இளமைக் குழப்பங்கள்

பால்ய காலத்திலிருந்தே
ஒவ்வொரு பருவத்திலும்
எந்தவொரு சராசரி இளைஞனின் வாழ்க்கையிலும் போலவே
என்னுடைய அன்றாடங்களிலும்
ஏதோவொரு பெண்
இதயத்திலும் மூளையிலும் இடம் பிடித்து
பின்னர் முழுமையாய் ஆக்கிரமித்து
ஏதோதோ வேதி வினைகள் புரிந்திருக்கிறாள்

“உன்னைப் போலொரு பெண்
இப்படி என்னை இம்சித்ததில்லை இதுவரை”
என்றுதான் சொல்லத் தோன்றியது எல்லோரிடமுமே!

தரையை மறந்து
வானில் பறந்து
வாழப் பழகிவிட்ட
இந்தத் திரைப்பட யுகத்தில்
எல்லோரையும் போலவே
என்னையும் ஒருத்தி காதலிக்கிறாள்
என்று பெருமையாகச் சொல்ல முடிகிற நாளில்தான்
என் இருப்புக்கும் பிறப்புக்கும்
அர்த்தம் பிறக்கப் போவதாக
அடிக்கடி நினைத்திருக்கிறேன்

அதேவேளையில்
இனம் புரியாத ஏதோவோர் ஈன சுகத்துக்காக
கண்ணில் பட்ட கன்னியரை எல்லாம்
விரட்டி விரட்டிக் கடலை போடும்
விடலைக்காலக் காளையர் கண்டு
ஏளனமாய் வியந்திருக்கிறேன்
இரங்கல் கூட்டங்கள் போட்டிருக்கிறேன்

எப்போதாவதொருமுறை
சாலையில் போகிற சோலை ஒன்று
கடித்துத் தின்கிற மாதிரிக் கண்டு செல்லும்போது
வழக்கத்துக்கு மாறான
பெருமிதம் ஒன்று வந்து
வானம் வரைத் தூக்கிச் செல்லும்

மடை உடைத்த மகிழ்ச்சி
வாழ்வாங்கு வாழும்
தாழ்வு மனப்பாங்கைச்
சிதறடிக்கச் செய்யும்

கண்ணே
மணியே
கவிதையே
நாடகமே
என்றெல்லாம்
கரைந்து போகும் அளவுக்குக்
கசிந்துருகத் தெரியாததால்
காதற்பழம் புளிக்குமென்றுதான்
சொல்லிக்கொண்டிருந்தேன் எனக்குள்

அதனால்தானோ என்னவோ
கன்னியர் பின்
ஓடி அலைந்து உருகுவதில்
பெரும்பாலும் பிடித்தம் இல்லாமல் போனது

ஈடுபாடு
எனக்கில்லாத போதிலும்
என் மனசுக்கிருக்கத்தான் செய்கிறது
மனசு கிறுக்காகத்தான் செய்கிறது
அவ்வப்போது

எனக்கே தெரியாமல்
எங்க ஊரு மாடுகள் போல
எங்கெங்கோ அலையத்தான் செய்கிறது
வேலி தாண்டி மேயத்தான் செய்கிறது

என்னால் ஒன்றும் செய்ய முடிவதில்லை
அதற்கெதிராக...
அதற்காதரவாகவும்தான்...

* 2001 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி