உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: கட்சிவாரிக் கணக்குகள் (3/3)


முதல் பாகத்தில் நீண்ட முன்னுரையும் தமிழகத்தின் இப்போதைய முதல் இரண்டு கட்சிகளான அதிமுக மற்றும் திமுக பற்றியும் பார்த்தோம். இரண்டாவது பாகத்தில் ஓரளவுக்குப் பெருங்கனவுகள் காணத் தகுதியுடைய மற்றும் அதற்கான வாய்ப்பிருந்தும் கெடுத்துக் கொண்ட அடுத்த நான்கு கட்சிகள் (தேமுதிக, காங்கிரஸ், பாமக மற்றும் மதிமுக) பற்றிப் பார்த்தோம். இந்தப் பாகத்தில் இன்னும் அழிந்து விட்டன என்று சொல்ல முடியாத - முயன்றால் இன்னும் ஓரளவுக்குப் பெரிதாக - தவிர்க்க முடியாத சக்தியாக மாறத் தக்க கட்சிகள் பற்றிப் பார்ப்போம்.


பாஜக: இந்தத் தேர்தலில் மற்ற எல்லோரையும் விட அதிகமாக மகிழ்ச்சி அடைய வேண்டிய கட்சி என்றால் அது பாஜகதான். இரண்டு நகராட்சிகள் என்றால் சும்மா இல்லை. நாகர்கோவில் - வென்று விடுவார்கள் என்று தேர்தலுக்கு முன்பே சொல்லியிருந்தேன். மேட்டுப் பாளையம் எதிர் பார்க்கவே இல்லை. இரண்டுமே மத ரீதியாகப் பிரச்சனைக்குரிய பகுதிகள். ஒன்று கிறித்தவர்களுடனான் மோதல் நிறைந்த பகுதி. இன்னொன்று முகமதியர்களுடனான மோதல் நிறைந்த பகுதி. ஆக, அவர்களின் வளர்ச்சி என்பதே மதத்தை அடிப்படையாக வைத்துத்தான் இருக்க முடியும். கொஞ்சம் வித்தியாசமாகச் சொன்னால் (மற்ற மதத்தினருக்குப் பிடிக்காத மாதிரிச் சொன்னால்), இந்துக்கள் மத ரீதியாகத் தமக்குப் பிரச்சனை என்று உணர ஆரம்பித்து விட்டால், அவர்கள் பாஜகவிடம் தான் போவார்கள். ஆக, பாஜகவை வளர்ப்பதும் அழிப்பதும் யார் கையில் இருக்கிறது? உணர்ச்சி வயப் படாமல் கையாள வேண்டிய கேள்வி இது.

மதவாத அரசியல் நமக்குப் பிடிக்காது என்ற போதிலும் தமிழ் நாட்டில் இருக்கும் மற்ற பல கட்சிகளை விட இவர்கள் அரசியல் நேர்மை உடையவர்கள் என்பது ஒரு வகையில் நல்ல விசயம்தானே. இடதுசாரிகளுக்கு அடுத்து இவர்கள்தாம் பொது வாழ்க்கையில் கைச் சுத்தம் உள்ளவர்கள் என்று சொல்லலாம். அதனால் அவர்கள் ஓரளவு வளர்ந்து விட்டுப் போவதில் தப்பில்லை. தமிழ்நாட்டில் இடதுசாரிகளை விடப் பெரிய இயக்கமாக வளர்ந்திருப்பது அவர்களைப் பொருத்த மட்டில் மிகப் பெரிய மகிழ்ச்சிக்குரிய விஷயம். அடுத்தடுத்து அத்வானிகள் தமிழ் நாடு வரும் போது கூடுதல் நம்பிக்கையோடு வருவார்கள் இனி. அவர்களுக்கென்று ஒரு முக்கியமான இடம் நம் அரசியலில் கொடுக்கப் பட்டு விட்டது. இதை மறுப்பதற்கில்லை. அது குறைய வேண்டுமென்றால், மக்களின் மனதில் இருந்து மதம் நீங்க வேண்டும். போகிற போக்கைப் பார்த்தால் அது நடக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம் என்று எதார்த்தமாக யோசித்தால் கிடைக்கும் ஒரு பதில் - மீண்டும் மீண்டும் மீண்டும் இவர்கள் தனியாகவே மக்களைச் சந்திக்க நேர்ந்ததும் ஒரு முக்கிய காரணம் என்றும் சொல்லலாம். அவர்கள் அதை விரும்பிச் செய்ய வில்லை. அந்நிலைக்குத் தள்ளப் பட்டார்கள். ஆனால், அது அடி மட்டத்தில் கட்சிக் கட்டமைப்பை வலுப் படுத்த உதவியிருக்கிறது. இதனால் விரும்பியே மற்றவர்களும் இதைச் செய்யலாம் என்பதே கிடைத்திருக்கும் பாடம்.

நல்ல கூட்டணி அமைந்தால் கோவை போன்ற மாநகராட்சிகளில் கூட ஒரு கை பார்க்கலாம். சென்னையிலும் இவர்களுக்கென்று போகப் போக ஒரு வாக்கு வங்கி உருவாகும் மெதுவாக. இதை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு முந்தைய நிலவரப் படி வரும் பாராளுமன்றத் தேர்தலில் - தேர்தலுக்கு முன்பு யாருமே இவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்றே நிலைமை இருந்தது. இதைப் பார்த்த பின்பு, இரண்டு முதல் நான்கு தொகுதிகளைக் கொடுத்து யாராவது சேர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது போல் தெரிகிறது. அப்படியும் இல்லாவிட்டால், இவர்களே உதிரிகள் கொண்ட ஒரு மூன்றாவது அல்லது நான்காவது அணிக்கு ஏற்பாடு செய்யலாம். எப்படியிருந்தாலும் இந்துத்வாவின் நாயகி தேர்தலுக்குப் பின் இவர்களோடு சேர்ந்திடுவார்.

பாவம், திருநாவுக்கரசர்... கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம். பதவியில் இல்லாத வளரும் கட்சியா? பதவியில் இருக்கும் அழியும் கட்சியா? என்று பார்த்தால், இரண்டுமே அவருக்கு ஒத்து வராத கட்சிகள் என்பதுதான் உண்மை. திராவிடப் பாரம்பரியத்தில் வளர்ந்த ஒருத்தர் இவ்விருவரிடமுமே செல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நல்லவர்தான். ஆனால், பிழைப்புவாதியாக இருக்கிறாரே. பெயர் மாற்றியதில் இருந்து கட்சி மாற்றுவது வரை எதுவுமே அவருக்கு எடுபட வில்லை.

இடதுசாரிகள்: இரண்டு சிவப்புகளையும் ஒன்றாகவே சேர்த்து எழுதத்தான் விருப்பம். சேர்கையில்தான் பலமாகத் தெரிகிறார்கள். ஆனால், அவர்களே அதற்காக அதிகம் முயல்வதில்லை என்பதுதான் பெரும் வருத்தம். சேர்த்துப் பார்த்தால், இவர்கள் பாஜகவை விடப் பெரிய சக்தி என்று சொல்லலாம். தமிழ் நாட்டில் நீண்ட நெடுங்காலமாக இவர்களுடைய கட்சி அமைப்புகள் இருக்கின்றன. விடுதலை பெற்ற கொஞ்ச காலம் கழித்து நடந்த தேர்தலில் அப்போதைய சென்னை மாகாணத்தில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்குக் கலக்கியவர்கள். இருக்கிற நாலு பெரும் இரண்டிரண்டாகப் பிரிந்து இன்று ஒன்றும் இல்லாத நிலைமைக்கு வந்து விட்டார்கள்.

அதில் பெரியார் என்ற பெரும் சக்தி வந்ததுதான் இளைஞர்கள் மத்தியில் இவர்களுக்கு உரிய இடத்தை முழுமையாகக் காலி செய்தது. ஆளும் வர்க்கத்துக்கு எதிரானவர்கள் எல்லாம் இங்கே வருவதற்குப் பதிலாக வண்ணமயமாய் இருந்த அந்தப் பக்கம் போய் விட்டார்கள். அதனால்தான் இடதுசாரிகளோடு வருத்தம் வரும் போதெல்லாம் கானா, "பெரியாரையும் அண்ணாவையும் சந்தித்திரா விட்டால் நானும் இடதுசாரியாகத்தான் ஆகியிருப்பேன்!" என்று சொல்லிச் சரிக் கட்டப் பார்ப்பார். நல்ல வேளை, பெரியாரையும் அண்ணாவையும் சந்தித்தார். இடதுசாரிகளாவது இன்னும் ஓரளவு நல்லவர்களாக இருக்கிறார்கள்.

ஏதோவொரு மக்கள் பணி செய்து கொண்டு ஊருக்கு நாலு சிவப்புத் துண்டுக் காரர்கள் இன்னும் நடமாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எல்லோருமே திருடர்கள் என்றாலும், மற்ற எல்லோரையும் விடப் பல மடங்கு இவர்கள் நல்லவர்கள். எளிமையான வாழ்க்கை முறை வாழ்பவர்கள். மக்கள் பிரச்சனை என்று எதுவென்றாலும் களத்தில் நிற்கக் கூடிய முதல் கூட்டம் இவர்களுடைய கூட்டம். மகன் திருமணத்தன்று மறியல் போராட்டம் நடந்தால் மணமேடையில் இல்லாமல் சிறைச் சாலையில் இருப்பவர்கள். தியாக உள்ளம் கொண்ட நேர்மையாளர்கள்.

இவர்களின் மிகப் பெரிய பிரச்சனை - எளிய மக்களுக்காகப் போராடினாலும் அவர்களுக்குப் புரிகிற மாதிரிப் பேச மாட்டார்கள். கொள்கைப் பற்று என்ற பெயரில் அளவற்ற பிடிவாதம் காட்டுபவர்கள். சிவப்பு நாடுகள் செய்தால் எதுவும் சரி என்பார்கள் (சமீபத்திய எடுத்துக்காட்டு - கூடங்குளம் பிரச்சனை!). இவர்களுக்கு ஏன் இந்தியாவை விட அந்த நாடுகள் அவ்வளவு புனிதமாகத் தெரிகின்றன என்று எல்லோருமே கடுப்பாகும் அளவுக்கு புனிதத் தல வழிபாடு செய்பவர்கள்.

முதலில், இருவரில் பெருவரான இடது சிவப்பு பற்றிப் பார்ப்போம். எந்தச் சந்தேகமும் இல்லை - இவர்களுடைய அமைப்பு வலதை விடப் பெரியது என்பது மட்டுமில்லை; வலதை விட வேகமாக வளர்ந்து வருவதும் கூட. இவர்களுக்கென்று வலுவான வாக்கு வங்கிகள் நிறைய இடங்களில் உள்ளன. கோவை, மதுரை மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் - ஓரளவு பரவாயில்லாத கூட்டணி இருந்தால், வெற்றி பெரும் அளவுக்கு வாக்குகள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் நல்ல பலம் இருக்கிறது. இது போக ஏகப் பட்ட நகரங்களில் நல்ல கட்டமைப்பு இருக்கிறது.

ஓரளவு அறிவு பூர்வமாக யோசிக்கும் இளைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் நிறைய இருக்கும் கட்சி. அறிவு பூர்வமான வாதங்கள் வைப்பதில் கை தேர்ந்தவர்கள். இவர்கள் வென்ற பல இடங்களில் தேமுதிக கூட்டணியால் வென்றதாக நிறையப் பேர் நினைக்கிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால் இவர்களுடைய வாக்கு வங்கி தேமுதிகவுக்குப் பல இடங்களில் உதவியிருக்கிறது. இவர்கள் வென்ற சில நகராட்சிகள் இவர்களுக்கென்று பலமான அடித்தளம் இருக்கும் கட்சிகள். வலதை விட விபரமான ஆட்களும் நிறைய இருப்பதால், கண்டிப்பாக அவர்களைப் போல் சொதப்ப மாட்டார்கள். ஓரளவு நல்ல எதிர் காலம் இருக்கிறது.

அடுத்து, வலது சிவப்பு. இவர்கள் அழிந்தே போனார்கள் என்றுதான் நினைத்தோம். இல்லை என்றுதான் இந்தத் தேர்தல் காட்டியிருக்கிறது. செருப்பைக் கழற்றும் போதே கோபப் பட்டு வெளியேறிய இடது சிவப்புகளுடன் இவர்களும் வெளியேறி இருந்தால் மரியாதை மிஞ்சியிருக்கும். வாங்கிக் கொண்டுதான் வெளியேறுவேன் என்று காத்திருந்து கேவலப் பட்டு வந்தார்கள். அதன் பிறகாவது அவர்களுடன் சேர்ந்து ஒழுங்காகக் கேப்டனுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம். அதுவும் செய்யாமல் சொதப்பினார்கள்.

எனக்கு இந்த வட்டாரங்களில் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு (அதனால்தான் இவர்களை இவ்வளவு புகழ்கிறேனோ என்று எண்ணுகிறீர்களா? பொறுத்திருங்கள், அதனால் புரிந்து கொண்ட கேவலங்களையும் சொல்கிறேன்!). நான் கேள்விப் பட்ட வரை, இங்கே இருக்கும் ஒரு சிவப்புத் துண்டுக் காரர்தான் இத்தனைக்கும் காரணம் என்கிறார்கள். தோட்டத்திலும் சகோதரி வீட்டிலும் போய் அடிக்கடிப் பெட்டி வாங்குகிறார் என்று சொல்கிறார்கள். இடதுசாரிகளில் இப்படி ஓர் ஆள் உருவானது மிகப் பெரும் வேதனைதான். ஆனாலும் அது நம்பும் படிதான் இருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும்போது கூட அதிமுகவை அதிகமாக விமர்சிக்க மாட்டார். கட்சியை மிகப் பெரிய அளவில் வளர்க்கிற விதமாக - ஈழப் பிரச்சனையைக் கையில் எடுத்து முதன் முதலில் தமிழ் நாட்டை உலுக்கியவரும் இவர்தான். கட்சியை இருக்கிற இடம் தெரியாமல் காலி செய்து விடுவாரோ என்றும் இவரால்தான் பயமாக இருக்கிறது. அந்தப் பீடை விடும் வரை இந்தக் கட்சி தேறாது என்றே தோன்றுகிறது.

இவர்களுக்கென்று தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் நல்ல வாக்கு வங்கி இருக்கிறது. திருப்பூர் மற்றும் கோவை மாநகராட்சிகளில் அமைப்பு நன்றாக இருக்கிறது. அதிமுகவும் கழற்றி விட்டு தேமுதிகவும் கழற்றி விட்ட பின் மொத்தத் தமிழ் நாட்டிலும் இவர்கள் பத்து வாக்குகள் கூட வாங்க மாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த பொது கிட்டத் தட்ட நூறு பல்வேறு பதவிகளைப் பெற்றிருப்பதைப் பார்த்தால் இன்னும் இவர்கள் அழிந்து விட வில்லை என்பது உறுதியாகிறது. வரும் காலங்களில் பெட்டி வாங்குவதைக் குறைத்துக் கொண்டு, இடது சிவப்புகளுடன் இணைந்து செயல் பட்டால் இன்னும் கொஞ்சம் உருப்படலாம். பார்க்கலாம், என்ன பண்ணக் காத்திருக்கிறார்களோ!

விடுதலைச் சிறுத்தைகள்: நான் ஓரளவு மதிக்கும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் திருமாவும் ஒருவர். ஓரளவு நியாயமாக நடப்பவர். வைகோ போல் கொஞ்சம் ஏமாளி. அரசியல்க் கட்டாயங்களால் சில நேரங்களில் பெரும் பெரும் சமரசங்கள் செய்ய நேர்ந்தவர். அளவுக்கு அதிகமாக மஞ்சள் துண்டின் பெருமைகள் பேசியது ஒன்றுதான் இவர் சமீப காலத்தில் செய்த மிகப் பெரும் தவறு. அதற்கான தண்டனை இந்தத் தேர்தலில் கிடைத்து விட்டது. சரியாக நேரத்தில் கழற்றி விட்டு நடு வீதியில் நாய் கடிக்க விட்டு வேடிக்கை பார்த்து விட்டார்கள். இனிமேலாவது இந்தப் பாடங்களை மனதில் வைத்து செயல்படுவாரா என்று தெரியவில்லை. செயல்பட முடியுமா என்பதே சரியான கேள்வி.

இவர் இவ்வளவு நியாயமானவராக இருந்தாலும் கட்சியில் அடிமட்ட ஆட்கள் பண்ணும் அநியாயம் கொஞ்ச நஞ்சம் இல்லை. ஒடுக்கப் பட்ட மக்கள் ஒன்று சேர வாய்ப்புக் கிடைக்கையில் இதெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்றாலும், அரசியல்க் கட்சி என்று வந்து விட்டால், மக்களின் நன் மதிப்பைப் பெரும் வகையில் நடிக்கவாவது செய்ய வேண்டும். அதெல்லாம் பழகுவதற்கு அவர்களுக்குக் கொஞ்சம் காலம் ஆகலாம். அதுவும் ஒடுக்கப் பட்ட மக்களின் கட்சி அல்லது தலைவன் என்றால் இயல்பாகவே எல்லோரும் வெறுத்து விட்டுத்தான் அவர் பற்றி அறிந்து கொள்ளவே முயல்வார்கள் - அதுவும் இன்னும் வெறுப்பதற்கு வாய்ப்பு ஏதாவது கிடைக்குமா என்ற நோக்கத்தோடு. அதனால், வரும் காலங்களில் மிக மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஒத்த சிந்தனையுடையவர்களோடு அணி சேர வேண்டும். அது தமிழ் அய்யாவோ மருத்துவர் அய்யாவோ அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுமே நம்ப வைத்துக் கழுத்தறுக்கப் படித்து விட்டு முறையே தமிழும் மருத்துவமும் படித்த பிறவிகள்.

இந்தத் தேர்தல் என்று பார்த்தால், இவருக்கும் ஒரு வாக்கு வங்கி இருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது. குறைந்த பட்சம் மருத்துவர் அய்யாவோடு சேர்ந்திருந்தால் இன்னும் கொஞ்சம் வெற்றிகள் கண்டிருக்கலாம். ஏனோ அது நடைபெற வில்லை. அதுவும் ஒரு வகையில் நல்லதுதான். பாம்போடு படுத்திருப்பதற்கு இரவெல்லாம் முட்டிங்கால் போட்டுக் கொண்டு இருந்து விடலாம், இல்லையா? சென்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் இருந்த திமுக கோட்டையை அதிமுக உடைத்ததற்கு அங்கே வலுவாக இருந்த இவருடைய கட்சியும் ஒரு காரணம் என்பதை இப்போது நாம் எளிதாக மறுத்து விடலாம். ஆனால், அப்போது அது உண்மை.

கொஞ்சம் குறைவான திருட்டுகள் செய்து கொண்டு மனிதனை மனிதனாகக் கூட மதிக்கத் தெரியாத ஒரு தலைவியிடம் மண்டியிடுவதற்கு சகல அயோக்கியத்தனங்களும் செய்யும் - எல்லோரையும் மதிக்கும் ஒரு தலைவரை மதித்துச் சொரிந்து விடுவது மேல் என்று எண்ணினார். ஏமாந்து போனார். அடுத்து, இருவரும் அல்லாத அணி அமைப்பதில் இவர் முன்னின்று பணியாற்றுவதே முறை. செய்வாரா? ஒத்துழைப்பார்களா?

புதிய தமிழகம்: ஒரு மருத்துவரால் நடத்தப் படும் மற்றொரு சாதிக் கட்சி என்பர். ஆனால், என்னைப் பொருத்த மட்டில், ஒடுக்கப் பட்ட மக்கள் சாதி சார்பாகக் கட்சி நடத்தினால் அதை அப்படிச் சொல்லித் தட்ட வேண்டியதில்லை. அவர்களுக்கென்று அதற்கான தேவை இருக்கிறது. அதனால் அவர்களை ஒடுக்குபவர்களின் அரசியல்க் காட்சிகளில் இருந்து வேறு படுத்தியே பார்க்க வேண்டும். இந்த மருத்துவரும் முதலில் புரட்சிகரமான பொதுவுடமையராக இருந்து, பின்னர் திமுகவில் இருந்து, அதன்பின்னரே தனியாக வந்தவர். அரசியலே தெரியாமல் வந்து ஆட்டிக் கொண்டிருப்பவர் அல்ல.

தமிழகத்தில் கணக்கில் சேர்க்கத் தக்க மாதிரியான கட்சிகள் என்றால் அதில் கடைசியில் வருவது புதிய தமிழகம். இதற்குப் பின் வருவோர் யாரையும் நான் கட்சியாக மதிக்க வில்லை என்றே வைத்துக் கொள்ளலாம். பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று தம் முதல் எதிரி என்று தெரிந்தும் சட்டமன்றத் தேர்தலில் அம்மாவோடு கூட்டணி அமைத்துக் களம் கண்டார். இருவருக்கும் நல்லதாகவே அது முடிந்தது. இவருக்கென்று பெரிதாக வாக்கு வங்கிகள் இல்லை. அதிக பட்சம் ஓரிரு சட்டமன்றத் தொகுதிகளும் ஓரிரு பாராளுமன்றத் தொகுதிகளும் சொல்லலாம். எனவே, அங்கொன்றும் இங்கொன்றுமாக இவர்கள் பெற்றிருக்கும் சில பதவிகள் அவர்களைப் பொருத்த மட்டில் போதுமானவையே.

திருமாவிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. ஆனாலும் இவர் வழி நடத்தும் மக்களும் அவர்களுடைய எதிரிகளும் திருமாவின் மக்களை விட அவர்களின் எதிரிகளை விட மாறுபட்டவர்கள். அதனால், அவர் போலவே இவரும் நடந்து கொள்ள முடியுமா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அவரோடு இணைந்து நிறையச் செயல் பட வேண்டும். ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைதான் நோக்கம் என்றால் அதைச் செய்வதுதானே முறை. வரும் தேர்தல்களில் மூன்றாம் அணி அமைப்பதில் இவரும் முன்னின்று செயல்பட வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் அரசியலே இருக்கக் கூடாது என்பதே சரியான வாதம் என்ற போதிலும், அந்தச் சூழல் வரும்வரை, எல்லாக் கட்சிகளும் இது போலவே வரும் காலங்களில் உள்ளாட்சித் தேர்தலைத் தனித்து நின்றே சந்தித்தால் நன்றாக இருக்கும். வென்ற கட்சி மட்டுமே இருக்கிறது என்றும் அதுவும் ஆளுங்கட்சி என்பதால்தான் இருக்கிறது என்றும் பேசுவோர் பேசிக் கொண்டிருந்தாலும் கட்சிகளின் பலத்தை அறிந்து கொள்ளவும் தொலை நோக்கில் மென்மேலும் பலப் படுத்திக் கொள்ளவும் இதுவே நன்மை பயக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி