அதே இடம்

எது எங்கள் குலத்தொழில்? என் தொழில் கட்டடம் கட்டுவது. எங்கள் சொந்தக்காரர்களில் எல்லோரும் கட்டடம் கட்டுபவர்கள் இல்லை. எங்கள் பெரியப்பா வீட்டில் எல்லோரும் படித்து நல்ல பணிகளில் இருக்கிறார்கள். அதில் கட்டடம் கட்டும் இஞ்சினியர் வேலைக்குப் படித்த அண்ணன் ஒருத்தனும் உண்டு. சின்ன வயதில் இஞ்சினியர் என்றாலே கட்டடமும் பாலமும் கட்டுபவன் என்றுதான் சொல்லிக் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட அந்த வயதில் கேள்விப்பட்ட எல்லாமே தவறாகித்தான் போனது. பெரியப்பா மகனும் கூட கட்டடம் எல்லாம் கட்டுவதில்லையாம். கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தினுள் உட்கார்ந்து கம்ப்யூட்டரில்தான் வேலை செய்கிறானாம் இப்போது. பிள்ளைகள் எல்லாம் படித்து விட்டதால் பெரியப்பாவும் பிள்ளைகளும் ஊர்ப்பக்கமே எட்டிப் பார்ப்பதே இல்லை. தாத்தாவும் தாத்தாவுக்குத் தாத்தாவும் விவசாயம்தான் செய்திருக்கிறார்கள். அதனால் விவசாயம்தான் எங்கள் குலத்தொழில் என்றும் சொல்லலாம். ஆனால் அவர்களின் பெரிய மீசைகள் எப்போதும் நாங்கள் மன்னர் பரம்பரையின் வழித்தோன்றல்கள் என்பதை மறந்து விடாமல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. அதனால் அரசாள்வதே எங்கள் குலத்தொழிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. அதில் ஒரே ஒரு பிரச்சனை – எங்களைப் போலவே நூற்றுக் கணக்கான வீடுகள் உள்ள எங்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டு இளவட்டமும் அதைத்தான் சொல்லிக் கொள்கிறார்கள். எங்கள் ஊர் மட்டுமல்ல, எங்கள் ஊரைச் சுற்றியுள்ள பதினேழு பட்டிகளிலும் கூட அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள். சென்னை, சிங்கப்பூர், பெங்களூர், ஹைதராபாத் என்று வெளியூர்களில் வேலைக்குப் போயிருந்த போது, வட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிலரும் கூடத் தம்மை மன்னர் பரம்பரை என்றே சொல்லிக் கொண்டார்கள். அதன்பிறகு அப்படிச் சொல்லிக் கொள்ளக் கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது. ஒரு நாடே தன்னை மன்னர் பரம்பரை என்று சொல்லித் திரிவது, அந்த நாட்டில் மக்களை விட மன்னர்கள் அதிகம் இருந்ததாகச் சொல்வது போலாகி விடாதா? அது எவ்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம் என்று புரிந்த முதல் அறிவாளி என்ற பெருமையோடு அப்படிச் சொல்லிக் கொள்வதை நிறுத்தி விட்டேன். 

என் உறவினர்களில் சிலர் என் சின்ன வயதில் கள்ளச்சாராயம் காய்ச்சுவார்கள். பின்னர் அவர்களே அரசாங்கத்திடம் இருந்து மதுபானக்கடை ஏலம் எடுத்து, நன்றாகச் சம்பாதித்து, அரசியலில் இறங்கி, தினம் தினம் வெள்ளை வேட்டி – சட்டை போட்டுக் கொண்டு, சமூகத்தின் மரியாதைக்குரிய பொறுப்புகளில் இடம் பெற்றார்கள். அதன் படி பார்த்தால், கள்ளச்சாராயம் காய்ச்சுவது எங்கள் குலத்தொழிலாக இருந்திருக்கிறது. அரசியல் இன்னும் எங்கள் குலத்தொழிலாக இருக்கிறது. மன்னர் பரம்பரை அல்லவா? அரசியலிலும் வெவ்வேறு மட்டங்களில் எங்கள் ஆட்கள் இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர் முதல் எண்ணிக் கொடுக்கப்படும் ஓரிரு பெரிய நோட்டுகளுக்காக எல்லாக் கட்சி மாநாட்டுக்கும் வேட்டியின் கரையை மட்டும் மாற்றிக் கொண்டு போய்க் கலந்து கொள்கிற அடிமட்டத் தொண்டன் வரை எல்லா மட்டங்களிலும் எங்கள் ஆட்கள் இருக்கிறார்கள். சினிமாத் தியேட்டரில் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் எங்கள் மாமா மகன் ஒருவன், “என்ன வேலை பார்க்கிறீர்கள்?” என்றால், கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல், சிரிக்காமல், “சினிமாத் துறையில் இருக்கிறேன்” என்பான். அவன் சொல்வது ஒன்றும் தவறில்லையே. அது போலத்தான் அரசியல் என்பதும் எல்லோரும் அடங்கியதுதானே. விசிலடிக்க ஆளில்லாத இடத்தில் கலைஞனுக்கு ஏது வெற்றி? அது போலத்தான் நாங்கள் எல்லாம் கொடி பிடிக்கப் போய் நிற்காவிட்டால் தலைவர்கள் எப்படி உருவாக முடியும்? அந்த வகையில் தலைவர்களை உருவாக்கும் பணி என்பதை எங்கள் கடமையாகத்தான் நினைக்கிறோம் நாங்கள். நாங்கள்? ஆம், நாங்கள்தான். எங்கள் ஆட்கள் எங்கள் ஆட்கள் என்று எவ்வளவு நேரம் பிரித்துப் பேசுவது. நானும் அதில் ஒருத்தன்தானே. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, திருநெல்வேலி என்று நானும் பல மாநாடுகளுக்குப் போயிருக்கிறேன். பல்வேறு கரை வேட்டிகள் கட்டியிருக்கிறேன். பல கட்சிகளின் கொடிகளைத் தாங்கிப் பிடித்துப் பல தலைவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பணியில் பங்கெடுத்திருக்கிறேன். அதில் அடிக்கடிப் போக நேர்ந்தது திருச்சிதான். ஏன்தான் மாநாடுன்னாலே திருச்சிக்கு திருச்சிக்குக் கூப்புடுவாய்ங்களோ! அது போல கோயம்புத்தூர் மட்டும் இன்னும் போனதில்லை. ஏனோ எனக்கு விபரம் தெரிந்து – நான் ஊரில் இருக்கிற நாட்களில், எந்தக் கட்சியும் கோயம்புத்தூரில் மட்டும் மாநாடு வைத்ததில்லை. தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல் பணியில் ஈடுபட முடியும். தேர்தல் என்பது வருடாவருடம் வருவதில்லை என்பதால் முழுக்கவும் அதை நம்பியே வாழ முடியாதே. ஹைதராபாதில் மாட்டிக்கொண்ட ஒரேயொரு முறை தவிர எல்லாத் தேர்தல்களுக்கும் ஊரில் இருக்கிற மாதிரிப் பார்த்துக் கொள்வேன். அதிகம் உடல் நோகாத சம்பாத்தியம். குடும்பத்தோடு இருந்த மாதிரியும் இருக்கும். தேர்தல் முடிந்தவுடன் ஏதாவதொரு கூட்டத்தோடு சேர்ந்து ஏதோவோர் ஊருக்குக் கட்டட வேலைக்குக் கிளம்பி விடுவேன். கூட்டிக் கழித்துப் பார்த்தால் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் குலத்தொழில் கட்டடம் கட்டுவதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பிள்ளைகளையாவது பெரியப்பா மகன் போல நாம் கட்டிய கட்டடம் ஒன்றுக்குள் உட்கார்ந்து பார்க்கும் வேலைக்குள் நுழைத்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பார்க்கலாம். காலம் என்ன திட்டம் வைத்திருக்கிறதோ? 

இது போக இன்னொரு குலத்தொழிலும் இருக்கிறது. சம்பாதித்த பணத்தை ஒழுங்காகச் சேர்த்து வைத்திருக்க முடிந்த எம் உறவினர்கள் சிலர், அதைப் பத்திரமாக எடுத்துக் கொண்டு போய் மதுரையிலும் சென்னையிலும் வட்டிக்கு விட்டுப் பிழைக்கிறார்கள். வட்டி என்றால் சாதாரண வட்டியில்லை. கந்து வட்டி, மீட்டர் வட்டி போன்று ஸ்பீடு வட்டிகள். மன்னர் பரம்பரை அல்லவா? அதில் ஒருத்தன் சென்னையில் சினிமாக்காரர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறான். எங்கள் குலத்திலேயே பெரும் பணக்காரன் அவந்தான். அதன்படி பார்த்தால் அதுதானே எங்கள் குலத்தொழிலாக இருக்க வேண்டும்! எனக்கும் அவ்வப்போது அந்த ஆசை வரும். என் மாப்பிள்ளை (மாமா மகன்) ஒருத்தன் கூட புரட்டாசிப் பொங்கலுக்கு வந்திருந்த போது சென்னைக்கு அவனோடு சேர்ந்து கொள்ள அழைத்தான். அதில் இரண்டு பிரச்சனைகள். ஒன்று, அவன் என்னைவிட மூணு வயசு சின்னவன். நான் ஏழாம் வகுப்புப் படிக்கும் போது நாலாம் வகுப்புப் படித்த பயல். நான் ஏழாவது படிக்கும் போதே அவன் ஆறாவது வந்துவிட்ட அவமானம் தாங்க முடியாமல்தான் ஏழாவதிலேயே என் படிப்பை விட்டேன். இன்னொரு வருடம் தங்கினால் சின்னப்பயல் அவன் வந்து நம் தோளில் கையைப் போடும் நிலை வந்து விடும் என்று பயந்து படிப்பை நிறுத்தியவன், அவனிடமே போய்க் கையைக் கட்டி வேலை பார்க்கவா என்ற கர்வம் இடம் கொடுக்கவில்லை. இன்னொன்று, எங்கம்மாதான் எங்கள் வீட்டில் எல்லாம். எங்கம்மா மிகவும் தெளிவானவர். அவர் எது சொன்னாலும் அது சரியாக இருக்கும். அப்போதே அவர் மாப்பிள்ளையோடு சேர்ந்து போய்விட அழுத்தம் கொடுத்தார். ஆனால் எங்கப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை. எங்கப்பா ஒரு ஒண்ணுக்கும் ஆகாத ஈத்தரை. ஊருக்குள் எவனும் அவர் சொல்வதை மதிக்க மாட்டான். ஆனால் நான் மதித்தேன். ஏன்னா அவர் சொன்னதுல ஒரு நியாயம் இருந்தது. “பிச்சை கூட எடுக்கலாம்டா. தப்பில்ல. ஆனா வட்டிக்குக் குடுத்து வாழ்ற வாழ்க்கை மாதிரிப் பாவம் ஒலகத்துலேயே வேற எதுவும் இல்ல”-ன்னு உறுதியாச் சொல்லிட்டார். “அப்பிடிலாம் பாத்தா ஒலகத்துல ஒரு பய பேங்க் நடத்த மாட்டான். சரி, எப்பிடியும் தொலைங்க. ஒங்களப் போலவே ஒங்க மகனும் காலம் பூராப் பிச்சக்காரனாத் திரியணும்னு ஆண்டவன் ஒங்க தலைல எழுதி வச்சிருந்தா யாரு காப்பாத்த முடியும் ஒங்கள? என்ன மாதிரி இன்னொருத்தி வாழ்க்கையும் நாசமாப் போகப் போகுதேன்னுதான் கவலையா இருக்கு. அது எங்கண்ணன் பிள்ளைகளா இருக்கக் கூடாது” என்று வேண்டிக் கொண்டு, அத்தோடு விட்டு விட்டார் அம்மா. அவ்வப்போது அவருக்கு அந்த நினைவு வரும். புலம்புவார். விட்டு விடுவார். 

ஒவ்வொரு முறை வெளியூரில் இருந்து வேலை முடிந்து திரும்பும் போதும், பிறந்த போது எப்படிப் பெரியப்பா பிள்ளைகளை விடச் சிவப்பாக இருந்தேன் என்றும் இப்போது எப்படிப் படிப்படியாகக் கறுத்துப் போய்விட்டேன் என்றும் சொல்லி வருந்துவார். அதைக் கேட்டு அவ்வப்போது எனக்கும் கொஞ்சம் சபலம் தட்டும். மாப்பிள்ளையிடம் போய் வேலைக்குச் சேர்ந்து விடலாமா என்று தோன்றும். நான் நாலாவது படிக்கும் போது ஏழாவது படித்த மச்சான்மார்களே கூட அவனிடம் வேலை பார்த்தார்கள். பின்னர் அவர்களும் அவர்களுக்கென்று தனியாகத் தொழில் தொடங்கிக் கொண்டார்கள். தொழில்? குலத்தொழில்தான். வட்டிக்கு விடும் சேவை. அவர்களுக்கு இல்லாத இந்தக் கொழுப்புதான் என்னை இன்னும் கட்டட வேலை பார்க்க வைக்கிறது. அம்மாவின் புலம்பலை விட, எனக்கே ஒரு முறை அவனைப் போய்ப் பார்த்துக் காலைப் பிடித்து விடலாமா என்று தோன்றியது. அப்போது சென்னையில்தான் வேலை. சிறுசேரி என்ற இடத்தில். ஈ.சி.ஆர். அருகில். பத்துப் பத்து மாடிகளாகக் கட்டிக் குவித்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் மாலை – பொழுது சாயும் நேரம், நாங்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த கட்டடத்திலேயே ஏற்பட்ட எதிர்பாராத விபத்தொன்றில் இந்திக்காரன் ஒரு பையன் சம்பவ இடத்திலேயே செத்துப் போனான். ஊர் நினைவும் அம்மா நினைவும் வந்தது. அதற்கு முந்தைய வாரம்தான் எங்கள் குலத்தொழில் செய்யும் மாப்பிள்ளை ஒருத்தனைப் பார்த்திருந்தேன். அவர்கள் எல்லோருமே வேளச்சேரி பகுதியில்தான் இருக்கிறார்களாம். ஒரு ஞாயிற்றுக் கிழமை கண்டிப்பாக வர வேண்டும் என்று சொல்லி விட்டுச் சென்றான். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘இவன்லாம் ஓர் ஆளு... நான் பார்த்து ஒழுங்காப் பிடிச்சு உச்சாப் போகத் தெரியாத பய... இவன் பெழைக்கிற பெழைப்பைப் போய் நாங்க பாத்துட்டு வரணுமாக்கும்... எல்லாம் நேரம்!’ என்று விட்டு விட்டேன். ஆனால் இறந்து போன இந்திக்காரன் மீண்டும் அவர்களைப் பற்றியெல்லாம் நினைக்க வைத்து விட்டான். அவனுக்கு இங்கே யாருமே கிடையாது. அவனுக்கு இருக்கிறதெல்லாம் அவனை மாதிரியே வேலை பார்க்கும் அவங்க நாட்டுக்காரங்க மட்டுந்தான். நமக்கு இது நம்ம ஊரு. நம்ம சொந்தக்காரய்ங்க எத்தனையோ பேர் இங்க நல்ல வசதியா இருக்காய்ங்க. அது மட்டுமில்லை. நான் இந்த வேலைக்கு வந்த புதிதில் நிறையத் தமிழ்ப் பையன்கள் இருந்தார்கள். பின்னர் எல்லோருமே விலகிப் போய் ஏதோவொரு கௌரவமான தொழில் செய்யத் தொடங்கி விட்டார்கள். ஆனால் இப்போது முழுக்க முழுக்க இந்திக்காரப் பையன்கள்தான். பாதிச் சம்பளத்துக்கு நாலு ஆள் வேலை பார்க்கிறார்கள். இன்னும் எவ்வளவு காலத்துக்கு இவர்களோடு போட்டி போட்டு வேலை பார்க்க முடியுமோ, தெரியவில்லை. அன்று இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. ஊருக்குத் திரும்பி விடலாமா என்றிருந்தது. வேளச்சேரிக்காவது போய் வரலாமா என்று தோன்றியது. அவங்க கூடச் சேர்ந்து தொழில்ல இறங்கலைன்னாக் கூடப் பரவால்ல. சும்மா போய்ப் பார்த்துட்டு வந்தா மனசுக்கு ஒரு நிம்மதியா இருக்கும்னு தோணுச்சு. ஒரு சில பையன்கள் மட்டும் அன்று இரவெல்லாம் ஒரு மாதிரி இருந்தார்கள். பெரும்பாலான பையன்கள் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள், அல்லது அப்படிக் காட்டிக் கொண்டார்கள். “எந்த வேலைலதான் ஆபத்து இல்ல? ஆபத்து இல்லாத வேலை ஒலகத்துலயே இல்லை!” என்றான் ஒருத்தன். “நம்ம வேலைல இதெல்லாம் ரெம்பச் சாதாரணம். நான் வேலைக்கு வந்த புதுசுலல்லாம் வாரவாரம் ஒருத்தன் சாவான். இப்பத்தான் எல்லா வேலையுமே ரெம்பப் பாதுகாப்பாப் பண்றமே! என்ன பயம்?” என்றான் இன்னொருத்தன். ‘இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு பேசிக்கிட்டு இருக்காய்ங்க பாரு’ என்பது போலப் பார்த்து விட்டு நகர்ந்தார்கள் சிலர். ஒரு நிமிடம் நின்று யோசித்தேன். ‘நாம் தைரியசாலிகள் பக்கமா? பயந்தாங்கொள்ளிகள் பக்கமா? தைரியசாலிகள் பக்கம்னா, ஒழுங்காப் படுத்துத் தூங்க வேண்டியதுதான். பயந்தாங்கொள்ளிகள் பக்கம்னா, நாளைக்குக் காலைலயே எழுந்து வேளச்சேரி கிளம்ப வேண்டியதுதான். வேளச்சேரி போனா மாப்பிள்ளையையும் பார்த்துட்டு, அவன் தங்கச்சியையும் பார்த்து வரலாம்’ என்று எண்ணிக் கொண்டே தூங்கிப் போனேன். 

மறுநாள் காலை எழுந்த போது, மன உளைச்சல் குறைந்திருந்தது. போலீஸ்காரர்கள் வந்து சென்றார்கள். இன்ஜினியர்களும் மேனேஜர்களும் நிறையப் பேர் வந்திருந்தார்கள். கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி எல்லோரும் வழவழவென்று பேசினார்கள். பேசி விட்டுப் போய்விட்டார்கள். வேலை எப்போதும் போல் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் மறந்து பழைய படி வாழ்க்கை ஓடத் தொடங்கி விட்டது. பத்துப் பத்து மாடிகளாகப் பன்னிரண்டு கட்டடங்களைக் கட்டிக் குவித்து விட்டு, வேலை முடிந்ததென்று ஊர் திரும்பி விட்டேன்.

அடுத்த பணி பெங்களூரில். பெங்களூரில்தான் பெரியப்பா பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார்கள். பெரியப்பாவும் கூட. வேளச்சேரியில் இருந்த உறவினர்கள் ஒரு மாதிரியான வாழ்க்கை என்றால், பெங்களூரில் இருந்த உறவினர்கள் வேறொரு மாதிரியான வாழ்க்கை வாழ்பவர்கள். அப்பா பொறுப்பாக பெரியப்பா வீட்டு முகவரி எழுதிக் கொடுத்து அனுப்பினார். இங்கே வேலை எலெக்ட்ரானிக் சிட்டியில். இங்கும் அதே போல் பத்துப் பத்து மாடிகளாகக் கட்டிக் குவிக்கும் வேலைதான். ஊரில் கொத்தனாரிடம் வேலை பார்த்த காலத்தில், ஒரேயொரு மாடி வச்சுக் கட்டுற ஒரு சின்ன வீட்டுக்கு ஒரு வருசத்துக்கும் மேல இழுவா இழுத்து, வீடு கட்ட ஆசைப்பட்டவன ஏன்டா இப்பிடியோர் ஆசைப்பட்டோம்னு நெனைக்க வச்சு, பாடாய்ப் படுத்துவோம். இதுல சொல்லி வைத்த மாதிரி ஒவ்வொருத்தர்ட்டயும், “வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைக் கட்டிப்பார்னு சும்மாவா பெரியவங்க சொல்லியிருக்காங்க”-ன்னு கொத்தனார் ஒரு பழமொழிய வேற அவிழ்த்து விடுவார். இங்க என்னடான்னா, பத்து பத்து மாடிக் கட்டடங்கள்ல அசால்ட்டா மாசம் ஒரு மாடி ஏறுது. இதப் போயிக் கொத்தனாரப் பாத்துச் சொல்லணும்னு நெனைச்சுக்கிட்டே இருந்து நடக்கவே இல்ல. அடுத்த முறை கண்டிப்பாச் செஞ்சிரணும்.

ஞாயிற்றுக் கிழமைதான் வசதியான நாள் என்று முதல் ஞாயிற்றுக் கிழமையே பெரியப்பா வீட்டுக்குக் கிளம்ப முயற்சி செய்தேன். ஏன்னா ரெண்டு வாரம் போச்சுன்னா இங்கேயே நமக்கு நண்பர்கள் செட் ஆகி விடுவார்கள். அப்புறம் அவர்களை விட்டுவிட்டுச் செல்ல முடியாது. ஞாயிற்றுக் கிழமை காலையே எழுந்து கிளம்பி விட்டேன். வீடு ஒயிட்ஃபீல்ட் என்ற பகுதியில். எலெக்ட்ரானிக் சிட்டியில் இருந்து சரியான தொலைவு. போக ஒரு நாள், வர ஒரு நாள் வேண்டும் போல. ஞாயிற்றுக் கிழமை என்பதால் ட்ராஃபிக் ஃப்ரீயாக இருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள். இவய்ங்க ஃப்ரீயே இப்பிடின்னா மற்ற நாட்கள்ல எப்பிடி இருக்குமோன்னு நெனைச்சுக்கிட்டேன். பின்னர் அதையும் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்குக் கன்னடம் தெரியாது. இந்திக்காரய்ங்க கூட வேலை பார்த்ததுல நாலு இந்தி வார்த்தைகள் தெரியும். பெங்களூர்ல தொண்ணூறு சதவீதம் தமிழ்தான் என்று வேறு ஒருத்தன் சொன்னான். அவனுக்குத் தெரிஞ்ச சதவீதக் கணக்கு! அதனால் எல்லா இடத்திலும் எடுத்த உடனேயே தமிழில்தான் பேசுவேன். பெரும்பாலும் தமிழிலேயே பதில் கிடைக்கும். சிலர் நேரடியாகத் தமிழில் பேசுவார்கள். சிலர் தமிழையே ஒரு மாதிரிப் பேசுவார்கள். சிலர் புரிந்து கொள்வார்கள், ஆனால் பதில் மட்டும் கன்னடத்தில் சொல்வார்கள். சிலர் குர்ரென்று ஒரு பார்வை பார்த்து விட்டுத் தமிழில் பேசுவார்கள். சிலர் குர்ரென்று பார்ப்பார்கள், ஆனால் கன்னடத்தில் பதில் சொல்வார்கள். அவ்வப்போது சிலர் கோபமாக இந்தியிலும் பதில் சொல்வார்கள். அதைப் பார்த்து நாம் நமக்குத் தெரிந்த நாலு வார்த்தையில் இந்தியில் பேசத் தொடங்கினால் அவர்களும் குர்ரென்று பார்ப்பார்கள். வச்சுக்கிட்டே வஞ்சகம் பண்றோம்னு நினைப்பாய்ங்க போல. பின்னர் கொஞ்சம் கொஞ்சம் கன்னடமும் பழகிக்கிட்டேன். வெளியில் போனால் மூஞ்சியைப் பார்த்து யாரிடம் தமிழில் தொடங்குவது, யாரிடம் கன்னடத்தில் தொடங்குவது, யாரிடத்தில் இந்தியில் தொடங்குவது என்ற அவர்களின் சூத்திரமும் பின்னர் புரிந்து விட்டது. பெரும்பாலும் அது சரியாக வேலை செய்யும். சில நேரங்களில் அதுவும் புட்டுக்கும். 

ஒய்ட்ஃபீல்ட் போய் இறங்கி முகவரி கேட்டால், அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் போக வேண்டும் என்றார்கள். ஆட்டோவில்தான் போக வேண்டுமாம். சென்னை மாதிரி இங்கே ஷேர் ஆட்டோ வேறு இல்லை. ‘போங்கடா’ என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். நாங்க நடக்காத தொலைவா? ஈசியார்ல எங்க கால் படாத இடம் ஓர் அடி கூடக் கிடையாது. சென்னையை விட பெங்களூர் சின்ன ஊர்தான் என்றார்கள். ஆனாலும் பெங்களூரில் சென்னையைவிட ஏதோவொன்று கூடுதலாக இருக்கிறது. ஊரோட குளிரா? வெள்ளக்காரய்ங்க மாதிரி பளபளன்னு திரியுற பிள்ளைகளா? இவைய்ங்க பேசுற ஆங்கிலமா? அது என்னன்னு தெரியல. முகவரியைச் சென்றடைந்த பின்னர்தான் புரிந்தது பெரியப்பாவும் அவர் பிள்ளைகளும் இருப்பது அப்பார்ட்மெண்டில் என்று. நாம பார்க்காத அப்பார்ட்மெண்டா? எத்தனை பத்து மாடிக் கட்டடங்களைக் கட்டிக் குவிச்ச ஆளு நாம? செக்யூரிட்டி இந்திக்காரன் போலத் தெரிந்தது. நமக்குத் தெரிந்த இந்தியிலேயே எடுத்து விட்டேன். ஏதோ நம்பிக்கை இல்லாமல் பார்த்தான். ஆனால் உள்ளே விட்டு விட்டான். உள்ளே போனால் அங்கேயும் ஒவ்வொரு கட்டடத்துக்கும் ஒரு செக்யூரிட்டி. பெரியப்பாவின் கட்டடத்துக்குப் போய், அங்குள்ள செக்யூரிட்டியிடமும் நாலு வார்த்தை இந்தி பேச வேண்டியதாயிற்று. இவன் மேலும் நம்பிக்கைக் குறைபாடு கொண்டவனாகத் தெரிந்தான். அங்கேயே உட்காரச் சொல்லிவிட்டு ஃபோனை எடுத்து யாரையோ அழைத்தான். குழப்பத்தோடே அழைப்பைத் துண்டித்தான். அதற்குள் ஒரு பத்து வயதுப் பையன் அந்தப் பக்கம் ஓடி வந்தான். அவனிடம் “யே அங்கிள் ஆப்கா கர்க்குத்தான் வந்திருக்கார்”-னு நமக்குப் புரியுற இந்தியிலேயே நாலு வார்த்தை பேசினான். ‘ஆ, இது பெரியவர் பேரனா? அவரை மாதிரியே இருக்கானே!’ என்று வியந்து பார்த்தேன். பையனுக்குப் பத்து முதல் பன்னிரண்டு வயது இருக்கும். இன்று வரை ஊர்ப்பக்கமே மூஞ்சியைக் காட்டிவிடாமல் பார்த்துக் கொண்டார் பெரியவர். அந்தப் பையனோ அவன் பங்குக்கு ஒரு முறை குர்ரென்று பார்த்து விட்டு இன்னொரு பையன் பின்னால் ஏதோ கத்திக் கொண்டு ஓடி விட்டான். செக்யூரிட்டி, “எட்டாவது மாடி” என்று நினைவூட்டினான். லிஃப்டில் நுழையும் போதுதான் சிந்திக்கிறேன். வீடோ... வேலையிடமோ... எத்தனையோ அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டிக் குவித்திருக்கிறேன். ஆனால் ஒன்று கூட முழுதாகக் கட்டி முடித்துப் பயன்பாட்டின் இருக்கும் போது இது போல நான் நுழைந்து புழங்கியதில்லை. அதுவும் ஒரு கட்டட வேலைக்காரனாக இல்லாமல், விருந்தினராகவோ வேறு ஏதாகவோ. இதுதான் முதல் முறை. அது ஒரு முற்றிலும் வேறுபட்ட உணர்வுதான். அந்த நிமிடத்தில் எனக்கு இன்னோர் ஆசை வந்தது. ‘இது போல நான் வேலை பார்த்துக் கட்டி முடித்த கட்டடம் ஒன்றுக்குள் அது பயன்பாட்டுக்கு வந்தபின் நடமாட வேண்டும்!’. ஆகா, என்னவொரு வேறுபட்ட சிந்தனை. நினைத்துப் பார்க்கவே எவ்வளவு இன்பமாக இருக்கிறது. கொத்தனாரிடம் வேலை பார்த்த காலத்தில் அவர் மூலம் கட்டிய வீடுகளில் பால் காய்ச்சும் போது அழைத்து விருந்து கொடுப்பார்கள், வேட்டி-சட்டை வாங்கிக் கொடுப்பார்கள். அதன் பின்பு கூட சில வீடுகளுக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. நாம் கல்லும் மண்ணும் குப்பையுமாகப் புழங்கிய அதே இடத்தில் உணவும் படுக்கையும் கேளிக்கையும் என்று வேறொரு கூட்டம் அனுபவிப்பதைப் பார்க்கும் போது அது ஒரு வேறுபட்ட உணர்வாக இருக்கும். அவையெல்லாம் தம்மாத்தூண்டு வீடுகள். ஆனால் இது போலப் பெருநகரங்களில் கட்டிய பெரும் அடுக்கு மாடிக் கட்டடங்களுக்குள் நுழைந்ததே இல்லை. அதையும் பார்த்து விட வேண்டும். அப்போதே வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் சென்னைக்குப் போய் சிறுசேரியில் கட்டிய நம் கட்டடம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டேன்.

எட்டாவது மாடி வந்தது. எட்டாவது மாடியல்ல, பத்தாவது மாடியே பார்த்தவன்தான் நான். வேலை பார்க்கும் போது. ஆனால் குடும்பம், பிள்ளை குட்டிகளோடு வாழும் மனிதர்கள் எப்படி இப்படி எட்டாவது – பத்தாவது மாடியில் எல்லாம் வாழ்கிறார்களோ என்று வியப்பாக இருந்தது. எட்டாவது மாடியில் மட்டும் நான்கு வீடுகள் இருப்பது போல் இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். ஏற்கனவே நமக்கு பாண்டியராஜன் முழி என்று ஊருக்குள் பயமுறுத்துவார்கள். வேலைக்கு வந்த புதிதில் இரண்டு-மூன்று முறை சந்தேகக் கேஸ் என்று போலீஸ் பிடித்திருக்கிறார்கள். இப்போதுதான் அதெல்லாம் குறைந்திருக்கிறது. ஆனாலும் பத்தடிக்கு மேல் பார்க்க நேர்ந்தாலே அந்த பயத்தோடேதான் இப்போதும் பார்க்கிறேன். இருட்டடைந்த மாதிரியான ஒரு மூலையில் பெரியப்பா போல் ஓர் ஆள் நின்று கொண்டிருந்தார். அவரேதான்! ஏதோ என் வருகைக்காகவே காத்திருந்தது போல் நின்று கொண்டிருந்தார். அருகில் சென்ற போதுதான் புரிந்தது, யாராக இருக்கும் என்ற குழப்பத்தில் காத்திருந்திருப்பார் போல. அவ்வளவு சிறப்பான வரவேற்பில்லை. ஏதோ பெயருக்குச் சிரித்தார். “வர்றவன் ஃபோன் பண்ணிட்டு வர வேண்டாமாடா?!” என்றார், ஏதோ பெரிய தவறு செய்து விட்டதைப் போல. அவர் எப்போதும் அப்படித்தான். “சரி, வா வா. உள்ள வா. செருப்ப இங்கயே கழட்டீரு. சாப்டியா? இந்தா இங்க ஒக்காரு” என்றார். வீட்டுக்குள் ஏகப்பட்ட ஆட்கள் இயந்திரம் போல் நடமாடிக் கொண்டிருந்தார்கள். பெரியம்மா வந்து நின்றார்கள். “என்னப்பா, ஒங்கம்மா எப்பிடியிருக்கா? அப்பா? அக்கா வீட்ல?” என்றார்கள். பதில் சொல்லிக்கொண்டே சுவர்களைப் பார்த்தேன். பெரியப்பா மகன் – அண்ணன் ஆளைக் காணவில்லை. வெளியில் எங்கோ போயிருக்கிறான் என்றார்கள். இன்னோர் அண்ணன் பக்கத்தில்தான் இருக்கிறானாம். அண்ணன் மனைவி சிரிக்கவா – வேண்டாமா என்ற சந்தேகம் இருந்தாலும் கூட அதை வென்று சிரித்த முகத்தோடு “வாங்க, நல்லா இருக்கீங்களா?” என்றார். வியப்புதான். கல்யாணத்துக்குக் கூடப் போனதில்லை. அப்புறம் எப்படித் தெரியும்? மதுரைப் பொண்ணு. மதுரைக்கெல்லாம் அடிக்கடி வந்து போவதாகச் சொல்வார்கள். ஆனால் அங்கருந்து மூணு மணி நேரம் தள்ளியிருக்கிற ஊருக்கு வர்றதுக்கு அவுகளுக்குப் பிடிக்கல. அடுத்த பல மாதங்கள் பெங்களூரில்தான் இருக்கப் போகிறேன் என்கிற தகவலையும் கொடுத்தாயிற்று. அத்தனை நாட்கள் சென்னையில் இருந்த போதும் ஒரு நாள் கூட வேளச்சேரி போனதில்லை. ஆனால் வந்த முதல் வாரமே இந்த ஆளை வந்து பாக்குறம்னா என்ன காரணம்? பங்காளி. அப்பன் கூடப் பெறந்தவர்னுதான். ஆனா அவருக்கோ அவர் குடும்பத்துக்கோ அது நல்ல செய்தியா கெட்ட செய்தியான்னு தெரியல. இரண்டும் இல்லாமலும் இருக்கலாம். எனக்கே கூட அது நமக்குச் சம்பந்தமே இல்லாத இடம் மாதிரி இருந்தது. சின்னப் பிள்ளையா இருக்கப்ப இவரு மகன்கள் ரெண்டு பேருமே (அண்ணன்கள்தான்!) ஊருக்கு வந்தா எங்கூடதான் விளையாடுவாங்க. அப்ப மதுரைல இருந்தாங்க. ஆனாலும் அவைய்ங்களோட நமக்கு செட்டாகாது. அப்பவே அப்பிடின்னா... இப்பச் சொல்லணுமா? கொஞ்ச நேரத்தில் வெளியில் போயிருந்த அண்ணன் வந்தான். அவனும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. வழக்கமான ஒரு வரவேற்புதான். வேலை எங்கே என்று கேட்டேன். பக்கத்தில்தானாம். நான் எலெக்ட்ரானிக் சிட்டி என்றதும், “அப்பப்ப, அங்கேயும் வருவேன்” என்றான். எனக்கு அதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. அப்படியானால் அடிக்கடி சந்தித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டேன். அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி போலத் தெரியவில்லை. அவனுடைய மொபைல் நம்பர் கேட்டு வாங்கிக் கொண்டேன். அதைக் கொடுப்பதற்கு அவனுக்கு ஏதோ சிரமம் இருப்பது போல் தெரிந்தது. அல்லது எனக்கு அப்படிப் பட்டது. ஆனாலும் கொடுத்து விட்டான். தானாடாவிட்டாலும் தன் சதையாடும்னு சும்மாவா சொன்னாய்ங்க! சாப்பிடச் சொன்னார்கள். சாப்பிட்டேன். பயந்து பயந்தே சாப்பிட்டேன். சிட்டில எப்பிடிச் சாப்புடுவாய்ங்களோ, நம்ம பாட்டுக்கு பட்டிக்காட்டான் மாதிரிச் சாப்புட்டு, அது வேற அவுகளுக்குச் சங்கடமாயிடக் கூடாது பாருங்க. ஆனா, பெரியவரு மகன் மூத்தவன் அப்பவே என்னவிட ரெண்டு மடங்கு கட்டுவான். அது அப்ப... இப்ப எப்பிடியோ?

அவர்களும் ஆளாளுக்கு ஒரு வேலையில் இறங்கி விட்டது போலப் பட்டது. சாப்பிட்டு முடிந்து எனக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. உள்ளே வரும் போது கீழே பார்த்த பையன் சாப்பிட வந்தான். அவன் பாட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுத் திரும்பக் கத்திக் கொண்டே கிளம்பிப் போய்விட்டான் (என்ன கருமமோ, எப்போது பார்த்தாலும் கத்திக் கொண்டே திரிகிறான். இதுதான் பெருநகர வளர்ப்பு போல!). அவனும் பேச விரும்பவில்லை. பெரியவர்களும் யாரும் அவனை என்னிடம் பேச வைக்க முயலவில்லை. நானே தொடங்கிச் சில கேள்விகள் கேட்டேன். “தாத்தா பேரு? பாட்டி பேரு? ஒங்க ஊரு?” என்று எனக்கு விடை தெரிந்த கேள்விகளாக மட்டும் கேட்டேன். இரண்டு தாத்தாக்கள், இரண்டு பாட்டிகளின் பெயர்களைச் சொன்னான். நல்ல குடும்பம்தான். ஊர்ப் பெயர் மட்டும் “மதுரை” என்பதோடு நிறுத்திக் கொண்டான். அடப்பாவிப் பயகளா? ஊர்ப் பேரு கூடவா சொல்லிக் குடுக்காம வளக்குறாய்ங்க? இன்னொரு சின்னப் பிள்ளை இருந்தது. பெண் பிள்ளை. அதனிடமும் இதே இரண்டு மூன்று கேள்விகளைக் கேட்டேன். அது பக்கத்தில் கூட வராமல் ஓடிப் போய்விட்டது. “அந்த அண்ணன் வீடு?” என்றேன். எல்லோருமே ஒன்று கூடி, அதற்கு முட்டுக்கட்டை போட்டார்கள். “அவன் ஆள் கிடைப்பதே சிரமம். பாதி நாள்தான் ஊர்லயே இருப்பான். அவர்களுக்கு இருப்பதே ஒரு ஞாயிற்றுக் கிழமை. முன்னப் பின்னச் சொல்லாமக் கொள்ளாமப் போனா நல்லா இருக்காதுல்ல. இன்னொரு முறை பார்க்கலாம்” என்பதுதான் அவர்கள் பேசியதன் சுருக்கம். ‘இதென்னடா கொடுமையா இருக்கு? ஒரேயொரு ஞாயிற்றுக் கிழமைதானாமே!’ என்று வியப்பாக இருந்தது நமக்கு. அது போக, “முன்னப் பின்னச் சொல்லாமக் கொள்ளாமப் போனா நல்லா இருக்காதுல்ல” என்றது அங்கு சென்றதற்கும் சேர்த்துச் சொன்னது மாதிரி இருந்தது. மாதிரி இருந்ததா, அப்படித்தானா என்று தெரியவில்லை. ‘சரி விடுங்க’ என்று எண்ணிக் கொண்டு விடைபெற்றுக் கிளம்பினேன். பெரியப்பா மட்டும் கொஞ்சம் கரிசனத்தோடு கேட்டார் – “திரும்பப் போயிருவியாடா? வழி நெனவிருக்கா? எல்லாரும் பிசியா இருக்காங்க. இல்லைன்னா அண்ணனக் கூட பஸ் ஸ்டாப் வரைக்கும் வந்து விடச் சொல்லீருவேன்”. “இதெல்லாம் நமக்கு ஒரு மேட்டரே இல்ல பெரியப்பா. சென்னைல இருக்குறப்ப... ஈசியார் ஏரியால...”-ன்னு நம்ம கதையைச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

திரும்பி வரும்போது குளிர் கூடிவிட்டது. சிந்தனை மட்டும் இம்மனிதர்களின் நகர வாழ்க்கையைச் சுற்றியும் இவர்களின் அடுக்கு மாடிக் கட்டடங்களைச் சுற்றியும் ஓடிக் கொண்டிருந்தது. இன்று இந்த அபார்ட்மெண்ட்டைப் பார்த்தது போல, கண்டிப்பாக ஒரு நாள் சென்னை சென்று சிறுசேரியில் நாம் கட்டிய கட்டடம் இன்று எப்படியிருக்கிறது, அங்கேயுள்ள செக்யூரிட்டிகள், லிஃப்ட், மனிதர்கள், வாகனங்கள்... எல்லாம் எப்படியிருக்கின்றன என்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை மட்டும் உறுதியானது. ஒவ்வொன்றுக்கும் ஒரு நாள் இருக்கிறது. அது போல இதற்கும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையோடே – அந்த நாளைப் பற்றிய முன்னினைவுகளோடே எலெக்ட்ரானிக் சிட்டி வந்து சேர்ந்தேன். ‘பெரியப்பா வீட்டில் நம்மை ஒழுங்காக மதித்தார்களா? அல்லது அவர்களுடைய வாழ்க்கை முறையே இப்படித்தான் மாறிவிட்டதா? இது போலவே மதினி வீட்டு ஆட்கள் வந்திருந்தாலும் நடந்து கொண்டிருந்திருப்பார்களா? நாமும் அவர்களைப் போலப் படித்து - வசதியாக வேலையில் இருந்திருந்தால் வேறு மாதிரி வரவேற்றிருப்பார்களோ?’ என்பது போலப் பல கேள்விகள் மனதுக்குள் ஓடின. ஒரு தாய் மக்களின் உடைமைகள் எல்லாம் இருவருக்கும் சமமாகச் சொந்தம் என்றுதானே ஊரில் இருக்கும் அம்மாக்கள் எப்போதும் எண்ணுகிறார்கள். இது இப்போது அறுபடுகிறது? அவ்வுடைமைகள் தத்தமக்கென்று திருமணம் செய்து கொள்ளும் போதா? அவையெல்லாம் ஒருபுறம் ஓடிக் கொண்டிருந்தாலும் அதை விட முக்கியமாக அந்த அப்பார்ட்மென்ட் பற்றிய நினைவுகளும் ஓடிக்கொண்டிருந்தன.

அதன்பின்பு கிட்டத்தட்ட ஒரு வருடம் பெங்களூரில் இருந்தேன். ஒரு ஞாயிற்றுக் கிழமை கூட பெரியப்பா வீட்டுக்குப் போக வேண்டும் என்று தோன்றியதில்லை. ஒரேயொரு முறை மத்தியானம் எலெக்ட்ரானிக் சிட்டியில் வைத்து பெரியண்ணன் அவனுடைய நண்பர்கள் சிலரோடு காரில் போகும் போது பார்த்தேன். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இருந்தனர். இந்திக்காரர்கள் அல்லது கன்னடத்துக்காரர்கள் போலத் தெரிந்தது. இருவருக்குமே தமிழ் முகம் இல்லை. நானும் என்னுடைய நண்பர்களோடு இருந்தேன். பெரும்பாலும் இந்திக்காரர்கள்தான். என்னைப் போன்று ஒரு சில தமிழர்கள். ஆனாலும் இரு வேறு விதமான இந்திக்காரர்கள் – தமிழர்கள் அல்லவா? அதனால் விட்டு விட்டேன். அதன் பிறகு அவனைப் பார்க்கவே இல்லை. ஆனால் அவன் கம்பெனிக்குள் போய் ஒரு நாளாவது பார்க்க வேண்டும் என்ற ஓர் ஆசை மட்டும் இருந்தது. அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இதற்கிடையில் பெங்களூரில் கட்டிய கட்டடப் பணி நிறைவுறும் காலம் நெருங்கியது. துவக்கத்தில் எனக்குச் சென்னை அளவு பெங்களூர் பிடிக்கவில்லை. இந்த ஊரின் குளிர், சாப்பாடு, வெளியூர் என்ற உணர்வு என்று எதுவுமே பிடிக்கவில்லை. பின்னர் மெது மெதுவாக பெங்களூர் மிகவும் பிடிக்கத் தொடங்கி விட்டது. பெங்களூரில் கட்டிய கட்டடத்தின் ஒவ்வொரு மூலையையும் என் சொந்த வீடு போலப் பாவித்து வேலை செய்தேன். ஒவ்வொரு கட்டடத்தின் அருகில் செல்லும் போதும், அதை விட்டுச் செல்லும் போதும், இங்கே இது செய்தேன், அங்கே அது செய்தேன் என்று மனதில் பதிந்து வைக்கத் தொடங்கினேன். அந்தக் கட்டங்களோடு பேசத் தொடங்கினேன். “இப்போது இப்படி இருக்கிறீர்கள். எனக்கே எனக்காக இருக்கிறீர்கள். கட்டி முடிக்கப்பட்ட பின் யார் யாருக்கோ சொந்தமாகி விடுவீர்கள். முற்றிலும் மாறி விடுவீர்கள். இங்கே நடமாடும் மனிதர்கள், வாகனங்கள், வைக்கப்படும் பொருட்கள் என்று எல்லாமே மாறி விடும். அப்போதும் உங்களைப் பார்க்க வருவேன். அப்போது உங்களுக்கு என்னை அடையாளம் தெரியுமா என்று தெரியவில்லை” என்றெல்லாம் பினாத்துவேன். 

இப்படியே சென்னையில் கட்டிய கட்டடத்தை விட பெங்களூரில் கட்டிய கட்டடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. முடியப் போகும் கடைசிச் சில நாட்களில் அந்தக் கட்டடத்தின் ஒவ்வோர் அடியும் ஒரு நினைவைக் கொடுத்தன. பகலில் படுத்துக் கிடந்த இடம், இரவில் படுத்துக் கிடந்த இடம், சாப்பிட்ட இடம், டீ குடித்த இடம், நண்பர்களோடு சகதியில் விளையாடிய இடம், துணி காயப்போட்ட இடம், ஒன்பதாவது மாடியில் இருந்து உச்சாப் போன மூலை, காலையும் மாலையும் பக்கத்துக் கம்பெனியில் நடமாடும் பசுமைகளைக் கண்டு களித்த மொட்டை மாடி மூலை, மேனேஜரைக் காதோடு அறைய வேண்டும் என்று நினைத்து அடக்கிக் கொண்ட குட்டைக் கட்டடத்தின் இரண்டாம் மாடி... என்று எண்ணிலடங்காத நினைவுகள். துவங்கியபோது வெறும் பொட்டலாக இருந்த இடம், இப்போது கட்டி முடிக்கப் பட்ட அழகுக் கட்டடங்களாக மாறியிருந்தன. வேலையும் முடிந்து ஊர் திரும்பினேன். சென்னையும் சிறுசேரியும் மனதில் இருந்து போயே போய்விட்டது. அடுத்த வேலையும் பெங்களூரிலேயே கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. 

ஆனால் விதி என்னை ஹைதராபாத் அழைத்துச் சென்றது இம்முறை. பெங்களூர் வழியேதான் போனேன். பேருந்து காலை எலெக்ட்ரானிக் சிட்டி கடந்த போது, நாங்கள் கட்டிய கட்டடங்கள் தெரியாது என்று தெரிந்த போதும் தெரிகிறதா என்று எட்டிப் பார்த்தேன். ஹைதராபாத்தில் ஒரு வருடம் இருந்தேன். அங்கேயும் பத்துப் பத்து மாடிகளாகக் கட்டிக் குவிக்கும் வேலைதான். அங்கேயும் ஏகப்பட்ட நினைவுகள். ஆனாலும் இந்த இடத்தைப் பார்க்க வர வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. இந்தப் பக்கம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று மட்டும் தோன்றியது. திரும்பி வரும் போது பெங்களூரில் இறங்கி, எலெக்ட்ரானிக் சிட்டி போய் அந்தக் கட்டடங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். விதி இம்முறை சென்னை வழியே அழைத்துச் சென்றது. ஆனாலும் சிறுசேரி சென்று வர வேண்டும் என்று தோன்றவில்லை. சென்னைக் காதலிகளை விட பெங்களூர்க் காதலிகளே முக்கியமாகிப் போயிருந்தார்கள். ஊர் திரும்பியபின் பெங்களூர் சென்று வர வேண்டும் என்று அடிக்கடித் தோன்றும். ஆனால் அதற்கான நேரம் வாய்க்கவே இல்லை. 

பக்கத்து ஊர்ப் பையன்கள் சிலர் சிங்கப்பூர் சென்று நன்றாகச் சம்பாதித்து வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவர்களைப் போய்ப் பார்த்தேன். அவர்களை வைத்து, திருச்சியில் ஒரு தஞ்சாவூர்க்காரரைப் பிடித்துப் பணம் கட்டி, சிங்கப்பூர் போனேன். சிங்கப்பூர் சென்று பணி புரிந்தது நல்ல அனுபவம். இங்கே கிடைக்காத பல நல்ல அனுபவங்கள் அங்கே கிடைத்தன. வாழ்க்கை மீது நம்பிக்கை வந்திருந்தது. அந்த நம்பிக்கையோடு நம்பிக்கையாக ஊர் திரும்பியதும் பெங்களூர் சென்று காதலிகளைப் பார்த்து விட்டு வந்து விட வேண்டும் என்ற ஆவலும் கூடிக் கொண்டே வந்தது. சிங்கப்பூரில் இரண்டு வருடங்கள் இருந்தேன். பொங்கல் நேரத்தில் ஒரு மாத விடுமுறை. ஊர் திரும்பினேன். கையிலும் பணம் இருந்தது. ஓரிரு நாட்கள் கழித்து விட்டு, ஒரு மாலைப் பொழுதில், பெங்களூர் கிளம்பினேன். 

அதிகாலை எலெக்ட்ரானிக் சிட்டி வந்து இறங்கினேன். அங்கிருந்து ஓர் ஒன்றரைக் கிலோ மீட்டர் உள்ளே செல்ல வேண்டும். நல்ல குளிர். சென்னையில் ஈசியார் போலவே இங்கிருக்கும் சாலையும் ஒவ்வோர் அடியும் என் கால் பட்டவை. இங்கே அதிகாலை, மதியம், மாலை, நள்ளிரவு என்று எல்லா நேரங்களிலும் நடமாடி இருக்கிறேன். இடம் நிறையவே மாறியிருக்கிறது. நானும் ஓரளவு மாறியிருக்கிறேன். கற்றிருந்த நாலு கன்னட வார்த்தைகளை மீண்டும் அசை போட்டு நினைவு படுத்திக் கொண்டேன். என் கட்டடங்களோடு பேசக் கன்னடம் தேவையில்லை. தமிழ் போதும். இங்கிருக்கும் செக்யூரிட்டிகளும் இந்திக்காரர்களாகத்தான் இருப்பார்கள். அதனால் இந்தியில் தெரிந்த நாலு வார்த்தைகளையும் அசை போட்டு நினைவுபடுத்திக் கொண்டேன். இவ்வளவு பெரிய கம்பெனிக்குள் அப்படியெல்லாம் உள்ளே விட்டு விடுவார்களா என்ன? ஆனாலும் ஒரு நம்பிக்கை. விளக்கிச் சொல்லுவோம்; சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கிறேன் என்பதையும் எடுத்துச் சொல்வோம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டே கட்டடங்களை நெருங்கி விட்டேன். வியப்பூட்டும் அளவுக்கு மாறியிருந்தன. ஒளி வெள்ளம் பல மடங்கு கூடியிருந்தது. அப்போதும் ஒரு சில ஆண்களும் பெண்களும் நடமாடிக் கொண்டிருந்தனர். நைட் ட்யூட்டியில் வேலை பார்ப்பவர்களாக இருக்குமோ? நிறைய வெள்ளை வெள்ளை வண்டிகள் நின்று கொண்டிருந்தன. உடம்புக்குள் நடுக்கம் கொடுக்கத் தொடங்கியது. என்னடா இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது?! “யாரோ ஒருத்தன் கட்டடம் கட்டியவனாம். அவன் கட்டிய கட்டடங்களைப் பார்க்க வேண்டுமாம்” என்று செக்யூரிட்டிகள் தொலைபேசியில் பேசிக் கொள்வது போன்ற காட்சி கண்ணுக்குள் வந்து போனது. இவ்வளவு தொலைவு வந்தாயிற்று. இனி சாண் – முழமெல்லாம் பார்க்க முடியுமா? 

செக்யூரிட்டியிடம் போய்ச் செருமினேன். எதிர்பார்த்தது போலவே “க்யா?” என்றான். எனக்குத் தெரிந்த இந்தியில் என் விண்ணப்பத்தை விளக்கினேன். அவன் ஒரு விதமாகப் பார்த்தான். பார்த்து விட்டு அவனுக்குத் தெரிந்த இந்தியில் ஏதோ சொன்னான். “ஜா... ஜா...” என்பது மட்டுமே புரிந்தது. அடங்கொக்கமக்கா... “நான் கட்டிய கட்டடங்களடா இவை! இங்கிருக்கும் ஒவ்வோர் அடி நிலமும் என் கால் பட்டவை; இங்குள்ள ஒவ்வொரு கட்டடத்திலும், ஒவ்வொரு மாடியிலும், ஒவ்வொரு மூலையிலும் எனக்கொரு நினைவு இருக்கிறது...” என்று இந்தியிலும் தமிழிலும் கலந்து உளறத் தொடங்கினேன். ஒவ்வொரு கதையாகத் தமிழிலேயே சொல்லத் தொடங்கியிருந்தேன். அதற்குள் நான்கைந்து செக்யூரிட்டிகள் கூடியிருந்தனர். உள்ளே போய் வந்து கொண்டிருக்கும் சில ஆண்களும் பெண்களும் கூட ஒரு விதமாகப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றார்கள். எனக்கு ஒரு மாதிரியாக வந்தது. அப்படியே சோர்ந்து அருகில் இருந்த ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன். 

என் காலத்தில் அந்த மரம் இருக்கவில்லை. ஆனால் அந்த இடத்திலும் கூட எனக்கொரு நினைவு இருக்கிறது. வேலை தொடங்கும் முன் அந்த இடத்தில் ஒரு சிறிய பாறை இருந்தது. அதற்கருகில் எந்நேரமும் ஒரு கறுப்பு நாய் படுத்துக் கிடக்கும். நாங்கள் வந்திறங்கியதும் முதல் வேலையாக அந்த நாயை அடித்து விரட்டினோம். ‘விரட்டினோம்’ என்று சொல்ல முடியாது. ‘விரட்டினார்கள்’. நான் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்து நான் துடிக்கவும் இல்லை; தடுக்கவும் இல்லை. அதனால் நானும் அந்தக் கூட்டத்தில் ஒருத்தன் என்ற முறையில் ‘விரட்டினோம்’ என்று சொன்னாலும் சரிதான். அந்தப் பாறையையும் நகர்த்தி வேறோர் இடத்தில் போட்டோம். அதே இடம்.

*நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பிறந்த நாளில் எழுத உட்கார்ந்து, நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த இந்தக் கதையை ஒரே அமர்வில் எழுதியும் முடித்து விட்டேன். அடுத்த பிறந்த நாளுக்குள் நிறைய எழுத ஆசை. பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி