கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 11/12

மட்பாண்டன்களோடு... மகளுடன்...
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

கோணங்கி இலண்டன் பயணம் முடித்து வந்து அந்த அருங்காட்சியகத்தின் பிரம்மாண்டம் பற்றி சிலாகித்துச் சொன்ன நினைவு அரைகுறையாக இருக்கிறது. அது அருங்காட்சியகமா நூலகமா இரண்டுமா என்று தெளிவாக நினைவில்லை. உண்மையாகவே பயங்கரப் பிரம்மாண்டம்தான். எவ்வளவோ பொருட்கள் - சாமான்கள். எல்லோருடைய கலாச்சாரத்தையும் நாங்கள்தான் காப்போம் என்று பிடிவாதமாக வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும் பெரும் கற்சிலைகள், மட்பாண்டங்கள், மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள், ஓவியங்கள், எகிப்திய மம்மிகள், எலும்புக் கூடுகள், இறந்து புதைக்கப் பட்ட மனிதனின் எலும்புத் துண்டுகள் என்று அத்தனையும் அடக்கம். அதில் வெள்ளையர்கள் இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற வைர கிரீடமும் இருக்குமா என்று தேடித் பார்த்துப் பின்னர்தான் தெரிந்து கொண்டேன் - அது வேறு ஏதோவோர் இடத்தில் வைக்கப் பட்டிருக்கிறது என்று.

அருங்காட்சியகம் பற்றி எழுதுவதை விட அங்கு எடுத்த படங்களைப் போடுவதே அதிகம்அழகாய் இருக்கும் என்பதால் இந்தப் பாகத்தில், கையில் இருக்கும் படங்கள் சிலவற்றைப் போட்டு ஒப்பேத்தி விடலாம் என நினைக்கிறேன்.

விகாரமான விலங்குத் தலை
மனிதச் சிலைகளோடு மனைவி... 
 
இங்கே படத்தில் பார்க்கும் சிலைகள் ஒரு சாம்பிள்தான். இது போல நூற்றுக் கணக்கான சிலைகள் இருக்கின்றன. நமக்கு இதிலெல்லாம் ஓர் அளவுக்கு மேல் ஆர்வம் இல்லாததால் இவற்றின் அருமையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதே கிறுக்காக இருக்கும் ஆட்கள் எல்லாம் அங்கு சென்றால் நாட்கணக்காக உட்கார்ந்து ஆராய்ச்சிகள் செய்யலாம். பெரும்பாலான சிலைகள், மண்டையின்றி - காலின்றி - கையின்றி என்று ஏதாவதொரு பாகம் உடைபட்டுத்தான் இருக்கின்றன. காலம் கடந்து கண்டுபிடிக்கப் பட்டு காப்பாற்றப் பட்டு வருவதால்  ஏற்பட்ட குறைபாடு என நினைக்கிறேன். அவை ஒவ்வொன்றும் உலகின் ஏதோவொரு மூலையில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வையோ சிந்தனையையோ உணர்ச்சிகளையோ சித்தரிப்பவையாகத்தான் இருக்க வேண்டும்.

பல வகையான ஓவியங்களையும் பார்க்க முடிந்தது. பல வகை என்றால்? எனக்குத் தெரிந்து இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, காண்பதை அப்படியே தத்ரூபமாக வரைதல். அது மனிதர்கள் தோற்றத்தால் எப்படி இருந்தார்கள் - எத்தகைய உடை அணிந்தார்கள் - அவர்களுடைய பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தன - அவர்கள் வாழ்ந்த சூழல் எப்படி இருந்தது - அதாவது அவர்களுடைய கட்டடக் கலை, தெருக்கள், கிராம/நகர அமைப்புகள் எப்படி இருந்தன - ஓரளவுக்கு அவர்களுடைய பண்பாடு எத்தகையது என்பனவற்றை அறிந்து கொள்ள உதவுபவை. இந்தப் படம் அப்படியான ஒன்று என்று நினைக்கிறேன். பழைய கிரேக்கர்களினுடையதைப் போல் இருக்கிறது ("ஈஸ்ட்மென்ட் கலர் என்றாலே அது கிரேக்கர்கள்தானா?!" என்கிறீர்களா?). படத்தில் இருக்கும் பெண்ணை வைத்துச் சொல்வதானால், குறைந்த பட்சம் ஏதோவோர் ஐரோப்பியக் கூட்டம் பற்றியதாகவாவது இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் கிழக்கு என்றாலே இந்தியா-சீனா என்பது போல், மேற்கு என்றாலே கிரேக்கம்தானே! :)

ஓவியத்தின் முன் ஓவியங்கள்!
அடுத்தது, இப்போது நவீன ஓவியம் (MODERN ART) என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் ஓவியம் போன்றவை. சிக்கலான மன உணர்வுகளையும் சிந்தனைகளையும் சித்தரிப்பவை. புரிவதே அபூர்வம். அதற்கென்றே பிறந்திருப்போர் மட்டுமே அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய ஓவியங்களும் அந்தக் காலத்திலேயே நிறைய வரையப் பட்டிருக்கின்றன. இத்தகைய ஓவியங்கள் நினைத்ததைச் சரியாக வரைய முடியாமையின் விளைவா அல்லது தத்ரூபமாக வரையும் படங்களில் காட்சிகளை மட்டுமே காட்ட முடியும்; அவ்வளவு கடுமையான - எளிதில் விவரிக்க முடியாத மாதிரியான சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த முடியாது என்பதாலா என்று இன்றுவரை புரிந்தபாடில்லை. ஆனால், நவீன ஓவியம் அவ்வளவு நவீனமானதல்ல என்பது மட்டும் புரிந்தது.

இது இந்தியாவில் இருந்து எடுத்துச்
சென்றதாக இருக்க வேண்டும்
நம்ம ஊர் கொலு பொம்மைகள் போலவும் நிறையச் சின்னச் சின்ன பொம்மைகள் இருக்கின்றன. அவையும் அன்றைய மனிதன் அந்தந்தப் பகுதிகளில் எப்படி இருந்தான் என்று விளக்குபவையாக இருக்கின்றன. இந்தப் படத்தில் இருக்கும் உழவர்களும் மாடுகளும் நம் மூதாதையரைப் போலவும் அவர்கள் வளர்த்த மாடுகள் போலவும் இருந்ததால் மிகவும் பிடித்துப் போயிற்று. இப்படிச் சிலரைப் பார்த்துத்தானே காந்தித் தாத்தா சட்டை போட மாட்டேன் என்று முடிவு செய்தார். ஒரு காலத்தில் சட்டை போடாத மனிதர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்றோ சட்டை போடாமை என்பது அந்தக் காலத்திலேயே இருந்த பழக்கம்தான் என்றோ பிற்காலத்தில் பேசிக்கொள்ள இத்தகைய பொம்மைகள் உதவும்.


பல பயமுறுத்தும் ஐட்டங்களும் இருந்தன. இறந்த மனிதனின் எலும்புகளைப் பொருக்கி ஒரு தினுசாக அடுக்கி வைத்திருந்தார்கள். இன்னும் ஐம்பது-அறுபது வருடங்கள் கழித்து நம்ம கதையும் இதுதான் என்று மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துவதாக இருந்தது. சிலருக்கு இவற்றையெல்லாம் பார்த்தால் சின்ன வயதில் கேள்விப் பட்ட சில பேய்க் கதைகள் நினைவுக்கு வரலாம். அதுவே மனித குல ஆராய்ச்சியாளர்களுக்கு இது வேறு பல வகைகளில் பயன்படும் என நினைக்கிறேன். எந்தப் பகுதியைச் சேர்ந்த எலும்பு என்பதைப் பொருத்து, ஒவ்வொரு எலும்பின் நீள-அகலங்கள் கூட மனித குலத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ளவும் அறிவியல் ரீதியாக அவற்றை எதிர் காலத்துக்குப் பயன் படுத்திக் கொள்ளவும் உதவலாம். குரங்கிலிருந்து மனிதனானவன் அடுத்து என்ன ஆவான் என்று கணக்குப் போடவோ குரங்குக்கும் மனிதனுக்கும் எந்த உறவும் இல்லை என்று நிரூபிக்கவோ உதவலாம்.

இந்தப் படம்தான் பார்த்ததிலேயே பயங்கரம். இது எரிக்கப் பட்ட மனிதனுடையதாகவோ புதைக்கப் பட்ட மனிதனுடையதாகவோ இருக்க வாய்ப்பில்லை. மேலே மண் விழாத படி ஏதோவொரு தாழி மாதிரியான அமைப்பினுள் வைத்து அப்படியே மூடி விடப் பட்ட ஒரு பிணத்தை அப்படியே அலேக்காகத் தூக்கிவந்து வைத்திருக்க வேண்டும். இந்தத் தாழி விவகாரத்தில் நமக்குக் கொஞ்சம் முன்னனுபவம் இருப்பதால் இது கூடுதல் கவன ஈர்ப்பு செய்தது. தென் தமிழகத்தில் திருநெல்வேலி அருகில் ஆதிச்சநல்லூரில் அடிக்கடி இது போல ஏதோவொன்றைத் தோண்டி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அது போலவே எங்கள் ஊர் நாகலாபுரத்திலும் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு ஒரு முறை அவ்வப்போது ஒரு தாழி சிக்கும். உழுது கொண்டிருக்கும் விவசாயி ஏதோ ஒன்று ஏர்க்கலப்பையை இடிக்கிறதே என்று பார்ப்பார். உள்ளே ஒரு பெரிய தாழி இருக்கும். அதைத் தோண்டி எடுத்துப் பார்த்தால் உள்ளே எலும்புகளும் படத்தில் காட்டப் பட்டுள்ளது போல வேறு பல சாமான்களும் கிடக்கும். உடனே அகழ்வாராய்ச்சியாளர்கள் வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போவார்கள். அதன் பெயர் முதுமக்கள் தாழி என்று கதைகளும் சொல்லிச் செல்வார்கள். இதைப் பார்த்த போது அந்த நினைவுதான் வந்தது.

குழந்தை மம்மியாக இருக்க வேண்டும்!
ஏகப்பட்ட மம்மிகளும் வைத்திருக்கிறார்கள். வித விதமான மம்மிகள். ஒரு வகையில் எங்கள் ஊரில் கிடைத்த முதுமக்கள் தாழியும் மம்மியும் ஒரே விதமானவைதான். அதைச் செய்யும் விதம்தான் வெவ்வேறே ஒழிய அதற்கான காரணம் ஒன்று போலத்தான் தெரிகிறது. கூடவே கொஞ்சம் கதைகளும் சொல்லப் படுகின்றன. அதில்தான் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. கதை என்னவென்றால், அந்தக் காலத்தில் உடல் கூனிக் குறுகி அடங்கிய பின்னும் மரணம் என்பது வரவே வராது. அதனால் சாவதற்கு முன்பே அவர்களை உள்ளே போட்டு அடைத்து அமுக்கி விடுவார்கள் என்பது. செய்தாலும் செய்திருப்பார்கள் எமகாதகர்கள்.

அண்ணல் நோக்கினார்...
அவள் வேறெங்கோ நோக்கினாள்!
இது போன்ற வெண்ணிறச் சிலைகளும் நிறைய இருந்தன. ஆண்களும் இருந்தனர். பெண்களும் இருந்தனர். 'நாமே குழந்தை' நமக்கேன் குழந்தை!' என்கிற மாதிரி, 'நாமே ஆண்; நமக்கேன் ஆண்!' என்று சொல்லி, இருக்கிற பெண்களிலேயே அழகான பெண்ணாகப் பார்த்துப் பிடித்தேன். இவள் கண்டிப்பாகக் கிரேக்கப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். ஐரோப்பிய முகம் கொண்ட அழகிகள் அனைவருமே கிரேக்கர்கள்தான் என்பது போல எப்படியோ மனதில் பதிந்து விட்டது. உலக நாயகனின்  "ஜெர்மனியின் செந்தேன் மலர்கள்..." விரசப் பாடலில் ஆரம்பித்து சின்ன வயதில் இருந்தே இந்த மாதிரியான சிலைகளைப் பல்வேறு படங்களில் பார்த்துக் கொண்டுதானே வருகிறோம். கத்தி மூக்கு, கவர்ச்சிக் கண்கள், வீங்காத கன்னம், கச்சிதமான முகம் என்று மயக்கும் அழகு கொண்ட இந்தப் பெண்களில் ஒருத்தியோடாவது புகைப்படம் எடுத்துக் கொள்ளாமல் வீடு திரும்பக் கூடாது என்று முதல் முறையாக நானே விரும்பி ஒரு படத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினோம்.

அடுத்த பாகத்தில் மொத்தமாக வீடு திரும்பி விடலாம்.

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி