ரியா - சிங்கப்பூர் சீரியல்

சென்ற முறை சிங்கப்பூர் வந்திருந்த போது ஓட்டலில் தங்கி இருந்த போது ஒரு சில தடவைகள் இங்கும் ஒரு தமிழ்த் தொலைக்காட்சி இருப்பதைக் கண்டேன். வசந்தம் தொலைகாட்சி என்று பெயர். ஆனால், நிகழ்ச்சிகள் எதுவும் முழுதாகப் பார்க்கவில்லை. இந்த முறை குடும்பத்தோடு வந்து குடித்தனம் ஆரம்பித்திருப்பதால் தினமும் வசந்தம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. தொலைக்காட்சிக்கும் நமக்குமான தொலைவு மிக அதிகம் என்றாலும், கடல் கடந்து வாழும் நம் தாய்த் தமிழகத்து மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்கள் நம் பண்பாட்டைக் கட்டிக் காக்கும் அழகையும் பார்த்துக் களிப்பதற்காகவே ஆரம்பத்தில் கொஞ்ச காலம் அதனை அடிக்கடிப் பார்த்துக் கொள்வேன். முக்கியமாக வசந்தம் தொலைக்காட்சியின் செய்திகள் மிகவும் பிடித்திருந்தன. மொழியிலும் செய்தியிலும் தரம் நிறைய இருந்தது. பின்னர் மெதுவாக இந்தத் தொலைக்காட்சித் தொடரையும் அவ்வப்போது பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. நம்ம ஊர் சீரியல்கள் போல சவ்வுத் தன்மை இல்லாமல் இருப்பது போல் இருந்தது. அதுவே அவ்வப்போதின் அளவைக் கூட்டியது. தொடர்ந்து அதைப் பார்க்கப் பார்க்கப் பல வியப்புகள்.

தலைப்பே ஒரு விதமாக இருந்தது. ரியா என்று தமிழில் எழுதி இந்தியில் மாதிரி ஒரு கோட்டைக் கிழித்திருப்பார்கள். மேலே உள்ள படத்தில் பாருங்கள். தெரியும். அதன் நோக்கம் சரியாகப் புரியவில்லை. இந்தியர்களின் வாழ்க்கையைப் பற்றியது என்று சொல்ல முனைந்திருக்கிறார்களா அல்லது எல்லா இந்தியர்களையும் இணைத்து அழைப்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இங்கே இருக்கும் தமிழர்கள், முழுக்க முழுக்க இந்திய அடையாளத்தோடே வாழ்கிறார்கள். தமிழர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர் மிகக் குறைவே. தமிழே பேசி வாழ்ந்தாலும் மொத்த இந்தியாவுக்கும் பிரதிநிதிகளாகத்தான் தம்மைக் காட்டிக் கொள்கிறார்கள். அதுவும் தவறில்லை. அது மட்டுமில்லை. வசந்தத்தில் கூட வாரம் ஒருமுறை மற்ற இந்திய மொழிப் படங்களும் போடுகிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இதுவும் என்று நினைக்கிறேன்.

தொடர் ஆரம்பித்த காலகட்டத்தில்தான் நாங்கள் வந்திறங்கினோம் என நினைக்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே பார்த்த மாதிரித்தான் உணர்கிறேன். ஆரம்பித்த போது ஒரேயொரு பழகிய முகம்தான் தெரிந்தது. அது நாயகி உதய சௌந்தரியினுடையது. பார்த்த மாத்திரமே மனதில் பதிந்து விட்டார் உதய சௌந்தரி. காரணம் - நாங்கள் முதற் சில நாட்கள் பார்த்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் அவரே. அழகான தமிழில் பேசினார். அழகான தமிழ் என்றால்? நம்ம ஊர்த் தொலைக்காட்சி அழகிகளை விட நல்ல தமிழ். தமிழ் நாட்டிலேயே பிறந்து தமிழ் வழிக் கல்வி கற்று வளர்ந்து வந்தவர் போன்ற சரளம் பெரும் வியப்பாயிருந்தது. சென்னைக்கென்று - பெங்களூருக்கென்று ஒரு தமிழ் இருப்பது போல சிங்கப்பூருக்கேன்றும் ஒரு தமிழ் இருப்பது போலத்தான் முதலில் பட்டது. பின்னர் நன்றாகக் கவனித்துப் பார்த்ததில் இங்கே பேசும் தமிழ் அப்படியே சோழ நாட்டில் - செட்டி நாட்டில் பேசுவது போல இருக்கிறது என்பது புரிந்தது. உதய சௌந்தரி பெரும் அழகியில்லை. பார்த்ததும் இழுக்கும் தோற்ற வசீகரம் எதுவுமில்லை. பச்சைத் தமிழ் முகம். ஆனாலும் அவர் சிங்கப்பூர்த் தமிழர்கள் மத்தியில் ஒரு முக்கியமான நட்சத்திர முகம். அதற்கு ஒரே காரணம் - அவருடைய திறமை என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் அவரை மனதில் இருத்தியது அவருடைய பெயர். தமிழ் நாட்டை விட்டு வந்து இத்தனை  தலைமுறைகள் ஆகியும், மினுக்கித் தனத்தையே முதலீடாகக் கொண்ட இப்படியொரு துறையைத் தேர்ந்தெடுத்த பின்னும், அப்படியோர் அழகான தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு, "இப்படியெல்லாம் பெயர் வைத்துக் கொண்டால் என் தன்னம்பிக்கையை ஏதோ இடிக்கிறது!" என்றெல்லாம் கதை சொல்லாமல் இருப்பது.

இந்தத் தொடருக்கு ரியா என்று பெயர் வைத்ததன் காரணம் என்ன? இது சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா என்ற சகோதரிகள் பற்றிய கதை. ர்யா என்பதுதான் ரியா ஆகி விட்டது என நினைக்கிறேன். உதய சௌந்தரி, சௌந்தர்யா என்ற பெயரில் நடிப்பது நல்ல பொருத்தமாகவும் இருக்கிறது. ரியாக்கள் அழைக்கப் படுவது சௌ மற்றும் ஐஸ் என்ற பெயர்களில். முதற் சில நாட்கள் ரியாக்களாக நடித்திருப்பது உதய சௌந்தரியும் அவருடைய சகோதரியும் என்று எண்ணினோம். பின்னர் அவரே ஒரு பேட்டியில் பேசியதைப் பார்த்து விட்டு மனைவிதான் விளக்கித் தெளிவு படுத்தினாள் - இரண்டுமே உதயாதானாம். அதையும் இயக்குனர் சொல்லியே அழைத்து வந்திருந்தாராம் - தோற்றத்தில் மாற்றமே காட்ட மாட்டோம்; நடிப்பில் - பாவனையில் - செயல்பாடுகளில் காட்ட வேண்டும் என்று. சூப்பர் அல்லவா?

கதை என்ன? அது என்னவாக இருந்தால் என்ன! சீரியல் என்றால் அப்படியெல்லாம் எதுவுமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் வித விதமாகக் குழப்பத் தெரிந்தால் போதும் என்பதே நம்முடைய எதிர் பார்ப்பு. நம் பிரச்சனைகளை மறந்து லோல் படும் விதத்தில் பல பிரச்சனைகளைப் போட்டுக்  கடைந்து அவியல் வைத்து குவியல் குவியலாக வைப்பதுதானே அவர்களின் பணி. ஆனால் இந்தத் தொடர் அப்படியில்லை. குறைவான குழப்பங்கள் கொண்டிருந்தது. ஓர் அப்பா. ஓர் அம்மா. ஏற்கனவே ஒருவரைக் காதலித்து அவரோடு ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொண்டு வரும் அம்மாவை, முழுமையாகத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டு இரட்டைப் பிள்ளை பெற்றுக் கொள்ளும் அப்பா. இந்த இரட்டைதான் ரியா இரட்டை. அவர்களுடைய பெயரில் தொடர் இருப்பதால் இருவரும் நாயகிகள் - நல்லவர்கள் என்று எதிர் பார்க்கும் தமிழ்ப் பெரும் நம்பிக்கைக்கு ஆப்பு முக்கால்வாசித் தொடர் முடியப் போகும் நேரத்தில் விழுகிறது. ஒருத்தி நல்ல நாயகி, இன்னொருத்தி நொள்ள நாயகி என்று தெரிகிறது. ஐஸ் நல்லவள். சௌ நொள்ளவள். ஆனால் சௌதான் கலக்கல் பாத்திரம். ஐஸ் நிதானமானவள். சௌ பட்டாசு. பட்டாசு நல்லது என்று நினைத்தால், கடைசியில் அது மாறி மாறி ஏதாவது ஓர் ஆணைக் கவர்ந்து - கைவிட்டு இன்பம் கொள்கிற உளவியற் கோளாறு கொண்ட பேய்ப் பிறவி என்று தெரிய வருகிறது.

இந்தத் தொலைக்காட்சித் தொடரில் நமக்குத் தெரிந்த முகம் ஒன்றும் இருந்தது. அது நடிகை கோகிலா. "யாரடா அது?" என்கிறீர்களா? எனக்கும் அவ்வளவு சிறப்பாக நினைவில்லை. எந்தப் படத்தில் என்னவாக நடித்திருக்கிறார் - அவர் நடித்த படங்களிலேயே பிரபலமானது எது என்றெல்லாம் எதுவும் நினைவில் இல்லை. ஆனால், அவர் பெயர் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. முகச்சாயல் அப்படியே இருக்கிறது. முதுமை தட்டி விட்டது நன்றாகத் தெரிகிறது. சென்ற தலைமுறைத் தமிழர்களுக்கு - அதுவும் திரைப்படங்களில் ஆர்வம் உள்ளோருக்கு (எந்தத் தலைமுறையில்தான் நம்மவர்கள் திரைப்படங்களில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்கள் என்கிறீர்களா?) நன்றாகத் தெரிந்திருக்கும். அவர் ஓர் அருமையான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர்தான் ரியாக்களின் தாய். அது மட்டுமல்ல சிறப்பு. அவருடைய பாத்திர அமைப்பே இடியாப்பச் சிக்கல்கள் கொண்டது.

ஏற்கனவே ஒருவரோடு வாழ்ந்து ஓர் ஆண் பிள்ளையைப் பெற்றுக் கொண்டு விட்டு (அவன்தான் ரியாக்களின் அண்ணன்), பின்னர் சேகர் என்பவருடன் வந்து வாழ்ந்து இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறார். அவர்கள்தாம் ரியாக்கள். இப்படி ஏற்கனவே ஒருத்தரோடு வாழ்ந்து பிள்ளை பெற்றுக் கொண்டதை, அதன் பின்பும் அவரைத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கும் கணவர் மட்டுமே அறிவார். தம் பிள்ளைகள் மூவரிடமும் (!) அதை அப்படியே மறைத்து விடுவார்கள். ரியாக்கள் தம் அரை அண்ணனை முழு அண்ணன் என்று எண்ணி வளர்வார்கள். அண்ணனாகப் பட்டவன், அவர்களைத் தம் முழுத் தங்கைகள் என்றும் தன் தாயின் கணவனையே தன் தந்தை என்றும் எண்ணி வளர்வான்.

தாய், தந்தையைப் பெயர் சொல்லி அழைப்பதைப் பார்க்கும் பாக்கியம் நம்ம ஊரில் அடுத்த தலைமுறைக்குத்தான் கிட்டியுள்ளது. இங்கோ அது போன தலைமுறையிலேயே நடந்தேறி விட்டது. இதுவும் இது போன்ற வேறு பல காட்சிகளும் சிங்கப்பூர்த் தமிழர்கள் என்னதான் நம் பண்பாட்டைப் பட்டாடை உடுத்திக் காப்பாற்றினாலும் வேறு பல மேட்டர்களில் நம்மில் இருந்து சீக்கிரமே விலகிப் போயிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன. இது மட்டுமல்ல. டாஸ்மாக் புரட்சியிலும் தப்பி ஆம்பளைப் பயல்களே இன்னும் அந்தக் கடைகளின் பக்கம் ஒதுங்காமல் இருக்கும் அவலத்தைப் பார்த்த தமிழ் நாட்டவர் நமக்கு, சௌ குடிக்கும் மொடாக் குடி கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்கிறது. இதிலும் பண்பாட்டு விரிசல் கொஞ்சம் (கொஞ்சம்தான்!) தெரிகிறது.

இந்தத் தந்தை இருக்கிறாரே தந்தை! அவர் அநியாயத்துக்கு நல்லவராக இருக்கிறார். இப்படி நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்களா?! தன் மனைவியே பழசைக் கிளறி வருந்தினாலும் இவர் எதற்கும் அலுங்காமல் அரை மணி நேரம் கூடவே அமர்ந்து அவரைத் தேற்றுகிறார். அதை விடக் கொடுமை - அவருடைய மகனைத் தன் மகனாகவே பாவித்து அநியாயம் செய்கிறார். அவன் அவரை எப்படியெல்லாம் கடுப்படித்தாலும் கலங்காமல் நின்று கடமையைத் செய்கிறார். அது அவருடைய கடமையே அல்ல என்பதெல்லாம் தமிழ் நாட்டு நியாயமப்பா. நாகரிகமில்லாமல் பேசாதீர்கள்.

'சௌ'விடம் சிக்கிச் சின்னாபின்னப் படும் பாத்திரத்தில் விஷ்ணு என்கிற ஓர் இளைஞர் நடித்திருக்கிறார். உதய சௌந்தரிக்கு அடுத்த படியாக வசந்தம் தொலைக்காட்சியில் பிரபலமான ஆள் இவராகத்தான் இருக்க வேண்டும். நடிப்பு பட்டையைக் கிளப்பி இருக்கிறார். நல்லா இருக்கிற பையனை மனுசி கிறுக்காக்கி விடுவாள். சிங்கப்பூரில் பிறந்து இவர்கள் எல்லாம் இவ்வளவு அருமையாகத் தமிழ் பேசி நடிப்பது இன்னமும் மீள முடியாத வியப்பாக இருக்கிறது. அவருடைய தந்தையாக வரும் அலெக்ஸ் என்ற பாத்திரமும் அருமை. ஒரு மேட்டுக்குடித் தோற்றம். அதற்குள்ளும் ஒளிந்திருக்கும் முரட்டுத்தனம். அதற்குள் ஒளிந்திருக்கும் மகன் பாசம். எல்லாமே அருமையான அமைப்புகள். இவர்கள் எல்லோருமே தமிழ்ச் சினிமாவில் வாய்ப்புக் கொடுக்கப் பட வேண்டியவர்கள். ஆனால், கேள்விப் பட்டது என்னவென்றால், இவர்கள் எல்லோருமே இங்கு நடிப்பை முழு நேரத் தொழிலாகச் செய்வதில்லையாம். இன்ன பிற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே இதிலும் பகுதி நேரப் பங்கெடுத்துக் கொள்கிறார்களாம். முழு நேரத் தொழிலாகச் செய்ய வேண்டும் என்றால் அதற்கென்று ஓர் ஏமாளிக் கூட்டம் வேண்டுமே! அது இங்கே அவ்வளவு எளிதில் கிடைக்காது போலும்!

ரியாவின் அண்ணனாக நடித்திருப்பவருக்கு அப்படியே தமிழ் முகம். கடைசியில் அவருடைய உண்மையான தந்தை அவர் கண் முன்னே செத்துவிட, அதைக் காண வரும் தாய் கதறி அழுவதைக் கண்டு இவர் பதறுவதும், அதன் பின் அதுதான் தன் தந்தை என்று தெரிந்த பின், "இவ்வளவு நாள் நான் யார் என்றே தெரியாமலா வாழ்ந்தேன்!" என்று கதறுவதும் நல்ல நடிப்பு. அவருக்கு மனைவியாக வருபவர், பார்க்க அழகாக, "இவனுக்கு இவளா?" - "இவள் நாயகிகளை விட நன்றாக இருக்கிறாளே!" என்றெல்லாம் சொல்ல வைக்கிறார். கடைசிவரை அவர் நல்லவரா கெட்டவரா என்று புரியாமலே போய்விட்டது. எல்லாப் பாத்திரங்களையும் இரண்டில் ஒரு வகை என்று பிரிக்க முடியாவிட்டால் அந்தத் தொடரே தோல்வி அடைந்து விட்டது என்றல்லவா சொல்ல வேண்டியதிருக்கும்! அவருக்கு ஓர் அண்ணன் இருக்கிறான். மாதவ் என்று பெயர். படுபாவிப் பயல். நம்ம ஊராக இருந்தால், அந்த வேடத்தில் நடித்தவரைப் பார்க்கிற இடங்களில் எல்லாம், "டேய், திருட்டு மாதவ்... ஃபிராடு மாதவ்..." என்று சொல்லிக் கடுப்பேத்தி இருப்பார்கள். அந்த அளவுக்கு மொள்ளமாறித்தனம். சிங்கப்பூர்த் தமிழரிலுமாப்பா?!!!

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், அதன் தரம் பாராட்டப் பட வேண்டியது. தொலைக்காட்சித் தொடர் என்றாலே ஏழு காத தூரம் ஓடும் நம்மைப் போன்றோருக்கு இது போன்ற தொடர்களைப் பார்த்தால் கொஞ்சம் பயம் குறையும். அதற்கொரு முக்கியக் காரணம் - தொலைக்காட்சித் தொடர்களுக்கே உரிய மாதிரி வளவளவென்று நீட்டாமல் சரியான நேரத்தில் முடித்துக் கொண்ட தரம்! இப்படியே எல்லாத் தொடர்களும் முடிந்து விட்டால்... நாட்டுக்கு-வீட்டுக்கு-குடும்பத்துக்கு எவ்வளவு நல்லது!!!

கருத்துகள்

  1. சிறப்பாக எழுதி இருக்கிங்க, சிங்கப்பூர் சீரியல் அவ்வப்போது பார்ப்பதுண்டு, வேட்டை எல்லாம் விறுவிறுப்பாக போகும். மண் சார்ந்த நாடகங்கள் மட்டுமே வெற்றிபெரும் என்பதற்கு இவர்களது படைப்புகளும் சான்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, கோவி அவர்களே. உண்மைதான். நமக்கு எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கி வருகிறது என்பதுதானே பெரும்பாலான கதைகளின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. நம் நடைமுறைகளுக்கு ஒத்து வர வேண்டும். அல்லது நம் சிந்தனைகளுக்காவது ஒத்து வர வேண்டும்.

      நீண்ட நாட்களுக்கு முன்பே பேசத் திட்டமிட்டோம். நடக்கேவேயில்லை. கூடிய விரைவில் அழைக்கிறேன்.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி