சூட்சுமம்

அன்புள்ள நண்பா,
உன்னைப் புகழ்வதெல்லாம்
உருத்தல் சிறிதுமின்றி
உண்மையோவென்றெண்ணி
ஏமாந்து போயெனக்கு
நன்றியுரை தயாரிக்க வேண்டியதில்லை

உன் மீது கொண்ட
அதீத அன்பு காரணமாக
அப்படியெல்லாம் மிகைப்படுத்துகிறேனென்று
தன்னடக்கத்தோடு
தன்னிலை விளக்கம் பேச வேண்டியதில்லை

உன்னைத் துதிபாடி
உளம் மயக்கி
உன்னையும் ஊரையும் ஏமாற்றி
ஏதேதோ ஆதாயங்களடைய
முயற்சிக்கிறேனென்றெண்ண வேண்டியதில்லை

உண்மையைச் சொல்லவா?
அதை விட்டால்
இப்போதைக்கு
எனக்கு வேறு வழியில்லை

அதைச் செய்யாவிட்டால்
நான் பொறாமைக்காரனாகி விடுவேன்

எல்லோரோடுமிணைந்து
போகுது மயிரென்றொருமுறை
பொய்யாகப் புகழ்ந்து விட்டால்
உனைவிடப் பெருமை எனக்கே
என்கிற சூட்சுமமறிந்து
ஊரோடு ஒத்தூதுகிறேன்
அவ்வளவுதான்!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி