உள்ளாட்சித் தேர்தல்: சில அனுபவங்களும் சிந்தனைகளும் - 1/3

ஒட்டுமொத்தமாகவே நம் அரசியல் நாறிப் போய் விட்டது என்றாலும், உள்ளாட்சித் தேர்தல்தான் அது எவ்வளவு நாறிக் கிடக்கிறது என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளச் சரியான தருணம் போலத் தெரிகிறது. பொதுத் தேர்தல்களில் பணி புரியும் மூஞ்சிகளைக் கண்டுதான் அது எவ்வளவு கேவலமாகி இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லக்கை வேலை பார்த்த அதே மூஞ்சிகள் இப்போது அவரவர் தகுதிக்கேற்ப ("இங்கே எங்கிருந்துடா தகுதி வந்தது?" என்கிறீர்களா?) வேட்பாளராகி வலம் வருகின்றன. வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பகுதிப் பக்கம் போனாலே, இதையெல்லாம் பார்த்து எங்கே சீக்கிரம் செத்துப் போவேனோ என்று பயமாக இருக்கிறது. கடுமையான மது வாடை, குண்டக்க மண்டக்கச் சேட்டைகள் செய்யும் அடாவடித்தனம், முகம் சுளிக்கும் அளவுக்கு அநாகரிகமான கெட்ட வார்த்தைப் பேச்சுகள்... இவற்றுக்கெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளில் எப்போது இடம் கொடுக்கப் பட்டது? இவர்கள் எல்லாம் உள்ளே வந்து என்ன 'முடி'யைப் பிடுங்கி விடப் போகிறார்கள்?

இதிலும் ஏகப்பட்ட நியாயங்கள் சொல்லப் படுகின்றன. குடிகாரன், ரவுடி, கெட்ட வார்த்தை பேசுபவன் எல்லாம் பதவிக்கு வரக் கூடாதா? தரமானவர்களும் தகுதி உடையவர்களும் நல்லொழுக்கம் படைத்தோரும் மட்டுமே உள்ளாட்சிப் பதவிகளுக்கு வர வேண்டும் என்று சொல்வது சமத்துவத்துக்கு எதிரான பேச்சு என்று கொதிக்கிறார்கள். இது எல்லாமே எளிய மக்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான சனநாயகத்தின் வெற்றிப் பாதை என்கிறார்கள். அப்படியானால், எளிய மக்களில் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், தராதரம் உடையவர்களே இல்லையா? என்னத்தச் சொல்ல? காலம் கெட்டுக் கிடக்கிறது. நாக்கைக் கொஞ்சம் இன்னும் நன்றாக வளைத்துப் பேசப் பழகிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். இதில் இன்னொரு கூத்தும் நடக்கிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய வரும் இடத்திலேயே எந்தப் பதவி சம்பாதிக்க ஏதுவானது என்று பட்டிமன்றங்கள் வேறு நடத்துகிறார்கள். "இவர் நிரம்ப விபரமானவர்... அவர் நிரம்பத் திறமையானவர்... நன்றாகச் சம்பாதித்து விடுவார்!" என்பது போன்ற பெருமையான கருத்துக்கள் வேறு பேசிக் கொள்ளப் படுகின்றன. இதெல்லாம் யார் செய்த குற்றம் என்பது மட்டும் புரியவில்லை. இதையெல்லாம் சாடி இப்படியெல்லாம் பேசுவதால் என்னைத்தான் கேனைப்பயல் என்று சொல்வார்களோ என்று கூடப் பயமாக இருக்கிறது.

மற்ற தேர்தல்களை விட உள்ளாட்சித் தேர்தல் வந்து விட்டால், ஊரில் இளவட்டங்கள் பாடு படு கொண்டாட்டம். ஒரே ஊருக்குள் இருக்கும் பத்துப் பதினைந்து வேட்பாளர்களிடமும் வார்த்தை மாறாமல் ஒரே மாதிரி, "அண்ணே, உங்களுக்குத்தான் வாய்ப்பு நல்லா இருக்குன்னு பேசிக்கிறாங்க. நம்ம பக்கம் ஒரு பத்து இருபது ஓட்டுக இருக்கு. அத்தனையையும் உங்களுக்குப் போடுற மாதிரி எங்க மக்களிடம் எல்லாம் பேசியாச்சு!" என்று ஒரு பொய்யைச் சொல்லி, அவர்களுக்கே உரிய கும்பிடையும் போட்டு, அன்றாட இரவுத் தண்ணிக்குக் காசு கறந்து விடுகிறார்கள். எப்போதும் இல்லாத விதமாக, இந்த வளரும் தலைவர்கள் எல்லோருமே ஒரே மாதிரி, "போட்ட பணத்தை எடுக்காமல் விட்டு விடுவேனா?!" என்கிற ரீதியில் அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். 'இதே ஊருக்குள் இவ்வளவு வள்ளல்கள் இருந்தார்களா? எங்கே இருந்தார்கள் இவ்வளவு நாட்களாக?!' என்று மூக்கில் விரலை வைக்கிற அளவுக்கு இருக்கிறது அவர்களின் 'வள்ளமை'.

அப்பப்பா... சில ஆட்கள் என்னமாய் நடிக்கிறார்கள்? வாய்ப்பே இல்லை. பிறந்ததில் இருந்து மொள்ளமாறித் தனம் செய்து கொண்டு அலையும் ஒருவன், இந்த ஒரு மாதத்தில் நல்லவன் போல நாடகம் ஆடினால் அது எப்படிப் பார்க்கச் சகிக்கும்? நான் உலக மகா வேடிக்கைகளில் ஒன்றாகப் பார்த்து மகிழும் விசயங்களில் ஒன்று, தேர்தல்க் காலங்களில் மட்டுமே போடப்படும் இந்த நல்ல மனுசன் வேடம். இவர்கள் எல்லாம் நல்லவனாக நடித்தால்தான் அரசியலில் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார்களா? அல்லது, பிறந்ததில் இருந்து பேண்ட்-சட்டை போட்டுக் கொண்டு இருந்து விட்டு அரசியல் நுழைந்தவுடன் வேட்டி-சட்டை போடுவது போல, அதுதான் அரசியல்ப் பண்பாடு என்று ஏற்றுக் கொண்டு ஊரோடு ஒத்து ஊதுபவர்களா? இப்படி நடிப்பது ஓர் அரசியல்வாதிக்கு முக்கியம் என்று எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள்? முதன் முதலில் உலக அரசியலில் இதை யார் அறிமுகப் படுத்தியது? உலகப் பண்பாடுகளின் ஊற்றுக் கண் என்று சொல்லிக் குதித்துக் கொண்டிருக்கும் இந்தியாவில் யார் செய்தது? இந்தப் பாழாய்ப் போன தமிழ் மண்ணில் யார் பண்ணியது? இங்கே பெரும்பாலும் திராவிடக் கட்சிகளில் உருவான ஒரு வியாபாரிதான் பண்ணியிருக்க வேண்டும். அது சரி, அதெப்படி ஒரு மாதம் நிமிர்ந்திருந்த வால் ("யார் வால்?" என்று கேட்டு என்னை வம்புக்குள் இழுக்காதீர்கள்!) முடிவு வந்த நிமிடமே திரும்ப வளைந்து கொள்கிறது?

இன்னொரு கொடுமை - இவர்கள் எல்லாம் ஏன் அன்றன்றைக்கு வாழ்கிறார்கள்? ஏமாற்றுவதுதான் ஏமாற்றுகிறார்கள். தொலை நோக்கில் சிந்தித்து ஏன் கூடக் கொஞ்ச காலம் ஏமாற்றக் கூடாது? ஒரு மாதம் நடிப்பவன் ஐந்து வருடங்கள் நடித்தால் வாய்ப்பு இன்னும் பிரகாசமாகாதா? அதையே வாழ்க்கை முழுக்கச் செய்தால் வெற்றி அதை விட உறுதியாகாதா? எந்த நடைமுறைச் சிக்கல் அவர்களை நீண்ட காலம் தொடர்ந்து நடிக்க முடியாமல் சித்திரவதை செய்கிறது? ஒருவேளை, கொஞ்ச நஞ்சம் வரலாறு படித்திருந்தால் அதை அவர்கள் எளிதாகச் செய்திருப்பார்களா? முழுக்க முழுக்க முட்டாள்களே வந்ததில் இதுவும் ஓர் இழப்பு. அதாவது, ஏமாற்றுவதிலும் அரைவேக்காட்டுத்தனம் பற்றிச் சொல்கிறேன்.

ஆறு வருடங்களுக்கு முன்பு நாங்கள் வாழ்ந்த ஊரில் புதியதொரு பகுதியில் புதியதாய் வீடு கட்டிக் குடி போனோம். போன நாள் முதல் ஒருவன் விரட்டி விரட்டிக் கும்பிடு போட்டான். சிரித்துப் பேசக் காசு கேட்கும் ஊரில் இப்படியொரு நல்லவன் எதற்காக வாலை (திரும்பவும் வால்தானா?!) இந்த ஆட்டு ஆட்டுகிறான் என்று எங்களுக்கெல்லாம் குழப்பமான குழப்பம். "அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் திட்டம் ஏதாவது இருக்கும்!" என்று என் தம்பி சாதாரணமாகச் சொன்னான் ஒருநாள். கடைசியில் அது அப்படியே நடந்தது. ஆடிப் போனேன். கண்டிப்பாக 'ஒருமாத' அரசியல்வாதியை விட இப்படிப் பட்டவர்கள் பரவாயில்லை. ஆனால், கும்பிடு போடுவது ஒன்றுதான் ஒரு தலைவனுக்குத் தகுதியா? கடந்த நாற்பது வருடங்களாக அப்படித்தான் நடந்து வருகிறது. அதை யாரும் அவ்வளவு எளிதாக மாற்ற முடியுமா? இப்போதைக்கு நம்பிக்கையில்லை. கும்பிடு மட்டும் சரியாகப் போட்டு விட்டால், அவன் அதன் பின் எது செய்தாலும் நமக்கு ஓகேவா? அப்படித்தான் எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நடந்து வருகிறது. இதையெல்லாம் பார்த்து விட்டுத்தான் எப்போதுமே மக்களை மதிக்காத சில ஆட்களைப் பார்த்தால் மரியாதை வருகிறது. காரியம் ஆகும் வரை மதித்து விட்டு அதன் பின்னர் கழற்றி விடுவோரை விட இவர்கள் பரவாயில்லை அல்லவா? எப்போதும் உண்மையாக இருக்கிறார்களே! ஒருநாள் சரியான நேரத்தைக் காட்டி விட்டு மற்ற நாட்களில் தவறான நேரம் காட்டும் கடிகாரத்தை விட காலம் முழுக்க ஓடாமல் இருக்கும் ஓட்டைக் கடிகாரம் பரவாயில்லை அல்லவா?

அதுபோலவே இன்னோர் அனுபவம். நாங்கள் இருந்த பழைய பகுதியில் ஒரு பழுத்த அரசியல்வாதி இருந்தார். எந்தக் கட்சி என்பது வேண்டாம். எல்லாக் கட்சியிலுமே பழுத்த கேஸ்கள் எல்லாம் புழுத்த கேஸ்களாகத்தான் இருக்கின்றன. அவரும் விரட்டி விரட்டிக் கும்பிடு போடுவார். இவ்வளவு பெரிய மனிதர் ஏன் நம்மைப் போன்ற சின்னப் பசங்களை எல்லாம் கும்பிட வேண்டும் என்று கூச்சமாக இருக்கும். சமீபத்தில் பார்த்த போது கண்டு கொள்ளாமல் போனார். ஏனிந்த மாற்றம் என்று கடுமையாக யோசித்துப் பார்த்தபோதுதான் உண்மை புரிந்தது - நாம்தான் பகுதி மாறி வந்து விட்டோமே; இனியும் நம் வாக்குகள் அவருக்குத் தேவையில்லையே. அடக் கருமமே, இப்படியொரு பிழைப்புப் பிழைக்கணுமா? ஒருவேளை, சட்டமன்றத் தேர்தலில் நின்றால் திரும்ப நமக்குக் கும்பிடு போட வேண்டிய கட்டாயம் வரும். ஆனால், அவர் தகுதிக்கு கவுன்சிலர் பதவிதான் அதிகபட்ச ஆயுட்காலப் பதவியாக இருக்க முடியும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன?

ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் சிலர். அப்படியானால், எவ்வளவு பெரிய திட்டத்தோடு அவர்கள் பொது வாழ்க்கைக்குள் வருகிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். எங்கள் ஊராட்சி, நகராட்சிக்கு அருகில் உள்ள - நிறைய வருவாய்க்கு வாய்ப்புள்ள (தலைவரின் வருவாய்க்கு... ஊராட்சியின் வருவாய்க்கு அல்ல!) ஓர் ஊராட்சி என்பதால் இருக்கலாம். ஆனாலும் ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு முயல்கிற ஆளே இதெல்லாம் செய்கிறார் என்றால் சட்டமன்றம், பாராளுமன்றம் போன்ற மற்ற பெருமன்றங்களுக்கு முயல்கிற ஆட்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? இந்தத் தேர்தலில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், கொடுக்கிற காசு சொந்தக் காசு என்பதால் பெரும்பாலும் அது மக்களுக்குப் போய்ச் சேர்ந்து விடுகிறது. இடைத்தரகர்கள் யாரும் அதை விழுங்க முடிவதில்லை. சட்ட மன்றத் தேர்தலில்தான் டெல்லியில் அடித்த கொள்ளையை இங்கே கொட்டினார்கள். அதை இடையில் இருந்த எல்லோருமே முடிந்தவரை சுருட்டினார்கள். கடைசியில் நிறையப் பேருக்கு வந்து சேர வேண்டிய பணம் வரவே இல்லை.

இன்னொன்றும் சொல்லி விடுகிறேன். சென்ற முறை திமுக தோற்றதால் பணம் கொடுக்கும் பண்பாடு முடிவுக்கு வந்து விட்டதாக யாரும் எண்ணி ஏமாற வேண்டாம். இன்னும் திருந்திய பாடு இல்லை பாவிகள். இந்த முறையும் காசு கொடுத்தவர்களுக்கெல்லாம் ஆப்படித்தால் நிறுத்தி விடுவார்கள். அது மட்டுமில்லை. பணம் கொடுப்பது என்பது கட்சி சார்பில்லாமல் எல்லோருமே அவரவர் திராணிக்கு ஏற்ற அளவு செய்யும் ஈன வேலையாகி இருக்கிறது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி இப்படிக் கேடு கெட்ட குடியாக இருக்கும் என்று நான் எள்ளளவும் எண்ணியதில்லை.

சொந்த வாழ்க்கையைத் தூக்கி வீசி விட்டுப் பொது வாழ்க்கையில் நுழைந்ததால் நம் பழைய தலைவர்கள் எல்லோருக்குமே சொந்த வாழ்க்கையில் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும் படியான சாதனைகள் இராது. அதற்காக, சொந்த வாழ்க்கையில் வீணாய்ப் போன எல்லோருமே வந்து நாறடிக்கும் அளவுக்கு பொது வாழ்க்கையின் இன்றைய சூழல் மாறி விட்டது என்பதைப் பார்க்கும்போது நிரம்பவே வலிக்கிறது. எல்லோரும் அரசியல்வாதியையே குறை சொல்கிறார்களே - குற்றம் சாட்டுகிறார்களே - கேவலமாகப் பார்க்கிறார்களே என்று ஆதங்கப் பட்ட ஒரு குறுகிய காலம் என் வாழ்விலும் உண்டு. இப்போதுதான் புரிகிறது - அவை அனைத்துமே நூற்றுக்கு நூறு உண்மையான குற்றச் சாட்டுகள் என்று. பெரும்பாலும் தெருப் பொறுக்கிகள், போக்கிரிகள், அடியாள் வேலை பார்ப்போர், குடிகாரர்கள், கொள்ளைக் காரர்கள், சட்டத்துக்குப் புறம்பான அனைத்து விதமான குற்றங்களும் கூச்சமில்லாமல் செய்வோர்... என்று சமூகத்தில் புறக்கணிக்கப் பட வேண்டிய மாதிரியான எல்லோருமே உள்ளே வந்து விட்டார்கள். இவர்கள்தாம் பின்னர் நம் தலைவர்கள் ஆகிறார்கள். இதற்கு எப்படி முடிவு கிடைக்கும் என்று எனக்குப் புரியவே இல்லை. தப்பித் தவறி நல்லவன் எவனாவது நுழைய முயன்றால் அவன் தன் வாழ்க்கையைப் பணயம் வைத்துத்தான் அதைச் செய்ய வேண்டும். எத்தனையோ மிரட்டல்கள், பழி வாங்கல்கள், தொல்லைகள்... அப்பப்பா!

அதிலும் சிறுபான்மை சாதிக்காரர்கள் ஆளவே லாயக்கில்லாதவர்கள் போல ஆகி விட்டது இன்றைய சூழல். அரசியல் என்றாலே பெரும்பான்மை சமூகங்கள் மட்டுமே நுழைய வேண்டிய தொழில் என்றாகி விட்டது. இரண்டாம் மூன்றாம் இடங்களில் அடுத்தடுத்து இருக்கும் சில சாதிகள் கூட பெரும்பானமையாக இருப்போரைப் பிரித்தாளும் சூழ்ச்சிகள் கொண்டு, தமக்குள் மட்டும் உள்ள ஒட்டு மொத்த ஒற்றுமையைக் காட்டி, வென்று விடுகிறார்கள். மிகக் குறைவாக இருக்கும் சமூகங்களில் பிறந்தவர்களுக்கு அரசியல் உணர்வே இருக்கக் கூடாது என்றாகி விட்டது. அப்படியெல்லாம் ஏதாவது இருந்தாலும் பல குறுக்கு வழிகளைப் பிடித்து சிறிய அளவில் ஏதாவது செய்து கொள்ளலாம். பெரும் கனவுகள் எல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், பெரும்பான்மை சமூகங்களில் பிறந்து விட்டால், நீங்கள் எவ்வளவு இற்ற கேசாக இருந்தாலும் என்ன வேண்டுமானாலும் ஆக முடியும். என்ன கொடுமை இது?! இப்படியே போனால், சுனாமி வந்துதான் சாவீர்கள் பாவிகளா.

உள்ளாட்சித் தேர்தல் என்பது அடி மட்டத்தில் இருந்து தலைவர்கள் உருவாக வேண்டும் - அவரவர் தேவைகளை அவரவர் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் கைக்கெட்டும் தொலைவில் தத்தம் தலைவர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் உருவாக்கப் பட்ட அமைப்பு. ஆளும் கட்சியைப் பொருத்த மட்டில் கட்சிக்காரர்கள் அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க ஒரு வாய்ப்பு. அதாவது, சட்ட மன்றத் தேர்தலில் அதிருப்தி அடைந்தவர்களை சரிக்கட்டக் கிடைத்த வாய்ப்பு. மற்ற கட்சிகளுக்கு அடி மட்டக் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. ஒன்றுமில்லாத சில கட்சிகளுக்கு ஆளுக்கொரு பதவிக்கான வாய்ப்பைக் கொடுத்து புதிதாக நிறைய ஆட்கள் சேர்த்துக் கொள்ளக் கிடைக்கும் வாய்ப்பு.

ஆனால், மொத்தத்தில் அதனால் அடையும் பயன்களை விட பிரச்சனைகளே அதிகம் இருப்பது போலத் தெரிகிறது. ஒவ்வோர் உள்ளாட்சித் தேர்தலின் போதும் கிராமங்கள் பல துண்டுகளாகின்றன. சாதி அடிப்படையில் பிரிகிறார்கள். மத அடிப்படையில் பிரிகிறார்கள். பூர்வீகமாக இருப்பவர்கள் என்றும் பிழைக்க வந்தவர்கள் என்றும் இணைய முடியாத மாதிரியான நச்சுக் கோடு போட்டுக் கொள்கிறார்கள். ஓர் ஊராட்சியில் வரும் இரு கிராமங்கள் அடித்துக் கொள்கின்றன. காவிரியில் தண்ணீர் கொடாத கர்நாடகத்தைக் கடிந்து கொள்ளும் நாம் பக்கத்து ஊருக்கே தண்ணீர் கொடுக்க மறுக்கும் கேவலப் பிறவிகள் என்பதை நினைவு படுத்திக் கொள்கிறோம். நெடுநாள் நண்பர்கள் எதிரிகள் ஆகிறார்கள். உறவுகளுக்குள்ளேயே பதவி ஆசையில் வெட்டிக் கொண்டு சாகிறார்கள். இந்த முதிர்ச்சி கூட இல்லாத மக்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன என்று எளிதாகச் சொல்ல முடியவில்லை. அடி மட்டத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகக் கொடூரமானவை.

பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களும் இருக்கும் இடங்களில் சாதிவாரியாகப் பிரிவினை பேசும் அதே ஆட்கள், ஒரே சாதி மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் சாதிக்குள்ளேயே உட்பிரிவு பார்க்கிறார்கள். உள்ளூர்த் தேவர் - வெளியூர்த் தேவர், இந்த வன்னியர் - அந்த வன்னியர், வெள்ளாளக் கவுண்டர் - வேட்டுவக் கவுண்டர், இந்து நாடார் - கிறித்தவ நாடார் என்று வித விதமாகப் பிரிவினை பேசுகிறார்கள். இந்தத் தேர்தல்கள் பல இடங்களில் கட்சி பலத்தை விட சாதி பலத்தை மதிப்பிட ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தப் படுகின்றன. சாதிக் கிறுக்கு பிடித்த சில சாதிக்காரர்கள் இரு பக்கமும் இருக்கும் தம் ஆட்களிடம் பேசி கட்சிப் பாகுபாடு மறந்து பல உள்ளடி வேலைகளுக்கு ஏற்பாடு செய்து விடுகிறார்கள். சில கேவலர்கள் எல்லா இடங்களிலும் தம் ஆட்களே வர வேண்டும் என்பதற்காக, எதிர்க் கட்சி சார்பில் தம் சாதி ஆட்கள் போட்டியிடும் இடங்களில் தம் கட்சி சார்பாகப் பலவீனமான ஆட்களை நிறுத்துகிறார்கள். இவற்றில் சில அவர்களின் மேலிடங்களுக்குப் போகின்றன; பல அந்தச் சாதி அமைப்புகளைச் சேர்ந்தோரைத் தவிர வெளியே யாருக்கும் தெரிய வருவதில்லை. நெஞ்சில் கையை வைத்துச் சொல்லுங்கள் - இதெல்லாம் முதிர்ந்த சமூகங்களில் நடக்கக் கூடிய விசயங்களா? கேவலம் அல்லவா?

முக்கியமான இன்னொரு விசயத்தையும் பற்றிப் பேச வேண்டும் இப்போது. கோபப் படாமல், உணர்ச்சி வசப் படாமல், படித்து முடியுங்கள் முதலில். பின்னர் அறிவு பூர்வமான பதில்களைக் கொடுக்க முயற்சியுங்கள். சொல்ல வருவதைச் சொல்லும் முன்பே, "நீ அது... இது..." என்று காட்டுக் கத்து கத்தி உரையாடலைத் திசை திருப்பி விடாதீர்கள். மீண்டும் சொல்கிறேன் - உணர்ச்சி வசப் படாமல் பேச முடியும் என்றால் மட்டும் தொடர்ந்து படியுங்கள். முடியாதென்றால், தயவு செய்து இத்தோடு நிறுத்தி விடுங்கள். *தொடரும்...*

கருத்துகள்

  1. நீங்கள் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் ஞாயமானதே.
    வில்லவன் கோதை

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா. தொடர்ந்து வந்து செல்லுங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி