் இருந்தா நாம் எல்லாவற்றையும் தூக்கி வீசி விட்டு மதுரைக்குச் சாதிக்க வந்தோம்? காய்ந்து போன மண்ணில் தம் பிள்ளைகளும் காய்ந்து மண்ணாகி விடக் கூடாது என்று பயந்து பஞ்சம் பிழைக்கத்தானே கடந்த அம்பது நூறு வருடங்களாக நம் முன்னோர்கள் மதுரையில் வந்து குடியேறினார்கள்? வந்தவர்கள் நன்றாக இருக்கும் நகர வாழ்க்கையைப் பார்த்து நாகரிகமாக மாற வேண்டியதுதானே. வந்து சேர்ந்த நகரத்தைத்தான் அவர்களுடைய வசதிக்கு ஏற்றமாதிரி மாற்றினார்கள். நம்ம ஊர்கள் மதுரை மாதிரி ஆவதற்குப் பதிலாக மதுரைதான் இப்போது நம்ம ஊர்கள் போல ஆகியிருக்கிறது.

"பிள்ளை குட்டிகளைப் படிக்க வைங்கடா!" என்று கருத்துச் சொல்ல ஒருவர் படம் எடுத்தால், அதை விட்டு விட்டு அதற்கு முன்பு படம் முழுக்கக் காட்டிய எல்லா மொள்ளமாரி வேலைகளையும் மட்டும் பிக்-அப் பண்ணிக் கொண்டு வருகிறார்கள் நம் இளைஞர்கள். எப்போது உருப்பட? படித்த பயபிள்ளைகளாவது உருப்படும் என்று பார்த்தால், படிக்கப் போன இடத்தில் சாதிக் கலவரம் செய்து கொண்டு, கல்லூரியில் பட்டத்துக்குப் பதிலா பாதியிலேயே கொடுக்கும் லெட்டரை வாங்கிக் கொண்டு வருதுகள். பழகப் பழகிக்கிட்டு வா என்று அனுப்பினால், முறைக்கப் பழகி விட்டு வருதுகள். உயர வழி பாருடா என்று அனுப்பி வைத்தால், உயர்வு தாழ்வு பேசிக் கொண்டு வந்து மேலும் மேலும் கீழே போக வழி சொல்லுதுகள்.

கிழக்கே நம்ம பகுதியில் காமராஜர் காலத்தில் ஒரு சாதிக் கலவரம் நடந்தது. காவல்த்துறை ஆட்கள் வந்து, கம்மாக் கரையில் கண்ணைக் கட்டி நிற்கதியாய் நிற்க வைத்து, மிருகத்தைச் சுடுவது போல சுட்டுப் போட்டார்கள். அத்தோடு நம் வீடுகளில் நீண்ட காலம் அடாவடித் தனம் குறைந்தது. அமைதி என்றால் என்ன என்று பெரிசுகள் நிறையப் பேர் விடாமல் பாடம் நடத்தினார்கள். இடையில் கொஞ்சம் திருந்தியது போலத் தெரிந்தது. வேதாளம் சும்மா இருந்தாலும் அதுக்குள்ளே இருக்கிற அதோட புத்தி சும்மா விடுமா? திரும்ப முருங்கை மரம் ஏறி விட்டது.

ஆறு வருடங்களுக்கு முன்பு தி.மு.க.வின் திசைப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டேன் என்று இருந்தவர்கள், அடுத்த வருடமே ஆட்சி மாறியதும், பட்டாளத்துக்கு ஆள் எடுக்கும்போது போகிற மாதிரி அஞ்சா நெஞ்சரிடம் போய், அடியாள் வேலைக்கும் அல்லக்கை வேலைக்கும் பதிந்து கொண்டு வந்தார்கள். ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்கிற அறிவு அவர்களுக்குத்தான் இல்லை; ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை கட்சி மாறும் நமக்கு இருக்க வேண்டாமா? "அவர்களுக்கே இல்லையே என்று நாங்களும் துணிந்து விட்டோம்!" என்று புத்தியைக் கடன் கொடுத்து விட்டு இப்போது கவலைப் படுகிறார் கந்து வட்டி மாமா ஒருத்தர். ஒன்று சொல்கிறேன் - அடியாள் வேலையும் அல்லக்கை வேலையும் பார்ப்பதை விட கந்து வட்டியும் கட்டப் பஞ்சாயத்தும் சாராய வியாபாரமுமே மேல் போல் தெரிகிறது.

'இதுவும் கடந்து போம்!' என்றொரு தத்துவம் சொல்வார்கள். நமக்கு எல்லாமே உடனே கடந்து போம். நாளையே இந்தப் பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்து விட்டால், பழைய படி மொள்ளமாரி வேலைகளை ஆரம்பித்து விடுவீர்கள். "பயந்தா தொழில் பண்ண முடியுமா? வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்!" என்றொரு விளக்கம் கொடுத்து விட்டு, வெளுத்த வெள்ளை வேட்டி சட்டையை மாட்டிக் கொண்டு, உடம்பெல்லாம் தங்கத்தைத் தொங்க விட்டுக் கொண்டு, முடிந்தால் ஏமாற்ற வசதியாக பக்திப் பழம் போல் நெற்றியில் திருநீறையும் பூசிக் கொண்டு, கிளம்பி விடுவீர்கள். உயிர் இந்தக் கட்டையை விட்டுப் பிரியும் முன் வயிற்றில் அடிக்க வேண்டிய குடும்பங்களின் எண்ணிக்கை நிறைய மிச்சம் இருக்கிறது என்று கூடுதல் வீரியத்தோடு ஆரம்பிப்பீர்கள்.

நம்ம க்ரூப் ஆட்கள் ஒரு சிலர் ஆரம்பத்தில் இருந்தே இந்த வம்பு தும்புகளுக்கெல்லாம் போகாமல் ஒழுங்காகப் படித்து முன்னுக்கு வந்து தம் பிள்ளைகளையும் படிக்க வைத்து நல்ல இடங்களில் கட்டிக் கொடுத்து நிம்மதியாக வாழ்கிறார்கள். முடிந்த அளவு கண் காணாத இடத்துக்குப் போய் விட்டார்கள். அல்லது, கண்ணுக்கு முன்பே வாழ்ந்து கொண்டு, நம்மையெல்லாம் கண்டுகொள்ளாமல் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பார்க்கும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும். உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்; ஆனால், சிக்கினால் நொங்கெடுத்து விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். அவர்களைப் போல வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் என்னைச் சுற்றி இருக்கிற எல்லோருக்கும் சொல்கிறேன்.

இன்னொரு க்ரூப் இருக்கிறார்கள். அவர்கள் ஆரம்பம் என்னவோ அருவருப்புதான். ஏதேதோ தொழில்கள் செய்து எப்படியோ முன்னுக்கு வந்தவர்கள். ஆனால், காசு வந்ததும் நிறைய மாறி விட்டார்கள். பிள்ளைகளாவது நல்லபடி வளரட்டும் என்றெண்ணி நம் பார்வைகளில் இருந்து விலகி நல்லபடி வாழப் பழகி விட்டவர்கள். பேரப்பிள்ளைகள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள் வாழ்க்கை முறையே மாறி விட்டது. அவ்வப்போது தேவை வந்தால் அவர்களுடைய பிறவிப் புத்தி வெளியே வரும். மற்ற படி, பெரும்பாலான நேரங்களில் அவர்கள் தரமாகத்தான் நடந்து கொள்கிறார்கள். எண்ணிக்கையில் குறைவுதான் என்றாலும் இவர்கள் போலாவது வாழ்ந்து விடுவோம் என்றுதான் என் சுற்றத்தார் எல்லோரிடமும் சொல்கிறேன்.

இதையெல்லாம் விட்டு விட்டு, இந்த வாழ்க்கையில்தான் கிக் இருக்கிறது என்று இப்படியே தொடர விரும்புவீர்களேயானால், உங்களுக்குச் சொல்வதற்கு என்னிடம் வேறொன்றுமில்லை. என்னைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களைப் பத்திரிகைகளில் பார்க்கும்போது கொஞ்ச நஞ்சம் வரும் வருத்தம் கூட வராத அளவு பழகிக் கொள்ள வேண்டும். நீங்களே அதெற்கெல்லாம் பெருமைப் பட்டுக் கொண்டு இருந்தாலும் இருக்கலாம். நான் போய் எதற்கு அதைக் கேவலமாகப் பேச வேண்டும். உங்களுக்கு என் மீது வருத்தம் வர வேண்டும்! விடுங்கள்.

* இன்னும் நிறைய எழுத வேண்டும் என நினைத்தேன். நானும் அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும் இல்லையா? அதான்... நினைவு வர வர வந்து சேர்த்து விடுகிறேன்.

கருத்துகள்

  1. Ayyo! Ipdiyellaam edhaiyum tappunnu pottu udaikkak koodaadhu... :)

    Thanks for reading and the comment, boss!

    பதிலளிநீக்கு
  2. I agree with you that we have to blame ourselves partly. With every change of govt, before switching loyalties, we the people should think. Was it not clear to the people joining Anjanenjar 6 years back that they were gong to face what they are facing today? I do not believe. I lived in Madurai for 4 years.

    பதிலளிநீக்கு
  3. Yes. I think, they just live for the day and don't worry about future. I am sure you would have met lot of my relatives in those four years... :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி