தேர்தல்

ஒவ்வொரு தேர்தலும்
நம் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும்
அம்பலப்படுத்தியதைவிட
நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையுந்தான்
அதிகமாக அம்பலப்படுத்தி விடுகிறது

நாட்டு நலனோ
வீட்டு நலனோ
பாதிக் கடவுளாகிவிட்ட யாரோ ஒரு தலைவர் மீதான
நம் தகுதிக்கு மிஞ்சிய விருப்பும் வெறுப்பும்
நம் இழிவான பல நியாய உணர்ச்சிகளுக்கு
வெளிச்சம் பாய்ச்சி விடுகின்றன

அரசியல் பேசி
அடைந்த உறவுகள் எத்தனை
இழந்த உறவுகள் எத்தனை
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
எல்லோருக்குமே
இழப்புக் கணக்காகத்தான் இருக்கிறது

இழிவான மனிதர்களை
இனம் கண்டு கொண்டு விட்டதாக
வெளியில்
நன்றி கூறி நகர்ந்தாலும் கூட
அந்த ஒரேயோர் உரையாடலை மட்டும் தவிர்த்திருந்தால்
அன்று தவிர்த்து
என்றுமே வெளிவந்திட வாய்ப்பிராத
அவர்களின் இழிவான முகத்துக்கு
மேடை அமைத்துக் கொடுத்த
இழிவில் இருந்து தப்பியிருக்கலாமோ என்று
ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்பும் வரும்
உணர்ச்சிகள் வடிந்த ஒரு பின்னிரவில்
தோன்றித்தானே தொலைக்கிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி