கலவர தாகம்

இதை எழுதியது - சுதந்திர தாகம் கொண்டு துடித்துக் கொண்டிருந்த பாரதியின் அதே மண், கலவர தாகம் கொண்டு கருகிக் கொண்டிருந்த 1998-இல். ஆகவே, பதிமூன்று வருடம் பின்னால் சென்று படித்துப் பாருங்கள்.

மூளை வளர்ப்புக்கு
முக்கியத்துவம் கொடுத்ததில்
மனித மனங்கள்
மங்கிப் போய்விட்டன!

சாதிச் சண்டைகளின்
வெட்டரிவாள் வீச்சிலும்
மதக் கலவரங்களின்
குண்டு வெடிப்புகளிலும்
சிதறுண்ட உள்ளங்கள்
இரத்தக் கறை படிந்து
சுடுகாட்டுப் பாதைகளில்
ஓலமிடுகின்றன!

சிலைகளை நொறுக்கி
மூட்டப்பட்ட சாதியத் தீயில்
அரசுப் பேரூந்துகள்
கருகிக் கொண்டிருக்கின்றன!

இந்திய தேசத்தின்
எதிர்காலத்தைக் கவலைக்கிடமாக்கும்
மக்கட்தொகைப் பெருக்கத்தைக்
கட்டுப் படுத்துவதில்
கலவர காலத்து
நாட்டு வெடிகுண்டுகள்
நல்ல பங்காற்றுகின்றன!

நாளைய சந்ததி
சாதிச் சொல்லுக்கு
அர்த்தம் தெரியாமல்
வளர்க்கப் படாவிட்டால்
வீதிகளெங்கும்
இரத்த நிறத்தில்
சாம்பல் பறக்கலாம்!

பேரூந்தில் இடம் பிடித்தலிலிருந்து
பாகப் பிரிவினை வரை
வாழ்க்கையின்
எந்தக் கட்டத்திலும்
அடிக்கவும்
தடுக்கவும்
தயாரான நிலையில்
காத்திருக்க வேண்டியது
கட்டாயமாகி விட்டது!

நாறிக் கிடக்கும்
சாக்கடைச் சமூகத்தின்
நரம்புகளோடு பிணைந்து விட்ட
சாதிகளைப் பிரித்தெடுப்பது
சாதாரணமாகச் சாத்தியமில்லை!

மனங்களை வெளுக்க வேண்டிய
கல்விக் கூடங்கள்
வர்த்தகமயமாகி வருவதால்...

ஆன்மாவைத் தெளிவிக்க வேண்டிய
ஆலயங்களுக்குள்
அக்கிரமங்கள் அரங்கேறி வருவதால்...

தேசத்தின் தலைவிதியைத்
தீர்மானிக்க வேண்டிய
பாராளுமன்றம்
குற்றவாளிகளின் கூடாரமாகி வருவதால்...

எதிர்காலத்தைப் பற்றிய
எண்ணங்கள் அனைத்தும்
எதிர்மறையாகி வருவது
இயல்புதான்!

அப்படியானால்,
என்று தணியும்
இந்தக் கலவர தாகம்?

அமைதி வேண்டுமாயின்
கலவரம் நடந்தாக வேண்டும்
என்கிறார் சிலர்

அரைகுறையாகப் புரிகிறது
ஆனால்
ஆயுதப் புரட்சி பற்றிப் பேசுவோருக்கு
அறிவுப் புரட்சி பற்றிய அறிவு பற்றாதோ
என்று படுகிறது...

என்ன சொல்கிறீர்கள்?

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி