தமிழ்மணம் நட்சத்திரப் பதிவர்

போன வாரத்தில் ஒருநாள் தமிழ்மணம் வலைச்சரத்தில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. இந்த வாரத்தில் தமிழ்மணம் தளத்தில் நட்சத்திரப் பதிவராக இருக்கச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்கள். மகிழ்ச்சியான செய்திதான். சற்றும் எதிர் பார்த்திராதது என்றும் சொல்ல வேண்டும். ஒரேயொரு சிரமம் - தினமும் ஓர் இடுகையாவது இட முயற்சிக்கவும் என்று சொல்லியிருக்கிறார்கள். வேலை பெண்டு நிமிர்ந்து கொண்டிருக்கிற காலகட்டமாக இருப்பதால் அது குதிரைக்குக் கொம்பு வளர்க்கும் வேலையாகி விடுமோ என்கிற அச்சம் ஒருபுறம் வாட்டினாலும் இப்படியானதொரு நல்வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற உள்ளுறுதியோடு உள்ளே குதிக்கிறேன். பார்க்கலாம். எப்படிப் போகிறது இந்த வாரம் என்று!

எழுதுவது சின்ன வயதில் இருந்தே மிகவும் பிடித்த ஒரு வேலை. எழுத்தை முழு நேர வேலையாகச் செய்வதில் பெரிதாக ஆர்வம் இல்லை. முழு நேர வாசிப்பிலும் முழு ஈடுபாடில்லை. ஆனால், வாழ்க்கையில் எழுத்து ஒரு முக்கியப் பங்காக இருக்கப் போகிறது - இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் எப்போதுமே இருந்தது. மொழி பெயர்ப்பு நிறையச் செய்ய வேண்டும் என்கிற உந்துதல் அடிக்கடி வந்து கொண்டே இருந்தது. எல்லோரையும் கவர்கிற மாதிரி எளிமையாக நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசையும் ஒரு வரி கூட யாருக்குமே புரியாத மாதிரி பேரறிவாளி போல நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசையும் மாறி மாறி வந்து மண்டையைக் குடைந்திருக்கின்றன. இப்போதும் கூட யாராவது, "நீ எழுதுவது புரியவில்லை!" என்று சொன்னால் கொஞ்சம் மகிழ்ச்சியாகி விடும். அதே அளவு மகிழ்ச்சி, "உன் எழுத்து எளிமையாக இருக்கிறது!" என்று யாரேனும் சொல்லக் கேட்கும் போதும் கிடைப்பதுண்டு. "அதெல்லாம் சரி, இப்போ என்னப்பா சொல்ல வர்ற?!" என்கிறீர்களா? :)

"எப்படி வேண்டுமானாலும் எழுது... ஆனால் எழுது!" என்றும் அவ்வப்போது அசரீரி ஒன்று வந்து சொல்லிச் செல்லும். சில நேரங்களில் சில நாட்கள் இடைவெளி... சில நேரங்களில் பல ஆண்டுகள் இடைவெளி... என்று இந்தச் சின்ன வயதிலேயே வித விதமான இடைவெளிகளைப் பார்த்தாயிற்று. வாசிப்பது கூட முழுமையாகச் சலிப்பூட்டிய காலம் உண்டு. எழுதுவது எப்போதுமே அப்படி இருந்ததில்லை. இயல்பாகவே எழுத முடியாமல் போகிற காலம் என்பது வேறு. அது பெரும்பாலும் பணி நிமித்தமாக உண்டாகிற இடைவெளி.

இதுதான் எழுத்துக்கும் எனக்குமான உறவு. வலைப்பதிவு என்கிற வசதி ஒன்று இருக்கிறது என்று அறிந்த நாளில் இருந்து பதிவு செய்யத் தொடங்கி விட்டேன். பதிவிட ஆரம்பித்த காலத்தில் தமிழில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் ஆங்கிலத்தில் மட்டும் அவ்வப்போது கிறுக்கிக் கொண்டிருந்தேன். கிறுக்கல் என்றால்... தன்னடக்கத்திலோ போலித் தன்னடக்கத்திலோ சொல்லவில்லை. எந்தக் களங்கமுமற்ற... பரிசுத்தமான... கிறுக்கல். பின்பு தமிழில் அது சாத்தியம் என்பது தெரியாமலே நீண்ட காலம் ஆங்கிலக் கிறுக்கல் தொடர்ந்தது. 'நாங்களும் அதெல்லாம் பண்ணுவம்ல' என்கிற காரணத்துக்காகவே அதைப் பிடிவாதமாகச் செய்து கொண்டிருந்தேன். அது இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திடீரென்று ஒருநாள் நிறையப் பேர் தமிழிலும் இந்தச் சோலியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிபட்டதும் நானும் அதைச் செய்யத் தொடங்கினேன். ஆனால், ஒருபோதும் அதிக பட்சம் பத்துப் பேருக்கு மேல் அதை வந்து படிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. ஆசையும் பெரிதாகப் படவில்லை. நேரம் கிடைக்கிற போது ஏதாவது ஒன்றைக் கிறுக்கிப் போட்டு விட்டுப் போய் விடுவேன். பதிவிட ஆரம்பித்த போது கூட இந்த வசதியை நாட்குறிப்பு எழுதுவது போலான ஒரு வசதியாகத்தான் பார்த்தேன். என்ன ஒரு வித்தியாசம் - இந்த நாட்குறிப்பை என்னைத் தவிர இன்னும் நாலு பேர் பார்த்தால் நல்லது என்று நானே ஆசைப்பட்டு எழுதினேன். அடுத்து அதை நண்பர்களுக்கு மட்டும் மின்னஞ்சலில் தெரிவித்து வாசிக்கச் சொன்னேன். அவர்களும் ஓரிருவர் "பாவம்... பையன்!" என்று வந்து வாசித்து விட்டுச் செல்வார்கள்.

அடுத்து நடந்ததுதான் புரட்சி. இது போலப் பதிவிடுபவர்களுக்காகவே பல தளங்கள் (வலைச்சரங்கள்/ திரட்டிகள்) இருப்பது தெரிந்து அங்கு போய் இணைப்புக் கொடுக்க ஆரம்பித்தேன். இப்போதுதான் நமக்குத் தெரியாதவர்கள் கூட வந்து நம் பதிவை வாசித்துக் கருத்துச் சொல்ல வாய்ப்பிருக்கிறது என்ற புதியதோர் உலக உண்மை புரிந்தது. அதிலிருந்து நம்மைப் போலவே மற்றும் நம்மை விடச் சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கும் நிறையப் பேர் பற்றியும் தெரிய வந்தது. 'இதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் பெருங்கூட்டம் ஒன்று இருக்கிறது; அவர்களோடெல்லாம் நாம் ஈடு கொடுத்து எழுத முடியாது; நம்ம பிழைப்பை நாம் பார்த்துக் கொண்டு ஒதுங்கிக் கொள்வதே உத்தமம்; வாய்ப்புக் கிடைக்கிற போது மட்டும் வந்து எழுதினால் போதும்!' என்கிற ஞானோதயமும் இந்தத் தளங்களைக் காண்கையில்தான் வந்தது.

'அந்த மாபெரும் சமுத்திரத்தில் நான் ஒரு துளி!' என்கிற உண்மையை நன்றாகவே உணர்ந்திருந்ததால் இந்தத் தளங்களில் இணைப்புக் கொடுக்கிற வேலையை மட்டும் செய்து கொண்டு எழுதுவதை மட்டும் எப்போதும் போல் செய்து கொண்டு வந்தேன். 'சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' என்பது போல பதிவுலகில் நாமும் ஒரு பார்க்கத் தக்க ஆளாக வரவேண்டும் என்கிற ஆசைகள் எல்லாம் ஏதும் இல்லாமல் பிழைப்பை மட்டும் பார்த்துக் கொண்டு வந்தேன்.

அதிகம் எழுதப் பிடிப்பது கவிதையும் அரசியலும். கவிதை எழுதுகிற ஆர்வம் கல்லூரியோடு முடிந்து விட்டது. கவிதை எழுதினால் கைத்தட்டல் நிறையக் கிடைக்கும் என்று ஆசைப் பட்டுப் பல ஆண்டுகளை ஓட்டி விட்டேன். உலகத்தில் இருக்கிற எல்லாத்தையுமே கவிஞர்களின் கையில் கொடுத்து விட்டால் மொத்த உலகமும் சுபிட்சம் அடைந்து விடும் என்று எண்ணி ஏமாந்த காலங்கள் உண்டு. சின்னத் திரையிலோ கிழிந்த காகிதத்திலோ கவிஞர் எவரையேனும் கண்டால் அடுத்த வேளைக் கஞ்சியையும் அதற்கடுத்துச் செய்ய வேண்டிய வேலையையும் கூட மறந்து - மெய் மறந்து - மூழ்கிச் செத்த காலங்கள் உண்டு. பின் இயல்பாகவே கவிதை மீதான காதல் மெதுவாகக் குறைந்து விட்டது. அதற்கொரு காரணம், கவிதை என்பதே காதலிப்பவர்களுக்கும் காதலிக்கத் துடிப்பவர்களுக்கும் என்பது போல் ஓர் இடைக்காலம் ஏற்பட்டதாகக் கூட இருக்கலாம். அல்லது, அப்படி நான் தவறாகப் புரிந்து கொண்டும் இருந்திருக்கலாம் (எதுக்கு வம்பு, எதிரிகளைச் சம்பாதிக்காத விதமாகப் பேசுவதுதானே புத்திசாலித் தனம்!).

அடுத்ததாக அரசியல்! அரசியல் எழுதுவதால் தேவையில்லாத தொல்லைகள் நிறைய. "எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசு; எங்க அப்பாம்மாவைப் பற்றி மட்டும் பேசாதே!" என்கிற மாதிரி நாளுக்கு நாலு பேர் சண்டைக்கு வருவார்கள். "கெட்ட வார்த்தையில் திட்டு விழும்; வீட்டுக்கு ஆட்டோ வரும்!" என்றெல்லாம் நிறையப் பேர் மிரட்டினார்கள். நல்ல வேளை, இன்னும் அந்தளவுக்குப் போகவில்லை. அதற்குள்ளே சலிப்பும் வந்து விட்டது. 'இங்கே அவரவர் மனதுக்குள் சில கணக்குகள் வைத்திருக்கிறார்கள்; என்னத்தை எழுதினாலும் அவர்களின் எண்ணத்தை அசைக்க இறைவனே வந்தாலும் முடியாது!' என்கிற ஞானோதயம் ஒன்றும் பிறந்திருக்கிறது. அது மட்டுமில்லை, எழுதுவதற்குப் பரபரப்பாக இப்போதைக்கு எதுவும் நடக்கவில்லை என்பது கூட இன்னொரு காரணமாக இருக்கக் கூடும்.

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் எதிர் பாராமல் புதியதோர் ஒத்தயடிப் பாதை கிடைத்திருக்கிறது. அந்தப் பாதை குளறுபடிகள் அற்ற நற்பாதையாகவும் இருக்கிறது. பயணக் கட்டுரைகள் படைக்கக் கிடைத்திருக்கும் பாதை. கலாச்சார வியப்புகள் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் தொடர் யாருக்கும் கோபம் வரவழைக்காததாக இருக்கிறது. இயல்பாகவே பணி நிமித்தமாக ஊர் சுற்றக் கிடைத்த வாய்ப்பை இப்போது நன்றாகப் பயன் படுத்தத் தொடங்கி விட்டேன். முதன் முதலில் வைகோ பற்றி எழுதிய இடுகைக்குக் கிடைத்த வரவேற்பு அரசியல் பற்றி எழுத நிறைய ஆர்வம் கொடுத்தது. ஒருவேளை நாமும் சில பத்திரிகைகள் போல, "இணையத் தமிழ் இளைஞர்களின் மனச்சாட்சி!" என்று ஏதாவது போட்டுக் கொள்ளலாம் போல என்று கூடத் தோன்றியது. 'என்னுடைய இடுகைகளில் எதுவுமே இந்த அளவு ஒருபோதும் வாசிக்கப் படாது!' என்றொரு முடிவுக்கு வந்து பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்த போது, சிங்கப்பூர் பற்றிய எழுதிய இடுகை அதை விடப் பெரும் ஆதரவைப் பெற்றுத் தந்தது. விகடன் வலைத்தளத்தில் சிறந்த பதிவுகளில் இடம் பெற்றதில் நிறைய உற்சாகம் ('குட் பிளாக்ஸ்' என்பதை மொழி பெயர்த்தால் இப்படித்தான் தற்பெருமையாக மாறி விடுகிறது. இதற்காகவாவது அதன் பெயரை 'நல்ல பதிவுகள்' என்றோ 'பரவாயில்லாத பதிவுகள்' என்றோ மாற்றி விட்டால் நன்றாக இருக்கும்!). இதுவரை நான் எழுதியவற்றில் பயணக் கட்டுரைகள்தாம் அதிகம் விரும்பி வாசிக்கப் பட்டவை என்பதுதான் இப்போதைய உண்மை நிலவரம். எனவே, அதை மேலும் தொடர்வதுதானே எல்லோருக்கும் நல்லது! :)

அதன் பின் இலண்டன் பற்றி எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவே இன்னும் முடியவில்லை. அனுமார் வால் போல நீண்டு கொண்டு இருக்கிறது. அதற்குள் அங்கிருந்து துரத்தப் பட்டு மீண்டும் சிங்கப்பூர் வந்து இறங்கியிருக்கிறேன். சிங்கப்பூரைப் பற்றி எழுதிப் பெருமை கொண்டவன் (அவசரப் படாதீர்கள், எனக்கு நானே பெருமைப் பட்டுக் கொண்டேன் என்றுதான் சொன்னேன்!) என்ற முறையில், சிங்கப்பூர் பற்றி விட்ட குறை தொட்ட குறையெல்லாம் மீண்டும் எழுதத் தொடங்குவதுதான் நட்சத்திரப் பதிவர் என்ற முறையில் செய்யத்தக்க சரியான வேலையாகப் படுகிறது. 'மீண்டும் பராசக்தி' போல... இதோ வருகிறது - மீண்டும் சிங்கபுரம்! அந்த அளவுக்கு இல்லாட்டியும் ஏதோ நம்ம அளவுக்கு முயற்சிப்போம்!

நாளை முதல்... கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம்! (கவலைப் படாதீர்கள், அதைப் பற்றி மட்டுமே பேசிக் கழுத்தறுக்க மாட்டேன். எல்லாம் பேசுவோம். முடிந்தவரை எல்லாம் பேசுவோம்!)

* நட்சத்திரப் பதிவராக இருக்க அழைத்த தமிழ்மணத்துக்கும் இன்னும் ஒரு வாரத்துக்கு என் பதிவை வந்து பார்வையிட்டுச் செல்லப் போகும் மற்றும் அது பற்றிப் பலருக்குச் சொல்லப் போகும் (ஆசை தோசை அப்பளம் வடை! ஓர் எதுகை மோனையில் அப்படி வந்து விட்டது. அவ்வளவுதான். வேறொன்றும் இல்லை. கண்டு கொள்ளாதீர்கள்!) அதன் உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த - மணமார்ந்த ('தமிழ்மண'மார்ந்த!) நன்றிகள்! :) *

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி