அயோத்தி: எங்கே நிற்கிறேன்?

அயோத்திப் பிரச்சனையைப் பற்றிப் பேச இதை விடச் சிறந்த தருணம் இருக்க முடியாது. கடந்த சில மாதங்களில் எத்தனையோ பெரிதாகச் சொல்ல முடியாத பிரச்சனைகள் பற்றிப் பேச முடிந்த எனக்கு இது போன்றதொரு மிக முக்கியமான பிரச்சனை பற்றிப் பேச நேரம் செலவிடா விட்டால் அது நியாயமாகாது. வேலியின் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இந்தப் பிரச்சனையின் கட்சிக்காரர்கள் அதை வெவ்வேறு விதமாக அழைப்பதால், நான் அதை அயோத்திப் பிரச்சனை என்றே அழைக்க விரும்புகிறேன். ஒரு சாரார் இராமர் கோயில் பிரச்சனை என்கிறார்கள்; இன்னொரு சாரார் பாபர் மசூதிப் பிரச்சனை என்கிறார்கள். அல்லது, இராமர் கோயில் - பாபர் மசூதிப் பிரச்சனை என்றோ பாபர் மசூதி - இராமர் கோயில்ப் பிரச்சனை என்றோ அவர்களுடைய கருத்தை உலகறியச் செய்யும் படி எது அவர்கள் மனதில் முதலில் வருகிறதோ அதன் படி வரிசையை மாற்றி அழைக்கிறார்கள். சர்ச்சைகளுக்குள் செல்ல எனக்கு விருப்பமில்லை. அதற்குப் பதிலாக, என் சுற்றத்தை மேலும் குழம்பிய நிலையில் விடுவதையே வசதியான வேலையாக நினைக்கிறேன். ஏனென்றால் அதுதான் நம்மை மேலும் தெளிவான நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதைத் தீர்க்கமாக நம்புபவன் நான்.

தீர்ப்பு எதுவும் கொடுக்கிற அளவுக்கு என்னிடம் புள்ளி விபரங்கள் இல்லை. அது எனக்குத் தேவையும் இல்லை. ஏனென்றால், யாரையுமே சரியாகவோ தவறாகவோ நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் எனக்கில்லை. மேலும், அத்தகைய விஷயங்களில் என் நேரத்தை வீணடிக்க நான் எந்த வலதுசாரி இயக்கத்தையும் சார்ந்தவனில்லை. நான் பிறந்த குடும்பத்தை வைத்து என்னை இந்து என்று அழைக்கிறார்கள். இன்று என் குடும்பத்தினர் செய்யும் அத்தனை சடங்குகளையும் என் முன்னோர் அனைவரும் செய்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நம்பிக்கை மீதான நம்பிக்கை குறையக் குறைய சடங்குகளின் மீதான இந்தப் பிடிவாதம் கூடிக் கொண்டு இருப்பதாக உணர்கிறேன். நான் புரிந்தது சரியென்றால், இந்து மதமும் என்னைப் போலவே தன் மத அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என்று கவலைப் படுவதில்லை. அல்லது, இன்று இந்து என்று அழைக்கப்படும் எல்லோருமே சில தலைமுறைகளுக்கு முன் இதெல்லாம் செய்வதில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. ஓர் உட்குழுவினர் மட்டுமே இன்றைக்கு நாம் சடங்குகள் என்றழைக்கும் எல்லாவற்றையும் செய்திருப்பார்கள். இந்தப் பழக்க வழக்கங்களைக் கூட முறையாகக் கடை பிடிக்காத நம் அனைவரையும் எது கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஒரே பதாகையின் கீழ் ஒன்றிணைத்தது என்றால், அது நாம் அனுபவித்த பாதுகாப்பின்மை எனும் உணர்வு! கடந்த பல ஆண்டுகளாக என்னைச் சுற்றி நான் அடிக்கடிக் கேள்விப் படும் ஒரு கேள்வி - "அவனுக்கு அவன் மதம் அவ்வளவு முக்கியம் என்றால் உனக்கு மட்டும் ஏன் அது முக்கியமாகக் கூடாது?". என்னைப் போன்ற எந்தவொரு சாமானியனுக்கும் இது முற்றிலும் நியாயமான கேள்வி. "உன் மதத்தை நீ தூக்கி எறிய விரும்பினால் அதற்கு முன் எல்லோருமே அதே போல் செய்கிறார்களா என்று பார்" என்று ஒருவர் என்னிடம் சொல்லும் போது அது இயல்பாகவே என்னை ஈர்க்கிறது. "அடுத்தவர்களைப் பற்றி ஏன் கவலைப் படுகிறாய்?" என்று கேட்காதீர்கள். ஏன் கவலைப் படுகிறேன் என்றால் நான் இந்த சமூகத்தில் ஒற்றைக் குரங்காகத் தனிமைப் பட விரும்ப வில்லை. எனவே, சராசரிகளின் அனைத்து விதிகளையும் கடைப்பிடிக்கும் சாமானியனாகவே இருக்க விரும்புகிறேன்.

என் சொந்தக் கருத்து என்னவென்றால், அயோத்திப் பிரச்சனை போன்ற ஒரு பிரச்சனை நம் எவருக்குமே ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாது. ஏனென்றால் ஒரு நாடு என்ற முறையில் நமக்கிருக்கும் எந்தப் பெரிய பிரச்சனையையும் அது தீர்க்க உதவுவதில்லை. மாறாக, நம்மிடம் இருக்கும் பெரிய பிரச்சனைகளின் பட்டியலில் இதுவும் ஒன்றாகக் கூடிக் கொள்ளத்தான் செய்கிறது. பின் ஏன் நாம் அது பற்றி அவ்வளவு கவலைப் பட வேண்டும்? இரு சமூகங்களுமே ஒற்றுமையாக ஒருவர் உணர்வை இன்னொருவர் புரிந்து கொள்கிற மாதிரி இருந்திருந்தால் இந்தப் பிரச்சனையே எழுந்திராது முதலில். இரு சாராருமே மற்றொருவருடைய சகிப்பின்மையைக் குறை சொல்லிச் சொல்லி, இது ஒரு பிரச்சனை ஆகி விட்டதால், தீர்வு என்னவென்று தெரியவில்லை நமக்கு. இப்பிரச்சனை பற்றிய முடிவுக்கு வரும் முன் சரியான - தகுதி படைத்த பெருமக்கள் தேவையான அளவுக்கு ஆய்வும் விசாரணைகளும் செய்திருக்கிறார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். எனவே, தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்போம். இந்த முறை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் பின் எப்போதும் ஏற்றுக் கொள்வோமா என்று தெரியவில்லை.

இந்த நாட்டின் ஒவ்வொரு இந்துவும் இது ஒரு பிரச்சனையே இல்லை என நினைக்க வேண்டுமென விரும்புகிறேன். அது ஒன்றே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வழி. பிறப்பால் இந்துவாக இருப்பதால் (இப்போதும் அது சார்ந்த அனைத்துக் கேள்விகளும் அப்படியே உயிரோடிருக்கின்றன), அதுதான் என் மதத்தைச்  சேர்ந்தவர்களை என்னால் கேட்டுக் கொள்ள முடிந்தது.  "எனக்கு மதமில்லை" என்று சொல்லவே விருபுகிறேன். ஆனால், ஏன் எல்லா மதங்களிலும் என்னைப் போன்ற ஆட்களைச் சந்திக்க முடியவில்லை என்று நான் அடிக்கடி ஆச்சரியப் பட்டிருப்பதையும் இங்கு ஒத்துக் கொண்டாக வேண்டும். என்னுடைய மதம் ஒன்றே உண்மையானது என்று சொல்லிக் கொடுப்பதில் யாரும் என்னோடு நேரத்தை வீணடித்ததில்லை. அது போன்ற நம்பிக்கையும் கற்பித்தலும் உபதேசமுமே இந்தப் பூமிக் கோளை வாழ்வதற்கு மென்மேலும் பாதுகாப்பில்லாத இடமாக்கிக் கொண்டிருக்கின்றன. உங்களில் எத்தனை பேர் இதை மறுக்க விரும்புகிறீர்கள்?

இதை ஒரு பிரச்சனையாகவே எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எம் மக்களை (எளிதான பிரயோகத்துக்காக மட்டுமே அவர்களை 'எம் மக்கள்' என்கிறேன்; வரிகளுக்கு இடையே பொருள் தேடி என்னை ஒரு இந்து வெறியன் என்றெல்லாம் முத்திரை குத்த முயற்சிக்காதீர்கள்) நான் வேண்டிக் கொண்ட போது, "இதை ஏன் முஸ்லிம்களிடம் நீ சொல்லக் கூடாது?" என்று சிலர் கோபப்பட்டார்கள். ஒரு நடுநிலையாளன் என்ற முறையில் அடுத்த மதத்தைச் சேர்ந்த என் சகோதரர்களிடமும் அதே கருத்தைச் சொல்ல முடிந்திருக்க வேண்டும் அல்லவா? நான் சொல்லலாமா? எனக்கு அப்படித் தோன்ற வில்லை. நான் சொல்லப் போவது சரியென்று உறுதியாகத் தெரிந்தாலும், அதைச் செய்வதில் எனக்கு சௌகரியம் இல்லை. ஏன்? ஏனென்றால், அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்கிற உரிமை எனக்கு இல்லாதது போல உணர்கிறேன். அல்லது, குறுகிய மனப்பான்மை உடையவன் அல்லது மதச் சார்புடையவன் என்று முத்திரை குத்தப் பட்டு விடுவோமோ என்று பயப்படுகிறேன். 

எனக்கிப்போது இரண்டு பாதைகள் இருக்கின்றன. ஒன்று - மதச்சார்பின்மை என்ற கருத்தாக்கத்தால் கவரப்பட்டு, ஏன் அப்படி மாறுகிறேன் என்று கூடப் புரியாமல் மேலும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவனாக மாறி, இந்துக்களுக்கு எதிராகக் கண்மூடித் தனமாகப் பேச ஆரம்பிப்பது. அப்படிச் செய்தால் என்னைப் பேரறிவாளி என்பார்கள் என்றெண்ணி அதுதான் நீண்ட காலமாகச் செய்து கொண்டிருந்தேன்.  இரண்டாவது - தைரியமாக எழுந்து நின்று, "என்னுடைய மனசாட்சிப்படி நான் நடுநிலையாளன். என்னைப் போலவே வேலிக்கு அந்தப் பக்கம் இருக்கும் முற்போக்கான முஸ்லிம் சகோதரர்களும் என்னளவுக்கு நடுநிலையாளர்களாக மாறி இதே கருத்தை அவர்களுடைய மக்களிடம் விதைத்தால் பேருவகை அடைவேன்." என்று சொல்வது. இரண்டாவது பாதை சிறிது மேம்பட்டதாகத் தெரிகிறது. ஏன்? "முதல் பிரிவில் என் போன்றோர் அதிகம் இருந்ததால்தான் வலதுசாரி அரசியல் பெரிதடைந்தது - வேகம் பெற்றது.". உங்களில் யாராவது இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் எனக்கு எழுதுங்கள். இதுதான் இந்த இடுகையின் மூலம் நான் சொல்ல விரும்பிய சேதி.

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், இறுதித் தீர்ப்பு பற்றிய நம் நிலைப்பாடு பற்றிப் பேசும்போது, அதன் பொருள் என்ன? தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரப்போகிறது என்று ஒன்றும் புரியவில்லை. ஆனாலும், என்னால் நிபந்தனையின்றி - உரக்கச் சொல்ல முடியும்... நீதி மன்றம் பிரச்சனைக்குரிய இடத்தில் கோயில் கட்டச் சொன்னாலும் சரி... மீண்டும் மசூதி கட்டச் சொன்னாலும் சரி... எல்லாவற்றையும் இடித்து விட்டு வேறு ஏதாவது கட்டச் சொன்னாலும் சரி... நான் துளியும் கவலைப் படப் போவதில்லை. என் இந்து சகோதரர்கள் அனைவருமே அப்படி இருப்பதைத்தான் நான் விரும்புகிறேன். அதே வேளையில், கோயில் கட்ட உத்தரவிட்டாலும் அல்லது மசூதியை இடித்ததை நியாயப் படுத்தினாலும் (அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றாலும்) இந்த நாட்டில் உள்ள எல்லா முஸ்லிம் சகோதரர்களும் அப்படியே இருக்கக வேண்டும் என்றும் ஆசைப் படுகிறேன்.  நிபந்தனையற்ற "ஆம்" ஒன்றை இதற்கு பதிலாக உங்களில் ஒருவர் அனுப்பி வைத்தாலும், இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் என்னுடைய பணியைச் சிறிதளவு செய்து விட்டேன் என்றே கொள்வேன்.

என் எழுத்தில் எவ்வளவு நேர்மையாக இருக்க முடியுமோ அவ்வளவு நேர்மையாக இருந்துள்ளேன். ஆனாலும், யாரோ ஒருவர் என் வரிகளுக்கிடையில் வாசித்து இயல்பாகவே என்னிடம் என் மதம் மீது பாகுபாட்டுணர்வு இருக்கிறது என்று கத்தினாலும் ஆச்சரியப்பட மாட்டேன். ஏனென்றால், நானே என்னுடைய நண்பர்கள் பலரிடம் அப்படியெல்லாம் வாதாடியிருக்கிறேன். ஆனால், உங்களுக்கொன்று சொல்லி விடுகிறேன் - இது போன்ற முத்திரை குத்தல்கள்தான் என் போன்ற நடுநிலையாளர்களை நட்டாற்றில் விடுபவை. அதுதான் இந்த நாட்டில் வலதுசாரி அரசியல் தழைத்தோங்க வழி செய்திருக்கிறது. இனியும் அவர்கள் வளர வேண்டாமென்று நினைத்தால், பொய்யான - போலியான ஓர் உலகில் வாழாமல், நாம் இன்னும் யதார்த்தமானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் (நேர்மையானவன் என்று பெயரெடுப்பதற்காக கண் மூடித்தனமாக தான் சார்ந்த குழுவை எப்போதுமே எதிர்க்காமல் இருப்பதும் நேர்மையே) மாற வேண்டும்.

இதுதான் என் நிறைவான சொல். தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி... என் அடி மனதின் ஆழத்தில் இருந்து நான் நினைப்பது என்னவென்றால், இது போன்ற அற்பமான காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான உயிர்களை இழப்பது அர்த்தமில்லாதது. யாரோ ஒருவரின் அரசியல் மூலதனத்தை அதிகப்படுத்தும் வேலையைத்தான் செய்வீர்கள். இந்தச் சண்டைகளில் ஈடுபடுவதன் மூலம், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியோ... உணவோ... வாழ்க்கை முறையோ... இன்னும் சொல்லப் போனால் நல்ல பண்பாடோ கண்டிப்பாகக் கிடைக்கப் போவதில்லை. வீதிகளுக்கு வரும் உங்களில் சிலருக்கு சில நாட்களுக்கு வேண்டுமானால் நல்ல உணவு கிடைக்கலாம். ஆனால், அதற்கு நீங்கள் கொடுக்க வேண்டிய விலை உங்கள் வாழ்க்கையாக (அல்லது உயிராக) இருக்கலாம். அந்த அளவுக்கு அது பிரயோசனம் உள்ளதா? அதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

நம் வருங்கால சந்ததிகள் வாழ்வதற்கு மேலும் பாதுகாப்பற்ற ஒரு இடத்தை உருவாக்கப் போகிறோம். அவ்வளவுதான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாம் செய்ய விரும்புவது அதுதானா?

உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி