இரயில்வே அமைச்சரானதும் விபத்தா?!

தொடர்ந்து நிகழும் இரயில் விபத்துகள் நாட்டை உலுக்கி எடுக்கின்றன. இப்படியே தொடர்ந்தால், அத்தகைய செய்திகளைக் கேட்டுக் கேட்டு நமக்கு மனம் மரத்துப் போகலாம். இன்னும் பொறுப்பான செயல்பாடுகள் மற்றும் சிறப்பான சட்டங்கள் மூலம் இவை தவிர்க்கப் படலாம் என்பது என் உறுதியான நம்பிக்கை. 86% இரயில் விபத்துகள் மனிதத் தவறுகளால் நிகழ்பவை என்றொரு இரயில்வே புள்ளி விபரம் அதை மேலும் உறுதிப் படுத்துகிறது. இன்னொரு புறம், அவையெல்லாமே மனிதத் தவறுகள் அல்ல இயந்திரக் கோளாறுகள் என்று ஒருவர் விளக்கம் அளிக்கிறார். நம்முடைய இயந்திரங்கள் மற்றும் மனிதர்கள் இரண்டுமே மற்ற நாடுகளில் இருப்பதை விட சிறப்பாக இல்லை என்பது நன்கறிந்த உண்மை ஆகி விட்டது. எனவே, உண்மையில் எது இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்று தெரியவில்லை.

எது எப்படியிருப்பினும், தெளிவாக வெளிவரும் உண்மை என்னவென்றால், உலகின் மற்ற பகுதிகள் போல் இந்தியாவில் மனித உயிர்கள் மதிக்கப்படுவதில்லை என்பது. அளவுக்கதிகமான எண்ணிக்கை அதற்கொரு காரணமாக இருக்கலாம். இதுவரை இந்தியாவில் நடந்த இரயில் விபத்துகளைப் பட்டியலிட்டு விக்கிபீடியாவில் (WIKIPEDIA) ஒரு தனிப் பக்கமே உள்ளது. உலகிலுள்ள வேறு எந்த நாடும் இப்படியொரு பக்கமும் அவ்வளவு பெரிய பட்டியலும் கொண்டிருக்கும் என நினைக்க வில்லை. நம் இரயில்வே எவ்வளவு பொறுப்பற்று இருக்கிறது என்பதை நிரூபிக்க இது போதும். பட்டியலைப் பார்த்து நான் புரிந்து கொள்வது என்னவென்றால், கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் ஒரு பெரிய இரயில் விபத்து நடந்திருக்கிறது. அதுவும் முக்கியமாக 2010-இல் அளவுக்கதிகமாக நடந்திருக்கிறது.

ஏன் 2010? என் மனதுக்கு உடனடியாகத் தோன்றுவது என்னவென்றால், 2010 தான் இப்போதைய இரயில்வே அமைச்சரின் முதலமைச்சர் ஆசைகளுக்கு இறக்கை கட்டி விட்ட ஆண்டு. அவருடைய முக்கியத்துவங்களுக்கு இடையில் இழுபறிப் போட்டிகள். வங்கத்துக்கும் இரயில்வேக்கும் இடையிலான இழுபறி. அவருக்கு அளிக்கப் பட்டிருக்கும் பொறுப்புக்கும் அவர் கனவு காணும் பதவிக்கும் இடையிலான இழுபறி. கையில் இருப்பதற்கும் மனதில் இருப்பதற்கும் இடையிலான இழுபறி. எது அதி முக்கியம் என்ற யுத்தத்தில் வென்றது அவருடைய கனவு; தோற்றது உலகின் மிகப் பெரிய இரயில்வே நெட்வொர்க்குகளில் ஒன்று. இரயில்வே அமைச்சர் என்ற பணியில் அவர் பெருந்தோல்வி அடைந்து விட்டார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

இரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகிக் கொள்வதற்கான சரியான தருணம் இது. ஆணவம் பிடித்த இடதுசாரி முன்னணியைத் தூக்கி வீசி விட்டு மேற்கு வங்க முதல்வராக அவர் ஆகும் நாளை எதிர் நோக்கிக் காத்திருக்கும் கோடானு கோடி மக்களில் நானும் ஒருவன். ஆனால், இத்தகைய பொறுப்பை ஆர்வமில்லாமல் ஒருவர் செய்வதைப் பார்க்க நான் விரும்பவில்லை. எனவே, தன் பெரும்பாலான நேரம் சொந்த மாநிலத்தின் பிரச்சனைகளைச் சமாளிப்பதிலேயே போகிறது என்று சொல்லி 2010-இல் ஏற்பட்ட எல்லாத் தோல்விகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதே புத்திசாலித் தனமாக இருக்கும். அதுவும் அவருக்கு சமமான முக்கியத்துவம் கொண்டது. மக்களின் அழைப்பை மதியாமல் இருக்க முடியாது. தன் மாநிலத்தின் முதலமைச்சர் ஆகத் தயாராகிக் கொண்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கையின் முக்கியமான குறிக்கோள் அதுதான். போகிற போக்கில், இரயில்வே அமைச்சர் ஆகி விட்டார். அதுவே ஒரு விபத்து. அவருடைய அரசியல் வாழ்வில் நிகழ்ந்த ஒரு விபத்து மேலும் பல விபத்துகளுக்குக் காரணமாக இருக்கக் கூடாது.

தன் தோல்வியைத் தானே ஒத்துக் கொண்டால் அவருடைய அரசியல் எதிரிகள் அதில் ஆதாயம் தேட முயல்வார்களோ என்று பயப்படுகிறார். நான் என்ன நினைக்கிறேன் என்றால், இப்போது அவர் அதைச் செய்யத் தவறினால் சரியான நேரத்தில் கண்ணியமாகக் கழண்டு கொள்ளாவிட்டால் அவர் தெருவில் கத்துவதற்கு மட்டுமே லாயக்கு என்றும் நிர்வாகி என்ற முறையில் பெரும் தோல்வி அடைந்து விட்டார் என்றும் நிரூபிக்க அவருடைய எதிரிகளுக்கு மிக எளிதாகி விடும். விடாத இடைவெளிகளில் இரயில் விபத்துகள் நடப்பதைப் பார்த்தால் அதுவும் உண்மையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மமதா என்ற அமைச்சரை விட மமதா என்ற அரசியல்வாதி திறமையானவரோ என்று தோன்றுகிறது. அப்படியானால், அவர் ஒரு சிறந்த முதலமைச்சராக இருக்க முடியும் என்று எப்படி அவருடைய மக்களிடம் நிரூபிக்கப் போகிறார்?

இவர் ஒரு காங்கிரஸ்காரராக இருந்திருந்தால், உள்துறை அமைச்சராக இருந்த திரு. பாட்டீல் அவர்களைத் தூக்கி வீசியது போல வீசி எறிவது எளிதாக இருந்திருக்கும். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, கூட்டணியின் மிகப்பெரிய கட்சி இவருடையது. எனவே, அவருடைய மனம் புண் பட வைக்க முடியாது. சென்ற இன்னிங்சில் அவர்களுடைய உள்துறை அமைச்சருக்குச் செய்ததை இந்த இன்னிங்சில் இரயில்வே அமைச்சருக்குச் செய்ய முடியாது. ஆனால், அது காலத்தின் கட்டாயம். இழக்கப் பட்ட உயிர் எந்த அமைச்சகத்தின் தோல்வியால் இழக்கப் பட்டாலும் அது உயிர்தான். என்னிடம் தகவல்கள் இல்லை. ஆனால், இரயில் விபத்துகளில் இழந்த உயிர்களின் எண்ணிக்கை தீவிரவாதிகளின் தாக்குதல்களில் இழந்த உயிர்களின் எண்ணிக்கையை விட அதிகம். நம் கட்டுப்பாட்டில் இருப்பதை முதலில் சரி செய்ய வேண்டும் அல்லவா? தீவிரவாதிகளின் தாக்குதலை விட இரயில் விபத்துகள் அதிக அளவில் நம் கட்டுப்பாட்டில் இருப்பவை என்று உறுதியாக நம்புகிறேன். இங்கே எதிரி என்றொருவர் இல்லாததால் இழப்புகள் தேவையான அளவுக்கு எடுத்துக் காட்டப் படுவதில்லையோ என்றெண்ணுகிறேன். நாம்தாம் நம் எதிரிகள்.

இரயில்வேயில் இது போன்ற தோல்விகள் ஏற்படும்போது எப்படிப் பட்ட தண்டனை அமைப்பு கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அவை போதாதென்றும் திறம்பட்ட செயல்பாட்டின் தரத்துக்கு மிகத் தொலைவிலும் இருப்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப் பட்டிருக்கிறது. எந்த அடி மட்ட நடவடிக்கையும் அதை முழுமையாகத் தவிர்க்க உதவாது. எனவே, மேல் மட்டத்தில் இருப்போரையும் தண்டிக்க மேலும் கடுமையான சட்டங்கள் வேண்டும் என்பது தெளிவாகிறது. அதுதான் அவர்களை மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள் ஆக்கும். அத்தகைய கடும் தண்டனைகள் கொடுப்பதன் மூலம் நமக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. நூறு கோடி மக்கள் கொண்ட ஒரு நாட்டில், அவர்களின் வேலைகளை இன்னும் சிறப்பாகச் செய்ய ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள்.

இரயில்வேயில் மட்டுமில்லை. எந்தத் துறையிலும் இது போன்ற தோல்விகள் நிகழ்ந்தால் அத்தோடு அத்துறை அமைச்சர்கள் எக்காலமும் எந்த அமைச்சர் பதவியிலும் நீடிக்க முடியாத படியான சட்டங்கள் வர வேண்டும். ஒரு ஓட்டுனர் தன் மொத்த வாழ்க்கையில் ஒரு விபத்துக்குக் காரணமானால் போதும். அத்தோடு அவருடைய வாழ்க்கையே முடிந்தது போலாகி விடும். எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாக வேண்டும் என்பதைத் தனிப்பட்ட முறையில் நான் பார்த்திருக்கிறேன். ஒரு சாமானியனுக்கு அவ்வளவு கடும் தண்டனைகள் சாத்தியம் என்றால், இந்தப் பெருமக்கட்கு மட்டும் ஏன் அது சாத்தியமில்லை? இப்போது இது ஒரு சுத்தப் பைத்தியக்காரத்தனம் போலத் தோன்றலாம். செய்வதை விட சொல்லத்தான் எளிது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டமும் கல்வி கற்கும் உரிமைச் சட்டமும் ஒரு காலத்தில் சுத்தப் பைத்தியக்காரத்தனமாகப் பட்டவைதான்; செயலினும் சொல்லல் எளிது என்று இருந்தவைதான். இன்றைக்கு அவை எதார்த்தம் ஆகி இருக்கின்றன. எனவே, ஒரு அரசாங்கம் அதனைத் தம் மக்களுக்கு அர்ப்பணித்த ஒன்றாக இருந்தால், எதுவும் சாத்தியமே!

டாக்டர். சிங்! எனக்குத் தெரியும், நீங்கள் மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்று!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி