ஒரு நடிகையின் வாக்குமூலம்

வசந்தம் தொலைக்காட்சியில் 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்றொரு படம் ஓடிக் கொண்டிருந்தது ஒருநாள். தொடர்ந்து பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்திருந்த சில காட்சிகள், அதன் பின் வந்த மனதை உலுக்கும் பல காட்சிகளையும் பார்க்க வைத்தன. பல வருடங்களுக்கு முன்பு குமுதத்தில் 'ஒரு நடிகையின் கதை' என்றொரு தொடர்கதை வந்தது. சினிமாக்காரர்கள் எல்லோரும் முதலமைச்சரிடம் மனுக் கொடுத்து அதைத் தடுத்து நிறுத்தினார்கள். வாராவாரம் கிளுகிளுப்போடு கொடுமைகளை எழுதிய எழுத்தாளர், கடைசி வாரத்தில் எழுதிய சில வரிகள் இப்போதும் நினைவுக்கு வருகின்றன. "இந்தத் தொடரை நிறுத்த முடிந்தவர்களால், ஒவ்வொரு நாளும் சினிமா மோகத்தோடு சென்ட்ரல் நிலையத்திலும் எழும்பூர் நிலையத்திலும் வந்திறங்கிக் கொண்டிருக்கும் - வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கும் - பெண்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியுமா?" என்ற கேள்வியோடு முடித்தார்.

அவ்வளவு கோபக்காரச் சினிமாக்காரர்கள் இந்தப் படத்தை எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. சினிமாக்காரர்களைப் பற்றிய முழுமையான தெரிவு (இந்தச் சொல் இந்த இடத்தில் தவறு என்பவர்கள் 'அறிவு' என்று போட்டுக் கொள்ளுங்கள்!) எதுவும் இல்லாமல் இருந்த கிராமத்து ஆட்களான எங்களுக்கு அந்தத் தொடர் உண்மையிலேயே பல அதிர்ச்சியான தகவல்களை அளித்தது. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பின், தொலைக்காட்சிகளின் புண்ணியத்தில் சுருங்கி விட்ட இவ்வுலகில் இப்போது எல்லோருக்குமே அங்கே என்னவெல்லாம் நடக்கிறது என்பது தெரிந்து விட்டதால், போகட்டும் என்று விட்டு விட்டார்கள் போலும்.

சினிமா மோகம் கொண்ட ஒரு பெண்ணின் கதையல்ல இது; கலை மோகம் கொண்ட ஒரு குடும்பத்தின் கதை எனலாம். கலை வாழ்வில் சோபிக்க முடியாமல் போய் விடுகிற தந்தை தன் மகளைப் பெரிய நடிகையாக்க விரும்பி நாசம் செய்கிற வாழ்க்கை நாயகியுடையது. தன் கனவைத் தன் பிள்ளைகள் மீது திணித்துக் கெடுக்கும் இன்னொரு கதை. சென்னையில் வந்திறங்கி நினைத்தது நடக்காமல் ஒருவேளைப் பூவாவே சிரமம் என்றாகிற போது தவறான சகவாசத்தால் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறார் தாய். பின்னர் மகளையும் அதே பாதையில் அனுப்பி வைக்கிறாள். முதல் நாள் தன் மகளை அனுப்பி விட்டுக் கதறி அழும் தாய் நம்மை உடைய வைக்கிறார். இந்தப் படத்தின் உச்ச கட்டக் காட்சி இதுதான் என்று சொல்லலாம். உடலை விற்று வாய்ப்புப் பெறுதல் என்பது இந்தத் துறையில் மிகச் சாதாரணமான ஒன்று என்பதை அழுத்தமாகக் காட்டியிருக்கிறது இந்தப் படம். சோகம் தோய்ந்த முகத்தை இயல்பாகவே கொண்டிருக்கும் சோனியா அகர்வால் மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் இந்த வேடத்தில்.

சில துறைகளில் முன்னுக்கு வர வேண்டுமென்றால் வாழ்க்கை முழுக்க உழைத்துச் சாக வேண்டும். செத்த பின்புதான் வெற்றியே ஏற்றுக் கொள்ளப் படும். சினிமாத்துறை அப்படியல்ல. ஒரே பாடல்க் காட்சியில் மாறி விடுகிற அவர்களுடைய கதாபாத்திரங்களின் வாழ்க்கையைப் போலவே அவர்களுடையதும் ஒரே படத்திலோ பாடலிலோ கூட மாறி விடுகின்றது. அப்படியொரு வளர்ச்சியை நடிகை அஞ்சலி (சோனியாவின் படப்பெயர்) பெறுகிறாள். அப்படியொரு வளர்ச்சியைச் சந்தித்த நடிகைகள் நிறையப் பேர் சந்தித்த-சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் அவளும் சந்திக்கிறாள். அவளை ஒரு விற்பனைப் பொருளாகவே பயன்படுத்தும் குடும்பம் மற்றும் சுற்றம், அவளுடைய ஆசாபாசங்கள் எது பற்றியும் கவலைப் படாமல், அவளை இரவும் பகலும் ஓர் இயந்திரமாகவே பயன் படுத்துகிறது.

எல்லாத்துக்கும் உச்ச கட்டமாக உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகனிடம் தன் பெற்ற பிள்ளையைக் கூட்டி விடும் தாய், தாய்மையின் புனிதத்தைச் சொல்லிப் பிழைப்பு நடத்தும் துறையில் அப்படித் தாய்களும் நிறைய இருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து விட்டாள். இவர்கள்தான் இப்படி என்றால், அவளைக் காதலிக்கும் உதவி இயக்குனனும் தான் இயக்குனராக ஒரே வழி அவளை இன்னொருத்தனோடு அனுப்பி வைப்பதுதான் என்று முடிவெடுத்துச் செயல்படுவது மனதை அதைவிட அதிகம் வதைக்கிறது. இறுதியில் இதற்கெல்லாம் சரியான முடிவாக அஞ்சலி துறவியாகி விடுவது, இது முடிவல்ல-துவக்கம் என்கிற மாதிரி - இத்தோடு கதை முடியவில்லை; இரண்டாம் பாகம் ஒன்று வரும் என்று உணர்த்துவது போல இருக்கிறது. துறவறத்தில் தானே இல்லறத்தை விடக் கிக் அதிகம் இப்போதெல்லாம். பொறுத்திருந்து பார்ப்போம்... உலகத் துன்பங்கள் அனைத்திலும் இருந்து விடுபட ஓடிய நடிகை, கடைசியில் சாமியாரிடம் மாட்டிக் கொண்டு துன்பப் பட்ட கதை வருகிறதா என்று!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி