ஆயிரங் காலத்துப் பயிர்

முடிந்து விட்ட எல்லோரும் சொல்வார்
எண்ணியது போல் இனிப்பல்ல இப்பயிர்
கக்க வைக்கும் கசப்பு என்று
எதையும் 
முழுதாய் நம்பத் தேவையில்லை

அதே வேளையில்...
எவருக்கு எப்படியோ
'எனக்கு' இனிக்கத்தான் செய்யும் என்று
எதிர்த்துப் பேசி விட்டு
அதை அனுபவித்தே தீருவேன் என்று
அடம் பிடித்து ஓடி வருவோரையும்
எப்போதும் ஏமாற்றுவதில்லை
இந்தப் பயிர்

அன்போடு வரவேற்று
அமிர்தம் கொடுத்து
ஆற அமர
அமர வைத்து விட்டுத்தான்
அடுத்து வேலையைக் காட்டும்

முதலில்
மயக்கும் அதே அமிர்தம்
முப்பதும் அறுபதும் முடிந்த பின்னால்
மருந்தாய்க் கசந்திடும் மாயம் மட்டும்
மனிதக் கணக்குகளில் மாட்ட மறுக்கிறது

முதலில்
கிளர்ச்சியோடு ஆரம்பிப்பதுதான்
முப்பதும் அறுபதும் முடிந்த பின்னால்
வளர்ச்சிக்குத் தடையாக ஆகிறது

மணத்துக்கு முந்தைய மனம் சொல்கிறது
மண வாழ்க்கை காணாத மண் வாழ்க்கை
முழுமையடையாத முட வாழ்க்கை என்று

அதே மனம்தான் அப்புறம் சொல்கிறது
மண வாழ்க்கையென்ன
பிண வாழ்க்கை என்று

பெரும்பாலும் திசை திருப்புகிறது
சிலருக்கு வந்த திசையிலேயே திருப்பி அனுப்புகிறது
சிலருக்கு வேகத் தடை போடுகிறது
சிலருக்கு வேகம் கொடுக்கிறது
சிலருக்கு முற்களை விதைத்துக் கற்களை வீசுகிறது

அழாதவர்களை அழ வைக்கிறது
விழாதவர்களை விழ வைக்கிறது
தொழாதவர்களைத் தொழ வைக்கிறது

மாற்றத்தின் அளவு தெரியாமலே
மாட்டிக் கொண்டோர் நிறைய
ஏற்றம் என்றெதிர்பார்த்து
நாற்றப் பாதாளங்களில்
விழுந்து விழிப்போர் நிறைய

தகாத மணங்கள்
அகால மரணங்கள் போல்
சந்ததிகளையே அழிக்கும் சக்தி கொண்டவை
அதனாற்தான் அது ஆயிரங் காலத்துப் பயிர்

ஆயிரங் காலத்துக் களைகள்
பாதியில் அழிந்த பயிர்கள்
பூக்காது போனவை
காய்க்காது போனவை
அதிகம் நீர் பாய்ச்சி அழுக விட்டு அழிக்கப் பட்டவை
காயப் போட்டுக் கொல்லப் பட்டவை
பூச்சி மருந்தால் புழுத்துப் போனவை
வேலி போட்டதால் வெறுப்படைந்து ஒடிந்தவை
ஊடு பயிர் வந்து உலப்பி விட்டவை

விதைக்காமலே விட்டிருக்கலாமே என்று
விசனம் கொள்ள வைத்தவை

விதைக்காது விட்டுப் பின்னர்
அதற்காக அழ வைத்தவை

இது போல் இன்னும்
எத்தனை எத்தனை இனங்களோ
இந்தப் பயிர்களில்

ஆனாலும்... 
பருவத்தே பயிர் செய் என்று 
பழைய முறையிலேயே
விதைப்போர் விதைத்துக் கொண்டுதான் உளர்

காலம் மாறிவிட்டது
கலப்பை போய்விட்டது
வேளாண் விதங்கள் மாறிவிட்டன
விசைக்கலப்பைகள் வந்து விட்டன

புதியன புகுத்திப்
புத்துயிர் கொடுக்க வேண்டும்
இப்பயிர்த் தொழிலுக்கும்

எளிமைப் படுத்தி
ஏற்றம் கொடுக்க வேண்டும்
இப்பயிர்த் தொழிலுக்கும்

இல்லையேல்...
வாடிச் சாவான் சம்சாரி!
சார்ந்தோ சாராமலோ
வருந்திச் சாவாள் அவன் சம்சாரம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி