மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் 2006-இல் ஈவினிங் போஸ்ட்டுக்கு அளித்த நேர்காணல்: - பிரபஞ்சத்தில் கடவுளுக்கு எந்தப் பாத்திரமுமில்லை

ஸ்டீபன் ஹாக்கிங் இரண்டு செய்திகள் வைத்திருக்கிறார், ஒன்று கெட்டது, இன்னொன்று நல்லது. நல்லது முதலில்: “பிரபஞ்சம் என்றென்றைக்கும் எஞ்சி நிற்கும்”. கெட்டது: “கடவுளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அநேகமாய்.”

மார்ச் 14, 2018, புதன்கிழமையன்று, ஸ்டீபன் ஹாக்கிங் தன் 76-ஆம் வயதில் மரணமடைந்தார். உலகப்புகழ் பெற்ற இயற்பியல் அறிஞரின் “காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்” (நம் நம்பமுடியாப் பிரபஞ்சம்) ["A briefer history of time" (Our Incredible Universe)] என்ற நூல் வெளியீடு தொடர்பான ஈவினிங் போஸ்டின் அவரது பேட்டியை இங்கு படிக்கலாம். முதன்முறையாக இந்தப் பேட்டி 2006-இல் வெளியிடப்பட்டது.

உலகின் தலைசிறந்த அறிவியல் பிரபலத்தின் பார்வையாளர்களாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். கருந்துளைகளின் உட்புறத்தில் பேரார்வம் கொண்டவர்கள் போலப் படுகிற மாணவர்கள், லண்டனுக்கு வெளியே உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயர்கணிதத் துறைக்காகப் (Advanced Mathematics) புதிதாகக் கட்டப்பட்டுள்ள மையத்தின் வரவேற்பறைக்கு உள்ளேயும் வெளியேயுமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஒப்புதலைப் பெற ஆறு மாதங்கள் எடுத்துள்ளது. நூலாசிரியர்கள் ஒரு புதிய நூல் வெளியிடும்போது, ​​அவர்களைச் சந்திப்பது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை. ஆனால் இந்த எழுத்தாளர் மற்றவர்களைப் போல் அல்ல. அவரை "பேராசிரியர் ஹாக்கிங்" என்றுதான் அழைக்க வேண்டும் என்று பல முறை அறிவுறுத்தப்பட்டேன். வெறும் “திரு” போதாதாம்.

விசித்திரமான ரோபோ குரல் உடன் ‘உரைத் தொகுப்பி’ (Speech Synthesiser) வழியாகப் பேசுவது அவருக்கு அவ்வளவு எளிதல்ல. அனைத்துக் கேள்விகளும் முன்கூட்டியே எழுத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவற்றை மூன்று மாதங்கள் வைத்திருந்தார். இத்தகைய சிறப்பான ஒரு நேர்காணலுக்காக இவ்வளவு காலம் காத்துக் கிடந்தது அவ்வளவு சிறந்த அனுபவம் அல்ல.
உதறல். நான் பதற்றமாக உள்ளேன். இதற்கு முன்பு இப்படி என் உள்ளங்கையை வியர்க்கச் செய்த நேர்காணல் என்று ஒன்று நினைவே இல்லை. ஆனால் அது ஒரு பெரிய விஷயம் இல்லை. அவரால் என்னோடு கைகுலுக்க முடியாது என்பதைவிட.

‘அனைத்துக்குமான கோட்பாட்டு’க்கான தேடல்
இன்று, இயற்பியல் இரண்டு பொருந்தாத உலகங்களாகப் பிரிந்து கிடக்கிறது. ஒன்று, புவியீர்ப்பு மற்றும் சார்பியல் கோட்பாடுகள். இவை, வானியல் அளவு மற்றும் நம் அன்றாட வாழ்வில் உள்ள உறவுகளை விளக்குகின்றன. பெரு வெடிப்பு முதல் இன்று வரையான பெரும்பாலானவற்றை இவற்றால் விளக்க முடியும்.

ஆனால் அவை ஒரு மர்மத்தை விட்டுச் செல்கின்றன: பெரு வெடிப்புக்கு முன்பும் பின்பும் என்ன நடந்தது? புகழ்பெற்ற நம் இயற்கை விதிகள் யாவும் இதை விளக்க முடியாமல்தான் நொறுங்கி விழுகின்றன. விந்தைமிகு ‘குவிய இயற்பியல்’, பெரு வெடிப்பைச் சுற்றியுள்ள மர்மத்தை விலக்கும் வகையில் ஒரு புரிதல் ஒளி அடிக்கலாம். ஆனால் குவிய இயற்பியல் உலகம், புவியீர்ப்புக் கோட்பாடுகளோடு பொருந்திப் போகவில்லை.

இன்னொன்று குவிய இயற்பியல். இதில், இரண்டு துகள்கள் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்தபோதிலும், ஒரு இரட்டை வாழ்வில் தற்செயலாக ஒன்றுபடலாம். குவிய இயற்பியலில், தொலைப்பெயர்ச்சி (teleportation) சாத்தியமாகிறது, காலப் பயணம் (time travel) இருக்க வாய்ப்புள்ளது, துகள்களுக்கு மட்டுமே என்றாலும் கூட. ‘இடது கைத் துகள்கள்’ (left handed particles) மற்றும் ‘நொறுங்கிய பரிமாணங்கள்’ (crumbled dimensions) போன்ற விசித்திரமான கருத்துகள் நிறைந்துள்ளன. ஆயினும், துகள்களைத் துல்லியமாகவும் முன்கணிக்கும் வகையிலும் அளத்தல் சாத்தியமில்லை.

இந்த இரண்டு உலகங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதேயில்லை. அதுதான் நமக்குத் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது.

ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் உலகின் முன்னணி கருத்தியற்பியலாளர்கள் பலர், இந்த இரண்டு உலகங்களையும் ஒரு மாபெரும் ‘குவிய ஈர்ப்புக் கோட்பாட்டிற்குள்’ (a great quantum gravitation theory) இணைக்க முயல்கின்றனர். இது எளிதானது அல்ல, ஆனால் ஹாக்கிங் மற்றவர்களைவிடக் கெட்டிக்காரர். தன் தோழர்களைப் போலன்றி, பெரும்பாலும், அவரால் அவரது கணக்கீடுகளை நிறைவேற்றிக் காட்ட முடியும், காட்ட வேண்டும்.

உங்களுக்கும் எனக்கும் விளக்குதல்

கருத்தியற்பியல் என்பது நம்மில் பெரும்பாலானவர்கள் சறுக்கும் ஒரு கருத்தாக்கம். புரிந்து கொள்ளக் கடினமானது. ஆகையால், மென்மேலும் பலவீனமாகிக் கொண்டிருக்கும் நம் பேராசிரியரால், ‘காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ (1988) என்ற நூலைப் பத்து மில்லியன் பிரதிகள் விற்க முடிந்தது என்பது சாதாரணப்பட்ட சாதனையல்ல. இந்த நூலில், பிரபஞ்சத்தின் பெரும் தொடர்புகளை விளக்க முயற்சிக்கிறார். ‘காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ உங்களுக்கும் எனக்குமாக எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், சில வாசகர்கள் நூல் முழுவதையும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று என்னால் தைரியமாகச் சொல்ல முடியும்.

இன்னொன்று, நிச்சயமாக, இப்போது உள்ளங்கை வியர்க்கப் பார்வையாளர்களாகக் காத்திருக்கும் பத்திரிகையாளர்கள் நாங்கள் அவரின் மற்ற வாசகர்களைவிட மூடர்களாகத்தான் இருப்போம் என நினைக்கிறேன். நல்ல தாமதம், எதிர்பார்த்தபடி, ஹாக்கிங்கின் உதவியாளர் எங்களை அழைத்துச் செல்ல வருகிறார். மனம் மயக்கும் அழகான மூலை அலுவலகத்தின் உள்ளே, பேராசிரியர் ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரது தலை ஒரு பக்கம் தொங்குகிறது. சதை என்று அவருக்கு எதுவும் இல்லை. நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்பதைப் பற்றிச் சிறிது பதற்றத்தோடு தொடங்குகிறேன். அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. அவரால் பதில் ‘சொல்ல’ முடியாது. அது சக்கர நாற்காலியில் இணைக்கப்பட்டுள்ள கணினித் திரையில் இருந்து குழாய் வழியாகப் ‘போகத்’ துவங்குகிறது. புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள எங்கு உட்கார விரும்புகிறார் என்று கேட்கிறோம். அமைதி. நீண்ட அமைதி.

  • ஸ்டீபன் மற்றும் ஜேன் ஹாக்கிங் திருமணம் செய்துகொண்டபோது, ​​அவர் வாழ இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதாக நம்பினர் அவர்கள் இருவரும். மாறாக, அது ஒரு நீண்ட திருமணத்தின் துவக்கமாக மாறியது: ‘த தியரி ஆஃப் எவ்ரிதிங்’ (The Theory of Everything) திரைப்படம் அவர்களின் கதையைக் கூறுகிறது.

ஒவ்வொரு வாக்கியத்திற்கும் மூன்று நிமிடங்கள் செலவழிக்கும் ஒரு நபருடன் ஓர் உரையாடல் நடத்துவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் புரியும் என நினைக்கிறேன். மூன்று நிமிடங்களுக்குப் பின்:

“நீங்களே சொல்லுங்கள். மேசைக்கு முன்னாலோ பின்னாலோ உட்கார்ந்து கொள்கிறேன்.”

குரல் தெளிவாக இருக்கிறது, ஆனால் பழைய அறிவியல் புனைகதைத் திரைப்படங்களில் ரோபோக்கள் பேசுவது போல உலோகக் குரலில் இருக்கிறது.

கேள்விகளை ஏன் நீண்ட காலம் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும் என்பதை இப்போது புரிந்துகொள்ளத் தொடங்குகிறேன். நாம் எழுப்பியுள்ள பத்துக் கேள்விகளுக்கும் பதில்களைத் தயாரிக்க அவருக்குப் பல மணிநேரங்கள் ஆகியிருக்கும்.
அவர் எழுதுவதற்கும் பேசுவதைப் போல நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார். அப்படியிருக்கையில் முழு நூலையும் எழுதுவது எவ்வளவு கடினமாக இருந்திருக்க வேண்டும்! அதைக் கற்பனை செய்யவே கடினமாக இருக்கிறது நமக்கு. இந்த நிலையில், இவ்வளவு சிரமப்பட்டு, ‘காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ எழுதும் வேலையை ஏன்தான் மேற்கொண்டாரோ? அதானே, ஏன்? எதற்காக?

“வரலாற்றுச் சுருக்கம்… நிறைய ஆர்வத்தை எழுப்பியது, ஆனால் பலர் அதைப் புரிந்துகொள்வது கடினம் என்று நினைத்தனர். எனவே, பின்பற்ற எளிதாக இருக்கும் வகையில் ஒரு புதிய பதிப்பு எழுத முடிவு செய்தேன். இயற்பியலில் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய வளர்ச்சியில் இருந்து சில புதியவற்றைச் சேர்க்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினேன், மேலும் புரிந்துகொள்ளக் கடினமான சில தொழில்நுட்ப விஷயங்களையும் நீக்கிவிட்டேன். இதன் விளைவு, சற்றுச் சிறிய - ஆனால் அணுக வசதியான ஒரு நூல். ‘வரலாற்றுச் சுருக்கம்’ படிப்பதில் சிரமம் கண்ட மக்கள்… ‘இன்னும் சுருக்கமான ஒன்று’ (A Briefer) என்ற இந்த நூலைப் படிக்க முயற்சிப்பார்கள்; இன்ப வியப்படைவார்கள் என்று நம்புகிறேன்,” என்றது உலோகக் குரல்.

ஓ, அப்படியானால் மற்ற வாசகர்களும் அனைத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லையா? கேட்கவே இனிமையாக இருக்கிறது.

பரப்புதலில் மும்முரம்
தன் கன்னத்தைத் தூக்கியும் கண்சிமிட்டியும் ஒவ்வொரு கேள்விக்கும் முன்கூட்டியே தயார்செய்து வைத்திருந்த தன் பதில்களை அந்த இயந்திரத்துக்கு அனுப்புகிறார். ஒரு சிறிய அகச்சிவப்பு உணர்வி சைகைகளைப் பொறுக்குகிறது. இப்படியாக அவர் சொல்ல முயலும் சொல் ஒவ்வொன்றையும் எதுவென்று உணர்ந்து அதுவே முன்மொழியும் கணினி ஒன்றை வைத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக, அவரால் ஆன்லைனில் படிக்க முடியும், மின்னஞ்சல், நூல்கள் மற்றும் விரிவுரைகளை எழுத முடியும். உரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார், சிம்ப்சன்ஸ் தொலைகாட்சித் தொடரில் ஒரு தொகுதியில் பங்கு பெற்றார், ‘ஸ்டார் ட்ரெக்’ தொடரில் இருந்தார், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கைச் சந்தித்துள்ளார். அவரும் ஸ்பீல்பெர்க்கும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம் பேரக்குழந்தைகளின் படங்களுக்கு அருகில் நிற்கிறது.

ஸ்டீபன் ஹாக்கிங், தன் தோழர்கள் எவரையும் விட அறிவியலைப் பரப்புவதில் பரந்த ஈடுபாடும் அக்கறையும் கொண்டுள்ளார். என்ன, அதற்குத் தேவைப்படும் நேரந்தான் நீண்டதாக - மிக நீண்டதாக இருக்கிறது. ஆனால் அவர் ஏன் இப்படித் தன் அளவான நேரத்தை பெரும்பாலானவர்களுக்குப் பெரிதும் பயன்படாததான இந்தக் கருத்தியற்பியல் கற்பிப்பதில் செலவிடுகிறார்?

“இந்தப் பெரும் பிரபஞ்சத்தில் நம் இடம் எது என்பதை அறிவதில் நம் எல்லோருக்குமே ஆர்வம் இருக்கிறது. நாம் ஏன் இங்கே இருக்கிறோம், எங்கிருந்து வந்தோம் என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறோம். இந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கான சிறந்த விளக்கத்தை இயற்பியல் வழங்குகிறது. இந்தப் பாடத்தில் தாம் கற்பிக்கப்படும் விதம் காரணமாக, இயற்பியல் தொடர்பான தம் தைரியத்தைப் பலர் பள்ளியிலேயே இழந்துவிட்டனர். கணிதம் இல்லாமலே மிக முக்கியமான கருத்துக்களை எளிமையான கருத்துக்களால் விளக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். நாம் எந்த முன்னேற்றத்திற்காக உழைக்கிறோமோ அதற்கான உற்சாகத்தை மக்கள் புரிந்து கொள்வதும் பகிர்ந்து கொள்வதும் முக்கியம். அதுவே நம் மற்ற கவலைகள் அனைத்தையும் சரியான இடத்தில் வைத்துவிடும்.”

அலுப்பூட்டும் ஆய்வுகள்
தன் ஆய்வுகள் கொடுத்த சலிப்பைத் தானே அனுபவித்தவர் என்பதாலேயே, இயற்பியல் எவ்வளவு சலிப்பானதாக இருக்க முடியும் என்பது பற்றிய தெளிவான புரிதல் கொண்டிருக்கிறார் ஹாக்கிங்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முனைவர் படிப்புக்குச் சேர்வதற்கு முன்னர், ஆக்ஸ்ஃபோர்டில் நடைபெற்ற அனைத்து இயற்பியல் ஆய்வுகளிலும் ஒரு நாளில் பாதி கூட அவரால் அதற்காகச் செலவிட முடியவில்லை. 24 வயதில் படிப்பை முடித்தார். 20 ஆண்டுகட்கும் மேலாக, ஐசக் நியூட்டன் அவரது காலத்தில் வகித்த அதே மதிப்புமிக்க பேராசிரியர் பொறுப்பிலேயே இவரும் இருந்தார். இப்போது தன் அறிவியல் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பது பற்றி முழு நம்பிக்கையோடு இருக்கிறார்.

"உங்கள் வாழ்நாளில் ‘அனைத்துக்குமான இறுதி ஐக்கியக் கோட்பாட்டை’ அடையும் நம்பிக்கை இருப்பதாக இந்தப் புதிய நூலில் கூறுகிறீர்கள். இதற்கு முன்பும் நாம் இறுதி விடையை அடைந்துவிட்டோம் என்று தவறாக நம்பியிருக்கிறோம் எனும் போது, இது எப்படி சாத்தியம் என்று நினைக்கிறீர்கள்?

"கருந்துளைகளில் அல்லது மிக இளம் பிரபஞ்சத்தில் போன்ற தீவிர சூழல்கள் தவிர்த்து மற்ற எல்லாச் சூழல்களிலும் எதற்கு என்னென்ன விதிகள் பொருத்தமானவை என்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறோம். மேலும் தொடர, மிகக் குறுகிய தொலைவுகளுக்கான விதிகளைக் கண்டறிய வேண்டும். அத்தகைய விதிக்கான ஒரே சாத்தியம்: எம்-கோட்பாடு. பிரச்சனை என்னவென்றால், எம்-கோட்பாட்டை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான். ஆனால் அதற்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்,” என்கிறது இயந்திரம்.

அவர் உண்மையிலேயே பெரிய்ய பெரிய்ய கேள்விகளுக்கான விடைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார் என்பதை வலியுறுத்தும் விதமாக, இந்தப் புதிய நூலில் கடவுளையும் முடிவின்மையையும் மாபெரும் அற்புதங்களையும் பற்றிப் பேசுவதற்கு நிறைய ஆற்றலைப் பயன்படுத்துகிறார்.

நிறையப் பேர் இவற்றை அறிவியலாக அல்லாமல் தனிப்பட்ட நம்பிக்கையின் கீழ் கொண்டுவந்துவிடுகிறார்கள். ஹாக்கிங், இவை அறிவியல் கேள்விகள் என்று கருதுகிறார், இதில் கடவுளின் பாத்திரம் என்ன என்பது பற்றித் தெளிவான புரிதல் கொண்டுள்ளார்.

"அறிவியலின் அடிப்படைக் கருதுகோள் அறிவியல் நியதிவாதம். அதாவது, ஒரு குறிப்பிட்ட வேளையில் அதன் நிலையைப் பொருத்து, அறிவியலின் விதிகளே பிரபஞ்சத்தின் பரிணாமத்தைத் தீர்மானிக்கின்றன, இந்த விதிகள் கடவுளால் கொடுக்கப்பட்டவையாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இந்த விதிகளை உடைத்துப் போட அவர் உடைத்துக்கொண்டு உள்ளே வர முடியாது. அப்படியானால், அவை விதிகளாக இருக்க முடியாது. இது, பிரபஞ்சத்தின் தொடக்க நிலையைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைக் கடவுளுக்குக் கொடுக்கிறது. ஆனாலும் விதிகள் என்று விதிகள் இருக்கின்றன. எனவே கடவுளுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை.

  • ஸ்டீபன் ஹாக்கிங், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏ.எல்.எஸ். (ALS) எனப்படும் அரிய தசை நோயுடன் வாழ்ந்தார்: ஸ்டீபன் ஹாக்கிங் பேச உதவும் மென்பொருள் இப்போது இலவசமாகி உள்ளது 

பிரபஞ்சம் எப்போதும் இருந்திருக்கலாம் என்று நம்புங்கள்
சில ஆண்டுகள் முன்புவரை, பெரு வெடிப்போடு தொடர்புடைய அனைத்து இயற்கை விதிகளும் சரிந்து விழும் என்று ‘பெரு வெடிப்புக்’ கோட்பாடு கணித்ததாக நம்பினர். பெரு வெடிப்புக்கு முன்பு எல்லாமே முற்றிலும் கணிக்க முடியாதவையாக இருந்ததால், இந்தச் சரிவு கடவுளுக்கு ஒரு தெளிவான பாத்திரத்தை விட்டுச் சென்றது.

இவை எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டுக் கடவுள் விதிகளை வடிவமைத்திருக்க முடியும். பல இயற்பியலாளர்கள் மத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பது ஒன்றும் பெரும் வியப்பில்லை. மின்னணுவியின் (electronica) திடச் செறிவு சிறிது வேறுபட்டிருந்தால், விண்மீன்கள் எரியாது, உயிர் இராது என்று கணக்கீடுகள் காட்டுகின்றன.

பெரு வெடிப்புக்கு கோட்பாடு முதலில் சொன்னது போல, மெதுவாக அல்ல, மென்மேலும் வேகமாகப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்பதைத் தொலைதூர விண்மீன் மண்டலங்களின் புதிய அளவீடுகள் குறிக்கின்றன. இதன் பொருள் பிரபஞ்சம் எப்போதும் இருந்திருக்கிறது என்பதே என்று ஹாக்கிங் நம்புகிறார் இப்போது.

பெரு வெடிப்புக்கு முன்பு என்ன வந்தது என்ற கேள்வி, வடதுருவத்துக்கு வடக்கே என்ன இருக்கிறது என்ற கேள்வியோடு ஒப்பிடத் தக்கது என்கிறார் அவர். இது எல்லாமே பல்வேறு விஷயங்களைச் சார்ந்தவை. மேலும், பிரபஞ்சத்தின் வயது என்பது பூமியின் மேற்பரப்பைப் போன்றது. இந்த பிரபஞ்சம் வெளிப்புறக் காரணி மூலமாக ஒருபோதும் மாற்றத்துக்கு உள்ளாகாமல் சுதந்திரமாக உள்ளது. இவை அனைத்தும் முன்பை விட இப்போது கடவுள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே ஆக்குகின்றன. எப்படியிருந்தாலும் பிரபஞ்சத்தில் அவருக்கு வேலையில்லை. கடவுள் படைப்பாளர் அல்ல என்று ஆகிவிட்டால், அதன்பின்பு அவரைக் கற்பனை செய்வது சாத்தியமா?

“தத்துவஞானிகள் பின்தொடரவில்லை”
சரியான தொலை நோக்குப் பார்வை உடையவர்களுக்கான ஒரு நல்ல செய்தி, எல்லாம் மறைகிற புதியதொரு பெரு வெடிப்புப் புள்ளியில் பிரபஞ்சம் மீண்டும் இணையாது. மாறாக, அது தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். அவ்வளவுதான். இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என நினைக்கிறேன்.

மற்ற பல இயற்பியலாளர்களைப் போலல்லாமல், ஹாக்கிங் ஒரு தத்துவ நிலைக்குச் செல்ல விரும்புகிறார். ஆனால் இன்றைய தத்துவத்தால் அவர் கவனிக்கப்படவில்லை.

“தத்துவஞானிகள் இயற்பியல் மற்றும் உயிரியலில் ஏற்பட்ட நவீன வளர்ச்சியைப் பின்பற்றவில்லை. இதன் விளைவாக, அவர்களது விவாதங்கள் மென்மேலும் காலாவதியாகியும் தொடர்பிழந்தும் வருகின்றன. இது தொடர்ந்து அறிவியலை வெறும் தொழில்நுட்ப விவரங்கள் என்று எழுதி வருவதை நிறுத்தாது. டார்வின், மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) மற்றும் நவீன அண்டவியல் (Modern Cosmology) ஆகியவை நம்மைப் பற்றியும் நமது பிரபஞ்சத்தில் நம் இடத்தைப் பற்றியும் ஓர் அடிப்படை மாற்றத்திற்கு வழிவகுத்தன. தத்துவம் இதைப் பிரதிபலிக்க வேண்டும், இல்லையெனில் அவர்களின் அறிவியல் ஒரு அற்ப வார்த்தை விளையாட்டு என்கிற அளவுக்குக் குறைக்கப்பட்டுவிடும் .

இருப்பினும், பல இயற்பியலாளர்கள் மதநம்பிக்கை உள்ளவர்களாக இருப்பது ஒன்றும் பெரிய மர்மம் அல்ல. ஹீசென்பெர்கின் ‘தேராமைத் தத்துவம்’ (Heisenberg's Uncertainty Relationship) என்கிறார்களே, அது குவிய இயக்கவியலுக்கு (Quantum Mechanism) ஒரு முக்கியமான அடித்தளமாகும். இங்குதான் ஒருவேளை படைப்பாளர் விண்ணப்பிக்க போகிறாரோ?”

"முதல் பார்வையில், அறிவியல் கணிப்புத்தன்மை (Scientific Predictablity) என்ற முழுக் கருத்தையும் ஹீசென்பெர்கின் தேராமைத் தத்துவம் அடித்துப் போடப்படுகிறது. ஒரு துகளின் நிலை, திசைவேகம் ஆகிய இரண்டையும் துல்லியமாக அளவிட முடியாது என்பதையே இது காட்டுகிறது. பிரபஞ்சத்தின் நிலையைத் துல்லியமாக அளவிட முடியாவிட்டால், அதன் எதிர்கால வளர்ச்சியை எப்படி அறிவியலால் கணிக்க முடியும்? இந்த நிச்சயமின்மை பிரபஞ்சத்தில் கடவுளின் தலையீட்டை எடுத்துரைக்கிறதா? அப்படியான ஒரு வாதத்தைப் பின்பற்றுவது கடினம் என்று நினைக்கிறேன். காரணம், இந்த நிச்சயமின்மை இப்போது முற்றிலும் சீரற்றதாக உள்ளது. எனவே, நாம் அறிவியல் கணிப்புத்தன்மையை மீண்டும் நாடுகிறோம். இந்தப் புதிய வரையறை மூலம், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிரபஞ்சத்தின் நிலையைப் பொருத்து, பிரபஞ்சத்தின் வளர்ச்சி முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகிறது.

“மிகவும் பாக்கியவான்”
நேர்காணல் முடிவை நெருங்குகிறது. அவருடைய அலுவலகத்தில் ஒரு முக்கிய இடம் வகிக்கும் மர்லின் மன்றோவின் படத்தை எடுத்தார். இந்த 64 வயதுப் பெரியவர் அவரின் பெரிய ரசிகர். தன்னுடைய நூலில் புவியீர்ப்புக் கோட்பாட்டை விளக்க அவரை ஓர் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துகிறார். இருவரையும் ஒரே உயரத்தில் இருந்து விடுவித்தால், தனது மாபெரும் சக்கர நாற்காலியில் இருக்கும் இவரும், மர்லின் விழும் அதே வேகத்திலேதான் கீழே விழுவார்.

பத்து கிலோமீட்டர் தொலைவுள்ள ஒரு தோட்டாவில் பிரபஞ்சத்தின் அனைத்து விண்மீன்களுக்கும் இடம் இருக்கும் என்று வைத்துக் கொண்டால், நாம் வெறும் கண்களால் காணும் விண்மீன்கள் அனைத்தும் ஒரு தேக்கரண்டிக்குள் அடங்கிவிடும்.

இதை நினைத்தாலே கண்ணைக் கட்டுவது எனக்கு மட்டுமல்ல என்று நினைக்கிறேன்.

ஆனால் ஹாக்கிங் மிகக் கனிவானவராகப் படுகிறார். அவரும் அவரது இரண்டு பெண் உதவியாளர்களும் நேர்காணலுக்குப் பின் அருமையான ஆங்கிலத் தேநீர் வழங்குகிறார்கள். அவர் பெருமையுடன் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ள படங்களையும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் சந்தித்ததையும் காட்டுகிறார். சிம்ப்சன் தொடரின் படைப்பாளரான மாட் க்ரோனிங், ஹாக்கிங்குக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்ட அவரைப் போலவே இருக்கும் பொம்மையை அவரிடம் கொடுத்திருக்கிறார்.

"நான் இந்த நோய்க்குள்ளான வகையில் மிகவும் துர்பாக்கியவான் என்றாலும், கிட்டத்தட்ட மற்ற எல்லாவற்றிலும் மிகவும் பாக்கியவானாக இருந்திருக்கிறேன். உடல் ஊனம் ஒரு பெரும் ஊனமாகக் கருதப்படாத கருத்தியற்பியல் துறையில் பணி புரியும் பாக்கியம் பெற்றேன். மேலும், என் புகழ்பெற்ற நூல்கள் வழியாகத் தங்கப் பறவைகள் சுட்டு வீழ்த்தினேன்,” என்கிறார் ஹாக்கிங்.

அவரின் கொடூரமான தசை நோய் ‘அமியோட்ரோபிக் பக்க இறுகல்’ (Amyotrophic Lateral Sclerosis - ALS) மேலும் சக்தி பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர் பிடிவாதமாகப் பிடி கொடுக்க மறுக்கிறார். ஒருவேளை அது அவர் கொண்டிருக்கும் இலக்கின் முக்கியத்துவம் பற்றிய வைராக்கியம் காரணமாக இருக்கலாம்.

இந்த நூலில் அவர் கூறுவது: "ஓர் ஐக்கியக் குவிய ஈர்ப்புக் கோட்பாட்டைக் கண்டுவிட்டால், கடவுளின் நோக்கத்தை அறிந்துகொள்ள முடியும். அதுவே மனிதச் சிந்தனைத் திறனின் இறுதி வெற்றியாக இருக்கும்."

* 2018 ஏப்ரல் கணையாழி இதழில் வெளியானது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி