மாக்களாட்சி?!

எத்தனையோ கோளாறுகள் இருந்தாலும் மக்களாட்சிதான் இன்று அதிகம் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ள அமைப்பு. மற்ற அமைப்புகள் அனைத்திலும் இதை விடப் பெரிய பிரச்சனைகள் (குறைவாக இருக்கலாம்) இருக்கின்றன. மற்ற அமைப்புகள் மக்களாட்சிக்குப் பக்கத்தில் கூட வர முடியாத அளவுக்குப் பிரபலமற்றவையாக இருப்பதால், இந்த மக்களாட்சி அமைப்பில் இருக்கிற பிரச்சனைகளைக் களைந்து இதை மேலும் மேம்பட்டதாக ஆக்கத் தேவையான மாற்றங்கள் பற்றிப் பேசுவதே நல்லதாகப் படுகிறது. குறிப்பாக, இந்திய மக்களாட்சியில்.

உலகிலேயே பெரிய மக்களாட்சி அமைப்பு இதுதான் என்றும் அதை இவ்வளவு பாதுகாப்பாக அழிய விடாமல் வைத்திருப்பதே பெரும் சாதனை என்றும் பீற்றிக் கொண்டு இருந்தாலும், கடந்த அறுபதாண்டு கால மக்களாட்சியின் விளைவுகள் உற்சாகமூட்டுவதாக இல்லை.

நிச்சயமாக நாம் நிறையச் செய்திருக்கிறோம்; ஆனால், அவை நம் தரத்துக்கு மிக மிகக் குறைவு. எத்தனை முறை சாப்பிட்டிருக்கிறோம் - கடந்த அறுபது ஆண்டுகளில் எத்தனை இரவுகள் தூங்கியிருக்கிறோம் என்பது போன்ற மிக அடிப்படையான புள்ளி விபரங்கள் பேசுவதில் பிரயோசனமில்லை. இவ்வளவு அறிஞர்களையும் நிபுணர்களையும் வைத்துக் கொண்டு, குறைந்த பட்சம் பட்டினிச் சாவுகள் இல்லாமல் செய்திருக்க வேண்டும்; கல்லாமையை இல்லாமை ஆக்கியிருக்க வேண்டும்; உலக மகா ஊழல்கள் இல்லாமல் செய்திருக்க வேண்டும்.

எது நம்மை அதைச் செய்ய விடாமல் தடுத்திருக்கிறது? சரியான ஆட்கள் சரியான இடத்தில் வைக்கப் படவில்லை. நேருவின் காலத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக நம் அரசியல்வாதிகளின் தரம் கீழே போய் விட்டது என்று சொல்லலாம். திரும்பத் திரும்ப வெவ்வேறு காரணங்களுக்காக திருடர்களையும் கொள்ளைக்காரர்களையும் போக்கிரிகளையும் நம் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறோம்.

ஏன் அப்படிச் செய்தோம்? எல்லாக் காரணங்களையும் சேர்த்துப் போட்டு ஒரு மூலக் காரண ஆய்வு (ROOT CAUSE ANALYSIS) செய்து பார்த்தால் கிடைக்கும் விடை - நம் மக்கள் சுத்த மண்ணாங்கட்டிகள் என்பதே. யார் சரியான ஆள் - யார் தவறான ஆள் என்று புரிந்து கொள்ளக் கூடத் தேவையான அளவு அவர்களிடம் கல்வியறிவோ பொது அறிவோ இல்லை.

அப்படியானால், மக்களாட்சிக்கான தகுதி நம்மிடம் உள்ளதா? இல்லை. மக்களாட்சி என்பது ஓரளவு கல்வியறிவு பெற்ற சமூகங்களுக்கானது; யார் எந்தக் கட்சிக் காரர் - எதை ஆதரிக்கிறார் அல்லது எதிர்க்கிறார் என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத நிலை.

அப்படியானால், நமக்கான சரியான அமைப்பு எது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது எது? அதை யார் முடிவு செய்வது?

நம் ஆட்சிப் பணியில் இருக்கும் அதிகாரிகளிடம் விட்டு விடலாமா அந்தப் பணியை? அவர்கள்தானே நம் அமைப்பில் இருக்கும் அதி புத்திசாலிகள்! அவர்களிடம்தானே நம் நாட்டுக்கு எது சரிப்பட்டு வரும் என்கிற சரியான புரிதல் இருக்கும்! அவர்களிடம் இந்தப் பணியை ஒப்படைக்கும் பட்சத்தில், மக்களாட்சி அமைப்பால் ஊழல் வீச்சமெடுத்துப் போயிருக்கும் அவர்களுடைய ஒன்னு விட்ட சகோதரர்களான அரசியல்வாதிகளுடனான அவர்களின் முன்னனுபவத்தைப் பயன் படுத்தி விடாமல் எப்படிப் பார்த்துக் கொள்வது?

மாவோயிஸ்ட்களிடம் விட்டு விடலாமா? அவர்கள்தாமே பலம் வாய்ந்தவர்கள்! ஏழு மாநிலங்களை ஏற்கனவே தம் பலமான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அடுத்த பலசாலிகள்! ஓர் உயிரின் மதிப்பைக் கூட உணர முடியாத அவர்களிடம் எப்படி மக்களுக்கான தேவையைச் சரியாகப் புரிந்து செயல்படும் பண்பை எதிர் பார்க்க முடியும்? அதுவும் மாதச் சம்பளத்துக்கு அரசாங்கப் பணியில் இருக்கும் பாவப்பட்ட பாதுகாப்புப் பிரிவினரின் உயிரின் மதிப்பை உணர முடியாதவர்கள்.

நமக்கு சாலப் பொருத்தமான ஓர் அமைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் அதைச் செய்வதற்கு சாலப் பொருத்தமான ஆட்கள் என்று நம் மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்களால்தான் செய்யப்பட வேண்டும். அது வேறு யாருமில்லை; நம்முடைய இன்றைய தலைவர்கள்தாம். அவர்களில் பெரும்பாலானவர்கள்தாம் திருடர்கள், கொள்ளைக்காரர்கள் மற்றும் போக்கிரிகள் இனத்தைச் சேர்ந்தவர்களே! அப்படியானால், சிறந்த அமைப்பைத் தேர்ந்தெடுக்கவே நாம் சிறந்த ஆட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது இப்போதிருக்கிற ஆட்கள் இல்லை. எந்த அடிப்படையில் அதைச் செய்வது? சிறப்பான ஆட்களைத் தேர்ந்தெடுப்பது எந்த அடிப்படையில் என்கிற விபரம் தெரிந்து விட்டால், சிறப்பான அமைப்பே கிடைத்ததாகி விடும். அப்புறம் மக்களாட்சிக்கும் தகுதியானவர்கள் ஆகிவிடும்.

சுத்தமாக எந்த விபரமும் இல்லாத மக்களைத் தேர்தலில் இருந்து தள்ளி வைக்க முடியுமா? தான் போடும் ஓட்டால் என்ன பயன் என்று கூடத் தெரியாத ஒரு பிறவி ஓட்டுப் போடுவதில் என்ன பயன்? அப்படி அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படா விட்டால் அவர்களின் நல்வாழ்வைப் பெற்றுக் கொடுக்க அவர்களுக்கான பிரதிநிதியாக யார் இருப்பார் - யார் கவலைப் படுவார்? அவர்களும் அரசாங்கத்தைக் கவிழ்க்க ஓர் ஆயுதம் தாங்கிய குழுவை அமைத்து, இருப்பதையெல்லாம் அடித்துப் பிடுங்கி அவர்களின் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.

அப்படியானால், எதுதான் முடிவு? முடிவே இல்லை. இயற்கை அதன் போக்கில் அழைத்துச் செல்லும். ஆனால், ஒரு கேள்வி! அவர்களுடைய தலைவர்களை அவர்களே தேர்ந்தெடுக்க முடிகிற இப்போது அவர்களுடைய சரியான பங்கு அவர்களுக்கு வந்து சேர்கிறதா? அவர்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கிறதா? அவர்கள் நல்வாழ்வுக்காக யாரேனும் கவலைப் படுகிறார்களா? இல்லை. எப்படியிருந்தாலும் யாரும் கண்டு கொள்ளப் படப் போவதில்லை. விபரமானவர்களுக்காவது அவர்களுக்குச் சேர வேண்டிய சரியான பங்கு போய்ச் சேரும். அதன் பின்பு விபரமில்லாதோருக்கும் மேம்பட்ட மரியாதை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்புக்கே வாய்ப்பில்லாமல் இருக்கிறது இப்போது. அவர்களும் இன்னும் கொஞ்சம் விபரமானவர்களாக மாற ஓர் அழுத்தம் கொடுக்கப்படும். வேட்பாளர்களுக்குத் தகுதிப் பரிசோதனை செய்ய இருக்கும் விதிமுறைகளைப் போல வாக்காளர்களுக்கும் ஏன் இருக்கக் கூடாது என்பதுதான் நான் சொல்ல வருவது. 

ஊழல்தான் மிகப்பெரிய பிரச்சனை; சாமானியர்களால் அவர்களின் ஊழல்வாதத் தலைவர்களை அடையாளம் காண முடியாது என்றால், அப்படிப் பட்ட ஏமாற்றுக் காரர்களைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்யும் சட்டம் ஏன் இருக்கக் கூடாது? இருக்கலாம். இருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை நிரூபிக்கப் பட்ட குற்றவாளிகளைத் தடை செய்யும் விதத்தில் சட்டம் இருக்கிறது. குற்றம் செய்வோரைத் தடை செய்யச் சட்டம் இருக்கும்போது அதற்குக் காரணமாக இருக்கும் ஏமாளிகளையும் தடை செய்யும் சட்டம் ஏன் இருக்கக் கூடாது? இருக்கலாம். அப்படியொரு சட்டம் இயற்றலாம்.

சரி. அப்படியானால், மசோதாவைத் தாக்கல் செய்து விடலாமா? இல்லை. அது முடியாது. தடைகள் ஏதும் இருக்கின்றனவா? மசோதாவைச் சட்டமாக்குவதில் அப்படியென்ன தடைகள் இருக்குமென நினைக்கிறீர்கள்? யாருமே அந்த மசோதாவை ஆதரிக்க மாட்டார்கள். ஏன்? அது அவர்களையே பிரச்சனைக்குள்ளாக்கும். மசோதாவை ஆதரிக்க வேண்டிய பெரும்பாலானவர்கள் அந்தப் பதவியில் இருப்பதே நிறைவேறப் போகும் சட்டத்தின் படி தகுதி இழக்கப் போகும் மக்களின் தயவில்தான். தனக்குத் தானே யார்தான் குழி பறித்துக் கொள்வார்கள்? தனக்குத்தான் அந்தக் குழி என்று முன்னமே தெரிந்திருந்தும் அதைப் போய் யாராவது செய்வார்களா?!

இது போன்ற அத்தனை குறைபாடுகளையும் வைத்துக் கொண்டு, இது போன்றதொரு மசோதா ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் ஒரு ஊகத்துக்கு வைத்துக் கொண்டு பார்த்தோமானால், இன்றைய நம் அமைப்பில் நான் காண விரும்பும் மூன்று முக்கிய மாற்றங்கள் யாவை?

1. இப்போது நான் சொன்னது. தேர்தல் என்பது என்ன என்று புரியும் ஆற்றல் கொண்டோர் மட்டும் அதில் பங்கு கொள்ளும் வகையில் ஒரு சட்டம். வண்டி ஓட்டுவதற்கு உரிமம் வேண்டும் என்கிற நாட்டில் வாக்களிப்பதற்கு ஏன் அது இருக்கக் கூடாது? பதினெட்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளும் இளைஞர்களும் அவர்களின் முதிர்ச்சியின்மை காரணமாக வாக்களிக்க முடியாது என்றால், அந்த வயதைக் கடந்த பின்பும் முதிர்ச்சியுறாமல் இருப்போருக்கு என்ன சொல்கிறீர்கள்? சட்டவிரோத நடவடிக்கைகளில் வேட்பாளர் தடை செய்யப் பட முடியும் என்றால், அதை ஏன் அதே சட்ட விரோத வேட்பாளருக்கு (ஊழல் சட்ட விரோதம் தானே!) வாக்களித்தவருக்குச் செய்யக் கூடாது? ஒவ்வொரு முறையும் நான் எதற்காகவாவது அரசியல்வாதிகளைத் திட்டும் போதும், ஏதாவதொரு நடுத்தர வர்க்கத்து மூஞ்சி  என்னோடு சண்டைக்கு வரும் - "அது அவர்களுடைய பிரசின்னை இல்லை; வாக்களித்த உன்னைடையது" என்றொரு புத்திசாலித் தனமான வாதம் ஒன்றோடு. அந்தப் புத்திசாலித் தனமான பதிலைக் கேட்டு நான் அடையும் எரிச்சல் இல்லாமல் போக வேண்டுமானால், இது ஒன்றே வழி என நினைக்கிறேன்.

2. இன்று நாம் கொண்டிருக்கும் அதே நோக்கங்களோடே இன்றைய அமைப்பு வடிவமைக்கப் பட்டது. ஆனால் அந்த அமைப்பும் அதன் நோக்கங்களும் தோல்வியுற்று விட்டன. நம் தலையாய தலைவர்களோடு நாம் நேரடித் தொடர்பு கொண்டிராததால் அவர்களை நாமே தேர்ந்தெடுப்பதை அது விரும்ப வில்லை. மாறாக, நமக்குத் தெரிந்தவர்களில் இருந்து நாம் சிலரைத் தேர்ந்தெடுத்தால் (அதாவது சட்ட மன்ற மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர்கள்) நம் சார்பாக அவர்கள் நம்மை ஆள்பவரைத் தேர்ந்தெடுப்பார்கள். நல்ல சிந்தனை. ஆனால், தோல்வியுற்று விட்டது. ஏன்? பெரும்பாலான நேரங்களில், அவர்கள் ஏன் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை அல்லது அது அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக, அவர்களுடைய வாழ்க்கையே அவர்களின் தலைவரின் தயவில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் பெரும் கொள்ளைப் பணத்தின் பங்கை வாங்கிக் கொண்டு தம் தலைவனுக்கு எதிராகத் திரைக்குப் பின் வேலைகள் செய்வதில் அளவிலாத நேரத்தை வீணடிக்கவும் இது இடமளிக்கிறது. அதாவது, குதிரை பேரம் பற்றிச் சொல்கிறேன்! அது தடுக்கப் பட வேண்டுமானால், மக்களே அவர்தம் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறைந்த பட்சம் நிலைப்புத் தன்மையாவது உறுதிப்படும். சமீப காலங்களில் அளவுக்கு மிஞ்சிய கூட்டணிக் கூத்துகளைப் பார்த்து விட்டு, நிலையான ஆட்சி அமைவது மிகவும் அவசியம் என்று தோன்றுகிறது.மிகப் பெரிய ரிஸ்க் என்னவென்றால், டாக்டர் சிங் போன்றோருக்கு அது வழியே இல்லாமல் செய்து விடும். ஆனால், ஒற்றை இலக்கத்துக்குச் சற்று கூடுதலாக உறுப்பினர்களை வைத்துக் கொண்டு பிரதமராக ஆசைப்படும் சில கோமாளி மாநிலக் கட்சித் தலைவர்களுக்கும் அதே நிலை ஏற்படும். அந்த வகையில் அது நல்லதே.

3. அதுவே உள்ளாட்சித் தேர்தல்களிலும் செய்யப் பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் செய்யப் பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் குதிரை பேரத்துக்கு அளவிலாத இடமளிக்கின்றன. அவை நல்ல பல விஷயங்களைக் கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். கூடவே பெரும் பெரும் ஓட்டைகளையும் கொண்டு வந்துள்ளன போல்த் தெரிகிறது. நம் பெற்றோர்கள் தம் ஊராட்சித் தலைவர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்தது போல் அல்லாமல், இப்போது எல்லா ஊராட்சித் தலைவர்களுமே (ஒன்றிய, மாவட்ட, நகராட்சி மன்றங்களில்) தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். மொத்த நடைமுறையையும் இது சிரிப்பானிக் கூத்தாக்கி விடுகிறது. ஒவ்வோர் உறுப்பினரும் அணி மாறுவதற்காக ஆயுட்காலத் தொகை ஒன்று கொடுக்கப் படுகிறார். அவர்கள் அனைவரும் ஒரு வாரத்துக்கும் மேலாக பிணைக் கைதிகளைப் போலக் கடத்திச் செல்லப்பட்டுப் பாதுகாக்கப் படுகிறார்கள். அந்தச் சில நாட்களில், அவர்கள் அதிகமாகப் பணம் பெற்றுக் கொண்டு அணி மாறி விடக் கூடாது என்பதற்காக, இரகசியமாக அருகில் உள்ள உல்லாச இடங்களுக்கும் மலை வாசத் தளங்களுக்கும் பண்ணை வீடுகளுக்கும் தூக்கிச் செல்லப் படுகிறார்கள் (குட்டி போட்ட பூனை அதன் குட்டிகளின் பாதுகாப்புக்காக ஒன்பது முறை இடம் மாற்றுவது போல). எங்கள் ஊரில், ஊராட்சி ஒன்றிய உறுப்பினரான ஒருவர் (நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் - உறுப்பினர்தான்!) ஒரே தேர்தலில் பெரும் பணக்காரரானதைப்  பார்த்திருக்கிறேன். இது தடுக்கப் பட வேண்டுமானால், இந்தப் பழுது பார்ப்பு நிச்சயம் நடக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி