குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி (1/3)

சிங்கப்பூர் வரும் போது எண்ணி எண்ணி மகிழ்ந்த ஒன்று - தமிழுடனான என் உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வசதியான ஒரு வெளிநாட்டுக்குச் செல்கிறோமே என்பதுதான். பெங்களூரில் தமிழ் கற்க முடியாத என் மகள் இங்கு வந்து ஆனா ஆவன்னாப் படிக்க முடியும். தமிழர்கள் தம் சொந்த மண்ணை விடக் கண்ணியமான வாழ்க்கை வாழ்கிறார்கள் இங்கு. தமிழ் நாட்டில் பல ஊர்களில் கிடைக்காத வசதி இங்கே கிடைக்கிறது. அப்படியான ஒரு வசதி - பகுதிக்கு ஒரு நூலகம் இருக்கிறது. ஒவ்வொரு நூலகத்திலும் ஒரு பகுதி தமிழுக்கென்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இதை அறிந்ததும் எப்படியும் நூலகத்தில் உறுப்பினராகி விட வேண்டும் என்று முடிவு செய்து அதையும் செய்து விட்டேன். முதல் முறை உள்ளே நுழைந்த போது என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்பதைக் கண்டு மகிழ்வதிலேயே இரண்டு மணி நேரம் போய் விட்டது. ஆனாலும் தமிழின் தலை சிறந்த நூல்கள் என்று அறியப்படும் எதுவும் சிக்க வில்லை. அந்நூல்களே அங்கு இல்லையா அல்லது அவை அனைத்தும் எடுத்துச் செல்லப் பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. இருந்த நூல்களில் நன்கு கேள்விப் பட்ட ஒன்று - குறிஞ்சி மலர்.

குறிஞ்சி மலர் பற்றி எப்படித் தெரியும் என்பது, தொலைக்காட்சிப் புரட்சிக்கு முந்தைய காலத்தில், தெருவுக்கு ஒரு வீட்டில் (பெரும்பாலும் வெளிநாட்டுக்காரர் வீட்டில்) இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பு மொத்தத் தெருவும் அமர்ந்து வாரத்தில் ஒருநாள் மட்டும் தொடர் நாடகம் பார்த்துப் பழக்கப் பட்ட என் காலத்து மற்றும் எமக்கு முந்தைய காலத்து மாந்தர்களுக்கு எளிதில் புரியும் என நினைக்கிறேன். நா. பார்த்தசாரதி அவர்கள் கல்கியில் பணியில் சேர்ந்ததும் எழுதிப் பேரும் புகழும் சேர்த்த அவருடைய முதல் புதினம் என்பதெல்லாம் அப்போது தெரியாது. அந்தப் புதினம் வெளிவந்த காலத்தில் தமிழ்நாட்டில் பிறந்த பல குழந்தைகளுக்கு அரவிந்தன் மற்றும் பூரணி என்ற பெயர்களை வைத்து அழகு பார்த்துப் பூரித்தார்கள் என்பதும் அப்போது தெரியாது. பிற்காலத்தில் இந்தக் கதைகள் எல்லாம் தெரிந்த போது, இப்போது விடிந்தது முதல் அடைந்தது வரை அலறிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியை எரிச்சலில் கூடத் திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு வெறுப்பாகி விட்டது என்ற போதும் , அந்த நேரத்தில் அந்தச் சிறிய ஊரில் பக்கத்து வீட்டில் போய் அமர்ந்து பார்த்தது இப்போது நினைக்கையில் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

அறிவார்ந்த உரையாடல்களைக் கேட்கும் போதெல்லாம் ஒருவித போதை நிலையில் கட்டிப் போடப் பட்டது போல உணர்வதுண்டு. அப்படியெல்லாம் எப்படிப் பேசுகிறார்கள் என்று பார்த்தால், அதன் பின்னணியில் அவர்களுடைய அளவிலாத வாசிப்பு இருக்கும். அத்தகைய பொழுதுகளில் நாமும் அது போல திகட்டத் திகட்ட வாசிக்க வேண்டும் என்று தோன்றும். தோன்றுவதோடு அவ்வளவுதான். அதன் பிறகு தின்பது மட்டும்தான் திகட்டத் திகட்ட நடக்கும். தூங்குவது மட்டும்தான் அளவிலாமல் நடக்கும். பிடித்ததைச் செய்ய வேண்டும் என்கிற சராசரி மனிதத் தத்துவத்தின் படியே வாழ்க்கை பெரும்பாலும் நகர்ந்திருக்கிறது. எப்போதாவது இடையிடையில் ஓரளவு வாசிப்பு நிகழ்ந்திருக்கிறது. அதில் குறிப்பிடத் தக்க ஒரு காலம் என்று சொன்னால், அது கல்லூரிக் காலம். பாடப் புத்தகங்களில் இருந்து தப்பிச் செல்ல ஒரு மாற்றுப் பாதையாக இருந்ததால் மற்ற புத்தகங்களின் பால் ஈர்க்கப் பட்டது ஒரு காரணம். மற்றொரு காரணம் - எங்கள் கல்லூரியில் இருந்த அருமையான நூலகம்.

நான் சோம்பேறிதான் என்றாலும் வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தால் போதும் என்று உண்டு கொள்பவன்தான். ஊட்டி விட வேண்டியதில்லை. வீட்டுக்குள் ஜிம் இருந்தால் போவேன் என்பது போல் வீட்டுக்கருகில் நூலகம் இருந்தால் போவேன். அதற்காக ஓடித் தேடித் தேய்ந்து கொள்ளவெல்லாம் முடியாது. சோம்பல் போலவே இன்னொரு பிரச்சனை - வாசிப்பதிலும் எழுதுவதிலும் வேகமின்மை. அதற்குக் காரணம் அதிகம் வாசிக்காமையும் எழுதாமையும் என்று சொல்வதற்கில்லை. சிலர் இயல்பாகவே வேகமாக எழுதுகிறார்கள் - வாசிக்கிறார்கள். குறிஞ்சி மலரைக் கூட நான் எடுத்து வந்து ஒரு வாரமாகி விட்டது. நான் இன்னும் இருபது விழுக்காடு கூட முடிக்க வில்லை. வீட்டுக்காரி முழுதும் முடித்து விட்டாள். அதற்கு இன்னொரு காரணம் - அழுத்தி எழுதுவதும் அழுத்தமாக வாசிப்பதும் என்று சொல்லலாம். அழுத்தி எழுதுவது உண்மை. அழுத்தமாக வாசிக்கிறேனா என்று முழுமையாகத் தெரியவில்லை. பேசும் போதும் சரி, பிற வேலைகளின் போதும் சரி, ஒன்று பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரத்தில் ஒன்பது பற்றி யோசிக்கும் மனம். அதுவும் நல்லதுக்கா கெட்டதுக்கா என்று தெரியவில்லை. அதன் பெயர் கவனச் சிதறலா அனாவசிய அலை பாய்தலா என்றும் தெரியவில்லை.

குறிஞ்சி மலர்க் கதைக்கு வருவோம். அந்தத் தொடரைப் பார்த்தது உண்மைதான். அதில் அளவிலாத ஆர்வம் கொண்டிருந்தது உண்மைதான். ஆனால், நான் கண்டதில் என்னவெல்லாம் இன்னும் நினைவிருக்கிறது என்று அசை போட்டுப் பார்த்தால் மிகக் குறைவான நினைவுகளே இருக்கின்றன. பூரணியாக நடித்த பெண்ணின் முகம் இன்னும் நன்றாக இருக்கிறது. அவருடைய உண்மைப் பெயர் கூட நீண்ட காலம் நன்றாக நினைவிருந்தது. பிற்காலத்தில் சில தங்கை வேடங்களில் அவரைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன் என நினைக்கிறேன். இப்போது படிக்கிற போது நா.பா. வருணித்திருக்கிற மாதிரியான முகம் 'அப்போது' அவருக்கு இருந்ததாகவே எண்ணுகிறேன். இப்போது அதே தொடரை மீண்டும் எடுத்தால் அதை விடச் சிறப்பான முகங்கள் கிடைக்கலாம். நாட்டில் அவிழ்த்து விடப் பட்ட தாராளமயமாக்கல் இதற்கொரு காரணமா என்று தெரியவில்லை. அப்புறம், அதில் அரவிந்தனாக நடித்தவரின் முகமும் பெயரும் இப்போதும் நினைவிருக்கிறது. அப்போது அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் பின்பும் நீண்ட காலம் அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்னர் உங்களில் பலரைப் போலவே நானும் அவர்களைக் குடும்பத்தோடு வெறுக்க நேர்ந்தது அவர்களுக்கும் தமிழ் கூறும் நல்லுலகுக்கும் நேர்ந்த கெட்ட நேரம்.

மதுரை நகரில் அரவிந்தன் சைக்கிளோ பைக்கோ ஓட்டுவது போல ஒரு காட்சி நினைவிருக்கிறது. தொலைக்காட்சி வைத்திருந்த வீட்டுக்காரம்மா மதுரைக்காரம்மா என்பதால், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் அந்தக் காட்சி வந்த போது "ஏய், மதுர... மதுர..." என்று கத்தியதும் கூட நினைவிருக்கிறது. மீனாட்சியம்மன் கோவிலுக்குள் இருக்கும் பொற்றாமரைக் குலத்தின் முன் அரவிந்தனும் பூரணியும் நின்றிருப்பது போல் ஒரு காட்சியும் நினைவில் உள்ளது. அரவிந்தனும் பூரணியும் ஒரு மலையின் மேல் சந்தித்துக் கொள்வதும் மலை மீது இவருடைய பெயர்களையும் அடுத்தடுத்து எழுதிக் கொள்வதும் மலையில் பொறித்த கல்வெட்டாக (!) என் நினைவில் இருக்கின்றன. தொடரைப் படம் பிடித்து முடிந்த பின்பு அதை அழித்தார்களோ இல்லையோ என்று அப்போதே தேவையில்லாமல் சிந்தனைகள் செய்து நேரத்தை வீணடித்ததும் நினைவில் இருக்கிறது. அது திருப்பரங்குன்றம் மலை என்பது இடையில் மறந்து இப்போது மீண்டும் நினைவு படுத்தப் படுகிறேன். மலைக் காட்சி மீண்டும் ஒரு முறை தொடரின் முடிவிலும் வரும் என்பதாக நினைவு. முடிக்கிற போது எல்லாம் தெளிவாகி விடும். அது புதினத்தை அப்படியே தொடராக்கினார்களா அல்லது தமிழ்த் திருநாட்டின் திருச்சுவைக்கேற்ப ஆச்சி மசாலா சேர்த்து எடுத்தார்களா என்பதையும் பொறுத்தது.

அரவிந்தன் ஒருமுறை மேடையில் பட்டாசாகப் பட்டையைக் கிளப்பும் காட்சி ஒன்றும் நினைவிருக்கிறது. கிராமத்துச் சினிமாப் படங்களில் காட்டுகிற மாதிரியே, தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த எங்கள் கிராமத்து ஏமாளி மக்கள், "அவுக அப்பா மாதிரியே சூப்பராப் பேசுறான் பாரு!" என்று மூக்கில் விரலை வைத்துப் பூரித்ததையும் நினைவில் வைத்திருக்கிறேன். இப்போது மட்டும் ஏன் மேடைகளில் அவுக அப்பா மாதிரி சூப்பராகப் பேச மாட்டேன் என்கிறார் என்பதும் புரிபடவில்லை. அப்போது நன்றாகப் பேசியது வேறு ஒருவர் எழுதிக் கொடுத்த வசனம் என்பதால் இருக்குமோ?! கடைசியில் அரவிந்தனைக் கட்டி வைத்து அடிக்கிற காட்சி நினைவிருக்கிறது. அடிக்கப் படும் போது அரவிந்தன் அமர்த்தி வைக்கப் பட்டிருந்த அந்த மர நாற்காலி நினைவிருக்கிறது. அது தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை. நூலை வாசிக்க வாசிக்க நிறைய நினைவு படுத்தப் படலாம். பார்க்கலாம்.

இப்போது தொழில்நுட்பத்தின் புண்ணியத்தில் புதிதாக எந்த நூலைப் படிக்க ஆரம்பித்தாலும் அந்த நூல் மற்றும் ஆசிரியர் பற்றிய பின்னணித் தகவல்கள் அனைத்தையும் இணையத்தில் வந்து தட்டித் தெரிந்து கொள்ள முடிகிறது. குறிஞ்சி மலர் பற்றியும் நா.பா. பற்றியும் அப்படியும் சிறிது தெரிந்து கொண்டேன். நாவலின் ஆரம்பத்திலேயே அடித்த சைவ சமய வாடை அவருடைய பின்னணி பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தியது. அவருடைய சொந்த ஊர், 'இப்போது' (எப்போதிருந்து... எப்போதுவரை... என்பதெல்லாம் வேறு கதை!) நான் சொந்த ஊர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சிவகாசிக்கு அருகில் என்று தெரிந்த போது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். சிவகாசியோடு எனக்குத் தொடர்பிருக்கும் கடந்த இருபது ஆண்டுகளில் எவருமே அவர் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசியதாக நினைவில்லை. எழுத்தாளர்களுக்கு அவ்வளவுதான் நாம் வைத்திருக்கும் மரியாதை. அதற்கு வருத்தப் பட்டு என்ன ஆகி விடப் போகிறது. போன வருடம் ஓட்டுப் போடக் காசு கொடுத்தவன் பெயரே மறந்து போய் விட்டது. இதென்ன பெரிய கொலைக் குற்றம்?!

அவரும் அரவிந்தன் என்ற பெயரிலும் எழுதியிருக்கிறார் என்று அறிந்தேன். அவரும் மதுரையில் ஆசிரியர் பணி புரிந்திருக்கிறார் என்றும் அறிந்தேன். அதுவும் தமிழாசிரியர். இந்தக் கதையின் நாயகி பூரணியின் தந்தை மதுரையில் ஒரு கல்லூரிப் பேராசிரியர். அதுவும் தமிழ்ப் பேராசிரியர். கதையின் துவக்கத்தில் அவரும் ஒரு நாயகனைப் போலச் சித்தரிக்கப் பட்டிருக்கிறார். இப்போதெல்லாம் கதைகளில் நல்லவர்களைப் பற்றி நிறையப் பேசினாலே எதார்த்தமாக இல்லை என்று ஊதித்தள்ளி விடுகிறோம். அந்த நேரத்தில் அது எப்படியோ எடுபட்டிருக்கிறது. இலக்கியம் என்பதே நல்லவர்களை வர்ணிப்பதை ஒரு முக்கியப் பங்காகக் கொண்டவைதானே அந்தக் காலத்தில். ஆரம்பத்தில் வருகிற 'முக்கியக்' கதாபாத்திரங்கள் அனைத்துமே நல்லவர்களாகவே இருக்கின்றன. அந்தக் காலத்தில் திருப்பரங்குன்றத்தில் (அல்லது மதுரையில்) வாழாமல் போய் விட்டோமே என்று வருத்தப் படும் அளவுக்கு நல்லவர்கள் சூழ நகர்கிறது கதை. ஒருவேளை, அரவிந்தனை அடிப்பதற்குக் கட்டை தேடிக் கொண்டிருப்பதில் காணாமல் போய் விட்டார்களோ என்னவோ?!

பிறந்தால் இப்படியோர் அப்பாவுக்குப் பிறக்க வேண்டும் என்பது போல் சித்தரிக்கப் பட்டிருக்கிறார் பேராசிரியர் அழகிய சிற்றம்பலம். அவர் பெயரைத் தமிழ் நாட்டில் எத்தனை பேர் வைத்தார்கள் என்ற புள்ளிவிபரம் இதுவரை வெளியாக வில்லை. பிறந்தால் இப்படியொரு பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்பது போல் சித்தரிக்கப் பட்டிருக்கிறாள் பூரணி. நல்ல வேளை, நான் இதைக் கல்யாணத்துக்கு முன்னால் படிக்க வில்லை. அப்படி ஒருத்தி எனக்காக எங்கோ இருக்கத்தான் செய்வாள் என்று இன்னும் இரண்டு மூன்றாண்டுகள் வீணாக்கி இருந்தாலும் இருப்பேன். அரவிந்தன் பற்றி வர்ணித்திருப்பதைத் தாங்க முடியவில்லை என்று ஏற்கனவே என் வீட்டுக்காரி இரண்டு மூன்று முறைகள் புலம்பி விட்டாள். நல்ல வேளை, அவளும் கல்யாணத்துக்கு முன்பு இதைப் படிக்க வில்லை என்று எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

இதைப் படித்த பின் திருப்பரங்குன்றத்தின் மலை இடம் பெயரவில்லை என்பது ஓரளவு உறுதியாகிறது. அதன் எதிர்ப் புறம் - அதாவது, சாலைக்கு அந்தப் புறம் இருக்கும் கண்மாயும் இன்னும் இடம் பெயரவில்லை என்பதும் உறுதியாகிறது. அதைத்தானே ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும் போதும் வரும் போதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் சித்தரித்திருப்பதை விட அழகாக நால்வழிச் சாலை ஊரை இன்னும் பல மடங்கு உயர்த்தி இருக்கிறது. அதுவே மொத்த தேசத்தையும் அசிங்கப் படுத்தி விட்டதாகவும் எழுத்தாளர்கள் நிறையப் பேர் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். நா.பா.வும் இருந்தால் அதையே சொல்லியிருப்பாரோ என்னவோ. இப்போதைக்கு எனக்கு அது சரியாகப் புரியாததால் மரமண்டைக்கு ஏறவில்லை என்று ஒத்துக் கொள்ள வேண்டியதுதான். இன்னும் கொஞ்சம் நூல்கள் படித்த பின் புரிபடலாம். அதுவரை அவசியம் - பொறுமை!

நான்கைந்து தொடர் வண்டிகள் அவ்வழியே செல்வது பற்றிச் சொல்லியிருக்கிறார். அதில் ஒன்று தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் என்றும் சொல்கிறார். அது மட்டுமே திருப்பரங்குன்றம் நிலையத்தில் நின்று செல்லும் எக்ஸ்பிரஸ் என்றும் சொல்கிறார். அது நான் பெங்களூரில் இருந்து செல்லும் மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்தானா அல்லது சென்னையில் இருந்து செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸின் பழைய பெயரா என்று தெரியவில்லை. நா.பா.வின் குறிஞ்சி மலரில் சொல்லப் பட்ட ஒரு இரயிலில் பயணிக்கிறோம் என்பது பெருமைதானே. "பொறியியற் கல்லூரி வந்தபின்" என்று ஓரிடத்தில் வருகிறது. அதன் பின்பு பல வரலாறுகளை உருவாக்கி விட்ட கல்லூரிதான் அது என்றாலும் இந்தப் புதினத்தில் இடம் பெறுவதன் மூலம் அந்தக் கல்லூரிக்கும் அது ஒரு பெருமை என்றுதான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து பேசுவோம்... :)

கருத்துகள்

  1. இப்பொழுது என்னால் தமிழில் கருத்து எழுத முடியும்! த. நா. பா. வின் கதைகள் நானும் விரும்பி படித்தவை. இனி சிங்கப்பூர் தானோ?

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் இந்த மாதிரி அனுபவம் கொஞ்சம் இருக்கு சார். " கபில்தேவின் தொப்பி" மற்றும் " பஞ்சு, பட்டு, பீதாம்பரம்", ஆகிய நாடகங்கள் பொதிகை தொலைகாட்சியில் பார்த்த ஞாபகம் எனக்கு உள்ளன. நீங்கள் கூறியுள்ளதை வைத்து இந்த புத்தகத்தை உடனே வாங்கி படிக்க வேண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ள்ளது. சிறு வயது காலத்தில் நடந்தவைகளை பற்றி நீங்கள் எழுதிய விதம் அருமை. அதை படிக்கும் போது எனக்கும் "ஞாபகம் வருதே", "ஞாபகம் வருதே" என பழைய வாழ்க்கை கண்ணீர் துளிகளுடன் வெளியே வருகிறது.

    பதிலளிநீக்கு
  3. @Zephyr, சூப்பர். நம்பவே முடியவில்லை. நீங்கள் தமிழில் எழுதுவதைப் பார்த்தால் வேறு யாரிடமோ பேசுவது போல் உள்ளது. :)

    ஓ! அந்த அளவுக்குத் தமிழ் வாசித்திருக்கிறீர்களா? மகிழ்ச்சி... மகிழ்ச்சி...

    //இனி சிங்கப்பூர் தானோ?//
    அப்படி ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், அழைத்து வரும்போதே சொல்லித்தான் அழைத்து வந்தார்கள் - "இப்போதைக்கு நான்கு மாதங்கள்தாம். எந்த நேரமும் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவோம். அப்போது அழுவக் கூடாது!" என்று. அதனால், உங்கள் கேள்விக்கு அவ்வளவு உறுதியாகப் பதில் சொல்ல முடியாது. நான்கு மாதங்கள் கழித்துத்தான் தெரியும்!

    அப்படியே தமிழிலும் பதிவிட ஆரம்பியுங்கள். இன்னும் மகிழ்வேன். :)

    பதிலளிநீக்கு
  4. @மாரிமுத்து, வருக! வருக!! மிக்க மகிழ்ச்சி. கண்டிப்பாக நம்ம கூட்டம் ஒன்று இருக்கும் என்று எண்ணித்தான் அத்தனையையும் எழுதினேன். நம்பிக்கை வீண் போக வில்லை. நூலை வாங்கிப் படிக்கும் அளவுக்குத் தூண்டி விட்டானா? அப்பப்பா, புல்லரிக்கிறது. நம்மைப் போலவே இளமைக் கால அனுபவங்கள் கொண்ட ஒருவருடன் பேசுவது எப்போதுமே சுகம்தானே! :)

    பதிலளிநீக்கு
  5. நட்சத்திர நல்வாழ்த்துகள், சிங்கப்பூரில் இருந்தால் மற்ற பதிவர்களை ஒருநாள் சந்தித்துப் பேசலாமே.

    பதிலளிநீக்கு
  6. நன்றி கண்ணன் அவர்களே. நல்ல திட்டம். இதுவரை பதிவர் சந்திப்பு எதிலும் கலந்து கொண்டதே இல்லை. பதிவுலக நண்பர்களும் அதிகம் கிடையாது. இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். நீங்களும் இங்குதான் இருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  7. நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

    கல்கியில் வந்த நாவலை பைண்ட் செஞ்சு அக்கா வச்சுருந்தாங்க. அதை ஒரிஜினல் படங்களுடன் வாசித்த நினைவு.

    அந்த தொலைக்காட்சித் தொடரில் நாயகன் நாயகியாக நடித்தவர்களின் பெயரைச் சொல்லுங்களேன்.

    நான் அந்த சமயம் தமிழ்நாட்டில் இல்லை:(

    பதிலளிநீக்கு
  8. நன்றி துளசி கோபால் அவர்களே.

    நாயகன் பெயர் ஸ்டாலின். நாயகி பெயர் மறந்து விட்டது. :)

    பதிலளிநீக்கு
  9. அன்பின் பாரதிராஜா

    தமிழ் மண் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டதிற்கு வாழ்த்துகள்!.

    குறிஞ்சி மலர் பாதிப்பில் அரவிந்தன் என்று எனக்கு பெயர் வைத்தார்கள்.

    அன்புடன்
    அரவிந்தன்

    பதிலளிநீக்கு
  10. இந்தவாரம் ஞாயிறு PC Show பக்கம் ஒரு நாலு பேராவது கூடுவோம், அங்கே வருகிறீர்களா ?

    அலைபேசி எண் ; nine eight seven six seven five eight six

    பதிலளிநீக்கு
  11. ஆகா... அருமை... சொன்னதை நிரூபிக்க இவ்வளவு சீக்கிரம் ஓர் அரவிந்தன் வருவார் என்று எதிர் பார்க்க வில்லை. மிக்க நன்றி.

    உங்களுக்கொரு கேள்வி - உங்கள் குணாதிசயங்களில் அரவிந்தனின் தாக்கம் இருக்கிறதா?!

    பதிலளிநீக்கு
  12. கண்ணன் அவர்களே, நன்றி. உங்கள் என்னைக் குறித்துக் கொள்கிறேன். முடிந்தால் இன்றோ நாளையோ பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  13. "என்னை" அல்ல... "எண்ணை"... சொற்குற்றம்! :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி