ஏற்றத்தாழ்வுகள்தாம் எத்தனை வகை?!

இடம்: இலண்டனில் ஓர் ஓட்டல்

இன்று காலை உணவுக்குச் செல்லும் போது என் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் ஒரு மிக அழகான ஐரோப்பிய இளம்பெண் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளோடு வந்து ஓர் அழகான இளைஞன் இணைந்தான். நம் பிராமண முகத்துக்கும் மத்தியக் கிழக்கு முகத்துக்கும் ஐரோப்பிய முகத்துக்கும் இடைப்பட்ட ஒரு முகம் கொண்டிருந்தான். பேரழகன் என்று சொல்ல முடியாது (பெரும்பாலான ஆண்களுக்குத்தான் இன்னோர் ஆண் மகனை அழகனென்று ஏற்றுக் கொள்ள முடியாதே!). ஆனால் பெண்களைக் கவர்வதற்கே உரிய செயற்கையான இயற்கைச் சிரிப்பு, சினுங்கல் என்று எல்லாம் கொண்டிருந்தான். மத்தியக் கிழக்கு என்று நினைக்கக் காரணம், அவன் வைத்திருந்த குறுந்தாடி. ஐரோப்பியனாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது, இதற்கு முன்பு அலுவலகத்தில் நான் சந்தித்த கிரீஸ் நாட்டு சகா போன்ற ஒரு சாயல் கொண்டிருந்தான் என்பதால். கண்டிப்பாக ஆங்கிலேயன் அல்ல. அந்தப் பெண்ணும் ஆங்கிலேயையாக இருக்க வாய்ப்பில்லை. இருவரும் இணையாக இருக்கலாம் அல்லது நண்பர்களாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன்.

நான் பொறாமைப் பட்டேன் என்று சொல்லும் தைரியமோ நேர்மையோ வயதோ என்னிடம் இல்லை என்பதால், மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை மட்டும் சொல்லி விடுகிறேன். நம்ம ஊரில் போல் உற்றுப் பார்த்தல், ஊடுருவிப் பார்த்தல் எல்லாம் இல்லை என்றாலும், அந்த இடத்தைக் கடந்து செல்லும் எல்லோரும் கவன ஈர்ப்புக்கு உள்ளாகி மீண்டதை நன்றாக உணர முடிந்தது. இந்தக் கதை இத்தோடு முடிந்தது.

நான் தங்கியிருந்த இடத்தில், மாலை நேரம் இது போன்று ஏக்கம் கொண்டவர்கள் எல்லோரும் சந்திப்பதற்காக ஓர் அழகான ஏற்பாடு செய்திருந்தார்கள். 'மேலாளர் சந்திப்பு' (MANAGERS MEETING) என்று பெயர். நிறுவனங்களில் மேலாளராக இருப்போர் சந்தித்து அலுவல் சார்ந்த உறவுகளை நிறுவிக் கொள்ளவும் வலுப்படுத்திக் கொள்ளவும் வசதியாக ஓசியில் குளிர்பானங்களும் சிற்றுணவுகளும் வழங்கி ஊக்குவிக்கும் வசதி. பெயருக்குத்தான் அது மேலாளர் சந்திப்பு என்றாலும், அங்கே வருகிற பெரும்பாலானோர்  பெண்களைக் கவர வரும் ஆண்களும் ஆண்களைக் கவர வரும் பெண்களுமே. நானும் மாலையில் வந்து உட்கார்ந்தேன். அருகில் இருந்த இருக்கையில் இன்னோர் அழகான ஐரோப்பியப் பெண் அமர்ந்திருந்தாள். கடை ஏழு மணிக்கு ஆரம்பம் என்றால், அவள் ஆறரைக்கே முதல் ஆளாக வந்து அமர்ந்திருந்தாள். நான் முதல் ஆளாகப் போய் மூஞ்சியைக் காட்டினால் கேவலமாகப் பார்த்து விடுவார்களோ என்று எண்ணிக் கொண்டு போனால், அவள் அமர்ந்திருந்தது கொஞ்சம் நிம்மதி அளித்தது.

ஏழு மணியானது. காலையில் பார்த்த அதே இளைஞன் இப்போது தனியாக வந்தான். காலையில் அவனோடு பார்த்த அந்தப் பெண் காலி செய்து போய் விட்டாளா அல்லது அலுவலகத்தில் மாட்டிக் கொண்டு விட்டாளா என்று தேவையில்லாத கவலை நமக்கு. அவன் வருகிற நேரம் இந்த அழகி அவளுக்கு வேண்டிய குளிர்பானம் எடுத்து வரப் போயிருந்தாள். அதற்கடுத்த இருக்கையில் தன் இரு மகன்களோடு இருந்த மத்திய வயது கொண்ட மத்தியக் கிழக்கு முகத்தவரோடு முன்பே அறிமுகம் ஆனவன் போல ஏதோ பேசினான். அந்த நிமிடத்தில் இவன் அந்தப் பகுதிக்காரனாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு ஞானோதயம் வந்தது.

இவன் பேச்சை முடித்துக் கொண்டு குளிர்பானம் நோக்கித் திரும்பும் நேரத்தில் அழகி தன் இருக்கைக்கு வந்து சேர்ந்தாள் (நம்ம கவிஞர்களை விட்டிருந்தால் "தேர் நிலைக்கு வந்தது!" என்று அவிழ்த்து விட்டிருப்பார்கள் அவர்களின் கவித்தேரை!). புன்னகை மாறாமல் அவளையும் அவள் வந்து அமர்ந்த இடத்தையும் அழகாகத் திரும்பிப் பார்த்து விட்டு, இவன் போய் அவனுக்குப் பிடித்த குளிர்பானத்தை எடுத்துக் கொண்டு வந்து, அழகிக்கு அடுத்த மேசையில் அவளுடைய இருக்கைக்கு அருகில் வருகிற மாதிரியான இருக்கையில் மிக அழகாக - இயல்பாக வந்து அமர்ந்தான்... இல்லையில்லை அமர வந்தான் என்று சொல்லிக் கொள்ளலாம்... அமர்வது போல வந்து நிறுத்தி, அவளிடம் ஏதோ பேச்சைப் போட்டான். அவர்களுக்குள் பற்றிய பொறியில் கூடத்தில் இருந்த மொத்தக் கூட்டத்துக்கும் வயிறு பற்றி எரிய ஆரம்பித்திருக்க வேண்டும். விடாமல் தொடர்ந்தான். வெள்ளைக்காரர்கள் முதற்கொண்டு சுற்றி அமர்ந்திருந்த எல்லோருமே அவ்வப்போது அவன் பக்கம் பார்வையை வீசினார்கள். சராசரி மனிதப் பொறாமைதான். மனிதனின் ஆதி உணர்வுகள் அனைத்தும் உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரித்தான் இருக்குமோ?!

ஏதேதோ பேசினான். மிக அருமையாகக் கோர்த்து உரையாடலை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழகாக நகர்த்தினான். எப்போது வந்தாய், எவ்வளவு நாட்கள் இருப்பாய் என்று ஆரம்பித்து, அவள் இவனிடம் "உன்னுடைய வயது என்ன?" என்று கேட்கிற நிலைக்குக் வந்தது. "29" என்று சொல்லி விட்டு, "நானும் கேட்கலாமா?" என்றான். "25" என்றாள். எங்கே வேலை பார்க்கிறாய், என்ன பிடிக்கும், ஏது பிடிக்கும், இலண்டனில் எங்கெங்கே போயிருக்கிறாய் என்று நீண்டது பேச்சு. இதையெல்லாம் ஒட்டுக் கேட்பது இங்கே மிகப் பெரிய அநாகரிகமாக இருக்கக் கூடும். அதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் அவர்களே பேசும்போது நான் ஏன் இவ்வளவு பட வேண்டும்? என்னை விட ஆர்வமாக எனக்கு அருகில் இருந்த வெள்ளைக்காரன் ஒருவனே இதையெல்லாம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் என்பதால் அதைப் பற்றியெல்லாம் நானும் பெரிதாகக் கவலைப் படவில்லை.

இதற்கிடையில் அவன் முதலில் நட்புறவோடு பேசிய - தன் இரு மகன்களோடு அமர்ந்திருந்த மத்திய வயதுக்கார மத்தியக்கிழக்கு முகத்துக்காரர் எழுந்து கிளம்பினார். போகும்போது அவனிடம் "பார்க்கலாம்" என்று (ஆங்கிலத்தில்தான்) சொல்லிக் கிளம்பினார். நன்றாகக் கவனியுங்கள். இதற்கு முன்பு அவன் இவரோடு பேசுகையில் அந்தப் பெண் அந்த இடத்தில் இல்லை. இப்போது அவளோடு பேசுவதில் குறியாக இருப்பதால், அவர் "பார்க்கலாம்" என்று சொன்னதைக் கண்டு கொள்ளாமல் இருந்தான். அது மட்டுமில்லாமல், அவர் அவனைக் கடந்ததும் 'யாருடா இவன்? என்னைப் பார்த்துப் பார்க்கலாம் என்கிறான்?' என்கிற மாதிரிப் பார்த்தான். இந்த நிமிடம் உறுதியாகி விட்டது - இவன் கண்டிப்பாக ஐரோப்பியன் இல்லை. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் ஓடிய இந்தப் பேச்சின் முடிவாக, சிரித்த முகத்தோடு ஏதோ சொல்லி விட்டு அவன் எழுந்து சென்றான்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் அலுவல் உடையில் இருந்து அன்றாட உடைக்கு மாறி வந்து நின்றான். அவளும் மேசையைக் காலி செய்து தயாராக இருந்தாள். என் கண்ணால் முன்னால் அறிமுகம் ஆன இருவர், அவர்களுடைய உறவின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து சென்றார்கள். நான் எழுந்து அறை வந்து சேர்ந்தேன். அதே நிமிடத்தில் இந்த உலகில் அது போன்று  எத்தனை புதிய உறவுகள் பிறந்தனவோ, அன்றைய நாளிலேயே உருவான இது போன்ற எத்தனை உறவுகள் பிரிந்தனவோ. ஆனால், இந்த அனுபவம் இதற்கு முன்பு பலமுறை வந்து சென்ற பல கேள்விகளை மீண்டும் கொண்டு வந்து நிறுத்தியது.

இந்த உலகம் குற்றமற்ற ஒன்றாக மாற வேண்டும் என்றால், அதற்கு என்னவெல்லாம் வேண்டும்? எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். எல்லோரும் என்றால்? ஏழை, கோழை, முட்டாள், அசிங்கன் (அல்லது குறைந்த பட்சம் அழகாகப் பேசத் தெரியாதவன்!)... எல்லோரும்! எல்லாம் என்றால்? பணம், தைரியம், அறிவு, அழகு (அல்லது வசியப்படுத்தும் வகையில் பேசும் ஆற்றல்)... எல்லாம்! கார்ல் மார்க்ஸ் கண்ட பொதுவுடைமை, பொருளை மட்டுந்தான் எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கச் சொல்கிறது. கோழையாகவோ முட்டாளாகவோ அசிங்கனாகவோ பிறந்தவர்கள் எல்லோர்க்கும் அவர்கள் ஆசைப்படுவதெல்லாம் எளிதில் கிடைக்க விரிவாக விவாதிக்கிற சித்தாந்தம் ஏதாவது இருக்கிறதா?

எல்லார்க்கும் எல்லாம் கிடைத்து விட்டால், குற்றங்கள் குறைந்து விடுமா? விடும். நின்று விடுமா? விடாது. பேராசைக்காரர்கள் தம் வேலையைக் காட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். குறைப்பதற்கான சாத்தியம் இருக்கிறதா? தெரியவில்லை. சேர்ந்து யோசிப்போம்.

இதற்கு முன்பு கற்பழிப்புச் செய்திகள் பற்றிக் கேள்விப் படுகிற போதெல்லாம், இது மனதில் வந்து செல்லும். உலகில் கற்பழிப்பு என்பதே இல்லாமல் இருக்க வேண்டுமென்றால், அதற்கு என்ன செய்ய வேண்டும்? கடுமையான சட்டங்கள் வேண்டும், தண்டனைகள் வேண்டும் என்பதெல்லாம் இருந்தாலும், அது பிரச்சனையின் மூலவேரைப் பிய்த்தெரியுமா என்றால் இல்லை. பேராசைக்காரர்கள் கற்பழிப்புகளில் ஈடுபடும் கதைகள் உலகமெங்கும் இருந்தாலும், பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இல்லாத சமூகங்களில் கொள்ளை குறைவாக இருப்பது போல, இருபாலர் உறவிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத அல்லது குறைவான சமூகங்களில் கற்பழிப்பு போன்ற குற்றங்கள் குறைவாக இருக்குமா?

அவசரத்தில் சிந்தனை முழுமையையும் முறையாக நெறிப்படுத்தி வெளிக்கொணர முடியவில்லை. ஆனால் மேலும் சிந்திக்கவும் ஆராயவும் இதற்குள் நிறைய இருப்பது போற் தெரிவது மட்டும் உறுதி. பார்க்கலாம்.

பின்குறிப்பு: கிட்டத்தட்ட ஒரு மாதம் அந்த ஓட்டலில் இருந்த காலத்தில் இந்த இளைஞன் பல்வேறு இளம்பெண்களுடன் புதிது புதிதாகப் பழகி வெளியில் சுற்றக் கிளம்பியதைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறது இச்சபை. :)

கருத்துகள்

  1. அப்பழுக்கற்ற, 100 சதம் அக்மார்க் "*****மை" ??? !!!

    இந்தப் பின்னூட்டத்திற்காக கர்த்தரும் பாரதிராஜாவும் என்னை மன்னிப்பார்களாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, வணக்கம். நன்றாக இருக்கிறீர்களா? நீண்ட நாட்களுக்குப் பின் வந்திருக்கிறீர்கள்.

      அதில் என்ன சந்தேகம்? கண்டிப்பாக அந்த "***மை" தான். இப்படியொரு விஷயத்தையும் எழுதலாமா என்று தயங்கிக் கொண்டு தான் இருந்தேன். நீங்களே இதை முழுக்கப் படித்து ஒரு கருத்துப் போட்டுள்ளீர்கள் என்றால் அப்படியொன்றும் இது தயங்க வேண்டிய அல்லது ஒளித்து வைக்க வேண்டிய மேட்டர் இல்லை என்றுதான் படுகிறது. :)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி