கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 7/12

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

குறுகிய காலம் வெளிநாடு செல்லும் நம்ம ஆட்கள் பெரும்பாலும் கிளம்புவதற்கு முதல் நாள் இங்கேயே முடி வெட்டிக் கொண்டுதான் கிளம்புவார்கள். திரும்ப வந்திறங்கிய முதல் நாளே போய் தன் உள்ளூர்க் கடையில் வெட்டிக் கொண்டு வருவார்கள். காரணம், அங்கே முடி வெட்டக் காசு அதிகம் ஆகும் என்று சொல்வார்கள். முடி வெட்ட ஐநூறு-ஆயிரம் என்று அதிர்ச்சி அளிக்கும் நம்பர் ஒன்றைச் சொல்வார்கள். அதனால் நானும் கிளம்பும் முன் முடி வெட்டிக் கொண்டு சென்று விட வேண்டும் என்றே திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதற்கெல்லாம் எங்கே நேரம் கொடுத்தார்கள். அது மட்டுமில்லை, நாம்தான் வருடக் கணக்காக இருக்க நேர்ந்தாலும் நேரலாம் என்ற நப்பாசையில் வேறு இருந்தோமே. அதனால் அதற்கேற்றாற் போலவே யோசிக்கவும் செய்தேன் பல விசயங்களில். 'ஒவ்வொரு முறையும் ஊருக்கா வந்து செல்ல முடியும் அதற்காக? கூடுதலாக ஒருமுறை அங்கே வெட்ட வேண்டியதிருக்கும். அவ்வளவுதானே!' என்று கிளம்பி விட்டேன். போய் இறங்கிய சில நாட்களில் இருந்தே முடி வெட்டும் கடைகளைப் பார்த்தால் உள்ளே நுழைய வேண்டும் என்று ஓர் ஆசை வரும். பெரும்பாலான கடைகளில் பத்து பவுண்டு என்று எழுதிப் போட்டிருந்தார்கள். உள்ளே அமர்ந்திருந்தவர்களும் வேறு ஆட்கள். ஒரேயொரு கடையில் இந்தியர்கள் கூட்டம் எப்போதும் நிறைந்திருக்கும். கடையும் இந்தியருடையது. விலையும் கூடக் குறைவாக இருந்தது. ஐந்து பவுண்டு. விடுவோமா? பொறுக்கவே முடியாமல் ஒருநாள் நுழைந்தே விட்டேன்.

நம்ம ஆட்கள் பெரும்பாலானவர்கள் வெளிநாடு சென்று இறங்கியதும் நமக்குத் தெரியப் படுத்தும் முதல் மாற்றம், அவர்களுடைய தலைமுடியிலாக இருக்கும். முகநூலிலோ (FACEBOOK) அல்லது வேறு ஏதோவொரு தளத்திலோ முற்றிலும் மாறுபட்ட தன்  முகத்தை வெளியிடுவார்கள். அது அவர்கள் விரும்பிச் செய்து கொள்வதா, இப்படி மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்வதா, முடி வெட்டும் கடைக்காரர்கள் உங்கள் முகத்துக்கு இதுதான் நன்றாக இருக்கும் என்று சிறப்பு ஆலோசனை வழங்கி வந்து சேர்வதா, அல்லது அவ்வூர்களில் முடி வெட்டினாலே அப்படித்தான் முடியுமா என்று ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். இம்முறை அதற்கான விடை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அமர்ந்திருந்தேன். அத்தோடு முகநூலில்  போட  புதியதொரு முகமும் கிடைத்தால் போனஸ் என்று காத்துக் கொண்டிருந்தேன்.

முடி வெட்டும் கடையில் மட்டும் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் காத்திருந்துதான் காரியம் ஆகும் போல. காத்திருந்த நேரத்தில் அவர்களுடைய தொழில் நுட்பம் எப்படி இருக்கிறது என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். முக்கால்வாசிக்கும் மேல் இயந்திரத்திலேயே வெட்டி விடுகிறார்கள். இறுதியில் சிறிது மட்டும் கத்தரிக்கோலால் வெட்டுகிறார்கள். வேலையும் வேகமாக முடிந்து விடுகிறது. அது ஒன்றும் பெரிய உலக வித்தை இல்லை. எளிதில் இங்கேயும் கொண்டு வந்து விடத்தக்க எளிமையான இயந்திரம்தான். அதைவிடச் சிக்கலான வித்தைகள் எல்லாம் இங்கே வந்து விட்டன. இதுவும் சீக்கிரம் வந்து விட்டால் நல்லது. இயந்திரம் மற்றும் அதன் தொழில்நுட்பம் வருவதை விடச் சிரமம் அதை இயக்கும் நுட்பத்தைக் கொண்டு வந்து இறக்குவது. கண்டிப்பாக நாட்கள் ஆகும்.

ஷார்ட்டா மீடியமா என்ற கேள்வியோடுதான் அங்கும் ஆரம்பித்தது. முடி வெட்டிக் கொள்தல் ஒரு சுகமான அனுபவம். அதனால் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக நேரம் ஆகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மகிழ்ச்சிப் பட்டுக் கொள்வேன். இயந்திரத்தின் புண்ணியத்தில் கண்ணை மூடி முழிக்கும் முன் வேலை முடிந்து விட்டது. ஏதோவொரு கூடுதல் நேர்த்தி தெரிந்தது. அது இலண்டனுக்கே உரியதா அல்லது அந்தக் கடைக்கு மட்டும் உரியதா அல்லது வெறும் மனப் பிராந்தியா என்பது மேலும் சில முறை வெட்டியிருந்தால் மட்டுமே உறுதியாகச் சொல்ல முடிந்தது. நம்ம ஊரில் எப்போதாவது சில நேரங்களில் அந்தத் திருப்தி கிடைக்கும். இலண்டனில் முயன்ற ஒரே முறையும் அது கிடைத்து விட்டது பெரும் மகிழ்ச்சிதான்.

எந்த ஊராக இருந்தாலும் கண்டிப்பாகப் பேசப் பட வேண்டியவை, அந்த ஊரின் போக்குவரத்து வசதிகள். அதுவும் இலண்டன் என்றால், சொல்லவே வேண்டியதில்லை. அது ஒரு மிக முக்கியமான அம்சம் அங்கே. உலகின் சிறப்பான போக்குவரத்து வசதிகள் கொண்ட ஊர்களில் கண்டிப்பாக இலண்டனும் ஒன்று. சிங்கப்பூரிலும் அது நன்றாகவே இருந்தது. இலண்டன் சிங்கப்பூரை விடப் பெரிய ஊர். ஆயினும் அதைப் போலவே அல்லது அதை விடச் சிறப்பான போக்குவரத்து வலைப்பின்னல் கொண்டிருக்கிறது. நான் அங்கிருந்த காலத்திலேயே அங்குள்ள பத்திரிகை ஒன்றில் அது பற்றிய கட்டுரையும் வந்திருந்தது. ஒரேயொரு பிரச்சனை - மிக மிக அதிகமான கட்டணம். சிங்கப்பூரை விட ஐந்து முதல் பத்து மடங்கு கூடுதலான கட்டணம். டாக்சிகளும் அப்படியே. சிங்கப்பூரில் வாழ்பவர்களுக்கு வீடு மட்டும்தான் பெரும் செலவு. இலண்டனில் எல்லாமே அதிகம்தான். அதில் போக்குவரத்து ஒரு பெரும் பங்கைத் தின்று விடும். மாதம் சாதாரணமாக இருநூறு பவுண்டு போக்குவரத்துக்கே போய் விடுகிறது. அதுவும் ஒருவருக்கு. குடும்பம் பெரிதாக இருந்தால்? சம்பளத்தில் பாதி அதிலேயே போய் விடும். தப்பித் தவறி டாக்சியில் ஏறினால் சோலி முடிந்தது. குல நாசம்தான். ஒரு முறை ஏறி விட்டுப் பட்ட பாடு, அப்பப்பா... இரத்தக் கொதிப்பே வந்து விட்டது. எல்லா ஊரிலும் மீட்டர் ஓடத்தான் செய்யும். அதற்காக அந்த ஓட்டமா?

இலண்டனின் போக்குவரத்து வலைப்பின்னல் என்பது இரயில், ட்யூப், ட்ராம் மற்றும் பேருந்து என்று நான்கு விதமான வாகனங்களை உள்ளடக்கியது. இரயில் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. அதென்ன ட்யூப்? என்று கேளுங்கள். அதாகப் பட்டது, தரைக்கடியில் ஓடும் இரயிலை ட்யூப் என்கிறார்கள். சுத்தத் தமிழில் சொல்ல வேண்டும் என்றால், குழாய். தரைக்கடியில் குழாய் போல ஓடுவதால் அந்தப் பெயர். இரயில் போலத்தான் இருக்கும். ஆனால், உள்ளே கொஞ்சம் வேறுபட்ட அமைப்பு. இரயிலில் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக மும்மூன்று இருக்கைகள் ஒருபுறமும் இரண்டிரண்டாக ஒருபுறமும் இருக்கும். நடுவில் ஆட்கள் நடமாடலாம். நம்ம ஊரில் சில இரயில்களும் பேருந்தும் கொண்டிருக்கும் அமைப்பு. ட்யூபில் இரண்டு ஓரங்களில் மட்டும் நீளமாக இருக்கைகள். நடுவில் நிறையப் பேர் நின்று கொண்டு வருகிற மாதிரியாக வசதியாக இருக்கும். இரயிலை விட ட்யூப் அகலம் சற்றுக் குறைவாக இருக்கும். இரயில் புறநகரப் பகுதிகளுக்கும் தொலைதூர இடங்களுக்கு மட்டும் செல்கிறது. ட்யூப் இலண்டன் மாநகருக்குள் மட்டும் ஓடுகிறது. நான் இருந்த க்ராய்டன் புறநகர் என்பதால் பாதி தூரம் இரயிலில் போய் விட்டு மீதிக்கு ட்யூபில் பயணிப்பேன். இரயில் பெட்டி பெட்டியாக இருக்கும். ட்யூப் ஒரே பெட்டி போல இருக்கும் (அதுவும் பல பெட்டிகளின் கோர்வைதான் எனினும்). இரயில் மிக வேகமாகச் செல்கிறது. ட்யூபும் அப்படித்தான். தரைக்கடியில் செல்வதாலோ அடிக்கடி நிறுத்தங்கள் இருப்பதாலோ என்னவோ கொஞ்சம் வேகம் குறைவு போலத் தோன்றியது. இரயிலில் கழிப்பறைகள் இருக்கும். ட்யூபில் இருப்பதில்லை. தரைக்கடியில் அதெல்லாம் இருந்தால் என்ன ஆகும் என்று சொல்ல வேண்டுமா?

ட்ராம்  பற்றி ஏற்கனவே பார்த்தோம். ஊருக்குள் செல்கிற போது  ட்ராம் மெதுவாகச் செல்வது போலவே இருக்கிறது. புறநகரங்களில் சரியான விரட்டு விரட்டுகிறார்கள். அடுத்தது, பேருந்து. அது பற்றித்தான் சொல்லவே வேண்டியதில்லையே. நம்ம ஊரில் அளவிலாமல் பார்த்து அலுத்தது. ஆனால் அங்கே முழுக்க முழுக்க வால்வோ வண்டிகள் மட்டுமே ஓடுகின்றன. பேருந்தில் கையைக் காலை மிதித்துக் கொண்டு கெட்ட வார்த்தையில் திட்டிச் சண்டை போட்டுக் கொள்ளும் காட்சியை அங்கேயும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கும் என் குடும்பத்துக்கும். இரயில்களில், ட்யூப்களில், ட்ராம்களில் பார்த்த அளவுக்குக் கூட்டம் பேருந்துகளில் பார்க்க முடியவில்லை.

எல்லா வாகனங்களிலும் சுத்தம் சோறு போட்டுச் சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது. பெரும்பாலும் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை குட்டிகளோடு இருப்பவர்களுக்குக் கூடுதல் மரியாதை கொடுக்கிறார்கள். சில நேரங்களில் அது கிடைப்பதில்லை. அங்கும் நாகரிகத்தின் வரையறை மாறிக் கொண்டு வருகிறதோ என்னவோ. அங்கிருக்கும் டாக்சிகள் ஒரு தினுசான உருவ அமைப்பு கொண்டிருக்கின்றன. நம்ம ஊரில் இருக்கும் அம்பாசடர் போல பழமையான ஒரு தோற்றம். இலண்டன் முழுக்கவுமே பழைமையை நிறையப் பார்க்க முடிந்தது என்று சொன்னேன் என நினைக்கிறேன். பயணங்களின் போது அப்படிப் பார்த்த இன்னொரு பழைமை - நம்ம ஊரில் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே இருந்து மறைந்து போன தொலைகாட்சி ஆண்டெனாக்கள். எல்லா வீட்டின் தலையிலுமே ஒரு ஆண்டெனா இருந்தது. இவற்றுக்கென்ன வேலை இப்போதும் இங்கே என்றுதான் கேள்வி வந்தது.

பயணச்சீட்டு நான்கு விதமான வாகனங்களுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. ஐம்பது-அறுபது பவுண்டு போட்டு வாங்கும் வாரச்சீட்டு எல்லா வண்டிகளிலும் மாறி மாறி ஏறிச் சென்று கொள்ள உதவுகிறது.எல்லாமே இயந்திரத்தின் உதவியுடனேயே செய்து கொள்ளலாம். பணத்தைப் போட்டு, எது வேண்டும் என்று சொன்னால், அதையும் கொடுத்து, மிச்சச் சில்லறையையும் ஏமாற்றாமல் கொடுத்து விடுகிறது. இந்த இயந்திரம் சிங்கப்பூரில் இரயில் நிலையங்களில் மட்டும் இருக்கும். இங்கே ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் இரண்டு மூன்று இயந்திரங்கள் இருக்கின்றன. பேருந்துகளில் சீட்டைக் காட்டி விட்டு ஏறிக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். பெரும்பாலும் தினச் சீட்டு, வாரச் சீட்டு என்று மொத்த மொத்தமாகவே எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பயணத்துக்கும் எடுத்துக் கொள்வது என்பது பையைக் கிழித்து விடும்.

இலண்டனின் போக்குவரத்து வசதிகள் பல நேரங்களில் ஊரையே மிகச் சிறியதாக்கிக் காட்டின. சென்னை-பெங்களூரை விடப் பெரிய ஊர். ஆனால், பயணங்களின் போது அப்படியோர் உணர்வே வரவில்லை. அதே தொலைவை நம்ம ஊரிலோ அல்லது இலண்டனிலேயே சொந்த வாகனத்திலோ கடக்க வேண்டும் என்றால் பிட்டாணி பிதுங்கியிருக்கும். இரண்டு வாரங்கள் க்ராய்டனிலும் இரண்டு வாரங்கள் ஊருக்குள்ளும் வேலை என்று சொல்லியிருந்தேன். ஊருக்குள் வேலையிருந்த இரண்டு வாரங்களும் கிராய்டனில் இருந்து பாடிங்டனில் இருந்த எங்கள் அலுவலகம் வரை சென்று திரும்புவேன். அவ்வளவு தொலைவு பயணம் செய்த களைப்பை எப்போதுமே உணர்ந்ததில்லை. பெரும்பாலும் முக்கால் மணி நேரத்தில் கடந்து விடுவேன். கிராய்டனில் இருந்து இரயிலில் விக்டோரியா ஸ்டேஷன் சென்று அங்கிருந்து ட்யூபுக்கு மாறி பாடிங்க்டன் வரை செல்வேன். பாடிங்டனில் ஏதோ வேலைகள் வேறு நடந்து கொண்டிருந்தன. அடுத்த முறை செல்லும் போது (சென்றால்!) மாறுபட்ட பாடிங்டனைப் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

விக்டோரியா ஸ்டேஷன் மறக்க முடியாதது. எந்த நேரமும் ஆட்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இடம். மனிதர்கள் இங்கும் அங்கும் பாய்ந்தும் பறந்தும் கொண்டிருக்கும் காட்சி கண்கொளாதது. முதல் முறை சென்று இறங்கிய போது, 'அப்படியானால், வெள்ளைக்காரர்கள் சோம்பேறிகள் இல்லையா?!' என்று ஒரு வியப்பை உண்டு பண்ணிய இடம் அது. அது மட்டுமில்லை, விக்டோரியாவில் சென்று இறங்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் நினைவு வந்து வந்து செல்லும். இரண்டுக்கும் ஏதோவோர் ஒற்றுமை. இரண்டுமே இரயில்கள் தம் பயணத்தை முடித்துக் கொண்டு நின்று விடும் இடம் என்பதால் கூட இருக்கலாம். விக்டோரியாவில் ஒருமுறை ஆண்டன்  பாலசிங்கம் போலவே ஒருவரைப் பார்த்தேன். போய்க் கேட்டு விடலாமா என்று ஒருவேளை அவருடைய சகோதரராகக் கூட இருக்கலாம். அவரும் (பாலசிங்கம்) அங்கே வாழ்ந்தவர்தானே.

அது மட்டுமில்லை. விக்டோரியா ஸ்டேஷனிலும் சரி, விக்டோரியாவுக்கும் க்ராய்டனுக்கும் இடையிலான பயணங்களின் போதும் சரி, அடிக்கடி ஈழத் தமிழர்கள் நிறையப் பேரைக் காண முடிந்தது. மாலை  வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒருமுறை தமிழ் முகம் கொண்ட ஒரு சோடி இனிமையாக ஏதோ பேசிக் கொண்டே வந்தார்கள். அவர்கள் பேசுவது மலையாளமா தமிழா என்பது மட்டும் சந்தேகமாகவே இருந்தது. ஒட்டுக் கேட்பது கெட்ட  புத்தி என்றாலும் காதைத் தீட்டு தீட்டென்று தீட்டி அவர்கள் பேசியது தமிழ்தான் (இனிமையான ஈழத்தமிழ்) என்று புரிந்து கொண்ட பின்தான் அடங்கினேன். பின்பொரு முறை நம்ம ஆள் ஒருத்தர், ஊரில் இருக்கும் உறவினருடன் காது கிழிகிற மாதிரித் தமிழில் கத்திப் பேசிக் கொண்டு வந்தார். பேசியது உறவினருடன் என்றாலும் கேட்டது சுற்றி இருந்த எல்லோருமேதான். காது கிழிந்ததும். இடையில் எம்.ஜி.ஆர். பாட்டெல்லாம் பாடினார். அந்த அளவுக்கு உரிமை எடுத்துக் கொண்டு விட்டார்கள் அந்த மண்ணில்.

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

  1. "இனிமையான ஈழத்தமிழ்"

    யாதும் ஊரே!! யாவரும் கேளிர்!!

    பதிலளிநீக்கு
  2. நல்லாத்தான் எழுதறீங்க.தொடருங்க.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பதிவில் நல்ல அனுபவங்களைக் கூறி வருகிறீர்கள். நான் படித்துக்கொண்டு வருகிறேன். வரிகளுக்கிடையில் இன்னும் கொஞ்சம் இடைவெளி வருமாறு செய்தால் படிப்பதற்கு உதவியாயிருக்கும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு
    கலாச்சார வியப்புகள் கொஞ்சம் வியப்பூட்டித்தான் போகிறது
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. இலண்டனின் போக்குவரத்து வசதிகள் பல நேரங்களில் ஊரையே மிகச் சிறியதாக்கிக் காட்டின

    சிறப்பான பகிர்வுகள்

    பதிலளிநீக்கு
  6. நன்றி, மணிவண்ணன் அவர்களே. யாதும் ஊரே யாவரும் கேளிர். நமக்கும் நம்மிடம் வருவோர்க்கும்.

    பதிலளிநீக்கு
  7. @பழனி.கந்தசாமி, தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி ஐயா.

    இடைவெளியைக் கூட்ட முயற்சித்துப் பார்த்தேன். முடியவில்லை. மனதில் வைத்துக் கொள்கிறேன். முடிகிற போது முடித்து விடுகிறேன்.

    ஏற்கனவே ரெம்பவும் நீளமாக எழுதுகிறேன் என்று நலம் விரும்பிகள் எல்லோருமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இடைவெளியை அதிகரித்த பின் இன்னும் நீளமாகும். தயாராகிக் கொள்ளுங்கள். :)

    பதிலளிநீக்கு
  8. நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி