கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (1/6)

கல்லூரி வாழ்க்கை எல்லோருக்குமே ஸ்பெஷல்தான். அதுவும் விடுதியில் இருந்து படிப்போருக்கு சூப்பர் ஸ்பெஷல். எனக்கு சூப்பர் ஸ்பெஷல். எங்கள் ஊரும் (நாகலாபுரம்) திருச்செந்தூரும் ஒரே மாவட்டத்தில்தான் இருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம். ஆனாலும் நூறு கிலோ மீட்டர் தொலைவு. நாங்கள் வட எல்லை. திருச்செந்தூர் தென் எல்லை. பல பஸ்கள் மாறி வர வேண்டும். குறைந்தது இரண்டு; அதிக பட்சம் நான்கு பஸ்கள். நாகலாபுரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர் அல்லது நாகலாபுரம்-விளாத்திகுளம்-தூத்துக்குடி-திருச்செந்தூர் அல்லது நாகலாபுரம்-விளாத்திகுளம்-எட்டையபுரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர் ஆகிய வழிகளில் வரலாம். எப்படி வந்தாலும் நான்கு மணி நேரம் கண்டிப்பாக ஆகும். அதில் பெரிதளவில் மாற்றம் இராது. எந்தக் குறிப்பிட்ட வழியையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கிடைக்கிற பஸ்ஸில் ஏறி விடுவது உத்தமம். நாங்கள் உத்தமர்கள் என்பதால் அப்படியே செய்து விடுவோம். நாங்கள் என்றால்? நான், மாரிச்சாமி, கண்ணபிரான் ஆகிய மூவர். முதல் வருடம் நான் தனியாகத்தான் இருந்தேன். மாரிச்சாமியும் கண்ணபிரானும் என்னுடைய இரண்டாம் ஆண்டில் வந்து சேர்ந்த ஜூனியர்கள். இதில் கண்ணபிரான் விளாத்திகுளம் வரை வந்து வேலிடுபட்டி செல்பவன். மாரிச்சாமி கடைசிவரை என்னுடனேயே வருபவன். நாகலாபுரம் வந்து அங்கிருந்து நடந்தோ சைக்கிளிலோ கல்லூரணி செல்பவன்.

விளாத்திகுளம்-நாகலாபுரம்-புதூர் பகுதி என்பது தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளின் பட்டியலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பகுதி. பெரிதாக நகரங்கள் ஏதும் இல்லாததால் பெரிதாக வாழ்க்கை முறையில் மாற்றம் ஏதும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் பகுதி. எல்லாக் கல்லூரியிலுமே பகுதிவாரியாகக் கூட்டம் சேர்வதைப் பார்த்து எங்கள் ஆட்களும் கூட்டம் சேர்க்க முயன்றால் அது நடக்காது. எந்தக் கல்லூரியிலும் இந்தப் பகுதிக்காரர்கள் அதிக பட்சம் ஐந்து பேருக்கு மேல் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. அப்படிப் பெரும்பாலும் பெரிய படிப்புகள் படிக்கப் போனவர்கள் எல்லோருமே ஊருக்கு வடக்கேயே போனார்கள். அருப்புக்கோட்டை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய ஊர்களுக்கே போனார்கள். ஓரிருவர் சாத்தூருக்குப் போயிருக்கலாம். படிப்புக்கு மட்டுமல்ல எல்லாத்துக்குமே வட தொடர்புதான் அதிகம். தென் தொடர்பு என்பது அந்தப் பகுதியில் அம்மா வீடு உள்ளவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். அது போக என் போன்ற சிலர், என்ன காரணம் என்றே தெரியாமல் தெற்கே கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்குப் போயிருக்க வேண்டும்.

என்ன படிக்கலாம்?
நான் எப்படிப் போனேன் என்ற கதையைச் சொல்லி விடுவோம். நானும் எல்லோரையும் போலவே மேனிலைக்கு அருப்புக்கோட்டை போய்ப் படித்தேன். மேனிலை படிக்கும்போது மனதில் உறுதியாக முடிவு செய்தது - அடுத்துப் படிப்பது கணிப்பொறியியலாக இருக்க வேண்டும் என்பது. நல்ல மதிப்பெண் கிடைத்தால் பொறியியலில் கணிப்பொறியியல் (B.E. COMPUTER SCIENCE), கொஞ்சம் குறைந்தால் இளமறிவியலில் கணிப்பொறியியல் (B.SC. COMPUTER SCIENCE), அதனினும் குறைந்தால் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் கணிப்பொறியியல் (POLYTECHNIC COMPUTER SCIENCE) என்று முடிவு செய்திருந்தேன். காரணம் - இளமறிவியல் கணிப்பொறியியல் படித்திருந்த பிரகாஷ் மச்சானும் முதுமறிவியல் கணிப்பொறியியல் படித்திருந்த மேலக்கரந்தை மகேஷ் அண்ணனும். இருவருமே படித்து முடித்து ஆரம்ப காலப் போராட்டங்களில் இருந்து உடனடியாக வெளி வந்து நல்ல வேலைகளில் அமர்ந்திருந்தனர். அதே படிப்பை நானும் படித்தால் வேலை வாங்கிக் கொடுக்க ஆள் இருந்தார்கள் என்ற நம்பிக்கை வேறு. அந்த நேரத்தில் அது போன்ற அத்துவானக் காட்டுக்குள் வாழ்ந்த என் போன்றோருக்கு இத்தகைய வழிகாட்டுதல் கிடைப்பதே குதிரைக் கொம்பு. கண்டிப்பாக எனக்கு எங்கோ மச்சம் இருந்திருக்க வேண்டும்.

இப்படியான ஒரு முடிவோடு மேனிலைத் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்தோம். எதிர்பார்த்தது போலவே குறைவாகவே மதிப்பெண் வந்தது. எதிர்பார்த்ததை விடவும் குறைவாக வந்தது. எதிர் பார்த்த அளவு வந்திருந்தால் கூடப் பொறியியல் கிடைத்திருக்கும். இலவச இடம் என்றால் மட்டுமே சேரும் உத்தேசம். சுயநிதிக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்திப் படிப்பதாக ஆர்வம் இல்லை. அதற்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அது மட்டுமில்லை. பொறியியல் என்பது அப்போதெல்லாம் மிக மிக நன்றாகப் படிப்போர் மட்டுமே படிக்க முடிந்தது. நான் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதால் அந்த ஆசையைக் கைவிட வேண்டிய கட்டாயம் வந்தது. எனக்கு அடுத்த வருடத்தில் இருந்தே மதிப்பெண்களும் தாராளமாக வழங்கப் பட்டன. பொறியியல்க் கல்லூரிகளும் தாராளமாகத் திறக்கப் பட்டன. இன்னோர் ஆறு மாதம் தாமதமாகப் பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது.

சரி, நடந்ததைப் பற்றிப் பேசுவோம். நடக்காதது பற்றிப் பேசத்தான் நாட்களும் பற்றாது; தாட்களும் பற்றாதே. பெரும்பாலும் பொறியியல் கிடைக்காது என்று உறுதியாகி விட்டது. வேறு எதற்கும் எங்கும் முயற்சிக்க வில்லை. எங்கள் ஊர்க்காரர் - குடும்ப நண்பர் - திரு. பால்பாண்டியன் அவர்கள் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். இப்போதும் தொடர்கிறார். அவரிடம் கருத்துக் கேட்கலாம் என்று கேட்டோம். "இந்த மதிப்பெண்ணுக்கு எங்கள் கல்லூரியில் முயலலாம். கணிப்பொறியியல் கிடைக்க வாய்ப்புள்ளது!" என்றார். முயன்றோம். இடமும் கிடைத்தது. சின்ன வயதில் இருந்து அவரிடம் எவ்வளவோ பேசியிருக்கிறோம். ரஷ்யாவில் போய் மருத்துவம் படிக்கப் போவது பற்றியெல்லாம் அவரிடமே அளந்திருக்கிறேன். கடைசியில் அவர் வழி காட்டுதலோடு அவர் பணி புரியும் கல்லூரியிலேயே போய் இறங்கியது ரஷ்யா செல்ல வேண்டிய விமானம்.

முதல் நாள்
கல்லூரியில் சேர்ந்து, விடுதியிலும் சேர்ந்து, முதல் நாள் மாலை கல்லூரி முடிந்து விடுதி திரும்பியதும் எல்லோரும் அறிமுகங்கள் செய்து கொண்டோம். இந்த அறையில் அந்த அறையில் என்று அழுது கொண்டிருக்கும் பல நண்பர்கள் பற்றிக் கேள்விப் பட்டோம். அழாத மற்றவர்களுக்கு எப்படி இருந்தது என்று தெரியவில்லை. எனக்கு அழுகை வர வைக்கும் ஓர் உணர்வு அழுத்தமாக இருந்தது. ஆனால், அழ வில்லை. வீட்டை விட்டுப் பிரிந்து வருதல் எனக்கு அது முதன் முறை அல்ல. எனவே, சமாளிப்பது ஓரளவு எளிதுதான் எனினும் தெரிந்தவர் யாரும் இல்லாத ஒரு புதிய இடத்தில் போய் இருக்கும் முதல் நாள் எப்போதுமே ஒரு மாதிரியானதுதானே. அதுவும் மாலைப் பொழுது என்றால் சொல்லவே வேண்டியதில்லை. மாலைப் பொழுதுக்கென்றே ஒரு மகத்துவம் இருக்கிறது. அதை வெல்வது கொஞ்சம் சிரமம்தான். அதை வெல்வதற்காகவே எல்லோருமாக ஒரு முடிவு செய்தோம். கடற்கரைக்குப் போய் வரலாம் என்று கிளம்பினோம். கடற்கரை என்றால் காத தூரம் இல்லை. விடுதிக்குப் பின்னால்தான் இருக்கிறது. மொட்டை மாடியில் நின்றால் அலைகளைப் பார்க்கலாம். சுனாமி வந்தால் கண்டிப்பாக அழிந்து போகும் என்று சொல்லுமளவுக்கு அருகில் இருக்கிறது. நல்ல வேளையாக சுனாமி திருச்செந்தூரை ஒன்றும் செய்ய வில்லை. அதற்கும் ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு கதை சொன்னனவே. தமிழ் நாட்டிலேயே கடற்கரையோரம் இரண்டே கல்லூரிகள்தாம் இருக்கின்றன. அதில் எங்களுடையதும் ஒன்று என்ற ஒரு தகவலும் முதல் நாளே எங்களுக்குச் சொல்லப் பட்டது. சரி பார்த்து வரலாம் என்று படையாகக் கிளம்பினோம்.

விடுதியில் இருக்கும் போதே அலைகளின் ஓசையை நன்றாகக் கேட்க முடியும். அதை அதனினும் அருகில் சென்று பார்க்கலாம் என்று கிளம்பினோம். மென்மேலும் அருகில் செல்லச் செல்ல ஓசையின் அளவு கூடியது. அந்தச் சத்தம் பயமுறுத்தியது. அருகில் நெருங்கவே பயமாக இருந்தது. சிறு வயதில் இதே திருசெந்தூரில் இதே கடலை இதை விடப் பயத்தோடு பார்த்த நினைவு வந்தது. அதன் பின்பு இராமேஸ்வரம் சென்றும் கடல் பார்த்திருக்கிறேன். அங்கே இருக்கும் கடல் அவ்வளவு சத்தம் கொடாது. இப்படிச் சத்தம் எழுப்புவதால் திருச்செந்தூரில் இருப்பது ஆண் கடல் என்றும் அமைதியாக இருப்பதால் இராமேஸ்வரத்தில் இருப்பது பெண் கடல் என்றும் எங்கள் ஊரில் சொல்வார்கள். விபரம் தெரியாதவர்கள் - மாற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது, இப்போது மாற்றி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அருகில் போய் நின்ற போது, சுனாமி பற்றி அறியாத அந்த நாளிலேயே அப்படி ஏதோ ஒன்று வரப் போகிறதோ என்கிற மாதிரியான பயம். உடன் இருந்த நண்பர்களில் சிலர் பயந்தார்கள். சிலர், "இதெல்லாம் முதல் நாள் மட்டும்தான் இருக்கும்; இன்னும் ஒரு வாரத்தில் இது எவ்வளவு பழகி விடும் பாருங்கள்!" என்றார்கள். பள்ளியிலேயே முதல் நாள் மட்டும் வாங்க போங்க என்று பேசும் பழக்கம் இருந்தது. கல்லூரியில் அது மேலும் சில நாட்கள் இருக்கும். சிலரோடு கடைசிவரை தொடரவும் செய்யும்.

போன இடத்தில் நிறையப் பேர் இருந்தார்கள். எல்லோருமே விடுதி மாணவர்கள். பெரும்பாலும் புதியவர்கள். சில பழையவர்களும் கடலின் அழகை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். இது போன்ற தருணங்களில் உணர்ச்சி வசப் பட்டுப் பாடவே தமிழ்ச் சினிமாவில் ஏகப் பட்ட பாடல்கள் இருக்கின்றனவே. அப்படியே தன்னை மறந்து பாடிக் கொண்டு அலைந்தார்கள். அவர்களைப் பார்த்தால் காதல் தோல்வி அடைந்தவர்கள் போலத் தெரிய வில்லை. உண்மையிலேயே சோகமாகத் தெரிய வில்லை. காதலிக்க வேண்டும் - அதன் பின் தோல்வி அடைய வேண்டும் - அப்படியே சோகமாக அலைய வேண்டும் என்று விரும்புபவர்கள் போலத் தெரிந்தது. அல்லது, 'அவளைக் காதலிக்க விரும்புவதே கற்பனைக்கு அப்பாற்பட்டது' என்ற ஏமாற்றத்தின் சோகமாக இருக்கக் கூடும். ஏதோ ஒன்று. அடுத்து வந்திருக்கும் புதியவர்களுக்கும் அடுத்த மூன்றாண்டுகளை எப்படி சோக மயமாக்கிக் கொண்டு உணர்ச்சிக் கடலில் குளித்துத் திளைப்பது என்று காட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பின்பு எங்கள் ஆட்களும் சிலர் அது போல ஆரம்பித்து விட்டார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லைதானே.

மறுநாள்
சேர்ந்த மறுநாளே விடுமுறை நாள். எல்லோரையும் பார்த்துப் பேச உதவியாக இருந்தது. துளி கூட ராகிங் கிடையாது. தென் தமிழகத்தில் இருக்கும் மிகச் சில உருப்படியான கல்லூரிகளில் ஆதித்தனார் கல்லூரியும் ஒன்று. படிப்பிலும் சரி; விளையாட்டிலும் சரி; இதர செயல்பாடுகளிலும் சரி... எங்கள் ஆட்கள் எங்கு போனாலும் கோப்பையைத் தட்டி வருவார்கள். ம்ம்ம்... இரண்டாம் நாள் அறிமுகங்களுக்கு வருவோம். பகுதிவாரியாக எல்லோரும் கூட்டணி சேர்ந்தார்கள். நிறையப் பேருக்கு அவர்கள் ஊர்க்காரர்களே - ஏற்கனவே தெரிந்தவர்களே நிறைய இருந்தார்கள். எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. முழுக்க முழுக்க அலசியதில் விளாத்திகுளம் பகுதிக்காரர் ஒருத்தர் சிக்கினார். அதை விடச் சிறப்பான இன்னொருவர் சிக்கினார். அருப்புக்கோட்டையில் நான் படித்த அதே பள்ளியில் அதே விடுதியில் இருந்து படித்த மோகன்ராம் அண்ணன். அவர் இராமேஸ்வரம் பக்கமுள்ள தங்கச்சி மடத்துக்காரர். பள்ளியில் எனக்கு இரண்டு வருடங்கள் முன்பு படித்து வெளியேறி விட்டதால் முன்பே சந்திக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. பொறியியல் முயன்று ஒரு வருட இடைவெளியோடு இங்கு வந்து சேர்ந்ததால் இங்கே எனக்கு ஒரு வருடம் மட்டுமே சீனியர். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததால் அவருடைய மொத்தக் குழுவோடும் சேர்ந்து பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களுடைய செட்டில் அவர் கொஞ்சம் பிரபலமான ஆள். ஆள் வாட்டசாட்டமாக இருப்பார். பார்த்தால் பயப்படும் படி இருந்தாலும் பழக இனிமையானவர். நல்ல மனிதர். அன்றைய தினம் அவர் தலைமையிலான அணியோடு விடுதியில் இருந்து ஒரு பெருங்கூட்டம் கடலுக்குக் குளிக்கச் சென்றோம். கடல் மீதான பயம் கொஞ்சம் கொஞ்சமாக விரட்டி அடிக்கப் பட்ட நாள் அதுதான்.

முதல் நாள் முதலே அவருடைய குழுவுடனேயே அதிகம் சுற்றிக் கொண்டு இருந்ததால் என் செட் ஆட்களுக்கு என் மீது கொஞ்சம் கடுப்பு. எனக்குச் சின்ன வயது முதலே பெரியவர்களோடு சுற்றுவது பிடிக்கும். நாமும் பெரியவர் ஆகி விடுவது போல ஓர் உணர்வு. நம் வயது ஆட்கள் நம் அளவுக்கு முதிர்ச்சி பெற்றில்லை என்ற உணர்வே அதன் அடிப்படை. அது தவறு - திமிர் என்றெல்லாம் புரிந்தாலும் அந்த உணர்வை எளிதில் வெல்ல முடிந்ததில்லை. அதற்குக் கொடுத்த விலை கொஞ்சம் கூடுதல். என் செட் நண்பர்கள் அனைவரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். அதை ஒரு பிரச்சனையாகவே பேச ஆரம்பித்தார்கள். சீனியர்களோடு கொஞ்சம் குறைத்துக் கொண்டு இந்தப் பக்கம் கூட்டிக் கொள்ளலாம் என்று முயன்றாலும் ஓரளவுக்கு மேல் முடியாது. அது போலவே, விடுதியில் எங்களோடு இருந்து விடுதி மாணவர்களை மேய்க்கும் வேலையைச் செய்தவர் எங்கள் கணிப்பொறியியல் ஆசிரியர் திரு. வைரவராஜ் அவர்கள். எனவே, அவரோடும் நான் கொஞ்சம் சாதாரணமாகப் பேசுவேன். இதைக் கண்டு கொதித்துப் போனார்கள் என் சகாக்கள். என்னைப் போட்டுக் கொடுக்கும் ஆளாக இருப்பானோ என்று கூட சந்தேகப் பட்டார்கள். இந்த எல்லை தாண்டிப் பழகும் என் பழக்கம் இப்போதும் தொடர்கிறது. அலுவலகங்களிலும் மற்ற மொழி பேசுவோரிடம் தொடர்புகள் இல்லாமல் நம்மவர்கள் ஒரு புறம் சங்கம் வைத்துக் கொண்டிருப்பார்கள். நான் அவர்களிடம் கூடுதலாகவே நெருங்கிப் பழகுவேன். இது யாருக்கும் கண் உறுத்த வைப்பதற்காகச் செய்வதில்லை என்றாலும் அப்படியே அது பார்க்கப் படும். என்னைப் பொருத்த மட்டில் அது ஓர் எல்லைகள் இல்லாமல் வாழும் இயல்பான வாழ்க்கை.

கமிட்டிகள்
மற்ற கல்லூரிகளில் - விடுதிகளில் எப்படி என்று தெரியவில்லை. எங்கள் விடுதியில் 'கமிட்டிகள்' என்றொரு அமைப்பு இருந்தது. விடுதியின் அனைத்து நிர்வாக வேலைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியதே அவர்களுடைய பொறுப்பு. அதாவது அமைச்சர்கள் போல. அமைச்சர் குழுக் கூட்டம் போல மாதம் ஒரு கூட்டம் நடைபெறும். அதில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் போடப்படும். ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வோர் அமைச்சர் போல அங்கும் பல்வேறு துறைகளும் துறைவாரியாக கமிட்டி உறுப்பினர்களும் இருந்தனர். மெஸ் கமிட்டி, விளையாட்டுக் கமிட்டி, பத்திரிகைக் கமிட்டி, ஆடியோ கமிட்டி, சுகாதாரக் கமிட்டி என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு கமிட்டியும் ஒவ்வொரு கமிட்டியிலும் இருவர் முதல் ஐவர் வரை உறுப்பினர்களும் இருப்பர். இருவர் என்றால், ஒருவர் இரண்டாம் ஆண்டு மாணவராகவும் இன்னொருவர் மூன்றாம் ஆண்டு மாணவராகவும் இருப்பர். இந்தக் கமிட்டிகளில் இருப்பவர்கள் அந்தந்த ஆண்டு மாணவர்களிடையே ஓரளவு பிரபலமானவர்களாக இருப்பர். மாணவப் பருவத்திலேயே அவற்றில் ஆர்வம் இருப்பவர்கள் தம் நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. இதே வாய்ப்பைப் பயன்படுத்தி ஊழல் செய்தோரும் உண்டு (சிலர்தான்!). படித்தவர்கள் வந்து குவிந்து விட்டால் மட்டும் நம் அரசியல் ஒன்றும் பெரிதாக மாறிவிடாது என்று அப்போதுதான் புரிந்தது. ஊழல் நம் இரத்தத்தில் இருப்பது. அதிலேயே சிறப்பாகச் செயல்பட்ட நண்பர்களும் நிறைய இருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதையும் கண்டிருக்கிறேன்.

மெஸ் கமிட்டிதான் இருப்பதிலேயே சக்தி வாய்ந்தது. நிறைய பணம் நடமாடும் கமிட்டி. அது மட்டும் இல்லை. நல்ல சாப்பாடு கிடைக்கும். ஸ்பெஷல் சாப்பாடு. உணவகத்தில் பணி புரிவோர் பயந்து பயந்து கவனிப்பார்கள். வார்டன்களும் கொஞ்சம் கூடுதல் மரியாதை கொடுப்பார்கள். தேர்தல் நடைபெறாது என்றாலும் கிட்டத்தட்ட கல்லூரியில் இருக்கும் மாணவர் சங்கம் போன்று மரியாதை கொண்டது. முதல் ஆண்டு சேர்ந்த போதே இந்தக் கமிட்டிகளில் ஒரு முக்கியமான ஆளாகி விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். பின்னாளில் பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்ற கனவு வேறு இருந்ததால் அதற்கான பயிற்சிக்கும் அது பொருத்தமாக இருக்கும் என்று நம்பினேன். இரண்டாம் ஆண்டு வந்தபோதுதான் புரிந்தது - அரசியல்வாதி ஆவது போலவே அதுவும் அவ்வளவு எளிதாக எல்லோரும் நுழைந்து எதுவும் சாதித்து விட முடியாத கடினமான பகுதி என்று. என்னை விடப் பெரும் பெரும் வல்லவர்கள் எல்லாம் இருந்தார்கள். எனக்குக் கிடைத்தது - யோகா கமிட்டி. அதுவும் வைரவராஜ் சார் யோகா சொல்லிக் கொடுப்பார் என்பதால் அவருடன் நெருக்கமாக இருப்பவர்களே பெரும்பாலும் அந்தக் கமிட்டிக்கு வருவார்களாம். அந்தக் கணக்குப் படி அந்த ஆண்டு நான் வந்து விட்டேன். மூன்றாம் ஆண்டும் முயன்று பார்க்க விரும்பினேன்.
அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மெஸ் கமிட்டி மீது கண். ஆனால் அந்த அளவுக்கு ஆதரவு இல்லை. "அதுக்கெல்லாம் ஓர் இது வேணும்ப்பா. அது உனக்கெல்லாம் இல்லை!" என்று சொல்லி விடுவார்கள். அதனால் யோகா கமிட்டியை விட இன்னும் கொஞ்சம் கூடுதலான அதிகாரம் உள்ள ஏதோவொரு கமிட்டி என்றால் நன்றாக இருக்கும் என்று பார்த்தால் இருந்தது - பத்திரிகைக் கமிட்டி.

பத்திரிகைக் கமிட்டி உறுப்பினர் என்றால் விடுதிக்குள் வரும் அனைத்துப் பத்திரிகைகளும் என் அறைக்கு முன்தான் கிடக்கும். அதுவல்ல பெரிது. ஒவ்வோர் அரையாண்டும் வெளிவரும் 'விடுதி ஒளி' என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருக்கலாம். அதுதான் நமக்குப் பிடித்த வேலை ஆயிற்றே. அதனால் அதையே பிடித்துக் கொண்டேன். முதல் ஆண்டிலேயே கல்லூரியில் நடந்த கவிதைப் போட்டி ஒன்றில் இரண்டாம் பரிசு வாங்கி என் கவிதை ஆர்வம் கட்டவிழ்த்து விடப் பட்டது. முதல் ஆண்டிலேயே விடுதி ஒளி பத்திரிகையில் என் சிறுகதை ஒன்றும் வெளியானது. ஆக, அடுத்த மூன்றாண்டுகளுக்கு 'இந்த மாதிரிச் சோலிகளுக்கு இவன்தான்' என்று விடுதியில் ஒரு சூழ்நிலையை உருவாக்கி விட்டாயிற்று. இரண்டாம் ஆண்டில் கமிட்டியில் இல்லாமலேயே வைரவராஜ் சார் புண்ணியத்தில் ஆசிரியல் குழுவில் எனக்கு ஒரு சிறப்பிடம் கொடுத்தார்கள். அதனால் முன்னனுபவம் வேறு இருந்தது. அது மட்டுமில்லை. அந்தக் கமிட்டிக்கும் யோகாக் கமிட்டி போலவே போட்டி ஏதும் இராது. எனவே, மூன்றாம் ஆண்டில் முழு மனதாக அந்தக் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டேன். இறுதியாண்டில் நானே முழு வேலையையும் செய்து, அதுவரை சாதாரண அச்சில் வந்ததை முதன் முறையாக ஆப்செட் முறையில் அச்சிட்டு வெளிக் கொண்டு வந்தேன். விடுதி ஒளி வேலை செய்த காலம் என் வாழ்வின் மிக முக்கியமான காலம். இரவு பகல் பாராது உழைப்பேன். அதில் அப்படியொரு கிறுக்கு. ஒரு விஷயத்தில் ஆர்வம் இருந்தால் சோம்பேறிகளே கூட எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்த அனுபவம் அதுதான். வெளிவந்தபோது எல்லோருமே பாராட்டினார்கள். இதை விடுத்து, மெஸ் கமிட்டிதான் என்று அடமெல்லாம் பிடித்திருந்தால், என்ன நடந்திருக்கும்? எதுவும் இல்லாமல் செய்து, அடித்து ஒரு மூலையில் உட்கார வைத்திருப்பார்கள்.

-தொடரும்...

கருத்துகள்

  1. அருமையான பதிவு.
    அருமையான எழுத்து நடை.
    உங்கள் பதிவை இப்போது தான் படிக்கிறேன்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து வந்து செல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
  3. ஓ, பத்து வருடங்கள்?! :)

    மகிழ்ச்சி... மகிழ்ச்சி... அவர்கள் எல்லோரையும் கேட்டதாகச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஓ, அப்படியா? மிக்க மகிழ்ச்சி சார். தச்ச நல்லூரா? உங்கள் ஊர்க்காரர் இலக்குமணன் எனக்கு ஒரு வருடம் சீனியர். உங்களுக்குத் தெரியுமா தெரிய வில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி