பொம்மை பிரதமர்?

சரவணக்குமார் எழுதச் சொன்ன இன்னொரு விஷயம் - நம் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்கின் பல தோல்விகள் பற்றி. சரி. அதையும் எழுதி விடுவோம். 2004-இல் காங்கிரஸ் வெல்லட்டும் ஆனால் சோனியா பிரதமராகக் கூடாது என்று ஆசைப்பட்ட ஆட்களில் நானும் ஒருவன். கட்சி என்ற முறையில் எனக்கு பா.ஜ.க. மீது எனக்குப் பெரிதும் ஈர்ப்பு எதுவும் இல்லை. ஆனால், வாஜ்பாயை விட சோனியாதான் பிரதமராக அதிகத் தகுதிகள் கொண்டவர் என்று யாராவது சொன்னால் எனக்கு மண்டை கிர்ரென்று சுற்றும். அத்வானியோடு கூட அவரை ஒப்பிடப் பிடிக்காது. சரியான ஆளை மயக்கியதைத் தவிர இந்திய அரசியலில் அவருக்கு வேறு எந்தத் தகுதியும் கிடையாது. தான் பிரதமர் பதவி ஏற்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தபோது எல்லோரையும் போல நானும் அவரைப் பெரும் தியாகியாக ஏற்றுக் கொண்டேன்.

அது அவர் விரும்பி எடுத்த முடிவல்ல; சுப்பிரமணியசுவாமி என்கிற நம்ம ஆள் ஒருவர் போட்ட குண்டினால் அப்படி ஒரு முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டார் என்று பின்னர் கேள்விப் பட்டபோது அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. வெளிநாட்டுக் காரர் என்பதற்காக அவர் இந்த நாட்டை ஆளக் கூடாது என்று கூட எண்ணவில்லை. அதற்கான தகுதியே இல்லை என்றாகி விட்ட பிறகு எதற்கு மற்ற விஷயங்கள் பற்றிப் பேச வேண்டும்? சரி. அவர் ஏற்க மறுத்தார். மகிழ்ந்தோம். அடுத்து யார்? யார் வந்தாலும் காங்கிரஸ் கட்சியும் கொஞ்சம் சனநாயகத்தை மதிக்கும் கட்சி என்ற பெயர் கிடைத்து விடும் என்றே எண்ணினேன். முந்தைய ஆட்சியில் மன்மோகன் சிங் கொஞ்சம் செயல்பட்டுக் கொண்டு இருந்ததால், அவர் வர வாய்ப்புள்ளது என்று எண்ணினேன்; அவரே வர வேண்டும் என்றும் ஆசைப் பட்டேன்.

அது போலவே நடந்தபோது, 'என்ன இது எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நான் நினைப்பதெல்லாம் இந்த நாட்டின் தலை சிறந்த அரசியல் பதவிக்கு எடுக்கும் முடிவுகளில் நடந்து கொண்டு இருக்கிறது?' என்று ஆச்சர்யத்தோடு கலந்த மகிழ்வான மகிழ்வடைந்தேன். ரிசர்வ் பேங்க் கவர்னராக இருந்த ஒருவர் இந்த நாட்டுக்கு நிதி அமைச்சர் ஆனதும் அவரே பின்னர் பிரதமரானதும் நாமெல்லாம் செய்த புண்ணியத்தின் விளைவு என்றெண்ணினேன். அந்த நாள் முதல் இந்திய அரசியல் அதன் அடுத்த கட்டத்துக்குச் சென்று விட்டதாகப் பெருமிதம் அடைந்தேன். அன்று முதல் சுமார் ஒரு வருடம் முன்பு வரை இந்தியாவிலேயே நான் அதிகம் மதித்த அரசியல்த் தலைவர் மன்மோகன் சிங்தான். இதுவரை இந்த நாட்டின் பிரதமரான எல்லோரையும் விட (நேருவையும் விட!) இவரே சூப்பர் என்று கூட எண்ணினேன்.

இதுவரை இந்த நாடு கண்ட பிரதமர்களிலேயே சிறந்த பிரதமர் யார் என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க, வந்ததிலேயே விளங்காத ஆள் யார் என்றால் பெரும்பாலும் தென்னிந்தியாவில் இருந்து வந்த இருவரின் பெயரையே நிறையப் பேர் சொல்கிறார்கள். இதுவரை நாம் கண்ட பிரதமர்களிலேயே அதிகம் வெறுக்கப் பட்ட - அதிகம் கேலிக்கு உள்ளாக்கப் பட்ட - ஆனால் மறந்தும் கூட ஒருமுறை கூடச் சிரித்திராத பிரதமர் நரசிம்ம ராவ். சனநாயக முறைப்படி காங்கிரஸ் தேர்ந்தெடுத்த மிகச் சில தலைவர்களில் அவரும் ஒருவர். அவரும் வீணாய்ப் போனது சனநாயகத்துக் கிடைத்த அடி. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அவர் செய்த உருப்படியான வேலைகளில் ஒன்று - அப்போது ரிசர்வ் பேங்க் கவர்னராக இருந்த மன்மோகன் சிங்கைப் போய் அழைத்து வந்து நிதி அமைச்சர் ஆக்கியது.

பொருளாதாரம் அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருந்த வேளையில் இப்படி ஏதோவொன்று செய்ய வேண்டியிருந்தது காலத்தின் கட்டாயம். அதன் பிறகு நடந்ததெல்லாம் நல்லதே. அவருடைய புதிய பொருளாதாரக் கொள்கையை இடதுசாரிகள் போன்ற பொறுப்புள்ள அரசியல்வாதிகள் பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கும் போதும், நடைமுறை சாத்தியங்களை வைத்துப் பார்த்தால் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் சாதாரணப்பட்டவை அல்ல. அங்கே தொடங்கியதுதான் இன்று வல்லரசாகும் ஆசை வரை வர வைத்திருக்கிறது. அதனால் அவர் மீது எனக்கு எப்போதுமே அதீத மரியாதை இருந்து வந்தது.

அவர் போன்ற நடுத்தரக் குடும்பத்துப் படித்தவர்கள் - அறிவாளிகள் அரசியலுக்கு நிறைய வர வேண்டும். அதுவே அவர்களுடைய செயல்பாட்டைப் பார்த்து மக்கள் கூமுட்டைகளை எளிதில் அடையாளம் காணவும் ஒதுக்கித் தள்ளவும் உதவும் என்றும் எண்ணினேன். கொடுமை என்னவென்றால், அவரும் தேர்தலில் நின்று வெல்லும் அளவுக்கு நம் சனநாயகம் முதிர்ச்சி அடைந்து விட வில்லை; கூமுட்டைகளும் குறைந்து விட வில்லை.

சென்ற ஆண்டின் துவக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மொத்த தேசமுமே அவரை வெறுக்க ஆரம்பித்திருந்த வேளையில் கூட, "அதற்கு அவர் எப்படிப் பொறுப்பாக முடியும்? அவர் நல்லவர்தான். அவருடைய சூழ்நிலை அப்படி!" என்று பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், தொடர்ந்து அப்படிப் பேச முடியவில்லை. இப்போதும் அவர் மீது வெறுப்பு வரவில்லை. ஆனால், அவர் சார்ந்த கட்சி மீது உருவான வெறுப்பு, இந்த யோக்கியர் ஏன் இன்னும் அந்த முடியைப் (நாகரிகமாகப் பேச வேண்டும் அல்லவா?) பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார் என்று ஏதோ ஒருவித எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

சூழ்நிலையின் கைதி என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். இவ்வளவும் நடந்த பிறகும் கைதியாகவே தொடர்வதற்கான காரணம் என்ன? அதுதான் புரியவில்லை. அப்படி ஒன்றும் விடுதலையே ஆகிச் செல்ல முடியாத சிக்கல் எதிலும் அவர் மாட்டிக் கொண்டிருக்க வாய்ப்பே இல்லை. அல்லது, பதவி சுகத்துக்கு மயங்கி அதை விட்டுக் கொடுக்க மறுக்கிறார் என்றும் சொல்ல முடியாது. அவர் அப்படிப் பட்ட ஓர் ஆள் இல்லை என்பது அவருடைய எதிரிகளுக்கும் தெரியும். பின் ஏன் இப்படித் தொங்கிக் கொண்டிருக்கிறார்?

பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தைத் தரம் தாழ வைத்தவர் என்று இவர் மீது அத்வானி குற்றம் சாட்டியபோது கூட அத்வானி மீதுதான் கோபம் வந்தது. இவர் மீது வரவில்லை. பிரதமர் ஆசையில் என்னவெல்லாம் பிதற்றுகிறார் பாருங்கள் அத்வானி என்றே எண்ணினேன். இதுவரை இந்தியா கண்ட பிரதமர்களிலேயே பலவீனமான பிரதமர் இவர்தான் என்று குற்றம் சாட்டியபோதும், "அது சரிதான். ஆனாலும், அதற்குக் காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!" என்று சப்பைக் கட்டுதான் கட்டிக் கொண்டிருந்தேன்.

எதற்கும் ஓர் எல்லை இருக்கிறது. எவ்வளவு காலம்தான் நாமும் பொறுத்துப் பொறுத்துப் போக முடியும்? இவ்வளவு திருட்டுத் தனங்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர், அவரும் திருடனாக இருந்தால் என்ன யோக்கியராக இருந்தால் என்ன? திருட்டுக்குத் துணை போகும் அனைவரும் திருடன் என்பதுதானே நம்ம ஊர் நியாயம்?

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யார் பிரதமராக ஆகி இருந்தாலும் இந்தப் பிரச்சனைகள் இப்படியேதான் இருந்திருக்கும் என்று பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றைக் கூட விட்டு விடலாம். இந்த இடத்தில் யார் இருந்தாலும் இவ்வளவு கேவலமாக இருந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லும் படி பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றில் சில பற்றிப் பேசுவோம். இறுதியாக அப்பிரச்சனைகளில் இவர் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பது பற்றியும் பேசுவோம். பொருளாதாரக் கொள்கை, அணுக் கொள்கை, வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை, இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசின் நிலைப்பாடு போன்றவை காங்கிரஸ் கட்சியின் யார் வந்தாலும் மாறப் போவதில்லை என்கிற பிரிவு. அவர் மிகப் பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ள பகுதி - ஊழலுக்கெதிரான செயல்பாடு (ஊழல்க் கொள்கை என்று ஒன்று வந்தாலும் கூட ஆச்சர்யப் படுவதற்கில்லை!).

ஊழல் விஷயத்தில் காங்கிரஸ்காரர்களைவிட அதிகம் ஆட்டம் போட்டது கூட்டணிக் கட்சிகள். குறிப்பாக, தி.மு.க. அலைக்கற்றை ஊழல் விவகாரம் தலை தூக்கியவுடன் இவர் ஏதாவது செய்திருக்க வேண்டும். ஏதாவது என்றால்? இராசாவை வீட்டுக்கு அனுப்பி விட்டு காங்கிரசில் இருந்தே ஒருவரை அந்தப் பொறுப்பில் அமர்த்தி இருக்க வேண்டும். அப்படியானால், கறைபடியாக் கைக்குச் சொந்தக்காரத் திராவிடர்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக மிரட்டுவார்களே... பா.ஜ.க.வோடு போய் மதச் சார்பற்ற கூட்டணி அமைப்பார்களே... அதையெல்லாம் எப்படிச் சமாளிப்பது? காங்கிரஸ் கட்சியின் கோணத்தில் பார்த்தால், 'பிடிவாதமாக இருந்து நம்மை விட மோசமான ஒரு கூட்டத்திடம் ஆட்சிப் பொறுப்பை இழப்பதை விட கொஞ்சம் நெகிழ்வோடு நடந்து கொண்டு நாமே ஆட்சியில் தொடர்வது தப்பில்லையே?!' என்கிற பதில் சரியாகத் தான் படுகிறது.

ஆனால், எப்படிப் பட்ட விஷயங்களில் நெகிழ்வு காட்ட வேண்டும் - சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று ஓர் எல்லை இருக்க வேண்டும். உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய ஊழலுக்குத் துணை போகிற சமரசம் எந்த வகையிலும் நியாயப் படுத்தக் கூடியது அல்ல. தனக்குக் கீழே இருப்பவர்கள் தன் பேச்சைக் கேட்பவர்களாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அழைத்துக் கண்டிக்க வேண்டும். அதற்கும் மசியாவிட்டால் ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும் அல்லது பதவியைத் தூக்கி எறிய வேண்டும். எறிந்து விட்டால் திரும்பக் கிடைக்காது என்று பயப்படுகிறார்களே ஒழிய, அப்படி எறிவதன் மூலமும் மக்கள் மனதில் நல்லிடம் பிடிக்கலாம்; அதைப் பயன்படுத்தி மீண்டும் வரலாம் என்கிற நம்பிக்கை நிறையப் பேருக்கு வருவதில்லை. இத்தனைக்கும் சின்ன வயதில் இருந்தே பதவி சுகத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரி அரசியல்வாதி அல்ல மன்மோகன் சிங்.

நரசிம்ம ராவ் போய் இவரை நிதி அமைச்சர் ஆகும்படிக் கேட்டுக் கொண்ட போது, இவர் போட்ட கண்டிசன்கள் இரண்டே இரண்டு. ஒன்று - "எதற்கும் என் மீது பழி போட்டுப் பலிகடா ஆக்கக் கூடாது!". இன்னொன்று - "என் முடிவுகளில் தலையிடக் கூடாது!". "இவ்விரண்டில் எதை மீறினாலும் நான் என் பதவியைத் தூக்கி வீசி விட்டுப் போய்க் கொண்டே இருப்பேன்!" என்றாராம். அதன்படி ஒரு முறை தூக்கி வீசவும் செய்தாராம். பெட்ரோல் விலையை ஏற்றியபோது நரசு வந்து குறைக்கச் சொன்னாராம். அப்போது, "பேச்சை மீறுகிறாயே சகோதரா?!" என்று கோபத்தில் பொறுமினாராம். அப்போது நரசுதான் இவரை சமாதானப் படுத்தி இருக்க வைத்தாராம். அவ்வளவு கறாரானவர் அதை ஏன் சோனியாவிடம் சொல்லவில்லை அல்லது செய்ய முடியவில்லை? அதுதான் இன்றைய மில்லியன் டாலர் கேள்வி. 

தூக்கி வீசி விட்டு வந்து ஒரு சுயசரிதை எழுதியிருந்தால் கடைசிவரை மனச்சாட்சியோடு வாழ்ந்து மறைந்த நிம்மதியாவது கிடைத்திருக்கும். இப்போது என்ன கிடைத்தது? இந்த நாடு கண்ட மிகப் பலவீனமான பிரதமர் என்ற பெயரும் இந்த உலகம் கண்ட மிகப் பெரிய ஊழல் ஆட்சியின் சொந்தக் காரர் என்ற பெயரும்தானே. "எல்லாம் பிரதமருக்குத் தெரிந்தே நடந்தது!" என்பதை ஓட்டை ரிக்கார்ட் போல இராசா திரும்பத் திரும்பச் சொல்ல இடம் கொடுத்ததுதான் மிச்சம். அதற்குப் பதிலாக இவர் வேறு, "எனக்கு ஒன்றுமே தெரியாது!" என்று திரும்பத் திரும்ப இன்னொரு ஓட்டை ரிக்கார்டை ஓட்டுகிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த மனச்சாட்சி இன்னும் அப்படியே இருந்தால், 'எதற்கு இந்தப் பிழைப்பு?' என்று அவருக்கே ஓர் உட்கேள்வி வந்திருக்கும் பலமுறை. பல இரவுகள் பாதியில் தூக்கம் கலைந்திருக்கும். இதெல்லாம் நடந்ததா சார்? இல்லை, நீங்களும் மாறி விட்டீர்களா?

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய் விட வில்லை. நாளை காலை எழுந்து அலுவலகம் செல்லும்போது, 'இரண்டில் ஒன்று பார்த்து விடுகிறேன் இன்று!' என்ற முடிவோடு கிளம்பினால் போதும். கீழ்வரும் சில மாற்றங்களை மட்டும் செய்தால் போதும். அடுத்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வர வாய்ப்பும் கூடும். 'இடைவெளியில் தடம் மாறிய இற்ற கேஸ்களில் நானும் ஒருவன்!' என்கிற உறுத்தலும் இல்லாமல் இறுதிக் காலத்தை ஓட்டலாம். நாம் நினைக்கிற மாதிரி இதெல்லாம் முடியாத ஆள் இல்லை அவர். ரிசர்வ் பேங்க் கவர்னராக இருந்த ஒருவர் அந்த அளவுக்கு அம்மாஞ்சியாக இருக்க முடியாது. அப்படி எதுவுமே முடியாது என்றால் உயிரைப் பணயம் வைத்து எல்லாத்தையும் தூக்கி வீசி விட்டு வந்து எது அவரை இவ்வளவு நாட்களாகக் கட்டிப் போட்டு வைத்திருந்தது என்று சுயசரிதை எழுதலாம்.

சரி. அவர் செய்ய வேண்டும் என்று நாம் விரும்பும் மாற்றங்கள்? இதோ...
1. தங்கபாலு வேண்டுமானால் தி.மு.க.வில் சேர்ந்து கொண்டு "உறவு பலமாக இருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டிருக்கட்டும் என்று விட்டு விட்டு, உடனடியாகத் தி.மு.க.வைக் கழற்றி விடுவது. ஊழல் சம்பந்தமான எல்லா வழக்குகளையும் முடுக்கி விடவும் இது உதவும். அடியாள் வைத்துக் கொலை செய்வதைத் தவிர வேறு எதுவும் தெரியாத மிச்சம் இருக்கிற அஞ்சாநெஞ்சரையும் உடனடியாக ஊருக்கு வழியனுப்பி வைப்பது எல்லோருக்குமே நல்லதாக இருக்கும். இதனால் கண்டிப்பாக ஆட்சி கவிழாது. "இப்போதைக்கு எதுவுமே வேண்டாம். எங்களைக் கூட்டணியில் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்!" என்று காத்துக் கிடக்கிற கட்சிகள் நிறைய இருக்கின்றன. இதற்கு ஒரே தடங்கல் - தோல்வியை வெற்றியாய் மாற்றிக் கொடுத்த கூட்டணித் தலைவர் மீது பாசம் கொண்டிருக்கும் பதவிப் பசி பிடித்த ப.சி. மட்டுமே. "தம்பி, இப்ப உன் இருக்கையே ஆடிக் கொண்டிருக்கிறது!" என்று நினைவு படுத்தினால் அவரும் அமைதியாகி விடுவார்.

2. தன் பிரதமர் ஆசை மண்ணாய்ப் போய் விட்டதே என்ற ஆத்திரத்தில் தனிக் கட்சி ஆரம்பித்து இப்போது மீண்டும் காங்கிரஸ்காரர்களோடு ஐக்கியமாகி இருக்கும் சரத் பவாரை அழைத்து, "தம்பி, உனக்குக் கிரிக்கெட் பார்ப்பது மட்டும்தான் பிடிக்கும் என்றால், ஏன் அரசியலுக்கு வந்தாய்? வேண்டுமானால் விளையாட்டுத் துறையை எடுத்துக் கொள். வீணாய்ப் போய்க் கொண்டிருக்கும் உணவு தானியங்களை மக்களிடம் கொடுத்து விட்டு, வீணாய்ப் போய்க் கொண்டிருக்கும் அந்தத் துறையையும் திறமையான ஆள் யாரிடமாவது கொடுத்து விடு!" என்று அறிவுரை கூறலாம். அது சிரமம் என்றால், காங்கிரஸ் கட்சியின் வழக்கமான பாணியில் குற்றப் புலனாய்வுத் துறையையும் ஊடகங்களையும் ஏவி விட்டு, அவர் செய்த கோல்மால்களை வெளிக் கொண்டு வந்து, தானாகவே பதவி விலக வைக்கலாம். இந்த விஷயத்தில் உங்களுக்குத் தேவைப் படும் உதவிகள் செய்ய சோனியா வீட்டு முன்னால் தவம் கிடக்கும் சில ஆட்களைப் பிடித்தால் போதும். மற்றவை எளிதில் கைகூடும்.

3. எங்கள் ஊர்க்காரர் கிருஷ்ணாவை வேறு ஏதாவது வேலைக்கு அனுப்பி விட்டு, உருப்படியான யாராவது ஓர் ஆளைக் கொண்டு வந்து வெளியுறவுத் துறையில் போட்டால் நன்றாக இருக்கும். அவருடைய பேரப் பிள்ளைகளும் அவரை மிகவும் மிஸ் பண்ணுவதாகக் கேள்விப் பட்டேன். பாவம், கடைசிக் காலத்தில் அவரைக் கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்கள். அவர் மட்டுமல்ல. அது போல நிறையப் பேருக்கு நிறைய ஓய்வு தேவைப்படுகிறது. அவர்களையெல்லாம் ஓய்வெடுக்க விடுங்கள். தம் உடல் நலத்தை விட நாட்டின் நலத்தை அதிகம் மதிப்பதாக அவர்கள் சொல்வார்கள். நாட்டு மக்கள் நாங்களோ நாட்டின் நலத்தை விட அவர்களுடைய உடல் நலம் மிக முக்கியம் என நினைக்கிறோம். எனவே... ப்ளீஸ்... அவர்களை விட்டு விட்டு இரத்தம் உறைந்து விடாத இளைஞர்கள் நிறையப் பேரைக் கொண்டு வாருங்கள்.

4. இந்தக் கபில் சிபலைக் கூப்பிட்டு, "தம்பி, நீ இடையில் கொஞ்சம் நல்லா வேலை பார்த்த. இப்பத் திரும்பவும் நிரம்பப் பேச ஆரம்பிச்சுட்ட. தொடர்ந்து ஒழுங்கா வேலை பார்க்க ஏதாவது உதவி தேவைப் பட்டாச் சொல்லு. யாரையும் காப்பாத்த வேண்டிய வேலை நம்முடையதில்லை. உன் தொழில் வழக்கறிஞர் தொழில் என்பதை மறந்து விட்டுக் கொஞ்ச காலம் வேலை பார்!" என்று அறிவுரை சொல்லுங்கள். முடிந்தால், தொலைத் தொடர்புத் துறையை அது பற்றி நன்கறிந்த இளைஞர் யாருக்காவது கொடுங்கள். அதாவது, தயாநிதி மாதிரி ஆனால் நல்லவராகப் பார்த்துக் கொடுங்கள். கபில் சிபல் கல்விச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தட்டும். அவரும் நாடும் உருப்பட வழி வகுக்கும் அது. சவடால்தான் பிடிக்கிறது என்றால், "நேர்மையாகப் பேசு!" என்றொரு கண்டிசன் மட்டும் போட்டு சட்டத் துறையைக் கொடுத்து விடுங்கள். அங்கும் நிறைய வேலை இருக்கிறது அடுத்த சில ஆண்டுகளுக்கு.

5. உங்களுக்குப் பேசுவது பிடிக்காது என்றபோதும், ஒரு நாட்டின் உச்ச பட்சப் பதவியில் இருப்பதால், உங்களுடைய மக்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டியது உங்கள் கடமை. நீங்கள் ஊடகங்களைச் சந்திக்க மறுப்பதன் மூலம் சில சங்கடங்களைத் தவிர்க்க விரும்புவது புரிகிறது என்றபோதும், அதன் மூலம் உங்கள் தலைக்கே வேட்டு வைக்கும் அளவுக்குச் சில பிரச்சனைகளைப் பெரிதாக்க விட்டு விட்டீர்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். அதனால், சும்மா அவர்களைப் பேச விட்டு வேடிக்கை பார்க்கவாவது ஊடகங்களைத் தொடர்ந்து சந்தியுங்கள். என்னதான் உங்களைச் சுற்றி நடக்கிறது என்று ஓரளவு புரிபட வாய்ப்புள்ளது. உங்கள் அமைச்சர்கள் உங்களுக்குத் தெரியாமல் செய்யும் சேட்டைகள் அனைத்தும் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால், உங்களை விட அதிகமாக உங்கள் அமைச்சர்கள் அவர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் குட்டும் வெளிப்பட்டு விடும் என்று கவலைப் பட வேண்டியதில்லை. நீங்கள்தான் சேட்டைகள் செய்வதில்லையே! எல்லோரும் போல நீங்கள் எதுவுமே செய்வதில்லை என்று குற்றம் சாட்டக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது...

கருத்துகள்

  1. நல்ல கட்டுரை பாரதிராஜா. ஆனால் ஒரு விஷயத்தில் நான் மாறுபடுகிறேன். அரசியல் என்பது ஒரு புதைகுழி. அதில் இறங்குவதோ அல்லது மாட்டிக் கொள்வதோ மிக எளிது.. ஆனால் வெளியே வருவது உங்கள் கையில் இல்லை. இந்தியாவின் பிரதமர் பதவி என்பது எவ்வளவு உயர்ந்த பதவி? அதற்காக பலர் தவம் இருக்கையில் கட்சிக்காக எந்த சேவையும் செய்யாத மன்மோகன் சிங்குக்கு அந்த பதவியை காங்கிரஸ் கட்சி (சோனியா காந்தி) கொடுத்தது. ஒரு முறை என்றாலும் பரவாயில்லை இரண்டாவது முறையும் அவரை பிரதமராகியது. எனவே அவர் நிச்சயம் நன்றிக் கடன்பட்டிருகிறார்.

    ஒருவரால் (கட்சியால்) நமக்கு லாபமும் பெருமையும் கிடைக்கும் போது அதை ஏற்றுகொள்வதும், ஆனால் நஷ்டம் அல்லது தலைவலி என்று வரும்போது அவர்களை கைவிடுவதும் சராசரி மனிதர்கள் செய்பவை. நிச்சயம் மன்மோகன் செய்யமாட்டார். அவர் கலியுக கர்ணனாகத்தான் இருப்பார்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சார். உண்மைதான். கண்டிப்பாக அவர் நன்றிக் கடன் பட்டிருக்கிறார். ஒருவேளை எழுதி வாங்கி விட்டார்களோ என்று கூட சந்தேகமாக இருக்கிறது. அவர் பட்ட நன்றிக் கடனுக்கு கர்ணன் போல எத்தகைய தியாகமும் அவர் செய்யலாம். அதில் ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால், உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு கொண்ட மிகப் பெரும் தேசமும் அதன் பலனை அனுபவிக்க வேண்டியுள்ளது. அதுவும், இது நமக்கு மிக முக்கியமான கால கட்டம்.

    பதிலளிநீக்கு
  3. Ghostwriter படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் ஏன் பிரிட்டிஷ் பிரதமர் அமெரிக்கா சார்பாகவே முடிவெடுக்கிறார் என்பதற்கு ஒரு தியரி சொல்லியிருப்பார்கள்.. அது போல தான் இதுவும் என்று நினைக்கிறேன். மன்மோகன் சிங் மீது எனக்கு எந்த வித மதிப்பும் இல்லை. அது ஒரு முதுகெலும்பில்லாத உயிரினம்..

    பதிலளிநீக்கு
  4. Education without character is a menace - Gandhi..
    இதற்கு சரியான உதாரணம் மன்மோகன் கும்பல் தான்!

    பதிலளிநீக்கு
  5. இல்லையே பந்து. நான் திரைப்படங்கள் பார்ப்பதே மிகக் குறைவு. அதிலும் ஆங்கிலப் படங்கள் சுத்தமாகக் கிடையாது. இதனால் வாழ்க்கையில் நிறைய இழந்து கொண்டிருக்கிறேன் என்று நன்றாகத் தெரியும். இப்பவும் கூட அஃறிணையில் அழைக்கும் அளவுக்குப் போய்விட்டாரே என்றுதான் வருத்தமாக இருக்கிறது. :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி