உலகம் சமநிலை பெற வேண்டும்?!

"உலகம் சமநிலை பெற வேண்டும்; அதில் உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்!" என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் இது சாத்தியமா என்றொரு கேள்வி உடனடியாக வந்து எதிர்மறைச் சிந்தனை கொடுக்கும். இதை இரண்டாகப் பிரிக்கலாம். உலகில் உள்ள எல்லா மனிதரும் சமமாக வேண்டும் என்பது ஒன்று. உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் சமமாக வேண்டும் என்பது இன்னொன்று. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே என்றாலும் இரண்டுமே சிரமம்தான். ஆனால், அதற்கு எல்லா வகையிலும் எல்லோரும் சமமாக வேண்டும் என்பதல்ல பொருள். வேற்றுமைகளைத் தாண்டி சமநிலையை நோக்கி நடை போட வேண்டும் என்பதே அதன் பொருள். சில நாடுகளில் ஏழை-பணக்கார இடைவெளி பெரிதாக இருக்கிறது. சில நாடுகளில் சிறிதாக இருக்கிறது. சில கண்டங்களில் நாடுகளுக்கு இடையே ஏழை-பணக்கார இடைவெளி குறைவாக இருக்கிறது. சில கண்டங்களில் அதிகமாக இருக்கிறது. இடைவெளி இல்லாமல் செய்வது இயலாதது என்றாலும் இடைவெளியைக் குறைப்பதுதான் எல்லோருக்கும் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதே சமதர்மம் பேசும் எல்லோருடைய நோக்கம்.

சமம் என்ற சொல்லைக் கேட்டாலே நம்ம நாட்டில் நிறையப் பேருக்குக் கோபம் வந்து விடுகிறது. அது இயற்கைக்கு எதிரானது என்று கடுப்பாகிறார்கள். ஒத்துக் கொள்கிறேன். மனிதன் மாளிகைகளில் வாழ்வதும்தான் இயற்கைக்கு எதிரானது. அதற்காக அதைச் செய்யாமலா இருக்கிறோம். இன்னும் குகைகளுக்குள்ளும் காடுகளுக்குள்ளும் விலங்குகள் போலவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயற்கையை வென்று அதை விடச் சிறப்பாக வாழ ஆரம்பித்த எல்லாமும் சேர்ந்ததுதான் பரிணாம வளர்ச்சி என்பது. அதனால் எல்லாமே இயற்கையின் படியே இருக்க வேண்டும் என்று வாதிட வேண்டியதில்லை. அடித்துத் தின்பதுதான் புலியின் குணம்; அடிபட்டுச் சாவதுதான் மானின் விதி என்பது உண்மைதான். ஒருநாள் மான்கள் அனைத்தும் காலியான பின்பு புலிகள் தம்மைத் தாமே அடித்துக் கொள்ள வேண்டிய நிலை வரும். விலங்குகளுக்கு இந்த நிலை வர நாளாகும் என்றாலும் மனிதர்களுக்கு மத்தியில் ஏற்கனவே வர ஆரம்பித்து விட்டது.

தனி மனிதர்களுக்கு இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் நாடுகளுக்கும் இருக்கின்றன. சில நாடுகள் பல தலைமுறைகளாகக் கடுமையாக உழைத்தாலும் முன்னேற்றம் மெதுவாகக் கிடைக்கிறது. சில நாடுகள் சோம்பேறியாக இருந்தாலும் வளம் கொழிக்க வாழ்கின்றன. உடலுழைப்பு-மூளையுழைப்பு மாதிரி அதற்கு ஆயிரம் நியாயங்கள் சொன்னாலும் அடிப்படையான ஓர் உண்மை என்னவென்றால், மூளையுழைப்பு என்பது அடுத்தவன் உடலுழைப்பைச் சுரண்டித் தின்பது என்பதாகத்தான் இருக்கிறது. கறி வலிக்காமல் காசு பார்க்கப் பழகிக் கொண்டு விட்டால் அவன் மூளைக்காரன். அந்தத் தத்துவத்தைப் பின் பற்றும் மனிதர்கள்தான் எந்தக் காலத்திலும் மனித குலத்தின் பொருளியற் பிரச்சனைகளுக்குக் காரணம் என்பது போல அந்தத் தத்துவத்தைப் பின் பற்றும் சில நாடுகள்தான் உலகப் பொருளியற் பிரச்சனைகள் அனைத்துக்கும் காரணமாக இருப்பவை என்பது கடந்த சில நாட்களாகவே அடிக்கடிக் கேள்விப் படுவதாக இருக்கிறது.

கடந்த சில நாட்களாகவே அலுவலகத்தில் சகா ஒருவர் அடிக்கடி உலகப் பொருளியற் பிரச்சனைகள் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறார். அப்படிப் பேசிக் கொண்டிருந்த போது புரிபட்ட விஷயம்தான் மேலே சொன்னது. நேற்றுக் காலையில் வெளியில் செல்ல டாக்சி பிடித்த போது அதன் ஓட்டுனர் மெதுவாகப் பேச்சைப் போட்டார். ஏதோ ப்ரோக்ராம் பண்ணி நடப்பது போல அவரும் உலகப் பொருளியல் பற்றிப் பேசும் ஒருவராக இருந்ததுதான் இந்த இடுகையின் பின்னணி. "நீங்கள் எல்லாம் இங்கே வந்து மாடாக உழைத்து, சாப்பாடு கூட ஒழுங்காகச் சாப்பிடாமல் பணம் சேர்த்துக் கொண்டு ஊருக்குப் போவீர்கள். இதெல்லாம் யாருக்காக உழைக்கிறீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? உங்கள் உழைப்பை யார் அனுபவிக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?" என்று ஆரம்பித்தவர், பொறிந்து தள்ளி விட்டார். "அமெரிக்காக்காரன் ஒரு பயல் கூட ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை. ஏதோ உழைத்துக் களைத்தது போல், வருடத்துக்கு ரெண்டு தடவை விடுமுறை என்று வாரக் கணக்கில் கிளம்பி விடுவார்கள். இங்கு வந்து முழுக்க முழுக்கக் கடன் அட்டையிலேயே பிழைப்பை ஓட்டி விட்டு நாடு திரும்பி அதையும் கட்டுவதில்லை. அவர்களுடைய அரசாங்கத்துக்கு அவர்களுடைய ஓட்டுக் கிடைத்தால் போதும். அவர்கள் கடனைக் கட்டுபவர்களாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் இந்தியர்கள் - வங்கியில் சேமிப்புக் கணக்கை மிகவும் நம்புபவர்கள். இந்தப் பரதேசிப் பயகள், கடன் அட்டையை மட்டும் நம்புபவர்கள்!" என்று கால் மணி நேரத்தில் எத்தனையோ விஷயங்கள் பற்றிப் பேசினார். கிட்டத்தட்ட இதே கருத்துக்களைத்தான் அமெரிக்காவில் நீண்ட காலம் வாழ்ந்து - அங்கேயே போய் செட்டில் ஆகத் திட்டம் போட்டிருக்கும் சகாவும் வேறு ஒரு தொனியில் சொல்லிக் கொண்டிருந்தார்.

இதில் எதெல்லாம் உண்மை? நம்ம ஊரில் செலுத்தும் அதே உழைப்பை அமெரிக்காவில் செலுத்தினால் இங்கே வீடில்லாமல் இருப்பவர்கள் கூட அங்கே மாளிகை வாங்கலாம். உழைக்கிற நாம் குறைவாகப் பணம் ஈட்டுவதும் ஒய்யாரமாய் உட்கார்ந்திருக்கிற அவர்கள் பணக்காரர்களாக இருப்பதும் நீண்ட காலம் தொடர முடியாது. நாமும் சும்மா உட்கார்ந்து சம்பாதிக்கும் நுணுக்கத்தைக் கற்றுக் கொண்டு விட்டால் அந்த வேலைக்கும் அவர்கள் தேவைப் படாதவர்கள் ஆகி விடுவார்கள். அப்புறம் பிற நாட்டு வளங்களைக் கொள்ளை கொண்டுதான் அவர்கள் வயிற்றை நிரப்ப முடியும். அதுதான் இயற்கைக்கு எதிரானது அல்லவே. பலசாலி மிருகம் பலவீனமான மிருகங்களை அடித்துத் தின்பது தானே இயற்கை. இயற்கைதானே நியாயம்.

கண்மூடித்தனமாக அமெரிக்காவை வெறுப்பது என்பது எனக்கு ஒருவித எரிச்சலையே உண்டு பண்ணும். ஒரு நேரத்தில் அமெரிக்காவைத் திட்டுவதே தன்னை அறிவாளி என்று காட்டிக் கொள்ளும் ஓர் உத்தி போலத் தோன்றும். அவற்றுக்குப் பின்னணியில் பல நியாயங்கள் இருக்கின்றன என்பது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிபடுகிறது. அமெரிக்கா என்று ஒரேயொரு குறிப்பிட்ட நாட்டை மட்டும் குறி வைத்துப் பேச வேண்டியதில்லை. உலத்தின் இன்றைய பொருளியற் பிரச்சனைகளுக்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் இணைந்த மொத்த மேற்குலகமும் பொறுப்பேற்றாக வேண்டும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் டொமினோ தத்துவம் என்று ஒன்றைச் சொல்லிக் கொண்டு அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருந்தது அமெரிக்கா. டொமினோ தத்துவம் என்பது டொமினோ விளைவு என்ற அறிவியற் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. சீட்டுக் கட்டு சரிவது போல என்று சொல்வோம் அல்லவா? அதுதான் டொமினோ விளைவு. ஒன்று விழுந்தால் அடுத்தடுத்து எல்லாம் சரிந்து விழுவது. இந்தியர்களுக்குப் புரிய மாதிரிச் சொல்ல வேண்டுமானால், அதை டெண்டுல்கர் விளைவு எனலாம். ஒரு காலத்தில் டெண்டுல்கர் அவுட் ஆனால் வரிசையாக மற்ற எல்லோரும் அவரைப் பின் தொடர்ந்து வெளியேறுவார்கள். அதுதான். 

அதை எதற்கு அமெரிக்கா சொன்னது என்கிறீர்களா? அவர்களுக்கு சோவியத் யூனியனில் பொதுவுடைமைக் கொள்கை வெற்றியடைவது கண்டு ஒருவித பயம். சீனா  பொதுவுடைமை நாடாக இருந்தது. அப்படியே கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளும் பொதுவுடைமை நாடுகளாகின. அது அப்படியே தொடர்ந்தால், ஆசிய நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாகப் பொதுவுடைமை நாடுகள் ஆகி விடும் என்று பயந்தார்கள். அவர்கள் பயப்படும் விதமாக, ஐரோப்பிய நாடுகளிலும் கூட சமதர்மம் பேசும் ஆர்வம் கூடிக் கொண்டிருந்தது. அப்படியே விட்டால், உலகம் முழுக்கவுமே பொதுவுடைமை நாடுகளாகி விடும் என்கிற அச்சம் அவர்களுக்கு. அதைத் தடுக்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாகவும் அதற்காகவே உலகம் முழுக்கவும் தான் ஏதாவது பிரச்சனை பண்ணிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் நியாயம் சொன்னது. அதனால்தான் சோவியத் யூனியனோடு பனிப்போர் புரிந்தார்கள். இப்போது சீனாவோடு புரிந்து கொண்டிருக்கிறார்கள். வியட்நாமில் போர் புரிந்தார்கள். கொரியாவில் ஏதோ கோளாறு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அமெரிக்கா வெற்றி பெற்று விட்டது என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், அது பழைய டொமினோ தத்துவம். இப்போது அதுவே வெவ்வேறு மற்ற பல விஷயங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. அரபு நாடுகளில் சர்வாதிகாரம் ஒவ்வொரு நாட்டிலும் விழுந்து கொண்டிருக்கிறது. அதுவும் அவர்கள் ஆசைப் பட்டதுதான். அவர்கள் விரும்பியிராத இன்னொரு டொமினோ விளைவு விரைவில் நடக்கப் போகிறது. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக 'மஞ்ச நோட்டிஸ்' கொடுக்கப் போகிறார்கள். அதாவது, "சாப்பாட்டுக்குக் கூட எங்கள் கையில் காசில்லை. அதனால் நாங்கள் வாங்கிய கடன் எதையும் திருப்பிக் கொடுக்க முடியாது. யாரும் தப்பாக நினைக்க வேண்டாம்!" என்பதே அது. முதலில் கிரீஸ் கொடுக்கும். அடுத்து ஸ்பெயின் கொடுக்கும். அதற்கடுத்து ஒவ்வொருவராக சீட்டுக் கட்டு போலச் சரியப் போகிறார்கள். அதுதான் அடுத்த பல ஆண்டுகளுக்கு உலகத்தை உலுக்கப் போகும் மிகப் பெரிய டொமினோ விளைவு. அதற்கு நம்மை ஓரளவு தயார் பண்ணி வைத்துக் கொள்வது நல்லது.

இதற்கெல்லாம் மூலக் காரணம் என்ன என்று பார்த்தால், உழைக்காமல் உட்கார்ந்து திங்க வேண்டும் என்கிற பேராசைதான். நிலைமை சரியில்லை என்று ஆன பின்னும் அதை உணர மறுத்து, தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு, அடுத்தவன் காசில் கடன் வாங்கி ஆட்டம் போடுவது தனி மனிதர்க்கு மட்டுமல்ல, நாடுகளுக்கும் நல்லதில்லை. இதை உணர்த்தத்தான் இந்தப் பொருளியல் நெருக்கடி வந்து கொண்டிருக்கிறது. இது நம்மை ஓரளவு பாதிக்கும். ஆனால், மேற்குலகத்தைப் பேரளவில் பாதிக்கும். அதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக உலகம் சமநிலையை நோக்கி நடை போடும். அதற்கிடையில் எல்லோருமே தாங்கொணாத் துன்பம் நிறைய அனுபவிக்க வேண்டியிருக்கும். AC இல்லாமல் தூங்க முடியாதோர் காற்றாடியிலும் கதவைத் திறந்து வைத்தும் தூங்கப் பழகிக் கொள்ள வேண்டும். திருட்டுகளையும் கொள்ளைகளையும் தற்கொலைகளையும் சமாளிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். இடைப்பட்ட காலத்தில் கறி வலிக்க உழைக்கப் பழகிக் கொள்ள வேண்டும். கடன் அட்டையில் இருக்கும் பாக்கியை அடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இதெற்கெல்லாம் முடிவாக, உலகம் முழுக்க இல்லா விட்டாலும் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையில் இருக்கும் இடைவெளி கொஞ்சம் குறையும். அது 'சுபம்' தானே!

கருத்துகள்

  1. சுவாரஸ்யமாக இருக்கிறது. நடக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஐயா.

    இப்போதைக்கு... நடக்கும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  3. உழைப்பால் பெருகாமல் ,ஊதி பெருத்த பொருளாதாரம் விரைவில் விழும் ,கூடிய விரைவில் இந்தியாவில் இது நடக்கும் என நம்புவோம் .ரியல் எஸ்டேட் ,ஷேர் மார்க்கெட் ,etc

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, கமலக்கண்ணன் அவர்களே. ரியல் எஸ்டேட் தொழில்தான் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் மிகப் பெரும் கோடீசுவரர்களை உருவாக்கியிருக்கிறது. அது வீழ்ந்தாலும் அவர்கள் சம்பாதித்ததைப் பறிக்க முடியாது. முறைப்படிச் சம்பாதிக்காததால் அதைக் கையாளத் தெரியாமல் அவர்களே அழித்தால்தான் உண்டு. அப்படி அழித்தாலும் பல தலைமுறைகளுக்கு வருகிற மாதிரிச் சம்பாதித்து விட்டார்கள். பங்குச் சந்தை என்பதே ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி வரும் என்றுதான் அதில் கை தேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அது போன்ற ஏழு ஏற்றங்களையும் இறக்கங்களையும் பார்ப்பான் என்பது அவர்களுடைய கணக்காம்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பார்வை! நடக்கும் என்று நம்புவோம்!

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட் அவர்களே.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி