இராமன் ஆண்டாலும்... இராவணன் ஆண்டாலும்...


விடிந்தால் தமிழ் நாட்டில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆட்டம் போடப் போகிற - வண்டி வண்டியாகக் கொள்ளையடிக்கப் போகிற குடும்பம் (திருக்குவளைக் குடும்பமா? மன்னார்குடிக் குடும்பமா?) எதுவென்று தெரிந்து விடும். இரண்டுமே கொள்ளைக் குடும்பங்கள் என்றபோதும் பல காரணங்களுக்காக ஆட்சி மாற்றம் நிகழ வேண்டுமென்று காது கிழிகிற அளவுக்குச் சங்கு ஊதிய செவிடர்களில் நானும் ஒருவன் (நானே செவிடனாக இருந்து விடுகிறேன்; மக்களைச் செவிடன் என்றால்தான் கோபப் படுவீர்களே!). வெண்ணெய் திரண்டு வந்த நேரம் பானையை உடைத்த ஒட்டு மொத்தத் தமிழகத்தின் அம்மாவின் கூட்டணிக் கோமாளித் தனங்களைப் பார்த்து விட்டு இந்த முறை யார் வென்றாலும் பரவாயில்லை என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும் என்ற அடித்தட்டுக்கும் நடுத்தட்டுக்குமே உரிய கையாலாகாத் தனமான நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டேன். அதன் பிறகு இருவரில் எவர் வெற்றி பற்றிக் கேட்ட போதும் மனம் வெம்பியது; இருவரில் எவர் தோல்வி பற்றிக் கேட்ட போதும் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. இருவருமே தோற்க வேண்டும் என்று விரும்பும் வீணாப்போன சிறுபான்மைக் கூட்டத்தின் ஓர் அங்கத்தினன் நான். இருவர் தோற்பதிலும் சில நன்மைகளும் பல தீமைகளும் இருக்கின்றன. முடிவு தெரிந்த பின்பு அடுத்த ஐந்தாண்டுகள் பற்றிய கற்பனையில் ஏதாவது எழுதலாமென்றிருந்தேன். அதற்கு முன், இருவரில் எவர் வந்தாலும் மகிழ்ச்சிப் பட்டுக் கொள்ள வேண்டியதற்கு - மனதைத் திடப் படுத்திக் கொள்ள வேண்டியதற்கு நிறையக் காரணங்கள் இருப்பதால், அவை பற்றி எழுதலாம் என்றோர் ஆசை. தலா பத்து! அதுவும் நன்றாகத் தான் இருக்கிறது. உண்மை கசக்கிற காலத்திலும் கற்பனை இனிக்கத்தான் செய்கிறது. அதையும் பார்க்கலாம்... ஒருவேளை நான் ஏதாவது முக்கியமான விஷயத்தை விட்டிருந்தால் நினைவு படுத்துங்கள். அதையும் சேர்த்து விடுகிறேன். அதற்கு என் முன்-நன்றிகள்!

தி.மு.க. 'அணி' வென்று ஆட்சி மாற்றம் நிகழாது போனால் நடக்கப் போகும் நல்லவைகள்:

1. இந்த முறையும் இவர்கள் வென்று விட்டால் கண்டிப்பாக அடுத்த முறை வெல்ல முடியாத அளவு கொள்ளை அடித்து விடுவார்கள். நாட்டையே சுடுகாடாக்கி ஒரு பெரும் புரட்சியே நிகழ்த்தும் அளவுக்கு மக்களைப் படுத்தி எடுத்து விடுவார்கள். எல்லாப் பிள்ளைகளும் எல்லாப் பேரப் பிள்ளைகளும் அரசியலுக்கு வந்து விடுவார்கள். எல்லோரையும் மகிழ்ச்சிப் படுத்த வேண்டுமென்றால் தமிழ் நாட்டில் அறுபதுக்கு மேலான மாவட்டங்கள் வேண்டும். மேலவை வேண்டும். பக்கத்து மாநிலங்களிலும் நம் அதிகாரம் பரவ வேண்டும். எல்லாத்துக்கும் ஆவண செய்யப்படும். எல்லாத் தொழில்களும் அவர்களாலேயே கைப்பற்றிச் செய்யப்படும். நமக்குத்தான் அவற்றைச் செய்யும் அடிப்படை அறிவில்லையே. பேசாமல் கொடுப்பதைக் கவ்விக் கொண்டு போகாமல், கொஞ்சம் முகம் சுளித்தாலும் தி.மு.க.வில் எவ்வளவு காலம் இருந்த பெருந்தலையானாலும் தூக்கி வீசப்படுவார்கள். அது சிக்கலாகும் என்றால் நைசாக ஓரங்கட்டப் படுவார்கள். இந்த முறை வாக்குகள் குறைவாக வாங்கிய பகுதிகளில் நுழைந்து அடிதடி அட்டோழியங்கள் செய்வார்கள். அதையெல்லாம் பார்த்து விட்டு, அப்படியாவது நம் மக்களுக்குக் கொஞ்சம் மண்டையில் ஏறுமென்றால் அதற்காகவாவது இம்முறை அவர்கள் வெல்லட்டும் என்றோர் ஆசைதான்.

2. நண்பனையும் எதிரியையும் ஒரே மாதிரி நடத்தும் சீமாட்டியின் கடைசி நிமிடக் கழுத்தறுக்கும் வேலைகள் அரசியல்த் துணிச்சலுக்கு இலக்கணம் என்று அவருடைய ரசிகர்கள் - இனத்தவர்கள் - தோழியின் இனத்தவர்கள் யாரும் நியாயம் பேச மாட்டார்கள். எவரும் இனியொரு முறை இப்படிச் செய்யும் முன் குறைந்த பட்சம் இரண்டு முறை யோசிப்பார்கள். 'உன் வேலையைச் செய்வாயோ இல்லையோ - உண்மையில் கூட நல்ல மனிதனோ இல்லையோ - வெளியிலாவது மனிதரை மனிதராய் மதிக்கும் நல்லவன் போல் நடிக்க வேண்டும்; சபை நாகரீகம் காக்க வேண்டும்' என்று சக மனிதரை மதியாமைக்கு முடிவு கட்டும் பாடம் ஒன்று புகட்டப்படும் உலக மகாத் தலைவிக்கு. இத்தனையையும் செய்து விட்டு ஒருவர் வெல்ல முடியுமென்றால் அதையெல்லாம் மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று நிறையப் பேர் ஆய்வறிக்கை வாசிப்பார்கள். அது நடக்கக் கூடாது தானே!

3. எவ்வளவு பெரிய கொள்ளைக்காரனாக இருந்தாலும், சும்மா இருந்தாலும் ஏதாவதொரு கடிதமோ கதையோ எழுதிக் கொண்டு இருந்தாலும் - மக்களோடு மக்களாக அவர்கள் இருக்கும் இடத்தில் இருப்பது அரசியல்வாதிக்கு ஒரு முக்கியத் தேவை என்று, வென்றால் மட்டும் நின்று பேசும் தோற்று விட்டால் தொலைந்து போகும் தலைவிக்கு உணர்த்தப்படும். அதன் பிறகும் அவர் தொலைந்து தான் போவார். ஏனென்றால் அதன் பிறகு அவருக்கு நிரந்தரமாகவே சென்னையில் வேலையில்லாமல் போய்விடும் என்பது உறுதி. அவர்களோடு இருந்து கொண்டு அவர்களை ஏமாற்றும் வித்தைகளைக் கற்றுத் தேர்ந்து கழுத்தறுப்பதை விட எங்கோ இருந்து விட்டு வந்து வாய்ப்புக் கிடைக்கும் போது இயன்றதைச் செய்வது பரவாயில்லைதான் என்றாலும் சராசரி மனிதனின் வாழ்க்கை முறையைச் சற்றும் அறியாத ஒருவர் எப்படி அவர்களின் தலைவராக முடியும் என்பதும் இடிக்கத்தான் செய்கிறது. ஏமாற்றுக்குக் கூட எம்மைப் போல வாழ்ந்து காட்டத் தெரியாதவர் எமக்குத் தலைமை ஏற்பதில் நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. அதனால், இந்தப் பாடமும் அடுத்து வருபவர்களுக்காவது பயன்படும் என்பதால் நல்லதே.

4. நல்லவர்களோ கெட்டவர்களோ அரசியல் - அரசாங்கம் என்றால் என்ன என்கிற அடிப்படையான சில விபரங்கள் தெரிந்த - அனுபவம் மிக்க ஓர் அமைச்சரவை அமையும். பொத்துப் பொத்தெனக் காலில் விழுவது தவிர வேறுதுவும் தெரியாத மூடர்கள் கூடி நடத்தும் அரசாங்கமாக அது இராது. கொள்ளையோடு கொள்ளையாக சில மக்கள் நலப் பணிகளும் நடக்கும். பணி செய்வது ஒன்றுதான் தொடர்ந்து கொள்ளையடிக்கும் பணியைத் தொடர புத்திசாலித் தனமான வழி என்பதை அறிந்த பெரியோர் நிறைந்த கூட்டம் இது. சாலை அமைப்பார்கள், பாலம் கட்டுவார்கள், தண்ணீர்க் குழாய் கொண்டு வருவார்கள், பள்ளிகளும் கல்லூரிகளும் திறப்பார்கள், மற்றும் பல வசதிகள் செய்து கொடுப்பார்கள். மின்சாரம் மட்டும்தான் ஒழுங்காகக் கிடைக்க ஏற்பாடு செய்ய மாட்டார்கள்.

5. காங்கிரஸ் என்னதான் பண்ணக் காத்திருக்கிறது என்று யாருக்கும் தெரிய வில்லை. ஈழப் பிரச்சனைக்குப் பின் அந்தக் கட்சி எனக்கு அவ்வளவாகப் பிடிக்க வில்லை. ஆனால், அவர்களே தி.மு.க.வையோ அ.தி.மு.க.வையோ கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வேலையைச் செய்தால் அவர்களை எனக்குப் பிடிக்கத்தான் செய்கிறது. கூட்டணி ஆட்சி அமைந்தால் முன்பு போல் சொரணை கெட்ட வெண்ணெய்யாக இராமல் தனக்குச் செய்த எல்லாத்தையும் தன் நண்பனுக்குச் செய்ய முயல்வார்கள் இம்முறை. ராகுல் இவர்களை அவ்வளவு எளிதில் தப்பிக்க விடுகிற ஆள் மாதிரித் தெரிய வில்லை. நான் ஆசைப்படுவது போல விட்டுக் குடை குடை என்று குடைந்தால் காணக் கண் ஆயிரம் வேண்டும் என்று விண்ணப்பிப்பேன். ஆனால், கொடுமை என்னவென்றால் அதற்கு காங்கிரஸ் பத்துத் தொகுதிகளாவது வெல்ல வேண்டும். துணை முதல்வராக ஆசைப்பட்ட - தி.மு.க.வும் இல்லாமல் காங்கிரசும் இல்லாமல் இரண்டும் இல்லாத எதுவோ போல வாழும் வெங்கபாலு போன்றவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும். அதற்கு குலாம் நபி ஆசாத் ஒத்துக் கொள்ள வேண்டும். மொத்தக் கட்சியில் யாராவட்து ஒரே ஒருவரைக் காக்கா பிடித்தால் போதும்; பிழைப்பு ஓடி விடும் என்றால் அது காங்கிரஸ் கட்சியாக மட்டும்தான் இருக்க முடியும். புதிதாக வருபவர்களுக்குப் பொருத்தமான கட்சி!

6. இவர்களைப் பற்றி எல்லாம் தெரிந்தும் தன்மானம் சிறிதும் இழக்காமல் அரசியலில் இருக்க ஒரே வழி என்றுணர்ந்து வேறு வழியில்லாமல் இவர்களோடு இருக்கும் நல்லவர் திருமாவளவன் போன்றோருக்கு இது நன்மை பயக்கும். இன்னும் கொஞ்சம் அவமானங்களைத் தாங்கிக் கொண்டு அப்படியே வைகோவும் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இவர்களுடைய வெற்றியில் வைகோவுக்கும் கூட ஓரளவு எதிர்காலம் பரவாயில்லாமல் இருக்க வழியுண்டாகும். திரும்பவும் அவர்களிடம் போய் ஏமாறாமல் இருக்க வேண்டியது இவர் பொறுப்பு.

7. சிவாஜி கணேசனுக்குப் பிறகு தமிழகம் கண்ட பெரும் கலைஞன் வைகைப்புயல் வடிவேலுவின் வாழ்க்கை கொஞ்சம் பிழைக்க'லாம்'. இல்லையேல், இதிலிருந்து அவருடைய இறங்கு முகம் தொடங்குகிறது என்று உறுதியாகச் சொல்லலாம். விஜயகாந்த் மூனா கானாவைத் தரம் தாழ்ந்து விமர்சித்தபோது எனக்கு விஜயகாந்தைப் பிடித்தது. தரம் தாழ்ந்த அரசியலை விட தரம் தாழ்ந்த விமர்சனம் தப்பில்லை என்று எண்ணுபவன் நான். தி.மு.க. அனுதாபிகளே சிலர் வடிவேலு மிகவும் தரம் தாழ்ந்து போகிறார் என்று சொன்னது போது கூட எனக்குக் கோபம் வரவில்லை. ஏனென்றால், கேப்டன் பற்றியும் வெளியில் சொல்ல வேண்டிய சங்கதிகள் நிறைய இருந்தன. அதை அவர் வெளியே கொண்டு வந்தார். சில மிகைப் படுத்தப் பட்டவை. வேட்பாளரை அடித்த கதை அப்படி ஒன்றுதான். கேப்டனைக் கேவலப் படுத்துகிறார் என்ற மகிழ்ச்சியை விட அவர் சில பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வழி பண்ணுகிறார் என்ற மகிழ்ச்சிதான் அதிகம். ஆனாலும், வடிவேலுவின் எதிர் காலத்தை நினைத்த போது கவலையாகத்தான் இருந்தது. இந்த அணி தோற்றால் அவருக்குக் கண்டிப்பாகப் பிரச்சனைதான். சொந்தப் பிரச்சனைக்காகத்தான் காலத்தில் இறங்கினார். கேப்டனின் இடத்தில் வாத்தியார் இருந்திருந்தால் (இவரும் கறுப்பு வாத்தியார் என்று சொல்லிக் கொள்கிறாரே ஒழிய அவருடைய வாழ்க்கை முறையை முழுமையாக இவரும் கடைப் பிடிக்கிறாரா என்று தெரிய வில்லை!) வடிவேலுவை அவருடைய ஆதரவாளராக ஆக்கியிருப்பார். இந்தப் பிரச்சனையில் அதையும் தான் உணர வேண்டும் கேப்டன் என்று சொல்லிக் கொள்பவர்.

8. ஒரு தேர்தல் என்பது எவ்வளவு விரயங்கள் நிறைந்தது என்பதை நன்றறிவேன். ஆயினும், இந்தத் தேர்தலுக்குப் பின் எல்லாமே மாறிவிடும் என்ற நம்பிக்கை இல்லாததால், வரும் ஆட்சி தொடர்வதில் உண்டாகும் செலவை விட ஒரு தேர்தல் நடத்துவதில் ஏற்படும் செலவு குறைவாகத்தான் இருக்கும் என்று எண்ணுவதால், இடையில் ஒரு தேர்தல் வந்தாலும் நன்றே என எண்ணுகிறேன். தி.மு.க. அணி வென்றால் அது நடக்க வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.க. அணி வென்றாலும் அது நடக்கலாம். தி.மு.க. தலைவரின் வயதை மனதில் கொண்டு இதைச் சொல்கிறேன். தி.மு.க. அணி வென்றால் அதற்கான வாய்ப்பு அதிகம். இத்தனைக்கும் பிறகும் இந்த இடையில் வரும் தேர்தலில் நம் மண்ணில் புரட்சி நடந்து விடும் என்று எதிர் பார்ப்பது கோமாளித்தனம். ஆனாலும், அதற்கொரு வாய்ப்பிருக்கிறது. எனவே, அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையென்ற போதும், இவர்கள் வென்று நாம் நினைத்துப் பார்க்க முடியாத படி ஓர் உட்கட்சிப் பூசல் உண்டாகி, அதனால் இன்னொரு தேர்தல் வருமானால் அது நமக்கொரு வரப்பிரசாதமாக அமையும். அதை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நம் கையிலும் தலையிலும் இருக்கிறது. இந்த விரயமாவது ஒரு முறை நிகழ்வது. மாநாடு நடத்துகிறேன் என்று சொல்லி ஒரு பேயாட்டம் போடுகிறார்களே அதுதான் மிகப்பெரிய விரயம். பெங்களூரை விட்டு வெளியேறி, தமிழ் நாட்டின் எந்தப் பகுதிக்குப் போனாலும் அந்த ஊரில் தலைவர் வருகிறார் - தளபதி வருகிறார் என்று கோடிக் கணக்கான பணத்தைக் கொட்டி பயங்கர படாபடோபமாக விழாக்கள் எடுக்கிறார்கள். ஓசியில் மின்சாரம் இழுத்து அடிக்கு ஒன்றாக ஊர் முழுக்க ஆயிரக் கணக்கான மின் விளக்குகள் - ஆயிரக் கணக்கான கொடிகள் மற்றும் தோரணங்கள் கட்டி அநியாயம் பண்ணுகிறார்கள்.இந்த ஐந்து வருடம் மட்டும் கட்சியில் இருக்கும் அல்லக்கைகள் எல்லாம் அங்கங்கே போக்குவரத்துக் காவல்த்துறையின் பணியைச் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். தெருவில் பெற்றுப் போட்டது போல, "ஏய்... ஓய்..." என்று கத்துவதும் பாதைகளை அடைத்துக் கொள்வதும்... அப்பப்பா! இதெல்லாம் தொடரும். இதற்கு வரும் பணம் முழுவதும் மக்கள் பணம். ஒன்று ஆட்சியில் அடித்த கொள்ளை அல்லது தொழில் செய்வோரை மிரட்டிப் பிடுங்கியது. இந்தக் கொள்ளையும் பிடுங்கல்களும் கூடுதல் வீச்சோடு தொடரும். சொல்லுங்கள் - தொடர வேண்டுமா இதெல்லாம்? இது மட்டுமில்லை, கோடிக் கணக்கில் காசைக் கொட்டி கூட்டத்தைக் கூட்டி ஊரில் இருக்கிற எல்லோரையும் வரவழைத்துப் "புகழ்... புகழ்..." என்று மிரட்டிப் புகழ வைப்பது ஒரு பிழைப்பா? இதுக்கு... எங்க ஊறிப் பேச்சில் சொன்னால் நிரம்பக் கேவலமாக இருக்கும்... அப்படிப் பிழைக்கலாம். இதுவும் தொடரும். தொடரட்டுமா?

9. தி.மு.க.வும் அ.தி.மு.க. போலவே எல்லா மூடப் பழக்கங்களையும் முழு மூச்சாகப் பண்ணப் பழகி வருகிறது என்றாலும் அ.தி.மு.க.வை விட தி.மு.க. திராவிடக் கொள்கைகளைக் கொஞ்சம் கூடுதலாகக் காப்பாற்றக் கூடிய கட்சி என்பதில் ஐயமில்லை. பெரியார் தொடங்கிய இயக்கத்தின் எச்சமாக ஓரளவு உயிரோடிருக்கும் அரசியல்ப் பிரிவுகளில் முதன்மையானது தி.மு.க.தான். அந்தக் கருத்துகள் கொஞ்சமாவது அவர் பிறந்த நாளன்றாவது நினைவு படுத்தப் பட வேண்டுமென்றால் தி.மு.க. உயிரோடிருக்க வேண்டும். அந்தப் பணியை இந்த வெற்றி செய்யக் கூடும்.

10. இறுதியாக, மிகவும் நேர்மறையாக மண்டையை உடைத்ததில் கிடைத்த ஒரு நல்லது - 'கடந்த ஐந்தாண்டுகளில் அடிக்க வேண்டிய அளவுக்கு அடித்தாயிற்று; அடுத்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கு (அதாவது நாட்டு மக்களுக்கு) ஏதாவது செய்வோமே!' என்று தப்பித் தவறி ஒரு முடிவு எடுத்து விட்டால் நமக்கு நல்லதுதானே! ஆனாலும் எனக்கு நிரம்பப் பேராசை என்கிறீர்களா?!

தி.மு.க. 'அணி' வென்று ஆட்சி மாற்றம் நிகழாது போனால் நடக்கப் போகும் அல்லவைகள்:

1. உலகளாவியக் கொள்ளைகள் தொடரும். அதையும் சரியென்றோ - அப்படியொன்று நடக்கவே இல்லை என்றோ - "நீ நேரில் பார்த்தாயா கொள்ளையடித்ததை? இல்லைன்னா, பொத்திக்கிட்டுப் போ! எதுவும் பேசக்கூடாது!" என்றோ பேசும் கூட்டம் இன்னும் கொஞ்சம் சத்தமாகப் பேச ஆரம்பிக்கும். அந்தக் கூட்டம் சினிமாவுக்கு மயங்கி எம்.ஜி.ஆரிடம் ஏமாந்த கூட்டம் போல தமிழுக்கு மயங்கி இந்தத் தன்மானத் தலைவரிடம் ஏமாந்த கூட்டமாகவோ - தன் வீட்டில் ஒருத்தர் அரசு ஊழியராக இருந்து, நினைத்த போதெல்லாம் அள்ளிக் கொடுத்த அவருடைய நல்ல உள்ளத்துக்காக அவர் என்ன செய்தாலும் நியாயப் படுத்தும் நன்றியுணர்வு கொண்ட நல்லோர் கூட்டமாகவோ - அடிக்கப் பட்ட கொள்ளையில் ஏதோவொரு ரூபத்தில் கொஞ்சம் மறைமுகப் பங்கு பெற்ற அல்லக்கை கூட்டமாகவோ இருக்கும்.

2. நியாயமோ அநியாயமோ அரசு ஊழியர்கள் ஒன்று கூடி எது கேட்டாலும் அதை மரியாதையாகக் கொடுத்து விடுவதுதான் நல்லது என்றோர் எண்ணம் ஆட்சியாளர்களிடம் உருவாகும். பெரும்பான்மை மக்களின் நலனுக்காகக் கூடச் சிறுபான்மை அரசு ஊழியர்களைத் தட்டிக் கேள்வி கேட்கும் தைரியம் ஆள்வோருக்கு இல்லாமல் போய் விடும். கொடுமை என்னவென்றால், யார் நலனுக்காக அவர்களைப் பகைக்க நேர்ந்ததோ அவர்களும் சேர்ந்தே பகைத்தவரை வெறுப்பார்கள். அல்லது பாதிக்கப் பட்டவர்கள் அப்படியொரு பிம்பத்தை எளிதாக எல்லோரிடமும் உருவாக்கி விடுவார்கள்.

3. என்ன வேண்டுமானாலும் செய்து விட்டுக் கடைசியில் கொஞ்சம் எலும்புத் துண்டுகளை வீசி எறிந்தால் வாலை ஆட்டிக் கொண்டு வந்து விடுவார்கள் என்ற கேவலமான அரசியல் முன்னுதாரணம் உருவாக்கி விடும். இதுவே தேர்தல் ஆணையத்துக்கு கண்காணிப்பு முதலான பல மற்ற மாநிலங்களில் தேவையில்லாத வேலைகளுக்காக மித மிஞ்சிய விரயங்களை உண்டு பண்ணும். கூடுதலாக, என்னைப் போன்ற வெளி மாநிலங்களில் இருப்போருக்கு, "காசுக்கும் இலவசங்களுக்கும் ஓட்டுப் போடும் பிச்சைக்காரக் கூட்டம்" என்று திட்டுவோரிடம், சண்டை போடக் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கும்.

4. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பேரன், பேத்தி, ஒன்னு விட்ட - ரெண்டு விட்ட சொந்தக்காரன் எல்லோரும் மாவட்டச் செயலாளர்களாகவும் மந்திரிகளாகவும் ஆகி விடுவார்கள். குடும்ப அரசியல் பற்றி விமர்சிப்பவர் எவரானாலும், "யார்யா குடும்ப அரசியல் பண்ணல?" என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறும் அளவுக்கு நம் அரசியல்ப் பண்பாடு துர்நாற்றம் பிடித்து விடும். இடது சாரிகளும் பா.ஜ.க.வும் கூட இந்தப் பண்பாட்டைப் பற்றிக் கொண்டால்தான் தமிழக அரசியலில் உயிரோடிருக்க முடியும் என்கிற அளவுக்கு நாறிப் போகும் நிலைமை. "அவர் மகனை - மகளை - மருமகனைக் கொண்டு வந்தால் உனக்கென்ன வலிக்குது? உங்கப்பனை மாதிரி ஒன்னுக்குமற்றவனுக்குப் பிறந்தா இப்பிடித்தான் பேசிக்கிட்டு இருக்கணும்!" என்று செயல் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நிறையக் கேட்க வேண்டியாகி விடும்.

5. ஈழ விவகாரத்துக்கும் தமிழக அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எல்லோருமே ஒருமனதாக உள் மனதில் தீர்மானம் போட்டு அது பற்றிப் பேசவோ எழுதவோ நினைக்கவோ கூட வக்கில்லாமல் போய் விடுவார்கள். இன்னும் கொஞ்சம் பேர், "ஆமாம்; நான் இராஜபக்சேவின் நண்பன்தான்; உன்னால் என்ன முடியுமோ செய்து கொள்" என்று துணிந்து பேச ஆரம்பித்து விடுவார்கள். இராஜபக்சேவைத் திட்டினால் தமிழ்நாட்டில் அரசியல் பண்ண முடியாமல் போய்விடும் அபாயம் கூட நிகழலாம். தைப் பொங்கல் விழாக்களுக்குக் கூட இராஜபக்சே சிறப்பு விருந்தினராக அழைக்கப் படலாம். வந்து பொங்கலையும் தின்று விட்டுப் போய், அங்கே அவன் "எனக்குத் தமிழ் நாட்டில் உரிய மரியாதை கொடுக்கப் படவில்லை" என்று சொல்லி இன்னும் கொஞ்சம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கலாம்.

6. சினிமா தொடங்கி மளிகைக் கடை வரை எல்லாத் தொழில்களும் அறுபத்தைந்து பேர் கொண்ட பெரிய குடும்பத்தின் கையில் போய் விடும். மற்றவர்கள், அவர்கள் சொல்லும் நேரங்களில்தான் கடையைத் திறக்க வேண்டும்; அவர்கள் சொல்லும் முன் கடையை மூடி விட வேண்டும்; அவர்கள் சொல்லும் சரக்குகள்தான் விற்க வேண்டும்; சொல்லாத சரக்குகளை விற்றால் சொன்னதையும் செய்வார்கள் - சொல்லாததையும் செய்வார்கள். மாதாமாதம் பாராட்டு விழா வைத்து தள்ளாத வயதில் உள்ள தலைவரைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்தால்தான் சினிமாக்காரர்கள் வீட்டில் அடுப்பு எரியும். இல்லையேல், அடுப்பு வீட்டை விட்டே வெளியே எறியப்படும்.

7. பல நகரங்களில் ஒரு கோடிக்கு மேல் மதிப்புள்ள இடம் மற்றும் வீடு வாங்குவோர் இப்போது தரகருக்கும் அதே வேலையை வேறு இடங்களில் செய்யும் அரசியல்ப் புள்ளிகளுக்கும் தலா 2% தரகு கொடுக்க வேண்டியுள்ளது. அது இரண்டாமவருக்கு 5% ஆக மாறலாம். அல்லது குறைந்த பட்சத் தொகையானது ஐம்பது லட்சமாகவோ இருபது லட்சமாகவோ குறையலாம். முக்கியமாக, இது போன்ற சிக்கல்களில் மாட்டி மதுரை மூச்சுத் திணறிச் செத்தே போகும். மதுரைக்காரர்கள் எல்லோரும் அகதிகளாக இலங்கைக்குப் போகும் நிலை கூட வந்து, மதுரையின் மக்கள் தொகை பாதியாகக் கூடக் குறைந்து போகலாம்.

8. மின்சாரத் துறை என்றொரு துறையே இல்லாமல் போகலாம். அல்லது, "மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி" தத்துவத்தின் ஒரு முக்கிய அம்சமாக, அடுத்த முறை மந்திரி சபையை விட்டு விலகும் போது, "மின்சாரத் துறையை மத்திய அரசு ஏற்க மறுத்த காரணுத்துக்காக..." என்றொரு காரணம் சொல்லப் படலாம். அல்லது, "மின்சாரத் துறையின் தோல்விக்கு இதற்கு முன்பு நடந்த ஆட்சியில் நெய்வேலியில் நடந்த போராட்டமே காரணம்" என்றொரு புதுமையான காரணம் கண்டு பிடிக்கப் படலாம். அதையும் சிலர், "ஆகா, என்ன சமயோசிதமாகப் பேசுகிறார் தலைவர்?!" என்று சிலாகிப்பார்கள்.

9. மீண்டுமொருமுறை பா.ம.க.வின் அரசியல்ச் சந்தர்ப்பவாதம் (ஆள் வைத்து அடித்து விடுவார்களோ என்று பயந்து போய்த்தான் இவ்வளவு நல்ல வார்த்தை சொல்கிறேன்) பாராட்டப் படும். தமிழகத்தைப் பிடித்த பல நோய்களில் ஒன்றான மருத்துவர் பின்னால் அவருடைய மக்கள் மீண்டும் பெரிதளவில் அணி சேர்வார்கள். எதிர்க்கிற மாதிரி எதிர்ப்பார்கள். நூறு விழுக்காடு மது விலக்கு பற்றிப் பேசுவார்கள். ஒன்றிணைந்த தமிழ்ச் சமுதாயம் பற்றிப் பேசுவார்கள். ஆனால், அவர்களுடைய செயல்பாடு எல்லாமே அதற்கு முரணாக இருக்கும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினரும் மாதாமாதம் கட்சிக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற சட்டம் இன்னும் இறுக்கம் அடையலாம். கட்சிதான் குடும்பம் குடும்பம்தான் கட்சி என்கிற தத்துவம் சகவாச தோஷத்தால் இந்தக் கட்சிக்கும் தொற்றிக் கொண்டு விட்ட இரகசியம் தெரியாத பாமரப் பாட்டாளி மக்கள் தலைவர் சொல்வதையெல்லாம் கேட்டு தமிழகமெங்கும் தகராறுகள் செய்து வாழ்க்கையை அழிப்பார்கள்.

10. இறுதியாக, குள்ளநரித் தனம்தான் சாணக்கியத்தனம் என்று தமிழில் புதுவித இலக்கணம் ஒன்று உருவாக்கி விடும். எதிர் காலத்தில் நம்ம ஊரில் அரசியலுக்கு வருகிற எல்லோருமே குள்ளநரிகளாக இருப்பார்கள். அல்லது, குள்ளநரித் தனங்களைப் பள்ளிக் கூடம் போய்க் கற்றுக் கொண்டு வருவார்கள். இது உலகை ஆள நினைக்கும் ஓர் இனத்துக்கு நல்லதில்லை. வாத்தியார் சொன்னது போல, நமக்கு வேண்டியது நா-நயம் மிக்கவர்கள் அல்ல; நாணயம் மிக்கவர்கள். காமராஜர் போன்றவர்கள். ஜீவா போன்றவர்கள். அது கண்டிப்பாக இவர் இல்லை. இவர்தான் என்று உறுதியாக நம்புபவராக நீங்கள் இருந்தால் அதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். இது உங்கள் மனதைப் புண் படுத்தினால் என் ஆழ்ந்த வருத்தங்கள். அவ்வளவே.

நம் குடும்பக் கட்டுப்பாடு கொள்கையைப் போலவே, பத்துக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்றோர் அரசியல்க் கொள்கை வகுத்துக் கொண்டு இத்தோடு அவர்கள் அருமை பெருமை பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்கிறேன்.


அ.தி.மு.க. 'அணி' வென்று ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் நடக்கப் போகும் நல்லவைகள்:

1. "இவ்வளவும் செய்த பின்பும் அவர்களையே திரும்பக் கொண்டு வரும் அளவுக்குத் தமிழன் முட்டாள் இல்லை" என்று தற்காலிகமாக நிறையப் பேர் ஆனந்தக் கூத்தாடுவார்கள். அதில் ஓரளவு நானும் நம்பிக்கை கொண்டு இன்னும் கொஞ்சம் அரசியல் பற்றி அதிகம் எழுதுவேன். அப்படியெல்லாம் உண்மையிலேயே பெரிய பருப்பாக இருந்திருந்தால் நம் அரசியல் இவ்வளவு கேவலமான நிலைக்கு வந்திருக்காதே முதலில்.

2. காமராஜர் காலத்தைப் போல எல்லா வகையிலும் சிறப்பான ஆட்சி என்பது நமக்கு இன்னமும் கானல் நீர்தான். எனவே, இருக்கிற குப்பையில் இப்போதைக்கு நாற்றம் குறைவாக அடிக்கும் குப்பை எது என்றுதான் இன்னும் கொஞ்ச காலத்துக்கு தேர்ந்தெடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அதில் ஒரு முக்கியமான அங்கம்தான் - ஒவ்வோர் ஐந்தாண்டும் தோசையைப் புரட்டிப் போடுவது. அதற்காகவாவது பயந்து கொள்ளை அடிப்பவர்கள் கொஞ்சம் குறைவாக அடிப்பார்கள். மாவட்டத்துக்கு ஒருவன் - ஊருக்கு ஒருவன் என்ற நிலை போய், மன்னார்குடிக் குடும்பம் மட்டும் எல்லார் குடியையும் கெடுக்கும். மற்றவர் யார் கொள்ளை அடிக்க முயன்றாலும் உடனடியாகத் தண்டனை கிடைக்கும். இவர் போட்ட ஆட்டமும் அடித்த கொள்ளையும் அவர்கள் இப்போது போட்டதை விட அடித்திருப்பதை விட அதிகமில்லை என்பதைத் தமிழன் சரியாகப் புரிந்து கொண்டு விட்டான் என்ற ஒரு திருப்தி கிடைக்கும்.

3. ஜெயலலிதா சொன்னதைச் செய்வதில் எவ்வளவு வல்லவர் என்று இன்றுவரை தெரியவில்லை. உண்மையிலேயே அவர் அப்படிப் பட்டவர் என்றால், அவர் சொன்னபடி, கொள்ளையடிக்கப் பட்ட பொதுச் சொத்துகள் அனைத்தும் மீண்டும் அரசுடைமையாக்கப் பட்டால், அன்று முதல் அவரை உண்மையான புரட்சித் தலைவியாக ஏற்றுக் கொள்வேன்.

4. ஈழப்போரில் எவர் செத்தாலும் தப்பில்லை என்று சொன்னவர்தான் என்றாலும், அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சோ முதலானவர்கள் இவர் காதில் ஊதிக் கொண்டே இருப்பார்கள் என்றாலும், சங்கராச்சாரியாரைக் கைது செய்தது போல திடீரென ஓர் அமாவாசை நாளில் தனி ஈழம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றவும் வாய்ப்பிருக்கிறது. அதுவும் இல்லையென்றால், இவர் உதவ மாட்டார் என்று ஏற்கனவே தெரிந்த மக்கள் நம்பியாவது ஏமாறாமல் இருப்பார்களே. அவரைப் போல, "சிங்களருக்கு புத்தன் என்றால் தமிழருக்கு நான்தான்" என்று பேசுவது மட்டும் சர்க்கரையாகப் பேசிவிட்டு ஏற்கனவே பாதி உயிர் போய்க் கிடப்பவர்களை மேலும் கழுத்தறுக்க மாட்டரே.

5. ஏற்கனவே முடக்கப் பட்டு விட்ட பல தொழில்கள் புத்துயிர் பெறும். எல்லோரும் தொழில் செய்யும் தைரியம் மீண்டும் பிறக்கும். முக்கியமாகத் திரைத் துறையினருக்கு உயிர் கிடைக்கும். எங்கே அடுத்து நம்ம தொழிலையும் கை வைத்து விடுவார்களோ என்று பயந்து போய்க் கிடக்கும் எங்க ஊர் (சிவகாசி) முதலாளிகளுக்கும் கொஞ்சம் நம்பிக்கை பிறக்கும். சூரியக் கட்சியினரின் கொள்ளை தடுக்கப் படுமோ இல்லையோ சூரியத் தொலைக் காட்சிக் குழுமத்தின் கொள்ளை தடுக்கப் படும். அண்ணனும் தம்பியும் ஏதோ இரவும் பகலும் அயராது உழைத்துச் சேர்த்த சொத்து போலப் பந்தாக் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். எல்லோருக்குமே தெரியும் இவர்கள் எப்படி உலகப் பணக்கார லிஸ்ட்டில் வந்தார்கள் என்ற கதை. இது தொழிலுலகுக்கு நல்லதில்லை. அதற்குச் சரியான புள்ளியோ அரைப்புள்ளியோ வைத்தால்தான் முறையாகத் தொழில் செய்யும் பக்குவம் நம் மக்களுக்குத் திரும்ப வரும்.

6. இது பெரும்பாலும் கூட்டணி ஆட்சியாக இருக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், கேப்டன் புண்ணியத்தில் அம்மாவுக்கு வாழ்க்கையில் புதிதாய்ப் பல பாடங்கள் கற்றுக் கொடுக்கப் படும். ஆட்சியை இழந்து கொடநாடு ஓடவா அல்லது தினமும் தேள்க் கடி வாங்கிக் கொண்டே சென்னையில் துடிப்பதா என்று துடிப்பார். வாஜ்பாய்க்கு இவர் அடித்த அதே ஆப்பு இவருக்கும் அடிக்கப்படும். கொடுமை என்னவென்றால், அதையெல்லாம் மறந்து விட்டு பா.ஜ.க. நண்பர்கள் இவருக்காகத் துடிப்பார்கள். தானாடா விட்டாலும் தன் தசையாடாமல் இருக்காதே.

7. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலும் உடைய வாய்ப்புள்ளது. ஒரு மாபாதகச் செயலைக் கூட்டுப் போட்டுச் செய்த கூட்டம் பிரிவது நாட்டுக்குத் தானே நல்லது. இந்தப் பிரிவின் மூலம் நிகழப் போகும் இன்னொரு நல்லது - அலைக்கற்றை விவகாரத்தில் தண்டனை பெற வேண்டியவர்கள் தண்டனை பெற வாய்ப்புக் கூடுதலாக உள்ளது. இருவரும் சரியாகப் பங்கிட்டிருந்தால் அதற்கும் வாய்ப்புக் குறைவுதான்.

8. செய்கிற ஒவ்வொரு செயலிலும் இதில் தனக்கு என்ன இருக்கிறது - என்ன ஆதாயம் - என்ன இழப்பு என்று எல்லாத்திலுமே கூட்டல்க் கழித்தல் கணக்குப் போட்டுச் செய்யும் அரசியல் ஈனத்தனம் இருக்காது. அதாவது, மக்களை ஏமாற்றுவதற்காகச் செய்யப்படும் பூச்சாண்டி வேலைகள் குறைவாக இருக்கும். எது சரியோ அதைப் பற்றி நீண்ட யோசனைகள் இல்லாமல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

9. அரசு ஊழியரில் அ.தி.மு.க. ஆட்சியை விரும்பும் ஒரே குழுவினர் காவல் துறையினர். "ஊதியம் கூடுமா இல்லையா என்பது வேறு கதை. ஆனால், என் வேலையை நான் எந்தத் தடையும் இல்லாமல் செவ்வனே செய்ய அனுமதிக்கும் ஒரே ஆட்சி அம்மா ஆட்சிதான்!" என்று அவர்களில் நிறையப் பேர் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் மட்டுமல்ல. எல்லா விதமான துறைகளிலுமே அந்த ஆட்சியில் அடிப்பொடி முதலாக எல்லோருமே தலையிடுவார்கள். காசடிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இவர்கள் ஆட்சியில் ('இவருடைய' ஆட்சியில் என்றுதான் சொல்ல வேண்டும்) தடை என்று ஒன்று வருமென்றால் அது ஒருவரிடம் இருந்து வரும் - அதிக பட்சம் ஒரு குடும்பத்திடம் இருந்து வரும். அங்கு போல, போகிற - வருகிற அல்லக்கை எல்லாம் கரை வேட்டியைக் கட்டிக் கொண்டு வந்து அநியாயம் பண்ணுகிற வேலைகள் நடக்காது.

10. கடைசியாக, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் பெயரில் நடைபெறும் பத்திரிகை உண்மை பேச ஆரம்பிக்கும். உண்மையான குற்றங்களை வெளிக்கொணரத் தொடங்கும். கடந்த ஐந்தாண்டுகளில் முரசொலிக்குப் போட்டியாக சிங்கி அடிக்கும் வேலையைத்தான் எங்கள் ஊர்க்காரர் பண்ணிக் கொண்டிருக்கிறார். எந்தக் காலத்திலும் அவர்கள் உண்மை பேசுவது குறைவு என்றாலும் இந்தக் காலத்தில் சுத்தமாக அந்தப் பழக்கம் இல்லாமல் போய் விட்டது அவர்களுக்கு. உண்மை என்றும் ஒன்று உள்ளது என்பதை நினைவு படுத்தவாவது அவர்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தாக வேண்டும். அது மட்டுமில்லை. பத்திரிகைகள் எல்லாம் (முரசொலி, நக்கீரன் தவிர) எங்களுக்கு எதிராகச் செயல்பட்டன என்றும் அதற்குப் பல வேடிக்கையான காரணங்களையும் சொன்ன தலைவர் அப்படியே தலை கீழாகப் பேசுவதையும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது எனக்கு. "நானும் உங்களில் ஒருவன்தான்" என்பார். "உங்கள் நண்பன் / உயிர்த் தோழன்" என்பார். அது ஓர் அழகிய நிலாக் காலம். அது மீண்டும் வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

அ.தி.மு.க. 'அணி' வென்று ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் நடக்கப் போகும் அல்லவைகள்:

1. நண்பனையும் எதிரியையும் ஒரே மாதிரி நடத்தும் நல்லம்மாவின் கடைசி நிமிடக் கழுத்தறுக்கும் வேலைகள்தான் அரசியல்த் துணிச்சலுக்கு இலக்கணம் என்று நாக்கை எப்படி வேண்டுமானாலும் சுழற்றிப் பேசும் அவருடைய ரசிகர்கள் - இனத்தவர்கள் - தோழியின் இனத்தவர்கள் எல்லோரும் நியாயம் பேசுவார்கள். இது ஒரு புது அரசியல்ப் பண்பாடாக அறிமுகப் படுத்தப் படும். எதிர்காலத்திலும், அதில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர் வைகோவாகத்தான் இருப்பார். பாவப்பட்டவர். 'வெளியிலாவது மனிதரை மனிதராய் மதிக்கும் நல்லவன் போல் நடிக்க வேண்டும்; சபை நாகரீகம் காக்க வேண்டும்' என்று சக மனிதரை மதியாமைக்கு முடிவு கட்டும் பாடம் புகட்டப் படாமலே போய்விடும்.

2. வென்றால் மட்டும் நின்று பேசும் தோற்றால் தொலைந்து போகும் அரசியல்ப் பண்பாடு தொடரும். மற்ற கட்சிக் காரர்களும் ஊட்டி, கொடைக்கானல், கொடநாடு, குடகுமலை, ஏற்காடு, ஏலகிரி போன்ற இடங்களில் தோற்ற காலங்களில் ஓய்வேடுக்கவோ வேறு வேலைகள் பார்க்கவோ பண்ணை மாளிகைகள் கட்டத் தொடங்கி விடுவார்கள். எதிர்க்கட்சி என்றாலே இயங்க வேண்டியதில்லை என்கிற நிலை வந்து விடும். ஆளுங்கட்சியிடமே எதுவும் எதிர் பார்க்காத மக்கள் எதிர்க்கட்சியிடம் அதெல்லாம் எதிர் பார்ப்பதில்லை என்றாகிவிடும்.

3. பொத்துப் பொத்தெனக் காலில் விழுவது தவிர வேறெதுவும் தெரியாத மூடர்கள் கூடி நடத்தும் அரசாங்கமாகத் தான் இவ்வரசாங்கம் இருக்கும். முக்கியமாக, கொஞ்சம் அறிவாளி போல யாராவது நடந்து கொண்டால் கண் மூடி முழிக்கும் முன் அவர் இருக்கிற இடமே தெரியாமல் செய்யப் படுவார். அது அந்தப் பக்கமும் நடக்கும். ஆனால் கொஞ்சம் இலைமறை காயாக நடக்கும். மாதமொருமுறை மந்திரி சபை மாற்றம் நிகழும். நூறு பேர் ஆளுங்கட்சி உறுப்பினர் என்றால் அதில் குறைந்தது ஐம்பது பேர் அமைச்சர் ஆன அனுபவம் உள்ளவர்களாக இருப்பர். அது ஒரு மாதமா இரண்டு மாதமா என்பது வேறு கதை.

4. 'அணி' வென்றால் பரவாயில்லை. அவர் கட்சி மட்டும் தனிப் பெரும்பான்மை பெற்றால் முடிந்தது கதை. அடுத்த நாளே கூட்டணிக் கட்சித் தலைவர்களை எல்லாம் "யார்டா நீ?" என்பார். அதையும் அரசியல்த் துணிவு என்று வாதிடுவார்கள் நான் மேலே சொன்ன சில கூட்டத்தினர். அவர்களும் மானம் கெட்டுப் போய் மூன்றாவது அணி அமைக்க முடியாமல் - முயலாமல் திரும்பவும் தி.மு.க.வுடன் போய்க் கூட்டணி அமைப்பார்கள்.

5. நடந்து போகும் இடங்களுக்கும் ஊர்ந்து போகும் இடங்களுக்கும் பறந்தே சென்று, அரசியலுக்கும் எளிமைக்குமான இடைவெளியை இன்னும் அதிகமாக்குவார். இதைப் பார்த்து மேலும் பல முதலமைச்சர்கள் மக்களுடனான இடைவெளியை அதிகப் படுத்துவார்கள். அரசியலில் நடிப்புக்காகவாவது அப்படிச் செய்யக் கூடாது என்பது என் கருத்து. அந்தக் கூட்டம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்று பயந்தாவது சில நல்ல வேலைகள் செய்வார்கள். இந்த மேடம் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று திமிராக நிறைய வேலைகள் செய்வார். எங்காவது இவர் வருவாதாயிருந்தால் ஒபாமா வருவதற்குச் செய்வதை விட அதிகமாக கெடுபிடிகள் செய்வார்கள் இவருடைய ஆட்கள். நம் எல்லோருக்குமே தெரியும் - இவருடைய உயிர் எவ்வளவு முக்கியமென்று. ஆனாலும் ஒரு பந்தாவுக்கு அப்படியெல்லாம் செய்வார்கள். திருமாவளவன் ஒருமுறை சொன்னார் - "இவர் தனக்கு Z பிரிவு பாதுகாப்பு வேண்டுமென்பதற்காகவே விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்" என்று. அதை எனக்கு சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

6. இன்னும் பல சினிமா நடிகைகள் உச்சத்தில் இருக்கும் நடிகர்களைக் கைக்குள் போட முயற்சிப்பார்கள். என்றாவது ஒருநாள் முதலமைச்சர் ஆகி விடலாம் என்ற நினைப்போடு. இன்றைய சூழ்நிலையில் மூனா கானாவை விட இவரையும் வாத்தியாரையும் என்னால் மேம்பட்ட அரசியல்வாதிகளாக ஏற்றுக் கொள்ள முடிகிறது என்றாலும் சினிமா பிம்பத்தை மட்டுமே தன் ஒரே சொத்தாகக் கொண்ட எவரையும் அரசியலில் பெரிதாக விடுவது எனக்கு ஏற்புடையதில்லை. இவருடைய வெற்றியால் அது மென்மேலும் ஊக்குவிக்கப்படும். அது நமக்கு நல்லதில்லை. இப்படியே போனால், எப்படி காமராஜர்களையும் நல்லகண்ணுக்களையும் கண்டெடுப்பது?! அரசியலுக்கு வருவதற்கு அரசியல் அறிவே தேவையில்லை என்ற ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மையொன்று மேலும் உரக்கச் சொல்லப்படும்.

7. ஒரு தவறு செய்துவிட்டால் அத்தோடு அரசியல் எதிர்காலமே முடிந்து விட்டது - அரசியல்த் தீண்டாமைக்கு ஆட்பட்டு விடுவோம் என்கிற பயம் இல்லாமல் போய் விடும். எதிராளியின் கோளாறுகளை முன் வைத்து எப்படியும் தப்பி விடலாம் என்றொரு நம்பிக்கை ஏற்கனவே நிறையத் தப்புச் செய்தோருக்குக் கிடைக்கும். அது மக்கள் மீதான - அவர்களுடைய ஞாபக சக்தி மீதான தவறான ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும். அதுவும் நம் தமிழ்த் திருநாட்டுக்கு நல்லதில்லை. ஏன், எதற்கு என்று எது பற்றியும் கவலைப் படாமல், தி.மு.க. என்ன செய்தாலும் அதற்கு அப்படியே தலை கீழாக ஏதாவது செய்வது ஒன்றே அ.தி.மு.க. வின் கொள்கை என்று தமிழர்கள் தவறான பாடம் ஒன்றைப் படித்து விடுவார்கள். அந்த ஆள் பதவியைக் காப்பாற்றுவது ஒன்றே தன் கொள்கையென வாழ்ந்தால் இந்த ஆள் ஏட்டிக்குப் போட்டி போடுவதே கொள்கை என்று வாழ்கிற ஆளாக இருக்கிறது. இந்த குணத்தால் தப்பித் தவறிச் சில நேரங்களில் நல்லதும் நடக்கும். அது ஒரு வகையில் ஆறுதலே.

8. பிரச்சனைகளைத் தீர்க்க முயல்கிறேன் என்று காவிரிப் பிரச்சனைக்கு முடிவு கட்டப் போவதாகச் சொல்லி கர்நாடகத்தில் இருக்கும் அரசியல் வாதிகளையும் மக்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருக்கும் என் போன்றோரைக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கழுதை மேல் ஏற்றி ஓசூர் எல்லையில் வந்து வழியனுப்பி வைக்க ஏற்பாடு செய்து விட வாய்ப்புண்டு. கர்நாடக முன்னாள் முதல்வர் கிருஷ்ணா சொன்னது போல், அப்படிச் செய்வதில் அவரும் ஒரு விஷயத்தை நிரூபித்து விடுவார் - தான் எல்லோரும் சொல்வது போலக் கன்னடப் பெண் அல்ல; தமிழர்களுக்காகவே சண்டை இழுத்து மண்டைகளை உடை படச் செய்யும் திருவரங்கத்துப் பச்சைத் தமிழச்சி என்று.

9. காலமெல்லாம் இவரோடு கிடந்து, எல்லாச் சிரமங்களையும் அனுபவித்து, கடந்த ஐந்தாண்டுகளில் காசுக்கு ஆசைப்பட்டு, தி.மு.க.காரர்களின் இச்சைப் பேச்சுக்கு மயங்கி, கட்சி மாறிய சேகர் பாபு, முத்துச்சாமி, சத்தியமூர்த்தி போன்றோர் நரக வேதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். இது போன்ற பழி வாங்கும் நடவடிக்கைகளில் வீணடிக்கப் படும் நேரம் பெருமளவில் ஆட்சித் தரத்தில் பாதிப்புண்டாக்கும்.

10. கடைசியாக, சோ என்றொரு முன்னாள் சிரிப்பூட்டி மீண்டுமொருமுறை மேதாவியாவார். இலங்கையில் ஒரு குழந்தை கூட மிஞ்சாமல் அழிக்க வழி வகை செய்யா விட்டால் அடுத்த தேர்தலில் காங்கிரசை உடைத்து அந்த உடைந்த துண்டை தி.மு.க.வோடு இணைத்து அ.தி.மு.க.வை மண்ணைக் கவ்வ வைப்பார். பின்பொரு நாள் யார் காலிலும் விழாத அம்மையார் அவருடைய வீடு தேடிப்போய் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி சமரசம் செய்து கொண்டு திரும்புவார். முன்பு சொன்னது போல் ஓர் அமாவாசை இரவில் அவரும் மனது மாறி, இலங்கைத் தீவில் மிச்சமிருக்கும் தமிழர்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டால், அய்யகோ! முடிந்தது கதை. தமிழினத்தின் மிச்சமிருக்கும் மானம் உள்ளோரும் ஒரே நாளில் முடிந்து போக நேரிடலாம். வைகோவின் பேச்சைக் கேட்டு இவரை ஓரளவு நம்பி ஏமாந்த சீமான் போன்றோரும் காலத்துக்கும் மேலெழ முடியாத படி அடி பட்டுப் போவார்கள்.

யார் வென்றாலும் தோற்றாலும் மாறாது நிற்கும் மாமணியாய் இருக்கப் போகும் கோளாறுகள்:

1. தேவர், வன்னியர், கவுண்டர், நாடார் போன்ற குறிப்பிட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர்தான் அரசியலில் இருக்க முடியும் எனும் கேவலம் தொடரும். எங்கோ சில இடங்களில் மட்டும் ஏதோவொரு புரிபடாத காரணத்துக்காக சிறுபான்மையினத்தைச் சேர்ந்த எவரோ ஒருவர் எதிர் நீச்சல் போட்டு முன்னுக்கு வருவார். மற்றோரை விட அவர் முதலமைச்சர் ஆவது சிறிது எளிது. ஏனென்றால், பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த எவரும் அவர்களில் ஒருவர் அவ்வளவு பெரிய ஆள் ஆவதை விடவே மாட்டார்கள். அது மட்டுமில்லை, எல்லாக் கட்சிகளிலும் இவர்கள் கொடிதான் பறக்கும் என்றாலும், ஒவ்வொரு குழுவினரும் தங்களுக்கென்று ஒரு பெரிய கட்சியோ அல்லது பல சில்லறைக் கட்சிகளோ வைத்துக் கொண்டு மற்றவர்களை மிரட்டுவார்கள். இவர்கள் மென்மேலும் நம் சமூகத்தைத் துண்டு போட்டு உப்புக் கண்டம் போடாமல் சாக மாட்டார்கள்.

2. பகுத்தறிவுப் பாசறை என்றெல்லாம் மேடைகளில் முழக்கமிடும் கூட்டங்கள் மற்றும் அதன் வழி வந்த பிறப்பின் வழி மறந்த கூட்டங்கள் தேர்தலில் வெல்ல யாகங்களும் சிறப்பு பூசைகளும் யானை வாங்கி விடும் வேலைகளும் குறிப்பிட்ட நிறங்களில் உடை அணிதல்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்வதைத் தொடர்ந்து கொண்டிருப்பார்கள். இதைக் கேள்வி கேட்கும் தெம்பு திராவிடனாகப் பிறந்த எந்த வீரமாமணிக்கும் இராது. பெரியாருக்கும் திராவிட இயக்கங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய் விடும். அவ்வப்போது பயன்படுத்தப் படும் அவருடைய புகைப் படங்கள் கூட எவராலும் பயன் படுத்தப் படாது.

3. நம் சமூகத்தில் நிகழ வேண்டிய மாற்றங்கள் எல்லாமே ஏற்கனவே சினிமாவில் பல புரட்சிகளைச் செய்த அனுபவம் உள்ள நாயகர்களால் மட்டுமே முடியும் என்கிற நிலை இன்னும் பல தலைமுறைகளுக்குத் தொடரும் என்றுதான் தெரிகிறது. எனவே, நேரடியாக அரசியலில் நுழைவது சிரமம் என்று நினைப்பவர்கள், தயவு செய்து இப்போதே கோடம்பாக்கம் பக்கம் போய், பெயர் பெற்ற இயக்குனர்களிடம் கெட்ட வார்த்தையில் திட்டும் அடியும் வாங்கப் பழக ஆரம்பியுங்கள். நாயகர்கள் மட்டுமின்றி நாயகியர், வில்லர்கள், சிரிப்பூட்டிகள், ஓரப்பாத்திரங்கள் செய்வோர் ஆகிய திரைத்துறை சார்ந்தோரை மட்டுமே சார்ந்தே நம் தேர்தல் பிரச்சாரங்கள் இருக்கும். அவர்கள்தாம் நம் எதிர்கால 'நட்சத்திரப்' பேச்சாளர்கள். இன்னும் இருபது ஆண்டுகள் கழித்தும் ரஜினி வருவாரா மாட்டாரா என்று தொங்கிக் கொண்டுதான் கிடப்போம்.

4. ஏற்கனவே நிறையக் கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணமும் அதனால் சேர்ந்த ஆள் பலமும் இல்லாத எவரும் அரசியல் பற்றி நினைத்துப் பார்க்கவே கூடாது. பொது வாழ்வில் நுழைந்து ஏதாவது செய்ய விரும்பினால் சைதை துரைசாமியின் நிறுவனத்தில் சேர்ந்து இந்திய ஆட்சிப் பணியில் இடம் பிடித்து ஏதாவது செய்யலாம். அது முடியாவிட்டால் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வரும் தேர்தலில் எடுபிடி வேலைகள் செய்யலாம். இதை விடுத்து, இதாக வேண்டும் அதாக வேண்டும் என்றெல்லாம் வீணாக ஆசைப்பட்டு வாழ்க்கையை வீணடிக்கக் கூடாது. நல்லவர் ஒருவர் கூட சீட் வாங்க முடியாது. வெல்ல வல்லவர் மட்டுமே மதிக்கப் படுவர். அதற்காக, திடீர்த் திடீரென எங்கெங்கிருந்தோ பின் வாசல் வழியாக ஆட்கள் கொண்டு வரப் படுவார்கள். அவர்களுக்கு எவருக்கும் அரசியலும் புரியாது ஒரு தாலியும் புரியாது. பொது வாழ்வில் தூய்மை காக்கும் இடதுசாரிகள் முதலாக அத்தகையவர் எல்லோருமே நம்மவர்களுக்குக் கேலிப்பொருளாகத்தான் இருப்பார்கள்.

5. இந்தியாவிலேயே அதிகம் குடிக்கும் மாநிலமாக அதிகார பூர்வமாக மத்திய அரசால் அங்கீகரிக்கப் படுவோம். யாரோ ஒருவர் சொன்னது போல, இதை விட மோசமான சில தொழில்களையும் வருமானம் வருகிறது என்ற காரணத்தைச் சொல்லி அரசே எடுத்துச் செய்யும் அவலம் நேரலாம். அல்லது, அவர்களின் குடும்பத்தில் உள்ள அறுபத்தைவரில் ஒருவர் செய்யலாம். குறைந்த பட்சம், ஆட்சியாளர்கள் போலிச் சரக்குகள் அல்லாமல் தரமான சரக்குகளாவது நம் மக்களுக்குக் கிடைக்க வழி செய்தால் நல்லது.

6. "இதென்னப்பா பைத்தியக் காரத் தனமா இருக்கு? இவன் ஏன் லூசு மாதிரிப் பேசுறான்? அரசியலுக்கும் நிர்வாகத்துக்கும் என்ன சம்பந்தம்? அரசியலுக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம்?" என்று நம்மைப் போன்றவர்களைக் கோமாளிகளாக்கும் அறிவாளிகள் அதிகமாகி விடுவார்கள். "அதெல்லாம் உங்க தாத்தன் காலத்தில்தான். அப்படியெல்லாம் இப்போ அரசியல் பண்ண முடியாது. போப்பா, போய் வேலையைப் பாரு!" என்று நம்மை நாக்குத் தள்ள வைப்பார்கள்.

7. தி.மு.க. மட்டுமில்லை. அடுத்து எந்தக் கட்சிக்காரனாக இருந்தாலும் சரி. தமிழ்நாட்டுக் காரனுக்குப் பெரிய பதவியைக் கொடுக்க டெல்லியில் யாருமே விட மாட்டார்கள். இந்த இனமே திருட்டுக் கூட்டம் என்பது போலப் பேசுகிறார்கள் நிறையப்பேர். இந்த லட்சணத்தில் நம்ம ஆள் கடவுளை எல்லாம் திருடன் என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வது வேறு.

8. எதிர்க்கட்சித் தலைவர் கண்டிப்பாக அவைக்கு வர மாட்டார். அது நடக்க இன்னும் கொஞ்ச காலம் ஆகும். வந்தாலும் பாதுகாப்பில்லை. போக்கிரிகள் நிறைந்த இடத்தில் உடல் பலம் இல்லாத எந்தத் தலைவருக்கும் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லை. நியாயம்தானே?!

9. இன்று அண்ணன் அஞ்சாநெஞ்சனுக்கு அல்லக்கை வேலை பார்க்கும் என் உறவினர்கள் எல்லோரும் அப்படியே அணி மாறி அம்மாவுக்கோ - மன்னார் குடிக் கூட்டத்துக்கோ அதே வேலையைப் பார்ப்பார்கள். ஏற்கனவே அவர்கள் எல்லோரும் அங்கிருந்து வந்தவர்கள்தாம். ஆனால், அணிகள் மாறினாலும் அவர்களுடைய பணிகள் எப்போதும் மாறப்போவதே இல்லை. வாழ்க்கையும்!

10. வேறு எந்த மாநிலத்தில் எப்படியோ, தமிழ்நாட்டில் சாப்ட்வேரை விட - ரியல் எஸ்டேட்டை விட - கொள்ளையடிப்பதை விட - அரசியல்தான் தலை சிறந்த பணம் பண்ணும் துறையாக இருக்கும். அதை மாற்ற நம் மக்களே மாற வேண்டும். அது அவ்வளவு எளிதாக நடக்கும் என்று எனக்குத் தோன்ற வில்லை. உங்களுக்கு?

இவையெல்லாவற்றுக்கும் பின்பும், இந்தத் தேர்தலுக்குப் பின் நம் அரசியல் 'சிறிது' மேன்மையடையும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால், இது நாட்டைக் குப்பையாக்கிய கூட்டத்தின் (இரு பெரும் கட்சிகளையும் சொல்கிறேன்) முடிவுரையின் ஆரம்பம் போலத் தெரிகிறது. என்ன சொல்கிறீர்கள்?

பின் குறிப்பு: தலைப்புக்கு மன்னிக்கவும். நம்மிடம் இராமர்கள் இல்லை என்பதை நான் நன்கறிவேன். நீங்கள், இராமனை விட இராவணன்தான் நல்லவன் என்று நம்பும் பச்சைத் திராவிடராக இருந்தால், இராவணனும் நம்மிடம் இல்லை என்பதையும் நான் அறிவேன். நம்மிடம் இருப்பதெல்லாம்... இதைப் படிக்கும் எல்லோருமே ஒத்துக் கொள்கிற மாதிரி ஒரு கேவலமான மன்னன் பெயர் என்னிடம் இல்லை. எனவே, தலைப்பைக் கொஞ்சம் இலகுவாக எடுத்துக் கொள்ளுங்கள். அதற்காகத் தமிழ்ப் பண்பாட்டின் படி என்னைக் கெட்ட வார்த்தையில் திட்ட விரும்பினால், தனியாக மின்னஞ்சல் அனுப்பித் திட்டுங்கள். கருத்துரையிலேயே அந்த வேலையைச் செய்தால் வெளியிட மாட்டேன். ஏனென்றால் நான் படித்த தமிழ்ப் பண்பாடு அதுவல்ல.

கருத்துகள்

  1. நான் உங்கள் கருத்துடன் அப்படியே ஒத்துப்போகிறேன்.ஆனா ஒன்னு இதுல ரொம்ப நேரம் செலவளிக்க் வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆனா முடியல இல்ல. என்னாலயும் தான்

    பதிலளிநீக்கு
  2. கலக்கிட்டிங்க நண்பரே! சமீப காலங்களில் நானும் அரசியல் பற்றி எழுதுவதையே நிறுத்தி விடலாமா என்று தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்துள்ளேன். அதற்கான முதல் பச்சைக் கொடி (உண்மையில் சிவப்புக் கொடி!) உங்கள் கருத்துரை. இதில் செலவிடும் நேரத்தை மற்ற சர்ச்சையற்ற இலக்கியப் படைப்புகளில் செலவிட்டால் சண்டைகள் போடுவதில் வீணாகும் நேரத்தை மிச்சப் படுத்தி உருப்படியாக ஏதாவது படைக்கலாம். அவைதான் காலம் கடந்து படைப்புகள் என்ற பெயரும் பெறுவன. உங்கள் அக்கறைக்கு என் மனமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  3. Excellent article...Very well written with detailed facts...I agree with your points...

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாசனி, மே 14, 2011 5:00:00 AM

    இதை எல்லாம் எழுதற உங்களுக்கு எழுதி முடிந்த பின்னர் டென்சன் குறையுமோ இல்லையே எங்கள் பி.பி எகிறும். எதுக்கு சார். லூசில விட்டுடுங்க. பதிவுக்கு வருவது இலகுவானவற்றைப் படித்து ரசிச்சுட்டு போகனும். இதை எல்லாம் எழுதினா/படிச்சா நமக்கு வேதனை, டென்சன் எல்லாம் தான். =((

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லாசனி, மே 14, 2011 5:09:00 AM

    I've mentioned about your here

    http://reap-and-quip.blogspot.com/2011/05/blog-post.html

    Glad to know you sir.

    பதிலளிநீக்கு
  6. அருமையான அரசியல் விளக்கப் பதிவு மிக்க நன்றி..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என் மலர் விழியை கண்டிங்களா ?

    பதிலளிநீக்கு
  7. @அனாமிகா- சரியாகச் சொன்னீர்கள். இதை எழுதி முடித்த பின் எனக்கு அது கொஞ்சம் குறைந்து விட்டது. உங்களுக்கு அதை ஏற்றி விட்டதற்காக வருந்துகிறேன். இதையே தேர்தலுக்கு முன்பு செய்திருந்தாலாவது உதவியிருக்கும் அல்லவா?!

    பதிலளிநீக்கு
  8. @ம.தி.சுதா- நன்றி சகோதரரே!

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லாசனி, மே 14, 2011 10:47:00 AM

    நல்ல அலசல், ஒரு காலாத்தில் நானும் இப்படி அலசி அலசி, தேய்ந்து போனது நான் தான். இருந்தாலும், உங்களை பார்க்கும் பொது ஒரு பொறாமை, தொடரட்டும் உங்கள் பணி. தமிழகத்தின் இன்றைய அதிக வோட்டு சதவிகிதத்திற்கு பிலக்கர்களும் ஒரு முக்கிய காரணம்.

    I hope tamilnadu will have a meaningful, significant, real change, not just a change for the sake of change.

    பதிலளிநீக்கு
  10. ///பின் குறிப்பு: தலைப்புக்கு மன்னிக்கவும். நம்மிடம் இராமர்கள் இல்லை என்பதை நான் நன்கறிவேன். நீங்கள், இராமனை விட இராவணன்தான் நல்லவன் என்று நம்பும் பச்சைத் திராவிடராக இருந்தால், இராவணனும் நம்மிடம் இல்லை என்பதையும் நான் அறிவேன். நம்மிடம் இருப்பதெல்லாம்... இதைப் படிக்கும் எல்லோருமே ஒத்துக் கொள்கிற மாதிரி ஒரு கேவலமான மன்னன் பெயர் என்னிடம் இல்லை. எனவே, தலைப்பைக் கொஞ்சம் இலகுவாக எடுத்துக் கொள்ளுங்கள். அதற்காகத் தமிழ்ப் பண்பாட்டின் படி என்னைக் கெட்ட வார்த்தையில் திட்ட விரும்பினால், தனியாக மின்னஞ்சல் அனுப்பித் திட்டுங்கள். கருத்துரையிலேயே அந்த வேலையைச் செய்தால் வெளியிட மாட்டேன். ஏனென்றால் நான் படித்த தமிழ்ப் பண்பாடு அதுவல்ல.///

    அழகு :))

    பதிலளிநீக்கு
  11. @பெயரில்லா- உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    நீங்கள் சொன்ன மாதிரி நானும் தினம் தினம் தேய்வதை உணர்கிறேன். ஆனாலும் முடியவில்லை. :)

    உண்மை. மேலோட்டமாக ஒரு பயனும் இல்லாதது போலத் தெரிந்தாலும் இது ஒருவிதக் கருத்துப் புரட்சி செய்து கொண்டுதான் இருக்கிறது அடி ஆழத்தில்.


    I am also looking forward to a positive change. Let's see.

    பதிலளிநீக்கு
  12. @கிருத்திகன்- நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி