உங்களூர் எங்களூர்

உங்களூர்ச் சாலைகள்
எங்களூர்ச் சாலைகளை விடப் பளபளப்பு

உங்களூர்த் தெருக்கள்
எங்களூர்த் தெருக்களை விட அகலம்

உங்களூர்க் கட்டடங்கள்
எங்களூர்க் கட்டடங்களை விடப் பிரம்மாண்டம்

நிலம் நீர் காற்றும் அனலும் கூட
வெவ்வேறு மாதிரி இருக்கின்றன

ஆனால் -
உங்களூர் வானம் மட்டும் ஏன்
எங்களூர் வானம் போலவே இருக்கிறது?
அதே சூரியன்!
அதே நிலா!!
அதே வெள்ளிகள்!!!

* இத்தோடு முடிந்து விட்டது போல் உணர்ந்தால் நிறுத்தி விடுங்கள்! எப்போதும் போல், "என்ன சொல்ல வர்றேன்னே புரியலப்பு!" என்போர் தொடர்ந்து படியுங்கள்!

உங்களூர் மனிதர்கள்
எங்களூர் மனிதர்களை விட
வேறு விதங்களில்
உண்டு - உடுத்து - உறவாடுகிறார்கள்...
நிலம் நீர் காற்றும் அனலும் போல!

ஆனாலும் -
அவர்களுக்குள்ளும் வானம் போல ஏதோவொன்று
அதே சூரியன் அதே நிலா அதே வெள்ளிகளை
வைத்துக் கொண்டிருப்பதாகப் படுகிறது!

* "சரி, இன்னும் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?!" என்போர், உங்கள் நேரத்தை வீணடித்தமைக்காக என் மீது வரும் கோபத்தை அடக்கிக் கொள்ள தியான வகுப்புகளுக்குச் செல்லுங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி