கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 6/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

வியப்புகள் தொடர்கின்றன...

பாதுகாப்பு

இந்தியாவில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் வளரா நாடுகளுக்கும் எவ்வளவோ வேறுபாடுகள்.  வன விலங்குகளைவிட மனித இனம் எவ்வளவு மேலானது என்று படுகிறதோ அதே அளவுக்கு மனிதருக்குள்ளேயே ஒரு சாரார் பண்பட்ட மனிதர் போல் மேலான வாழ்க்கையும் இன்னொரு சாரார் விலங்குகளைப் போலக் கொடூரமான வாழ்க்கையும் வாழ்கிறார்கள். விதிகளை மதித்தல், மனிதர் உயிர்க்குக் கொடுக்கும் மரியாதை போன்று பல விசயங்களில் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் மேலானவையாகப் பட்டாலும், அடிப்படையான சில விசயங்களில் அவர்கள் நம்மைவிடப் பின்தங்கி இருப்பது போலத்தான் படுகிறது. அதில் ஒன்று, தனிமனிதப் பாதுகாப்பு.

வந்து இறங்கிய பொழுதில் இருந்து எத்தனையோ வழிப்பறிக் கதைகள் பற்றிக் கேள்விப் பட்டுக் கொண்டே இருக்கிறோம். இதற்கும் பல விதமான கருத்துகள் சொல்கிறார்கள். ஒன்று, குற்றங்கள் பெருகிய நம் நாட்டில் மக்கட்தொகையும் அதிகம் இருப்பதால், நமக்கு நடக்கிற வரை அது பற்றிப் பெரிதாகப் பேசுவதில்லை நாம். இங்கோ அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதைக் கூடப் பெரிதாக்கிப் பேசுகிறோம். அதற்கொரு காரணம் - இங்கே ஏற்கனவே இருக்கிற சட்டம் ஒழுங்கு மிகவும் நன்றாக இருப்பதால் நம்மிடம் இருக்கும் மித மிஞ்சிய எதிர்பார்ப்பு. இன்னொன்று - இதைச் செய்வதும் இதனால் பாதிக்கப்படுவதும் பெரும்பாலும் உள்ளூர் ஆங்கிலேயர்கள் இல்லை என்கிறார்கள். பிழைக்க வந்தவர்களைக் குறி வைத்துப் பிழைக்க வந்தவர்களே செய்கிற குற்றங்களே இவை என்றே சொல்கிறார்கள். இருக்கலாம்.

இந்தியாவில் சாதாரணமாக நடமாடுகிற போது இருக்கிற அச்சமற்ற மனநிலையோடு எப்போதுமே இங்கே நடக்க முடிந்ததில்லை. நம்ம ஊரில் நமக்குத் தெரிந்தது போல, இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்த ஊரில் எந்தெந்தப் பகுதி பாதுகாப்பானது எந்தெந்தப் பகுதி பாதுகாப்பற்றது என்பது நன்றாகத் தெரிந்திருக்கும். அதற்கேற்பத் தம் நடமாட்டங்களை வைத்துக் கொள்வர் என நினைக்கிறேன். "உள்ளூர்க்காரன் பேய்க்குப் பயப்படுவான்; வெளியூர்க்காரன் நாய்க்குப் பயப்படுவான்" என்று ஊர்ப்பக்கம் சொல்வார்கள். இங்கே நாய்கள் வீதிகளில் அவிழ்த்து விடப் படுவதில்லை என்பதால், "உள்ளூர்க்காரன் பேய்க்குப் பயப்படுவான்; வெளியூர்க்காரன் சக மனிதர்க்குப் பயப்படுவான்" என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

இது போன்று தெருக்களில் நடமாடும் போது வருகிற பயத்துக்கு இன்னொரு காரணம் - இந்தியாவில் எங்கு போனாலும் கூட்டம் கூட்டமாக ஆட்கள் நிறைந்திருப்பார்கள். இங்கோ அப்படியில்லை. எங்குமே அமைதியாகத்தான் இருக்கிறது. சுற்றி ஆட்கள் அதிகம் நடமாடவில்லை என்றாலே அங்கே குற்றத்துக்கான வாய்ப்புக் கூடி விடுகிறதுதானே! ஊரில் இருக்கிற காலத்தில் ஆள் நடமாட்டமில்லாமல் அமைதியாக இருக்கிற தெருக்களைக் கண்டால் மனதுக்கே இதமாக இருக்கும். இங்கு வந்த பின்பு அந்தச் சுவையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கூட்டம் கூட்டமாக இருக்கிற இடங்களைத்தான் பிடிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், அங்கே பழகிய இடம் என்பதால், வழியில் எதிர்பாராத பிரச்சனை ஏற்பட்டால் கூட அதை எதிர் கொள்ளும் சில உத்திகள் நமக்கு எளிதாக வரலாம். எதற்காகத் தாக்குவார்கள், எப்படித் தாக்குவார்கள், எப்படித் தப்பலாம் என்று ஏதாவது கொஞ்சம் புரிபடும். இங்கே ஒரு கருமமும் புரிபடுவதில்லை.

எதற்காகத் தாக்குவார்கள் என்பதற்கு ஒரு விடை இருக்கிறது. இந்தியர்களின் தங்க நகை மோகம் உலகப் புகழ் பெற்றது. அமெரிக்காவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி, இந்தியர்களைத் தங்கத்துக்காகக் குறி வைத்துத் தாக்கும் நடைமுறை இருந்து வரத்தான் செய்கிறது. இதைப் புரிந்து கொண்டு அந்த மாதிரியான ஆசைகளை ஊரிலேயே மூட்டை கட்டி வைத்து விட்டு வருகிற விபரமான ஆட்களும் இருக்கிறார்கள். "அதெல்லாம் பாத்துக்கிறலாம்" என்று துணிந்து வந்து விடுபவர்களும் இருக்கிறார்கள். "எவனோ என்னைக்கோ அடிச்சுப் பிடுங்குவாங்கிறதுக்காக என்னைக்குமே நகை போடாம இருக்க முடியுமா? என்னப்பா இது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு?!" என்று துணிவோர்தான் பெரும்பாலும் இதற்கு இறையாவோர். இதுவும் குளிர் காலங்களில் பல அடுக்கு ஆடைகள் போடுவதால் அதிகம் நடப்பதில்லை. வெயில் காலத்தில்தான் பளபளவென்று நாம் ஆசைப்படுகிற மாதிரி வெளியில் நன்றாகத் தெரியும். அப்போதுதான் அவர்கள் கைவரிசை காட்டுவார்கள். இதைச் செய்வது பெரும்பாலும் வெள்ளையரோ, இந்தியரோ, பாகிஸ்தானியரோ, இலங்கையரோ அல்ல; ஆப்பிரிக்கர்களே என்றொரு பரவலான குற்றச்சாட்டு இருக்கிறது. அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்றும் சிலர் சொல்கிறார்கள். யாரையும் அப்படி ஒட்டுமொத்தமாகக் குற்றஞ்சாட்டுவது தவறு; அதைப் பற்றிப் பேசும் முன் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் - ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது புரிகிறது. அதனால் இது பற்றிப் பேசவே சிறிது சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் கருத்து என்ற முறையில் உள்ளதை உள்ளபடிச் சொல்லிவிடுவது என்று தீர்மானித்துச் சொல்லி விடுகிறேன். உண்மை, உண்மைக்கும் பொய்க்கும் நடுவில் எங்கோ இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

அந்தக் காலத்தில் நம்ம ஊரில் கூட காவற்துறை அதிகாரிகள் வருகிறார்கள் என்றால் எல்லாருமே பயந்து நடுங்கி ஓடி ஒளிவார்களாம். ஆனால் இப்போது சுள்ளான் மாதிரி இருக்கிற பயகள் கூடப் பல இடங்களில் அவர்களை எதிர்த்து வாக்குவாதம் செய்வது பரவலான ஒன்றாகி விட்டது. ஆனாலும் எல்லோரும் அப்படி நடந்து கொள்வதில்லை. ஏனென்றால் சில அதிகாரிகள் கோபம் வந்தால் பொளேர் என்று வைத்து விடுவார்கள் என்ற பயம் இப்போதும் இருக்கிறது. அதுவும் அதிகமாகக் காவற்துறையோடு பழக்கம் இல்லாதவர்கள் - வைத்துக் கொள்ளாதவர்கள் கவனமாகவே இருப்பார். ஆனால் இங்கே காவற்துறை அதிகாரிகள் என்றால் யாரும் பயப்படுவது இல்லை. குற்றம் செய்தோர் கூட அவர்களிடம் குண்டக்க மண்டக்க வாதிடுவதும், சில நேரங்களில் தரமற்ற சொற்கள் பயன்படுத்திப் பேசுவதும் கூட சாதாரணமாக நடக்கிற ஒன்று என்கிறார்கள். இது இவர்களுடைய சட்டம் ஒழுங்கில் குறைபாடு உண்டு என்று நிறுவச் சொல்லும் கதை அல்ல. குற்றம் செய்தவருக்குச் சட்டப்படியான தண்டனை கிடைப்பது கிடைத்தே தீரும். ஆனால் அடித்தல் - துன்புறுத்துதல் போன்ற மனித உரிமை மீறும் உரிமைகள் காவற்துறைக்குக் கொடுக்கப்படவில்லை என்பதால் அவர்களைக் கண்டு அஞ்சுகிற பழக்கம் இல்லை என்று மட்டும் சொல்கிறேன். "அவர்களுக்கென்று கடமை இருக்கிறது. அதை அவர்கள் செய்யட்டும். நமக்கென்று உரிமை இருக்கிறது. அதை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது" என்கிற மனவோட்டம். அவ்வளவுதான்.

சிங்கப்பூரில் எங்கேனும் ஏதோவொரு சிறிய குற்றத்துக்கான சிறு அறிகுறி தெரிந்தாலும் கூட பொது பொதுவென வந்து குவிந்து விடுவார்கள் காவற்துறையினர். பார்க்கவே வியப்பாக இருக்கும் அக்காட்சி. அது போல இங்கும் எந்தக் குற்றமாக இருந்தாலும் தகவல் கிடைத்த ஒரு நிமிடத்துக்குள் காவற்துறை களத்துக்கு வந்து விடும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அதனால் அடிக்கடி ஒலி எழுப்பிக் கொண்டு பறக்கும் காவற்துறை வாகனங்களைக் காண முடியும். நம்ம ஊரில் ஆம்புலன்ஸ் வண்டிகள் மட்டுந்தான் அப்படிச் செல்லும். இங்கே அதிகமாகக் காவற்துறை வண்டிகளே அப்படிச் செல்கின்றன. அதுவும் குறிப்பிட்ட சில பகுதிகளில் குற்றமும் குற்றத்தைப் பிடிக்கப் போகும் அல்லது தடுக்கப் போகும் காட்சிகளும் மற்ற பகுதிகளை விட அதிகமாகவே இருக்கும். நாங்கள் இருக்கும் பகுதி கூட அப்படியான ஒரு பகுதிக்கு அருகிலானதுதான்!

போக்குவரத்து வசதிகள்
இலண்டனின் உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து வசதிகள் உலகறிந்தவை. தரைவழிப் பேருந்துகள், தரைக்கு மேலே செல்லும் இரயில் வண்டிகள், தரைக்கடியில் செல்லும் ட்யூப்கள், சாலையோடு சேர்ந்து கிடக்கும் இருப்புப் பாதையில் செல்லும் ட்ராம்கள் என்று பல விதமான வசதிகள் இருக்கின்றன. இதில் பெரும் வியப்பு - நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தரைக்கடியில் பல மீட்டர் ஆழத்தில் பள்ளம் தோண்டி அமைத்த ட்யூப் நிலையங்கள் - பாதைகள். இலண்டன் நகரம் முழுக்க அதன் தரைக்கடியில் எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிற இந்த நரம்பு வலைப் பின்னல் இருக்கிறது. அதுதான் இந்த நகரத்துக்கு இரத்தம் ஓட்டம் போலச் செயல்படுகிறது. இன்று புதிதாக ஒரு நகரத்தைக் கட்டச் சொன்னாற் கூட நம்மால் நம் நாட்டில் இது போன்ற வசதிகளுடன் கூடிய ஒரு நகரத்தைக் கட்ட முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு வியப்பாக இருக்கிறது. இது ஒன்று போதும். நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதை நிரூபிக்க. அடுத்தடுத்த நிமிடங்களில் வண்டிகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆட்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் ஒவ்வொரு வண்டியிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதெல்லாம் செய்திருக்கவில்லையென்றால் இலண்டன் இன்று என்ன பாடு படும் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

ஓட்டுனர் இல்லாமல் ஓடும் ட்யூப்களும் இருக்கின்றன. முழுக்க முழுக்க இயந்திரமயமாக்கப் பட்டு விட்ட இந்த வண்டிகளின் இயக்கம் ஒரு பெரும் வியப்பு. ஒவ்வொரு நிலையத்திலும் சரியான அறிவிப்புகளைச் செய்து, சரியான இடைவெளி கொடுத்துக் காத்திருந்து, சரியாகக் கதவுகள் சாத்தி, வளைவுகளுக்கு ஏற்றபடிச் சரியான வேகமெடுத்து, இலட்சக்கணக்கான மக்களைத் தினமும் பாதுகாப்பாக இடம் பெயர்த்துக் கொண்டிருக்கும் இது போன்ற வசதிகள் வர இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வேண்டுமோ நமக்கு!

இங்கிருக்கிற வசதிகள் பற்றிப் பேசும் போது சொல்ல மறக்கக் கூடாத ஒன்று - இந்த வசதிகள் எல்லாம் யார் பணத்தில் கட்டப்பட்டவை என்பது. காலங்காலமாக இங்கிருக்கிற இந்தியர்கள் பலர் (துணைக் கண்டத்தினர் எல்லோருமே) இது பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். "இந்த அழகழகான வீடுகளும் கட்டடங்களும் வசதிகளும் முழுக்க முழுக்க நம்ம ஊரில் கொள்ளையடித்துக் கொண்டு வந்த பணத்தில் - அடிமைகளாகக் கொண்டு வந்த ஆட்களை வைத்துக் கட்டியது!" என்று அவர்கள் சொல்லும் போதே, அதை அனுபவிக்கிற உரிமை நம்மை விட யாருக்கும் அதிகம் கிடையாது என்பது போல இருக்கும். வியப்பு என்னவென்றால், அதையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிற மாதிரிப் பேசுகிற ஆங்கிலேயர்களும் இங்கே இருக்கிறார்கள் என்பதே. அதனாற்தான் அவர்களால் நம்மையும் அவர்களுள் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டு இருக்க முடிகிறது.

சிங்கப்பூரில் இரயில்களுக்குள் தின்பது தடை செய்யப்பட்டிருக்கும். இங்கோ எப்போதும் யாராவது கையில் ஏதாவது ஒன்றை வைத்துத் தின்று கொண்டிருப்பதைக் காண முடியும். அதற்கொரு காரணம், மேற்கத்திய உணவு வகைகள் பெரும்பாலும் இடத்தை நாசம் பண்ணாத மாதிரிச் செய்யப் படுபவை. நம் கிழக்கத்திய உணவுகள் யாவும் கமகமவென்ற மணமும் நேரமாகி விட்டால் அதுவே கப்படிக்கிற அளவு நாற்றமும் கொண்டவை. கொட்டி விட்டால் இடத்தின் நிறத்தையே மாற்றி விடக் கூடிய - ஆட்களை வழுக்கி விழ வைத்துப் பரலோகம் அனுப்பி விடக் கூடிய ஆற்றல் படித்தவை. அதனால் இருக்கலாம்.

அமெரிக்கா முழுக்க முழுக்கப் புதுமை சார்ந்த நாடு என்பது போல், இங்கிலாந்து முழுக்க முழுக்கப் பழமையை மதிக்கிற - போற்றுகிற நாடு. நானூறு ஆண்டுகளுக்கு முன்பே அடுத்த ஐநூறு ஆண்டுகளுக்கும் சேர்த்து வசதிகள் செய்து விட்டதால் அப்படி இருக்கலாம். இங்கிருக்கிற கட்டடங்கள் அனைத்துமே சாதாரணமாகப் பல நூறு வருட வயது கொண்டவை. சாலைகளும் அப்படியே. அதில் ஒரேயொரு பிரச்சனை, வசிப்பிடப் பகுதிகளில் இருக்கும் பல சாலைகள் அகலமாக இருந்த போதும், வீட்டுக்குப் பல வாகனங்கள் வைத்து வாழப் போகும் எதிர்காலத்தைப் பற்றிச் சரியாகக் கணிக்காமல் விட்டதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கி விட்டு விட்டதால், எதிரெதிர்த் திசைகளில் இரண்டு பேருந்துகள் செல்ல முடியாத மாதிரிக் குறுகி விட்டன. இரண்டும் பேருந்தாக இருக்கும் போது மட்டுமே இந்தப் பிரச்சனை. இதுவும் எல்லாச் சாலைகளிலும் இல்லை. அங்குலம் அங்குலமாக நகர்த்தி வண்டி ஓட்டிப் பழகிவிட்ட நமக்குக் கூட இது சிறிது எரிச்சலாக இருக்கிறது. "ஏன்டா, ஒனக்கே இது நாயமா இருக்கா?" என்று அவ்வப்போது மண்டையில் தட்டி நினைவு படுத்திக் கொள்ளவும் வேண்டியுள்ளது.

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி