தமிழக அரசியல் பழங்கள் - யார் யார் எப்போது வந்தார்கள்?

தேர்தல் நேரம் என்பதால் கொஞ்சம் அரசியல் ஆர்வம் தலை தூக்கத் தொடங்கி இருக்கிறது. ஓர் அரசியல்வாதி பல்வேறு பண்புகளுக்காக - காரணங்களுக்காக மதிக்கப்படுகிறார் அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகிறார். அவருடைய மக்கள் நலன் சார்ந்த சிந்தனையில் தொடங்கி, பேச்சாற்றல் முதல் நிர்வாகத்திறன் வரை, நடிப்புத்திறன் முதல் தைரியம் வரை எத்தனையோ காரணிகள் இருக்கின்றன. 'அப்பிடி என்ன கருமத்தத்தான் இந்த ஆள்ட்டக் (இருபாலரும் அடக்கம்!) கண்டாங்களோ!?' என்று மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைக்கிற மாதிரியான ஆட்களையும் பார்த்து விட்டோம். இந்தியர் - தமிழர் நம்மைப் பொருத்தமட்டில், எல்லாத் துறைகளிலுமே திறமை ஒருபுறம் என்றால், அனுபவம் மற்றொருபுறம் நிறையவே மதிக்கப் படுகிறது. எங்கள் பணியில் கூட இந்தியாவில் பெரும்பாலும் அனுபவத்தை வைத்துத்தான் சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. அதுவே மேற்குலகில் அப்படியில்லை. அனுபவமோ வயதோ பெரிதாக மதிக்கப் படுவதில்லை. திறமைக்குத்தான் கூடுதல் மரியாதை. திறமை என்று பேசத் தொடங்கினால் கட்சி சார்பு அடிமைகளோடு வாக்குவாதம் செய்து வாழ்க்கை வீணாகிப் போகும் என்பதால் அதற்குள் போகும் துணிச்சல் நமக்கில்லை. அனுபவம் என்று பார்த்தால், தமிழகத்தில் இருக்கிற அரசியல்வாதிகளில் - அதுவும் சட்டமன்ற அரசியலில் (முடிந்தால் கட்சிவாரியாக) யார் யார் எந்தெந்தக் காலத்தைச் சேர்ந்தவர்கள் என்று போன சட்டமன்றத்  தேர்தலின் போது ஒரு சிறிய ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். அது பற்றி இந்தச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு எழுதி விட வேண்டும் என்று முடிவு கட்டி இதோ...

ஒன்றிணைந்த சென்னை மாகாணத்தில் நடந்த முதல் இரு தேர்தல்களையும் விட்டுவிடலாம். அதில் பங்குபெற்ற யாரும் இன்னும் இருப்பது போல் தெரியவில்லை. அடுத்ததாக, சென்னை மாநிலத்தில் நடந்த முதல் தேர்தல் 1952-இல் நடந்தது. இதில் பங்கு பெற்றவர்களும் இப்போது யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. 

1957-தான் இன்றைய தலைமுறைக்கு ஆர்வம் தரக்கூடிய முதல் தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். இந்தத் தேர்தலில்தான் திமுக தலையெடுக்கத் தொடங்கியது. அண்ணாத்துரை, கருணாநிதி, அன்பழகன் ஆகிய மூவரும் சட்டமன்றத் தேர்தலில் வென்றார்கள். அப்போதே தோல்வியில் தொடங்கியிருக்கிறது நெடுஞ்செழியன் வாழ்க்கை. இவர்களோடு அண்ணாவுக்கே போட்டியாக இருந்த சம்பத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இதுதான் திராவிடத் தேர்தல் அரசியலின் முதல் அணி என்று கொள்ளலாம். இவர்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள் என்றால், காமராசர், ராஜாஜி, பக்தவத்சலம், சி. சுப்பிரமணியம், கக்கன், வெங்கட்ராமன் ஆகியோரை எதிர்த்து. இதில் இப்போதும் இருப்பவர்கள் கருணாநிதியும் அன்பழகனும். இந்த மொத்த அணியில் தனிப்பட்ட முறையில் ஆகப்பெரும் வெற்றி பெற்றவர் என்றால் அது கருணாநிதி; தோல்வி என்றால், அது உறவினர்களான நெடுஞ்செழியனுக்கும் அன்பழகனுக்கும் இடையே கடும் போட்டிக்குப் பின்புதான் முடிவு செய்ய முடியும். நெடுஞ்செழியன் என்று உறுதியாக ஏன் சொல்லமுடியாது என்றால், அவர் அண்ணா அவையில் இரண்டாம் இடத்தில் இருந்திருக்கிறார். அண்ணா மறைவுக்குப் பின் இடைக்கால முதல்வராக இருந்திருக்கிறார் (அப்புறம் எப்படி முதல்வர் ஆக முடியாமல் போனது என்பதற்குப் பெரிய கதையே இருக்கிறது. விருப்பம் இருந்தால் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!). எம்.ஜி.ஆர். அவையில் இரண்டாம் இடத்தில் இருந்திருக்கிறார். அதற்குப்பின்தான் சீப்பட்டது-லோல் பட்டது எல்லாம். அன்பழகன் என்று ஏன் உறுதியாகச் சொல்லவும் முடியாது என்றால், அவரும் பல அவைகளில் இரண்டாம் இடத்தில் இருந்திருக்கிறார்; எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்; இன்றுவரை திமுகவில் பொதுச்செயலாளராக இருந்து  வருகிறார்; நெடுஞ்செழியன் அளவுக்கு வெளிப்படையாகச் சீப்படவோ-லோல் படவோ இல்லை. இந்தப் பொழுதில் அவர்களுக்காக நம் ஆழ்ந்த இரக்கங்களைத் தெரிவித்துக் கொண்டு அடுத்த அணிக்குச் செல்வோம்.

1962-இல் நடந்த அடுத்த தேர்தலில், கருணாநிதிக்கு முன்பே திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்களில் இருவரான மதியழகன் மற்றும் என்.வி.நடராஜன் ஆகிய இருவரும் உள்ளே வந்திருக்கிறார்கள். ஆனால் நடராஜன் தோல்வியுற்று வெளியேறியிருக்கிறார். அவரும் தோற்கப் பிறந்தவர் என்று அப்போதே முடிவாகி விட்டது. மதியழகன் வென்று சட்டமன்றம் சென்றிருக்கிறார். இவரும் அதற்குப் பின்பு பெரிதாகச் சாதிக்கவில்லை. நெடுஞ்செழியன் இம்முறை வென்று உள்ளே வந்து விட்டார். சமீபத்தில் மரணமடைந்த எஸ்.எஸ்.இராஜேந்திரன் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றிருக்கிறார். அவரும் அரசியலில் பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது. சி.பா.ஆதித்தனார் திருச்செந்தூர் தொகுதியில் தோற்றிருக்கிறார். நீண்ட காலம் கழித்துத்தான் சட்டமன்றத்துக்குள் வந்தார் என்றாலும் நாஞ்சில் மனோகரனும் இந்த அணிதான் என்று சொல்லலாம். இதே ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்று டெல்லி சென்றவர் அவர். பொதுவுடைமை இயக்கத்தின் தலைசிறந்த சட்டமன்றப் பேச்சாளர்களில் ஒருவரான கல்யாணசுந்தரம் வென்றிருக்கிறார். மற்றபடி இன்றும் நிலைத்து நிற்கிற வேறு யாரும் இந்தத் தேர்தலில் கண்டெடுக்கப்படவில்லை.

திமுக வென்ற - காமராசரையே தோற்கடித்த - அடுத்த தேர்தலில் (1967), அண்ணாவுக்குப் பின் நெடுஞ்செழியன் என்கிற நம்பிக்கை சிறிது காலம் காக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் நடந்ததுதான் வரலாறே! சினிமாக்காரர்கள் அரசியலுக்குள் இழுத்து வரப்பட்டது இந்தத் தேர்தலில்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், நாகேஷ், பத்மினி, இரவிச்சந்திரன், ஜெய்சங்கர் என்று அவரவர் தெம்புக்கேற்ற அளவில் 'இறங்கி' உழைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். வென்று சட்டமன்றத்துக்கே சென்றுள்ளார். இதில் ஆற்காடு வீராசாமியும் உள்ளே வந்து விட்டார். இவருக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை திமுகவில் கிடைத்து விட்டது என்றே சொல்லலாம். இவரோடு உள்ளே வந்த எம். கண்ணப்பன் மதிமுக சென்றதால் காணாமல் போய்விட்டார். ஆனால் மதிமுகவில் சகல மரியாதைகளும் பெற்றிருந்தார். மத்திய அமைச்சராக இருந்து விட்டார். மதிமுக வென்றிருந்தால் இவர் மேலும் பல வெற்றிகள் கண்டிருப்பார். எல்லாம் நேரம்! அவருடைய நண்பர் எல்.கணேசன் இந்தத் தேர்தலில்தான் உள்ளே வந்திருக்கிறார். அவர் கதையும் கிட்டத்தட்ட அதேதான். மத்திய அமைச்சர் ஆக முடியாத கோபத்தைக் காட்டித் தன்னையும் அழித்துக் கொண்டு, மதிமுகவையும் ஓரளவுக்கு அழித்தார். பண்ருட்டி இராமச்சந்திரன் உள்ளே வந்ததும் இந்தத் தேர்தலில்தான். அவருடைய அனுபவமும் திறமையும் எம்.ஜி.ஆராலும் பின்னர் சமீபத்தில் விஜயகாந்தாலும் பயன்படுத்தப் பட்டு விட்டன என்றாலும் ஒரு கணக்குப் படிப் பார்த்தல் இன்று அதிமுக இவர் கையில் இருந்திருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை ஆழ்ந்த இரக்கங்கள்! பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மற்றும் என்.எஸ்.வி. சித்தன் ஆகியோரும் இந்தத் தேர்தலில் கண்டெடுக்கப்பட்டவர்களே. சித்தன் அப்போது வந்தவர் இப்போது காங்கிரஸ் கட்சியில் ஒரு பெரும் தலைவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சீட்டுக்கு மட்டும் உள்ளே வருபவராகத்தான் இருக்கிறார். ஏ.எல். சுப்பிரமணியன் இந்தத் தேர்தல் கண்டெடுத்தவர்தான். ஆனால் அந்த அளவுக்கு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான இன்னொரு விஷயம் - அண்ணா அவையில் எம்.ஜி.ஆர். அமைச்சர் ஆகவில்லை.

1971 மேலும் பல வியப்புகளைக் கண்டது. நெடுஞ்செழியன் நிரந்தர இரண்டாமிடத்துக்கான ஆள் என்று முதல் முறையாக உறுதி செய்யப்பட்டது. இப்போதும் எம்.ஜி.ஆர். வெறும் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே. அமைச்சர் எல்லாம் இல்லை. அப்போதே எம். கண்ணப்பன் மற்றும் பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர்கள். இதையெல்லாம் கண்ணப்பனும் பண்ருட்டி இராமச்சந்திரனும் நினைத்துப் பார்க்காமலா இருந்திருப்பர்?!

77-இல் அதிமுக ஆட்சி. எம்.ஜி.ஆர் முதல்வர். மதியழகனின் நீக்கம், நெடுஞ்செழியனின் விலகல் என்று திமுகவின் சித்து விளையாட்டுகள் தலைவிரித்து ஆடத் தொடங்கியபோது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கச் சிக்கிய கவர்ச்சி முகந்தான் எம்.ஜி.ஆரின் திரைமுகம். அவரைத் தம் வெற்றிக்கு மட்டும் பயன்படுத்தியதை முடிவுக்குக் கொண்டு வந்து, வெற்றியை அவருக்குக் கொடுத்து அதற்குப் பின் தம் அரசியல் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ளும் சூத்திரம் தமிழக அரசியலில் மொத்தத்தையும் புரட்டிப் போட்டது. இராஜாஜி, காமராசர் என்ற இருபெரும் தலைவர்களை இழந்து தமிழகம் ஒரு புதிய தலைமைக்குக் கீழ் வரத் தொடங்குகிறது. தேர்தலில் நிற்காவிட்டாலும் மூப்பனார் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து செயல்பட்டுப் பிரபலம் அடைகிறார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழகச் செயலாளராக அப்போதே வாலிபர் தா. பாண்டியன் தலைதூக்குகிறார். திமுகவில் ரகுமான்கான், துரை முருகன், செஞ்சி இராமச்சந்திரன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் வென்று உள்ளே வருகிறார்கள். இவர்கள் எல்லோருமே திமுகவில் அவரவர் தகுதிக்கேற்ற இடங்களைப் பெற்று விட்டார்கள் என்று சொல்லலாம். செஞ்சி மட்டும் மதிமுகவிலும் போய் அனுபவித்து விட்டுத் திரும்பினார். பொன். முத்துராமலிங்கம் நின்று தோற்றிருக்கிறார். அவரும் ஓரளவுக்கு அனுபவித்து விட்டார். அதிமுகவில் பொன்னையன், செங்கோட்டையன், சேடபட்டி முத்தையா, காளிமுத்து, திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தாமரைக்கனி, கருப்பசாமி பாண்டியன், பி.எச். பாண்டியன் ஆகியோர் முதல் அணியினர் என்று சொல்லலாம். அதிமுகவைப் பொருத்தமட்டில் எம்.ஜி.ஆருக்குப் பிந்தைய காலத்தில் நிரந்தர மரியாதை என்பது யாருக்கும் கொடுக்கப் படவில்லை. ஒரு முழு ஆட்சிக்காலமும் யாராவது மதிக்கப் பட்டிருந்தால் அதுவே பெரிய மரியாதை என்று கொள்ளலாம். அந்தக் கணக்குப் படி, பொன்னையன், செங்கோட்டையன், சேடபட்டி முத்தையா, காளிமுத்து ஆகியோர் ஓரளவு மரியாதையும் ஓரளவு அவமரியாதையும் அனுபவித்துச் சென்றனர் என்று சொல்லலாம். பன்னீர்செல்வத்துக்கு அடித்த லாட்டரி இவர்களில் ஒருவருக்குத்தான் அடித்திருக்க வேண்டும். அந்த இடத்தில் காளிமுத்து என்றுதான் முடிவாகி, ஒரு மணித்துளியில் எல்லாம் மாறியதாக ஒரு கதை உண்டு. விருப்பம் இருந்தால் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள்! செங்கோட்டையன் இன்னும் கொஞ்சம் மதிக்கப் பட்டிருக்க வேண்டும். திருநாவுக்கரசு மிகப்பெரும் தோல்வி. ஓரளவு தப்பிவிடுவார் போலத் தெரிந்தது. ஆனால் அரசியல் பிழைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அங்குமிங்கும் போய் வீணாகிவிட்டார் இப்போது. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளிலும் இருந்து ஓரளவு வாழ்ந்து விட்டார். பி.எச். பாண்டியன் ஓரளவுக்குத்தான் வாழ்ந்தார். மதிக்கப்பட வேண்டிய அளவுக்குப் பெரிதாக மதிக்கப்படவில்லை. தாமரைக்கனி, கருப்பசாமி பாண்டியன் ஆகிய இருவரும் அமைச்சர்கள் இல்லை. கடைசிவரை அமைச்சர்கள் ஆகவும் இல்லை. நல்லகண்ணு அம்பாசமுத்திரத்தில் நின்று தோற்றிருக்கிறார். அவருக்கும் வெற்றி என்பது எப்போதும் கிட்டவேயில்லை. காலம் கடந்து இப்போது போட்டு அவர் மீது விளம்பர ஒளி பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதும் அதற்காகத் தேர்தலில் வெல்ல விடுவார்களா என்று தெரியவில்லை.

இரண்டே ஆண்டுகளில் காங்கிரசோடு கூட்டணி வைத்து திமுக எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கலைத்தது. 1980-இல் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அப்போது ஏ.சி. சண்முகம், ஜெகத்ரட்சகன், முத்துச்சாமி, சத்தியமூர்த்தி, எஸ்.டி.சோமசுந்தரம், செம்மலை ஆகியோர் உள்ளே வந்திருக்கிறார்கள். இதில் எம்.ஜி.ஆருக்குப் பிந்திய அதிமுகவில், ஏ. சி. சண்முகம் எங்கும் பிழைப்பு ஓட்ட முடியாது என்று உணர்ந்த தருவாயில் சாதிக் கட்சி தொடங்கி அவருக்கேற்ற மாதிரி அவரது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்; ஜெகத்ரட்சகன் சமீபத்தில் திமுகவில் போய் வாழ்ந்து கொண்டார்; முத்துச்சாமி பெரிதாக வாழவில்லை; எஸ்.டி.எஸ். ஓர் ஆட்சிக்காலம் நன்றாக வாழ்ந்தார்; அதுவே போதும் அவருக்கு; சத்தியமூர்த்தியும் செம்மலையும் அப்படியே. செம்மலை நன்றாகச் செயல்பட்ட மாதிரி இருந்தது. அதெல்லாம் யாருக்கு முக்கியம்?! இவர்கள் எல்லோருமே இன்று அதிமுகவில் இருந்து சனநாயகத்தைக் காத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?! அந்தக் கொடுப்பினைதான் நமக்கு இல்லையே! மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நெடுமாறன் நின்று வென்றிருக்கிறார். தென்கோடிக் குமரி அனந்தன் வடகோடித் திருவொற்றியூரில் நின்று வென்றிருக்கிறார். 

1984-இல் வளர்மதியும் பரிதி இளம்வழுதியும் நுழைந்திருக்கிறார்கள். ஆயிரம் விளக்கில் நின்று தோல்வியோடுதான் ஸ்டாலின் வாழ்க்கை தொடங்கியிருக்கிறது. அவரோடு சேர்ந்து வீரபாண்டி ஆறுமுகமும் தோற்றிருக்கிறார். அதையெல்லாம்விட முக்கியமான நுழைவு - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்தத் தேர்தலில் வென்று சட்டமன்றம் நுழைந்திருக்கிறார். ஆக, இவரும் சட்டமன்ற உறுப்பினராகத் தொடங்கியவர்தான். உள்ளூர் அரசியலில் இவருக்கும் நீண்ட நெடிய அனுபவம் இருக்கிறது. இந்தத் தேர்தலில்தான் நாஞ்சில் மனோகரன் மாநில அரசியலுக்குள் நுழைகிறார்.

1989 தேர்தலின் முக்கியத்துவம் என்னவென்றால், இதுதான் அசைக்க முடியாத சக்தியாக இருந்த எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிந்தைய முதல் தேர்தல். இதில்தான் ஜெயலலிதா உள்ளே வருகிறார் (இவ்விடத்தில் 84-இல் நாடாளுமன்ற மேலவை சென்றார் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்). ஆக, அனுபவத்தின்படி, இதற்கு முன் நாம் பார்த்த பெயர்கள் அனைத்தும் இவரைவிட அரசியலில் மூத்தவர்கள். இதில் எத்தனையோ பேர் இன்றைக்கு இவருடைய காலில் விழுந்து பிழைப்பு நடத்திக் கொண்டும் மீதிப் பலர் இவருக்குப் பயந்து ஓடி ஒளிந்து கொண்டும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டால் விதியை எப்படி நம்பாமல் இருக்க முடியும்? சொல்லுங்கள்! கே.என். நேரு இப்போதுதான் உள்ளே வருகிறார். மூப்பனார் வென்று சட்டமன்றம் சென்றார். இந்தத் தேர்தல்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட பலத்தை நிரூபித்த கடைசித் தேர்தல். அதிமுக இரண்டாக உடைந்ததில் பலனடைந்த இரு பெரும் கட்சிகள் திமுகவும் காங்கிரசும். திமுக வென்றது; காங்கிரஸ் தமிழகத்தின் மூன்றாம் பெரிய கட்சி என்று நிறுவப்பட்டது. ஸ்டாலின் முதன்முறையாக சட்டமன்றம் சென்றார். அவரோடு பொன்முடியும் நுழைந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜானகி அணி ஒரே இடத்தில் மட்டும் வென்று (சேரன்மாதேவியில் பி.எச். பாண்டியன்) அவர் உட்பட எல்லோரும் பெரும் தோல்வியைத் தழுவினர். இதுதான் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதாதான் என்று உரக்கச் சொன்ன தேர்தல்.

91-இல் ஜானகி அணி ஜெயலலிதா அணியோடு இணைந்து மீண்டும் பலமான அதிமுக உருவானது. ஜெயலலிதா முதல்வர் ஆனார். அதுதான் தமிழக அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் மாற்றம். இதற்கு முந்தைய திமுக ஆட்சி மோசமில்லை என்றாலும், விடுதலைப்புலி ஆதரவாளர் என்று சொல்லி அதைக் கலைத்து (உபயம்: கொஞ்ச நாள் சட்ட அமைச்சராக இருந்த சுப்ரமணியசாமி), பின்னர் ராஜீவ் காந்தியின் மரணம் கொடுத்த அலையைப் பயன்படுத்தி பெரும் வெற்றி பெற்று வந்து அமர்ந்தார் ஜெயலலிதா. அடுத்த ஐந்தாண்டுகள் நடந்தது வரலாறு. அத்தனைக்கும் பின் இன்றும் அவர் அரசியலில் இவ்வளவு பெரும் சக்தியாக இருப்பதுதான் நம் அரசியலின் புரியாத புதிர். இது போலத் திமுகவும் திரும்பத் திரும்பப் பல வரலாறுகள் படைத்திருந்தாலும் அந்தக் கட்சி உயிர்தெழுந்ததற்கு ஒரே காரணம் - திமுகவில் எப்போதும் உட்கட்சி சனநாயகம் ஓரளவுக்கு இருந்து கொண்டே இருந்தது. கடந்த பத்தாண்டுகளில்தான் அது மிகவும் சீர்கெட்டு விட்டது. தீவிர விசுவாசிகளாக ஒரு தொண்டர் கூட்டம் இருந்தது - இருக்கிறது. இந்தத் தேர்தலில்தான் பாட்டாளி மக்கள் கட்சி உதயமானது. இன்றளவுக்கு நகைச்சுவை மன்னராகி இராத டி.ராஜேந்தர் தன் பங்குக்கு அவரும் ஒரு கட்சி ஆரம்பித்தார். பின்னர் கலைத்து விட்டு மீண்டும் திமுகவில் சேர்ந்தார். பின்னர் இன்னொரு கட்சி ஆரம்பித்தார். அதன்பின் அவரும்  இன்றொரு வரலாறாகி நிற்கிறார்!

பழங்களைப் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருப்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இதற்குப் பின் வந்த எவரையும் பழம் என்று அழைக்க முடியாது. காய் அல்லது பழுத்துக் கொண்டிருக்கும் காய் என்றுதான் கொள்ள முடியும். என்ன சொல்கிறீர்கள்? இதுவரை பன்னீர்செல்வம் காட்சிக்குள் வரவில்லை என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர் எவ்வளவு பெரிய மச்சக்காளை என்பது உங்களுக்குப் புரியும்!

இதில் சிற்சில கோளாறுகள் (கருத்து மாறுபாடுகள் அல்ல) இருக்கலாம். இருந்தால் தெரிவியுங்கள். திருத்தி விடுகிறேன். 

அடுத்ததாக, தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் இதுவரை நிகழ்ந்த அதிர்ச்சித் தோல்விகள் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம் என்று திட்டம். பார்க்கலாம். எப்போது முடிகிறது என்று! 

நன்றி! வணக்கம்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி