கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 4/7


கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...


சிங்கப்பூர் என்றால் எல்லோருக்கும் பிடிப்பதற்கு முக்கியமான காரணம் - இங்கே மனிதர்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு. வேறெங்கும் இந்த அளவுக்குப் பாதுகாப்பாக உணர்ந்ததில்லை நான். அதற்குக் காரணம் இங்கிருக்கும் சட்டம்-ஒழுங்கு. அதற்குக் காரணம் - கடுமையான தண்டனைகள். மற்றவற்றில் எல்லாம் மேற்கு நாடுகளைப் போல இருந்தாலும் இந்த ஒன்றில் மத்தியக் கிழக்கு போலவும் கிழக்கு போலவும் தான் இருக்கிறது சிங்கப்பூர். ஒரு வருடத்தில் மொத்தக் கொலைகளின் எண்ணிக்கை பத்தோ என்னவோதான் என்கிறார்கள். திருடிச் சிக்கினால் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் போலீசில் ஒப்படைத்து விடுகிறார்கள். பெரும் தவறுகள் செய்வோருக்குப் பெரும்பாலும் கசையடி தண்டனை கிடைக்கிறது. அதை விடப் பெரும் தவறுகள் செய்பவனாக இருந்தால் தூக்கில் தொங்க விட்டு விடுகிறார்கள்.

கசையடி வழங்கப் படும் அளவுக்குக் குற்றங்கள் செய்வோரை சோதித்துப் பார்த்து விட்டுத்தான் அதற்கேற்ற மாதிரித் தண்டனைகள் கொடுப்பார்கள் என்று கேள்விப் பட்டேன். எடுத்துக்காட்டாக, பத்து அடிகள் தண்டனை வழங்கப் பட்ட ஒருவர் இரண்டாவது அடியில் சாய்ந்து விட்டால் அவரைத் தேற்றி - சரிப்படுத்தி - ஆறு மாதம் கழித்து அடுத்த சுற்று அடிப்பார்களாம். இதெல்லாம் கேட்கவே கிறுகிறுக்கிறது. பெரும்பாலும் ஒருமுறை அனுபவித்து விட்டால் அவன் வாழ்க்கைக்கும் அது போல நடந்து கொள்ள மாட்டான் என்றே சொல்கிறார்கள். அப்படியான சட்ட ஒழுங்கின் பயனை அனுபவிக்கிற போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிலாததாகத்தான் இருக்கிறது. ஆனால் பாவிப்பயல்கள் படும் அடிகளை நினைத்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது. இதெல்லாம் மேற்கு நாடுகளில் கிடையாது என்றே நினைக்கிறேன்.

கண்ணுக்குக் கண் என்பது பரவாயில்லை. சிராய்ப்புக்குக் கண் என்றால் எப்படி? இதில் பெரும் கொடுமை என்னவென்றால், குடியேற்றம் (IMMIGRATION) சம்பந்தப் பட்ட குற்றங்களுக்கும் கசையடிதானாம்.  அதாவது, அனுமதிக்கப் பட்ட கால அளவையும் தாண்டி 90 நாட்களுக்கு மேல் ஊர் திரும்பாமல் இங்கேயே இருந்து விடுபவர்களுக்கு. சிக்கினால் அடி விழும் என்று தெரிந்தே நம்மவர்கள் நிறைய இடத்தைக் காலி செய்யாமல் இருந்து சிக்கிப் படாத பாடு பட்டிருக்கிறார்களாம். இதுதான் தண்டனை என்று தெரிந்தும் அந்தக் குற்றத்தைச் செய்பவனுக்கு அந்தத் தண்டனை கொடுப்பதில் என்ன தவறு என்று நிறையப் பேர் கேட்கிறார்கள். அது தர்க்க ரீதியாகச் சரியாகத்தான் படுகிறது. ஆனாலும் அதை ஆழ்ந்து யோசித்துப் பார்க்கையில் மன நிம்மதி பாதிக்கப் படத்தான் செய்கிறது. இதே பிரச்சனை அமெரிக்காவிலும் இருக்கிறது ஐரோப்பாவிலும் இருக்கிறது. அங்கு எங்குமே இது போன்ற கடுமையான தண்டனைகள் இல்லை. நான் இலண்டனில் இருந்த போது கூட இது போன்ற ஒரு பெரும் பிரச்சனை ஓடிக் கொண்டிருந்தது. அதிக பட்சம் அங்கே சிறையில் அடைத்துச் சாப்பாடு போடுகிறார்கள். அவ்வளவுதான். அதனால்தான் அங்கே எண்ணிக்கையும் இது போன்ற குற்றங்களின் அதிகமாக இருக்கிறது.

பிறப்பால் இந்தியனாக இருப்பதால் கடுமையான தண்டனைகளைப் பற்றிக் கேள்விப் படும் போது மனதால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நமக்குத் தவறு செய்வது சாதாரணம். நம்ம பசங்களும் நிறைய இங்கிருக்கும் கெடுபிடிகள் பற்றித் தெரியாமல் ஏதாவது செய்து சிக்கிச் சின்னாபின்னப் பட்டு விடுகிறார்கள். சமீபத்தில் கூட, வந்திறங்கிய சில நாட்களுக்குள்ளேயே லிட்டில் இந்தியாப் பகுதியில் வழிப்பறி செய்து சிக்கிய இந்தியப் பையன் பற்றிக் கேள்விப் பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன். வழிப்பறி செய்தவன் சிக்கிக் கொண்டதற்காக அல்ல; நம்மூரில் போல இருக்குமென்றெண்ணி வரப்போகும் தண்டனையின் கொடூரம் தெரியாமல் தவறு செய்து விடுகிறார்களே என்றுதான். சமீபத்தில் முஸ்தபாவில் உள்ளூர்ப் பெரியவர் ஒருவர் திருட்டில் சிக்கி அவரைப் போலீஸ் அழைத்துச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு இன்று வரை அந்தக் காட்சி மனதில் வந்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது.

திருட்டு என்று மட்டும் இல்லை. எந்தப் பிரச்சனை என்றாலும் அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் குவிந்து விடுகிறார்கள். பெரிய அளவில் இது போல நிறையக் கதைகள் கேள்விப் பட்டிருக்கிறேன். ஏதும் பார்க்க வில்லை இன்னும். ஏதாவது சிறிய புகார் என்றாலும் எட்டுத் திசைகளிலும் ஒவ்வொரு வண்டியில் பெரும் பரபரப்போடு வந்து இறங்கி விடுவார்களாம். இது எப்படி சாத்தியம் என்றால், அது சிறிய நாடாக இருப்பதால் இருக்கும் நிர்வாக வசதி. நான் பார்த்தவரை போலீசாக இருப்பவர்கள் எல்லோருமே கல்லூரி மாணவர்கள் போல இருக்கிறார்கள். இன்றுவரை தொந்திக் கணபதிகளைப் பார்க்கவே இல்லை. இயல்பாகவே சீனர்கள் அளவான-ஆரோக்கியமான உடலமைப்பு கொண்டவர்கள்; பார்க்க இளமையாகத் தெரிபவர்கள் என்றாலும் மற்றவர்களுமே (மலாய் மற்றும் தமிழ்ப் போலீஸ்க்காரர்கள்) கூட இளமையாகத்தான் இருக்கிறார்கள். நாம் அவர்களுடைய போலீசைப் பார்த்து அடையும் ஆச்சரியத்தை விட அவர்கள் நம்ம ஊர்ப் போலீசைப் பார்த்தால் ஆடிப் போய் விடுவார்கள் என நினைக்கிறேன். :)

குடியேற்றப் பிரச்சனைகள் பற்றிப் பேசியதால் அவை சார்ந்த மற்ற பிரச்சனைகள் பற்றியும் பேசி விடுவோம். இங்கே 70 விழுக்காட்டுக்கு மேல் சீனர்களும் 20க்குள் மலேயர்களும் 10க்குள் நம்மவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய  மக்கட்தொகையில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கூடி வருவதால் அல்லது மக்கட்தொகையின் சராசரி வயது அதிகரித்து வருவதால் நாட்டில் மக்கட்தொகையை நல்ல படி வைத்துக் கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்களை நிறைய உள்ளே விட ஆரம்பித்திருக்கிறார்கள். இடையில் கொஞ்சம் அந்த வேகம் குறைந்திருந்தாலும் எதிர் காலத்திலும் அது வேகமெடுக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. முன்பு போலல்லாமல் இந்தியாவின் எல்லாப் பகுதியினரும் இப்போது வந்து குவிய ஆரம்பித்து விட்டார்கள். எப்படியிருப்பினும் இந்திய மக்களின் பங்கு 10 விழுக்காட்டுக்கு மேல் போய் விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். 

ஐந்து-பத்து வருடங்களுக்கு முன்பு இங்கே வந்தவர்கள் எல்லோரும் நிரந்தர வசிப்புரிமையோ குடியுரிமையோ மிக எளிதில் பெற்று செட்டில் ஆகி விட்டார்கள். அந்த வகையில், ஒவ்வொரு தலைமுறையிலும் புதிதாக ஒரு கூட்டம் வந்து குடியேறிக் கொண்டிருக்கிறது. எல்லோருமே ஏழு தலைமுறைக்கு முன் வந்தவர்கள் என்றும் சொல்ல முடியாது. எல்லோருமே இப்போதுதான் வந்தவர்கள் என்றும் சொல்ல முடியாது.

ஆரம்ப காலத்தில் தமிழர்கள் வந்து குவிந்தது போல், இப்போது இங்கே வங்கதேசத்தவர் குவிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் தனி ஆளாகத்தான் வந்திருக்கிறார்கள். இரண்டோ மூன்றோ வருடங்களில் வேலை முடிந்ததும் வீடு திரும்பி விடுவார்கள். அதனால் அவர்களும் சிங்கப்பூரர்களாக மாறி விடுவதற்கோ சிங்கப்பூரின் மக்கட்தொகையில் அவர்களின் எண்ணிக்கையும் கூடி விடுவதற்கோ வாய்ப்பில்லை. ஞாயிற்றுக் கிழமை லிட்டில் இந்தியாப் பக்கம் போனால் ஒருபுறம் நம்மவர்கள் குவிந்து கிடக்கிறார்கள் என்றால் இன்னொரு புறம் இவர்கள் குவிந்து கிடக்கிறார்கள். சொல்லப் போனால் நம்மை விட அவர்களுக்குத்தான் சிங்கப்பூர் பக்கம். நமக்குக் கடல் வழி. அவர்களுக்குத் தரை வழியிலேயே முடிய வேண்டும். முடிய வேண்டும் என்றாலும் இடையில் இருக்கும் எல்லைகள் அதை இன்னும் சாத்தியப் படுத்தவில்லை. இந்தியாவில் இருந்து மியான்மர், மலேசியா வழியாக இருப்புப் பாதைத் திட்டம் ஒன்று தயாராகி வருவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். வந்தால் நன்றாக இருக்கும்.

வந்த புதிதில் இந்திய முகம் கொண்ட எல்லோருமே தமிழர்கள் என்கிற மாதிரிப் பேச்சைப் போடுவேன். இப்போது கொஞ்சம் புரிய ஆரம்பித்து விட்டது. வங்க முகமும் எங்க முகமும் கொஞ்சம் வேறுபட்டிருப்பதை எளிதில் கண்டு பிடிக்க முடிகிறது. அது போலவே மொத்தமாக ஆசிய முகம் என்று ஒன்றை வைத்துக் கொண்டு சீனர்கள், மலேயர்கள், பிலிப்பினோக்கள் என்று எல்லோருமே ஒரே மாதிரியாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தேன். அவர்களுக்குள்ளும் இருக்கும் உருவ வேற்றுமைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்து விட்டது.

தமிழ் செத்து விட்டதோ இல்லையோ நன்றி என்கிற சொல் கிட்டத்தட்டச் செத்து விட்டது நம்ம ஊரில். இங்கே அது கொஞ்சம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. லிட்டில் இந்தியாப் பக்கம் சாதாரணமாக அடிக்கடிக் கேட்க முடிகிறது. அது மட்டுமில்லை, உள்ளூர் டாக்சி ஓட்டுனர்களும் அடிக்கடி 'நன்றி' சொல்கிறார்கள். தமிழில் அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் ஒரே சொல் அதுவாகத்தான் இருக்கிறது. டாக்சி ஓட்டுனர்கள் என்றதும்தான் தோன்றுகிறது - முன்பே சொன்ன படி அவர்கள் மிகவும் நல்லபடிப் பேசுகிறார்கள். உபசரிக்கிறார்கள். அதிலும் கொஞ்சநஞ்சம் திமிர் பண்ணுவது கூட நம்ம ஆட்கள்தான். குண்டக்க மண்டக்க முடியை வெட்டிக் கொண்டும் விட்டுக் கொண்டும் இருக்கும் நம் கூட்டம் ஒன்று இருக்கிறது இங்கே. அவர்களுக்கு என்னவோ நம்மை மாதிரி ஒழுங்காக முடி வெட்டி சவரம் செய்து இருக்கும் இந்திய முகங்களைப் பார்த்தாலே மூஞ்சி இஞ்சி தின்று விடுகிறது. அது பற்றிக் கொஞ்சம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். ஏன் என்று கொஞ்சம் புரிபட்டதும் விரிவாகப் பேசி விடுவோம்.

மற்றபடி, சீன-மலேய டாக்சி ஓட்டுனர்கள் நிறையப் பேர் நன்றாகப் பேசுவார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு புது விஷயம் பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைக்கும். ஒருவர் கிரேக்கப் பொருளியற் பிரச்சனை பற்றிப் பேசுவார். இன்னொருவர் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் அமெரிக்கா எப்படிக் காரணமாக இருக்கிறது என்பது பற்றிப் பேசுவார். ஒருவர் இந்தியாவில் உள்ள பிரச்சனைகள் பற்றி நம்மை விடத் தெளிவாகப் பேசுவார். இன்னொருவர் ஆரிய-திராவிடப் பிரச்சனை பற்றிப் பேசுவார்; கூடவே இந்தியாவில் இருக்கும் ஐந்தாறு மாநிலங்கள் பற்றியும் அங்கே பேசப்படும் மொழிகள் பற்றியும் அவற்றின் தலைநகரங்கள் பற்றியும் பேசுவார். ஒருவர் திமிர் பிடித்த இந்தியர்களிடம் சிக்கிக் கொண்டு  பட்ட திண்டாட்டங்கள் பற்றிப் பேசுவார் (உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நிறையப் பேர் இது பற்றிப் பேசியிருக்கிறார்கள்!). ஒருவர் சிங்கப்பூர் எப்படிப் பல கிராமங்களாக இருந்தது ஒரு காலத்தில் என்பது பற்றிப் பேசுவார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் ஆச்சரியத்துக்கு உரியதாகவும் மறக்க முடியாததாகவும் இருக்கிறது.

இந்தக் கதைகளிலேயே மிகவும் மனதைப் பாதித்தது - இந்தியப் பெண்மணி ஒருவருடன் உண்டான பிரச்சனை பற்றி ஓர் ஓட்டுனர் சொன்னதுதான். "நேராப் போ, நான் சொல்லும் போது வளை!" என்று சொல்லி விட்டு கைபேசியில் மூழ்கி விட்ட பெண்மணி திடீரெனக் கத்தியிருக்கிறார். நம்ம ஊரில் பண்ணுவது போல. என்னவென்று கேட்டால், வளைய வேண்டிய சந்து கடந்து விட்டதாம். "நீங்கள் சொல்லவில்லையே மேடம்!" என்றதும் இன்னும் கோபமாகி விட்டதாம். குண்டக்க மண்டக்கப் பிடித்துக் கத்தியிருக்கிறார். இந்தியாவில் தன் குடும்ப உறுப்பினர் யாரோ கமிஷனராக இருப்பதாகவும் இவர்களைக் கண்டால் டெல்லியே நடங்கும் என்றும் அதெப்படி 'ஆப்டர் ஆள்' ஒரு டாக்சிக்காரன் தன்னிடம் இப்படிப் பேச முடியும் என்றும் கத்தியிருக்கிறார். "எல்லாம் சரி மேடம், என் மேல் எந்தத் தப்பும் இல்லையே?!" என்று பூனைக் குட்டி போலச் சொல்லியிருக்கிறார் இவர். 'விட்டேனா பார் உன்னை...' என்று போலீசை அழைத்து "இவன் குடித்து விட்டு வண்டி ஓட்டுகிறான்!" என்று புகார் கொடுத்து விட்டாராம். அவர் தவறு செய்யவில்லை என்று பின்னர் நிரூபணம் ஆகி விட்டாலும் அந்தச் சிக்கலுக்குள் இருந்து மீளும் முன் அவர் விழி பிதுங்கி விட்டதாம் பாவம்.

ஊர் ஊராகப் போய் இந்த மாதிரிச் சோலிகள் எல்லாம் செய்தால் எல்லா இடத்திலும் அடித்து மண்டையை உடைத்துத்தான் அனுப்புவார்கள் இன்னும் கொஞ்ச காலத்தில். அதனால் உலகத்துக்கே எல்லாம் பிடுங்கச் சொல்லிக் கொடுத்த இந்திய இனம் போகிற இடங்களில் ஒழுங்காக நடந்து கொள்ளப் பழகிக் கொள்ளாவிட்டால் நாம் நினைப்பது போல் நாளை நமதாக இராது. கவனமாக இருந்து கொளல் நல்லது. பின்னர் உலகமே நமக்கு நிறையச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விடும். ஏற்கனவே அதற்கான தேவையை நிறைய இடங்களில் நிறையப் பேர் வலியுறுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

  1. பதில்கள்
    1. நானும் அப்படித்தான் மிகுந்த வேதனையுற்றேன் ஐயா. ஆனால், நம்ம ஊரில் நடப்பது போலப் பெரும் குற்றங்கள் எதுவும் இங்கே நடப்பதே இல்லை என்பதால் (குறிப்பாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள்), அதை விட இது பெரிய வலி இல்லை என்று மனதைத் தேற்றிக் கொள்வேன்.

      நீக்கு
    2. ஐயா, தாமதமாக ஓர் ஐயம். நீங்கள் வேதனைப் பட்டது அந்தப் பெண்மணியின் கொடூரமான நடத்தைக்காக இருக்குமோ என்று இப்போதுதான் ஒரு கேள்வி வருகிறது. ஒரு வேளை, உங்கள் வேதனையின் காரணம் அதுவானால், தவறாகப் புரிந்து கொண்டமைக்கு மன்னிக்கவும். நானும் அப்படித்தான் வேதனையுற்றேன். அந்த டாக்சி ஓட்டுனரிடம் நம்மவர்கள் சார்பாக மன்னிப்புக் கூடக் கேட்டுக் கொண்டோம் நானும் என் மனைவியும்.

      நீக்கு
  2. " திருடிச் சிக்கினால் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் போலீசில் ஒப்படைத்து விடுகிறார்கள். பெரும்பாலும் கசையடி தண்டனை கிடைக்கிறது. திரும்பத் திரும்பத் தப்புச் செய்பவனாக இருந்தால் தூக்கில் தொங்க விட்டு விடுகிறார்கள். "

    மிக சீரிஸ் ஆனா விடயத்தை பாட்டி வடை சுட்ட கணக்காக சொல்லியிருக்கிறீர்கள். ஒரு நாட்டின் சட்ட விடயத்தை சற்று ஆராய்ந்து கூறியிருக்கலாம். திருட்டுக்கு ஒரு நாளும் தூக்கு தண்டனை வழங்கப் படுவதில்லை. பல தடவை செய்தாலும் ஒரு தடவை செய்தாலும் ஒரே தூக்கு தண்டனை வழங்குவதில்லை. சாதாரண கடையில் ஒரு பொருளை திருடியதுக்கு பிரம்படி இல்லை. சிறை தான். கொள்ளை, போதை பொருள் சமந்தமான குற்றம் போன்ற பாரிய குற்றங்களுக்கு தான் பிரம்படி வழங்கப்படும்.

    சிங்கப்பூரில் சட்ட விரோதமாக தொண்ணுறு நாட்களுக்கு மேல் தங்கினால் தான் பிரம்படி.

    சாதாரணமாக நெட் ல் தேடினாலே கிடைக்கும் தகவல்கள். TEA கடை உரையாடலில் கதைப்பது போல் கூறியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதி அரைகுறை அறிவோடு சொன்னது. பாதி தெளிவில்லாமல் சொன்னதால் நேர்ந்தது. தவறுகளுக்கு மன்னிக்கவும். திருட்டுக்குக் கசையடி என்று கேள்விப் பட்டதும் திரும்பத் திரும்பக் குற்றங்கள் செய்வோருக்குத் தூக்கு என்பதும் இரு வேறு விஷயங்கள். இரண்டையும் கலந்து விட்டதால் வந்த வினை. உண்மைதான். இன்னும் கொஞ்சம் நன்றாக விசாரித்தும் இணையத்தில் முறையாகத் தேடியும் உறுதி செய்து கொண்டு எழுதியிருக்கலாம். கூடிய விரைவில் சரியான உண்மைகள் வரும் படித் திருத்தி எழுதுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
    2. உடனடியாக முடிந்த அளவு விசாரித்து ஓரளவு சரி செய்திருக்கிறேன். மேலும் உட்சென்று ஆராய்ந்து மற்ற குறைகளையும் கூடிய விரைவில் களைந்து விடுகிறேன். நன்றி மீண்டும்.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி