துரோகிகள், காட்டிக் கொடுத்தல்கள் மற்றும் சகோதர யுத்தம்


நம் இதிகாசங்கள், திரைப்படங்கள் மற்றும் கதைகள் ஆகிய எல்லாவற்றிலுமே இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு. ஒன்று நாயகன்; இன்னொன்று வில்லன். நாயகன் நல்லவன்; வில்லன் கெட்டவன். அவர்கள் இருவரும் எதிரிகள். எதிரி என்பவன் கண்டிப்பாக நமக்கு எதிராகச் செயல்படுபவன் என்பது நமக்கு எப்போதுமே தெரியும். இதிகாசங்களும் கதைகளும் துரோகிகளுக்கும் ஒரு முக்கிய இடம் கொடுத்திருக்கின்றன. துரோகி என்பவன் யார்? எதிரியை விட எந்த வகையில் அவன் வேறுபட்டவன்? எதிரியைப் போலன்றி, துரோகி என்பவன் நம்மில் ஒருவன்; ஏதோவொரு சூழலில் எதிர்பாராத விதமாக நமக்கு எதிராகத் திரும்பி விடுபவன். பாதி வழியில் பாதையை மாற்றிக் கொண்டவன்! அவனும் அதன் பின்பு நம் எதிரி ஆகியிருப்பான். ஆனால், முதலில் அவன் துரோகி; பின்புதான் பிரதான எதிரி ஆகிறான் - எதிரியை விடக் கூடுதல் எதிரி! துரோகிகளை எது அவ்வளவு முக்கியமானவர்கள் ஆக்குகிறது? கதைக்கு எதிர் பாராத திருப்பத்தைக் கொடுப்பவர்கள் அவர்களே. அந்த நிமிடத்திலிருந்து கதையின் போக்கும் திசையும் மாறுகிறது. அதன் பின்பு முற்றிலும் புதியோதோர் அணுகுமுறை - திட்டமிடுதல் - வியூகமமைத்தல் தேவைப் படுகிறது. நமக்கு எதிரியைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. ஆனால், துரோகியைப் பற்றி எல்லாம் தெரியும். ஏனென்றால், அவன் நம்மில் ஒருவனாக இருந்தவன். இன்னொரு புறம், நம் எதிரிக்கும் நம்மைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் இருந்தது. ஆனால், நம் துரோகி கட்சி மாறியபின் எதிரிக்கு நம்மைப் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்திருக்கும். இவர்கள் பல காரணங்களுக்காக அணி மாறுவார்கள். பார்வையாளர்கள் என்ற முறையில் நாம் ஒட்டு மொத்தச் சூழலையும் கணக்கில் கொண்டு நாம் ஓர் அணியை ஆதரிப்போம். ஆனால், அவர்களுக்கோ அப்படியொரு முடிவை எடுக்க வேறுபட்ட கட்டாயங்கள் இருக்கலாம்.

உலக வரலாற்றில் காட்டிக் கொடுத்தலுக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டாகச் சொல்லப் படுபவன் ப்ரூட்டஸ். தமிழகத்தில் எட்டப்பன். வரலாற்றில் ஒவ்வொரு பேரரசும் ஏகப் பட்ட துரோகக் கதைகளைக் கொண்டிருக்கிறது. நம் இதிகாசங்கள் இராமாயணமும் மகாபாரதமும் விரிவான அளவில் அவர்கள் பற்றிப் பேசுகின்றன. நம் அரசியல்வாதிகள் அதைத் தினம் தினம் செய்கிறார்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில், இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அரசாங்கத்தின் அங்கமாக இருந்த பத்துக்கும் மேற்பட்ட கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள், பூட்டிய அறைக்குள் தம் முன்னாள் எதிரிகளோடு (அதற்கு முன் நண்பர்கள்தாம்) அமர்ந்து, அடுத்த இரண்டு மூன்று நாட்களில் அரசாங்கத்தை எப்படிக் கவிழ்ப்பது என்று திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இந்தப் பக்கம் வந்தபோதும் அவர்கள் செய்தது துரோகம்தான். தங்கள் கட்சிகளுக்குச் செய்யும் துரோகம் மட்டுமின்றி, கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டு அவர்கள் தம் மக்களுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஈழப்போரிலும் முன்னாள் பெரும் புலி ஒருவரின் காட்டிக் கொடுத்தலில்தான் எல்லாம் இவ்வளவு சீக்கிரம் முடிந்தது. பல இடங்களில், தீமையை வெட்ட வெளிச்சமாக்கும் நன்மையும் துரோகம் என்றே அழைக்கப் படுகிறது பாதிக்கப் பட்டவர்களால். எது எப்படியோ, இத்தகைய துரோகங்களைச் செய்ய எது ஒருவரைத் தூண்டுகிறது என்பதைப் பார்த்து விடுவோம்.

சிலருக்கு துரோகம் அவர்களின் வாழ்க்கை முறை. அந்த முடிவை எடுக்க அவர்கள் அதிகம் யோசிப்பதில்லை. அவர்களுக்கு ஓர் அணியில் சலிப்பு உண்டாகி விட்டால், வளர்ச்சியைத் தொடர்ந்து கையில் வைத்திருக்க அணியை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு நிலைக்குப் பின் அவர்கள் தேங்கி விடுவார்கள். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அத்தோடு நின்று போய் விடுகின்றன. காலத்தின் கட்டாயமாகி (!) விடுகிற அந்த மகா மாற்றத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டும். நல்ல வாய்ப்புக்களுக்காக அடிக்கடி வேலை மாற்றிக் கொள்ளும் நம்மைப் போலவேதான். அவர்களைப் பொருத்த மட்டில் அது ஒரு பிழைப்புக்கான சூட்சுமம். வலியோருக்குத்தான் வாழ்க்கை என்பதுதான் வாழ்க்கை நியதி என்றாகி விட்ட இடத்தில், அவ்வளவு வலிமை இல்லாத அவர்கள் எப்படிப் பிழைப்பு நடத்துவது?  தம் குலப் பெண்டிரையும் குழந்தைகளையும் பசியினின்றும் உலகியல்ப் பிரச்சனைகளில் இருந்தும் காக்க இது ஒன்றே வழி அவர்களுக்கு. வலிமையாய் இர முடியாத போது வலிமையோடு இரு! 'அது சரியா தவறா?' என்ற ஆய்வல்ல நாம் செய்வது. அதற்கான காரணங்கள் அனைத்தையும் கண்டு பிடிக்க முயல்கிறோம். அவ்வளவுதான்.

சில நேரங்களில், இரண்டே வாய்ப்புகள் இருக்கும் போது, இரண்டு குப்பைகளில் எந்தக் குப்பை பரவாயில்லை என்று தேர்ந்தெடுக்க நேர்கிறது (நம் தமிழ்ப் பெருங்குடிக்குத்தான் இது நன்றாகப் புரியுமே!). அப்படி ஏதோவொரு குப்பையோடு இருக்க நிற்பவன், குப்பையின் நல்லதுகளை விட நாற்றங்களைப் பற்றித்தான் அதிகம் சிந்திக்க நேரும். எதிரியை விட நண்பனுக்குத்தான் நிறையப் பாடங்கள் புகட்டத் துடிப்பான். அதுவும் அனுதினமும் எதிரியை நேரில் சந்திக்காத கொல்லைப்புற வேலைகள் செய்யும் அல்லக்கைகளுக்கு எதிரியை வெறுக்கக் காரணமே இராது. எதிரி இந்தக் குப்பையை விட நல்ல குப்பையாக இருக்கலாம் என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கும். தற்போதைய பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவு கட்ட வாய்ப்புக் கிடைத்தால் அணி மாறி விடுவார்கள். அணி மாறும் போது, பழைய இடத்தை விடப் புதிய இடத்தில் அதிக மரியாதை கிடைப்பது கண்டு குளிர்ந்து போவார்கள். அது அவர்கள் கொண்டு வரும் தகவல்களுக்கான மரியாதை.

இவை எல்லாவற்றிலும் கொடூரமானது சகோதர யுத்தத்தால் நிகழ்வது. எது மாவோயிஸ்ட்களை அவர்களின் கொள்கைச் சகோதரர்களான மார்க்சிஸ்ட்களின் பரம எதிரியான மமதா பானர்ஜீயுடன் கை கோக்க வைக்கிறது என்று எப்போதுமே வியந்திருக்கிறேன். நாமெல்லாம் அவருக்கு அரசியலில் மட்டும்தான் எதிரிகள் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த போது எது பிரமோத் மகாஜனின் சொந்தச் சகோதரனையே அவருடைய எதிரியாக்கி உயுரைக் குடித்தது? 1996-இல் எது தன் சொந்தக் கட்சியின் வேற்று மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர்களையே ஜோதிபாசுவைப் பிரதமராக விடாமல் தடுத்தது? 1997-இல் எது தன்னைத் தானே தமிழினத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவரை இன்னொரு தமிழகத் தலைவர் பிரதமர் ஆகவிடாமல் தடுக்கும் கேவலமான வேலையைச் செய்ய வைத்தது? எது சில தேசியக் கட்சிகளை அவர்களுடைய கொள்கைக்குத் தலைகீழான கொள்கை கொண்ட திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க வைக்கிறது (கொள்ளையடிப்பது அவர்கள் வெளிப்படையாகச் சொன்ன ஒரு கொள்கையல்ல என்பதை இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!)? எது பக்கத்தில் இருக்கிற பாகிஸ்தானை தொலைவில் இருக்கிற நண்பன் ஒருவன் இந்தியாவுக்கு எதிராகச் சண்டையிட உதவ வைக்கிறது? எங்கள் ஊரில், கொஞ்ச காலம் முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஒன்றில், ஒரே கூட்டணியில் இருந்த ஒரு பொதுவுடைமைக் கட்சியை வீழ்த்த இன்னொரு பொதுவுடைமைக் கட்சிக் காரர்கள் எதிரியுடன் திரைக்குப் பின் கூட்டணி போட்டு வேலை செய்தார்கள். இதற்கெல்லாம் தூண்டு கோலாக இருப்பது சகோதர யுத்தம். முதலில் சகோதரர்களுக்கு மத்தியில் ஏன் சண்டை வருகிறது?

1. எதிரியை விட சகோதரனிடம் எதிர் பார்ப்புகள் அதிகம். என் சகோதரன் என்னை விட நன்றாக இருக்கும் போது, அவனுக்குச் செய்து கொள்வதை விட எனக்கு அதிகமாகச் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன். அவனுடைய வரையறைகள் எனக்குப் புரிவதில்லை. நான் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும்; நிபந்தனையில்லாமல் எனக்கு உதவ வேண்டும். அப்படிச் செய்யாதபோது, நான் மூடிய அறைகளில் எதிரியோடு சேர்ந்து திட்டமிட ஆரம்பித்து விடுகிறேன். எங்கள் இருவருக்கும் அது வெற்றி-வெற்றி, எனக்கும் எதிரிக்கும். இருவருக்குமே வீழ்த்தப் பட வேண்டியது ஒரே ஆள். என் சகோதரனின் தகவல்கள் மற்றும் இடங்களை எதிரியை விட நான் எளிதில் அணுக முடியும் என்பதாலும் என் வேலையை எளிதாக்க எதிரி ஏற்கனவே ஏகப்பட்ட களப்பணி செய்திருக்கிறான் என்பதாலும் இது எங்கள் இருவருக்குமே எளிதாகி விடுகிறது.

2. மற்றவர்களை விட நம் சகோதரர்களோடு நாம் நெருக்கமாக இருக்கிறோம்; அருகருகில் அதிக நேரம் செலவிடுகிறோம். எனவே, இருவருக்குமிடையில் அதிகமான பிரச்சனைகளுக்கு அது வாய்ப்பளிக்கிறது. எல்லா இடங்களிலுமே - தூங்குமிடத்தில், திங்குமிடத்தில், விளையாடுமிடத்தில், உடுத்துமிடத்தில், இணைந்து செய்கிற எந்த வேலையாக இருந்தாலும் அதைச் செய்கிற இடத்தில், பிரச்சனைகளை உண்டாக்கவும் அல்லது பிரச்சனைகளுக்கு உள்ளாகவும் வாய்ப்பிருக்கிறது.ஒரு பிரச்சனை உருவாக்கி விட்டால், அதைப் பற்றி விடாமல் பேசவும் ஒவ்வொருவர் நியாயத்துக்காகவும் விவாதம் செய்யவும் அளவிலாத வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. பொதுவான இடங்கள் மட்டுமில்லை, பிரச்சனைகளைப் பற்றிப் பரிமாறிக் கொள்ள - ஆதரவு தெரிவிக்க - ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ அறிவுரை சொல்ல என எல்லாத்துக்கும் பொதுவான ஆட்களும் நிறைய இருக்கிறார்கள். இது பிரச்சனையைத் தீர்க்காமல் பெரிதாக்கத்தான் செய்யும். மறந்து விட்டு முன் சென்றிருந்தால் காலம் களிம்பு போட்டு ஆற்றியிருக்க வேண்டிய பிரச்சனை அந்த எளிதான தீர்வை இழந்திருக்கும். எந்த இருவருமே நீண்ட காலம் சேர்ந்திருப்பது என்பது ஒத்தே வராதது. யாராக இருந்தாலும் சரி - பெற்றோர்-குழந்தை, தம்பதியர், சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள்... யாராக இருந்தாலும்!

3. ஒரு கட்டத்துக்குப் பின்பு, சகோதரர்களுக்கு அவர்களுக்கென்று தனித் தனி நலம் விரும்பிகள் வந்து விடுவர். அவர்கள் யாவரும் இருவரும் ஒற்றுமையாக இருக்க விரும்புவதை விட அவர்களுடைய ஆள் நன்றாக இருக்க விரும்பவதையே முதல் நோக்கமாகக் கொண்டிருப்பர். இந்த இடத்தில், தங்களுக்கும் தம் ஆளுக்குமான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்காக, சிக்கலில் இருக்கும் இவருடைய நலம் விரும்பிகளுமே அவரவர் ஆளைக் குளிப்பாட்டி எடுப்பார்கள். மனிதர்களின் சொந்த வாழ்க்கைச் சூழலில் இருந்து சொல்ல வேண்டுமென்றால், வாழ்க்கைத் துணைகளும் மாமனார் வீட்டு ஆட்களும் இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. மண வாழ்வில் மட்டுமல்ல; எல்லா இடங்களிலுமே வெவ்வேறு பெயர்களில் துணைகளும் மாமனார் வீட்டு ஆட்களும் இருக்கின்றனர். ஒரு சில நாடுகளின் வாழ்க்கைத் துணையாக இருக்கும் சில பெரிய நாடுகள் அவர்களுக்கு மற்ற சகோதர நாடுகளுடன் இருக்கும் உறவுகளைக் கெடுத்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக, இலங்கையும் சீனாவும் அப்படிப் பட்ட வாழ்க்கைத் துணைகள் போல் ஆகி விட்டன. இலங்கையின் இந்தியாவுடனான சகோதர உறவைச் சீரழிக்காமல் விடாது சீனா. சில வாழ்க்கைத் துணைக் கட்சிகள் இருக்கின்றன. அவை தம் துணைக் கட்சிகளைக் குறிப்பிட்ட கட்சிகளுடன் சேரவே விடாமல் பார்த்துக் கொள்ளும். எடுத்துக்காட்டாக, இடதுசாரிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் அப்படியொரு வலிமையான துணையை வைத்துக் கொண்டு அவர்களை பா.ஜ.க.வுடன் சேரவே விடுவதில்லை.

4. இயல்பான மனிதக் குறைபாடொன்று இருக்கிறது. யார் எவ்வளவு பெரிய ஆளானாலும் சகித்துக் கொள்வேன். என் சகோதரன் என்னைப் போலவே இருக்க வேண்டும். யாரோ ஒரு மூன்றாம் மனிதன் வளர்கையில் எனக்கு ஒன்றும் நேர்வதில்லை. ஆனால், என்னுடைய சகோதரன் என்னை விடப் பெரிய ஆள் ஆகையில் நான் பல விஷயங்களை நினைத்துக் கவலைப் பட வேண்டும். என்னுடைய மரியாதை குறையும். என்னைக் கீழாகப் பார்ப்பார்கள். அவனுடைய பேச்சை நான் கேட்க வேண்டும். என் வாழ்க்கைத் துணையும் குழந்தைகளும் அவனுடைய வாழ்க்கைத் துணைக்கும் குழந்தைகளுக்கும் அடங்கிப் போக வேண்டும். திரும்பவும் சொல்கிறேன். வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைக் கதைகள் எல்லாம் வெறும் எடுத்துக்காட்டுகளே. எல்லா விதமான அமைப்புகளுக்கும் இது பொருந்தும்.

5. எதிரி என்பவன், என் எல்லாக் கருத்துக்களுக்கும் எதிரான கருத்துக்களைக் கொண்டவன் என்பதைத் தெள்ளத் தெளிவாகத் திரும்பத் திரும்பச் சொல்லி விட்டவன்; அதன் படியே எப்போதும் நடந்து வருபவன். ஆனால், என் சகோதரன் என்பவன் என்னுடனேயே இருப்பதாக காலமெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படியிருந்தும் அவன் ஏன் எனக்குப் பிடிக்காத வேலைகள் செய்கிறான்? அவன் செய்கிற வேலைகள் எதிரி செய்பவற்றைப் போல மோசமானவை இல்லையென்றாலும், நம்மால் அவற்றை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை; ஏனென்றால், அவன் நம்மைப் போலவே சிந்தித்திருக்க வேண்டும் - இப்படிச் செய்திருக்கக் கூடாது என்று எண்ணுகிறோம். எதிரி முழுமையான எதிரியாக இருக்க வேண்டும் - பங்காளி முழுமையான பங்காளியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். அது இயற்கைக்கு எதிரானது. திரைப்படங்களில்தான் நல்லது மட்டுமே செய்கிற முழுமையான நாயகர்களையும் கேட்டது மட்டுமே செய்கிற முழுமையான வில்லன்களையும் காண முடியும். நிஜ வாழ்க்கைச் சமன்பாடுகள் நம் கண்ணுக்குத் தெரிவதை விடக் குழப்பமானவை - சிக்கலானவை.

இதனால்தான் நாடுகள் ஒற்றர் பிரிவு வைத்திருக்கின்றன; அரசியல்வாதிகள் யாரையும் நம்புவதில்லை; நிறுவனங்கள் பாதுகாப்புக் கொள்கைகள் கொண்டிருக்கின்றன; தனி மனிதர்கள் நல்வாழ்க்கை வாழும்போது தம் சகோதரர்களுக்கு உதவுமாறு சொல்லித் தரப் படுகிறார்கள்.

ஒன்று சொல்லுங்கள் - இன்று தேசியப் பாதுகாப்பு பற்றி அதிகம் கவலைப் படுவது யார்? வெளியுறவுத் துறையா அல்லது உள்துறையா? இதனால்தான் நம்மைச் சுற்றியிருப்போர் அனைவரையும் நாம் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். நம் அளவுக்கு மகிழ்ச்சியாக! முடிந்தால், நம்மை விட!! அதனால்தான் அரசாளுகை என்பது அரசாளுகை மட்டுமல்ல. அரசாளுகை என்பது நிர்வாகத்துக்கும் மேல் நிறைய விஷயங்கள் கொண்டது. இல்லையேல், மாற்றங்கள் நிகழும்; அத்தோடு அரசாங்கமே மாற வேண்டியதாகி விடும். மனித இருப்பு இருக்குமிடமெல்லாம், அடிப்படை வேலைகளுக்கு மேலாக, துரோகிகளை ஒற்று செய்யவும் ஒற்றர்களையே ஒற்று செய்யவும் போதுமான ஆற்றல் போயாக வேண்டும். மக்களையும் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் விலை கொடுத்து, துரோகிகளை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக சமரசங்கள் செய்யப் படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி