பிரிவின் சோகம்

மூன்றாண்டு காலக்
கல்லூரி வாழ்வின்
கடைசி நாள்
பிரிவுபச்சார விழா!

அட்மிசன் நாள் முதல்
அந்த விழா தினம் வரை
நினைவுகள் நீண்டோடின!

கண்ணதாசனின்
'பாடித் திரிந்த பறவைகளே'யும்
வைரமுத்துவின்
'முஸ்தபா முஸ்தபா'வும்
காதுகளுள் புகுந்து
கண்களையும் இதயங்களையும்
நனைத்துக் கொண்டிருந்தன!

அர்த்தத்தோடு அழுத
வாழ்வின் மிகச் சில தருணங்களில்
அதுவுமொன்று!

"அடிக்கடிக் கடிதமெழுதுடா"
"மறந்துராதடா"
ஒருவரையொருவர்
கண்களுக்குள் பார்த்துக்
கண்ணீர் வடித்துப்
பிரிந்த சோகத்தின் நீட்சி
வாழ்வின் கடைசித் துளி வரை
வாட்டி வதைக்குமென்றுதான்
அந்தக் கணத்தில்
அனைவருமே கருதினோம்!

'ரஜினியா? கமலா?'வில்
ஆரம்பித்த வாக்குவாதம்
அடிபிடிச் சண்டையானது...

கோட்டை ஏறிக் குதித்து
சினிமாப் பார்க்கப் போனதற்கு
மறுநாள் காலை
வீட்டுக்கனுப்பப் பட்டது...

கடைசி மாதத்தில் வந்த
சாதிக் கலவரத்தால்
எதிரிகளைச் சிரித்து
நண்பர்களை முறைத்து
எல்லாம் தலை கீழானது...

பேரூந்து நிலையத்தில்
பேயாட்டம் போட்டதற்கு
ஊரே போட்டு வெளுத்தது...

நிகழ்ந்தபோது கசந்தவை கூட
நினைத்துப் பார்க்கையில்
இனிமையாய் இருக்கின்றன!

கிரிக்கெட் வெறி பிடித்த
'டக் அவுட்' முருகேசன்...
சிரித்துக் கொண்டே திரியும்
புன்னகை முருகன்...
சிடுமூஞ்சி கணேசன்...
கணேசனையும் சிரிக்க வைக்கும்
'கோமாளி' கண்ணன்...
'அல்வா' மோகன்...
'ப்ளேடு' முத்துராமன்...
'கஞ்சா' பிரபு...
கவிதை எழுதிக் கொண்டே அலையும்
'தாடி' சங்கரன்...
வம்பளப்பதே வாழ்வாகக் கொண்ட
வக்கீல் மாதவன்...
இவர்களைனைவரையும்
பிரிவதில் கவலைதான்...

வீட்டை விட்டு ஓடிப்போன
'கடானாதிபதி' அப்பா...
கண்ணீரிலேயே கரைந்து விட்ட
'கந்தல் சேலை' அம்மா...
முப்பது முடிந்து விட்ட
முதிர்கன்னி அக்கா...
பட்டாசுத் தொழிற்சாலையில்
கனவுகளைக் கருக்கிக் கொண்டிருக்கும்
பள்ளிப் பருவத் தம்பி...

இவர்களின் நினைவு வந்திட்டால்
பிரிவின் சோகம் பெரிதல்ல...

படித்து முடித்துத்
தெருத் தெருவாய்த்
தேடி அலைந்து
உருப்படியான
ஒரு வேலையில் அமர வேண்டுமே
எனும் கவலையை விட!

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி