கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 2/7


கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க!

தொடரும் வியப்புகள்...

இங்கே கார்கள் மிகக் குறைவு. மிகப் பெரும் பணக்காரர்கள் மட்டுமே கார் வைத்திருக்கிறார்கள். காரணம் - கார் வைத்துப் பிழைக்க இங்கே ஏகப் பட்ட பணம் வேண்டும். அதன் பொருள் - கார்களின் விலை அதிகம் என்பதல்ல. காரின் விலையை விடப் பல மடங்கு வரியைப் போட்டுத் தாக்கியிருக்கிறது அரசாங்கம். என்ன காரணம்? இது ஒரு சிறிய ஊர். சிறிய தீவுதான் மொத்த ஊரும் நாடும் எல்லாமும். இருக்கிற மிகக் குறைவான இடத்துக்குள்தான் எல்லோரும் சிரமமில்லாமல் வாழ வேண்டும். வாழ்கிற முக்கால்வாசிப் பேர் காரில்தான் போவேன் என்று இறங்கி விட்டால் நகரத்தில் கார் நகர இடம் இராது. இதுதான் இன்று இந்தியாவில் பிரச்சனை. காரை வேடிக்கை மட்டுமே பார்த்த நிறையப் பேர் காரில் போக ஆரம்பித்து விட்டோம். ஆனால், கார் செல்வதற்கான சாலைகளும் தெருக்களும் அப்படியேதான் இருக்கின்றன (தங்க நாற்கரச் சாலை மட்டும் விதிவிலக்கு!). பல இடங்களில் நம் தெருக்கள் சுருங்கத்தான் செய்திருக்கின்றன. இதற்கு இரண்டு தீர்வுகள்தானே இருக்க முடியும்?! ஒன்று - சாலைகளைப் பெரிதாக்க வேண்டும். அது முடியாது என்றால், கார்களைப் பெருக விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதைத்தான் சிங்கப்பூர் அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. கார்களைப் பெருக விடாமல் தடுப்பது மட்டுமல்ல. அதற்கான மாற்றுப் போக்குவரத்து வசதிகளையும் சிறப்பாகச் செய்திருக்கிறது. இதைத்தான் எதிர் காலத்தைப் பற்றிய பார்வை (VISION) என்பார்கள். நாம்தான் பார்வைக் கோளாறு கொண்டோராயிற்றே! இப்படி ஓர் ஐடியாவை நம்மவர்களுக்குக் கொடுத்து விட்டால், வரியாகப் போக வேண்டியது கட்சி நிதியாகவும் கையூட்டாகவும் போக ஆரம்பித்து விடும். அதனால், இது பற்றியெல்லாம் பேசாமல் இருந்து விடுவதே எல்லோருக்கும் நல்லது.

சாலைகளில் நிறைய ஒழுங்கு இருக்கிறது. நிற்கும் போது கூட கார்களுக்கிடையில் நிறைய இடைவெளி விட்டு நிற்கிறார்கள். இருசக்கர வாகனங்கள் நிறைய இருக்கின்றன. இந்தியா அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு அதிகம்தான். பெரும்பாலான பைக்குகளில் பின்னால் ஒரு பெட்டி மாட்டியிருக்கிறார்கள். நம்ம ஊர் பீட்சா வண்டிக்காரர்கள் வைத்திருப்பது போல் இருக்கிறது அது. பின்னால் அமர்பவர் சாய்ந்து உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு வசதியாகவும் பெரிதாகவும் இருக்கிறது. சைக்கிள்கள் மிக மிக அதிகம். இலண்டனைப் போல சைக்கிள்களுக்குத் தனிப் பாதை கிடையாது இங்கே. நம்ம ஊரைப் போல சாலைக்குள்ளும் ஓட்டுவதில்லை. நடை பாதையிலேயே ஓட்டுகிறார்கள். ஆனால் நடப்பவர்களுக்குச் சிறிதும் தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் கடக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு 'சாரி'யும் ஒரு 'தேங்க் யூ'வும் சொல்லியே கடக்கிறார்கள். ஏற்பட்ட இடைஞ்சலுக்கு 'சாரி'; விலகி வழி விட்டதுக்கு 'தேங்க் யூ'. திருட்டே அதிகம் இல்லாத இந்த ஊரில் அடிக்கடித் திருட்டுப் போவதும் அதிகம் திருட்டுப் போவதும் சைக்கிள்கள்தாம். சைக்கிள்களுக்குப் பதிவு எண்ணெல்லாம் கிடையாது என்பதால் எளிதாகத் தப்பியும் விடுகிறார்கள். சிக்கியவர்களை நொங்கெடுத்து விடுகிறார்கள் (அது பற்றி அடுத்த பாகத்தில் விரிவாகப் பார்ப்போம்!).

சென்ற முறை வந்து சென்ற பின்பு எழுதிய தொடரில் வீடுகளைப் பற்றி அதிகம் எழுத வில்லை. காரணம் - இருந்தது குறைவான நாட்கள் என்பது மட்டுமில்லை. வீடுகள் நிறைந்த பகுதிகளைப் பார்க்கவே இல்லை. அலுவலகத்துக்கும் ஓட்டலுக்கும் இடையில் மட்டுமே வண்டி பறந்தது. இம்முறை குடும்பத்தோடு வந்து குடியேறியிருப்பதால் அவை பற்றியும் நிறைய எழுதலாம். இங்கே வீடுகள் என்றாலே அடுக்குமாடிக் குடியிருப்புகள்தாம். இங்கே இந்தப் பண்பாடு சென்ற தலைமுறையிலேயே வந்து விட்டது. நம்ம ஊரில் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. எடுத்துக்காட்டாக நாங்கள் இருக்கும் வீடு 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டது. பார்த்தால் அப்படித் தெரியாது. ஐந்து வருடங்களுக்கு முந்தைய வீடுகள் கூட நம்ம ஊரில் கிழவியாகி விடுகின்றன. ஆனால் இங்கே அருமையாகப் பராமரிக்கிறார்கள். வாரத்துக்கு ஒருமுறை கழுவி விடுகிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பெயிண்ட் அடித்து விடுகிறார்கள். ஐந்து வருடங்கள் என்பது நீண்ட இடைவெளி அல்லவா என்கிற உங்கள் நியாயமான கேள்வி புரிகிறது. ஆனால், இங்கேயிருக்கும் சுத்தத்துக்கு அது ஓகேதான்.

அவற்றுக்கெல்லாம் மேலாக அடிப்படையிலேயே தரமான கட்டுமானம். இவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு தரமாக வீடு கட்டுகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அதுவும் அரசாங்கமே எடுத்துச் செய்கிறது. அதில் எப்படித் தரம் காக்க முடியும் என்பது அதை விடப் பெரிய கேள்வி. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், நம்ம ஊரில் இருந்து வருபவர்கள்தான் இங்கும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அதே ஆள் ஊர் திரும்பியதும் எப்படி புத்தியைக் காட்ட ஆரம்பித்து விடுகிறான் என்பதுதான் ஆராய்ச்சிக்குரிய இன்னொரு கேள்வி. இங்கே எல்லோருமே தவறு செய்யப் பயந்து நடுங்குகிறார்கள். அது ஏன் என்பதை அடுத்த பாகத்தில் மிக விரிவாகப் பார்ப்போம்.

வீடுகள் அனைத்துமே பூங்காக்களுக்கு மத்தியில் கட்டப்பட்டது போல் இருக்கின்றன. எட்டிப் பார்த்தால் புல்வெளிகள்தாம் - செடிகொடிகள்தாம் - மரங்கள்தாம். சில மரங்கள் பத்தாவது மாடி வரை கூட உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. அவற்றைப் பராமரிக்கவும் ஏகப்பட்ட ஆட்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களும் நம்ம ஆட்களே. அது மட்டுமில்லாமல் அடிக்கடிப் பேய் மழை வேறு பெய்வதால், அதற்கென்று தனியாகத் தண்ணீர் செலவிட வேண்டியதில்லை என்பது கூடுதல் வசதி. தண்ணீர் பஞ்சமில்லாமல் கிடைக்கிறது. ஆனால் உண்மையில் பஞ்சமில்லை என்று சொல்ல முடியாது. பயன்படுத்தப் பட்ட நீரையே சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதாவும் மற்ற எல்லாப் பொருட்களையும் போல நீரும் கூட மலேசியா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து வந்திறங்குவதாகவும் சொல்கிறார்கள். மின்சாரமும் மித மிஞ்சிப் பயன்படுத்தப் படுகிறது. அதற்காக ('அதற்காகவும்' என்றும் சொல்லலாம்!) ஆட்சியையே மாற்றி, அதன் பிறகு வந்தவர்களும் ஒன்றும் சாதிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மால் இது சீரணிக்கவே முடியாததாக இருக்கிறது.

பாதாளச் சாக்கடை வசதிகள் அவ்வருமை (அதாவது... மிக அருமை!). நடை மேடைகள் அனைத்தும் வாய்க்கால்களுக்கு மேலே அமைக்கப் பட்டிருக்கின்றன. பத்து மீட்டருக்கு ஒரு கிரில் திறப்பு வைத்திருக்கிறார்கள். நடந்து போகையில் வெளியேயிருந்து பார்த்தால் உள்ளே இருப்பது தெளிவாகத் தெரியும். சாக்கடையும் தெளிவாக இருக்கிறதப்பா இந்த ஊரில்! அடிக்கடி அவற்றில் ஆட்கள் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. சில இடங்களில் ஆழம் பத்தடிக்கும் மேல் இருப்பது போல்த் தெரிகிறது. அதனால் அடைப்பு என்று ஒன்று ஏற்படவே வாய்ப்பில்லை. மக்கட் தொகையும் வீடுகளும் இன்னும் இரண்டு மடங்காகி விட்டாலும் கூட எந்தச் சிக்கலும் இராது. வீட்டுக்குள்ளேயே குப்பையைக் கொட்ட ஒரு பொந்து இருக்கிறது. அந்த வரிசையில் உள்ள அனைத்து வீடுகளின் குப்பையும் அதன் வழியாக கீழே இருக்கும் ஒரு பெரிய பெட்டியில் போய் விழுகின்றன. அதைத் தினமும் வந்து எடுத்துச் சென்று விடுகிறார்கள். அந்த வேலையிலும் நம்மவர்களே இருக்கிறார்கள். இந்த வசதி இந்தியாவில் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வந்திருக்க வேண்டும். இன்னும் வரவில்லை என்றால் கூடிய விரைவில் வர வேண்டும்.

துணி காயப் போட ஒரு வினோதமான அமைப்பு வைத்திருக்கிறார்கள். சன்னலுக்கு அருகில் ஐந்தாறு குழாய்களைப் பதித்து வைத்திருக்கிறார்கள். அக்குழாய்களுக்குள் செருகுவதற்கு நீண்ட குச்சிகள் ஐந்தாறு வாங்கிக் கொள்கிறார்கள். அந்தக் குச்சிகளில் துணிகளைத் தொங்க விட்டுக் கிளிப் மாட்டி, அக்குச்சிகளைக் குழாய்களுக்குள் செருகி விடுகிறார்கள். அருமையான இட நிர்வாக உத்தி (SPACE MANAGEMENT TECHNIQUE). இது நம் மாநகர வாசிகளுக்கு - முக்கியமாக மும்பைக்காரர்களுக்கு - நிறையப் பயன்படலாம். ஒரு சின்னப் பிரச்சனை. நம்ம ஊரில் மேல் வீட்டுக்காரன் துப்பும் எச்சில் வந்து விழுந்து விட்டால் வெள்ளைச் சட்டை பாழாய்ப் போகும். அதை இங்கே செய்தால் அடுத்த நாள் வீட்டுக்குப் போலீஸ் வரும்.

எல்லாப் பகுதிகளிலுமே எந்த நேரமும்  ஏதாவது கட்டுமானப் பணி நடந்து கொண்டே இருக்கிறது. அதில் ஒரு முக்கியமான பணி - லிப்ட் அமைக்கும் பணி. பழைய கட்டடங்கள் அனைத்திலும் எல்லா மாடிக்காரர்களும் பயன் படுத்த முடியாத மாதிரி ஒரு பெரும் கோளாறோடு லிப்ட் அமைத்து விட்டார்கள். மூத்த குடிமக்கள் பெருகி விட்டதால் சென்ற தேர்தலில் அது ஒரு முக்கியப் பிரச்சனையாகப் பேசப்பட்டு, வாக்குறுதியாக ஏற்றுக் கொள்ளப் பட்டு, அடுத்த தேர்தலுக்குள் முடித்து விட வேண்டும் என்று வேக வேகமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பிரச்சனைகளும் வாக்குறுதிகளும் பொறுப்புணர்ச்சியும் நம் தேர்தல்களில் வர இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காக்க வேண்டுமோ?!

மற்றபடி, புதிய வீடுகளில் இந்தப் பிரச்சனை கிடையாது. நகரில் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குச் செல்லும் பெரியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகளை முழுக்க முழுக்கத் தள்ளுவண்டியிலேயே தள்ளிச் சென்று விடுகிற மாதிரியாக நடைமேடைகளும் லிப்ட்களும் அமைக்கப் பட்டிருக்கின்றன. ஏறி இறங்க வேண்டிய எல்லா இடங்களிலும் - அதாவது படிக்கட்டுகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் - லிப்ட் இருக்கிறது. சிறிய ஏற்ற-இறக்கங்கள் என்றால், அதற்கேற்றபடி சறுக்குப் பாதைகள் இருக்கின்றன. நடைமேடையில் இருந்து இறங்குவதற்குக் கூட அதன் முடிவில் சறுக்குப் பாதை இருக்கிறது. அது மட்டுமில்லாமல் கண் தெரியாதோருக்கு நடக்க வசதியாக நடை பாதைகளில் வேறுபட்ட குமிழ்கள் கொண்ட ஓடுகள் பதித்திருக்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை எளிதாக்கும் பொருட்டு வளர்ந்த நாடுகள், மிகுந்த அக்கறையோடு இதை ஒரு முக்கியமான பணியாக எடுத்துச் செய்து வருகின்றன. நம் நாட்டில் கூட தனியார் நிறுவனங்களில் கழிப்பறை முதற்கொண்டு எல்லா இடங்களிலும் இந்த வசதிகள் சிரத்தையோடு செய்யப் படும் பண்பாடு ஆரம்பித்திருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து நம் நிறுவனங்களைப் பார்த்து எடை போட வரும் வெள்ளைக்காரர்கள், இந்த வசதிகளையும் பார்த்துத்தான் நம்மை எடை போடுவார்கள் என்பதால் சமீப காலங்களில் இவ்விஷயங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப் படுகிறது. வருமானத்தைக் கணக்கில் கொண்டு ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கும் நாகரிகம் என்றாலும், நல்லது எந்த வகையில் வந்தாலும் நமக்கு நல்லதுதானே! அது போலவே கொஞ்சம் கூடுதலாக நடக்கத் தயாராக இருந்தால் மழை நேரங்களில் குடை இல்லாமலே சமாளித்து விடுகிற மாதிரியும் எல்லாக் கட்டடங்களும் ஒன்றோடொன்றும் பேருந்து நிறுத்தங்களோடும் கூரை வேய்ந்த நடை பாதைகளால் இணைக்கப் பட்டிருக்கின்றன.

தனி வீடுகளே மிக மிகக் குறைவு. பெரும் செல்வந்தர்கள் மட்டுமே அதெல்லாம் வாங்குவது பற்றிக் கற்பனை பண்ணிப் பார்க்க முடியும் இங்கே. மற்றவர்கள் போகிற போக்கில் பார்த்துக் கொள்ளலாம். அல்லது, சில மாதங்களுக்கு மட்டும் வருமானத்தில் முக்கால்வாசியைக் கொட்டி ஒரேயோர் அறையை மட்டும் உள்வாடகை எடுத்து வாழ்ந்து அனுபவித்துக் கொள்ளலாம். அதுவும் சில பகுதிகளில் மட்டுமே இருக்கின்றன. அந்தப் பகுதிகள் யாவும் அமைதி நிறைந்தும் ஆள் நடமாட்டம் இல்லாமலும் வேற்றுக் கிரகம் போல் இருக்கின்றன. ஆக, இந்தச் சிறிய நாட்டுக்குள்ளும் இரு வேறு உலகங்கள் இருக்கின்றன. அது உலகம் இருக்கும்வரை இருந்துதானே தீரும். ஆனால், அந்த இரண்டு உலகங்களுக்குமான இடைவெளி எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். அது இந்த உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகமாக இருக்கும்... என்றும்! என்ன சொல்கிறீர்கள்?!

வியப்புகள் தொடரும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி