மரியாதை - அளவுக்கு மிஞ்சினால்?

50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததென்று தெரிய வில்லை. ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலான என் பணியிட அனுபவத்தில் புரிந்து கொண்டது என்னவென்றால், சக மனிதர்களை மதிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றோர் எல்லையிலா வளர்ச்சி பெறுகிறார்கள். அது போலவேதான் அளவுக்கு அதிகமாக மரியாதை கொடோரும். எந்தத் துறையிலும் வளர்ச்சி என்பது அந்தத் துறை சார்ந்த தொழில் நுட்ப அறிவால் மட்டும் கிடைப்பதில்லை - அது சக மனிதரோடு பழகும் திறம் முதலான பல காரணிகளால் நிர்ணயிக்கப் படுவது - பழகும் திறம்தான் அந்தப் பட்டியலில் முதன்மையாக இருப்பது என்பதெல்லாம் அதிகமானோருக்கு அதிகமான அளவில் வெளிப்படியாகத் தெரிந்து விட்டது இப்போது. பழகும் திறம் என்று சொல்லும் போது, அது மனிதர்களை மதிப்பது மட்டும் ஆகாது.  சரியான முறையில் அவர்களைக் கையாள்வதும் அடங்கும். அதாவது, மனிதர்களுடன் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து அதிகபட்ச உழைப்பை அல்லது பங்களிப்பைப் பெறுவது. தேவைப் படும் போது அவர்களைக் கடுமையாக நடத்துவதும் அதில் அடக்கம். சொல்லவே வேண்டியதில்லை - கடுமையாக நடந்து கொள்வதற்காகவோ அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப் படும்போதெல்லாம் அந்தத் திறத்தைச் சோதித்துக் கொள்வதற்காகவோ கடுமையாக நடந்து கொள்ள வேண்டியதில்லை.

குடும்பத்துக்குள்ளும் சொந்தபந்தங்கள் மத்தியிலும் பெரியவர்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஒருவனாகப் பார்க்கப் படுவதால், அவர்களைச் சரியாக மதிப்பதில்லை என்ற குற்றச் சாட்டுக்குப் பல முறை ஆளாகியிருக்கிறேன். அவர்கள் என்னுடைய குடும்பத்தினர் என்பதால் அது தேவையில்லை என்றே நான் நினைத்தேன். மரியாதையில்லாமல் பேசுவேன் என்றோ தகாத வார்த்தைகளில் திட்டுவேன் என்றோ அர்த்தமில்லை அதற்கு. அவர்களுடைய கோணத்தில், என் பாவனைகள் மற்றும் கருத்துச் சொல்லும் விதம் ஆகியவை மரியாதைக் குரியனவாக இல்லை. நேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால், எதையும் செய்யும் முன்பு நான் எப்போதுமே அவர்களுடைய கருத்தைக் கேட்க வேண்டும்; அவர்கள் சொல்படியே நடந்து அவர்களுக்கு என் மரியாதையைக் காட்ட வேண்டும். மாறாக, நான் அவர்களிடம் கருத்துக் கேட்டுச் செல்வதும் இல்லை; அப்படியே வழிய வந்து சேர்கிற கருத்துக்களையும் பெரிதாக மதித்துச் செயல்படுத்த முடிவதில்லை. பெரும்பாலான நேரங்களில், என் திட்டங்கள் யாருடைய மதிப்பீட்டுக்கும் உள்ளாகாமலே செயல்படுத்தப் பட்டு விடுகின்றன. என் திட்டங்களை மேம்படுத்திக் கொள்ளவோ மதிப்பீடு செய்வோரை மகிழ்ச்சிப் படுத்தவோ ஒருபோதும் மதிப்பீடு செய்துகொள்ள முயன்றதில்லை.

மற்றொரு புறம், நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் (அந்த மனிதர் எவ்வளவு நல்லவர் அல்லது கொடூரமானவர் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு) சரியாக மதிப்பது பணியிடத்தில் வெற்றி பெறுவதற்கு வசதியாக இருக்கும் என்றொரு கருத்தை மனப்பூர்வமாக நம்பி ஏற்றுக் கொண்டேன். பணியிடத்தில் மட்டுமல்ல, வீட்டை விட்டு வெளியேறி விட்டால், வெளியில் சந்திக்கிற அனைவரிடமுமே மரியாதையாக நடந்து கொள்வது தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். இன்று நாம் நற்குணங்கள் என்று சொல்லிக் கொள்கிற எல்லாக் குணங்களுமே சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவையே என்கிறார் 'சுயநலம் எனும் நற்பண்பு' (THE VIRTUE OF SELFISHNESS) நூலை எழுதிய அயன் ராண்ட். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், நாம் நற்பண்புகளைப் பழகிக் கொள்வதே நம்முடைய அமைதியான வாழ்க்கைக்காகவே ஒழிய ஊரில் உள்ள எல்லோருக்கும் நல்வாழ்க்கை அமைத்துக் கொடுக்க அல்ல. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட பின்பு, சில பக்கங்களுக்கு மேல் அவருடைய நூலை என்னால் படிக்க முடியவில்லை. ஆனாலும் இந்தக் கருத்தை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, என் கல்லூரிக் காலங்களில் ஒரு கவிதையில் எழுதினேன் - "நான் மனிதர்களுக்கு அடுத்த படியாக அதிகம் அஞ்சுவது பாம்புகளுக்கும் நாய்களுக்கும்" என்று. இதை எந்த அளவு நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் அல்லது ஆதரிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், என் மனதுக்கு அடிக்கடி வந்து செல்லும் நான் எழுதிய மிகச் சில வரிகளில் இதுவும் ஒன்று. அது அப்படியே என்னையும் என் பயன்களையும் பற்றிப் பிரதிபலிக்கிறது. எனவே, இது என் நீண்ட காலம் என் மனதில் நிலைத்து நிற்கும். அந்நியர்களைக் கண்டால் எனக்கொரு பைத்தியக் காரத்தனமான பயம். பாம்புகளும் நாய்களும் அதிக பட்சம் கடிக்கத்தான் முடியும். ஆனால், நான் பார்த்த அந்நியமான செயல்கள் எல்லாமே அந்நியர்களால் (அதாவது மனிதர்கள்) செய்யப் பட்டவை. இது போல் இப்படி நடந்ததில்லை என்று திகைக்க வைக்கிற எல்லாக் குற்றச் செயல்களுமே மனிதர்களால் செய்யப் பட்டவையே; மற்றெந்த உயிரினங்களாலும் அல்ல. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பாதுகாப்பற்ற இந்த உலகில் பாதுகாப்பாக இருந்து கொள்ளும் ஒரே காரணத்துக்காக மனிதர்களை மதிக்கும் இந்த நற்பண்பை வளர்த்துக் கொண்டேன். எடுத்துக் காட்டாக, ஒரு தெருச் சந்தையில், கவனமாகப் பேசுகிற ஒருவரை விட அதிகமாக வார்த்தையை விடுபவன்தான் முதலில் அறை வாங்குகிறான் (இது ஒரு முடிவல்ல - சவால் விடத் தக்க ஒரு கருதுகோளே. அதைத்தான் இக்கட்டுரையின் மிச்சப் பகுதியில் நானும் செய்யப் போகிறேன்). இதுதான் என்னை அந்நியர்களிடமும் வெளியாட்களிடமும் என் நடத்தை பற்றிக் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும் படி மாற்றியது.

இப்போது, அப்படியே நம் வீட்டு நிலவரத்தைப் போய்ப் பார்ப்போம். நான் என்ன செய்தாலும் பேசினாலும் என் குடும்பத்தினர் ஒருபோதும் என்னிடம் எதிர் பாராத விதத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள். அதனால்தான் அவர்களோடு என் பேச்சுத் தொனியிலும் முக பாவங்களிலும் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. இது என் குணாதிசயமும் அதற்கான காரணங்களும் பற்றியது. இதற்கு அப்படியே தலைகீழாக நடந்து கொள்வோரும் கண்டிருக்கிறேன். குடும்பத்தினருடன் அளவிலாத நல்ல பிள்ளையாக இருப்பார்கள். அவர்களுக்குப் பிடித்தோரை மாசு படிந்த காற்று கூடத் தொடாமல் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், அந்நியரிடம் பேருந்தில் இடம் போடுவது போன்ற கேவலமான விஷயங்களுக்காகக் கூட எந்த விதமான சண்டைக்கும் தயங்காமல் தயாராக இருப்பார்கள். அவர்களுடைய காரணம் என்னவென்றால், "என் குடும்பத்தாரின் முகத்தை நான் ஒவ்வொரு நாளும் பார்க்க வேண்டும்; காலம் முழுக்க அவர்களோடே வாழ வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்குப் பின் ஓர் அன்னியரை நான் திரும்பச் சந்திக்க வேண்டியதே இல்லாமல் போகலாம் அல்லது அவர்களை வேண்டுமென்றே தவிர்க்க விரும்பினால் அதையும் செய்யலாம்.". அதுவும் சரியாகத்தான் படுகிறது. ஆனால், என் சிந்தனாவோட்டம் பாதுகாப்பு என்ற கோணத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. ஆனால், அவர்களுடையதோ... தெரியவில்லை எதிலிருந்து என்று.

பெரியோரை மதிப்பது நம் கலாசாரத்தில் சிறந்த நற்பழக்கம். ஒருவரின் வயதுக்கு அளவுக்கதிகமான மரியாதை கொடுக்கிறேன். ஓர் இளம் வயது அலுவலருக்குக் கீழ் பணி புரியும் வயதான உதவியாளரைக் காணும்போதெல்லாம் என் மனம் வெம்பும். அலுவலரின் தந்தை வயது கொண்ட அவருடைய உதவியாளர் அவர் முன் மரியாதைக்காகக் குனியும் போது, அதற்காக எவ்வளவோ வருந்தி இந்த உலகின் விதிகள் அனைத்தையும் தூற்றுவேன். அது போன்ற காட்சிகள் பல நாட்களுக்கு என்னோடு பயணிப்பன. இது ஓர் இந்தியப் பிரச்சனை என்றே நினைக்கிறேன். மற்றவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாகவே இராமல் இருக்கலாம். உரிய (பல நேரங்களில் தேவைக்கும் மேல்) மரியாதையைக் குறை வைக்காமல் கொடுத்து விடுவதால், வெளியுலகில் பெரியவர்கள் ஏகப்பட்ட பேர் என்னை மிகவும் நேசிக்கிறார்கள் (வீட்டில் இருக்கும் பெரிசுகள் இன்னமும் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்). அப்படி நடந்து கொள்வதன் மூலம் நிறைய பலன்களை அறுவடை செய்திருக்கிறேன். அவர்களை மதியாதோரை விட நான் கூடுதல் நிம்மதியோடு வாழ்ந்திருக்கிறேன். ஆனால், வயதான ஒரே காரணத்துக்காகச் சிலரை அவர்களுடைய தகுதிக்கு மிஞ்சி மதித்ததால் எண்ணிலடங்காப் பிரச்சனைகளுக்கும் உள்ளாகியிருக்கிறேன் என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். இதைப் பற்றித் தான் இன்று உங்களோடு பேச விரும்புகிறேன்.

தன்னைப் பெரிதாக நினைத்துக் கொண்டு எல்லோரும் தற்போதை விடத் தன்னை அதிகமாக மதிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிற மறை கழண்ட பேர்வழிகள் நிறையப் பேரைச் சந்தித்து இருக்கிறேன். அவர்களைப் பற்றி அதிகம் கவலைப் படாமல் இருப்பதே நல்லது. இல்லையேல், எப்போதும் அவர்களுடைய பேச்சைக் கேட்பதும் அவர்களைத் திருப்திப் படுத்துவதுமான முடிவில்லா வலைக்குள் சிக்கி விடுவோம். இந்த ஆட்கள் வெளிப்படையாகவே அவர்கள் எதிர் பார்க்கும் மரியாதை பற்றிச் சொல்லி விடுவார்கள். கண்டு கொள்ளாவிட்டால், தொடர்ந்து புலம்புவார்கள். அவர்கள் புலம்பல்களைப் பெரிதாக எடுத்துக் கொண்டு அவர்களையும் பெரிதாக மதிக்க ஆரம்பித்தோமேயானால், முடிந்தது கதை. அவர்கள் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போகும். நீங்களும் தரத்தைக் கூட்டிக் கொண்டே செல்ல வேண்டும். அது கண்டிப்பாக உங்களைச் சிக்கலில் கொண்டு போய்த்தான் விடும். அவர்கள் பேச்சைக் கேட்பதை விடக் கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது. அவர்கள் மரியாதைப் பிச்சைக் காரர்கள். மரியாதையைப் பெறுவதற்கும் கேட்டு வாங்குவதற்கும் வேறுபாடு தெரியாதவர்கள். துரதிர்ஷ்ட வசமாக, கேட்டுப் பெறுவதில்லை மரியாதை; அவர்களின் செயல்பாட்டைக் கண்டு அது இயல்பாகவே வரவேண்டும் என்கிற உண்மை அவர்களுக்குத் தெரியாது. விளக்கினால் புரியவும் செய்யாது.

அடுத்த பிரிவினர் தம்மைத் தாமே பெரிதாக நினைத்துக் கொள்வோர் அல்ல; ஆனால் நாம் அவர்களை அப்படி ஆக்கி விடுகிறோம். அவ்வளவு மரியாதைக்கு அவர்கள் தகுதி உடையோரும் அல்ல; இதுவரை இந்தப் பூவுலகில் எவரும் அப்படியொரு மரியாதையை அவருக்குக் கொடுத்துப் பழக்கியிருக்கவும் மாட்டார். அப்படியொரு மரியாதையை நம்மிடமும் அவர்கள் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். வரலாறு காணாத மரியாதை கிடைப்பதைக் கண்டு அவர்களைப் பிடிக்கவே முடியாது; அதுவே அவர்கள் கோமாளி போல நடந்து கொள்ள வழி வகுக்கும். அப்படிப் பட்ட மரியாதையைக் கொடுப்பதால், அவர்களைப் பற்றிய உங்கள் சரியான மதிப்பிடலுக்காக (நமக்குத்தான் தெரியும் அது எவ்வளவு சரி என்று!) அவர்களுக்கு உங்களை மிகவும் பிடித்து விடும். ஆனால், மெதுவாக உங்களிடம் விளையாட்டுக் காட்ட ஆரம்பிப்பார்கள். அதுவே பின்பு மிக அதிகமாகி விடும். ஏனென்றால், அவர்களுடைய வாழ்க்கையிலேயே அவர்களை ஒரு பொருட்டாக மதித்த ஒரே ஆள் நீங்கள்தானே. அவர்கள் நினைப்பார்கள் - 'சரி, இந்த ஆள் நம்மளைப் பெரிய ஆள் என்று நினைக்கிறான். எனவே, நம்முடைய பெருமையை அவ்வப்போது காட்டிக் கொண்டே இருந்தால்தான் மரியாதையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.'! ஆனால், அவர்கள் உணரத் தவறி விடுவது என்னவென்றால், இந்த விளையாட்டில் அவர்கள் மரியாதையை இழக்கத்தான் செய்கிறார்கள். உங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏதாவது அறிவுரைகள் செய்வார்கள். அதுவும் அளவுக்கு அதிகமாக. உங்களுக்குச் சரியான வழிகாட்டி அவர்கள்தாம் என்று காட்டிக் கொள்வதற்காக நிறையக் குறைகளைக் கண்டு சுட்டிக் காட்டுவார்கள். நிரந்தரமாக அவர்களிடம் இருந்து தப்பிக்கும் வரை அல்லது பொளேர் என்று கன்னத்தில் வைத்து "பொத்திக்கிட்டு போறியா வாயை!"  என்று சொல்லும் வரை இது தொடரத்தான் செய்யும். அறையை வாங்கிக் கொண்டு, தன்னை மதித்த ஒரே ஆளையும் இழந்து விட்டோமே என்று மிகவும் வருத்தப் படுவார்கள்.

மேலே சொன்னது போலவே இருக்கும் இன்னொரு பிரிவினர் இருக்கிறார்கள். ஆனால், ஒரு வித்தியாசம் - அவர்களைப் போலல்லாமல், ஆரம்பத்தில் இருந்தே உங்களை இவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. தம்மை மதிப்பதை உணர்ந்த நிமிடம் முதல் உங்களை மனிதக் கழிவு போல நடத்துவார்கள். அவர்களைப் பொருத்த மட்டில், நீங்கள் ஒரு வெட்டிப் பேர்வழி, ஏனென்றால் நீங்கள்தான் உங்களை விடக் கேவலமான அவர்களை மதிக்கிறீர்களே. அவர்களுக்கு நீங்கள் மதிப்பைக் கூட்டக் கூட்ட அவர்கள் குறைப்பார்கள். சாகும் வரை விடவும் மாட்டார்கள். உங்கள் சாவு அல்லது அவர்கள் சாவு. இந்தக் கோமாளிகளுக்கும், அவர்கள் வாழ்க்கையிலேயே முதல் முறையாக இவ்வளவு மரியாதைக் காட்டியது நீங்கள்தாம். எப்படி உங்களை விட முடியும்? அறைந்து வாயைப் பொத்திக் கொண்டு போகச் சொன்னாலும், அவர்களுக்கு நடந்ததற்காக வருத்தப் படுவார்களே ஒழிய உங்கள் உறவை இழந்ததற்காக அல்ல. அவர்களுக்கு நேர்ந்த அநீதிக்குப் பதிலடியாக, அலுவலகத்தில் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு வந்து உலகமெலாம் உங்கள் பெயரைக் கெடுக்கும் வேலையில் இறங்கி விடுவார்கள். :)

எனவே, இதன் மூலம் நாம் செய்யும் முடிவு என்னவென்றால், ஒவ்வொரு மனிதருக்கும் எவ்வளவு மரியாதை - மதிப்புக் கொடுப்பது என்பதை அளந்து கொடுப்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பல நேரங்களில், அளவுக்கதிகமாகக் கொடுத்து விட்டால் நம்மில் பலருக்கு அதைத் திரும்பப் பிடுங்குவதோ குறைத்துக் கொள்வதோ சிரமமாகி விடும். அதை (திரும்பப் பிடுங்குவது அல்லது குறைப்பது) மிக எளிதாகவும் வெற்றிகரமாகவும் செய்பவர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் எதைப் பற்றியும் கவலைப் பட வேண்டியதில்லை. அவர்கள் சாமர்த்திய சாலிகள். அவர்களுக்கு எதுவுமே பிரச்சனை இல்லை. எதை அளக்க முடியாதோ அதை வளர்க்க முடியாது என்பது என் தொழில் எனக்குக் கற்றுக் கொடுத்த ஒரு பாடம். ஆனால், இவர்களுக்கு அளத்தலும் தேவையில்லை; வளர்த்தாலும் தேவையில்லை. எல்லாமே அந்தந்த நேரத்தில் கை வந்து விடும் அவர்களுக்கு. ஆனால், நம்மைப் போன்று எளிதில் ஏமாந்து போவோருக்கு, மதிப்பை மதிப்பிட்டு - மதிப்பெண் இட்டுக் கொடுப்பது கண்டிப்பாக உதவும். அளவுக்கதிமாகக் கொடுப்பதால் நாம் ஒன்றும் இழப்பதில்லை என்பது போலத் தெரிந்தாலும், தவறான ஆட்களுக்கு மித மிஞ்சிக் கொடுப்பதால் கண்டிப்பாக இழக்கத்தான் செய்வோம் என்பது என் அபிப்ராயம். அப்படி இழப்பது பெருமளவு நிம்மதியும்தான்

கருத்துகள்

  1. தனிகுடுபங்கள் பெருகிவிட்டதால் ...இனி......கஷ்டம்தான்

    பதிலளிநீக்கு
  2. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே. மன்னிக்கவும். தனிக் குடும்பங்கள் பற்றி ஏன் சொன்னீர்கள் என்று புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. அலுவலகத்தை பொறுத்த வரையில் மரியாதையின் அளவில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் என்பதை வேலையில் சேர்ந்த பொழுதில் கடைநிலை ஊழியர் ஒருவருக்கு மரியாதை கொடுத்து பேசப்போக அவரோ அலுவலகத்தில் அவருக்கு நிகராக என்னை நினைக்க நீங்கள் கூரியது போலே நான் மாட்டிக்கொண்டேன். இன்று வரையிலும் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை, . ஆனாலும் அந்த பாடம் மற்றவர்களிடத்தில் சரியான முறையில் நடந்து கொள்ள உதவியது.

    பதிலளிநீக்கு
  4. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே. ஒத்த கருத்தைப் பகிர்ந்து கொள்ள ஒருவர் கிடைத்ததில் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி