கிரிக்கெட், மக்கட்தொகை மற்றும் இந்தியா

சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் பார்க்கும் போதெல்லாம் இந்தியா வெல்ல வேண்டும் என்றே வேண்டிக் கொள்வேன். அதுவும் முக்கியமான தொடர்களிலும் உலகக் கோப்பையிலும் என்ன விலை கொடுத்தாவது இந்தியா வென்று விட வேண்டும் என்று துடிப்பேன். ஏன்? அதேதான். சரியான விடை. ஏனென்றால், நான் இந்தியன். அது மட்டுமில்லை. இன்னொரு காரணமும் இருந்தது. என்ன அது? மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், இந்தியா வெல்கிற போதெல்லாம் ஒப்பற்ற அளவிலான உலக மக்கட்தொகை கொண்டாடிக் குதிக்கிறது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலேயே இந்தியாதான் அதிக மக்கட்தொகை கொண்டுள்ளது. எனவே இந்தியாதான் வெல்ல வேண்டும் என்றே சொல்வேன். இந்த உண்மையை அறிய உலகளாவிய அறிவெல்லாம் வேண்டியதில்லை. ஏனென்றால், சீனா கிரிக்கெட் ஆடுவதில்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நீண்ட காலமாகவே சரியான புள்ளிவிபரம் பற்றி அறிந்து கொள்ள ஆசைப் பட்டேன். இன்றுதான் அதற்கான நேரம் கொஞ்சம் கிடைத்தது. அதைப் பார்த்து சில அருமையான (!) கருத்துக்களைக் கண்டெடுத்திருக்கிறேன். இதோ...


ஆஸ்திரேலியா
22,567,780
நியூ சிலாந்து
4,393,500
இலங்கை
21,513,990
பாகிஸ்தான்
174,578,558
இங்கிலாந்து
49,138,831
தென் ஆப்பிரிக்கா
49,991,300
மேற்கிந்தியத் தீவுகள்
3,117,300
மற்றவை மொத்தம்
325,301,259
இந்தியா
1,191,000,000
மொத்தம்
1,516,301,259

இதில் இருந்து என்ன புரிகிறது?

1. கிரிக்கெட் விளையாடும் நாடுகள் அனைத்தையும் விட அதிக மக்கட்தொகை கொண்ட நாடு இந்தியா. தெரிந்த கதை! அடுத்த மேட்டருக்குப் போட்டும். :)
2. கிரிக்கெட் விளையாடும் எல்லா நாட்டு மக்கட்தொகையையும் கூட்டினாலும் அது இந்தியாவின் மக்கட்தொகையை விடக் குறைவுதான். தெரியாத கதை, அல்லவா? ஆமாம்! அதுக்கு என்ன இப்போ? இதுக்கு என்ன அர்த்தம் என்றால், எந்த நேரத்திலும் உலக அணி ஒன்றைக் கொடுத்தால் அதை அடித்து மண்ணைக் கவ்வ வைக்கிற அளவுக்கு நாம் திறமைசாலிகளாக இருக்க வேண்டும். இருக்கிறோமா? தெரியவில்லை!
3. அது மட்டுமில்லை - இந்தியாவின் மக்கட்தொகை மற்ற எல்லா நாடுகளின் மக்கட்தொகையையும் கூட்டினால் வரும் தொகையை விட 3.6 மடங்கு அதிகம். அப்டீன்னா இன்னா அர்த்தம் நைனா? அப்டீன்னாக்கா... நாம் முன்னே சொன்ன மாதிரி ஓர் உலக அணியைக் கொடுத்தால் அதை நம் நாட்டின் மூன்றாம் தர அணி கூட வீழ்த்தி விக்கல் எடுக்க வைத்து விட வேண்டும். இன்றைய சூழ்நிலையில் அது முடியுமா? நம் மூன்றாம் தர அணி இலங்கையின் மூன்றாம் தர அணியைக் கூட எதுவும் செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

இப்போது சொல்லுங்கள் - இந்த வெற்றிகளுக்கெல்லாம் நாம் இவ்வளவு ஆட்டம் போடுவது சரியா?

50 ஆஸ்திரேலியா அணிகளையும் 380 மேற்கிந்திய அணிகளையும் உருவாக்கி இருக்க வேண்டும் நாம். அப்புறம் ஏன் இந்தச் சின்னப் பசங்களைக் கூடத் "தொடர்ச்சியாக"  வெல்ல முடியாத மாதிரி ஓர் அணியை வைத்துக் கொண்டிருக்கிறோம்? அதை விடுங்கள். அவர்கள்தாம் தொலைவில் இருக்கிறார்கள் என்பதால் நம்மை விட நிறையத் திறமையானவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நம்ம தம்பிமார் ரெண்டுபேர் இருக்காங்களே. அவங்களைப் பார்ப்போம். 20 இலங்கை அணிகளையும் 7 பாகிஸ்தான் அணிகளையும் உருவாக்கி இருக்க வேண்டும். செய்தோமா? சென்னையில் ஒரு காலத்தில் தமிழ் நாடு அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் கோபாலன் கோப்பை என்றொரு தொடர் நடை பெரும். அதில் வந்து தோற்று விட்டுப் போவார்கள் இலங்கைப் பொடியன்கள். இன்று? இந்தியாவே அவர்களை முக்கித் தக்கித்தான் வெல்ல முடிகிறது ஒவ்வொரு முறையும்.

எல்லாத்தையும் விடுங்கள். குறைந்த பட்சம் ஐந்து உலகத் தரமான அணிகளாவது நம்மிடம் இருந்திருக்க வேண்டும் - வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மையம் என்று. ஒவ்வொரு அணியில் இருப்போருக்கும் உலகத் தரமான அடிப்படைத் திறமைகள் இருக்கலாம். ஆனால் அடிக்கடி உலக அரங்கில் ஆடி அதனை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு வசதிகள் கிடைக்காமல் போனதால் அவர்கள் அப்படியே வீணாகி இருக்கக் கூடும். ஒரு சொதக்கடா அணியை திரும்பத் திரும்ப உலக அரங்கில் விளையாட விட்டுப் பார்த்தால், உழைப்பு இருந்தாலே போதும்... அவர்கள் உலகத் தரம் பெற்று விடுவார்கள். அதுதான் இலங்கைக்கு நடந்தது. என் சின்ன வயதில் எல்லாம், இலங்கையும் இப்போதைய கென்யா மற்றம் வங்க தேசம் போல ஒரு பொடிப் பசங்க அணியாக இருந்தது.

மற்ற மாநிலங்களில் கல்லூரி அணியில் கூட விளையாடத் தகுதி பெற முடியாத பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ள கோவா மற்றும் பாண்டிச்சேரி போன்ற அணிகளுடன் ஆடி சச்சின் முன்னூறும் நானூறும் அடிக்கும் போட்டிகளை நடத்தும் ரஞ்சிக் கோப்பையை முதலில் நிறுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு முக்கியமான தொடரில் தோல்வி அடையும் போது, ஆஸ்திரேலியாவில் மட்டும் அருமையாக இருக்கும் ஆறே ஆறு அணிகள் கொண்ட உள்நாட்டு அணி அமைப்பு பற்றி எல்லோரும் பேசுவார்கள். திரும்பவும் வெல்ல ஆரம்பித்ததும் எல்லாம் மறந்து போகும். உலகக் கோப்பை நடைபெறும் வேளையில் அது பற்றி ஒரு தனி இடுகை இட்டிருந்தேன். அதையும் இங்கே வாசித்துக் கொள்ளுங்கள் - கிரிக்கெட்: சில முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள்!
இப்போது ஓர் அடி பின்னால் வைத்து இன்னொரு பெரிய விஷயம் பற்றிப் பேசுவோம். அதுதான் நமக்குப் பிடிக்காத விஷயம் ஆயிற்றே. ஆனாலும் பேசி விடுவோம். மித மிஞ்சிய மக்கட்தொகை ஒரே அணியாக இருப்பது கிரிக்கெட்டில் வளர்வதற்கு மட்டுமே தடையாக இருக்கும் பிரச்சனையா? இந்தியா என்ற நாட்டின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இதுவே காரணம் என நினைக்கிறேன். நம் எல்லா வேலைகளுமே டமார் ஆவதற்குக் காரணம் என்று நான் கருதுவது - நம்மிடம் ஏகப் பட்ட வேலைகள் இருக்கின்றன; அவற்றைச் செய்ய அளவுக்கு மிஞ்சி ஆட்கள் இருக்கிறார்கள். அளவுக்கு மிஞ்சி என்றால், அளவுக்கு மித மிஞ்சி! நாட்டைத் துண்டாட வேண்டும் என்று சொல்ல வில்லை. ஆனால், நிர்வாகத்துக்கு வசதியாகப் பிரித்துக் கொள்ளலாம் அல்லவா? இராஜாஜி சொன்ன மாதிரி ஐந்து பாகங்கள்! சேர்ந்திருக்க வேண்டிய விஷயங்களில் சேர்ந்திருந்து கொள்ள வேண்டியதுதான். சேர்ந்திருந்தால் பலம் என்கிற விஷயங்களில் சேர்ந்திருந்து கொள்ள வேண்டியதுதான். இராணுவம், ஆராய்ச்சி போன்றவற்றில்! மற்றவை பரவலாக்கம் செய்யப் பட வேண்டும். ஊழல் உட்பட! ஒட்டு மொத்தமாக ஒரு கூட்டம் டெல்லியில் வைத்து அடிப்பதை அவரவர் ஊரில் அடித்துக் கொள்ள விட்டு விட்டால் நல்லதுதானே. மாநில அரசுகள் அவரவர் வேலைகளைக் கவனித்துக் கொள்ளட்டும். மற்ற எந்த ஆசிய நாடும் சாதிக்க முடியாததை சிங்கப்பூர் எப்படிச் சாதித்தது? எப்படி என்றால், அவர்களிடம் குறைவான நிலப் பரப்பும் குறைவான மக்களும் இருக்கிறார்கள். எனவே நிர்வாகம் எளிதாகி விடுகிறது. அதை ஏன் நாமும் முயன்று பார்க்கக் கூடாது? ஒருவேளை, பெரிய அளவில் சாதிக்க உதவலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி