அமெரிக்காவின் அஅஅ...அஅ+... (USAAA To USAA+)

நண்பர் சரவணக்குமாரிடம் இருந்து "உலகமயமாவோமே!" என்று சொல்லி இன்னொரு தலைப்பு. "அமெரிக்காவின் அஅஅ தரம் அஅ+ ஆகக் குறைக்கப்பட்டது பற்றிப் பேசலாமே!" என்றார். ம்ம்ம்... அதை ஏன் விட்டு வைக்க வேண்டும்? வாருங்கள் கடையலாம். இதோ...

எப்போதும்போல், அடிப்படையில் இருந்து ஆரம்பிப்போம். எங்கு களைப்பாகிறோமோ அங்கு நிறுத்துவோம். அதற்கு முன்பு எனக்கும் பொருளியலுக்குமான தொடர்பைக் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். சின்ன வயதில் எப்போதுமே எனக்கு என்னை விடப் பெரியவர்களோடு இருப்பது மிகவும் பிடிக்கும். எங்கள் தெருவில் சதக் அப்துல்லா என்றொரு சீனியர் நண்பர் இருந்தார். என்னை விடப் பல வருடங்கள் மூத்தவர். பல வருடங்கள் என்றால்? தெளிவில்லை. சரியாகச் சொல். எத்தனை வருடங்கள்? சரி. ஐந்து வருடங்கள். நான் ஏழு படித்துக் கொண்டிருந்தபோது அவர் பன்னிரண்டு படித்துக் கொண்டு இருந்தார். மூன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை பெரும்பாலும் நான் இரண்டாவது ரேங்க்தான். ஆறு வருடமுமே முதலில் வந்தது ஒரே ஆள் இல்லை. வெவ்வேறு ஆட்கள். முதலிடத்துக்கு மட்டும்தான் எப்போதும் போட்டி. இரண்டாவது இடத்துக்கு இல்லாத மாதிரிப் பார்த்துக் கொண்டேன். எனவே, பதினொன்று செல்லும்போது முதல் பிரிவில் (அதாவது, கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கொண்ட பிரிவு) இடம் கிடைக்கும் இரண்டாவது ஆளாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், சதக் மூன்றாம் பிரிவில் (வரலாறு, பொருளியல், அரசியலறிவியல் மற்றும் புவியியல் பாடங்கள் கொண்ட பிரிவு) படித்துக் கொண்டிருந்தார். இதே பிரிவை பக்கத்தில் இருந்த சில ஊர்களில் நான்காம் பிரிவு என்றும் சொல்வார்கள். அங்கே கணிதம், பொருளியல், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் கொண்ட பிரிவை மூன்றாம் பிரிவு என்பார்கள். மூன்றாம் பிரிவை வணிகவியல்ப் பிரிவு என்றும் நான்காம் பிரிவை கலைப் பிரிவு என்றும் சொல்வார்கள்.

மிகச் சிறிய வயதில் சதக் எனக்குச் சொல்லிக் கொடுத்த பாடங்கள் இரண்டு (ஏழு படிக்கும் பொது எனக்கு மிகச் சிறிய வயது என்று இப்போது சொல்கிறேன் என்றாலும் அப்போது அதை ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன்). முதல் பாடம் - "எப்போதும் மனப்பாடம் செய்யக் கூடக் கூடாது. எதைப் படித்தாலும் புரிந்து படிக்க வேண்டும். புரியாததை விட்டு விட வேண்டும். கருத்து முக்கியமே தவிர மதிப்பெண்கள் அல்ல!". புரிந்து படிப்பது எப்படி என்று அவர் படிக்கும்போது காட்டி எனக்குச் சொல்லியும் கொடுப்பார்.  கல்லூரியில் கடைசித் தேர்வு எழுதிய நாள் வரை இதை நான் மறக்கவே இல்லை. அடுத்த பாடம் - "மனித இனத்துக்கு அறிவியலை விடக் கலை மிகவும் முக்கியம்!". மேல்நிலைப் பள்ளி செல்லும்வரை இதற்காக நான் பல வாதங்கள் செய்திருக்கிறேன். இப்போது அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், கலைக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை நாம் சரியாகக் கொடுக்கவில்லை என்றே கருதுகிறேன். கலை என்றால், கலைப்பாடங்கள் - அதாவது, வரலாறு, பொருளியல், அரசியலறிவியல் மற்றும் புவியியல் பற்றிச் சொல்கிறேன். ஆடலும் பாடலும் வரைதலும் பற்றி அல்ல.

என்னுடைய வாதங்களில், "அறிவியல் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும்; ஆனால் கலைதான் நமக்கு பழமையைக் கற்றுக் கொடுக்கும்; அது இல்லாவிட்டால், முன்னேற்றம் கண்ட - ஆனால் பண்புகளற்ற ஒரு இனமாகத்தான் நாம் இருப்போம்!" என்பது போன்ற தத்துவங்கள் எல்லாம் பேசுவேன். இப்போதும் அது சரி என்றுதான் எண்ணுகிறேன். வரலாறு தெரியாத சமூகங்கள் செய்த தப்பையே செய்வதிலேயே நேரத்தை வீணடித்து விடுவார்கள் அல்லவா? எனவே, பத்தாம் வகுப்பில் முதல் மாணவனாக வந்தாலும் (அப்படி வரவில்லை) மூன்றாம் பிரிவில்தான் சேர வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். அந்த நேரத்தில் அது புரட்சிச் சிந்தனை. நல்லவேளையாக, சரியான நேரத்தில் புத்தியைக் கடன் கொடுக்காமல் தப்பினேன். எல்லோரையும் போல ஊரோடு ஒத்து ஊதி விட்டேன். ஒருவேளை, இப்போதிருப்பதைவிட மிகப் பெரிய ஆளாகக் கூட ஆகியிருக்கலாம். ஆனால், பயணம் கொஞ்சம் கடினமானதாகவே இருந்திருக்கும். மேல்நிலையில் முதல் பிரிவில் சேர்ந்தாலும் கலைப் பாடங்கள் மீதான காதல் குறையாமல் இருந்தது. அப்போதும், கலைப்பிரிவு மாணவர்களுடன் அவர்களுடைய பாடங்கள் பற்றி அதிகம் பேசுவேன்.

ஓர் அறிவியல் மாணவன் அதிக பட்சம் என்னவாக முடியும்? விஞ்ஞானி! ஆனால், கலை மாணவன் அதிக பட்சம் என்னவாக முடியும்? நிதி அமைச்சர்! யார் பெரியவர்? நிதி அமைச்சர்! பின்னர்தான் புரிந்தது விஞ்ஞானி ஆனால் நாட்டின் குடியரசுத் தலைவராகவும் ஆகலாம் என்று. யார் பெரியவர் - நிதி அமைச்சரா குடியரசுத் தலைவரா? தெரியவில்லை! எனவே, என் மூளையின் எங்கோ ஒரு மூலையில் இந்தியாவின் பிரதமராவதற்கு முன்பு நிதி அமைச்சராவேன் என்றொரு படம் ஓடிக் கொண்டிருந்தது. சிக்கலை மேலும் பெரிதாக்க, நம்ம பகுதிக்காரர் (சிதம்பரம்... அப்போது அவர் மிகவும் நேர்மையான அரசியல்வாதி!) தேவே கவுடா அமைச்சரவையில் நிதி அமைச்சர் ஆகி இருந்தார் (அப்போது தேவே கவுடா எவ்வளவு நேர்மையானவர் என்று தெரியவில்லை!). எனவே, அவர் ஊருக்கும் எங்கள் ஊருக்குமான தூரத்தையும் அவருக்கும் எனக்கும் நடுவில் நிதி அமைச்சராகப் போகிறவர்களின் எண்ணிக்கையையும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். அந்தக் கனவுதான் என்னை வரலாற்றுப் புத்தகங்களின் பின்னாலும் பொருளியல்ப் புத்தகங்களின் பின்னாலும் துரத்திக் கொண்டிருந்தது.

கல்லூரியில் கணிப்பொறியியல் படிக்கும்போது கூட, நண்பர்களிடம் இருந்து பொருளியல்ப் புத்தகம் வாங்கி, படிக்க முக்கிக் கொண்டு இருப்பேன். கவனிக்க - முக்கல் மட்டும்தான்... படித்தல் இல்லை! கடுமையான முக்கல்களுக்குப் பின் எனக்குப் புரிந்ததெல்லாம் இரண்டே வார்த்தைகள்தான் - பேரினப் பொருளியல் மற்றும் நுண்ணினப் பொருளியல். வேறு எதுவும் விளங்க வில்லை. அதுவும், நிதி அமைச்சராக நுண்ணினப் பொருளியல் புரியவேண்டியதில்லை என்றொரு புரிதல் வேறு. பின்னர்தான் உண்மையான இரகசியம் புரிந்தது - 'நிதி அமைச்சராக எதுவுமே புரிய வேண்டியதில்லை. கீழே இருக்கும் அதிகாரிகள் உன்னைப் புரிந்து கொண்டாலே போதும்!' என்று. எனவே, இதுதான் எனக்கும் பொருளியலுக்குமான தொடர்பு. சீ கருமம்... இப்பவே இத்தனை பத்திகளா! வாருங்கள் மேட்டருக்குள் குதிப்போம்...

AAA to AA+? அதென்ன பொருளியலில் ABCD? அதற்குப் பெயர் நாணய நிலைத் தரவரிசை (CREDIT RATING). அப்டின்னா? ஒரு நாடு அல்லது நிறுவனத்தின் நாணயத் தன்மை. அப்டின்னா? வேறொன்றுமில்லை - ஒருவரின் கடனைத் திருப்பிக் கட்டும் ஆற்றல். தனி மனிதர்களுக்கு வித விதமாகக் கடன் அட்டை (CREDIT CARD) கொடுக்கிறார்களே அது போல. டைட்டானியம் அட்டை, பிளாட்டினம் அட்டை, தங்க நிற அட்டை, வெள்ளி நிற அட்டை என்கிறார்களே அப்படி. ஆண்டுக்கு இருபது இலட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவருக்கு டைட்டானியம் அட்டை. பதினைந்து இலட்சத்துக்கு மேல் சம்பாதிப்போருக்கு பிளாட்டினம் அட்டை. பத்து இலட்சத்துக்கு மேல் என்றால் தங்க நிற அட்டை. அதற்கும் கீழ் உள்ளோருக்கு வெள்ளி நிற அட்டை. இதெல்லாம் நமக்கு வங்கிகள் வைத்திருக்கும் தரவரிசை. அது போலவே நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் தரவரிசை போடச் சில முகமையகங்கள் (AGENCIES) உள்ளன. மூடி'ஸ் (MOODY'S), ஸ்டேண்டர்ட் & பூவர் (S&P), மற்றும் ஃபிட்ச் (FITCH) ஆகியவை அவற்றுள் சில முக்கியமான முகமையகங்கள். AAA, AA+, AA, AA-, A+, A, A- வில் ஆரம்பித்து D வரை நீள்கிறது இந்தத் தர வரிசை. இங்கே '-' என்பது எதிர்மறை என்றில்லை. அந்த எழுத்துக்குழு வரிசையில் அவற்றுக்குக் குறைவான தரம். அவ்வளவே. எனவே, AA- என்பது A+ வை விட மேல்தான். AAA எல்லோருக்கும் மேலானவர். D என்பவர் டிமிக்கிப் பார்ட்டி (DEFAULTER).  B மற்றும் C வரிசை கூட அவ்வளவு நல்லவர்கள் இல்லை. இந்த எழுத்துக் குழுக்களின் சேர்ப்பு முறை மட்டும் ஒவ்வொரு முகமையகத்துக்கும் சிற்சிறிது மாறும்.

உலகப் பொருளாதாரம் கண்ட எல்லாச் சரிவுகளையும் மீறி, இந்தத் தர வரிசை போட ஆரம்பித்த நாளில் இருந்து அமெரிக்கா எப்போதுமே AAA வாகவே இருந்திருக்கிறது. மேலே சொன்ன மூவரில் S&P இப்போது அமெரிக்காவை AA+ க்குப் பிடித்துத் தள்ளியிருக்கிறது. அதுமட்டுமில்லை, இப்படியே போனால் பிற்காலத்தில் AA ஆனாலும் ஆகலாம் என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறது. மூடி'ஸ் மற்றும் ஃபிட்ச் இருவரும் அந்த வேலையை இன்னும் செய்ய வில்லை. மூடி'ஸ் இன்னமும் அமெரிக்காவைப் பெரிதாகவே பேசுகிறது. ஃபிட்ச் என்கிறவர்கள், "நாங்கள் முழுதாக எங்கள் ஆய்வை முடிக்கவில்லை!" என்கிறார்கள். அதன் பொருள் என்னவென்றால் அவர்களும் கீழே பிடித்துத் தள்ளலாம் என்பதே. இந்தத் தர வரிசையைக் கொடுத்தபோது, S&P அமெரிக்காவைக் கொஞ்சம் திட்டவும் செய்திருக்கிறது. எப்படி? "உன்னிடம் நிலைப்புத் தன்மை இல்லை, செயலுறுதி இல்லை, உன்னைக் கணிக்கவும் முடியவில்லை!" என்று. நம்ம பேச்சில் சொன்னால், அதை எப்படிச் சொல்லலாம்? "நண்பர்களே... உறவினர்களே... சுற்றத்தாரே... இந்த ஆளை இது வரை நம்பியது போல் நம்பாதீர்கள். இவனிடம் அதிகமாகப் பணத்தைக் கொடுக்காதீர்கள். திரும்ப வாங்க முடியாது. அவர்களிடம் எதுவும் வாங்கினால் சொன்ன விலைக்கே வாங்கி விடாதீர்கள். அவர்களுடைய மதிப்பு அது அல்ல. பாதி விலைக்குக் கேட்டாலும் வழிக்கு வருவார்கள். விபரமாக இருந்து கொள்ளுங்கள்!". அத்தோடு நிறுத்தாமல், கண்ணுக்குத் தெரியும் தொலைவில் இதைச் சரி செய்யவும் இவர்களிடம் சரியான திட்டங்கள் இல்லை என்றும் சொல்லி விட்டார்கள்.

சரி. இது ஏன் இப்படி ஆனது? ஏனென்றால், ஒவ்வோர் ஆண்டும் பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள். நம்மைப் போன்றோருக்கு இது புதிதில்லை. ஆனால் அவர்களுக்கு? கூடவே கூடாது. அவர்கள் உலகப் பணக்காரர்கள். உலகின் மிகப்பெரும் பொருளாதாரம் அவர்களுடையது. அவர்கள்தாம் உலகின் தலைசிறந்த வல்லரசு. அப்புறம் ஏன் ஒவ்வோர் ஆண்டும் பற்றாக்குறை நிதி நிலை அறிக்கை? அவர்கள் சக்திக்கு மீறிச் செலவழித்து விட்டார்கள். செலவும் செய்து அழித்தும் விட்டார்கள். எங்கு போய்ச் செலவழித்தார்கள்? போர்களில், ஆயுதங்கள் தயாரிப்பதில், மேலும் பல வேண்டாத வேலைகளில்! அவர்களுடைய போர்கள் வேண்டாத வேலைகளா? தவிர்த்திருக்கவே முடியாதவையா? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி. சரியாகத் தெரியவில்லை. ஆனால், என் இரண்டு செண்ட் அறிவு சொல்கிறது - இராக் போரைத் தவிர்த்திருக்க முடியும் என்று. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

அடுத்து என்ன நடக்கும்? உடனடியாக மனதுக்கு வருவது இன்னொரு பொருளியல்ச் சரிவு. பொருளியல்ப் பெருவளர்ச்சிகளும் சரிவுகளும் வளர்பிறை தேய்பிறை போல வர ஆரம்பித்து விட்டன இப்போது. ஆனாலும் நிறையப் பேருக்கு சேமிப்பின் மதிப்பு தெரியவில்லை. வளர்ச்சியில் கிளர்ச்சி செய்கிறார்கள். சரிவில் சங்கூதுகிறார்கள். இப்போதைய தேவை - சிந்தனையிலும் செயலிலும் பொருளியல்ப் பழமைவாதம். பொறுமை காக்க வேண்டும். ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும். ஒன்றுக்குமாகாத வெற்றுத் தாளைக் கூட வேண்டாததா என்று இரண்டு முறை கேட்டுவிட்டுப் போட வேண்டும். பீதி கூடக் கூட இங்கு முதலீடு செய்திருக்கும் மற்ற நாட்டுக் காரர்கள் எல்லோரும் பணத்தை எடுத்துக் கொண்டு தலை தப்பினால் போதும் என்று ஓடப் பார்ப்பார்கள். அவர்களிடம் உட்கார்ந்து சரிக்கட்டுவதிலும் சமாதானப் படுத்துவதிலும் ஏகப்பட்ட நேரம் செலவிட வேண்டும்.

அவர்களுடைய சொந்த மக்களுக்கு என்னவாகும்? எதற்காக இருந்தாலும் அவர்கள் கூடுதல் வட்டி கட்ட வேண்டி வரும். கூடுதல் வரி கூடக் கட்ட வேண்டி வரும். சொத்துகளின் விலை அனைத்தும் டொமீர் எனக் கீழே விழும். எப்படி? டொமீர் என! வாங்கிய விலைக்கு வீட்டை விற்க முடியாது. பல மடங்கு குறைவாகும். அதற்கும் வாங்க ஆள் வர மாட்டார்கள். மற்ற நாட்டுப் பண மதிப்போடு பார்த்தால் இவர்களின் டாலர் மதிப்பு குறையும். எனவே, அங்கே உட்கார்ந்து குளு குளு குளிர் பானம் அருந்திக் கொண்டிருக்கும் நம் ஒன்னு விட்ட அண்ணன், தம்பி, மச்சான்மார் சிலருக்கும் அடியில் கொஞ்சம் சுடும். ஆனால், எல்லாத்துக்கும் முடிவாக, அவர்கள் பொருளியலில் பல நல்ல திருத்தங்கள் ஏற்படும் என்கிறார்கள் அங்குள்ள ஆன்றோர்கள். அந்த முடிவு எப்போது? அது எனக்குத் தெரியவில்லை. அந்த ஆன்றோருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். திவாலாகி விட்டோம் என்று எந்த வங்கியும் அரசாங்கத்திடம் உதவி கேட்டுப் போக முடியாது. ஏன்? அரசாங்கம் கடுப்பாகி விடும். "அடப் பரதேசிப் பயபிள்ள... நானே கால் ரெண்டையும் முதலை வாயில குடுத்துட்டு காப்பாத்த ஆளில்லாம கத்திக்கிட்டு - முக்கிக்கிட்டு இருக்கேன். இதுல நீ வேறயா?" என்று கையில் கிடைத்ததைக் கொண்டு மூஞ்சியில் வீசும்.

இதற்கு ஒபாமா எப்படிப் பதில் சொல்லியிருக்கிறார் தெரியுமா? "எந்த ஏஜென்சி என்ன சொன்னாலும் பரவாயில்லை. நாம் ஐக்கிய அமெரிக்க   மாநிலங்கள். நாம் எப்போதுமே AAA தான்!". ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுக்கு சுருக்கம் என்னவென்று மறந்து விட்டது போல அவருக்கு. ஒபாமா சார், நீங்க எப்பவுமே USA, ஆனா AAA இல்ல. இது போன்ற எவ்வளவு பேச்சுகளைக் கேட்டு விட்டோம் நம்ம ஊரில்? இதற்கு மேலெல்லாம் பேசும் ஆட்கள் இருக்கிறார்கள் இங்கே. இது அவர் இரண்டாம் முறை அதிபராகத் தடையாக இருக்குமா? பெரும்பாலும் அப்படித்தான்! அவர் வந்தபோது எவ்வளவு நம்பிக்கை. நோபல் பரிசு கூடக் கொடுத்தார்கள். எல்லாமே வண்ணமயமாக இருந்தது. இன்னைக்கு நிலைமை முழுக்க முழுக்க இருட்டாக ஆனது போல் இருக்கிறது. இப்படியொரு துயர முடிவு நிகழ்ந்திருக்கக் கூடாது பாவம். இது எல்லாமே அவருடைய பிரச்சனையா? இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்தான் பொறுப்பு. அவர்களுடைய மன்மோகன் சிங் ஒருவர் (அதாவது, நல்ல பொருளியலாளர் என்று சொல்ல வந்தேன்!) தலைமை ஏற்க வேண்டும். ஆனால், அவர்களுக்கும் நம்ம பிரச்சனைகள் வந்து சேர்ந்து விடக் கூடாது. :)

இதில் இருந்து மற்ற நாடுகளுக்கு என்ன பாடம் இருக்கிறது? நாடுகளுக்கு மட்டுமல்ல... தனி மனிதர்களுக்கும் ஒரு சூப்பர்ப் பாடம் இருக்கிறது. கட்ட முடியாத அளவு கடன் வாங்காதே. வாழப் புது வீடு, போய்வரப் புதுக் கார், பாதுகாப்புக்கு ஆயுதங்கள், வசதிக்கு வார இறுதி ஷாப்பிங், உல்லாசக் களியாட்டங்கள், பொழுதுபோக்குக்குக் கடன்களை வாங்கிக் குவித்தல்... இவை எல்லாமே கொஞ்ச காலம் பொறுக்கலாம். முடிந்ததை விடக் கூடுதலாகச் செலவு செய்து தொலைத்தால், நாணயமற்றவன் என்றொரு பெயர் - அதுவும் அவப்பெயர் வாங்கி மூலையில் உட்கார வேண்டி வரும். அப்புறம் ஒருத்தரும் உதவ வர மாட்டார்கள். வாழ்ந்து கெட்டவனைப் பார்த்து என்ன பேசுவார்கள்? பாவம் என்பதோடு பாவி என்றும் சொல்வார்கள். வேண்டியதெல்லாம் தேவை என்று சொல்லக் கூடாது. வேண்டியது வேறு. தேவை வேறு. பையிலும் கடன் அட்டையிலும் இருந்து ஒவ்வொரு பைசாவையும் கணக்குப் போட்டுச் செலவழிக்காவிட்டால், பையும் இராது; அட்டையும் இராது.

இவை எல்லாமே மிகைப் படுத்தப் பட்ட வரிகளா? இருக்கலாம். முறையான சட்டதிட்டங்களும் சிக்கன நடவடிக்கைகளும் கொண்டு வரப்பட்டால், திரும்பவும் பழைய இடத்தைப் பிடிக்கலாம். ஆனால், அவர்களுடைய அறிவாளர்களே சொல்கிறார்கள் - "முடியும், ஆனா முடியாது!" என்று. அதாவது, இப்போதைக்கு முடியாது. காலம் ஆகும். சிலர் சொல்கிறார்கள் - "AAA கிடைக்க வேண்டுமானால் காலம் ஆகலாம். ஆனால், பீதியையும் உடனடிப் பிரச்சனைகளையும் ஓரளவு பரவாயில்லாமல் சமாளிக்கலாம்!" என்று. எல்லாத்துக்கும் மேல் இது ஒரு மானப் பிரச்சனை என்பதுதான் முக்கியம். மற்றபடி, இன்னும் இவர்களுக்குக் கீழ் நூற்றுக்கும் மேலான நாடுகள் இருக்கின்றன. அதை விட முக்கியம் - அவர்களுக்கும் பிழைப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது. நம்மிடம் கூட சில டிப்ஸ் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நாம் எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள இடுகையின் முடிவுக்குச் செல்லுங்கள். :)

இந்தியாவுக்கு இதனால் என்ன பாதிப்பு? அவர்கள் மேல் நாம் ரெம்பவும் குதிரை ஏறிக் கொண்டிருப்பதால் நமக்கும் கொஞ்சம் பிரச்சனைதான் என்கிறார்கள் சிலர். அதுவும் உண்மைதான். சமீப காலங்களில் நாம் கொஞ்சம் ஓவராகவே அவர்களோடு கொஞ்சிக் குலாவுகின்றோம். மற்ற நாடுகளைப் போலல்லாமல், எவருடைய பொருளியல்ச் சரிவும் நம்மை எதுவும் செய்யாத அளவுக்கு நம் பொருளியல் பலமானது என்றும் சிலர் சொல்கிறார்கள். வழக்கம் போல், குழப்பத்தில்தான் மாட்டிக் கொள்கிறேன் இதிலும்! நமக்குப் புரிகிற மொழியில் விபரமான ஆள் யாராவது கருத்துரையில் இதை விளக்கினால் கோடி நன்றி கொடுப்பேன் - அரசியல்ப் பாரபட்சம் ஏதும் இல்லாமல் பேச வேண்டும். ஆக, இத்தோடு முடிகிறது கதை.

கூடுதல் விபரமாக, இன்னமும் AAA ஆக இருக்கிற ஆட்கள் யாரென்று பார்ப்போமா? யோக்கியர்கள்... மன்னிக்க... நாணயகாரர்கள் (இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா?!)... அதில் 16 பேர் இருக்கிறார்கள். ஐஸ்ல் ஆஃப் மேன் (இதற்கு முன் இந்தப் பெயரைக் கேள்விப் பட்டதே இல்லை!) எனும் சின்னப் பையன் உட்பட. மீதி 15? ஃபிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, UK, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, டென்மார்க், ஃபின்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாண்ட்ஸ், மற்றும் நியூசிலாந்து. வெவ்வேறு பட்டியல்கள் வெவ்வேறு பெயர்கள் கொண்டிருக்கின்றன. எனவே, உறுதியாகத் தெரியவில்லை! இரண்டாவது பெரிய பொருளாதாரம் சீனா AA-.

சரி, நம்ம எங்க இருக்கோம்? இந்தியா BBB-. நல்ல வேளப்பா! :)

கருத்துகள்

  1. ஆஹா.. பல உலக சமாச்சாரங்களை புட்டு புட்டு வெச்சிருக்கீங்களே.. நைஸ்

    பதிலளிநீக்கு
  2. நன்றாக புரியும்படி எழுதி இருக்கிறீர்கள். அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி நாராயணன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  4. பாரதி அருமை, உலக மயமாக்கலை பற்றி உன் கருது என்ன?

    பதிலளிநீக்கு
  5. நன்றி அருண்.

    உலகமயமாக்கல் பற்றி இன்னும் தெளிவான சிந்தனை இல்லை. நம்மைச் சுற்றியிருக்கும் அறிவாளிகள் நிறையப் பேர் எதிர்க்கிறார்கள். அதனால், அதிலும் கோளாறு இருக்கலாம் என்று தோன்றுகிறது. இருக்கத்தான் செய்கிறது. வந்த பணம் பரவலாக்கப் பட வில்லை. மேலும் மேலும் இடைவெளி அதிகமாகலாம்.

    ஆனால், உலகமயமாக்கலுக்குப் பின்பே நாமெல்லாம் இப்படி நல்ல நல்ல வேலைகளில் அமர்ந்தோம். அதுதான் நமக்கு இவ்வளவு பெரும் பெரும் கனவுகளைக் காண வழி செய்திருக்கிறது. அதனால் பயன் அடைந்தவன் - பயன் அடைந்தவர்கள் நிறையப் பேரைப் பார்த்தவன் என்ற முறையில் என்னால் அதை முழுமையாக வேஸ்ட் என்று ஒதுக்கித் தள்ள முடியவில்லை. முடிந்தால் அது பற்றியும் ஒரு கட்டுரை எழுதலாம். :)

    பதிலளிநீக்கு
  6. நல்லது, எதிர்பார்க்றேன். உலக மயமாக்கலினால் பலனடைதவர்களை விட பதிப்பு அடைந்தவர்கள் அதிகம் என்று எண்ணுகிறேன், மிக முக்கியமாக இந்திய விவசாயிகள் .

    பதிலளிநீக்கு
  7. கண்டிப்பாகக் கூடிய விரைவில் வெளியிடுகிறேன். குறிப்பாகத் தமிழ் விவசாயிகளின் பாடு எப்பவுமே திண்டாட்டம்தான்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி